பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label கேலிச்சித்திரம். Show all posts
Showing posts with label கேலிச்சித்திரம். Show all posts

June 12, 2012

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கேலிச்சித்திரம் - ஒரு பார்வை!



இன்றைக்கு ஒரு வாரகாலமாக பரவலாக "இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட கேலிச்சித்திரம்" என்றும் சொற்கள் சுலபமாக எல்லோர் வாயிலும் புகுந்து வருகின்றது. அது என்ன கேலிச்சித்திரம்? அது என்ன புத்தகத்தில் வந்துள்ளது? என்ன பிரச்சனை?
இந்திய மத்திய அரசின் கல்விக்கான சார்பு கழகம் National Council of Education Research and Training (NCERT)  சார்பில் வெளியிடப்பட்டுள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசியல் அறிவியல் (political science) பாடத்தில் எட்டாம் பிரிவில் 153ம் பக்கத்தில் தமிழக அரசியலை பற்றிய பாடத்தில் "1965ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பின் காரணமாக திமுக 1967ல் ஆட்சியை பிடித்தது" என்ற பொருள் வரும் படியாக ஒரு பாடம். அதை மாணவர்களுக்கு இன்னும் புரியும் படியாக விளக்குவதாய் நினைத்துக்கொண்டு ஒரு கேலிச்சித்திரம் இட்டுள்ளனர். அந்த கேலிச்சித்திரம் வரைந்தவர் பிரபல கேலிச்சித்திரக்காரர் தமிழகத்தை சேர்ந்த ராசிபுரம் கே. லெஷ்மன். 1965 கால கட்டத்தில் அவர் வரைந்து அப்போது பத்திரிக்கைகளில் வெளியான கேலிச்சித்திரம் இன்றைக்கு யாரோ ஒரு நியாபகசக்தி புண்ணியவான் கைங்கர்யத்தால் மீண்டும் மத்திய அரசு சார்ந்த பாடத்திட்டத்தில் புகுந்து தன் விஷமத்தன வரலாற்று திரிபுகளை மாணவர்கள் மத்தியில் உண்டாக்க செய்கின்றது.

அந்த் கேலிச்சித்திரம் என்ன சாராம்சம் உள்ளடக்கியது எனில் ஒரு கரும் பலகையில் சில வாசகங்கள் இருக்கின்றன. அந்த வாசகங்கள் இருக்கும் பலகையை பல மாணவர்கள் சேர்ந்து கல்லால் அடிக்கின்றனர். அந்த பலகையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் வாசகம் என்ன தெரியுமா? "இந்தி கிடையாது. இந்தி கிடையாது. ஆங்கிலம் மட்டுமே, இந்தி கிடையாது" . இது தான் அந்த வாசகம். அந்த பலகையை தான் தமிழக மாணவர்கள் கல் கொண்டு அடிக்கின்றனர். போகட்டும்.. அந்த பலகையின் பின்னே இருவர் நிற்கின்றனர். யார்? ராஜாஜியும்,அப்போதைய முதல்வர் பக்தவத்சலமும். இருவரும் ஒரு விஷயம் பேசிக்கொள்கின்றனர். யாரைப்பார்த்து? யாருடைய செயலைப்பார்த்து? அந்த கல் கொண்டு அடிக்கும் மாணவர்களை பார்த்து. என்ன பேசிக்கொள்கின்றனர்? "அப்பன்னா இவனுங்களுக்கு இங்கிலீஷும் தெரியாது போல..."
அந்த கேலிச்சித்திரத்தில் ராஜாஜி தமிழக மாணவர்களை பார்த்து  தமிழக மாணவர்களை கேலி செய்த வாசகங்கள் இவைகள். தோழர்களே, உங்களுக்கு அந்த கேலியின் பரிமாணம் தெரிகின்றதா? இப்போது அந்த கேலிச்சித்திரம் உங்களுக்குள் மாற்றம் ஏற்படுத்துகின்றதா?  சரி அந்த மாணவர்கள் அதாவது அந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட  மாணவர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கு? யார் அவர்கள்? ராஜாஜி அல்லது ராஜாஜியின் மனோநிலையை பிரதிபலித்த கேலிச்சித்திரக்காரர் ஆர்.கே . லெஷ்மண் சொன்னது சரியா? சரி அப்போதைய கால கட்டத்தில் அப்படி ஒரு கேலிச்சித்திரம் வரைய காரணம் என்ன? தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்றால் என்ன? அதன் 'வால்யூம்" எத்தனை பெரியது. பலியான உயிர்கள் எத்தனை? என பார்ப்போம்.....கொஞ்சம் பெரிய பதிவாக இருப்பினும் முடிந்தவரை  சுலபமாக  சொல்ல முயற்சிக்கிறேன்.....

