பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 25, 2018

“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு!


  “மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு!

துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நேர்காணல் என்னும் விதமாக  தமிழகத்தின் நம் முன்னாள் பள்ளிக்கல்வி, நூலக மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த திரு. தங்கம் தென்னரசு அவர்களிடம் துக்ளர் வாசகர்கள் 5 பேரைக்கொண்டு ஒரு நேர்காணல் நடத்தி கடந்த இரண்டு இதழ்களாக வெளியிட்டது. அந்த இரண்டு இதழ்களின் ஒட்டு மொத்த தொகுப்பே இந்த பதிவு! கேட்கப்பட்ட அருமையான, சிக்கலான(துக்ளக் வாசகர்கள் அல்லவா... அதனால் சிக்கல்) கேள்விகளுக்கு கூட நம் முன்னாள் அமைச்சரும் இப்போதைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மற்றும்  விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான திரு தங்கம் தென்னரசு B.E., M.L.A அவர்கள் அனாயசமாக கேள்விகளை எதிர்கொண்ட விதமும், பதில் சொன்ன விதமும் எக்ஸலண்ட்!  இதோ அதை படியுங்கள்! - இப்படிக்கு அபிஅப்பா என்கிற தொல்காப்பியன். 



******************** இனி துக்ளக் இதழை படிப்போம்! (நன்றி: துக்ளக்)


வி.வி.ஐ.பி மீட் 14: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர், தற்போது திருச்சுழி தொகுதியின் எம்.எல்.ஏ ஆகவும் கட்சியில் மாவட்ட கழக செயலாளர் ஆகவும் இருந்து வருகின்றார். அவரை துக்ளக் வாசகர்கள் 5 பேர் சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் முக்கிய பகுதிகள் இங்கே! (இந்த வார வாசகர்கள் : டி. கீதா கிருஷ்ணன், தனியார் துறை, சென்னை, பத்மாரவி, இல்லத்தரசி, சென்னை, ரமேஷ் சீனிவாசன், மனித வள ஆலோசகர், சென்னை, பா.சுதா, பேராசிரியை, சேலம், பி. சுவாமிநாதன், தனியார் துறை, சென்னை)



சுவாமிநாதன் அரசியலுக்கு நீங்கள் வந்தது எப்படி? 

தங்கம் தென்னரசு: நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. நான் எந்த அரசியல் ஆர்வமும் இல்லாமல் மெக்கானிக்கல் இஞினியரிங் படித்து விட்டு ஸ்பிக் உர நிறுவனத்தில் ஏறத்தாழ பத்து வருடங்கள் பொறியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் 1996ல் தலைவர் கலைஞர் அவர்கள் அமைச்சரவையில் என்னுடைய தந்தை தங்கபாண்டியன் அமைச்சராக இருந்தார். தென் மாவட்டங்களில் ஏற்ப்பட்ட ஜாதிக்கலவரத்தை தீர்க்க என் தந்தை சென்றார். அந்த கலவரத்தின் போது ஏற்ப்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்ப்பட்டு ராஜபாளையத்தில் இறந்து விட்டார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தலைவர் கலைஞர் என்னை வேட்பாளராக அறிவித்தார். 1998ம் ஆண்டு அருப்புக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதன் முதலாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். 1977ல் இந்த தொகுதியில் தான் எம்.ஜி ஆர் போட்டியிட்டு வெற்றி பெற்று  முதல்வர் ஆனார்.  அருப்புக்கோட்டைக்கு அருகில் இருக்கும் ஊர் திருச்சுழி. ரமண மகரிஷி பிறந்த ஊர் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அருப்புக்கோட்டை தொகுதியை பிரித்து திருச்சுழி என்னும் தொகுதி உருவாக்கப்பட்டது. 2001 தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். 2006ல் மீண்டும் வெற்றி பெற்றேன். அப்போது கலைஞரின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்பொருள் துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றேன். 

பத்மாரவி: தற்போதைய ஆட்சி முறையில் நீட் தேர்வு கொண்டு வந்ததை  பற்றி உங்கள் கருத்து என்ன? 

தங்கம் தென்னரசு: நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. மேலெழுந்த வாரியாக எல்லோருக்கும் ஒரே தேர்வு, இதில் என்ன தவறு என்று கேட்கின்றார்கள். ஆனால் நம்முடைய அரசு பள்ளியில் படித்து விட்டு வரும் மாணவர்களின் கல்வி முறையும், ஐ பி எஸ் ஈ கல்வி முறையும் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். இப்படி இரு வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்க்கும் மாணவர்களை திடீரென்று ஒரே தேர்வின் கீழ் கொண்டு வருவது முறையாகவும் சரியாகவும் இருக்காது.

பத்மாரவி: மற்ற துறைகளுக்கும் இப்படிப்பட்ட நுழைவு தேர்வு முறை இருக்கின்றதே. மருத்துவம் என்பது மக்களின் உடல் மற்றும் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தேர்வு முறை கடினமாக இருப்பது சரிதானே? 

தங்கம்தென்னரசு : நீங்களே உடல்நிலை சார்ந்த விஷயம் என்று கூறுகின்றீர்கள். இந்த நீட் தேர்வு முறையால் ஆரம்பத்தில் இருந்தே சி பி எஸ் ஈ கல்வி முறையில் படித்த 15 சதவிகித வெளி மாநில மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறுகின்றார்கள். வரும் காலங்களில் இந்த மாநிலத்திலேயே அரசு மருத்துவ மணையிலேயே வேலையும் செய்வார்கள். எதிர்காலத்தில் இவர்களிடம் மருத்துவம் பார்க்கும் கிராமப்புற நோயாளிகள் மொழி தெரியாமல் எப்படி அவதிப்படுவார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மருத்துவராலும் நோயாளியின் உடல்நிலை பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ள முடியாது. இப்படி அடிப்படையில் மொழிப்பிரச்சனை என்பதே பெரிதாக இருக்கும். மீதி 85 சதவிகித தமிழக மாணவர்களில் எவ்வளவு கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

நீட் தேர்வில் வெற்றி பெற தனியார் கோச்சிங் வகுப்புகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் 2 முதல் 3 லட்சம் வரை கேட்கின்றார்கள்.  இதில் பணம் செலுத்தி படிக்கக்கூடிய பொருளாதார நிலையில் இருப்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.  நம்முடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசே நீட் பயிற்சி கொடுக்கும் என சொல்லி வருகின்றார். ஆனால் இன்று வரையிலும் எதுவுமே சரியாக இயங்கவில்லை. இப்போது +2 பொதுத்தேர்வும் நடந்து வருகின்றது. இதற்கு பிறகு பயிற்சி வகுப்புகள் தொடங்கினாலும் ஏப்ரல் மாதம் மட்டுமே அந்த மாணவர்கள் வகுப்புகளுக்கு வர முடியும். ஒரே மாத பயிற்சி எப்படி நீட் தேர்வை எதிர்கொள்ள போதுமானதாக இருக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பயிற்சி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் உரிய வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றார்களா? இந்த கேள்விகள் எதற்குமே இன்று வரை பதில் இல்லை. வெறும் அறிவிப்புகள் மட்டுமே போதுமா? பொதுவாக சம அளவு பலம் உள்ளவர்களை போட்டியில் மோதவிடுவது தானே நியாயம்? + 2 கேள்விகளை ஆறாம் வகுப்பு மாணவனிடம கேட்டு அவனை முன்னேற்றுகிறேன் என சொன்னால் அது எப்படி சரியாக இருக்கும்?

ரமேஷ்: சமச்சீர் கல்வி முறை வந்த பிறகு நிறைய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுகின்றார்கள். ஆனால் நீட் தேர்வு எழுதும் போது கடினமாக இருக்கின்றது என்று சொல்லும் போது நமது கல்வித்திட்டத்தின் தரம் குறைந்து இருப்பதை காட்டுகின்றதா? 

தங்கம் தென்னரசு: உச்சநீதிமன்றமே சமச்சீர் கல்வித்திட்டத்தில் எந்த இடத்திலும் தரம் குறையவில்லை என்று என்.சி.ஆர்.டி குழுவினால் ஆய்வு செய்து தீர்ப்பளித்துள்ளது. முன்பு பாடத்திட்டத்தில் இருக்கும் பதிலை மனப்பாடம் செய்து ஒப்பித்தால் மதிப்பெண் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் சமச்சீர் கல்வி முறையில் கேட்கப்படும் கேள்விகள் இருக்கும் பாடத்திட்டத்தில் அந்த மாணவன் என்ன புரிந்து கொண்டான் என்பதை மதிப்பீடு செய்வதாய் இருக்கின்றது. பாடங்களை முழுவ்துமாக சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே மாணவனால் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். இது தான் சமச்சீர் கல்வி முறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய மாற்றம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் தவறானது என்று கருத்து பரப்பப்பட்டதோடு அதன் உண்மையான நோக்கம் நிறைவேற விடாமல் தடுக்கப்பட்டது என்பதே உண்மை.

சுதா: கிராமப்புரங்களில் பெரும்பாலும் அரசு பள்ளிகள் மட்டுமே இருக்கும். அந்த பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை அணைவரும் தேர்ச்சி அடைகின்றார்கள். இப்படி 8ம் வகுப்பு வரை அந்த மாணவனின் உண்மையான தகுதியை மதிப்பீடு செய்யாமல் இருந்தால் அந்த மாணவனால் +2 முடிந்தவுடன் எப்படி மற்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்? 

தங்கம் தென்னரசு: இந்த பிரச்சனையை தீர்க்கத்தான், தொடக்கக்கல்வியில் செயல்வழி கல்வி முறை (Activity based learning) என்ர ஒன்றை கொண்டு வந்தோம். இந்த செயல்வழி கல்வி முறையில் அந்தந்த வயதிற்கான திறனை மாணவன் பெற்றிருந்தால் மட்டுமே மாணவன் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும். மேலும் குறைந்த மாணவர்களை அந்த வகுப்பு ஆசிரியர்கள் கண்டுபிடித்து அவர்களுடைய திறனை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்காக பிரதமர் விருதே நம் மாநிலத்துக்கு கிடைத்தது. இதனுடையை தொடர்ச்சியாக 6லிருந்து 8ம் வகுப்பு வரை (Active learning methodology) என்ற அந்த மாணவனின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் அவனை தயார் படுத்த வேண்டும் என்று கொண்டு வந்தோம். இந்த கல்வி முறையில் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. வெறும் தேர்வுகள் வைத்து மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதை விட இது போன்ற நடைமுறை செயல் தேர்வுகள் மூலம் அவர்களின் திறனை எடைபோட வேண்டும். 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் மட்டுமே ஒரு மாணவன் திறமையானவன் என்றும் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தால் அந்த மாணவனுக்கு திறன் இல்லை என்று சொல்ல வேண்டுமா? மூன்றில் ஒரு பங்காவது மதிப்பெண் பெற்றால் சிறிதளவுக்கு புரிதல் இருக்கின்றது என்ற எண்ணத்தில் தான் 35 மதிப்பெண் பெற்றால் வெற்றி என்று வைத்துள்ளோம். இந்த புதிய கல்வித்திட்டத்தில் ஆசிரியர்கள், கொஞ்சம் சிரமப்படுவதாக இருந்தால் கூட மக்களின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அமல் படுத்தினோம். நிறைய அரசுப்பள்ளிகள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வத்தினால் நல்ல முறையில் சாதனை புரிந்து வருகின்றனர்.

