பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 16, 2011

கெனால் பேங் ரோடு - சென்னை -28

ஒரு வழியாக கோடை விடுமுறை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து "பள்ளி உண்டு பாடம் இல்லை" என்னும் கோஷத்துடன் நேற்று ஆரம்பம் ஆகிவிட்டது. நட்ராஜ் தான் ரகளை செய்வானோ என்கிற மாதிரியாக பயம் இருந் தாலும் அவன் முதள் நாளே ஸ்கூல் போகும் பேக் எல்லாம் முதுகிலே மாட்டிக்கொண்டு படுத்து தூங்கும் அளவு தயார் நிலையில் தான் இருந்தான். எனக்கு தான் அழுகை அழுகையாக வந்தது. பின்னே என்ன நான் காலேஜ் போன காலத்திலேயே அம்மா காலை கட்டிக்கொண்டு தாரை தாரையாக கண்ணீர் விட்டவனாச்சே. அத்தனை ஏன்? ஞாயிறு லீவ் விட்டு திங்கள் அன்று போகும் போது கூட ஒரு டோஸ் அழுதுவிட்டு தான் போவேனாக்கும். அத்தனை ஒரு ஈடுபாடு படிப்பு மீது :-)

காலை எழுந்ததும் எனக்கு முன்னரே அவன் குளித்து முடித்து தயாராகி பைக் எல்லாம் துடைத்து உம்மாச்சி எல்லாம் கும்பிட்டு சந்தன கோபி எல்லாம் நெற்றியில் பிரமாதமாக வைத்து கொண்டு பள்ளிக்கு போன உடனே அவன் நண்பர்கள் சூர்யா, ஷிபாயா, கல்யாணி என எல்லோரிடமும் குசலம் விசாரித்து கொண்டிருந்தான்.
"நீ லீவுக்கு எங்க போனே? என்ன சினிமா பார்த்தே? என்ன ஸ்வீட் சாப்பிட்ட என்பன போன்ற அதிமுக்கிய விசாரணைகள் நடந்தன. நீ லீவுக்கு எங்க போனே என்ற கேள்விக்கு மாத்திரம் அவன் வாய் கும்பகோணம் என சொல்ல வந்தும் அவன் ஜீன் சும்மா விடுமா? படார்ன்னு கைனடிக்டெக்ட்ன்னு சொன்னான். நானே இது வரை கேள்விப்பட்டது இல்லை அந்த பெயரை. எப்போதோ யோகேஸ்வரன் ஃபெட்னா நடந்த இடம் அது, அது வட அமரிக்காவிலே இருக்குன்னு சொன்னது மாத்திரம் லைட்டா ஞாபகம் வந்தது. அவன் இந்த பெயரை அப்போது மனதில் வைத்துக்கொண்டு இப்போது அவிழ்த்து விட்டுவிட்டான். யாரோ ஒரு வாண்டு 'அது எங்க இருக்கு?" என கேட்க இவன் கொஞ்சமும் சளைக்காமல் "அமேரிகாவிலே இருக்கு. அமேரிக்கா ரொம்ப பெரிசா இருக்கும்" என அமேரிக்கா புராணம் அவிழ்த்து விட ஆரம்பிக்க நான் என் பள்ளிக்கூட நாட்களுக்கு மனது போக ஆரம்பித்துவிட்டது.

எனக்கு என்னவோ உலகில் அப்போதைக்கு பெரிய இடமே "மெட்ராஸ்" தான். என் ஒரு அத்தை மெட்ராஸ்ல இருப்பது மட்டும் தான் தெரியும். அங்கே போனது எல்லாம் கிடையாது. தீபாவளி, பொங்கல் வரிசைப்பணம் அப்பா மணியார்டர் அனுப்பும் போது 35, கெனால் பேங் ரோடு என அட்ரஸ் எழுதும் போதே ஒரு வித சிலிர்ப்பு வரும். அப்படித்தான் ஒரு முறை பஞ்சாபி என்கிற பஞ்சாபகேசன் என்னிடம் " மெட்ராஸ்ல எங்க போனே?" என கிராஸ் கொஸ்டின் கேட்க லைட்டாக அதிர்ந்தாலும் 35, கெனால் பேங் ரோடு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28 என மனப்பாடமாக சொன்னேன். போதா குறைக்கு இன்னும் டீப்பாக " அந்த பிள்ளையார் கோவில் பக்கத்துல" என பிள்ளையாரின் மேல் இருந்த அதீத நம்பிக்கையால் அளந்துவிட்டேன். கண்டிப்பாக பிள்ளையார் கோவில் இல்லாமலா போகும்.