முதலில் நாம் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட காலத்திற்கு போகவேண்டும். தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் செப்டம்பர் 26ல் 1938ல் நடந்த போராட்டத்துக்கு போக வேண்டும். அதிலே பெரியார், அண்ணா உட்பட பலருக்கு நான்கு மாதம் சிறை தண்டனை கிடைத்தது. அதிலிருந்து நாம் இந்தி திணிப்பு  எதிர்ப்பு பாதையில் நடந்து வந்தால் மிகுந்த நேரம் ஆகும். அதனால் நாம் 1938 முதல் 1963ம் ஆண்டு வரை ஓடியே கடந்து விடுவோம்.

அப்போது நேரு அவர்கள் இந்திய நாட்டு பிரதமர். லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் உள்துறை அமைச்சர். 1963ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி பாராளுமன்றத்தில் ஆட்சி மொழி மசோதாவை தாக்கல் செய்கிறார். அதன் படி 1965ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் இந்தி மட்டுமே இந்திய ஆட்சி மொழியாக இருக்கும். அரசாங்கத்தின் ஆணைகள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும். அப்போது மாநிலங்கள் அவையில் அண்ணா அவர்கள் உறுப்பினர். மக்களவையில் நாஞ்சில் மனோகரன் இருந்தார். அண்ணா அவர்கள் " இந்த மசோதாவின் 3 வது விதியின்படி ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பிடித்துக்கொள்ளும். இது இந்தி பேசாத மாநில மக்களுக்கு நிரந்தர தீமை உண்டாக்கும்" என தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் எந்த பிரயோசனமும் இல்லை. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.

உடனே தமிழகத்தில் 1963 ஏப்ரல் 29ல் ஒரு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அண்ணா அதில் இந்தி ஆட்சி மொழியாக ஆனால் என்ன என்ன கஷ்டம் வரும் நமக்கு என ஆதாரத்துடன் பேசினார். 1965 ஜனவரி 26க்குள் நாம் நமது கிராமம் தோறும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என பேசினார்.  இந்"தீ" பரவ ஆரம்பித்தது தமிழகம் எங்கும். இதனிடையே தமிழக முதல்வராக இருந்த காமராஜர் பதவி விலகி கட்சிப்பணிக்கு வந்து விட்டு பக்தவத்சலம் அவர்கள் முதல்வராக ஆனார்.

உடனே 1963ம் ஆண்டு அக்டோபர் 13 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்தி திணிப்பு  எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அண்ணா பேசினார். பேச்சு என்றால் அது பேச்சு. அணல் காற்று. அண்ணா அவர்கள் அரசியல் சட்டம் மொழிப்பிரிவு 17ம் விதி இருக்கும் சட்ட நகலை 1963 நவம்பர் 17 அன்று பொது இடத்தில் கொளுத்துவது என்றும் அவருடன் சேர்ந்து டி. எம். பார்த்தசாரதி, டி.கே. பொன்னுவேலு, வி.வெங்கா, கே.பி.சுந்தரம் ஆகியவர்கள் கொண்ட ஐவர் அணி மாலை 4 மணிக்கு அறிவகத்தில் இருந்து புறப்பட்டு மெரினா சென்று அங்கே எரிப்பது என அறிவித்தார். அதன்படி அண்ணா அவர்கள் அந்த நாளில் புறப்பட்டு சென்று எரிக்கும் முன்னரே அமைந்தகரையில் கைது செய்யப்பட்டார். ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். அவருடன் இந்தி திணிப்பு  எதிர்ப்பு போராட்ட குழுவின் முதல் அணியும் சிறை சென்றது.

அது போல ஒரு குழு தமிழகத்தின் ஒவ்வொறு பகுதியிலும் சென்று அடித்தட்டு மக்கள் வரை இந்தி நுழைந்தால் என்ன என்ன பாதகம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யும் வேலையை கலைஞர் அவர்கள் தலைமையிலான குழு செவ்வனே  செய்தது.

