பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 29, 2009

நாகை சிவா கல்யாண வைபோகமே!!!!!

நாகை சிவா கல்யாணத்துக்கு குடும்பத்தோட போகனும்னு ஏகப்பட்ட பிளான் எல்லாம் செஞ்சு 28ம் தேதி மதியம் வரை வீட்டு வேலைகள் (கொஞ்சம் கொத்தனார் வேலை) இழுத்து கொண்டே வந்ததால் அபிஅம்மாவும் நட்டுவும் வராமல் நானும் அபியும் மட்டும் செல்வதென முடிவு செய்யப்பட்டு அப்புடி இப்புடின்னு மாயவரத்தை விட்டு கிளம்பவே மாலை ஆறு ஆயிடுச்சு. ஆனால் மாநக்கல் சிபி, திருமதி சிபி, கவிதா, அணில் குட்டி எல்லாரும் நல்ல பிள்ளையாக 28ம் தேதி காலையிலேயே நாகை வந்துவிட்டாங்க.
நான் காரைக்கால் நெருங்கிய போதே நல்ல மழை ஆரம்பித்து விட்டது. அப்போது அபிஅம்மாவிடம் இருந்து போன் வந்தது. மழைன்னு சொன்னேன். "பின்னே இருக்காதா அரிசி மண்டி ஓனர் பையன் கல்யாணம். ஸ்கூல்க்கு லீவ் போட்டுட்டு மூட்டை மூட்டையா அரிசி தின்னுருப்பாரு. பாருங்க நாளை வரை கொட்டி தீர்க்க போவுது"ன்னு வாழ்த்து சொன்னாங்க. அதுக்கு நான் "ச்சே ச்சே "புலி" பசிச்சாலும் அரிசி திங்காது"ன்னு பழமொழி சொல்லிட்டு ஒரு வழியா மண்டபத்துக்கு போய்சேரும் போது இரவு 9 ஆச்சு.
மண்டபத்திலே நுழைஞ்ச உடனே எனக்கு பக்குன்னு ஆச்சு. பொதுவா தமிழ் சினிமாவிலே தான் வெளிநாட்டுக்கு போனா வரும் போது ஒரு வெள்ளைகார அம்மணியை கண்ணாலம் கட்டி கூட்டிகிட்டு வருவாங்க. சிவா வேலை பார்ப்பது சூடான். எனக்கு பக்குன்னு ஆன காரணம் சிவாவை மண்டபத்திலே சுத்தி சுத்தி வந்தது ஒரு சூடானி பெண். போட்டோவை பாருங்க மக்கா.
உடனே இந்த ரகசியத்தை சிபிகிட்ட சொல்ல போன் செஞ்சு விஷயத்தை ஒரு அரை மணி நேரம் சுருக்கமா சொன்னேன். (அப்போ சிபி & குரூப் கர்ம சிரத்தையா நவகிரகம் சுத்த போயிருந்தாங்க) அபிதான் அந்த அம்மணியை சுத்தி சுத்தி வந்து போட்டோ எடுத்துகிட்டு இருந்தா. ஏன்னா அவங்க ஹேர் ஸ்டைல் அத்தனை ஒரு நேர்த்தி.

பின்ன தான் மேடையிலே பார்த்தா சிவா கருப்பு கோட் சூட் போட்டுகிட்டு பக்கத்திலே பார்த்தா பச்சைகிளி மாதிரி மணப்பெண். அப்படின்னா அந்த சூடானி பொண்ணு இல்லியா???அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

பின்னே நானும் அபியும் மேடைக்கு ஏறினோம் வாழ்த்து சொல்ல. ஒரே கைத்தட்டல். அமைதி அமைதின்னு எல்லாரையும் அமைதி படுத்திட்டு மாப்பிள்ளை கிட்ட போனா சிவா மெதுவா என் காதிலே "தொல்ஸ் இந்த கைத்தட்டல் ரஜினி பாட்டு பாடின மியூசிக் ட்ரூப்புக்கு"ன்னு சொல்ல சரி அரசியல்ல இதல்லாம் சகஜமப்பான்னு வந்த வேலையை கவனிக்க ஆரம்பிச்சேன்.