ஒரு பொருளை வியாபாரம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதை விட ஆஃப்டர் சர்வீஸ் என்பது ரொம்ப முக்கியம் என்கிற வியாபார தந்திரம் எனக்கு அப்பவே நல்லா தெரியும். பொய் சொல்வது என்னவோ ஒரு செகண்ட் வேலை தான். அதை மெயிண்டய்ன் பண்ணுவது என்பது ஆஃப்டர் சர்வீஸ் மாதிரி. ரொம்ப கஷ்டம். அவன் ஒரு படி மேலே போய்" அப்படியா உங்க மாமா என்ன வேலை பண்றார்?"ன்னு அடுத்த கேள்வி கேட்க நான் கொஞ்சமும் தயங்காமல் "அதே பேங்ல தான்" என சொல்ல அவன் என்னிடம் "அதாவது கெனால் பேங்ல தானே" ன்னு கேட்டான். அகராதி புடிச்சவன். நான் ஆமாம் என சொன்னதும் ஒரு வித நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு போய்விட்டான்.

ஆக கெனால் பேங் சாலையில் அத்தை வீடு இருக்கு, கெனால் பேங்ல மாமா வேலை செய்கிறார் என்னும் அழகிய பொய்யை அடுத்த அடுத்த வருட லீவ் முடிந்ததும் அதே பஞ்சாபியை கூப்பிட்டு உரம் போட்டு வளர்த்தேன். மாமா அந்த பேங்ல பீல்டு ஆப்பீசராக, மேனேஜராக இப்படி வருடா வருடம் பிரமோஷனும் கொடுத்து வந்தேன். பின்ன என்ன? இல்லாத வேலையில் சேர்த்தாச்சு கற்பனையில். அதுக்காக சும்மா விட்டுட முடியுமா என்ன? பிரமோஷன் யாரு கொடுப்பா? வேலை வாங்கி கொடுத்த நான் தானே எல்லாம் செய்யனும். என் கடமை இல்லியா அதல்லாம்? அத்தனை ஏன்? ஒரு லீவ் முடிந்து போன போது அந்த மாமா அந்த கெனால் பேங்ல ஒரு பிரச்சினையில் சஸ்பென்ஷன்ல இருக்காருன்னு கூட சொன்னேன். அத்தனை ஒரு தொழில் சுத்தம் நம்ம கிட்ட:-)

ஒரு வருஷ ரெண்டு வருஷமாவா நான் பெத்த அந்த பொய்யை காப்பாத்தினேன். ரொம்ப வருஷம் கழிச்சு அதே பஞ்சாபி ஏதோ நொய்டாவோ என்னவோ ஒரு பிராஞ்ச்ல பஞ்சாப் நேஷனல் பேங்குல ஆப்பீசராம். மாயவரம் பக்கம் பொண்டாட்டி பிள்ளையோட கடைத்தெருவில் போனான். என்னை பார்த்ததும் கூப்பிட்டு "இப்ப கெனால் பேங் மாமா என்ன பண்றார்?" என கேட்க அவரு ரிட்டையர்டு ஆகிட்டாருன்னு சொல்லிட்டு வந்தேன். அப்போதும் அதே நமட்டு சிரிப்பு தான் அவன் கிட்டே. அதன் பின்னே ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்தது. கெனால் பேங் என்றால் கூவம். கெனால்ன்னு சொன்னா சாக்கடைன்னு. கெனால்க்கு அர்த்தம் தெரிஞ்சதும் நான் பணால் ஆகிப்போனேன். எனக்கு அதல்லாம் கூட கவலையாக தெரியவில்லை. ஆனா அந்த பஞ்சாபி நான் 3வது படிக்கும் போதே ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தானே. அப்படின்னா அப்பவே அவனுக்கு தெரிஞ்சிருக்கும் தனே. அப்போதே தனியா கூப்பிட்டு என்கிட்ட சொன்னால் என்ன என்கிட்ட?. இப்போது நான் போன பின்னே பொண்டாட்டி கிட்டே சொல்லி சிரிச்சு என் மானத்தை வாங்கியிருப்பான். கிராதகன்.

