பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 8, 2010

நியாபகமா சொல்ல மறந்த கதை!!! (பாகம் # 1)

என் வண்டி சுசுகி இருக்குதே சுசுகி அதுக்கு பின்னால பெரிய கதையே இருக்கு. பின்னாலன்னா சிவப்பு லைட்டு கிட்டே இல்லை. வாயேன் இந்த வண்டில கும்பகோணம் வரை போயிட்டு வருவோம்னு சீமாச்சு அண்ணா கேட்ட போது கூட இல்லீங்க அண்ணா இது எல்லை தாண்டாது. தாண்டினா எல்லை தாண்டின பயங்கரவாதத்துக்காக வண்டிய புடிச்சு உள்ளே போட்டுடுவாங்க என சொன்னேன். பார்க்கும் அத்தனை டிராபிக் காவலர்களும் கூட இதை ஏதோ தன் வண்டி மாதிரியே தான் ஒரு அன்போட பார்ப்பாங்க. என் வண்டி ஒன்வேயில் வந்தாலும் சரி, நடுரோட்டிலே பார்க் பண்ணினாலும் சரி எதையும் கண்டுக்க மாட்டாங்க. அத்தனை ஒரு பாசம் அந்த வண்டி மேல. சரி கதைக்கு வருவோம்.

அப்போ ஜெயலலிதா ஆட்சிகாலம். டெஸ்மா, எஸ்மான்னு மக்கள் சந்தோஷமா இருந்த காலம். ஒரு நாள் நான் துபாயில் என் வீட்டில் மிக சோம்பலாக உட்காந்து இருந்த வெள்ளிக்கிழமை. ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும். போய் அனுப்ப சோம்பலா இருந்துச்சு. அப்போது தான் என் சகலர் போன் செஞ்சாரு. "தம்பி நான் இந்தியா போகிறேன் 50 நாள் லீவிலே. எதுனா வாங்கி கொடுத்தா கொண்டு போய் குடுத்துடுறேன்"ன்னு சொன்னாரு. எனக்கு பொதுவா பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்பும் பழக்கமும் இல்லை. நானும் வாங்கி கொண்டு போகவும் மாட்டேன். அப்போது என் மனைவியும் குழந்தையும் சிதம்பரத்தில் இருந்த நேரம். நான் அவரிடம் "எதும் கொடுத்து விட இல்லை. வேண்டுமானா நான் பணம் அனுப்ப இருக்கேன். அதை கொண்டு குடுத்துடுங்க"ன்னு சொன்னேன். 12B படத்திலே ஷாம் தவற விட்ட பஸ் மாதிரி அந்த என் வார்த்தைகள் பின்னான நடக்க போகும் ஒரு மாபெரும் விஷயத்துக்கும் இந்த பதிவுக்கும் காரணமாக இருக்க போவது பற்றி தெரியவே தெரியாது.

"இல்லை முடியாது"ன்னு அவர் சொல்லியிருந்தா இத்தனை களேபரம் நடந்து இருக்காது. உடனே ஒத்துகொண்டு வந்தார். நானும் அந்த நாட்டு பணத்தை கொடுத்தேன். வாங்கி கொண்டார். போனார். இரவே கிளம்பி சென்னை போய் பின்னர் எங்க ஊருக்கு போய் அவர் சேரும் போது காலை 5 மணி ஆகிவிட்டது. தூங்கி எழுந்தாரு. இந்த துபாய் ரிட்டர்ன் மக்கள் கிட்டே எப்போதும் ஒரு வித கர்வம் இருக்கும் போய் இறங்கின முதல் 1 வாரத்துக்கு. பின்னே அது படிப்படியா குறைந்து துபாய் திரும்பும் நேரத்தில் லீவ் முடியும் நேரத்தில் அக்மார்க் இந்தியதனம் மீண்டும் வந்துவிடும். அவரும் அப்படித்தான். வீட்டில் சாப்பிடக்கூட இல்லாமல் நான் கொடுத்த பணத்தை சிதம்பரம் கொண்டு கொடுத்து விட்டு வரலாம் என நினைத்து வெளியே வந்தவருக்கு எதிலே போவது என சின்ன குழப்பம்.