ரமேஷ்: சென்னையை பொறுத்தவரை அண்ணா நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய அடையாளமாக மாறிவிட்டது. இந்த நூலகம்  அமைந்ததில் உங்கள் பங்கு மிகப்பெரியது. இந்த நூலகம் அமைந்தது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் ஏதாவது இருக்கின்றதா?

தங்கம் தென்னரசு:  மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த நூலகத்தை கழக ஆட்சிக்காலத்தில் அமைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். இன்றும் 1000 நபர்களுக்கு குறையாமல் அங்கு வருகின்றார்கள். பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் இடமாக இந்த நூலகம் அமைந்தது எனக்கும் மகிழ்ச்சி தான். நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ராஜேந்திர சோழன் குறித்து ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்றேன். அந்த விழா சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்ததால் அந்த நூலகத்தை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதைப்பார்த்து அசந்து போனேன். அது போல உலகத்தரத்தில் ஒரு நூலகம் சென்னையில் அமைந்திட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் கலைஞரிடத்தில் தெரிவித்து இருந்தார். இதனை கருத்தில் கொண்ட தலைவர் கலைஞரின் எண்ணத்தில் உருப்பெற்றதே அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். பொதுவாகவே நம்முடைய நூலகத்தில் நம் நாட்டை பற்றிய நூல்களும் பெரும்பாலும் தமிழ் நூல்கள் மட்டும் இருக்கும் என்ற கருத்து பரவலாக எல்லோரிடத்திலும் இருந்தது. இதை மாற்றி உலகத்தில் இருக்கும் அனைத்து நூல்களையும் புத்தகமாகவோ, இனையத்தில் மூலமோ  பெற முடியும் என்ற நிலையை இந்த நூலகத்தில் உருவாக்க விரும்பினோம். சிறு குழந்தைகள், ஆராய்ச்சி மாணவர்கள், ஐ.ஏ.எஸ், எம்.பி.ஏ, சட்டப்படிப்பு என எல்லா வகையான மாணவர்களும் இதைப்பயன் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பலதரப்பட்ட புத்தகங்கள் வாங்கினோம். கிட்டத்தட்ட 5 லட்சம் புத்தகங்கள் வரை இந்த நூலகத்துக்காக வாங்கினோம். எல்லா மாநில மக்களுக்கான புத்தகங்களும் இங்கு இருக்கும். இணையத்தின் மூலமாக உலகத்தில் உள்ள அனைத்து நூலகத்தின் நூல்களையும் இங்கிருந்தே படிக்க முடியும். கால மாற்றத்திற்கு ஏற்ப அச்சு புத்தகங்களும்  இருக்கும். கணினியில் படிக்கக்கூடிய புத்தகங்களும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளுக்கு நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தினையும், புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தையும் கொண்டு வர வேண்டும் என்று குழந்தைகளுக்கென்றே தனியான பகுதியும் உருவாக்கினோம். குழந்தைகளை ஈர்த்து விட்டால் அவர்களது பெற்றோரும் இந்த நூலகத்தை பயன் படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பது எதார்த்தமான உண்மை. பொதுவாக நம்முடைய வீடுகளில் படிப்பதற்கென்று தனியான இடம் இருக்காது. தனிமையில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அவர்களுடைய புத்தகத்தை இங்கு கொண்டு வந்தும் படிக்க முடியும். பார்வையற்றோர் படிப்பதற்கு தகுந்த ப்ரெய்லி புத்தகங்களும் இங்கு இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் புத்தகங்களை படித்துக்கொள்ளலாம் என்ற நவீன தொழில்நுட்பம் இங்கு இருந்தாலும் நம்முடைய பழமையை போற்றும் விதத்தில் பழங்கால சுவடிகள்,  அரிய தமிழ் நூல்கள், பாரம்பரிய மூலிகை குறித்த நூல்களும் இங்கு கிடைக்கின்றன. இப்படி பழமையும், புதுமையும் கலந்த நூலகமாக இதை உருவாக்கினோம். நூலகம் என்பது தினமும் மக்கள் பயன்படுத்தும் இடமாகவும் இருக்க வேண்டும். எனவே நூல் வெளியீட்டு விழா போன்றவற்றை நடத்திக் கொள்ள  பெரிய அரங்கம் ஒன்றையும் உருவாக்கினோம். இதனால் நூலகத்துக்கு வரும் வழக்கம் இல்லாதவர்கள்கூட, இந்த விழாக்களுக்கு வரும் சமயங்களில் நூலகத்தை பார்க்கும் வாய்ப்பை பெறுவார்கள். புத்தகங்கள், மற்றும் அறிவார்ந்த விழாக்கள் நடப்பதற்காக மட்டுமே இந்த அரங்கங்கள் உருவாக்கப்பட்டன.

பிற்காலத்தில் அரசியல் காரணங்களால், இங்கு திருமண வரவேற்பு போன்றவையும் நடந்தது வேதனையானது. இப்படி உயர்ந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலகம், அர்சியல் காரணங்களால் மேம்படுத்தப்படாமல் இருந்தது. நீதிமன்றத்தின் தலையீட்டால் மட்டுமே இந்த நூலகம் மருத்துவமனையாக மாறாமல் இருக்கின்றது. அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் (Oriental Manuscripts Library) என்ற சுவடிகளுக்கான தனி நூலகம், சென்னை பல்கலை கழக வளாகத்தில் இருந்தது. இந்த நூலகத்தில் திருக்குறள், புறநாநூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றின் பழங்கால ஓலைச்சுவடிகள் இருக்கும். நான் அங்கு சென்று பார்த்த போது மோசமான நிலையில் இந்த அரியவகைச் சுவடிகளைப் பராமரித்து வைக்க சரியான இட வசதியில்லை. இவற்றையெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்கான அரசாணையும் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பிறப்பித்தோம். ஆனால் நான் ஏற்கனவே கூறியது போல அரசியல் காரணங்களால் அந்த சுவடிகள் பல ஆண்டுகள் அங்கேயே இருந்து விட்டு இப்போது தான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு இடம் பெயர்ந்துள்ளன.

கீதாகிருஷ்ணன்: 1998ல் முதன் முதலில் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். உங்களுடைய முதல் சட்டமன்ற பேச்சு எதைப்பற்றி இருந்தது?

தங்கம் தென்னரசு: முதன் முதலில் சட்டமன்றத்தில் பேசும் எல்லோருக்கும் இருக்கும் பயமும், தயக்கமும் எனக்கும் இருந்தது. எனினும் தலைவர் கலைஞர் அவர்களும், செயல்தலைவர் தளபதி அவர்களும் அழைத்து பாராட்டும் வகையில் என்னுடைய கன்னிப்பேச்சு இயற்கையாக அமைந்தது. அன்றைய பேச்சில் முக்கியமாக நான் வைத்த கோரிக்கை, என்னுடைய தொகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட காரியாபட்டி பகுதிக்கு தனி தாலுக்கா வேண்டும் என்பது தான். அது நிறைவேற்றப்பட்டது. அந்த மூன்றாண்டு காலத்தில் பள்ளிகள், சாலைகள், குடிநீர் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளைச் சட்டமன்ர உறுப்பினராக நிறைவேற்றினேன்.

சுவாமிநாதன்: கடந்த தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்தே நின்று ஜெயலலிதா வெற்றி பெற்றார்.  இன்றைய நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவை தவிர வேறெந்த கட்சியும் பலத்துடன் இல்லை. எனவே யாருடைய கூட்டணியும் இல்லாமல் திமுக தனித்தே  வெற்றி பெரும் என்பது என் கணிப்பு. நிலைமை இவ்வாறு இருக்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, போன்ற உதிரிக்கட்சிகளுடன் திமுகவுக்கு கூட்டணி தேவையா? கடந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தமைக்கு கூட கூட்டணிக்கட்சிகளே காரணம் என்பதை திமுக இன்னும் உணரவில்லையா?

தங்கம் தென்னரசு:  தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சி என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து 89 இடங்களில் வெற்றி பெற்றோம். 2000 ஓட்டிற்கும் குறைவான வித்யாசத்தில் தோற்ற தொகுதிகள் 30க்கும் மேலாக இருக்கும். எனவே திமுகவின் வலிமை என்பது குறையவில்லை. ஆனால் ஒரு போர்க்களத்துக்கு போகும் அரசன் தன் வழி, தன் எதிரி வழி, தன் துணை வழி, என்று எல்லாவற்றையும் பார்த்து தான் போர் வியூகம் வகுக்க வேண்டும். இதையேதான் அரசியலிலும் செய்ய வேண்டும். 1967ல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருந்தது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டன. தமிழ்நாடு மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டது. தமிழ் மொழிக்கான அங்கீகாரம் இல்லாமல் பிற மொழி ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது. இந்த காரணங்களினால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.

1967ல் தனித்து நின்று தேர்தலை சந்தித்தாலே வெற்றி பெறும் நிலையில் திமுக இருந்தது. ஆனாலும் அண்ணா தனக்கு நேரெதிரான ராஜாஜியை கூட்டணியில் வைத்துக் கொண்டார். பல்வேறு கட்சிகளை ஓரணியில் திரட்டி , ஒரு வலுவான கூட்டணி அமைத்து வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொண்டார். எனவே கூட்டணி என்பது தேர்தல் களத்தில் அவசியமான ஒன்று. ஜெயலலிதா கூட்டணி இல்லாமல் கடந்த தேர்தலை சந்தித்தார் என்று கூறுகின்றீர்கள். அவரும் கூட முதலில் கூட்டணிக்கு முயற்சி செய்தார். மக்கள் நலக்கூட்டணி  என்ற பெயரில் சில கட்சிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்க முடிவெடுத்த நிலையில் தான், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறும் என்பதை கணித்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தார். மக்கள் நலக்கூட்டணியால் திமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகள் அந்த கூட்டணிக்கு சென்று, கடந்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது. எனவே கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவதும், கூட்டணி அமைத்தும் வெற்றி பெறாமல் போவதும் அன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்த விஷயம். அத்தகைய ராஜதந்திரமான நடவடிக்கைகளை மிகச்சரியான வகையில் எங்கள் செயல் தலைவர் தளபதி அவர்கள் முன்னெடுப்பார்.