(இந்த படத்தில் இருப்பது 29 காலை . இது வேற மெனு)
சூப்பர் மெனு. கல்கத்தா ரசகுல்லா, கேரட் அல்வா, மினி இட்லி ஒரு பவுல்ல வித் சூப்பர் சாம்பார், பரோட்டா வித் சென்னா குருமா, இடியாப்பம் வித் கடப்பா, கொத்தமல்லி ஊத்தப்பம் அதுக்கு வெங்காய சட்னி(காவிகலர்) தேங்காய் சட்னி(வெள்ளை கலர்), பொதினா சட்னி(பச்சை கலர்) இப்படி காங்கிரஸ் கலராக சட்னிகள், பகாலா பாத்(தயிர் சாதம் தாங்க) வித் கடாரங்காய் ஊறுகாய் மற்றும் மோர் மிளகாய், அக்குவா ஃபீனா வாட்டர் பாட்டில், அருண் ஐஸ்கிரீம். (உங்களுக்கே சாப்பிட்ட மாதிரி இருக்குதா) நல்லா ஒரு வெட்டு வெட்டினோம்.

திரும்ப 10 மணிக்கு தங்குவதுக்கு அரேன்ஞ் செய்யப்பட்ட ஹோட்டல் வந்து தங்கினோம். பேசி கிட்டே இருக்கும் போது மாப்பிள்ளையும் வந்து விட்டார். அவரை திருமதி சிபி "என்ன பொண்ணூ கூட கடலை போடாம இங்க வந்துடீங்கன்னு கலாய்க்க (குடும்பமே கலாய்த்தல் குடும்பமா இருக்குப்பா) சிவா முகமே கோவைப்பழமாக சிவந்தது.( குடுத்த காசுக்கு மேலயே கூவுறனோ)

பின்னே நானும் சிபியும் அமரிக்க, பாகிஸ்தான், சீனா(சீனாசார் இல்லை ஒரிஜினல் அக்மார்க் சீனா) பிரச்சனை எல்லாம் பேசி முடிக்க இரவு 2 ஆச்சு. காலை எழுந்து கல்யாணத்துக்கு போனோம். மாப்பிள்ளையை அய்யர் செமயா ட்ரில் வாங்கி கொண்டிருக்க நாங்க வந்த வேலையை ஆரம்பித்தோம். இப்பவும் மெனுவை சொல்லி பாவம் உங்க ஆவலை தூண்ட விருப்பம் இல்லை. சொன்னா எங்களுக்கு வயித்தை வலிக்கும்.

அப்போதும் அந்த சூடான் பொண்ணு தான் அட்ராக்ட் செஞ்சு கிட்டு இருந்துச்சு. பின்னே தான் தெரிஞ்சுது. ஐநா செயலர்(முன்னால்) கோபிஅன்னானின் சூடான் நாட்டு செயலராம் அந்த பெண். சிவா மீது கொள்ளை பிரியமாம். தவிர கீதாம்மா ஏற்கனவே அந்த பெண்ணின் போட்டோ போட்டு பதிவு கூட போட்டிருந்தாங்கலாம். ஓட்டை வாயிடா முதலின்னு என்னை நானே திட்டிகிட்டு சிவா- உமா தம்பதியினர் (பெயர் பொருத்தம் பாருங்க சூப்பர்)சந்தோஷமாக எல்லா செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். உங்க வாழ்த்தையும் சொல்லிடுங்க.
நடுவே கவிதா அவங்க அயித்தான் மும்பைல இருந்து சென்னை வருவதால் சென்னை சென்றுவிட சிபியும் திருமதி சிபியும் மாயவரம் நம்ம வீட்டுக்கு வந்து விட்டு போனாங்க.
ஒரு மன நிறைவான ட்ரிப் இது.

