பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 4, 2012

அண்ணாவின் வீடு காஞ்சீபுரத்தில்.... தமிழகத்தில் ஒரு நல்ல வைப்ரேஷன் இருக்கும் இடம் !!!


நேற்று காஞ்சீபுரம்  போனேன். அறிஞர் அண்ணாவின் வீட்டுக்கு போய் சுத்தி பார்த்தேன். அடடா....... அடடா ................... என்ன ஒரு வைப்ரேஷன். ஒரு தமிழ்நாட்டின் சரித்திரத்தை  புரட்டிப்போட்ட மகான். இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் காங்கிரஸ் தமிழகத்தில் வளரவிடாமல் வேரில் ஆசிட் ஊற்றிய அதிசய அதிரச மனிதன் பிறந்து வளர்ந்த வீடு. அடடே அடடே.... வீட்டின் முன்பக்கம், அதை தாண்டி ரேழி... அதை தாண்டி கூடம், அதிலே அவரது தனி ரூம், அவரது படுக்கை, அதன் மீடு விரிக்கப்பட்ட திமுக பார்டர் போட்ட சால்வை, அவரது சாய்வு நாற்காலி, கூடத்தில் அவரது கையெழுத்து பிரதிகள் அடங்கிய கண்ணாடி பெட்டிகள், முற்றம்... அதை தாண்டி சமையல் அறை. அதிலே மரத்தூள் அடுப்பு, மற்றும் கொடியடுப்புகள், அதன் மேல் புகைக்கூண்டு, ஒரு அழகிய டைனிங் ஹால், இடையே மாடிப்படி, அதன் மேல் ஒரு விசாலமான திறந்த வெளி (அது இப்போது அலுமினியம் ஷீட் போடப்பட்டு உள்ளது) அதில் ஒரு சிமெண்ட் சாய்வு படுக்கை.(இதிலே படுத்து வானத்தை பார்த்தால் ஆயிரம் கதை எழுதலாம்.. தவிர கொசுறாய் இருக்கும் நேரத்தில் தமிழக தலை எழுத்தை கூட மாற்றி எழுதலாம்)  தவிர மாடியில் ஒரு தனி படுக்கை அறை.

அங்கிருந்து ஒரு படி... அது வாசலுக்கு வரும். அதன் கைப்பிடி பார்டர் கருப்பு சிவப்பு. எங்கு நாம் தொடினும் அண்ணாவின் பேச்சுகள் ஒலி வடிவமாக நம் காதில்.... ஒரு வயதான பெண் மற்றும் அந்த வீட்டை பராமரிக்க இரண்டு ஆண்கள். இந்த மூவரும்.... இந்த மூவரும்.... அண்ணா மீது பக்தி கொண்ட உயிர்கள். "அய்யா போட்டோ எடுக்க கூடாது" என அன்பாக கட்டளை இடுகின்றனர். அதையும் மீறி போட்டோ எடுத்தாலும் தடுக்க மாட்டாத அடாவடி ஆட்கள் இல்லை. ஆனாலும் நமக்கு போட்டோ எடுக்க மனம் இல்லை.  சிதம்பரம் நடராஜர் கோவிலில் "போட்டோ எடுக்க அனுமதி இல்லை" என அறிவிப்பு செய்யப்படுவதை மீறி ஆன்மீக வாதிகள் தெரியாத்தனமாக புகைப்படும் எடுப்பார்களோ அது போல இந்த நாத்திக வாதிகள் செய்வதில்லை. விதிகள் இருக்கும் போது அதை பின்பற்றித்தான் பார்ப்போமே என்னும் நிலைப்பாடு இந்த நாத்திகர்களுக்கு!
அங்கே அண்ணா உடுத்திய உடைகள், கண்ணாடி, பேனா, மைக்கூண்டு எல்லாம் உள்ளது. ஆனாலும் என்னை கவர்ந்த விஷயம்... அண்ணாவின் டைரி.... அதிலே சும்மா சில சில துணுக்குகள்  எழுதி வச்சிருக்கார். அதிலே ஒன்று.....அதாவது ஒரு ஹோட்டல் சர்வரும், சாப்பிடுபவரும்...