சுவாமிநாதன் :  திமுக என்பது எம்.ஜி.ஆர் போன்ற பெரிய தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த கட்சி. ரஜினி, கமல் போன்றவர்கள் வருகையால் உங்களுக்கு பாதிப்பு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? 

தங்கம் தென்னரசு:  நீங்களே சொன்னது போல் திமுக 1949ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கம். இந்த எழுபது வருட காலத்தில் திமுக சந்தித்த வெற்றிகள், தோல்விகள், சோதனைகள் ஏராளம். எமர்ஜென்சி போன்ற அடக்குமுறைகளையும் பார்த்த கட்சி. எம்.ஜி.ஆரை எதிர்த்து 13 வருடங்கள் ஆட்சி பொறுப்பில் இல்லாமல் இருந்து,  மீண்டும் ஆட்சியை பிடித்த கட்சி. கலைஞருடைய அரசியல் நேரு காலத்தில் தொடங்கியது. இன்றைய தலைவர்களும் அவரை சந்திக்கும் அளவில் செல்வாக்கான தலைவராக இன்றும் கலைஞர் இருக்கின்றார். பாஜக, காங்கிரஸ், என்று இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான கட்சிகள் ஒரு காலத்தில் திமுகவை எதிர்த்தும், ஆதரித்தும் அரசியல் செய்தவை தான். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து விடலாம். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் எல்லோருடைய இலக்கும் திமுகவாகக்கூட இருக்கலாம். “மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம்” என்பது போல மிகப்பெரிய கட்சியான திமுகவை எதிர்ப்பது புதிய கட்சிகளுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். இதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

பத்மாரவி: தமிழகத்தில் இருப்பதிலேயே பலமான கட்சியாக திமுக இருக்கின்றது. ஆனாலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் இடைத்தேர்தலில் உங்களை எதிர்த்து வெற்றிபெற முடிகின்றது. கமல் கட்சி,  ரஜினி கட்சி என்று புதுப்புது கட்சிகள் வருகின்றன. அதிமுக பிளவு பட்டுள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலில் உங்கள் பிரதான எதிரி யார்?  

தங்கம் தென்னரசு: கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதாவே சவால் விட்டல்  நிலையில் தான் இதுவ்ரை இல்லாத வகையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களாக 89 பேர் அவருக்கு எதிரில் வந்து அமர்ந்தோம். அது தளபதியாரின் சாதனை. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையில் எதிர்க்கட்சி அமைந்த வரலாறு இல்லை. எங்களைப் பொறுத்த வரை ஆளும் கட்சி தான் எங்களுடைய அரசியல் எதிரி. எதிர்கட்சியாக இருந்து, ஆளும் கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்வோம். ஆளும் கட்சி தான் தமிழகத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பானவர்கள். அவர்களின் நிர்வாகத்தில் தவறு இருந்தால் அதை  சுட்டிக்காட்டி அதை கண்டிக்கும் இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். சட்டமன்றத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து மட்டுமே பேசமுடியும்.அங்கு சென்று கமல், ரஜினி குறித்து பேசுவது சரியாக இருக்காது. அரசியலுக்கு பலர் வரலாம். தேர்தல் காலத்தில் யாருடைய கூட்டணியில்  யார் இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து, எங்களுடைய எதிர்ப்பு நிலை இருக்கும். எனவே இன்றைய நிலையில் எங்களுடைய எதிர்ப்பு என்பது சட்டமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் ஆளும் கட்சியை எதிர்ப்பது மட்டுமே பிரதானமாக இருக்கும்.

சுதா:  புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் உங்கள் தலைவர் கலைஞரை வந்து பார்த்து ஆசி பெற்று செல்வது,  உங்களுக்கு பெருமையாக இருக்கின்றதா? எரிச்சலாக இருக்கின்றதா?  

தங்கம் தென்னரசு:  புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் என்று மட்டும் இல்லை. கடந்த காலங்களில் சித்தாந்த ரீதியாக நேரெதிரான கருத்து கொண்ட ராமகோபாலன் கூட, கலைஞரை சந்தித்து விட்டுச் சென்றிருக்கின்றார். சமீபத்தில் பிரதமர் மோடி கலைஞரை சந்தித்ததும், அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதை காரணமாகத்தான். இன்றைக்கும் பாஜகவின் கொள்கைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனாலும் தலைவர் கலைஞர் அவர்களை தன்னுடன் வந்து பிரதமர் இல்லத்தில் தங்குமாறு ஒரு பிரதமர் அழைக்கின்றார் என்றால், இது அரசியலை தாண்டிய மரியாதை, பாசம் அல்லவா? இது போன்ற மரியாதை மற்றும் நட்புணர்வு, புதிதாக கட்சி ஆரம்பித்த நண்பர்களுக்கும் கலைஞருடன் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. எனவே மரியாதை நிமித்தமான இந்த சந்திப்புகளினால் நாங்கள் பெருமைதான் அடைவோமே தவிர, இதில் எரிச்சல் அடைய எதுவுமே இல்லை. அரசியல் களத்தில் யாரையும் சந்திக்கும் திறன் திமுகவுக்கு உண்டு.

பத்மாரவி: சமீபத்தில் போக்குவரத்து கழகங்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் திமுகவின் தூண்டுதல் இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? 

தங்கம் தென்னரசு: இதில் தூண்டுதல் எல்லாம் இல்லை. அவர்களுடைய உரிமையை அவர்கள் கேட்டார்கள். திமுகவின் தூண்டுதல் என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் போராட வேண்டும்? மக்கள் மத்தியில் தவறான கருத்தை உருவாக்கச் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் பணி ஓய்வுக்கு பின்னர் கொடுக்க வேண்டிய ஓய்வூதிய நிதியைப் பல ஆண்டுகளாக கொடுக்கவில்லை. இதனால் எத்தனை குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது? திருமணம், மேல்படிப்பு  போன்ற விஷயங்களை செய்ய முடியாமல் தவித்த குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை? இவற்றை எல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு ஒரு எதிர்கட்சிக்கு உள்ளது. இதற்காக ஜனநாயக முறைப்படி ஒரு போராட்டத்தை திமுக முன்னெடுத்தால் அரசுக்கு எதிராக தூண்டி விடுகின்றோம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் ஆளும் கட்சியைத்தவிர அனைத்து கட்சிகளுமே பங்கெடுத்தன. என்றுமே மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திமுக முன் நிற்கும்.

சுதா: குலத்தொழில் கல்வியை கொண்டு வந்தால் என்ன தவறு? இன்று விவசாயம் செய்வதற்கு ஆட்கள் இல்லை. நவீன தொழில்நுட்ப வழிகளைக் கொண்டு எல்லா குலத்தொழிலையும் முன்னேற்றி, குலத்தொழில் கல்வியின் மூலம் எல்லாத் தொழில்களையும் நலிவுறாமல் காப்பாற்ற முடியுமே? 

தங்கம் தென்னரசு: குலக்கல்வித்திட்டம் என்பது ஆபத்தானது. இந்தக் குலத்தொழில் வேறுபாட்டை களையவே பல தலைவர்கள், பலகாலம் போராடினார்கள். திரும்பவும் அது போன்ற நிலைக்குச்செல்ல வேண்டும் என்ற நினைப்பே தவறானது. முடி திருத்தும் குலத்தில் பிறந்த மாணவன் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வருவதை, இந்த குலக்கல்வித்திட்டம் தடுக்கும். பல்வேறு தொழில்கள் அழியாமல் பாது காப்பதற்காக என்று காரணம் சொன்னாலும் கூட, குலக்கல்வி திட்டம் என்பது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிட்டத்தட்ட இந்த கொள்கையின் வெளிப்பாடாகவே மத்திய அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கை இருக்கிறது. படிக்கும் மாணவர்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு தொழில் கல்வியைப் பயில வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இந்த ஆபத்து எங்கு வரும் என்றால், எட்டாவது வரை ஒன்றாக படித்த மாணவர்கள், அதற்கு பிறகு குலக்கல்வி  என்ற வகையில் பிரிக்கப்படுவார்கள். ஒரு மாணவனுக்கு தொழில் கல்வி தேவை என்பதில் எங்களுக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. அதை ஏன் எட்டாம் வகுப்பிலேயே கொண்டு வந்து, இந்த மாணவனுக்கு இது தான் வரும் என்று முத்திரை குத்துவது போல செய்ய வேண்டும்? எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு சென்று படிக்கட்டும். அதன் பின்னர் அவர்களுக்கு தொழிற்கல்வியை கொடுக்கலாமே? குலக்கல்வி திட்டத்தினால் மாணவனுடைய மேற்படிப்பு கனவு நிறைவேறாமல் போவதைத்தவிர, வேறு நன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த காரணத்தினால் தான் அன்றும், இன்றும், என்றும் நாங்கள் குலக்கல்வி என்ற முடிவை நாங்கள் எதிர்த்து வருகின்றோம்.

அந்த காலத்தில் மாணவர்களின் பாடப்புத்தகத்திலேயே “ன்” விகுதி போட்டுச் சில தொழில் செய்பவர்களை குறிப்பிட்டார்கள். அவர்கள் நிலை கீழானது என்ற எண்ணம் வரும் வகையில் பாடப்புத்தகங்கள் இருந்தன. காமராஜ் ஆட்சிக்காலத்தில் இதைச் சட்டமன்றத்திலேயே தலைவர் கலைஞர் சுட்டிக்காட்டி பாடப்புத்தகத்தில் இருந்தே அதை நீக்கும் படி செய்தார். நம்முடைய தலைவர்களுக்கு இது ஆபத்தானது என்பது தெரிந்ததால் தான் அதை நீக்கினார்கள். குலக்கல்விக்கு ஆதரவளிக்கும் கல்விக்கொள்கையை நான் சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். அந்த சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.

சுதா: சில மாணவர்களுக்கு எல்லா பாடங்களையும் படித்து வெற்றி பெறுவது கடினமாக இருக்கின்றது. அவர்களுக்கு எந்த துறையில் செல்ல ஆர்வம் இருக்கின்றதோ அதற்கான பாடத்தை மட்டும் படிப்பது சரியாகத்தானே இருக்கும்? 