November 26, 2009

சூடான இட்லி+நெய்+ ஜீனி (26/11/2009)

அப்பாடா! நாலு வருஷமா பலரை பாடா படுத்திய "கோலங்கள்" கிட்ட தட்ட முடியும் தருவாய்க்கு வந்து விட்டது. நான் சில வருஷங்கலாகவே "கோலங்கள்" பார்ப்பதில்லை. எனக்கு தெரிஞ்சு கோலங்கள் பார்க்கும் ஒரே பதிவர் நம்ம கைப்புள்ள தான். ஆனா இங்க மாயவரம் வந்த பின்னே பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். பக்கத்து வீட்டு பாடாவதி பாட்டிக்கு இன்னமும் இலவச தொலைக்காட்சி கொடுக்கப்படாத காரணத்தாலும், கோலங்கள் பார்க்காவிட்டா பாட்டி பரலோகம் போய்விடக்கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாலும் கோலங்கள் நம்ம வீட்டிலே ஓடித்தொலையும்.


அதும் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க அந்த ஆதி பையன் சகட்டு மேனிக்கு பக்கத்தில் கிடைப்பவன் எவனா இருந்தாலும் டுப்பாக்கி எடுத்து நெத்தி பொட்டில் வைத்து தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரி நாபிக்கமலத்தில் இருந்து கத்துறான். அது என்ன கூத்து நெத்தி பொட்டில் வைத்து சுடும் கெட்ட பழக்கம். நெஞ்சிலே சுட்டா கதைக்கு ஆகாதா. வேற எங்கயும் சுட்டா செத்து தொலைய மாட்டாங்கலா? அதுவும் என்னை போன்ற ஆட்களுக்கு துப்பாக்கின்னு பேப்பர்ல எழுதி எச்சில் தொட்டு மேலே ஒட்டினா கூட யதேட்ஷம்.

இந்த கூத்திலே கோலங்கள் கிளைமாக்ஸ் எழுதி அனுப்பும் போட்டி "அவள் விகடன்"ல நடக்குதாம். அபியும் அபிஅம்மாவும் ஆளுக்கு ஒரு பக்கமா இது பத்தி சிந்திச்சுகிட்டு இருப்பதோட இல்லாம என்னையும் அபிப்ராயம் கேட்க நான் "தொல்காப்பியனுக்கும் தீபாவெங்கட்க்கும் கல்யாணம் இது தான் கிளைமாக்ஸ்"ன்னு பொதுவா தான் சொன்னேன்.இப்படி இரண்டு பக்கமும் அடி விழும்னு நினைக்கவில்லை. மக்கா நான் சொன்ன கிளைமாக்ஸ் பத்தி உங்க அபிப்ராயம் என்னன்னு சொல்லிடுங்க.

நட்ராஜ் அளும்புக்கு அளவே இல்லாம போச்சு. தன் தீவாளி டுப்பாக்கியை எடுத்து வந்து ஒரு பேப்பரை நீட்டி என் நெத்தி பொட்டில் வைத்து "கையேத்து போது கையேத்து போது"ன்னு சொன்ன போது பெருமையாக இருந்தது. என்னையும் மதித்து துப்பாக்கி காட்டி கையெழுத்து கேட்க கூட ஆள் இருக்குதேன்னு. "தம்பி நான் அத்தனைக்கு ஒர்த் இல்லை. வேணுமின்னா அம்மா நெத்தில துப்பாக்கிய வைடா, நான் வெளியில் இருந்தென்ன உள்ளுகுள்ள இருந்தே என் ஆதரவை தர்ரேன். ஆனா டெக்கான் கிரானிக்கல்ல வேண்டாம், கொஞ்சம் இரு செக் புக் எடுத்து வாரேன் அதிலே வாங்கினா எனக்கும் பிரயோசனமா இருக்கும் என சமாதான படுத்தினேன்.