\\
சாப்பிடுபவர்: என்னய்யா சர்வர், வடை ரொம்ப மோசமாவும் இருக்கு, சின்னதாகவும் இருக்கு?

சர்வர்: ஆமாங்க! கொஞ்சம் யோசிச்சு பாருங்க. வடை மோசமாகவும் இருந்து பெரிசாகவும் இருந்தா என்னா கஷ்டம் உங்களுக்கு?\\

என் கூட வந்த தோழர் அருள் பிரகாசம் சொன்னார் ஒரு வார்த்தை! "நல்லா நினைச்சு பாருங்க தொல்காப்பியன், மின்வெட்டும் அதிகமாக்கி அதுக்கு கட்டணமும் மும்மடங்கு அதிகமாக்கிய ஜெயா அரசின் நிலைப்பாட்டை தான் அன்றே அண்ணா சொன்னாரோ?" என சொன்னார். நல்ல வேலை, மின்வெட்டு அதிக நேரம் இருப்பது நல்லது என்றே  மனசு நினைத்தது. (கறை நல்லது என்பது போல:-))

மாடியில் ஒரு இடத்தில் அண்ணா அவர்கள் பயன்படுத்திய "சக்கர நாற்காலி" கருப்பு சிவப்பு நிறத்தில் இருந்தது. தொட்டுப்பார்த்தேன். "அண்ணா, எம் அண்ணா...." என களுக் என நீர் என் கண்களில். ரமணருக்கு புற்று நோய் - அண்ணாவுக்கு புற்று நோய் என்றெல்லாம் என் மனசு என்ன என்னவோ முடிச்சு போட்டது. அழுத கண்களுடன் கீழே வந்தேன்.


வீட்டை விட்டு வெளியே வரும் பொது "C.N.Annadurai. M.A., In - Out " என்ற கருப்பு சிவப்பு பலகை இருப்பதை பார்க்கிறேன். அண்ணா Out என்பதை மனசு ஏற்க மறுக்கின்றது. அண்ணா ஆல்வேஸ் "இன்" மட்டுமே எங்கள் மனதில் என நினைத்துக்கொள்கிறேன்.

54ம் எண் இலக்கம் உடைய அந்த வீட்டின் பக்கத்து வீடு இரண்டுகளும் அதாவது 53 மற்றிம் 55 ஆகியவை சிதைந்து போய் உள்ளன. என்னை அந்த வீட்டுக்கு அழைத்து போன தோழர் அருள் பிரகாசம் அய்யா அவர்கள் மிக உணர்சி வசப்பட்ட (அவர் அந்த ஊர் தான்) நிலையில் இந்த இரு வீட்டிலும் என்னவோ டிஸ்ப்யூட் இருக்கு. அரசாங்கம் நினைத்தால் அதையும் வாங்கி பூங்காவாக்கி, அண்ணா வீட்டை சுற்றி வரும் நிலை உண்டாக்கலாம் என சொல்கிறார்.

அவர் என்னிடம் சொன்னதை நான் இங்கே பதிந்து விட்டேன். இந்த பதிவை பார்க்கும் நம் திமுக மட்டுமல்ல அதிமுக தொண்டர்கள் யாராவது கூட இதற்கான முயற்சி எடுக்கலாமே! நாங்க திமுகவினர் ஆசை ஆசையாக உதவி செய்வோமே!

3 comments:

  1. எங்க ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப சந்தோஷமுங்க

    ReplyDelete
  2. அண்ணா ஆல்வேஸ் "இன்" அவர் ஹார்ட்ஸ்ண்ணே.. சிலர் த்தாட்ஸ்லயும் இருந்தா நல்லாயிருக்கும்..

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    வில்லவன் கோதை

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))