பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 25, 2013

"இரட்டைக் குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டுமல்ல.........:-((



2010ன் மத்தியிலேயே "2 ஜி ஸ்பெக்ட்ரம்" என்னும் வார்த்தை புகுந்து புறப்படாத வாய்களே இந்தியாவில் இல்லை என்னும் அளவு வெற்றிகரமான பிரச்சாரத்தை  இந்திய ஆதிக்க ஊடகங்கள்  அலறித்துடித்து செய்தன. "ஆ.ராசா - தொலைத்தொடர்பு துறை - திமுகவை சேர்ந்த அமைச்சர் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ரூபாய்களை வாரி சுருட்டிக்கொண்டு தமிழகத்துக்கு கொண்டு போய்விட்டார். " "இதுக்குதான்யா சொல்வது இந்த பிராந்திய கட்சிகளை நம்பக்கூடாதுன்னு. இப்ப பாரு நம்ம ஸ்டேட் பணத்தையும் சேர்த்து கொண்டு போய்ட்டானுங்க" என்ற ரீதியிலான பேச்சுகள் எங்கும் எங்கும், பங்கு சந்தை முதல் பொதுக்கழிப்பிடம் வரை இது மட்டுமே பேச்சு.


தமிழக மக்களோ பகலில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சீரியலில் மட்டுமே கோடிகளை பார்த்தவர்கள். "அம்மா நான் பேங்குல போய் ஒரு 300 கோடி எடுத்துகிட்டு வரும் போது ஒரு பத்து கோடிக்கு டீ சாப்பிட்டு, 24 கேடிக்கு ஹேர்கட் பண்ணிகிட்டு அப்படியே அந்த ராமசாமி பணம் கேட்டான் அவனுக்கு ஒரு 32 கோடி கொடுத்துட்டு வர்ரேன்" என்பன போன்ற சீரியல்களில் மட்டுமே கோடிகளை பார்த்து வந்தவர்களுக்கு இந்த ஒன்னேமுக்கால் லட்சம் கோடி என்பது அதும் அரசாங்கத்தை சேர்ந்த சி பி ஐ போன்ற "பெரிய போலீஸ்" சொல்வது எல்லாம் நினைத்து  அரண்டு போயினர். இப்போது அந்த வழக்கு கிட்ட தட்ட முடியும் தருவாயில் அந்த "பெரிய போலீஸ்" என்னும் சி பி ஐ என்பது "சிரிப்பு போலீஸ்" ஆனது தேசிய கொடுமைதான்!


தமிழகத்திலோ இது எல்லாவற்றுக்கும் மேலாக விரைவில் 2011 மத்தியில்  தேர்தல் வர இருந்த நிலை. ஆதிக்க சக்திகளுக்கோ ஜெயாவை இப்போது முதல்வராக ஆக்காவிடில் இன்னும் எத்தனை ஜென்மம் ஆகுமோ தெரியாது அவர்கள் முதல்வர் அதிகாரத்தில் அமர! இதுவே காஞ்சி மடமாக இருப்பின் ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு இருள்நீக்கி சுப்ரமணியம் பாலியல் குற்றச்சாட்டில் வெளியே போயின் அடுத்து ஒரு செந்தமிழ்செல்வனோ, தேன்துளிவளவனோ வந்து அந்த நாற்காலியில் அமர வாய்ப்பில்லை. அதனால் அந்த பதவி பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. ஆனால் முதல்வர் நாற்காலி அப்படியா? அண்ணா போட்டு வைத்த அஸ்திவாரம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு  போதுமானதாக இருந்தாலும் நடுவே எம் ஜி ஆரின் சில வீக்னெஸ் காரணமாக நடுவே அதிஷ்டவசமாக ஜெயாவின்  ஆட்சி அவர்களுக்கு கிடைத்தது. அதை மீண்டும் தக்க வைக்க வேண்டும் எனில் ராசாவுக்கு எதிராக இப்போது கிடைத்த ஸ்பெக்ட்ரம் ஆயுதத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே இயலும் என அவர்கள் உனர்வுகளை மட்டுமே டெலிபதி மூலம் கூடி பேசிக்கொண்டு செயல்பட்டனர். அதன் விளைவு 2 ஜி ஸ்பெக்ட்ரம் விஷயம் ஊதிப் பெருக்கப்பட்டது. என்ன நடக்கின்றது என நடுநிலையாளர்கள் யூகிக்கும் முன்பே ஆ.ராசா அவர்கள் கைது செய்யப்பட்டு, ஊடகங்கள் ஆடித்தீர்த்து விட்டனர். நீதிபதிகள் கூட திகைத்து போயினர்.


சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சி பி ஐ வழக்கு தொடுத்தது. ராசா அவர்கள் மொரீசியஸ்ல பணம் வச்சிருக்காரு, துபாய்ல பணம் வச்சிருக்காரு என சி பி ஐ டைரக்டரே "இந்தியா டைம்ஸ்"க்கு பேட்டி கொடுத்தார். ஆச்சு 2 வருஷத்துக்கு மேல. இதுவரை சி பி ஐ முட்டைக்கு முடி புடுங்கி கொண்டு இருந்ததா என தெரியவில்லை. ஆனால் துபாய், மொரீசியஸ் பணம் விவகாரம் என்ன ஆச்சு என ராசா அவர்கள் சி பி ஐ டைரக்டரிடம் கேட்கும் போது "அதல்லாம் ஊலூலூலாய்க்கு" என்கின்றனர்.

சி ஏ ஜி முதலில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி என்றது. அதை சி பி ஐ நம்பியது. வழக்கு போடும் போது அது 33000 கோடியாக சுருங்கியது. பின்ன கொஞ்சம் கொஞ்சமாக காற்றுப்போன பலூன் போல 7000 கோடி ஆனது. பின்னர் போகிற போக்கை பார்த்தால் அரசாங்கம் ராசாவுக்கு 10000 கோடி தரவேண்டும் என சொல்லும் போலிருக்கு.


அதல்லாம் போகட்டும். சி பி ஐ வழக்கு அதன் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கு. அதை உச்சநீதிமன்றம் தனிக்கவனம் செலுத்தி கவனித்துக்கொண்டு உள்ளது. இதனிடையே  ஆ.ராசா அவர்கள் ஆட்சிக்காலத்தில் தொலைத்தொடர்புத்துறை அனுமதி அளித்த 122 அலைக்கற்றை உரிமங்கள் உச்சநீதிமன்றத்தால் நீக்கப்படுகின்றது. வழக்கில் சம்மந்தப்பட்ட ஆ.ராசா அவர்கள் அந்த வழக்கில் விசாரிக்கப்படவில்லை. ஏன்? ஏன்? ஏன்?? ஏனனில் உச்சநீதிமன்றம் "முன்முடிவெடுத்து" விட்டதோ என்கிற ஐயம் பொதுமக்களுக்கு வருகின்றது. உடனே ஆ. ராசா அவர்கள் வழக்கை மறுசீராய்வு செய்ய வேண்டும் என கேட்டு மனு செய்கிறார். அதில் தன்னையும் விசாரிக்க வேண்டும். தன் தரப்பு விளக்கங்களை கேட்க வேண்டும் என சொல்கிறார். அது மட்டுமல்ல மத்திய அரசும் மறு சீராய்வுக்கு கேட்கின்றது. இரண்டுமே தள்ளுபடி ஆகின்றது. இதில் நீதி எங்கே போனது? இது என்ன கொடுமை? இது தான் ஜனநாயக நாட்டின் முறையா? தான் சம்மந்தப்பட்ட வழக்கில் தன் மீது பழி வரும் வகையில் ஒரு தீர்ப்பு தன்னை விசாரிக்காமலே, தன் விளக்கத்தை கேட்காமலே என்னும் கொடுமை ஆ.ராசா என்னும் தனிப்பட்ட நபருக்கு! இது தான் இந்திய நீதியா?