நான் சகஜ நிலைக்கு வந்தேன். நட்ராஜிடம் கூப்பிட்டு சொன்னேன். "தம்பி நிஜமாகவே கைனடிக்டெக்ட்ன்னு ஒரு ஊர் இருக்குதான்னு ஒரு கூகிள் பஸ் விட்டு விசாரிச்சுப்போம்டா. நாளை மருநாள் அவன் பொண்டாட்டி பிள்ளை கிட்டே உன் மானம் போய்ட கூடாதுல்ல. அது எதுனா பெரிய சாக்கடைன்னு அர்த்தம் எதுனா வந்துட போகுது" என சொன்னேன். ஏங்க வட அமரிக்கா வலைப்பதிவர்களே! அப்படி ஒரு ஊர் இருக்குதா?

June 6, 2011

சப் காண்டிராக்டர் சல்மான்கான்!!!

ஒரு எட்டு வருஷம் அபுதாபி - ஷார்ஜா என ஆட்சி செய்து விட்டு துபாய் நகரை கைப்பற்றும் நோக்கோடு துபாய் வந்த புதிது. என் நண்பன் அதிரை தாஜுதீனின் தம்பி ஜமீல், எனக்கும் தம்பி தான். துபாய் வரணும் சொல்லி போன் செய்தால்" ய்" சொல்லி முடிக்கும் போதே விசிட் விசாவை வீட்டு கதவை தட்ட வைக்கும் வித்தகன். ஒரு மஞ்ச பையிலே மாத்து துணியும் அடுத்த வேளை பல் விளக்க கொஞ்சம் பயோரியா 1431 ஒரு தரத்துக்கு தேவையானது ஒரு தின காலண்டர்ல கிழிச்ச பேப்பரில் மடித்து கொண்டும் துபாய் போய் இறங்கி விட்டால் ஜமீல் பிளாட் ரெண்டு கையையும் அகலமா நீட்டிகிட்டு வா வான்னு கூப்பிட்டுக்கும். ஜமீல் பிளாட் இருந்த இடம் இருக்கே அது துபாய்ல ஒரு முக்கியமான இடம். அந்த இடத்தை பத்தி அழகா தெரிஞ்சுக்கனும்னா என்னோட இந்த பதிவிலே போய் பாருங்க.

அங்கே போய் இறங்கிய பின்னே தான் ரெஸ்யூம் எல்லாம் அப்டேட் செய்தேன். பின்னே அதை வசதியாக ஜமீல் கிட்டே கொடுத்து விட்டால் போதும். நான் சொல்லும் நம்பருக்கு பேக்ஸ், மெயில்ன்னு மீதி எல்லாம் ஜமீல் பொறுப்பு தான். காலை 5.30க்கு எழுந்து குளித்து விட்டு பொடி நடையாக பின்னால் இருக்கும் சப்கா ரோட்டில் நடந்தால் முடிவினில் அப்ரா (படகு துறை ) வரும். ஒரு 50 பைசா கொடுத்து படகில் டேராதுபாயில் இருந்து பர்துபாய் கரையில் இறங்கினால் உடனே சிவன்கோவில் வந்துவிடும். காலை ஆறு மணிக்கு ஆராதனை. எவனோ வாங்கி அண்டாவில் ஊத்தி வச்ச பாலை எடுத்து "இதை நான் வாங்கினதா நினைச்சுக்கோ" என சொல்லி சிவனுக்கு அபிஷேகம் செஞ்சுட்டு வந்தால் கைமேல் பலன் சுட சுட இருக்கும். ஆமாம் 4 பிரட் ஸ்லைஸ்ம் போதுமான அளவுக்கு சென்னாவும் ஒரு துப்பட்டா போடாத சுடிதார் அணிந்த பஞ்சாப் பாட்டி கையிலே வைக்கும். பின்னே குருத்வாராவுக்கும் நாலு படி ஏறி அங்க கொடுக்கும் திருவாதிரை களி பின்னே சூடான டீ, அதன் மேலேயே எவனோ கொடுக்கும் கொஞ்சம் பெப்சி பிரசாதம், எல்லாம் கலந்து கட்டி அடிச்சுட்டு கிருஷ்ணன் கோவில் வந்தா லஜ்ஜையே இல்லாம அந்த காலை நேரத்திலும் சேட்டு மாமிகள் ஸ்வீட் கொடுப்பாங்க. அதையும் வாங்கி தின்னுட்டு எவனோ அங்கே வாங்கி போட்ட கல்ஃப் நியூஸ், கலீஸ் டைம்ஸ் எல்லாம் பார்த்து ஜமீலுக்கு இந்த இந்த நம்பருக்கு பேக்ஸ் அனுப்புன்னு போன்ல சொல்லிட்டு அதே பேப்பரை விரித்து கிருஷ்ணன் சன்னதியிலேயே தியானம்னு பேர்ல ஒரு தூக்கம் போட்டா வரிசையா பேக்ஸ் பார்த்துட்டு போன் பண்ணுவனுங்க கம்பனிகாரனுங்க