ஒரு வாடகை காரை வாடகைக்கு கேட்ட போது நடந்த வாக்குவாதத்தில் "போய்யா நீயும் உன் வாடகை காரும் நானே ஒரு வண்டி இந்த காசிலே வாங்கிப்பேன்" என சபதம் எடுத்து கொண்டு ஒரு டி வி எஸ் கம்பனி வாசலில் போய் நட்புக்காக படத்திலே விஜயகுமாரும் சரத்குமாரும் கார் வாங்குவது போல ஷோகேஸ்ல நிற்கும் ஒரு சுசுகியை வாங்கி கொண்டு ஹாட்கேஷ் கொடுத்து விட்டு நேரா கால்டேக்ஸ் வந்து டேங் பில் பண்ணி கொண்டு வைத்தீஸ்வரன் கோவில் கிட்டே வரும் போது ஒரு டீ சாப்பிட்டு வெத்தலை போட்டா நல்லா இருக்குமேன்னு நினைச்சுகிட்டு அதை செயல்படுத்தி கொண்டிருக்கும் போது தான் எங்க மச்சினர் கண்ணிலே மாட்டினார். அவரு ஒரு அரசாங்க ஊழியர். அப்போ தான் எஸ்மா டெஸ்மா உச்சகட்ட நேரம். இவரு கண்ணை ஜெயலலிதா பொத்தி விட்டு "கொலை கொலையா முந்திரிக்கா நிறைய நிறைய கொண்டு வா, கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான் கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி"ன்னு சொல்லி சுத்தி விட விட இவரும் வந்து தலைமறைவா இருக்கேன் பேர்வழின்னு மாயவரத்திலே இருந்து வைத்தீஸ்வரன் கோவில்ல வந்து டீசாப்பிட்டு தன் தலையை மறைத்து வைத்து கொண்டு இருக்க அப்ப தான் நம்ம சகலர் அவரை பார்த்து விட்டார். விதி வலியது:-))

இருவரும் ஜாலியாக டீ சாப்பிட்டு கொண்டே வெத்தலை போட்டு கொண்டே துபாய்ல ரோட்டிலே சோறு போட்டு சாப்பிடலாம், இங்க ஒரே கச்சடாவா கிடக்கு, எப்படா லீவ் முடிஞ்சு ஊருக்கு போவோம்னு இருக்கு என துபாய் ரிட்டர்ன் டெம்பிளேட் டயலாக்கை எல்லாம் விட்டு கொண்டே இருக்க தான் சிதம்பரம் போவதாகவும் இருவரும் சேர்ந்தே போகலாம் எனவும் முடிவு செய்ய ஒரு போலீஸ்கார் வந்து "அய்யா அதோ எதிர்த்தாப்புல ஜீப்புல இருக்குற அய்யா உங்க ரெண்டு பேரையும் கூப்பிடுராங்க"ன்னு சொல்ல அங்க போனாங்க ரெண்டு பேரும்.

அக்க அவரு "ஏட்டய்யா, விருந்தாளிங்க ரெண்டு பேரையும் கொண்டு போய் ஸ்டேஷன்ல வையுங்க. நான் வந்து பேசிக்குறேன்" என சொல்ல என் அப்பாவி சகலர் "சார் இதோ இப்ப தான் புது வண்டி வாங்கிகிட்டு வந்திருக்கேன். அதை எடுத்துகிட்டு வந்துடுறேன்"ன்னு சொல்ல புதுவண்டிய பார்த்த ஏட்டு அய்யாவுக்கு ஏக சந்தோஷம். "இல்லீங்க சார் உங்களுக்கு எதுக்கு சிரமம் நானே தள்ளிகிட்டு வர்ரேன். தோ எதிர்க்க தான் இருக்கு ஸ்டேஷன் அங்க நீங்களா போய் அங்க இருக்கும் பெஞ்சில உட்காருங்க"ன்னு சொல்ல பிரியாணி சட்டி இருக்கும் இடத்துகே அந்த ஆடுகள் வாண்டடா போச்சு.