தம்பி இப்படி கையெழுத்துக்கு மிரட்டின போது தான் அபிக்கு பிராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்து வாங்க நியாபகம் வந்தது. நேரே எடுத்து வந்து என்னை தாண்டி அவ அவங்க அம்மா கிட்ட கையெழுத்து வாங்க போகும் போது எனக்கு பொசுக்குன்னு போச்சு. பின்னே கெஞ்சி கூத்தாடி நான் கையெழுத்து போட்டேன். என்ன கொடுமை ஆண்டவா இதல்லாம். நானெல்லாம் கெஞ்சி கூத்தாடி என் பிராக்ரஸ் ரிப்போர்ட்க்கு கையெழுத்து வாங்கியது போக இப்போ இப்படி ஆச்சு. இதிலே கூத்து என்னான்னா பேரண்ட்ஸ்க்கு டீச்சர் அதிலே நோட் எழுதி விட்டிருக்காங்க. அடுத்த முறை இன்னும் முயற்சி செஞ்சு முதல் ரேங் வாங்கனும்னு. நானும் அதுக்கு பக்கத்திலே எழுதி வச்சேன் "அடுத்த முறை அவ முதல் ரேங் வாங்கும் அளவு சொல்லி தரனும்ன்னு.

அந்த எபிசோட் பார்த்ததில் இருந்து நட்ராஜ் வீட்டில் ஒரே துப்பாக்கி பிரயோகம் தான். துப்பாக்கியை நீட்டி "ஹேண்ட்ஸ் அப்"ன்னு சொன்னா இரண்டு கையையும் மேலே தூக்கிடனும், அது தான் அந்த விளையாட்டின் முக்கியமான ரூல்ஸ்ன்னு ஐநா சபை அங்கீகரிச்சு இருக்குன்னு நட்ராஜ் திடகாத்திரமாய் நம்புகிறான். இப்படித்தான் அவனை பார்த்து நான் சொல்ல கூடாத வார்த்தை சொல்லிவிட்டேன். பயங்கர கோவத்தோட என்னை கடிக்க வந்த போது நான் இரண்டு கையால் தடுத்து கொண்டே இருக்க அவன் ஓடிப்போய் துப்பாக்கி எடுத்து வந்து ஹேண்ட்ஸ் அப் சொல்லி நான் கை தூக்கின பின்னே நிதானமாக கடித்து வைத்தான். இதுக்கு நெஜ துப்பாக்கியால் சுட்டிருக்கலாம். அப்படி என்ன சொல்ல கூடாத வார்த்தையா? "ஸ்கூலுக்கு போறியா"ன்னு கேட்டு விட்டேன். அதான் அத்தனை கோவம் வந்துடுச்சு. இருக்காதே பின்னே. "எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"ன்னு வள்ளுவர் சொன்னது பொய்க்குமா என்ன?

திடீர்ன்னு என் சின்ன அக்கா நேத்து போன் செஞ்சு "என்னடா உன் பையன் உன்னை மரியாதை இல்லாமல் பேசுறானாமே"ன்னு கேட்டாங்க. தவறு! நட்ராஜின் காம்பிளான் வளர்ச்சியை காண சகிக்காத பூஸ்ட் கம்பனி பரப்பும் வதந்தி இது. அய்யர் ஆத்து குழந்தை 'அபிவாதே' சொல்வது போல பவ்யமாக நின்று கொண்டு தான் நேத்து கூட என்னை திட்டினான் என்பதை நானும் மரியாதையாக அக்காவிடம் சொன்னேன்.