ஆனால் ஒரு பக்கம் சி பி ஐ நீதிமன்றம் வழக்கு நடக்கும் போதே தினம் தினம் ராக்கெட் வேகத்தில் நடக்கும் போதே, இடயே பாரளுமன்றம் விழித்துக்கொண்டது. அரசு கொள்கை முடிவில் நீதிமன்றம் எப்படி தலையிடலாம்? ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரனை செய்யட்டும் என ஒரு குழுவை பாராளுமன்ற சபாநாயகர் திருமதி. மீராகுமார் அமைத்தார். நல்ல விஷயம் தான். அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அதில் உறுப்பினர்கள். பி சி ச்சாக்கோ என்னும் கேரள எம் பி தான் அந்த நாடாளுமன்ற கூட்டு விசாரனை குழுவுக்கு தலைவர். அதிலே அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இந்த சாக்கோ அவர்கள் நல்லவர், வல்லவர், நீதிமான், நேர்மையின் சிகரம் என்றெல்லாம் பாராட்டப்படுபவர். நல்லது.


அங்கும் விசாரனை. ஆனால் இதுவரை குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா அவர்கள் விசாரிக்கப்படவில்லை. இதிலே பிரதமர் மன்மோகன் சிங்கையும், அப்போது நிதிஅமைச்சராகவும் இப்போதும் நிதி அமைச்சராகவும் இருக்கும் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்ற பாஜக கட்சியின் கோரிக்கை இதுவரை பி.சி சாக்கோவால் நிராகரிக்கப்பட்டுக்கொண்டுள்ளது. அதற்கு காங்கிரஸ் எம் பிக்கள் (அந்த குழுவில் இருக்கும் எம் பிக்கள்) ஒத்துக்கொள்ளவில்லை. என்ன பயமோ? யார் அறியோம். இதற்கிடையே அந்த குழுவில் இருக்கும் திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா போன்றவர்கள் அந்த விசாரனையில் ஆ.ராசாவையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். ஏன்? மடியில் கனமில்லை. விசாரனைக்கு பயமில்லை. இதுவரை அந்த கோரிக்கையும் மறுக்கப்பட்டுக்கொண்டுள்ளது. என்ன காரணம்?


சரி, இவர்களை விசாரிக்காமலே நல்ல தீர்ப்பு வருமா என பார்க்கின் அதற்கான வாய்ப்பும் குறைவாக தெரிகின்றது. காரணம்... அங்கே சாட்சிகளாக வரும் தொலைத்தொடர்பு அதிகாரிகளும், அட்டர்னி ஜெனரல் போன்றவர்களும் முன்னுக்கு பின் முரணாக, தான் தப்பித்துகொண்டால் போதும் என்கிற ரீதியில் ராசா அவர்கள் மீது பழி போட்டு வருகின்றனர். இத்தனைக்கும் அவர்கள் சி பி ஐ நீதிமன்றத்தில் சொன்ன சாட்சிகள் வேறு மாதிரி. இதை எல்லாம் பத்திரிக்கையில் பார்க்கும் ஆ.ராசா அவர்கள் தன்னையும் ஜே பி சி யில்  விசாரிக்க வேண்டும் என கோரி சபாநாயகர் திருமதி மீராகுமார் அவர்களுக்கு நான்கு நாட்கள் முன்பாக ஒரு மூன்று பக்க கடிதம் எழுதுகிறார். அதன் தலைப்பிலேயே "ரகசியம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் முடிவெட்டும் கடையில் கூட வழித்த முடியை துடைத்து போட அந்த கடித நகல் தான் இன்று இந்தியா முழுமையும் பயன்படுகின்ற அளவு இணையம் முழுக்க வெளிவந்து விட்டது. இந்திய அரசாங்கம் "ரகசியங்களை" பாதுகாக்கும் லட்சனம் இது. அது நமக்கு இப்போதைக்கு தேவையில்லை. ஆனால் அதன் சாராம்சம் என்ன? இதோ அந்த கடித்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பாருங்கள்..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


மதிப்பிற்குரிய  பாராளுமன்ற சபாநாயகர் அவர்களுக்கு!


1998 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட 2 G அலைக்கற்றை கொள்கை, அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நான் ஆஜராக வேண்டும் என்று அதில் இடம் பெற்றுள்ள சில உறுப்பினர்கள் கோரி வருவதாக அறிகின்றேன்.

2007ம் ஆண்டு மே 17 முதல் 2010 ம் ஆண்டு நவம்பர் 14 வரை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக நான் இருந்த போது 2008ம் ஆண்டில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கப்பட்டன.

அலைக்கற்றை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எனது தரப்பு விளக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்காமல் 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அந்த 122 அலைக்கற்றை உரிமங்களையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது. அதை மறு சீராய்வு செய்யக்கோரி நான் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக மத்திய தொலை தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அட்டர்னி ஜெனரல் போன்றோர் ஆகராகி வருகின்றனர். ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்கள் குழுவிடம் அளிக்கும் விளக்கம் உண்மைக்கு புறம்பாகவும் குற்றத்தை வேறொறுவர் மீது சுமத்தும் வகையில் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்தியின் மூலம் அறிகின்றேன்.

இந்த விவகாரத்தில் தவறாகவும், முழுமையான ஆதாரங்கள் இல்லாமலும் பாராளுமன்ற கூட்டுக்குழு வழிநடத்தக்கூடாது. அதனால் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நானே நேரில் ஆஜராகி தொலைதொடர்பு கொள்கை, தொலைதொடர்பு உரிமங்கள் வழங்குவதில் அரசு கடைபிடித்த கோட்பாடு, இதில் யாருக்கெல்லாம் உரிமையும் பங்கும் உண்டு என்பதை விளக்குவதே சரியாக இருக்கும்.

அலைக்கற்றை தொடர்பான தீர்ப்பில் இந்திய ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட அரிய இயற்கை வளமான அலைக்கற்றை   பண பலம் கொண்ட சிலராலும் அரசு நடைமுறையை மாற்றும் சக்தி படைத்தவர்களாலும் அனுபவிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஆலைக்கற்றை முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை சி பி ஐ நீதிமன்றத்தில் எனது பதவிக்காலத்தில் ராணுவம் பகிர்ந்து கொண்ட அல்லது அது பயன்படுத்தி வந்த அலைக்கற்றை வழங்கப்படவில்லை என சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனது பதவிக்காலத்தில் பயன் படுத்தாமல் இருந்த அலைக்கற்றையை கண்டறியவும் அவற்றை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை ஒருக்கிணைக்கும் பணியையும் மத்திய தொலைத்தொடர்பு துறை மேற் கொண்டது.

ஆனால் எனக்கு முன்பு அமைச்சராக இருந்தவர்கள் அலைக்கற்றையை பயன்படுத்தாமல் இருந்ததால் தான் அரசுக்கு உண்மையான வருமான இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத்தலைவர் மூலம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் ஏலம் நடத்தி அலைக்கற்றையை ஒதுக்குவது அரசின் நோக்கம் அல்ல , நாட்டின் தொலைத்தொடர்பு வளர்ச்சியை அதிகரிக்க நிறுவனங்களின் வருவாய் அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள் விளக்கினர். மேற்க்கண்டவாறு 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிலவும் பல முரண்பாடுகளை பாராளுமன்ற கூட்டுக்குழுவிடன் என்னால் விளக்க முடியும். இதன் மூலம் மறைக்கப்படும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். சி பி ஐ நீதிமன்றத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சட்ட விரோதமாக அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு தான் விசாரிக்கப்படுகின்றது இப்போது. அந்த விசாரணை பாதிக்காத வண்ணம் அலைக்கற்றை கொள்கை அதை அமல்படுத்திய நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதனால் என்னை விசாரனைக்கு அழைக்கும் படி பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு உத்தரவு இட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ஆ. ராசா


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு மனிதன் தனக்கான நீதி கிடைக்க எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது. என்னை விசாரியுங்கள் விசாரியுங்கள் என கதறுவது இந்த பக்கம். ஆனால் ஆனால்....