பின்னே அந்த கம்பனியின் சொத்து மதிப்பு இன்ன பிற ஜாதகம் எல்லாம் பார்த்து கேட்டு தெரிஞ்சுகிட்டு இஷ்டம் இருந்தா அங்க இருந்து கோல்டு சூக் பஸ்டாண்டு போய் 3 திர்காம் கொடுத்து அல்கூஸ் ஏரியா பக்கம் இண்டர்வியூ போவேன். நான் கேட்கும் சம்பளம் கொடுத்தா ஓக்கே. இல்லாட்டி உன் சகவாசம் வேண்டாம் போ என திரும்பவும் பிளாட் பக்கம் வந்து விடுவேன். ஒரு கோடி சம்பளம் கொடுக்குறேன்னு சொன்னாலும் அதன் பின்னே பிளாட் விட்டு நகர மாட்டேன்.

அந்த பிளாட் என்னவோ சிங்கிள் பெட் ரூம் பிளாட் தான். எட்டு பேர் அதிலே நிரந்தர மெம்பர்ஸ். ஆனா புளோட்டிங் பாப்புலேஷன் அதிகம். கிச்சன்ல எப்போதும் எதுவாவது தயாராகும். யாராவது ஹால்ல உட்காந்து சாப்பிடுவாங்க, புத்தம் புதிய படம் எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும். இப்போ நீங்க அங்க போனா கூட "ராணா"படம் எடுத்த வரை பார்ப்போம் என யாராவது பார்த்து கொண்டிருப்பாங்க. அங்கே இருக்கும் கம்பியூட்டர் உபரி பாகங்கள் ஹாலில் இருக்குமே அதை தோண்டி தூர் வாறி போட்டால் அதன் உள்ளே ஜமீலை பார்க்கலாம். ஜமீலுக்கு ஒரு நல்ல பழக்கம். 24 மணி நேரமும் போன் ஆஃப் பண்ணாத பழக்கம். காலை 7 மணிக்கு ஆபீஸ். மேனேஜர் (கம்) ஓனர் ஒரு பத்து மணிக்கு போன் செய்யும் போது அந்த கம்பியூட்டர் குவியலில் இருந்து போன், கை, வாய் மட்டும் வெளியே வரும். "எஸ் சார் எஸ் சார் நியூட்ரலைசேஷன் ஆபீல்ல இருக்கேன். செம கூட்டம். எஸ் எஸ் வர்ரதுக்கு ஒரு மணியாகிடும்" என சொல்லிவிட்டு தலை, கை, போன் மீண்டும் உள்ளே கம்பியூட்டர் குவியல் உள்ளே போய்விடும்.

அது ஜமீல் பிளாட் என்பதால் நான் அதிலே ஒரு நிரந்தர மெம்பர். ஜமீல் மூலமாக விசிட்ல வந்து வேலை தேடும் அதிரை மக்கள் எல்லாம் பகல் நேரத்தில் அங்கே தான் கூடும். சில நாள் வேலை தேட அலுப்பாக இருந்தால் காலை நிரந்தர மெம்பர்ஸ் எல்லாம் காலை 7 மணிக்கு வேலைக்கு போன பின்னே அரட்டை கச்சேரி ஆரம்பம் ஆகிவிடும். அருமையான சமையல் எல்லாம் செஞ்சு அசத்துவோம்.