தங்கம் தென்னரசு: இவர்களுக்கு 11ம் வகுப்பில் தேவையான படிப்பை தேர்வு செய்து  கொள்ளும் வசதி இருக்கிறதே? அடிப்படையான சில பாடங்களை, மாணவர்கள் படிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஒரு மாணவனுக்கு கணிதம் வரவில்லை என்று அந்த பாடத்தை படிக்காமல் இருந்தால் நடைமுறை வாழ்க்கையில் பண வரவு - செலவுகளை அவனால் எப்படி பார்க்க முடியும்?

சுதா: கிராமப்புரங்களில் இருந்து  படித்து வரும் மாணவர்களுக்குக் கல்லூரியில்  சேர்ந்த பிறகும் தங்களுடைய பெயர்ரைக்கூட ஆங்கிலத்தில் எழுதத்தெரியவில்லை. இது நம்முடைய கல்வி முறையின் தோல்வியா? அல்லது ஆசிரியர்களின் தோல்வியா? 

தங்கம் தென்னரசு:ஆங்கிலத்தில் மாணவனுக்கு பெயரைக்கூட எழுதத்தெரியவில்லை  என்பதற்கு கல்வி முறையை குறை சொல்லுவதை விட, சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கவ்னக்குறைவே காரணம் என்று சொல்ல வேண்டும். இதற்கு ஆசிரியர்களின் தரத்தை மட்டும் பார்க்காமல், அந்த மாணவனின் குடும்பம் மற்றும் சமுதாய சூழலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். படிக்காத பெற்றோர் என்றால் அந்த மாணவனின் நிலை கடினமாகத்தான் இருக்கும். நான் என்னுடைய அடிப்படை கல்வியை அரசு பள்ளிகளில் தான் படித்தேன். என்னுடைய இந்த நிலைக்கு என் ஆசிரியர்கள் தான் காரணம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எந்தத்திட்டம் கொண்டு வந்தாலும் கடைசியில் அந்த ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு எப்படி சொல்லித்தருகின்றார்  என்பதில் தான் அத்திட்டத்தின் வெற்றி - தோல்வி அமையும். சிறு வயதில் பெரும்பாலான நேரத்தை மாணவர்கள் ஆசிரியர்களுடன் தான் கழிக்கிறார்கள். எனவே அவர்களை சரியாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு தான் அதிகம்.

ரமேஷ்: திமுகவின் வளர்ச்சிக்கு அந்த காலத்தில் நாத்திகம், ஹிந்தி எதிர்ப்பு எல்லாம் உதவின. இன்றைக்கும் அவற்றை வைத்துக் கொண்டு கட்சியை வளர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா? 

தங்கம் தென்னரசு:  திமுகவின் கொள்கை “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது தான். தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி கொண்டு பிளப்பது எந்நாளோ என்று எங்களுடைய தலைவர்கள் சொன்னதாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். எந்த காலத்தில் எந்த இடத்தில் அண்ணா இப்படி சொன்னார்? எந்நாளும் ஒருவருடைய தனிப்பட்ட இறை நம்பிக்கையில் நாங்கள் தலையிட்டதில்லை.

ரமேஷ்: ராமர் எந்த கல்லூரியில் இஞ்ஜினியரிங் படித்தார் என்று கேட்டது, தனிப்பட்ட மத நம்பிக்கையில் தலையிட்டது போல் ஆகாதா?

தங்கம் தென்னரசு: இதை உங்களுடைய இறை நம்பிக்கையை இழிவு செய்வதற்காக கேட்கவில்லை. சேது சமுத்திர கால்வாய்த்திட்டப் பிரச்சனையின் போது, பிரச்சனையின் அடிப்படையில் கேட்கப்பட்டது. உண்மையில் திமுக ஆட்சியில் இருக்கும் போது தான் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்குகள் நடைபெற்றன. திருவாரூரில் ஓடாத கோவில் தேரைச்செப்பனிட்டு ஓட வைத்தது எங்கள் ஆட்சியில் தான். தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை அரசாங்க விழாவாக கொண்டாடியதும் நாங்கள் தான்.

ரமேஷ்: அரசியலில் நாத்திகம் பேசினாலும், திமுக தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோவிலுக்கு செல்வதைத் தடுக்க முடியவில்லையே? அது போல் ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டே குடும்ப உறுப்பினர்கள் ஹிந்தி படிப்பதைத் தடுக்க முடியவில்லையே?

தங்கம் தென்னரசு: மீண்டும் கூறுகின்றேன். யாருடைய இறை நம்பிக்கைகளிலும் நாங்கள் இதுவரை தலையிட்டதில்லை. அதுபோல் எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் தெய்வங்களை வழிபடும் விஷயத்திலும் நாங்கள் தலையிடுவதில்லை. என்றைக்கும் ஹிந்தி என்ற மொழிக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. கட்டாய ஹிந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்தோம். எதிர்க்கிறோம், எதிர்ப்போம்.

சுவாமிநாதன்: ஒரு காலத்தில் மாவட்டம் தோறும் கட்சிப் பொதுக்கூட்டங்களை நடத்தி, சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு மக்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்த கட்சி திமுக. இப்போதெல்லாம் தொலைக்காட்சி விவாத மேடைகளில் யார் யாரோ வந்து பேசுகிறார்கள். இது திமுகவுக்கு பின்னடைவு இல்லையா? 

தங்கம் தென்னரசு: காலத்திற்கேற்ற மாற்றங்களை திமுக உள்வாங்கி வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் திமுகவின் மாலை நேரப் பொதுக்கூட்டங்கள் மாலை நேரப் பல்கலைகழகம்  என்று அழைக்கப்பட்டன. அன்றைக்கு பொதுக்கூட்டங்கள் மூலமாக மட்டுமே நம்முடைய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலை இருந்தது. இன்றைக்கு தகவல் தொடர்பு வளர்ந்து விட்ட காரணத்தால் பொதுக்கூட்டங்களின் தேவை குறைந்து விட்டது. பொதுக்கூட்டங்களில் பேசுவதைப்போல் சட்டமன்றத்திலோ, தொலைக்காட்சி விவாதங்களிலோ பேச முடியாது. எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து வைத்துத்தான் விவாதங்களில் பேசுகின்றார்கள்.

கீதாகிருஷ்ணன்: நீங்கள்  அமைச்சராக இருந்த காலத்தில் உலக செம்மொழி தமிழ் மாநாடு நடத்தினீர்கள். அதில் சமய இலக்கியங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. சீறாப்புராணம், இரட்சண்ய யாத்ரிகம், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் இல்லாத சங்கத்தமிழை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாத பின்னனி என்ன?

தங்கம் தென்னரசு: உலகத்தமிழ் மாநாடு நடத்தும் போதுசமய இலக்கியங்களை விட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவை தவிர்க்கப்படவில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களும், நாயன்மார்களின் தேவாரமும், தமிழுக்கு கிடைத்த அருட்கொடை என்பதில் சந்தேகம் இல்லை. அது போலவே சீறாப்புராணமும், இரட்சண்ய யாத்ரீகமும். தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினால் தமிழ் பக்தி இலக்கியத்தை விட்டு விட்டு யாராலும் எழுத முடியாது. நாலாயிர திவ்ய பிரபந்தம், திராவிட வேதம் என்று அழைக்கப்பட்ட ஒன்று. கம்பராமாயணம் முழுவதும் ராமாவதாரத்தைப் பற்றியது. ஆனால் அது மிகப்பெரிய தமிழ் இலக்கியம் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆய்வு மையங்களில் ஆய்வாளர்கள் எதைத்தேர்வு செய்கிறார்கள் என்பது அவர்களை பொறுத்த விஷயம். அதில் அரசின் தலையீடோ, அரசியலோ கிடையாது. மேலும் இந்த ஆய்வு, ஒட்டு மொத்தமாக தமிழ் மொழி அடைந்த வளர்ச்சியையும், கடந்து வந்த பாதையையும் பற்றியது. தமிழ் பிராமி எழுத்து முறையில் ஆரம்பித்து, இலக்கியம் சோழர்காலம் என்று இன்றைய பின்நவீனத்துவ இலக்கியங்கள் வரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. எனவே மற்ற இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதல்ல எங்கள் எண்ணம்.

கீதாகிருஷ்ணன்: ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன

தங்கம் தென்னரசு: ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார். ஜனநாயக நாட்டில் அவருக்கு அந்த உரிமை உள்ளது. அவர் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தால் , திமுகவும் அதை அரசியல் ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறது.

பத்மாரவி: கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒரே ஒரு சதவிகித வாக்கு வித்யாசத்தில் தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உங்கள் கட்சி இழந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு தோல்வியடைந்ததை எப்படிப் பார்க்கின்றீர்கள்? திமுகவின் தேய்மானமாக இதைப் பார்க்கலாமா? 

தங்கம்தென்னரசு: இடைத்தேர்தல் முடிவிலும், பொதுத்தேர்தல் முடிவிலும், வீக்கத்துக்கும், வளர்ச்சிக்குமான வித்யாசம் உள்ளது. அந்த இடைத்தேர்தல் முடிவு என்பது ஒரு வீக்கம். அதை வளர்ச்சியாக பார்க்க முடியாது. இடைத்தேர்தல் முடிவுகள் எந்த நாளும் பொதுத்தேர்தல் முடிவுகளை பாதிக்காது. இடைத்தேர்தலுக்கு என்றே சில கூறுகளும், பண்பாடுகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து 3 வது இடத்துக்கு போன அதிமுக அடுத்து வந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த எல்லா  இடைத் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தோம். குறிப்பாக சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தோம். ஆனால் கடந்த 2016 பொதுத்தேர்தலில் 89 இடங்களில் வெற்றி பெற்று வெறும் 1 சதவிகித வாக்கி வித்யாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தோம். இந்த 1 சதம் வாக்கு வித்யாசம் கூட ஆளும் கட்சிக்கு எதிராக உருவான மற்றொறு கூட்டணியால் ஏற்ப்பட்ட வாக்கு சிதறல்கள் காரணமாக அமைந்தது. எனவே இடைத்தேர்தல் தோல்வியை ஒரு அளவுகோலாக வைத்துப் பார்க்க முடியாது. அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்!

****************** நன்றி: துக்ளக்


March 29, 2018

காவிரி மேலாண்மை வாரியம் தருகின்றீர்களா? அல்லது சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தான் உங்கள் விருப்பமா?


காவிரி மேலாண்மை வாரியம் தருகின்றீர்களா? அல்லது சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தான் உங்கள் விருப்பமா? 