கடந்த 17 வருடமாக ஜெயலலிதா மீது ஒரு சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து கொண்டுள்ளது. இதுவரை இந்திய சரித்திரத்தில் இல்லாத அதிசயமாக 100 முறைக்கும் மேல் வாய்தா வாங்கப்பட்டு அல்லது கொடுக்கப்பட்டு, நீதிபதிகள் மேலேயே குற்றம் சாட்டப்பட்டவர் புகார் சொல்வதும், என்னால் மன உளைச்சல் தாங்க இயலவில்லை என ஆச்சார்யா என்னும் அரசு வழக்கறிஞர் துண்டைக்காணும் துணியைக்காணும் என ஓடுவதும் இன்னும் வழக்கு முடிந்தபாடில்லை. ஏன்? ஏன்? ஏன்? இத்தனைக்கும் அந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தால் அதன் வழிகாட்டுதல் படி தான் சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. ஏன் என நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டாமா?


ஆ.ராசா அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட போது திமுக தலைவர் சொன்னார் "ராசா ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீது கொண்ட பொறாமையால் அவதூறு சொல்லப்படுகின்றது" என்றார். உடனே நடுநிலை நாயகர்கள் "இந்த கருணாநிதிக்கு வேறு வேலை இல்லை. சென்சிட்டிவ் பிரச்சனை வரும் போதெல்லாம் தாழ்த்தப்பட்டவன் என்ற ஆயுதம் எடுப்பார்" என கேலி பேசின.


ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகளை பாருங்கள். உண்மை என்ன? தன்னை விசாரிக்க சொல்லும் ஆ.ராசாவுக்கு  மறுக்கப்படுகின்றது, ஆனா ஜாதி இந்துக்கள் ப.சிதம்பரம் தன்னை விசாரிக்க கூடாது என சொன்னால் அது ஏற்கப்படுகின்றது. ஆதிக்க சாதியை சேர்ந்த ஜெயாவுக்கு 17 வருசம், 100க்கு மேல் வாய்தா என அள்ளி அள்ளி சலுகைகள் வழங்கப்படுகின்றது. மேலும் டான்சி வழக்கில் கூட ஜெயா குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட போதும் கூட "கொழந்தே, அப்டீல்லாம் செய்யக்கூடாது. அரசாங்க சொத்தை ஆட்டைய போட்டியா.. ஒடனே திருப்பி கொடுத்துடு, நீ போட்ட கையெழுத்து போடலைன்னு சொன்னியா, இனி அப்படி செய்யக்கூடாது கொழந்தே" என சொல்லி விட்டு தண்டனை இல்லை என சொல்கின்றது நீதிமன்றம்.


ஆனால்ஆ. ராசா அவர்களுக்கு?????? தான் குற்றமற்றவர் என நிரூபிக்க தன்னை விசாரியுங்கள் என சொல்லியும் இனியும் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுமானால் "இரட்டைக்குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டும் நடக்கவில்லை... இந்திய நீதியிலும் ரெட்டை குவளை முறை தான் நடந்து கொண்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகும்! காந்தி தேசத்தில் காந்திக்கு செய்யும் உண்மையான மரியாதை ரூபாய் நோட்டுகளில் அவரை படம் போடுவது மட்டுமல்ல... அவரது தீண்டாமை கொடுமை  ஒழிப்பு கொள்கைக்கு  புடம் போடுவதும் கூடத்தான் என்பதை இந்த தேசம் உணரட்டும்!

February 11, 2013

ஓட்டு போடும் வயசு வரம்பு 30 ஆக்கனும் யுவர் ஆனர்! ஏன்னா பசங்க "மூளை வளர்ச்சி இல்லை"!!!













"நீயா நானா" நிகழ்ச்சி - தமிழகத்தில் இன்றைய  மிக முக்கிய சமூக பிரச்சனை என்ன?

மேற்கண்ட தலைப்பு தான் இன்றைய நீயா நானா நிகழ்ச்சி யுவர் ஆனர்!. ஒரு பக்கம் தமிழகம் முழுமையான கல்லூரிகளில் இருந்து பரந்துபட்டு மாணவ மாணவிகள் அமர்ந்திருக்க எதிர் பக்கம் சமூக களப்பணியாளர்கள். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது இன்றைய இளைய சமுதயம் மகா மோசமான அறிவினை கொண்ட அதாவது மார்க் ஷீட்ல நல்ல மார்க் வாங்கினா போதும் என குதிரைக்கு கண் பட்டை கட்டி விட்டது போல ஒரே ஒரு இலக்கு அதாவது மார்க் என்னும் இலக்கை மட்டும் நோக்கி மற்றது எல்லாத்தையும் கோட்டை விட்ட அடி முட்டாள் களாக இருக்கின்றனர் என்பதே அப்பட்டமான உண்மை.

முதலில் அங்கே அமர்ந்து இருக்கும் கிட்டதட்ட 25 மாணவ மாணவிகளிடம் தமிழகத்தின் தலையாய சமூக பிரச்சனை என்ன  என கேட்கும் போது மின்சாரம், பெண்களுக்கு பாலியல் தொல்லை, இட ஒதுக்கீடு (வேண்டாமாம்... இதை ஒரு தாழ்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவனே சொல்கிறான். காரணம் கேட்டா அவன் நண்பர்கள் மத்தில வெட்கமா இருக்குதாமாம்... ) இவைகள் மட்டுமே சொன்னார்கள். அதிலே ஒருத்தன் தமிழ்க்கு பாதுகாப்பு இல்லைன்னு சொன்னான். சந்தோஷமா இருந்துச்சு. என்னடா படிக்கிறன்னு கேட்டா எம் ஏ தமிழ் இலக்கியமாம். சரி உனக்கு பிடிச்ச 3 தமிழ் எழுத்தாளர்கள் சொல்லு என கேட்ட போது மு.வ ன்னு சொன்னான். பின்ன பல நொடிகள் யோசிச்சுட்டு அடுத்த 2 பேர் சொல்லலை. "பாஸ்"ன்னு சொல்லிட்டான். டேய்... நீ வாழ்க்கையிலே பெயிலாகிட்டு உனக்கு கிடைத்த பொன்னான நேரத்தை "பாஸ்" பண்ணி விட்டு என்ன லாபம்? இது தமிழுக்கே இழுக்கு என்பதை விட உலகம் முழுக்க பரந்து விரிந்து கிடக்கும் ஜெமோ வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு இழுக்கில்லையோ? "அழகன்"னு ஒரு பாலசந்தர் படத்திலே ஒரு சின்ன பையன் சொல்லுவான். "நாம பேசாம வேற வீட்டிலே வேற அப்பா அம்மாவுக்கு பிறந்திருக்கலாம்" என. அந்த சின்ன பையன் போலவே சாருவும் அடிக்கடி சொல்ராரே... நான் பேசாம கேரளாவிலே பிறந்து இருக்கலாம், உத்ரகாண்ட்ல பிறந்து இருக்கலாம், பிரான்ஸ்ல பிறந்து தொலைச்சு இருக்கலாம் என. இதுக்கெல்லாம் காரணம் இந்த மாணவர் தான். ஒரு மூன்று தமிழ் எழுத்தாளர் பெயர் கூடவா தெரியாது? என்னே அறிவு!