கடந்த நவம்பர் 13 ம் தேதி சந்தோஷமாக தூங்கி கொண்டிருக்க "என்னங்க சீக்கிரம் எழுந்து ரெடியாகுங்க, இன்னிக்கு கல்யாணம்"ன்னு சொல்ல எனக்கு பேரதிர்ச்சி. இல்லை ஒரு தடவை ஆனதே போதும் என சொல்லி புரண்டு படுத்து கொண்ட போது "அய்யோ சாமீ இது வேற ஆசை இருக்கா கல்யாணம் உங்களுக்கு இல்லை மாயவரத்தானுக்கு"ன்னு சொன்னாங்க தங்கமணி. "அப்படியா நேரா சுவரொட்டிக்கு போ, அங்க வாழ்த்து போட்டிருப்பாங்க. அங்க துளசி டீச்சர் "வாழ்த்து(க்)கள்"ன்னு போட்டிருப்பாங்க. அதிலே கோபி "ரிப்பீட்டேய்"ன்னு போட்டிருப்பான். அதை காபி பேஸ்ட் செஞ்சு "டபுள் ரிப்பீட்டேய்"ன்னு போடு. நான் தூங்கி எழுந்து வந்து போன் செஞ்சுடறன்"ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "அய்யோ இன்னிக்கு என்ன நாள் ஐப்பசி 27, நவம்பர் 13 , மாயூரநாதருக்கு திருக்கல்யாணம், இது மூணுமே 43 வருஷத்துக்கு பின்னே ஒரே நாள்ல வந்திருக்கு"ன்னு சொன்ன போது கூட எனக்கு அந்த சரித்திர பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நாளின் மகிமை புரியவில்லை. பின்னே எழுந்து வந்து மெயில் பார்த்த போது ஷைலஜா அக்காவின் வாழ்த்து பார்த்த போது தான் "இன்று புதிதாய் பிறந்த உணர்வு" வந்தது.எனக்கு இப்போதைக்கு தேவையான "அன்னை"யின் அருளுரை அனுப்பியிருந்தாங்க. இந்த வருஷம் புதிதாக தேர்முட்டிலிருக்கும் வல்லப கணபதி கோவிலில் இருந்து மாயூரநாதர் திருகல்யாணத்துக்கு "மாப்பிள்ளை அழைப்பும்" வைத்திருந்தனர். கொடுத்து வைத்த மாப்பி!


அடுத்த நாள் தேர். அமோகமா இருந்தது புது தேர். புது வட கயிறு. அமர்களமாக இருந்தது. தேர்காசு கிடைக்குமா என நினைத்து போன எனக்கு ஏமாற்றம். நான் தான் கொடுக்கனுமாம். நட்ராஜ் தான் கலக்ஷன் குவித்து கொண்டிருந்தான். சட்டையை கழட்டி "ரைட் ரைட் போலாம்"என கங்குலி மாதிரி சுழட்டி சுழட்டி தேர் ஓட்டினான். அவன் 4 வீதியும் தேர் இழுத்தான் என சொல்வதை விட தேர் வடத்தை தொங்கி கொண்டு வந்தான் என்பதே சரி.


அடுத்த நாள் மயிலாடுதுறையின் மகத்தான கடைமுழுக்கு." போன வருஷத்தை விட இந்த வருஷம் கூட்டம் அதிகம்" "நாங்க அந்த காலத்திலே கட்டு சோறு கட்டிகிட்டு வண்டி கட்டிகிட்டு வருவோம்" போன்ற டெம்பிளேட் வசனங்கள் "மஞ்ச சட்டை போட்ட ஒரு பிக்பாக்கெட் லாகடத்து உள்ளே வந்துகிட்டு இருக்கான், முந்தானையை இழுத்து போத்திகங்கம்மா" என ஸ்பீக்கரில் அலறும் போலீஸ்காரர், அதை தொடர்ந்து மஞ்ச சட்டை போட்ட அத்தனை பேரும் கழட்டி கக்கத்தில் வைத்து கொள்ளுதல், முழங்கால் வரை சேறு அப்பிய சோர்ந்து போய் கைகோர்த்து நிற்கும் ஸ்கவுட் பசங்க, இதுக்கு மத்தியில் சீமாச்சு அண்ணா போட்ட 2000 ஃபுல் மீல்ஸ்க்குகூட்டம், (தவிர காலல குளிர் நேரத்தில் 2000 கப் சூடான பில்ட்டர் காபியும் கூட) "இந்த மாயூரநாதர் எப்பவும் இப்படித்தான் மாமி ஆடிக்கு வான்னு சொன்னா அமாவாசைக்கு தான் வருவார், அய்யாரப்பர் பாருங்கோ பஞ்சகஜம் கட்டினோமா, மாமிய கூட்டிண்டோமான்னு விருட்ன்னு வந்துட்டார்"ன்னு அலுத்துக்கும் மகாதான தெரு மாமியும், உங்க அவயாம்பாவுக்கு குஞ்சம் வச்ச ஜடை போடவே சுந்தரம் குருக்களுக்கு சாயரட்சை ஆகிடும் மாமி"ன்னு முகவாய் கட்டையில் இடிச்சுக்கும் ரெட்டை தெரு மாமியும் காவிரியில் இடுப்பளவு தண்ணீரில் தீர்த்தவாரிக்காக காத்து கொண்டிருக்க பழைய மூங்கில் பாலத்தில்(இப்போது கான்கிரீட்பாலம்) இருந்து தொபக்கடீர்ன்னு குதித்து கொண்டிருக்கும் வானரங்கள் ஒரு பக்கமுமாக அல்லாகலப்பட்ட்து இந்த வருஷ கடை முழுக்கு.