அங்க போய் உட்காந்ததுமே ஒரு அரைமணியிலே அந்த இன்ஸ்பெக்டர் அய்யா வந்து ரைட்டரை பார்த்து " என்ன ரைட்டர் விசாரிக்க டைம் இல்ல,நீயா பார்த்து எதுனா செய்யி" என சொல்லிகிட்டே அடுத்த அடுத்த வேளை பார்த்துகிட்டு இருக்க இவங்க ரெண்டு பேரும் அங்க இருந்த தினதந்தி தினமலர் எல்லாம் படிச்சு முடிச்சுட்டு ஒரு டீயை எதிர்பார்க்க டீயும் வந்து அதையும் முழுங்கி முடிக்க ரைட்டர் ஒரு கத்தை பேப்பரை எடுத்து இன்ஸ் அய்யா முன்னிலையில் வைக்க அய்யா இவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு "இதிலே ஒரு கையெழுத்து போடுங்க"ன்னு சொல்ல அப்ப தான் நம்ம ஆளுங்களுக்கு லைட்டா உதறல் ஆரம்பிச்சு இருக்கு.

1.அரசாங்கவேலையை செய்யாமல் அரசங்க சம்பளம் வாங்குதல்.

2. அரசாங்க வேலையை செய்யும் மற்ற ஊழியர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் தம் கடமையை செய்ய விடாமல் தடுத்தல்.

இப்படியாக நீண்டு கொண்டே போன அந்த பேப்பரை பார்த்து இன்ஸ் அய்யா ரைட்டரை பார்த்து கடுப்பாகி "யோவ் ரைட்டரு என்னய்யா கோழிமுட்டைக்கு மயிர் புடுங்கின மாதிரி சும்மா வழவழா கொழகொழான்னு எஃபைஆர் போட்டிருக்க. சும்மா கின்னுன்னு இருக்க வேண்டாமா. பி பி பார்த்தா அசந்து போக வேண்டாமா?"ன்னு கேட்க ரைட்டர் திரும்ப அந்த பேப்பரை வாங்கி

3. அரசாங்க பேருந்துகளை தீயிட்டு கொளுத்துதல்

4. பொதுமக்கள் அச்சப்படும் வகையில் தீபந்தத்தை எடுத்து கொண்டு திரிதல்(சிகரட் எல்லாம் கையிலே வச்சிருந்தாங்க போலிருக்கு)

5. போலீசாருக்கு தான் தப்பிக்கும் வண்டியின் நம்பர் தெரியாதிருக்கும் வகையில் நம்பரை கருப்பு பெயிண்ட் கொண்டு அழித்து விட்டு நாச வேலையில் ஈடுபடுதல். (இல்லீங்க சார் இப்ப தான் சுட சுட வாங்கின வண்டி இது)

6. கொள்ளையடித்த பணத்தை கைவசம் வத்து கொண்டு அதை கொண்டு அரசாங்க சொத்தை நாசவேலைக்கு பயன் படுத்துதல்...(நான் கொடுத்த பணம் வேலை செய்யுது)

சார் சார் இது துபாய்ல இருந்து என் சகலர் அவரு வீட்டுல கொடுக்க சொல்லி திர்காமா கொடுத்தாரு அதை நான் இந்தியா பணமா எடுத்து கிட்டு போறேன்னு சகலர் சொல்லிகிட்டு இருக்கும் போதே இன்ஸ் அய்யாவுக்கு ஒரு போன்....