இதிலே ஒருத்தன் கூட கூடங்குளம் பிரச்சனை, மது பிரச்சனை பத்தி பேசலை. இதைத்தான் நண்பர் ஜெயின் கூபி மிகவும் வருத்தமாக பதிந்தார். எல்லா பிரச்சனைக்கும் மதுவே காரணம்னு இருக்கும் போது ஒரு பையனும் அதை சொல்லலையே என வருத்தமாக பதிந்தார்.

கூடங்குளம் பிரச்சனையை கோபியே எடுத்து கொடுத்து பேச சொன்ன போது ஒரு பேக்கு சொல்லுது "சார் அங்க பிரச்சனைக்கு காரணமே என்.ஜி.ஓக்கள் தான்"ன்னு. உடனே இந்த பக்கம் இருந்த அம்மணி (கவிதான்னு பெயர் - ஏதோ பிரபல ஊடகமாம்)தெள்ள தெளிவாக உதயகுமார் பத்தி பேச்சு எடுத்து விலாவாரியா அந்த பெண் கிட்டயே கேள்வியா கேட்டு தெளிய வைக்க முயன்று தோற்றுப்போனார். எதுவுமே தெரியலை யாருக்குமே அந்த மாணவ மந்தையில்.

களப்பணீயாளர்களில் ஒருவர் அழகா சொன்னார். ஊடகங்களால் ஒரு விஷயம் சென்சிட்டிவ் ஆக்கப்படும் போது இவங்க அதையே பிடிச்சுகிட்டு அந்த வாரம் முழுக்க தொங்குறாங்க. இதே டெல்லி மாணவி ரேப் நிகழ்சி நடக்கலைன்னா ஒட்டு மொத்த இந்தியாவிலே ரேப் என்பதே இல்லைன்னு நினைச்சுகிட்டு அவங்க அதைப்பத்தி இங்க பேசியிருக்கவே மாட்டாங்க. அந்த மீடியாக்களின் மூளைச்சலவை தான் இன்று இவர்களை தர்மபுரி சாதிக்கலவரம், மற்றும் டெல்லி ரேப் பத்தி பேச வைக்குது. சாதிக்கலவரம் தர்மபுரில மட்டுமா நடக்குது. அது கொஞ்சம் அதிகமா ஊடகத்திலே வந்துச்சு அத்தனையே என்றார். அவர் கருத்து சரி தான். அது போல ஒருவர் இந்திய கல்விமுறை பற்றி சாடினார். ஒரு சாதாரண கொசு அடிக்கும் பேட் கூட சைனாவில் இருந்து வருது நம்ம நாட்டுக்கு. ஏட்டு சுரைக்காயா இருக்கு இங்க படிப்பு என்றார். உண்மை தான்!

இடஒதுக்கீடு பிரச்சனைக்கு கடலூர் காரர் ஒருவரும், சிவசங்கர் சாரும் அருமையான ஒரு விளக்கத்தை புரியும்படி எடுத்து சொன்னாங்க. கடலூர் காரர் அந்த பையன்கிட்டயே கேள்வியா கேட்டு பதிலை வாங்கினாரு. ஆனாலும் அவன் மண்டைக்கு புரியவில்லை. அதன் பின்னே ஒரு தாழ்த்தப்பட்ட சமூக பையனை சிவசங்கர் சார் செமத்தையா பிடிச்சுகிட்டு ஒரு கேள்வி கேட்டார் "உன் தாத்தா என்ன செஞ்சாரு?" அந்த பையன் சொன்னான் "கூலி". இப்படியாக அவனை கேள்வி கேட்டு கேட்டு அவனுக்கு புரியுதோ இல்லியோ (சத்தியமாக அவனுக்கு புரியவில்லை அல்லது அவன் தான் பிறந்த சாதியை சலுகையை அனுபவித்து முடித்துவிட்டு அதிலிருந்து வெளிவர அல்லது வெட்கப்பட்டு கொண்டு இருக்கிறான்) மத்தவங்களுக்கு அதாவது விஜய் டிவியை பார்த்தவர்களுக்கு நன்றாக புரிந்தது. அவனுக்கு ஏன் புரியலை என சொல்கிறேன் என்றால் அதன் பின்னர் கோபி இடஒதுக்கீடு வேண்டாம் என சொல்பவர்கள் கை தூக்குங்கன்னு சொன்ன போது அவனும் தூக்கினான். சிவசங்கர் சார் சொல்லும் போது 100 மீட்டர் ஓட்ட பந்தய  உதாரணம் சொன்னார். மேல்வர்க்க மக்கள் ஆயிரம் ஆயிரம் வருஷமா அந்த பந்தயத்தில் மோனோபாலியா ஓடிவர்ராங்க.கீழ்ட்தட்டு மக்கள் இப்ப தான் இந்த இட ஒதுக்கீடுக்கு பின்ன ஓடிவரும் நிலை. அதனால கொஞ்சம் முன்னால நிக்க வச்சு பந்தயம் நடத்தப்படுது என விளக்கமாக சொன்னார். என்ன சொல்லி என்ன பயன். எல்லாம் மழுங்கி கிடக்குது அந்த கூட்டத்தில் என்பது வருத்தமான விஷயம்.

இதிலே எல்லா பிரகஸ்பதியும் இங்கிலீஸ் பேப்பர் தான் படிக்குதாம். தமிழ் பேப்பர் படிச்சா அறிவு வளராதாம். கோபி விதர்பா பிரச்சனை என்னான்னு சொல்லுங்கன்னு கேட்டா எல்லாம் வாயிலே களிமண் வச்சுகிட்டு இருக்கான். இந்த லட்சனத்திலே எல்லாத்துக்கும் பேஸ்புக் அக்கவுண்ட் இருக்குதாம். ஆனா தமிழக தலையாய பிரச்சனை எதும் தெரியாதாம். சினிமா பத்தி பேசிக்குமாம் எல்லாம். என்ன கொடுமைடா சாமீ!

இஸ்லாமியர்கள் பற்றிய கேள்விக்கு ஒட்டு மொத்தமாக சொன்ன பதில் என்னை அழவைத்தது என்பது உண்மை. விஸ்வரூபம் படம் நல்லா இருக்குன்னு தான் நான் விமர்சனம் எழுதினேனே தவிர அதன் கருத்து நல்லா இருக்குன்னு எங்கயும் சொல்லலை. ஆனால் அதைக்கூட ஏன் எழுதினோம் என வருத்தமாக இருக்கு. ஏனனில் இந்த நீயா நானா பதிவு செய்து இரு மாதங்கள் ஆகும். அப்போது விஸ்வரூபம் படம் வரலை. அப்போதே அந்த மாணவர்கள் ஒட்டு மொத்தமாக இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என சொன்ன போது இந்த படம் இன்னும் என்னன்ன பாதிப்பு உண்டாக்குமோ என பயமாக இருக்கு. அஃப்கோர்ஸ் அது ஆப்கானிஸ்தான் தாலிபான்களை பற்றியது தான் எனினும் இந்த இளைய தலைமுறை முட்டாள்கள் எப்படி புரிந்து கொள்வர் என இன்று அவர்கள் பேசிய மற்ற பேச்சுகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

மீனவர்கள் பத்தி பேச்சு வந்த போது மீனவர்கள் குடிசையில் இருக்காங்க, ஏழைகள் அதனால பாவம் என சொல்லும் அளவு ஒரு 5ம் கிளாஸ் படிக்கும் மாணவர்களுக்கு இருக்க வேண்டிய அளவே மூளை இருக்கு அவங்களுக்கு. பாவம்.பிரச்சனை என்னான்னு கேட்டா குடிசைல இருக்காங்கலாம். எங்க போய் முட்டிப்பது. மாடிவிட்டிலே இருந்தா பிரச்சனை இல்லாதவன் என நினைப்பு!