அப்படித்தான் ஒரு நாள் காலையில் வேலைக்கு போன மஜீது திரும்பி ஓடி வந்தான். மஜீது வேலை பார்ப்பது பக்கத்து சப்கா ரோட்டில் தான். சப்கா ரோடு என்பது நம்ம சென்னை ரங்கநாதன் தெரு மாதிரி. அத்தனை ஒரு ஜன நெரிசல். எங்க திரும்பினாலும் "என்ன காகா எப்ப வந்தீய"ன்னு அதிரை, முத்துப்பேட்டை குரல் மட்டுமே கேட்கும். அதிலே ஒரு சைனா காரியின் கடையிலே தான் மஜீது தற்காலிக வேலை பார்த்து கொண்டிருந்தான். வேலை பிரமாதம் இல்லை. அந்த சைனாக்காரி சைனாவிலிருந்து லேடீஸ் ஹேண்ட் பேக், கூலிங் கண்ணாடிகள் போன்ற பொருட்களை மலிவு விலைக்கு வரவழைத்து மொத்த வியாபாரம் செய்து வந்தாள். கடை பத்துக்கு பத்து அளவு தான். அதன் உள்ளேயே ஒரு சுழல் மாடிப்படி சின்னதாக மிக சின்னதாக இருக்கும். அதன் வழியே போனால் மாடியில் ஒரு 30க்கு பத்து சைஸ்ல குடோன்.

மஜீது வந்ததும் "சைனாகாரிக்கு கொஞ்சம் ஹேண்ட் பேக் லோடு வருது. அதை மாடில குடோன்ல ஏத்தனும். 100 திர்காம் தருவா. என்னை தனியா அண்லோட் பண்ண சொன்னா. நான் தான் நீங்க சும்மா தானே இருக்கீங்க. வந்து லைட்டா ஹெல்ப் பண்ணினா ஒரு பத்து நிமிஷம் 100 திர்காம்.. எனக்கு கூட எதும் வேண்டாம், நீங்களே பிரிச்சு எடுத்துகுங்க" என சொன்னான். அட பத்து நிமிஷத்துல 100 திர்காம். அப்படின்னா ஒரு மணி நேரத்துல 600 திர்காம். அப்படின்னா ஒரு நாளைக்கு 4800. அதை 13 ஆல பெறுக்கினா? அய்யோ சொக்கா ..ஷேக் முகமதுக்கு கூட இத்தன சம்பளம் வராதே.. எவன் மூட்டை தூக்குவதை பார்த்துட போறான். சரி போய் அதை எடுத்து வச்சுட்டு வந்துடுவோம் என கேணத்தனமா நான் தான் முதலில் நினைத்தேன்.

முனாஃப் காகா தலைமையில் நாங்க ஒரு 3 பேர் போனோம். முதலில் நான் போனதும் ஒரு ஹேண்ட் பேக்கை தூக்கி பார்த்தேன். "முனாஃப் காகா, இது சப்ப மேட்டரு. சட்டுபுட்டுன்னு தூக்கி கெடாசிட்டு "அப்பா கடை"யிலே லெக் பீஸ் வச்சு ஒரு பிரியானி அடிச்சுட்டு போவும்" என சொன்ன போது அவரும் சரின்னு சொன்னார். பின்னர் தான் தெரிந்தது. அந்த கடைக்கு பக்கத்தில் ஒரு பூட்டிய கடையின் வாசலில் ஒரு 20 ஃபீட் கண்டய்னர் நின்னுச்சு. அதிலே இருக்கும் சரக்கு எல்லாம் தான் மேலே அந்த சுழல் படி வழியா நாங்க தூக்கிட்டு போகனும்னு.