நம் அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி. கிட்டத்தட்ட 56 ஆண்டுகளுக்கு முன்பாக நம் திமுகவின் நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் திமுகவின் அடிவேர் கொள்கையான “திராவிட நாடு” என்னும் கொள்கையை 1962ம் ஆண்டு அக்டோபர் மாதம், வேலூர் சிறையில் இருந்து வெளி வந்ததும் கைவிட்டார். அப்போது அண்ணா அவர்களை பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்கவில்லை. செயற்குழுவை கூட்டி ஆலோசிக்கவில்லை. கட்சியின் முக்கிய முன்னோடிகளை கலந்தாலோசிக்கவில்லை. அவசர அவசரமாக ஆனால் தீர்க்கமாக முடிவெடுத்து அதை அறிவித்தார். அப்போது திமுகவில் இது பற்றி எவ்வித முனகல்களும் கூட கேட்கவில்லை. சிறந்த அறிஞர் அண்ணா அவர்கள் எதை செய்தாலும் அது கட்சிக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும் செயலாகவே அமையும் என நம்பினார்கள். தலைமையின் மீது அதீத நம்பிக்கையுடன் அண்ணாவின் அந்த திராவிட நாடு கொள்கையை கைகழுவியதை ஏற்றுக் கொண்டனர்.

அண்ணா அந்த திராவிட நாடு கொள்கையை கை கழுவ காரணம் ... இந்திய சீன போர் நேரம் அது. அந்த நேரத்தில் நாம் இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில் மத்திய ஆளும் காங்கிரசுக்கு எவ்வித நெருக்கடியும், குடைச்சலையும் கொடுக்கக்கூடாது என்கிற மனோபாவம். அடுத்து அந்த நேரத்தில் மத்திய அரசு “பிரிவினைவாத தடைச்சட்டம்” கொண்டு வந்திருந்தது மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சி. அதன் படி மிக சுலபமாக திமுக என்னும் இயக்கத்தையே தடை செய்து விட இயலும். அப்படி நடந்தால் என்ன ஆகியிருக்கும். தமிழகத்தில் திமுகவில் இருந்த இளைஞர்கள்  தீவிரவாத புரட்சிப்பாதைக்கு திரும்பியிருக்கக்கூடும். அது வெற்றி பெற்றால் திராவிட நாடு கிட்டும். ஒருவேளை மிருக பலத்துடன் இருக்கும் இந்தியா என்னும் தேசத்தை எதிர்த்து நிற்கும் போது தோல்வி கண்டால் என்ன ஆகும். அந்த தீவிரவாதப்போர் என்பது பாரத யுத்தம் போல 16 நாட்களில் முடியும் சமாச்சாரமாக இருந்திருக்காது. அது பல ஆண்டுகள் நடந்து பின்னர் தான் ஒரு முடிவை எட்டியிருக்க இயலும். தமிழகம் பாழ்பட்டு போயிருக்கும். இனப்படுகொலை கூட சாத்தியமாகிப்போயிருக்கும். தமிழர்கள் கனடா, அமரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நாடோடிகளாக திரிந்து அடிமை வாழ்வு வாந்திருப்பர். பல தலைமுறை தமிழர்கள் ஆண்களை இழந்து மிஞ்சி இருக்கும் தமிழச்சிகள் சின்னாபின்னமாக்கப்பட்டு தமிழ் கலாச்சாரம் இல்லாமல் ஆனால் தமிழச்சிகளுக்கு தகாத முறையில் பிறந்த பிள்ளைகளாக அப்பன் பெயர் தெரியாத இனமாக ஆகியிருக்கும். திராவிட நாட்டை வென்று விட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் சேதாரங்கள் என்பது கற்பனை செய்து கூட பார்க்க இயலாத நிலையில் இருந்திருக்கும். அதன் பின்னர் திராவிட நாட்டை கட்டியெழுப்ப பெரும் பொருளாதார சரிவை சந்திக்க வேண்டியிருக்கும். அண்ணா யோசித்தார். கொஞ்சமும் வெட்கப்படாமல் “திராவிட நாடு” கோரிக்கையை கைவிட்டார். ஆனால் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டினார்.

“வீடு இருந்தால் தான் ஓடு மாற்ற இயலும். நாடு இருந்தால் தான் கட்சி நடத்த முடியும்”  எனவே திராவிட நாடு கொள்கையை கைவிடுகின்றோம். ஆனால் “மாநில சுயாட்சி”யை பலமாக கோருகின்றோம். மத்திய அரசின் குறைகளை இப்போது பேச வேண்டாம் தோழர்களே! மணமேடையில் அமர்ந்திருக்கின்றோம். தாலி கட்டும் வேலையை இப்போது பார்ப்போம். மணப்பெண் கழுத்தில் இருக்கும் மச்சங்களின் எண்ணிக்கை பற்றி இப்போது சிந்திக்க வேண்டாம். மச்சங்கள் எண்ணிக்கையை அதற்கான நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று தோழர்களே....திராவிட நாடு கோரிக்கையை நாம் இப்போது கைவிட்டோமே தவிர்த்து, அந்த கோரிக்கைக்கான காரணங்கள் இன்னமும் அப்படியேத்தான் இருக்கின்றன”என்றார். 

அண்ணாவை கோழை, பயந்தாங்கொளி ஒரு சட்டத்தை பார்த்து தன் கொள்கையையே காற்றில் விட்டவர் என பழிக்காத பத்திரிக்கைகளே இல்லை எனலாம் அந்த 1962ல். அத்தனை ஏன்??? இதை பாராட்டி தேச ஒற்றுமைக்கு தோள்கொடுத்த அண்ணாவை தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய காங்கிரசே கேலி பேசியது கொடுமை எனில், இரட்டை குழல் துப்பாக்கியில் ஒன்றான திராவிடர் கழகம் எள்ளி நகையாடியது அந்த “கண்ணீர் துளி பாய்ஸ்களை” பார்த்து. ஆனால் அண்ணா அவர்களோ தேச ஒற்றுமைக்காக சீனப்போருக்கு நிதி திரட்டி மத்திய அரசுக்கு தருவதில் மும்மரமானார்.

ஆக திமுகவின் தேசிய பார்வை என்பது விசாலமானது. இந்த கட்டுரைக்கு முன்னுரை மட்டுமே இது வரை எழுதியவை. இப்போது தான் கட்டுரையின் சாராம்சத்துக்கே வருகின்றேன்.

அண்ணா அவர்கள் மேற்படி “திராவிட நாடு” கொள்கையை கைவிட்டு சுமார் 56 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அண்ணா சொன்னது போல “திராவிட நாடு கோரிக்கைக்கான காரணிகள் இன்னமும் அப்படியே தான் உள்ளது என சொன்னாரே... இதோ ஆயிற்று 56 ஆண்டுகள். அதில் கொஞ்சமாவது மாறியுள்ளதா என்பதற்கான பதில் தான் இன்று 29.03.2018 மாலை 5.00 மணிக்கு மத்திய பாஜக அரசு உணர்த்தியுள்ளது.




நம் நாட்டின் உச்சபட்ச சட்ட எல்லை என்பது உச்சநீதிமன்றம் தான். ஆளானப்பட்ட ஜனாதிபதிக்கே பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் தகுதி கொண்டவர் இந்திய நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே ஆவார். கடைக்கோடி இந்தியனுக்கும் கடைசி நம்பிக்கை என்பது உச்சநீதிமன்றமே என்னும் நிலை தான் இந்தியாவின் நிர்வாணமான உண்மை. தமிழ்நாட்டின் தென்பகுதி கடைக்கோடி மாநிலங்களான கர்நாடகாவும், தமிழ்நாடும் பல ஆண்டுகளாக இந்த காவிரி நீர் பிரச்சனையில் சண்டை போடுவதை நிறுத்தவே இல்லை. சமாதானம் செய்து வைக்க வேண்டிய மத்திய அரசோ, அப்போதைய சூழலுக்கு ஏற்ப இந்த இரண்டில் எந்த பகுதியில் இருந்து தமக்கு அதிக எம்.பிக்கள் வருவார்கள் என்பதையே “நியாய தராசாக” வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். 1967ல் அண்ணா அவர்கள் போட்ட பிராந்திய அஸ்திவாரம் என்பது மிகப்பலம் என்பதால் இதோ இன்றைக்கு 2018 வரை கூட தேசிய கட்சிகள் இங்கே நுழையவோ அல்லது காலூன்றவோ இயலா நிலை. அப்படியே அவர்களுக்கு இங்கே ஒரு பிடிப்பு ஏற்படின் கூட ஏதாவது ஒரு பிராந்திய கட்சியின் முதுகு தான் தேவைப்படுகின்றது. திமுகவும், அதிமுகவும் மிக புத்திசாலித்தனமாக “உங்களை தூக்கி சுமக்கத்தயார் தமிழகத்தில். ஆனால் மத்தியில் எங்களுக்கு முதல் பந்தியில் உரிய மரியாதையுடன் தான் சாப்பாடு. அதிகாரத்தில் பங்கும் எங்களுக்கு கண்டிப்பாக உண்டு ” என சொல்லி சொல்லி தான் சுமந்தன எனில் அது பொய்யில்லை. அதிமுக மத்திய அமைச்சரவையில் எட்மண்ட், பாலாபழனூர் என தொடங்கி தம்பி துரையை பாராளுமன்ற துணை சபாநாயகர் என கொண்டு வந்தது வரை, அது போல திமுகவோ முரசொலி மாறன் தொடங்கி மத்தியில் பல கேபினட் அமைச்சர்கள், இணை, துணை அமைச்சர்கள் என முக்கிய துறைகளான வர்த்தகம், தொலை தொடர்பு, இராணுவம், மருத்துவம், ஜவுளி, உரம், நெடுஞ்சாலை, கப்பல், சுற்றுச்சூழல் என தொடாத துறைகளே இல்லை என்னும் அளவு அதிகார பகிர்வில் தன்னை இணைத்துக் கொண்டு மத்தியிலும் கூட்டாட்சியாக இருந்தது. கூட்டணி ஆட்சியாக இருந்தது. மாநிலத்தில் கூட மைனாரிட்டியாக திமுக இருந்த போது கூட காங்கிரசை வெளியில் இருந்து ஆதரிக்க சொன்னதே தவிர்த்து மாநில மந்திரிசபையில் உள்நுழைக்கவில்லை என்பதில் இருந்து ஒன்று விளங்கும். அதாவது மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி என்னும் அண்ணாவின் கோட்பாட்டை திமுக, அதிமுக ஆகியவை கடைசி வரை விடவில்லை. (நான் இங்கே திமுகவோடு அதிமுகவை சேர்த்து சேர்த்து இழுத்து வருகின்றேன் எனில் காரணம் உண்டு. அதிமுக என்பது இரண்டு சகாப்தங்கள் மட்டுமே. எம் ஜி ஆர் சகாப்தம், அடுத்து ஜெயலலிதா சகாப்தம். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அதிமுக என்பது உயிரோடு இருந்தது. அதற்கு பின்னர் இப்போது இருக்கும் அதிமுகவை நான் அதிமுகவாக நினைத்து இந்த கட்டுரையில் குறிப்பிடவில்லை. ஏனனில் ஜெயா அவர்களுக்கோ அல்லது கலைஞருக்கோ மத்திய அரசை அண்டிப்பிழைக்கும் நிலை என்பது எப்போதும் இல்லை. இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப்பிழைப்பது என்பது முற்றிலும் வேறு என்பதை தயவு செய்து உணர வேண்டும் இதை வாசிக்கும் அன்பர்கள். எம் ஜி ஆர் அவர்கள் தான் ஆட்சியில் முதல்வராக இருந்த அந்த 13 ஆண்டுகளும் மத்திய அரசுகளுக்கு இணக்கமாக இருந்தார். முதலில் மொரார்ஜி தேசாய் முதல்இந்திரா, ராஜீவ் வரை இணக்கமாக இருந்தார். மொரார்ஜியே கூட எம் ஜி ஆர் ஆட்சியை கலைத்தால் கூட மத்திய அரசை தவிர்த்து விட்டு தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெறும் அளவு அவருக்கு தைரியம் இருந்தது. அதே போலத்தான் திமுகவும் காங்கிரஸ் அல்லாமல், ஜனதா அல்லாமல் , பாஜக அல்லாமல் கூட தனித்து நின்று அதிமுகவை வீழ்த்தும் சக்தி பெற்றவராகவே இருந்தது. ஜெயா அவர்களும் இதே நிலை தான். ஆனால் ஜெயா அவர்களுக்கு பின்னர் இதோ இப்போது இருக்கும் எடப்பாடி, பன்னீர் கோஷ்டிகள், தினகரன் கோஷ்டிகள் எல்லாம் மத்திய அரசை அண்டிப்பிழைக்கும் நிலை தான் என்பதே உண்மை. எனவே இந்த கோஷ்டிகளை நாம் அதிமுக என்னும் வட்டத்தின் உள்ளே சேர்க்கக்கூடாது.