அண்ணா அவர்கள் சிறை புகுந்த அந்த ஆறு மாதத்தில் அண்ணாவின் வளர்ப்பு அண்ணை (சித்தி) காலமானார். அண்ணா மிகுந்த மனவேதனை அடைந்தார். அதே போல அண்ணா சிறையில் இருக்கும் போதே நேரு அவர்கள் மறைந்தார். அண்ணா சிறையில் இந்தி எதிர்ப்பை கைவிட்டு விட்டார் என்றெல்லாம் ஊடகங்கள் இப்போது போலவே அப்போதும் பொய் பரப்புரை செய்தன. அந்த ஆறு மாதத்தில் அண்ணாவின்  கைவலியின் காரணமாக உடல் நலமும் மோசமாகியது. அண்ணா சிறை மீண்டு வெளியே வந்தார். அதற்குள் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பிரதமர் ஆனார். நேரு மறைவினால்  மத்திய அரசில் ஏற்பட்ட சுனக்கம் காரணமாக இந்தி திணிப்பு  என்பது அமைதியாக இருப்பது போன்ற தோற்றம் கொடுப்பினும், அந்த மசோதா நேரு காலத்தில் 1963ல் நிறைவேற்றம் ஆகிவிட்டபடியால் கண்டிப்பாக 1965 ஜனவரி 26 குடியரசு தினத்தின் முதல் அமலாக்கத்துக்கு வந்து விடும் என நினைத்த கலைஞர் தீவிர இந்தி திணிப்பு  எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

1964 ஏப்ரலில் அண்ணா சிறை மீண்டு வெளியே வந்த பின்னர் அந்த மசோதா அமலுக்கு வர எட்டு மாதங்கள் மட்டுமே இருந்தது. மத்திய அரசும் அப்போது மீண்டும் அந்த மசோதா மீது ஆர்வம் காட்ட தொடங்கியது. 1965ம் ஆண்டும் வந்தது.

மத்திய அரசு குடியரசு தினத்தின் அன்று இந்தி திணிப்பு மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டியது. அதனால் அண்ணா அவர்கள் 1965 ஜனவரி 26 அன்று துக்க தினமாக அறிவித்தார். அதிலேயும் மிகுந்த ஜாக்கிரதையாக "குடியரசு வாழ்க, ஆனால் இந்தி ஆட்சி மொழி ஆக்கப்படுவது ஒழிக" என்னும் கோஷத்துடன் மீண்டும் போராட்டத்தில் இறங்கினார். அண்ணா, கலைஞர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. திமுக தலைவர்கள் அனைவரும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் இந்த இடைப்பட்ட அதாவது 1963 ஏப்ரல் 13 முதலான காலகட்டத்தில் கலைஞர் பட்டிதொட்டி எங்கும் இந்தி திணிப்பின் பாதகம் எடுத்து பிரச்சாரம் செய்த காரணத்தால் திமுகவின் மாணவர் அணியினர் மிகுந்த உத்வேகத்துடன் போராட ஆரம்பித்தனர். இதுவரை இப்படி ஒரு போராட்டம் இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில் கூட நடந்தது இல்லை என்னும் அளவுக்கு போராட்டம் நடந்தது.

திருச்சி மாவட்டம் சின்னசாமி , சென்னை கோடம்பாக்கம் சிவலிங்கம், சென்னை விருகம்பாக்கம் அரங்கநாதன் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். திருச்சி மாவட்டம் சேர்ந்த ஒரு தலைமை ஆசிரியர் வீரப்பன் என்பவர் தீக்குளித்து இறந்தார். கோவை மாவட்டம் சேர்ந்த முத்து என்னும் விவசாயி தீக்குளித்து இறந்தார். மயிலாடுதுறையை சேர்ந்த ஏ.வி.சி கல்லூரி மாணவர் சாரங்கபாணி அவர்கள் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொண்டு சாகும் நேரத்தில் கூட இந்தி திணிப்பு  ஒழிக, தமிழ் வாழ்க என கோஷமிட்டு கொண்டே உயிர் நீத்தார்.

ஐநா சபையில் இந்த போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள ஊடகங்கள் பட்டினி சாவு என்றும் குடும்ப சண்டை என்றும் காதல் தோல்வி எனவும் எழுதின. சமீபத்தில் தோழர். செங்கொடி வீரமரணத்தை கூட காதல் தோல்வி என தினமலர் எழுதியதே அப்படி அப்போதே நம் போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்பட்டன. எல்லா ஊர்களிலும் மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். முதல்வர் பக்தவத்சலம் அவர்களை காண சென்ற மாணவர்கள் தடியடிக்கு உள்ளானார்கள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் ஊர்வலம் போன போது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டு ராஜேந்திரன் என்னும் மாணவர்  மாண்டார்.