அரசியல்வாதிகள் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு ஒரு கேள்வி கேட்டதுக்கு ஒட்டு மொத்தமாக எல்லாரும் மோசம், மட்டம்னு மட்டும் பதில் சொல்றாய்ங்க. தமிழகத்தில் செயல்படும் நல்ல திட்டங்கள் என்னன்னு கேட்டதுக்கு உழவர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், இலவச அரிசி திட்டம், சத்துணவு திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம் என எல்லாரும் நிறைய சொன்னாங்க. ஆனா இதல்லாம் அரசியல்வாதிகள் தான் செஞ்சாங்க என்பது மட்டும் ஏன் தெரியலை என்பது தான் என் கேள்வியே.

உங்களுக்கு என்ன மாதிரியான அரசியல் கட்சிகள் பிடிக்கும் என கேட்டதுக்கு கடலூர் பையன் ஜாதிக்கட்சி தான் பிடிக்கும் என சொல்றான். போகட்டும். ஆனா 20 பேருக்கு மேல் "நோ ஐடியா"ன்னு சொல்றாங்க. அட நாறப்பலுவலா... அரசியல் உன் வாழ்வை தீர்மானிக்கக்கூடிய சக்தி என்பது ஏன் உனக்கு புரியலை? உன்னை ஆள்வது என ஏன் புரியலை? இல்லாட்டி "நோ ஐடியா"ன்னு முதல் மாணவன் சொன்னதை அதும் ஒரு கட்சி பெயர்ன்னு நினைச்சுகிட்டானுங்களா... அதையே நானும் செய்வோம் என நினைச்சானுங்களா? அட மகாபாவிங்களா? ஆட்டு மந்தை கூட்டமாக இந்த இளைய சமுதாயம் இருந்து தொலைக்குதேன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது.

இதுங்களுக்கு 18 வயசிலே ஓட்டுரிமை அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. ஊடக பிரச்சாரங்களுக்கு மயங்கி நல்லது எது? கெட்டது எது? உண்மை எது? பொய் எது? என தெரியாமல் தமிழகத்தில் மட்டும் 2011ல் ஓட்டு போட இதுங்க கியூவில் நின்னதால் தான் ஒன்னேமுக்கால் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊடக பொய் பிரச்சாரத்தில் மயங்கிய இதுகள் செஞ்ச தீவினை தான் இன்று இதுங்களுக்கு மட்டுமல்லாம ஒட்டு மொத்த தமிழகமும் மின்சாரம் இல்லாம, பேருந்து கட்டணம், பால் கட்டணம் உயர்த்தப்பட்டு, காவிரியில் நயந்து பேசி தண்ணீர் வாங்க தெரியாம, விவசாயி தற்கொலை, பயிர்கள் காய்ந்து, ஏழைகள் வயிறு காய்ந்து... இப்படிப்பட்ட அவலமான நிலை தமிழகத்துக்கு வந்து தொலைத்தது.

கடைசியா ஒரு திருச்சி மாணவிக்கு சிவசங்கர் சார் கையால ஒரு பரிசும், ஜாதிக்கட்சி வேணும்னு சொன்ன பையனுக்கு ஒரு பரிசும் கொடுத்தாங்க. என்னவோ போங்க. இரண்டு பரிசு உண்டு என்பது நிகழ்சியின் கட்டாயம். ஆனா பரிசு கொடுத்து இருக்க கூடாது என்பதே என் எண்ணம். அந்த பரிசு அவர்கள் முட்டாள் தனத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துவிடுமே என்றே அஞ்சுகிறேன்.

களப்பணியாளர்கள் என எதிர்பக்கம் இருந்தவங்க எல்லாரும் 35+ வயது கொண்டவர்கள் தான். அவர்களுடைய வாசிப்பு அனுபவம் அவங்க பதில்ல அருமையா வெளிப்பட்டது. வீட்டிலே ஒரு பேப்பர் அதாவது இந்து பேப்பர் வாங்கினா அதை ஒரு மாதம், ஆறு மாதம் , ஒரு வருடம் படிச்சா இயல்பாகவே ஒருத்தன் அதே குணத்துக்கு இழுத்து போகப்படுவான். தினமலரை தொடர்ந்து படிச்சா செங்கொடி காதல் பிரச்சனையிலே தீக்குளித்து செத்ததா தான் நம்புவான். ஆனா அதே மாணவன் அல்லது மாணவி நூலகத்துக்கு போய் படிக்கும் போது ஒரே விஷயம் ஹிண்டு எப்படி சொல்றான், தினமணி எப்படி, தினகரன் எப்படி, தினமலர் எப்படின்னு எல்லார் கோணமும் தெரியும். பின்ன படிப்பவன் எல்லாத்தையும் கூட்டி கழிச்சு அவனே சுயசிந்தனையோடு ஒரு முடிவுக்கு வருவான். அங்க களப்பணிகாரர்கள் 40+ எல்லாரும் அப்படி பலதரப்பட்ட வாசிப்பு அனுபவம் கொண்டவர்கள் தான் என புரிந்து கொள்ள முடிந்தது.  இந்த இளைய சமுதாயம் இப்படி முட்டாளாக இருக்க காரணம் ஒன்றே ஒன்று தான். வாசிப்பு அனுபவம் இன்மை. எம் ஏ தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் 3 எழுத்தாளர் பெயர் சொல்ல முக்கும் போது இந்த பக்கம் சிவசங்கர் பெரியார் புத்தகங்கள் என்கிறார். ஒரு இஸ்லாமிய நண்பர்  குடியரசு தொகுப்புகள் என்கிறார், ஒருவர் வால்கா முதல் கங்கை வரை என்கிறார். (ராகுல்ஜி எழுதிய அந்த வால்கா முதல் கங்கை வரை புத்தகம் நமது அறிஞர் அண்ணா அவர்களால் "மிகச்சிறந்த புத்தகம்" என பரிந்துரைக்கப்பட்ட புத்தகம்)ஒருவர் தனுஷ்கோடி புத்தகம் தோழர் பத்தி சொல்றார். லெனின் புத்தகம் சொல்லப்படுது... யப்பா ... இவர்கள் 35+க்கு போன பின்னெ அதை படிக்கலை என்பது உண்மை. அவர்கள் மாணவர்களாக இருக்கும் போதே படித்தவர்கள் என அவர்கள் பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடியுது.

இந்த மாணவ சமுதாயம்  இப்படி ஆனதுக்கு காரணம் அவங்க பெற்றோர்கள் மிக முக்கியம். மார்க் எடு மார்க் எடுன்னு ஒரே இலக்கை நோக்கி தள்ளிவிட்டது தான் காரணம். இதை பெற்றோர்கள் தவிர்த்தால் மட்டுமே இனி வரும் சமுதாயம் உருப்படும் என்பது மட்டும் நிச்சயம். மார்க் மட்டும் வச்சுகிட்டு 1200 க்கு 1100க்கு மேல் வாங்கி சுயநிதி கல்லூரியில் புண்ணாக்கு பி ஈ படிச்சுட்டு  எதுனா ஐடி கம்பனில சேர்ந்து ஜீன்ஸ் போட்டுகிட்டு காதில் கடுக்கன் மாட்டிகிட்டு நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு மாதம் சராசரியா 40,000 வாங்கிட்டு அவன் பிள்ளைகளையும் அப்படியே வளர்த்துவிட்டு ஒரு நாள் விதி வந்ததும் செத்து போவான். என்ன வாழ்க்கை இது? முளை இல்லாம வசதியோடு வாழ்ந்தா அது ஒரு வாழ்க்கையா? போராட தெரியாத, போராட்டம்னா என்னன்னு தெரியாத, மத்தவங்க கஷ்டம் என்னான்னு புரியாம இப்படியே வளர்ந்தா நாமக்கல் கறிக்கோழிக்கும் இவங்களுக்கும் என்ன வித்யாசம்? போன்சாய் மரங்களுக்கும் இவங்களுக்கும் என்ன வித்யாசம்? போன்சாய் பார்க்க அழகு தானே தவிர அதனால் என்ன பயன்? கனி தருமா? பூ தருமா?