ஆக அண்ணா இட்ட  பிராந்திய அடித்தளம் என்பது தமிழகத்தில் மிகப்பலமானது என்பதால் இங்கே பாஜகவோ அல்லது காங்கிரசோ தனித்து நின்று இந்த தமிழக பிராந்தியத்தை வெல்ல முடியாது என்னும் நிலையில் மத்திய அரசுகள் என்பது தமிழகத்துக்கு எப்போதும் அநீதிகளை மட்டுமே பரிசாக கொடுத்துக் கொண்டுள்ளன. ஆனால் கர்நாடகம் என்பது பலமுறை காங்கிரஸ் வெற்ற மாநிலம், பல முறை ஜனதா, ஒரு முறை பாஜக, மதச்சார்பு அற்ற ஜனதாதளம் (பிராந்தியமாக சுருங்கிய தேசிய கட்சி எனலாம்) என தேசிய கட்சிகள் தான் ஆட்சியில் அமர்ந்து வருகின்றன. ஆகவே கர்நாடகத்தில் மத்தியல் ஆளும் அல்லது ஆண்ட ஜனதாவோ, காங்கிரசோ, பாஜகவோ அல்லது யாராக இருந்தாலும் அவர்கள் மாநில முதல்வராக வந்து அமர ஒரு வாய்ப்பு கண்டிக்காக அங்கே உண்டு. இன்னும் சுறுக்கமாக சொன்னால் காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு எந்த மத்திய கட்சி அழகான துரோகம் செய்கின்றதோ அதற்கு அடுத்த முறை அங்கே முதல்வர் நாற்காலி நிச்சயம் என்னும் நிலை.



இதற்காகத்தான் கலைஞர் இந்த காவிரி விஷயத்தை இனியும் மத்திய அரசின் கட்டபஞ்சாயத்து சரி வ்ராது என முடிவெடுத்து தான் அப்போது இந்தியாவை பிரதமார இருந்து பிரமாதமாக  ஆண்ட நல்ல நியாயமான மனிதர் சமூகநீதி காவலர் திரு. வி.பி.சிங் அவர்களிடம் பேசி காவிரி நடுவர் மன்றம் அமைக்க வழி வகுத்தார். அந்த காவிரி நடுவர் மன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பை கொடுத்து அதை கர்நாடகம் உதாசீனப்படுத்தியது , பின்னர்  அதை கர்நாடகா எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது, பின்னர் காவிரி நடுவர் மன்றம் பல வித சட்ட போராட்டங்களை சந்தித்து தன் இறுதி தீர்ப்பை அளித்து, அதையும் கர்நாடகம் உதாசீனம் செய்தது,  பின்னர் கர்நாடகம் உச்சநீதி மன்றம் சென்று  அங்கே தீர்ப்பு வந்து அதையும் கர்நாடகம் அலட்சியம் செய்தது,  பின்னரும் கர்நாடகம் அதை மதிக்காமல் உச்சநீதிமன்றம் சென்றது, இதனிடையே தீர்ப்பு அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று அதை பெற்றதாக “பொன்னியின் செல்வி” பட்டம் வாங்கி திருப்தி பட்டுக் கொண்டது, அரசிதழில் வந்து விட்டாலே காவிரியில் தண்ணீர் வந்து விட்டது என நினைத்து தமிழக மக்கள் ஏமாந்தது, என எல்லாவித கூத்துகளும் நடந்து முடிந்து இதோ கால் நூற்றாண்டு காலமாக நடந்த சட்ட போராட்டம் வாயிலாக இன்றைக்கு சுமார் 42 நாட்கள் முன்பாக முதலில் வந்த தீர்ப்பில் இருந்து கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக கடைசியாக 172 டி எம் சி தண்ணீர் தான் தமிழகத்துக்கும் என இறுதி தீர்ப்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அதில் முத்தாய்ப்பாக இந்த தீர்ப்பு வந்ததில் இருந்து ஆறு வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டும், இன்னும் அதி முத்தாய்ப்பாக இது சம்பந்தமாக இனி யாரும் மேல் முறையீடு செய்ய முடியாது, கூடாது என்றும் முடித்து விட்டது. உடனே கர்நாடகம் அந்த தீர்ப்பை வரவேற்றும், தமிழகம் தான் வஞ்சிக்கப்பட்டதை குமுறியும் தீர்த்து விட்டன. காரணம் தமிழகம் முதலில் கோரிய 400 டி.எம் சி என்பது காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில் 210 டி எம் சியாகி அது இறுதி தீர்ப்பில் இன்னும் குறைந்து, கடைசியாக உச்சநீதிமன்றத்தில் 172 டி எம் சி என ஆகி விட்டது. அதையாவது கொடுங்கள் என்னும் நிலைக்கு தமிழகம் வந்து விட்டதாகவே தெரிகின்றது. ஆனால் அதையும் தர தயார் நிலையில் கர்நாடகா இல்லை என்பதும் அவர்களது பேச்சின் வழி தெரிகின்றது.




இந்த நிலையில் தான் இந்த ஆறு வாரகாலத்தில் அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய பாஜக என்பது ஒரு சின்ன துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. ஆனால் தொலைக்காட்சி விவாதம், பொது பேட்டிகளில் இதோ கெடு முடிவடையும் 29.03.2018 மாலை 4.50 வரை கூட “இன்னும் நேரமுள்ளது. அதற்குள் ஏன் நாம் அவசரப்பட வேண்டும்” என்கிற தொணியில்  அதிமுகவினரும், பாஜகவினரும் பேசுவது என்பது கொடுமை. அதே போல மாலை 5 மணி ஆகியும் இது வ்ரை இப்போது இரவு 11 மணி ஆகியும் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.  ஆனால் இதற்கான சலசலப்புகள் கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் ஆரம்பித்து விட்டன.

இதனிடையே மத்தியல் கூட்டணியாக இருந்த சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து வேண்டி பாராளுமன்றத்தை முடக்க, அதே நேரம் சந்திரபாபு நாயுடு அவர்கள் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் கொண்டு வர, யோசித்தது பாஜக. பாராளுமன்றம் நடந்தால் தானே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவீர்கள் என்னும் நிலைப்பாட்டை எடுத்து அதிமுகவின் 37 எம் பிக்களை கொண்டு தினமும் ரகளை செய்து பாராளுமன்றத்தை முடங்கியது. அதற்கு அதிமுகவினர் சொன்ன காரணம் தான் அழகான அசிங்கம். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டுமாமாம். ஆனால் அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டார்களாம். காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு வராத மத்திய அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என வரிந்து கட்டிக் கொண்டு, சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டியது தானே? அதற்கு காரணம் சொல்கின்றார்கள் இப்போதைய அதிமுக என்னும் போர்வையில் இருக்கும் சுரண்டிகள்.... எங்கள் அம்மா அவர்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது என  மோடிக்குகடிதம் எழுதினார் . அதனால் அதன் காரணமாக சந்திரபாபு நாயுடு கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க இயலாது. ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தை  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முடக்குவோம், என பாஜக சொல்லிக்கொடுத்ததை கிளிப்பிள்ளை போல சொல்லி வருகின்றன. இதே ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வு, உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ஜி எஸ் டி போன்றவைகளில் ஜெயா அவ்ர்கள் மத்திய அரசுக்கு எதிராக எடுத்த அதே நிலைப்பாட்டை தான் இவர்கள் அதாவது எடப்பாடி, பன்னீர் கோஷ்டிகள் எடுத்தனவா? இப்போது மட்டும் என்ன ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்து கூடாது என ஜெயா அம்மையார் சொன்னதை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்? கடைசி நேரம் வரை நீட் தேர்வு வராது என மத்திய அரசு  சொன்னதை அந்த தேர்வு வரும் என தெரிந்தும் நம்புவது போல நம்பி அனிதா  என்னும் பெண்ணை கொன்றவர்கள் தான் இந்த எடப்பாடி, பன்னீர் கோஷ்டிகள் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன? சரி அப்படியே ஜெயா அம்மையார் பேச்சை கேட்பவர்கள் என வைத்துக் கொண்டாலும், காவிரி மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தாக மத்திய அரசை சந்திரபாபு நாயுடுவோடு சேர்ந்து கலைத்து விட்டு, அடுத்து வரும் மத்திய அரசு அமையும் போது அதிமுக போர்வை கோஷ்டிகள் ஒரு வேளை வெற்றி பெற்று எம்.பிக்கள் வைத்திருந்தால் அப்போது பாராளுமன்றத்தை முடக்கி எங்கள் அம்மா சொன்னாங்க. அதனால ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது என போராட வேண்டியது தானே?