1965 பிப்ரவரி எட்டாம் நாள் சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் கூடினர். போராட்ட திட்டம் வகுத்தனர். அதன்படி பிப்ரவரி 9,10 ஆகிய நாட்களில் தமிழகத்தின் அனைத்து அஞ்சல் அலுவலகம் முன்பாக போரடுவது. பிப்ரவரி 11ம் தேதி தமிழகத்தில் ரயில் மறியல். பிப்ரவரி 12ம் தேதி பொதுமக்களை திரட்டி பொதுவேலை நிறுத்தம் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னையில்  அண்ணாசலை அஞ்சல் அலுவலகம் முன்பாக போராட்டம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து சென்னை மாநிலக்கல்லூரி திடலில் இந்தி பிரச்சாரசபா வெளியிட்ட புத்தகங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மதுரை, கோவை, தஞ்சை, திருச்சி, வேலூர் என எல்லா இடங்களிலும் போராட்டம் வெடித்தது.

திருப்பூரில் 2000 மாணவர்கள் ஊர்வலம் நடத்திய போது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டு ஒரு மாணவர் பலியானார். ஆத்திரம் கொண்ட மாணவர்கள் போலீஸ் மீது தாக்குதல் தொடுத்தனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது.அடுத்த நாள் இரயில் மறியல் போராட்டம் நடந்தது. மாணவர்கள் ரயில்வே நிலையத்தில் குவிக்கப்பட்ட போலீசாருக்கு பயப்படாமல் ரயிலை ஓடவிடாமல் நிறுத்தினர். ரயில் இன் ஜினில் கருப்பு கொடி கட்டப்பட்டது. ரயில் பெட்டிகள் தீயிடப்பட்டன. அடுத்த நாள்  பொதுமக்களும் மாணவர்களுக்கு ஆதரவாக போராடி பொது வேலை நிறுத்தம் நடந்தது.மாணவர்கள் கிளர்சியை போலீசாரால் கட்டுப்படுத்த இயலாமல் ராணுவம் வரவழைக்கப்பட்டது. தமிழ்நாடே பற்றி எரிந்தது.

பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் "ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்கும் என அறிவித்தார். அண்ணா, கலைஞர் ஆகியோர் மாணவர்களை போராட்டத்தை நிறுத்தும் படி வேண்டுகோள் விடுத்தனர். மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா ஒரு அறிவிப்பு செய்தார் ஆங்கிலத்தில். கவனிக்க 1965 ஜனவரி 26 முதல் அரசு அறிவிப்புகள் இந்தியில் இருக்கும் என மசோதா நிறைவேற்றிய மத்திய அரசு ஆங்கிலத்தில் ஒரு அறிவிப்பு செய்கிறது. அது என்னவெனில் " இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும். தயவு செய்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்"

1963 ஏபரல் 13 ல் ஆரம்பமான இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரே நாளில் முடிவுக்கு வருமா? அதும் இத்தனை மாணவர்கள் உயிர் இழந்த நிலையில்? போராட்டம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்தது.

இப்போது இந்த கட்டுரையின் மேலே குறிப்பிட்ட கேலிச்சித்திரத்துக்கு வருவோம். இந்த கால கட்டத்தில் தான் அந்த கேலிச்சித்திரம் ஆர்.கே.லெஷ்மன் அவர்களால் வரையப்பட்டது. அதைத்தான் இப்போது மாணவர்களுக்கு பொலிட்டிகல் சயின்ஸ் கற்று தருகிறேன் என National Council of Education Research and Training (NCERT)   ஒரு சில வரிகளில் இந்த கேலிச்சித்திரம் போட்டு விஷமப்பிரச்சாரம் செய்கின்றது. இப்போது சொல்லுங்கள் தோழர்களே, இது சரியா? ஒரு மிகப்பெரிய போராட்டம் இப்படி கொச்சைப்படுத்தப்படுவது முறையா? இதை படிக்கும் மாணவர்கள் ஒரு தவறான புரிதலுடன் ஒரு பாடம் படிப்பது அவசியமா? வரலாற்று திரிபு அல்லவா இது? இதை அனுமதிக்கலாமா? இதே அந்த National Council of Education Research and Training (NCERT) கழகத்துக்கு நம்முடைய ஒரே கேள்வி தான். ஒரு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்னும் மாபெரும் போராட்டத்தை "ஜஸ்ட் லைக் தட்" ஒரு வரியில் கொச்சைப்படுத்தியும், ஒரு கேலிச்சித்திரம் வழியே நக்கல் அடிக்கவும் முடிந்த உங்களால் சமூக நீதி காவலர் திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது நீதிபதி மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த முயன்ற போது  வடநாட்டில் ஆரிய மாணவர்களும், ஆரிய அடிவருடி மாணவர்களும் சேர்ந்து உடலில் தீவைத்து கொளுத்தி கொள்வது போல போராட்டம் செய்தமை குறித்து நக்கல் விட இயலுமா? ஒரு கேலிச்சித்திரம் வரைந்து மாணவர்களுக்கு "பொலிட்டிகல் சயின்ஸ்" நடத்த இயலுமா? முடியாதுல்ல... அப்படி எனில் இந்த கேலிச்சித்திரத்தையும் உடனடியாக நீக்க வேண்டும். உங்களுக்கு சீண்டிப்பார்க்க அம்பேத்காரும், தமிழக மாணவர்களும் தான் கிடைத்தனரா?