அந்த சைனாகாரி கிட்டே முனாஃப் காகா தான் பேரம் பேசினார். பேரம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சு 100 திர்காம்க்கு காண்டிராக்ட் ஓக்கே ஆச்சு. "அப்பா கடை"யிலே போய் ஒரு டீ குடித்து விட்டு வந்து கண்டெய்னர் ஒப்பன் செய்யும் போது அந்த சைனாகாரி கிட்டே ஒரு 3 பட்டான் வந்து நின்னான். அது வரை அந்த கண்டெய்னர் யாருதுன்னு தெரியாம அதன் எதிர்பக்க சாலையில் குரங்காட்டி மாதிரி குத்துகாலிட்டு உட்காந்து இருந்த அந்த 3 பேரும் அங்க வந்தானுங்க. பட்டான்னா எப்படிப்பட்ட பட்டான். நம்ம ஊர்ல தெருவிலே ஒரு கோவிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு போச்சுன்னா வருமே ஒரு மொச்சை வாடை அது போல வாடையுடன் அழுக்கு பட்டானின் அக்மார்க் (உள்ளாடை போடாத) குர்த்தா ஜிப்பாவிலே, பல் விளக்காத வாயிலே பச்சையான ஹெர்பல் உருண்டை நஸ்வாக் போட்டு அடக்கிகிட்டு சுத்தமான தார் ரோட்டிலே "புளிச்"ன்னு துப்பிகிட்டு இருக்கும் அக் மார்க் பட்டான். பாகிஸ்தான்லயே இவனுங்க கராச்சி, இஸ்லாமாபாத், பஞ்சாப், ஹைதராபாத் எல்லாம் இல்லை. சுத்தமான பெஷாவர். நஸ்வாக் போட்ட எச்சிலை இவன் வீட்டில் இருந்து டைட்டானிக் கேம் ஆடினா ஆப்கானிஸ்தான்ல இருக்கும் ஹமீத்கர்சாய் வீட்டு கக்கூஸ்ல விழும் அளவுக்கு பார்டர் பட்டான். உருது கூட ரொம்ப பேச தெரியாத புஷ்டாக் மட்டுமே பேசும் பட்டான். ஆறு அடிக்கு மேலே உயரம். முகத்திலே சுருள் சுருளான தாடிக்கு நடுவே தெரியும் ரோஸ்கலர் கன்ன மேடு, புறங்கையிலே கூட புசு புசுன்னு முடின்னு அந்த காலத்திலே இந்தியா மேல படை எடுத்த ஷெர்ஷாவுக்கு பேரன் மாதிரியான ஒரு தோற்றமுள்ள பட்டான்.

நம்ம ஆளுங்க அவன் ஆகிருதியை பார்த்து மனசுக்குள்ள பயந்தாலும் பயப்படாத மாதிரியே திட்டுவாங்க. யானைக்கு அதன் பலம் எப்படி தெரியாதோ அது போல அவனுங்களும் பயப்படுவானுங்க. அவனுங்க வந்ததும் "நாங்க இறக்கி தர்ரேம் 500 திர்காம் போதும். எங்களுக்கு இதை விட்டா பிழைப்பு எதும் இல்லை" என எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அந்த சைனாக்காரி 100 திர்காமுக்கு நாங்க ஒத்துகிட்ட காரணத்தால் அவனுங்களை உதாசீனப்படுத்தி அனுப்பி விட்டாள். அவனுங்க எங்களை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்து விட்டு திரும்பவும் பழைய படி எதிரே போய் குத்துகாலிட்டு பாம்பாட்டி மாதிரி உட்காந்து உருட்டிகிட்டு இருந்தானுங்க.
சரின்னு வேலையை ஆரம்பிக்கவேண்டி கண்டெய்னரை திறந்தா எல்லாம் கார்ட்டூன்ல இருந்துச்சு. முதல் காட்டூன் எடுக்கும் போதே நகர்த்த முடியலை. அத்தனை ஒரு கனம். நான் பொதுவாக செல் போனை கூட வெயிட் அதிகம்னு நினைப்பவன். மெதுவா இழுத்து தலையிலே வச்சா எங்க ஊர்ப்பக்கம் கரகம் (ஆடும் கரகம் இல்லை, அம்பாள் கரகம் செம வெயிட்டா இருக்கும்) தூக்கி தலையிலே வச்ச மாதிரி கழுத் து நரம்பு எல்லாம் புடைச்சுகிட்டு கண்ணு சிவந்து போயிடுச்சு. அந்த நேரம் பார்த்து எவனோ தெரிந்தவன் வந்ததால் மானமே போச்சேன்னு நினைச்சுகிட்டு அதை கடை வாசலில் தொப்புன்னு கீழே போட்டேன். அவன் கிட்டக்க வந்து "என்ன அண்ணே இதல்லாம்"ன்னு கேட்க "இந்த ஹோல்சேல் பிசினஸ்" ஆரம்பிச்சு இருக்கேன்"னு சொல்லவும் நான் கைகாட்டின இடத்திலே சீனாக்காரி வந்து நிற்கவும் சரியாக இருந்து தொலைத்தது. அவன் ஒரு மாதிரி பார்த்து கிட்டே போனான். என்ன என்ன புரளி கிளப்பி விடப்போறானோ என நினைத்து கொண்டே நிற்கையில் அடுத்த தெரிஞ்சவன் வந்தான்.