இப்படியாக ஐப்பசி மாதம் நல்ல படியாக முடிந்தது மாயவரத்தில்.

November 17, 2009

கோவை பயணம் # 1


என்ன எழுதலாம்னு யோசிச்சு யோசிச்சு நாலு தலைமுடி போனது தான் மிச்சம். பேசாம கோவை பயண கட்டுரை எழுதிடலாம்ன்னு முடிவு செஞ்சாச்சு.


நான் அம்பிஜா கல்யாணத்துக்கு போறேன். யார் யாரெல்லாம் என் கூட வரீங்கன்னு கேட்டதுதான் தாமதம். ஒட்டுமொத்த குடும்பமும் கையை பூமிக்கு கீழே புதைத்துக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை. "சரி நான் வரலை இப்ப யார் யார் வரீங்கன்னு" கேட்டதும் நட்டு வாட்டர் டேங் மேலே நின்னு ரெண்டு கையும் தூக்கியது உட்சபட்சம்.


ஒரு வழியாக பிளைட், கார், வேன், ஆம்னி எல்லாம் தேய்ஞ்சு போய் கடைசியாக அரசு பேருந்து பயணம் முடிவாகி தஞ்சை வரை நட்டு துங்கியதால் எல்லாம் நல்லபடியா தான் போச்சு. வல்லம் வந்தபோது என் சீட்டுக்கு எதிரே இருந்த பட்டாச்சாரியார் பட்டாசு வெடிச்ச மாதிரி கத்தியதால் டிரைவர் பிரேக் போட்டு கத்தியதால் பஸ்ஸில் பலபேர் பிரேக் போடாமலே கத்தினோம். அடுத்த வினாடியே எனக்கு தெரிந்து விட்டது. புள்ளாண்டான் விளையாடிட்டான்ன்னு. அவர் வந்து உட்காந்ததுமே எனக்கே கடிக்க தோணித்து. பின்னால திரும்பி அவர் "மாமி கொழந்தைக்கு பல்லு கொழுக்கட்டை செஞ்சு படைப்பதா சக்கரத்தாழ்வாருக்கு வேண்டிக்கோங்கோ எல்லாம் சரியாகிடும்"னு சொல்ல நானும் ஆட்டையில் கலந்து கொள்ள "மாமா பூர்ணம் வச்சதா ப்ளைனாவா"ன்னு கேட்டு இடுப்பில் ஒரு இடி வாங்கியது தான் நான் கண்ட பலன்.


இதற்கிடையில் பதிவர் நண்பர் வெயிலான் "எப்ப வந்து கோவை சேர்வீங்கன்னு கேட்டு குளிரில் காய்ஞ்சு போய் அப்துவை அழைக்க ஏர்போட் போயிட்டார்.நான் இரவு வந்து சேர்ந்து காலை கல்யாணம் முடிச்சு மயிலக்காவுக்கு போன் செஞ்சேன். "ஆட்டோவிலே ஏறி உட்காந்து ஆட்டோ டிரைவர் கண்ணை மூடினா நம்ம வீடு தான்"ன்னு சொல்ல எனக்கு லேசா பயம் வந்துச்சு. ஆட்டோ டிரைவர் கண்ணை திறந்து வச்சிருந்தாலே சொர்கம் கன்பர்ம்டு. இதுலே கண்ணை மூடி கிட்டா ஒரு வேளை பர்த் கோச் கிடைக்குமோ என நினைத்து கண்ணை மூடி கொண்டேன்.