சரி. நாம் கேலிசித்திரத்தின் சாராம்சத்துக்கு இப்போது வருவோம். அதாவது ராஜாஜி அதிலே என்ன சொல்கிறார் எனில் குல்சாரிலால் நந்தாவின் ஆங்கில  அறிவிப்பு தாங்கிய பலகை மீதும் மாணவர்கள் கல் அடிக்கின்றனர் எனில் அவர்களுக்கு ஆங்கிலமும் சரிவர தெரியாது என்னும் பொருள் வருகின்றதே? அப்படி எனில் அப்போது மாணவர்களாக இருந்தவர்களில் அப்போது அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் ஈரோட்டில் இப்போது புகழ்வாய்ந்த வழக்கறிஞராக செயலாற்றி வரும்மிகச்சிறந்த பெரியாரியவாதி திரு. பழனிசாமி கருப்பண்ணன் அவர்களை இன்று நானே நேரிடையாக கேட்டேன். "உங்களுக்கு எல்லாம் ஆங்கிலம் தெரியாது என பொருள்படும் படியான கேலிச்சித்திரம் வரைந்துள்ளதை  இப்போது பாடத்திட்டமாக மத்திய அரசு வைத்துள்ளதே?" என . அதற்கு அவர் " நான் அந்த போராட்டத்தில் எங்களுடன் பங்கெடுத்தவர்கள் பட்டியல் தருகிறேன். அதில் பலரும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், ஐ ஏ எஸ் ஆபீசர்கள், சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் இப்படியாக இருந்தோம், இருக்கின்றோம். அப்படி இருக்க அந்த கேலிச்சித்திரம் ஒரு காழ்ப்புணர்வால் வரையப்பட்டது. இது கண்டிக்கப்பட வேண்டிய செயல். நான் பட்டியல் தருகிறேன்" என சொல்லி ஒரு நீண்ட பட்டியல் கொடுத்தார். அதை அப்படியே தருகிறேன். அடைப்புகளில் அவர்கள் வகித்த பதவிகள் உள்ளன.


(திரு.பழனிச்சாமி கருப்பண்ணன் அவர்கள்)