ஆகவே பெற்றோர்களே! தயவு செய்து கறிக்கோழி வளர்காதீங்க. நாட்டு கோழில தான் சத்தும் அதிகம், பருந்துகிட்ட இருந்து தன் குஞ்சுகளை தன் சந்ததிகளை காக்கும் வீரமும் அதிகம், விவேகமும் அதிகம் என்பதை உணருங்கள். உங்கள் குழந்தைகளை நூலகங்களுக்கு அனுப்புங்க. எல்லா விஷயங்களையும் படிக்க சொல்லுங்க. அரசியல் என்பது சாக்கடை அல்ல என புரிய வையுங்க.  இது தான் நேற்றைய "நீனா நானா" விவாதத்தின் முக்கிய கருவாகும் நான் புரிந்து கொண்ட வகையில்! தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!

February 10, 2013

"கடல்" மணிரத்னம் படத்தின் சினிமா விமர்சனம்!

கடல் படம் பார்த்தேன்!

முதன் முதலாக கோபப்பட்டேன், மணிரத்னம் வீட்டில் குண்டு வீசியவர்கள் மீது!


குறிப்பு 1 : நான் பெரிய பதிவாக எழுதுகிறேன், 'நீங்க என்ன பெரிய பதிவர் உண்மை தமிழனா?' என கேட்கும் ஆட்கள் இனிமேல்  "நீ என்ன பெரிய டி.வி.ராதாகிருஷ்ணனா, இக்கினூண்டு பதிவு போட்டு பத்தாயிரம் போடலாம்னு நினைப்பா" என எல்லாம் கேட்டுகிட்டு இருந்தா எல்லாம் நான் பொறுப்பு இல்லை!

குறிப்பு 2 : ஒன்னுமில்லை. வாயில வந்துச்சு. விரல்ல வரலை. தட்ஸ் ஆல்!

February 7, 2013

விடா முயற்சி "விஸ்வரூப வெற்றி" !!! விமர்சனம்...



இந்த இட்லி இருக்கே இட்லி அதை ஸ்பூனால் விண்டு வாயில் போட்டுகிட்டு பின்னர் அதே ஸ்பூனால் சாம்பாரை மொண்டு உள்ளே  தள்ளி   மிக்சிங் போடுவதில் எனக்கு எப்போதுமே சுகம் இருந்ததில்லை. வாழை இலையில்  சூடான இட்லி தலையில் சாம்பாரை ஊத்தி லைட்டா ஊறினதும் விரலால் பாகம் பிரித்து சிதம்பரம் கொத்சு  மற்றும் கெட்டி சட்னி கலவையை இலையிலேயே நடத்தி வாயில் விரலோடு சேர்த்து போட்டுப்பதில் தான் சொர்க்கம் கிடைத்த திருப்தி நேக்கு. ஹைதரபாத்தில் தெலுகு வர்சன் 'விஸ்வரூப்' வில் கிடைக்காத திருப்தி இன்று மாயவரம் மக்களின் விசில் சப்தத்தின் நடுவே "தமிழில்" பார்த்த போது ... அப்பா என்ன ஒரு பரம(க்குடி) சுகம்!

ஒரு ஊரில் கமல் கமல்னு ஒருத்தர் இருந்தாராம். அவர் ஒரு இந்தியாவில் பிறந்த அதாவது வடகோடி உச்சந்தலை காஷ்மீரிய அப்பனுக்கும் தென்கோடி தமிழக அம்மாவுக்கும் பிறந்த (ஒட்டு மொத்த இந்திய பிரஜைன்னு சிம்பாலிக்கா சொல்றாராமாம்) இந்திய தயாரிப்பில் செய்யப்பட்ட அக்மார்க் ISI முத்திரை குத்தப்பட்ட இஸ்லாமியர்(பாகிஸ்தான் ISI இல்லையாக்கும்). (நல்ல வேளை அவரின் சித்தி கல்கத்தா என்றும் சித்தப்பா மும்பை என்றும் இன்னும் விரிவாக ரெக்கை விரித்த இந்தியாவுக்கே ஒட்டுமொத்த இஸ்லாமிய ரெப்ரசண்டேடிவ் என சொல்லவில்லை)அவர் படம் ஆரம்பிக்கும் போது நியூயார்க் நகரில் "விஸ்வநாதன்" என்னும் பெயரில் கதக் நாட்டியம் கத்துக்கொடுக்கும் ஒரு கலைஞர். பெண்மையான உடல்மொழி கொண்டவர். அவர் மனைவி பூஜாகுமார் இவரை வயசு வித்யாசம் பார்க்காமல் கட்டிகிட்ட காரணம் அவரது வறுமையும், அமேரிக்காவில்  அணு விஞ்ஞானியாகி பாண்டிச்சேரி நாரயணசாமி மாதிரி 'இன்னும் 15 நாளில் அது  வந்துடும்'ன்னு வசனம் பேச ஆசைப்படும் ஒரு நார்மல் பெண். அவருக்கு கமல் மேல் அத்தனை ஈர்ப்பு இல்லை. ஏனனில் அவரது பெண்மைத்தன்மை, மற்றும் என்னன்னவோ.. அதல்லாம் நமக்கு தேவையில்லை. கமலை பிடிக்கலை . அவ்ளோவ்தான். வேற வழி? தன் பாஸ் கூட மனதளவில் காதல் ... "லைட்டா". அதனால் அவரை கெட்டவர் என சொல்லிடாதீங்க. ஏன்னா பூஜாவே தான் இந்த அற்ப காரணத்தால்(?) தான் கெட்டவள் இல்லை என படத்தில் சொல்லிவிடுவதால் மேற்கொண்டு நாம் அதில் ஆராயாமல் கதைக்கு உள்ளே போவோம்.

கமல் வீட்டில் கதக் படிக்க வரும் மாணவிகளில் ஒருத்தியாக ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவின் சினிமா கேரியரில் நல்ல முன்னேற்றம் நம் கண் முன்னே தெரிகின்றது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அறிமுகம் ஆனபோது கதாநாயகனுக்கு ஊசி போட்டார். இந்த படத்தில் கதாநாயகனுக்கு தையல் போடும் அளவு நல்ல முன்னேற்றம். அனேகமாக விஸ்வரூபம் பார்ட் 2 வில் நாயகனுக்கு ஆபரேஷன் பண்ணும் அளவு இன்னும் நாம் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ரியா கமலுடன் சேர்ந்து கதக் ஆடிவரத்தான் லாயக்கு என நீங்கள் நினைத்தால்... அது தப்பு. ஏன்னா படம் முழுக்க கமலுடன் வேகமாக ஓடியும் வருகின்றார். அதும் அவர் தன்னை "மாயவரத்து பெண்" என்கிற போது என் பக்கத்து இருக்கை பெண்ணுக்கு கண்ணில் தாரை தாரையாக நீர் வடிந்தது. தியேட்டரில் விசில் பறந்தது. இதை தவிர்த்து ஆண்ட்ரியாவுக்கு வேறு எதும் "ஸ்பெஷலாக" தென்படவில்லை படத்தில். ஒரு மாயவரத்து மங்கை தாலிபான் தீவிரவாதிகளை எல்லாம் ஒழிக்க பாடுபடுவது குறித்தும் எனக்கும் பெருமையே.