போகும் வழியில் "ஐய்யோ நாம போக போவது பெரிய ஃபேஷன் டிசைனர் வீட்டுக்கு. இப்படி 16 முழம் கட்டிகிட்டு வந்தா நீ யாரோ நான் யாரோ என சொல்லி ஆட்டோவில் தள்ளி உட்காந்து கொள்ள "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"ன்னு படிக்கொண்டே அபிஅம்மாவும் சந்தோஷமாக தள்ளி உட்கார மயிலக்கா வீடு வந்தாச்சு.


"என்னங்க பொண்ணு "ராசாத்தி"யாட்டம் இருக்குங்க"ன்னு சொல்லி கொண்டே உள்ளே போக உள்ளே ஒரு பெண் உட்காந்து இருந்தது.
"இது யாருன்னு நான் அபிஅம்மாவிடம் கேட்க "இது தான் பாட்டியாலா"ன்னு சொன்னாங்க. அதே நேரத்தில் மயிலக்கா வந்து இது தான் சந்தனமுல்லைன்னு சொல்ல அபிஅம்மா "அபி கூட இதை தான் தைக்கனும்னு சொல்ல எனக்கு ஒரே குழப்பம்.அதற்குள்ளாக தாரணிபிரியாவின் "நான் வாசலுக்கு வந்துவிட்டேன்" என போன் வர "உள்ளே வந்தே சொல்லியிருக்கலாமே" என்கிற என் குழப்பம் தீரும் முன்பாகவே முல்லை ஓடிப்போய் கதவின் பின்னே மறைந்து நின்று "பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ"ன்னு பயம் காட்ட நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஆனா கள்ளுளி மங்கி தாரணிபிரியா அப்படி ஒரு நிகழ்வு நடந்ததையே காட்டிக்கொள்ளாததால் முல்லை 72 மணி நேரம் பதிவு போடாமல் பந்த் அறிவித்தது இந்த பதிவுக்கு சம்மந்தம் இல்லா விஷயம்.

தாரணி பிரியா கலகலபிரியாவாக அந்த இடத்தை கலகலப்பாக, சஞ்சய் வராத குறையை சஞ்சய் கேமிரா போக்கி கொண்டிருந்தது. "இந்த இடத்தில் இல்லாதங்க பத்தி கமெண்ட் அடிக்காதீங்கப்பா" என மயிலக்கா சொன்ன போது சின்ன ஷாக் எல்லாருக்கும். பின்னெ "சஞ்சய் பத்தி பேச இதற்கு விதி விலக்கு"ன்னு சொன்ன பின்னே தான் எல்லாருக்கும் மூச்சு வந்தது. பின்னே தமண்ணா சஞ்சய் அப்படின்னு ஏதோ பேசி கொண்டிருந்தார்கள். எனக்கு ஏன் வம்பு.நான் வாயை மூடி கொண்டு இருந்தேனாக்கும்.


அப்போது தான் தமிழரசி வந்தாங்க. பார்த்ததும் ஏதோ எங்க வீட்டு பொண்ணை பார்த்த மாதிரி இருந்துச்சு. டபார் டபார்ன்னு மனதில் பட்டதை கேட்பதும், கலகல சிரிப்பும், மயிலக்காவிடம் பல்பு வாங்குவதும் அப்படியே டிபிகல் தஞ்சை குணம் இருந்துச்சு.


என்னை பார்த்து "நீங்க சிவிலா?"ன்னு கேட்ட போது "நான் தான் சிவில் அவர் கிரிமினல்"ன்னு அபிஅம்மா என்னை கை நீட்டி சொன்ன மாதிரி என் காதுக்கு பட்டது.
தொடரும்....
செல்வா, சஞ்சய், மஞ்சூர் ராஜா குடும்ப சந்திப்பு அடுத்து வரும்....