அதாவது போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்த அப்போதைய மாணவர்கள் திரு. எல். கணேசன், (பாராளுமன்ற உறுப்பினர்)செஞ்சி ராமச்சந்திரன் (மத்திய அமைச்சர், இவர் பஸ் எரிப்பு வழக்கில் மாட்டப்பட்டார்), கி.ராஜமாணிக்கம்( ஐ ஏ எஸ் அதிகாரி, கலைஞர் முதல்வராக இருந்த போது அவரது செயலாளர்) (அவரது தலைமையில் தஞ்சையில் இந்தி எதிர்பு மாநாடு. கி.ராசமாணிக்கம் தலைமையில் அண்ணா . ஜி.டி. நாயுடு துவக்கிவைத்து உரையாற்றினார்கள். முக்கியமாக மதுரையில் கா. காளிமுத்து (தமிழக அமைச்சர்) சட்டத்தை எரித்து சிறைசென்றவர்கள், டாக்டர் இலக்குவணார் மதுரையிலே அரசியல்சட்டப்பிரிவை எரித்து சிறைசென்வர். திரு. துரைமுருகன்(தமிழக அமைச்சர்)வைக்கோ (எம்.பி) என்கிற .வை.கோபால்சாமி ,  ஜீவாகலைமணி என்ற நண்பர், ரவிச்சந்திரன் என்ற கவல்துறைத்தலைவருடைய மகன், தற்போது ஒய்வுபெற்று காவல்துறை டி. ஐ. ஜி நண்பர் தவிட்டுப பாளையத்தைச்சார்நத பாண்டியன். அவர் டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு டெலிகேட்டாக மாநிலக்கல்லுாரியிலிருந்து சென்றார். துரைமுருகன் வகுப்பு தோழர் ஊத்தங்கரையைச்சார்ந்த நண்பர் நடேசன்  தி்ருச்சி நேசனல்கல்லுாரில் படித்தவர், செய்தி மககள் தொடர்பு துறை இனை இயக்குநராக இருந்து ஒய்வு பெற்றவர். சென்னை லாகாலேஜ் ராஜாமுகமது (எம்.ஜி.ஆர் அரசில் தமிழக அமைச்சர்) , ரகுபதி என்பவர் செயின்ஜோசப்கல்லுர்ரி,எம். நடராசன்(தமிழரசி பத்திரிக்கை ஆசிரியர்(அரசு பி ஆர் ஓ வாக பணியாற்றியவர்) (அதங்க சசிகலா நடராசன்), திருச்சியில் வேங்குடுசாமிஎ னபவர் போக்குவரத்தில்பணியாற்றி ஒய்வு பெறறவர், ராஜ்குமார் மன்றாடியார் , விருதுநகர் சீனிவாசன்(எம் எல் ஏ) ,இரா.ஜனார்த்தனன்,எஸ்டிசோமசுந்தரம்(தமிழக அமைச்சர்) இவரு எல்லாம் டி. கே.சியின் குருப் (அதாவது இப்போது வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன் அவர்களின் தந்தையார். டி.கே.சீனிவாசன் (தத்துவமேதை) ,. பினனையுர் பன்னீர்செல்வம் புஷ்பம் கல்லுாரி(அவர் நடராசனின் நண்பர்.அவரும் பஸ் எரிப்பு வழக்கில்கைதுசெய்யப்பட்டார்.)ரகுபதி மிக முக்கியமானவர் (திருச்சி செயின் ஜேசப் கல்லுாரி ஐ ஏ எஸ்ஆகி ஒய்வு பெற்றுவிட்டார்),தஞ்சை கார்மேகம் அவர்கள் (எல் ஜி அவர்களின் நண்பர், செய்தி மக்கள் தொடர்பு துறையில்  இனை இயக்குனராக பணீயாற்றி ஓய்வு பெற்றவர்),  திருச்சி மேலகல்கொண்டார் கோட்டை என்னும் இடத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற சொல்லி அண்ணா அவர்கள் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார்.  போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த தியாகிகள் அந்தந்த ஊர்களில் உரிய மரியாதையுடன் கவுரவிக்கப்பட்டனர். (மயிலாடுதுறையில் மேம்பாலத்துக்கு பெயர் மாணவர் தியாகி சாரங்கபாணி மேம்பாலம்)

இப்படியாக திரு பழனிச்சாமி  கருப்பண்ணன் அவர்கள் நீண்ட பட்டியல் கொடுத்தார். இந்த பழனிசாமி கருப்பண்ணன் அவர்கள் மிக தீவிரமாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்.  முன்னாள் முதல்வரின் செயலர் கி.ராஜமாணிக்கம் அவர்களுடைய மற்றும் திரு எல்.கணேசன் ஆகியோருடைய கல்லூரி நண்பர். விடுதி நண்பர். அவர் எல்ஜி யோடு சட்ட மன்ற உறுப்பினர் அறை என் 225 எம் எல்ஏ விடுதியில்தங்கி 1973 முதல் 1975 வரை சென்னை ஒரு கல்லூரியில்  விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர் என்பது உபரித்தகவல்.

இப்போது சொல்லுங்கள் தோழர்களே! மேற்சொன்ன இவர்களுக்கா ஆங்கிலம் தெரியாது? ராஜாஜியின் குரலை பிரதிபலித்த ஆர்.கே. லஷ்மண் வரைந்த கேலிச்சித்திரம் காழ்புணர்வுடன் கூடிய விஷமத்தனமானது என்பதற்கு மேல் சொன்ன லெஜண்டுகள் தான் சாட்சிகள்.

அந்த கேலிச்சித்திரம் நீக்கப்பட வேண்டும். அதற்கான முழு முயற்சியும்  ஒட்டுமொத்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டும்! செய்வார்கள் என நம்புவோம்!