அவர் எடுத்து "ஆமாங்கய்யா ஆமாங்கய்யா ஓரளவு விசாரிச்சதுல இதுல வெளிநாட்டு சதி இருக்கும் போலன்னு டவுட் வருது சார். பெருமளவுல ஹவாலா பணம் விளையாடிகிட்டு இருக்கும் போலிருக்கு சார். அக்யூஸ்ட விசாரிச்சு கிட்டு இருக்கேன். கத்தை கத்தையா மாட்டி இருக்கு அய்யா"ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே நம்ம சகலர் "சார் முதல்ல எங்களை விசாரிச்சுட்டு அனுப்புங்க. பின்ன அந்த ஹவாலா ஆளுங்களை விசாரிங்க"ன்னு சொல்ல அய்யா அதுக்கு "நான் ஹவாலா தீவிரவாதிய தான விசாரிச்சுகிட்டு இருக்கேன்.. மேல சொல்லுங்க " என்ற போது நம்ம ஆளுக்கு மயக்கம் வந்துடுச்சு.

உடனே இன்ஸ் அய்யாகிட்டே சகலர் 'ஆக்சுவலி தி மனி ஈஸ் ரெகார்டிங் டூ" என சொல்ல ஆரம்பிக்க அய்யா "ரைட்டு பேச்சுல இருக்கும் ஆங்கில வாடைய பார்த்தா ஸ்பெயின்ல மொசாட் ட்ரயினிங் போலிருக்குன்னு சேர்த்துடுய்யா" என சொல்ல அதன் பின்னே நம்ம சகலருக்கு தமிழே கூட சரியா வரலை. அதுக்குள்ள நம்ம வண்டிய தள்ளிகிட்டு வந்த ஏட்டய்யா அந்த ஃபுல் பண்ணின டேங்கில் இருந்து பெட்ரோல் மாத்திரம் எடுத்து குடுத்து கிட்டே "துபாய் காரன் துபாய் காரன் தான்யா. அங்க பெட்ரோல் கிடைக்குதுங்குறது உண்மை தான். பாரு எடுக்க எடுக்க அட்சயபாத்திரம் மாதிரில்ல வருது. நம்ம ஊரு பயலுங்களும் தான் இருக்கானுங்கலே. அரை லிட்டர் போட்டுகிட்டு வேகமா ஹாரனு வேற அடிச்சுகிட்டு பந்தா வுடுவானுங்க" என சொல்லி கொண்டே கடமையை செய்து கொண்டு இருந்தார்.

"சரி நான் இப்ப கேட்குறதுக்கு சரியா பதில் சொல்லுங்க. எங்க ட்ரையினிங் எடுத்தீங்க"

"எங்க கம்பனிலயே தான் சார். அது ஆச்சு முப்பது வருஷம். இப்ப நானே ட்ரயினிங் கொடுக்குறேன்"

"ஒ.. இதை ஒரு கம்பனியா வச்சு வேற நடத்துறீங்களா? சரி எந்த எந்த நாட்டுக்கு போயிருக்கீங்க?

"ஆக்சுவலி அது ஜப்பான் கம்பனி. அதனால அவங்க எதுனா புதுசா மெத்தேட் மாத்தினாங்கன்னா நான் அங்க ட்ரயிங் போவேன். மத்தபடி கல்ஃப் எல்லாம் போயிருக்கேன் ட்ரயினிங் கொடுக்க"

"அடடா ரைட்டரு நீ சரியா வரமாட்ட இந்த கேஸ் எழுத. நம்ம பி பிக்கு ஒரு கால் போடு. இங்க நாம கிட்ட தட்ட தீவிரவாத கும்பலின் தலையை பிடிச்சுட்டோம்னு நினைக்கிறேன்"ன்னு சொல்ல சகலருக்கு சகலமும் உறைந்து போனது.

தொடரும்..............(பயப்படாதிங்க இன்னும் ஒரு பாகம் தான்)