இப்படியாக இருக்கும் போது பூஜாகுமார் எப்படியாவது கமலை கழட்டி விட்டுட்டு அவர் பாஸ் கூட செட்டில் ஆகனும் என நினைக்க அதுக்கு அமேரிக்காவில் விவாகரத்து தான் கடைக்கு கடை ஒரு டாலருக்கு நாலு கூறு என போட்டு விற்பனையாகுமாமே , அந்த விவாகரத்தை வாங்கிடனும்னு ஆசைப்படுறார். அதுக்கு கடைக்காரன் காரணம் கேட்டா "கமலுக்கும் அவர் ஸ்டூடண்ட் ஆண்ட்ரியாவுக்கும் தொடுப்பு இருக்கு"ன்னு சொல்லனும், அதும் ஆதாரப்பூர்வமா சொல்லனும், அதுக்காக குண்டா ஒரு ஆளை அனுப்பி கமலை கையும் ஆண்ட்ரியாவுமாய் பிடிக்க சொல்ல அந்த குண்டு துரத்தி கிட்டே போகுது கமலை. அப்ப தான் தெரியுது அந்த விஸ்வநாதன் கமல் யாருக்கும் தெரியாம தொப்பி போட்டுகிட்டு தொழுகை நடத்த போவதும், கமல் ஒரு இஸ்லாமியர் என்றும். அதை அந்த குண்டு ஆசாமி பூஜாவுக்கு போட்டுக்கொடுக்குது. அதன் பின்னே அந்த குண்டை முஸ்லீம் தீவிரவாத கும்பல் போட்டு தள்ளுது. இதனிடையே பூஜா வேலை செய்யும்  அணு ஆராய்சி கழகமே ஒரு தீவிரவாத தொடர்புடையது என்பதும், பூஜாவின் பாஸ் ஒரு வில்லன் கோஷ்டி ஆள் என்பதும்.... உஷ் அப்பாடா.... ஜோடா ப்ளீஸ்..

உடனே என்ன ஆச்சு? கமலையும், அவர் மனைவி பூஜா குமாரையும் கையை கட்டி, வாயை ஒட்டி  முஸ்லீம் தீவிரவாதிகள் தூக்கிட்டு வந்துடுறாங்க அவங்க இடத்துத்து. அங்க பக்கத்து பஞ்சாயத்து யூனியன்ல தான் முல்லா ஒமர் எங்கிட்டோ இருந்து கிட்டு எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்காரு. கமலை போட்டு தள்ள சொல்லிடுறாரு குல்லா போட்ட முல்லா.

சாகும் முன்ன நான் தொழுகை நடத்திக்கிறேன் என சொல்லும் கமலுக்கு ஒப்புதல் தரப்படுகின்றது. அப்பாடா இது வரை தான் தமிழ்ப்படம். இதல்லாம் ஒரு அரை மணி நேரம் தான் நடக்கும்.

அதன் பின்னே கமல் எடுப்பது தான் "விஸ்வரூபம்". பிரார்தனை செய்ய கொடுக்கப்பட்ட அந்த சில நொடிகளில் மிகச்சில நொடிகளில் கமல் ஆடும் அந்த விஸ்வரூபம் தியேட்டர் விசில் சத்தம் மற்றும் காட்சி அமைப்புகள், காமிரா கோணங்கள், சண்டைக்காட்சி பிரம்மிப்பு... யப்பா பயங்கரம். கொரூரம். இப்படி ஒரு சண்டைக்காட்சி பிரம்மாண்ட சவுண்ட் எஃபக்டோடு கூடிய சண்டைக்காட்சி தமிழுக்கு ரொம்ப புதுசு. நாம் நம்மை மறந்து சீட் முனைக்கு வந்து விடுவது அப்பட்டமான நிஜம். நாம் சுதாரிக்கும் முன்னே அந்த சண்டைக்காட்சி முடிந்து விடும். நாம் அதை அசை போட வசதியாய் அதே சண்டைக்காட்சி "ஸ்லோ"வாக காட்ட்டப்படும். அப்போது தான் கமல் செய்த சண்டையின் உக்கிரம் நமக்கு நம் மூளைக்கு சென்று சேரும். தியேட்டரில் இருக்கும் நம் ஒட்டு மொத்த வியப்பையும் பூஜாகுமார் தன் அகண்ட விழிகளால் காட்டுவது அழகோ அழகு. 'இவனைப்போயா நாம் பெண்மைக்குரிய உடல்மொழி கொண்டவன் என நினைத்து பாஸ் கூட டீல் போட நினைத்தோம்... போனது போகட்டும் இனிமே கமலே கண்கண்ட தெய்வம்" என்பதை வசனமாக காட்டாமல் கண்கள் மூலம் காட்டுவது அருமையோ அருமை.

அந்த காட்சியில் இருந்து ஆரம்பிக்கும் ஓட்டம் படம் முடியும் வரை தொடர்கின்றது. நடுவே பாட்டு கிடையாது. ரொமான்ஸ் கிடையாது... இன்ன பிற சமாச்சாரங்கள் கிடையாது. ஆனாலும் படம் தொய்வே இல்லாமல் செம வேகத்தில் ஓடுகின்றது. படம் ஜெயிக்க தேவையான பார்முலா அது தான். படம் ஜெயித்தே விட்டது.

பின்னர் தான் கமல் ஒரு இந்திய உளவு ஆசாமி என்பதும், பின்னர் முல்லா ஒமர் புறாவின் காலில் சிசிலியம் என் ஏ டூ ஹெச் டூ ஓ சோடியம் பைகார்பனேட்... அய்யோ அப்படில்லாம் வேண்டாமே... நம்ம பாஷைல சொல்லனும்னா புறா காலில் விஷம் வச்சு அதை நியூயார்க் நகரம் முழுக்க தூவ சொல்வது, அதை கமல் மற்றும் அமரிக்க உளதுத்துறை எல்லாம் சேர்ந்து முறியடிப்பது என எல்லாம். திடீர்ன்னு பார்த்தா தியேட்டரில் ஃபேன் எல்லாம் நின்னு போச்சுது. தியேட்டர் காரன் வந்து படம் முடிஞ்சு போச்சுது எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலின்னு சொல்ல நாம் இல்லியே இன்னும் கிளைமாக்ஸ் ஃபைட் வரலியே என அப்பாவியாய் கேட்க அதற்கு தியேட்டர் காரன் நம்மிடம் "நீங்க விசயாகாந்து படம் பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டீங்க. என்னை நம்பாட்டி இதோ கமலே சொல்லுவாரு பாருங்க. பார்த்துட்டு எந்திரிங்க" என சொல்லிக்கொண்டு இருக்கும் போது பூஜாகுமாரிடம் கமல் சொல்லுவார்  "என் வேலை இத்தோடு முடியலை. அந்த முல்லா ஒமர் சாகனும் இல்லாட்டி நான் சாகனும், இல்லாட்டி நீங்க சாகனும் அதுவரை இது தொடரும்" என  சொல்ல நாமும் ஏக்கத்துடன் வெளியே வந்து தியேட்டர் பைக் ஸ்டாண்டில் "விஸ்வரூபம் பார்ட் டூ எப்பங்க வரும்" என கேட்க அவன் "ம்...இதுக்கு ஆன 100 கோடி மொதோல்ல வசூல் ஆகட்டும், பின்ன பார்ப்போம்" என கமலின் மேனேஜர் கணக்கா சொல்ல ஒரு வித ஏக்கத்துடன் நாம் வெளியே வருகிறோம்.