அல்லது திமுகவின் செயல்தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் சொன்னார்களே? அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வோம். அப்போது தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என  சொன்னாரே? அப்போது என்ன சொன்னார் அமைச்சர் ஜெயக்குமார்? “அவர்களிடம் ஒரு லோக் சபா எம்.பி யும் இல்லை. எங்களிடம் 37 பேர் இருக்காங்க. மேலும் கனிமொழியின் ராஜ்யசபா எம்.பி பதவியை பறிக்க ஸ்டாலின் சதி செய்கின்றார்” என அபாண்டமாக சொன்னாரே...  அடுத்து சில அதிமுக போர்வையாளர்கள்,  தமிழ் தேசியவாதிகள் அல்லது நடுநிலை போர்வை போர்த்திய ஒருதலைபட்சவாதிகள் “எம் பிக்கள் ராஜினாமா செய்தால் என்ன பெரியதாக நடந்து விடும். அதனால ராஜினாமா தேவையில்லை” என்கிறார்களே.  இன்னும் லோக்சபா எம்.பிக்களுக்கு ஒரு வருடம் தான் பதவிக்காலம் உள்ளது. இத்தனைக்கும் அதிமுகவின் இந்த 37 பேரும் மத்திய அரசில் அமைச்சர்களாக இல்லை. அதனால் தமிழக நலன் சார்ந்த எந்த விஷயத்திலும் அவர்களால் பிரயோஜனம் கிடையாது. ஆனால் அவர்கள் உள் நாட்டு வாழ்வாதார பிரச்சனையான காவிரிக்காக ராஜினாமா செய்ய தேவையில்லையாம். ஆனால் இதே வாய்கள் தான் 2009ல் திமுக எம் பிக்கள்  மத்திய அமைச்சரவையில் இருந்து தமிழக இரயில்வே, தொலைதொடர்பு, நெடுஞ்சாலை என எல்லா துறைகளிலும் இது வரை தமிழகம் செய்யாத சாதனைகளை தமிழக உட்கட்டமைப்புகளை நடத்திக் கொண்டு இருக்கும் போது இலங்கை என்னும் வெளி நாட்டு விஷயத்தில் திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷமிட்டது. அது ஏன்? வெளி நாட்டு விவகார விஷயத்தில் திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்தால் அது தீர்ந்து விடும் என நம்பிய, பேசிய வாய்கள் இப்போது தமிழக பிரச்சனை காவிரிக்காக இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் ராஜினாமா செய்யவது பிரயோசஜனம் இல்லை என்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. கனிமொழியை பழிவாங்கத்தான் ஸ்டாலின் அப்படி சொன்னார் என சொல்லும் ஜெயகுமார் அவர்கள் அரசியல் தெரிந்து பேசுகின்றாரா என்பது தான் புரியவில்லை. இதோ கையில் திமுக 89 எம்.எல்.ஏக்கள் வைத்திருக்கும் போது மீண்டும் கனிமொழியை எம்.பி ஆக்க இயலாதா திரு. ஸ்டாலின் அவர்களால்? சென்ற முறை மூன்று, நான்கு வாக்குகள் குறைவாக இருந்த போதே இதே ஸ்டாலின் அவர்கள் பாமக முதல்  அப்போது கூட்டணியில் இல்லாத புதிய தமிழகம், ம.ம.க என போய் நேரில் வாக்கு கேட்டு எம்.பி ஆக்கவில்லையா? இன்றைக்கு அதே கனிமொழி அவர்களால் திமுகவுக்கு ராஜ்யசபாவில் பெரும் புகழ் கிடைத்துக் கொண்டிருக்கும் போது 89 எம் எல் ஏக்களை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்குமா திமுக? அரசியல் தெரியாத அரை வேக்காடுகள் எல்லாம் பேசுவதெல்லாம் காலக் கொடுமை!



அடுத்து பாஜக... மனநலமில்லா தமிழக பாஜகவினர் தொலைக்காட்சி விவாதங்களில் காவிரி மேலாண்மை வாரியம்  வைக்கும் சொத்தை வாதங்கள் தான் முகம் சுழிக்கவைக்கும் கொடூரம். “ திமுகவும், காங்கிரசும் கூட்டணி தானே. அங்கே கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவிடம், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும், அவர் புதல்வர் ராகுலிடம் சென்று பேசி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்ல வேண்டியது தானே?”. அதாவது திமுகவை மடக்கி விட்டார்களாம். அதாவது  இன்னமும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தான் என தமிழக மனநலமில்லா பாஜகவினர் அப்டேட் ஆகவில்லை என்பது ஒரு பக்கம்.  அடுத்து அவர்கள் சொல்வது திமுகவும் காங்கிரசும் கூட்டணி என்னும் பிணைப்பில் இருப்பதால் திமுக சென்று அவர்களிடம் சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்ல வேண்டுமாம்.  அடடே... என்ன ஒரு வாதம்... காவிரி நடுவர் மன்றம் அமைத்த போது வி பி சிங் ஆட்சி, பின்னர் சந்திரசேகர், வாஜ்பாய், நரசிம்மராவ், மன்மோகன், மோடி என பல ஆட்சி கடந்து பல நீதிமன்றம் பார்த்து இப்போது உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு தந்து விட்டது. உச்சநீதி மன்றத்தை விட, அதை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடிய மத்திய அரசை விட  ராகுல் அல்லது சோனியா அம்மையார்  தான் சக்தி மிகுந்தவர்கள் என  கூறுகின்றார்களா? சரி... புரியாதவர்களுக்கு புரியும் படி சொல்கிறேன்... அதாவது திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி என்கிற பிணைப்பு என்ற ஒன்றை வைத்து தானே அப்படி ஒரு சொத்தை வாதம் வைக்கின்றார்கள். அதே போல பாஜக தமிழக தலைவர் தமிழிசை, தமிழகம் சார்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழர்கள் தானே. போகட்டும் ஹெச்.ராஜா அவர்களோ பாவம் அவர் வேண்டாம் அவரோ மனோநிலை பிரச்சனை காரணமாக நீதிமன்ற கேள்வியில் சிக்குண்டுள்ளார், அவரை தவிர்த்து  ராகவன், நாராயணன் போன்றவர்கள் தங்களை தமிழர்களாக ஒப்புக்கொண்டதில்லை அல்லது அதற்காக வெட்கப்படுவார்கள் ஆகவே தமிழிசை, பொன்னார் போன்றவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழக நலன் கருதி மோடியிடமோ அல்லது அங்கே முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவிடமோ சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொன்னால் என்ன? மாட்டார்கள். ஏனனில் தமிழகம் அல்லது தமிழர்கள் நலன் அவர்களுக்கு முக்கியம் கிடையாது என்பதே உண்மை. இந்த லெட்சனத்தில் தமிழகத்தில் தாமரை மலரும் என எந்த வாய் வைத்து சொல்கின்றார்கள் என்பது தான் புரியவில்லை.




 தற்போது கர்நாடகாவில் இரண்டு நாட்கள் முன்பாக தேர்தல் தேதி அறிவித்தாகிவிட்டது. இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கின்றது. ஆனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் மனநலம் குன்றிய பாஜகவினர்  காவிரி மேலாண்மை வாரியமே தான் வேண்டிமா, காவிரி மேற்பார்வை குழுன்னு ஏதாவது வச்சுகிட்டு இருக்க கூடாதா... பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என கேலி பேசுகின்றன. இல்லை... எங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியமே தான் வேண்டும் என்பதில் நாங்கள் ஏன் குறியாக இருக்கின்றோம்? ஒரே விஷயம்... அதை இப்படி பார்க்காதீர்கள்.. எதிர்ப்பக்கம் என்ன நடக்கின்றது என பாருங்கள். கர்நாடகாவிடம் சென்று “ஏன் காவிரி மேற்பார்வை குழு போதும் என்கிறீர்கள்? பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா? ஏன் காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் என்கிறீர்கள் என கேட்க திராணி இருக்கின்றதா அவ்ர்களிடம். ஏனனில் காவிரி மேலாண்மை வாரியம் என்பது கர்நாடகத்தில் இருக்கும் நான்கு அணைகள், தமிழகத்தில் இருக்கும் நான்கு அணைகள் உள்ளிட்டவைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சக்தி கொண்டது. அணைகள் பாதுகாபு என்பதை தவிர்த்து அந்த அணைகள் மீது அந்த மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது. அது போல உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அந்த குறைந்த பட்ச அந்த 172 டி எம் சியாவது கண்டிப்பாக தமிழகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். அதன் தலைவராக தமிழகம், கர்நாடகம், பாண்டிச்சேரி, கேரளா ஆகியவைகள் தவிர்த்த மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இருப்பார். நான்கு பக்கமும் இருந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். தவறு நடக்க வாய்ப்பில்லை. ஆனால் காவிரி மேற்ப்பார்வை குழு என்பது ஒரு பல் இல்லாத குழு. “கர்நாடகாவில் தண்ணீர் இல்லை. அதனால் தரவில்லை” என சுலபமாக கைவிரித்து போக இயலும்.



ஆக முடிவென்பது..... கர்நாடகம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க தயாரில்லை. சரி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத காரணத்தால் அந்த அரசை இந்திய அரசியலமைப்பு சட்டப்படி கலைக்க அதிகாரம் உள்ளதா எனில் கண்டிப்பாக உண்டு. ஆனால் செய்வார்களா எனில் மத்தியில் ஆள்பவர்கள் மாட்டார்கள். அடடே அப்படி எனில் உச்சநீதிமன்ற தீர்ப்பு???? அது தமிழகத்துக்கு மட்டும் தான்... எல்லா சட்டதிட்டங்களும் தமிழகத்துக்கு மட்டும் தான். நீட் தேர்வு பற்றி ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தால் அதை உடனடியாக இந்த ஆண்டு முதலே செயல்படுத்துவோம், எத்தனை அனிதாக்கள் மரித்தால் என்ன? தமிழகத்துக்கு ஒரு கேடு விளைவிக்கின்ரதா... உடனே உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்து... ஜல்லிக்கட்டு பிரச்சனையா.... விலங்கு நலவாரியம் ஏதாவது வழக்கு தொடர்ந்ததா? அல்லது அமரிக்க அமைப்பு பீட்டா போன்றவை  ஏதாவது வழக்கு தொடர்ந்ததா? தீர்ப்பு வந்ததா? உடனே அமல்படுத்து... அது தமிழகமே பற்றி எரிந்தால் கூட பரவாயில்லை. உடனே அமல் படுத்து. தமிழகம் மத்திய அரசிடம் நீட் தேர்வு வேண்டாம் என சட்டசபையில் இரண்டு தீர்மானம் போட்டதா? அதை உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி புட்டத்தின் கீழே முட்டுக்கொடுத்துக்கொள். தமிழக சட்டசபை தீர்மானத்தை அமல் படுத்தாதே. ஆனால் கர்நாடகா உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தவில்லையா? பரவாயில்லை விடு. அங்கிருந்து நமக்கு எம்.பி கிடைப்பார்கள். முதல்வர் நாற்காலி கிடைக்கும், அதனால் கண்டுக்காதே போய் கொண்டே இரு... இது தானா மத்திய அரசின் நிலைப்பாடு....