அடப்பாவிகளா எல்லா தெரிஞ்சவனும் இன்னிக்குன்னு பார்த்து இந்த பக்கம் தானா வரனும்? அவன் கிட்டே வந்ததும் நான் ரொம்ப ஜாக்கிரதையாக என் கையை காட்டும் திசையில் அந்த சீனாக்காரி இல்லாம பார்த்து " ஹோல் சேல் கடை ஆரம்பிச்சு இருக்கேன்" என சொல்ல அவன் "அப்படின்னா இந்த சீனாக்காரி யாரு?"ன்னு ரொம்ப ஆர்வமா கேட்க " சீனாக்காரியை வேலைக்கு வச்சிருக்கேன்" என சொன்னேன். சப்கா ரோட்டின் இந்த முனையில் " சீனாக்காரியை வேலைக்கு வச்சிருக்கீங்களா?" என சரியாக கேட்டவன் ரோட்டின் அந்த முனைக்கு போகும் போது கொஞ்சம் வார்த்தைகளை சிக்கனமாக்கி "அபிஅப்பா ஒரு சீனாக்கரிய வச்சிருக்காராம்"ன்னு சொல்லிகிட்டு போனான். அட தேவுடா! எல்லாம் என் நேரம்!

ஆச்சு ஒரு மணி நேரம். நாங்க 3 பேர் மற்றும் கடையிலே வேலை செய்யும் மஜீத் எல்லாம் சேர்த்து முக்கி முக்கி ஒரு 5 சதம் கூட அந்த கண்டய்னரில் காலி பண்ணவில்லை. அதுக்குள்ள எங்களுக்கு மயக்கம் கண்ணை இருட்டிகிட்டு வந்துச்சு. அப்பவும் எதிரே அந்த பட்டான்கள் குத்துகாலிட்டு எங்களையே பார்த்து கொண்டே இருக்க கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. நடு நடுவே டீ வேறு குடித்து பார்த்தோம். நான் மெதுவாக முனாஃப் காகாவிடம் போய் " காண்டிராக்ட் கட்டுபடி ஆகாது போலிருக்கு காகா, கொஞ்சம் ரைஸ் பண்ணுங்க" என சொன்னதும் சீனாக்காரியிடம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடந்துச்சு. அவ கன்னா பின்னான்னு சீன மொழியிலே திட்ட ஆரம்பிச்சா. அனேகமா எங்க அப்பத்தாவிலே ஆரம்பிச்சி எங்க வருங்கால பேத்தி பேரன் வரை திட்டியிருப்பா போலிருக்கு. ஒரு கட்டத்திலே அவ பேச்சின் அசிங்கம் அவ காதுக்கே பொறுக்காம தன் காதையே பொத்திகிட்டு திட்ட ஆரம்பிச்சான்னா பார்த்துகுங்க. ஆனா அவ குரல் வளம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அவ மட்டும் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாட்டை பாடினா வாணி ஜெயராம் தோத்தாங்க போங்க.