இப்போது சில துளிகள்:

* கமல் ... கமல்.. கமல்... இது மட்டும் தான் ஒட்டுமொத்த படமும்.

* தாலிபான்கள் வாழும் அல்லது சாகும் நாடான ஆப்கானிஸ்தான் (அது ஆப்கானிஸ்தானோ அல்லது செட் போட்டு எடுத்தாங்களோ தெரியலை) அருமையோ அருமை.அப்படியே கண் முன் கொண்டு வந்து கொட்டி இருக்கும் அந்த 100 கோடிகளில் சில கோடிகளுக்கு என் நன்றிகள். (பணம் பத்தும் செய்யும்... ஒழுங்கான முறையில் செலவு செய்தால்)

* அந்த தாலிபான் காட்சிகளில் முல்லா ஒமரின் மனைவி ஒரு ஆங்கிலம் தெரிந்த பெண்மணி. அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் ஜிகாதி. சின்னவன் இன்னும் ஜிகாதி ஆகாதவன். சின்னவன் ஆங்கிலத்தில் பேசுகிறான், அவன் அம்மா சொல்லிக்கொடுத்து. கொஞ்சம் விஷய ஞானம் உள்ளவனாக காட்டுகின்றனர். பெரிய பையன் உடம்பிலே குண்டு கட்டிகிட்டு நேட்டோ படை பீரங்கியில் குதிக்கும் முன்னர்  முதல் நாள் இரவில் கமல் அந்த சின்ன பையனை ஒரு ஊஞ்சலில் வைத்து ஆட்ட அந்த சின்ன பையன் "நான் என்ன குழந்தையா? என்னை ஏன் இதிலே வைத்து ஆட்டுறாய்?" என சொல்லிவிட்டு போவதும், ஆனால் அடுத்த நாள் சாக தயாராக இருக்கும் அந்த ஜிகாதி பையன் கமலிடம் வந்து தன்னை அந்த ஊஞ்சலில் வைத்து ஆட்ட சொல்லிவிட்டு குழந்தைத்தனமாக உலக காற்றை எல்லாம் உறிஞ்சு ஒரு மூச்சு விடுவான் பாருங்க.... கண்ணில் நீர் வரவழைக்கும் காட்சிகள் இவைகள்.

* அபின் வைத்திருக்கும் ஒரு தாலிபான் ஏழை விவசாயி அனியாயமாக தூக்கிலிட்டு கொல்லப்படும் காட்சி ... அவன்  தாய் தந்தையர் கதறும் காட்சி, அதற்கு காரணகர்த்தாவான கமல் மனம் நொந்து போவது... ஏ கிளாஸ் காட்சி அமைப்புகள்

* பெண்மை கலந்த கமலும், பூஜாகுமாரும் பின் கையில் கட்டப்பட்டு தீவிரவாதிகளால் தாக்கப்படும் காட்சியில் முதல் முறை கமல் கவட்டி இடுக்கில் உதை வாங்கும் போது நமக்கும் லைட்டா வலிக்குது. அப்படிப்பட்ட சவுண்ட் எஃபக்ட். அடுத்த முறை அதே இடத்தில் கமல் அடிவாங்கும் போது " பட்ட இடத்திலே படும், கெட்ட குடியே கெடும்னு சொல்லுவாளே, அதே போல நீங்க செய்யறேள். இப்டில்லாம் பண்ணா நான் எப்படி குடும்பம் நடத்தி குழந்தை குட்டி பெத்துப்பது? என அப்பாவியாய் தீவிரவாதிகளிடம் கேட்பதும், அதற்கு பூஜாகுமார் "யார் கூட?" என கேட்பதும், வாயில் வழியும் ரத்தத்தை துடைக்க "கொஞ்சம் டிஷ்யூ தர்றேளா?"என கேட்பதும்... வழக்கமான கமல் முத்திரைகள்.

* பெண்மைத்தன்மை கமல், வீர தீர கமல் ஆனதும் முடியெல்லாம் வெட்டி கோட் சூட் சகிதம் கீழே இறங்கி வரும் போது பூஜாகுமார் "அட இவனை மிஸ் பண்ண தெரிஞ்சோமே" என தன் பாவனையால் ஆதங்கப்படுவது அபாரம்.

* யாரும் படத்தில் மிஸ் பண்ணக்கூடாத காட்சி என பார்த்தால் கமல் நவரசங்களைக்காட்டி ஆடும் அந்த அபாரமான கதக் பாடல் மற்றும் நடன அமைப்புகள். மனுஷன் சும்மாவே சிக்சர் அடிப்பார். அதிலே வாகாய் பந்து போட்டா கேட்கவே வேண்டாம்.

*ஒரு கட்டத்தில் பூஜாகுமாரை விசாரிக்கும் அமரிக்க நீக்ரோ எஃப் பி ஐ பெண் அதிகாரி பேச்சினூடே பூஜா தன் கடவுளுக்கு நான்கு கைகள் என பெருமைப்படும் போது அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே "அப்படின்னா எப்படி சிலுவைல அடிப்பீங்க" என கேட்கும் போது பூஜா கொஞ்சம் யோசிச்சு பின்ன சுதாரிச்சு "நாங்க கடல்லன்னா தூக்கி போடுவோம்" என்பது எல்லாம் கமலின் கடைந்தெடுத்த நையாண்டிகள்.

* இசை அமைப்பு யாரோ தெரியலை.என்னவோ சங்கர்ன்னு ஆரம்பிச்சுது பெயர். எங்கிட்டும் உறுத்தல் இல்லை. செமத்தையா உழைச்சிருக்கார்.

* ஆர்ட் டைரக்டர், ஒளிப்பதிவாளர், சண்டைக்காட்சி இயக்குனர் என எல்லாருமே அசத்தல். குறிப்பாக ஒப்பனை கலைஞர்கள் சிம்ப்ளி சூபர்ப்.தாலிபானியர், பாகிஸ்தானியர் உடைகள் அப்படியே அச்சு அசல்.

*இந்த படம் தமிழுக்கு மிகவும் அசத்தலான ஒரு அதிரடிப்படம் என்பதும், ஹாலிவுட் படங்கள் அளவு இருக்கின்றன என்பதும் உண்மை. படம் பார்த்து முடிந்த இந்த நிமிடம் வரை பிரம்மாண்டம் மனதை விட்டு போகலை. படத்தை தொலைக்காட்சியில் பார்த்தால் அல்லது திருட்டு விசிடி, தரவிரக்கம் செய்து எல்லாம் பார்த்தால் தியேட்டரில் பார்க்கும் இன்பம் இருக்குமா என்பது சந்தேகமே. ஆகவே தியேட்டரில் பாருங்கள்.

* ஹாலிவுட் பாலா சொல்லியிருந்தார். "கமல் 100 கோடி செலவு செய்து ஹாலிவுட் உள்ளே நுழைய தனக்கான  விசிட்டிங் கார்ட் அடித்துள்ளார்" என. அது 100 சதம் உண்மை!


* படம் நிச்சயமாக ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்படலாம். படும். அங்கே அருமையான அமரிக்க லாபி செய்தால் 100 சதம் இரு ஆஸ்கார் உறுதி. பாதி லாபியை இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் செய்துவிட்டபடியால் அதாவது அமரிக்காவை சொறிச்சு விட்டு விட்டமையால் மீதியை மட்டும் கமல் செய்தால் போதுமானது. செய்வார். கிடைக்கும். கிடைக்கும் பட்சத்தில் முன்பு சொன்னது போல கமல் பிரியாணி செய்து போட்டு நன்றிக்கடன் செலுத்தியே ஆக வேண்டும்.

மொத்தத்தில் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி, கமலுக்கும் தமிழக சினிமாவுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும்!