திரும்பவும் தூக்க ஆரம்பிச்சோம். முடியலை. சரி இனி கார்டூன் சரியா வராது. அதை ரோட்டிலேயே பிரிச்சு ஒரு பத்து பத்து பீஸாக கையிலே எடுத்து போவும்னு முடிவு பண்ணி அப்படி செஞ்சா அந்த சின்ன சுழல் மாடிப்படியிலே ஒரு 100 தடவை ஏறி இறங்கியதும் குருதி அழுத்தம் சும்மா கிர்ர்ர்ர்ன்னு ஏறுது. முனாஃப் காகா என்னிடம் கவலைப்படாதே. ஹேப்பி அவர்ஸ்ல ஆளுக்கு ரெண்டு பீர் வுட்டுகிட்டு போனா உடம்பு வலிக்காது என சொன்னார். அதாவது அங்க சுத்தி சுத்தி பார்கள் தான். பார் அழகிகள் இரவு 8 மணிக்கு வந்து ஆடும் முன்னதாக இருக்கும் நேரம் தான் ஹேப்பி அவர்ஸ். அப்ப போனா ஒரு பீர் அப்போ 8 திர்காம் தான். ஒரு கட்டத்தில் அந்த சுழல் மாடிப்படியில் வரிசையாக நாங்க நால்வரும் எஸ் வடிவில் மயங்கி விழ அந்த சீனாக்காரி வண்டி மாட்டுக்கு பின்னால நெருப்பு வைக்காத குறை தான். ஒரு வழியா மயக்கம் தீர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம். "சப் காண்டிராக்ட்" அதான் ஒரே வழி. எதிரே உட்காந்து இருக்கும் பட்டானிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அது வரை ஒரு கால்வாசிகூட காலியாகவில்லை. பட்டான்கள் வந்து ஒரு முறை பார்த்து விட்டு "ஓக்கே ஒரு 475 திர்காம் கொடுங்க" என கேட்ட போது அடப்பாவிங்களா 100 திர்காமுக்கு காண்டிராக்ட் எடுத்து 3 மணி நேரம் உழைத்து முடித்து 475க்கு சப்காண்டிராக்ட் தேவையா என நினைத்து மீண்டும் மயக்கம் ஆனோம்.

இனி சீனாக்காரி கால்ல விழ வேண்டியது தான் பாக்கி. விழுந்தோம். எங்களால முடியலை என கதறாத குறை தான். "வேலை செஞ்ச வரை காசு கொடு" என கேட்க அவ கொடுத்த அமவுண்ட் என்ன என்பதை இங்கே சொன்னா என்னை அடிங்க வருவீங்க. அதை வேண்டாம் என சொல்லிவிட்டு அங்கயே நின்னோம். அப்போது அந்த பட்டான்கள் மீண்டும் வந்தாங்க. சீனாக்காரி பேரம் பேசினா அவங்க கிட்டே. அவங்க இந்த தடவை 600 திர்காம் கேட்டாங்க. அவளுக்கு அவங்க மேல ஒரே கோவம். காச்சு மூச்சுன்னு கத்தினா. பின்னே ஒத்துகிட்டா. அவங்க முதல்ல கையிலே காசு குடுத்தா தான் ஏத்துவோம்ன்னு சொல்ல அதையும் குடுத்தா. நாங்க இப்ப ரோட்டுக்கு அந்த பக்கம் போய் பட்டான்கள் உட்காந்து வேடிக்கை பார்த்த இடத்தில் குத்துகாலிட்டு உட்காந்தோம். உலகம் உருண்டைன்னு அப்ப தான் புரிஞ்சுது.

ஒரு அரை மணி நேரம் தான். அந்த 3 பேரும் சும்மா பம்பரமா தலையிலே ஒரு கார்டூன், கையிலே ஒரு கார்டூன்னு குழந்தைகள் பொம்மையை தூக்கிகிட்டு போவது போல போய் எடுத்து வச்சாங்க. வேலை முடிஞ்சுது. எங்க கிட்டே வந்தாங்க. முனாஃப் காகா கையிலே 100 திர்காம் திணிச்சானுங்க. என்னவோ புஷ்டோ பாஷையிலே சொன்னாங்க. சிரிச்சுகிட்டே போயிட்டாங்க. அவங்க பேர் என்னன்னு கூட கேட்க தோன்றவில்லை. அனேகமா எதுனா பேருக்கு பின்னால கான் என்று முடியலாம். வாழ்க கான்! நாங்க ரொம்ப நேரம் அந்த பணத்தை பார்த்துகிட்டே நின்னோம். பக்கத்திலே ஒரு கடைக்கு அழைச்சுட்டு போனாரு முனாஃப் காகா. "சார் ஒரு அட்டை புரூபின் 400 பவர் குடுங்க" என கேட்டாரு!