இப்போது இந்த கட்டுரையின் ஆரம்ப கட்டத்துக்கு வருகின்றேன்... அண்ணா சொன்னாரே... திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகின்றோம். ஆனால் அதற்கான காரணங்கள் இப்போதும் அப்படியே இருக்கின்றது என்றாரே அண்ணா. அப்போது கை கொட்டி சிரித்தவர்கள் இப்போது என்ன செய்ய போகின்றார்கள்? 56 ஆண்டுகள் முன்பாக 
 அண்ணா சொன்ன அந்த காரணிகள் இப்போதும் உயிர்ப்புடன் தான் உள்ளன என்பதைத்தானே இன்று மாலை 5 மணி (29.03.1018) வரை தமிழகத்துக்கு மறுக்கப்பட்ட நீதி உணர்த்துகின்றது.
  தமிழகத்தில் காவிரி டெல்டா முழுவதும் காவிரி தண்ணீர் கொடுத்தால் அவன் விவசாயம் செய்ய ஆரம்பித்து விடுவான். டெல்டாவை  மத்திய அரசு பெட்ரோல் மண்டலமாக ஆக்கி ஒரு மாதம் ஆகி விட்டது. இப்போது காவிரி கொடுத்தால் டெல்டா விவசாயி மீண்டும் விவசாயம் பார்க்க ஆரம்பித்து விட்டால் நிலத்தை விற்க மாட்டான். அப்படியே அரசு தன் இரும்புக்கரம் கொண்டு அவன் நிலத்தை கையகப்படுத்தினாலும் உயிர் கொடுத்து போராடுவான். ஆகவே இப்போதைக்கு தண்ணீர் கொடுத்து அவனை மீண்டும் விவசாயி ஆக்காதே. இதனிடையே  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி வரண்ட பாலைவனம் ஆக்கி விட்டால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில் அங்கே விவசாயிகள் செயலிழந்து விடுவார்கள். அப்போது தாமாக முன் வந்து அந்த பாலைவனத்தை விற்று விடுவார்கள். எனவே இப்போதைக்கு காவிரியில் தண்ணீர் விடாதே என நினைக்கின்றது மத்திய பாஜக அரசு என பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகின்றேன். தமிழகத்தை அழித்து மற்ற இந்தியாவை வளமாக்கித்தான் இந்திய ஒருமைப்பாட்டை காக்க வேண்டும் என்னும் நிலை எங்களுக்கு தேவையா? அல்லது அண்ணா சொன்னது போல அண்ணன் முரசொலி மாறன் சொன்னது போல “ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’ என நாங்கள் பழைய வழிக்கு திரும்ப வேண்டுமா? இந்தியாவின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பது மத்திய அரசா? அல்லது தமிழர்களா? தேச துரோகிகள் யார்? 

நீங்கள் கேட்கும் திராவிடத்தில் கர்நாடகமும் தானே வருகின்றது? பின் அவ்ர்கள் எப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தருவார்கள்? என நீங்கள் கேட்கலாம். அப்படி எங்களுக்கு திராவிட நாடு கிட்டின் அப்போது அது  எங்கள் நாட்டின் பிரச்சனை. நாங்கள் எப்படி தீர்த்துக் கொள்வது என்பது எங்களுக்கு தெரியும். ஒத்துவரவில்லை எனில் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஒத்து வராத கோட்பாடான தமிழ் தேசியம் கூட கையிலெடுக்கலாம்? யார் கண்டது? 1949 திமுக ஆரம்பித்தது முதல் 1962 வரை திராவிட நாடு என்னும் கோட்பாட்டில் இருந்த திமுக 1962 அக்டோபர் மாதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது நாட்டின் நலனுக்காகத்தானே? இப்போது அதே நாட்டின் நலம் கருதி எந்த முடிவு வேண்டுமாகின் எடுத்தால் என்ன செய்வீர்கள்?  சரி, நீங்கள் கேட்டபடி தமிழ் தேசியம் அடைந்தால் அப்போது இந்திய தேசியத்தில் இருக்கும், கர்நாடகாவில் குடகு மலையில் தொடங்கும் காவிரி தமிழகத்துக்கு கிடைத்து விடுமா என கேட்பீர்கள். அது மிகச்சுலபம். அப்போது நதி நீர் பிரிப்பு என்பது அதன் வழக்கு என்பது இதோ இன்று போல பல் இல்லாத இந்திய உச்ச நீதிமன்றத்திலா நடக்கும்? சர்வதேச நீதிமன்றத்தில் அல்லவா நடக்கும். சர்வதேச சட்டப்படி ஒரு ஆறு எங்கே ஆரம்பிக்கின்றதோ அவர்களுக்கு சொந்தமில்லை. அது முடியும் நாடு தான் அதற்கு சொந்தம். பிரம்மபுத்திரா கதை தெரியுமா உங்களுக்கு? சீனா, நேப்பாளம், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் என 5 நாடுகளில் பாய்கின்றது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்டை, வங்கதேசமும், பாகிஸ்தானும் சண்டை, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சண்டை.... இதல்லாம் நடந்தும் அந்த நதி நீர் பங்கீட்டில் இது வ்ரை பிரச்சனை என்பது இருந்தது உண்டா? கிடையாது. ஏனனில் அது  “சர்வதேச பிரம்பபுத்திரா மேலாண்மை வாரியம்” கவனிக்கின்றது? கங்கை எத்தனை நாடுகளில் பிரச்சனை இல்லாமல் பாய்கின்றது என்கிற விபரம் வேண்டுமா? அதை எல்லாம் விடுங்கள். இந்த கட்டுரையின் ஒரே கேள்வி.... தமிழகத்தை அழித்து தான் இந்திய தேசியம் வாழ வேண்டுமா? தமிழன் என்பின் உங்களுக்கு சொம்பையா? கிள்ளுக்கீரையா? தமிழகம் கொதித்துக் கொண்டிருக்கின்றது. விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் இல்லவே இல்லை. பசியும் பஞ்சமுமாக தமிழக டெல்டாவை ஆக்கி விட்டு, அதனை பெட்ரோல் மண்டலமாக மாற்றி இந்தியாவின் மற்ற பகுதிகளை மட்டும் சுகம் காண நாங்கள் இங்கே சாக வேண்டுமா?  கடைசியாக ஒரே கேள்வி......



ஆகவே இந்திய அரசால் அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம் தருகின்றீர்களா? அல்லது சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தான் உங்கள் விருப்பமா? என்பதே இந்த கட்டுரையின் ஒற்றை கேள்வி! 

January 10, 2018

“தெற்கிலிருந்து ஒரு சூரியன்” - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம் என்னும் நூல் குறித்த எனது பார்வை - பாகம் 1



 “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம் என்னும் நூல் குறித்த எனது பார்வை தான் இந்த கட்டுரை! “தி இந்து - தமிழ் நாளிதழ் வழங்கும் “தமிழ் திசை” பதிப்பகம் வழங்கும் இந்த நூல் பற்றிய என் பார்வைக்கு முன்னர் அதன் முன்னூட்டமாக நான் நாகு சம்பவங்கள் பற்றி சொல்லி பிள்ளையார் சுழி போட்டு விட்டுதான் போக நினைக்கின்றேன்!

சம்பவம் 1 : கடந்த பிப்ரவரி மாதம் 2012ம் வருடம் முதல் வாரத்தின் போது எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. “வணக்கம்! அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் தானே இது” என்றது. நான் “ஆமாம் சார், நீங்க?” என்றேன்! அதற்கு “சார்! என் பெயர் சமஸ். விகடன் குழுமத்திலே இருந்து பேசுறேன். உங்க வலைப்பூ எல்லாம் படிச்சு இருக்கேன். வலைப்பதிவாளர்கள் பத்தி எங்கள் விகடனில் எழுத இருக்கோம். முதல் வாரத்தில் உங்களை முடிவு செஞ்சிருக்கோம். உங்க குடும்ப புகைப்படம் மற்றும் உங்க விபரம் எல்லாம் எனக்கு மெயில் பண்ண முடியுமா? உங்க வலைப்பூ பதிவில் இருந்து நல்ல பதிவா நாங்களே எடுத்து போட்டுக்குறோம்” என்றார். எனக்கு சந்தோஷம் ஒரு பக்கம் காற்றில் மிதப்பது போல... அதே நேரம் அவன் சொன்ன பெயர் எனக்கு மனதில் பதியவில்லை. இரண்டு மூன்று முறை கேட்டும் அது மனதில் வந்து குந்தவில்லை. “சார், கொஞ்சம் ஸ்பெல்லிங்கோட சொல்றீங்களா?” என்றேன். அதற்கு அவர் “சார், சமஸ்கிருதம் தெரியுமில்லையா... அதில் வரும் முதல் மூன்று எழுத்துகள் தான் என் பெயர்” என்றார். ஓ....இப்படி ஒரு பெயரா என கொஞ்சம் வியந்து கொண்டேன். பின்னர் அடுத்த வாரம் அதாவது 15.02.2012 ஆனந்த விகடன் இதழின் இணைப்பாக “என் விகடன்” இதழில் அட்டைப்படத்தில் என் வண்ண புகைப்படம், மற்றும் நடுப்பக்கத்தில் என் பற்றிய குறிப்புகள், நான் என் மகள், மகன் சகிதம் இருக்கும் புகைப்படம், என் பதிவுகளில் சில முக்கிய பதிவுகள் என வெளிவந்தது. அந்த இதழ் வெளிவந்த அன்று எங்கள் வலைப்பூ சகோதரி டாக்டர்  ரோகினியின் திருமணம் திருக்கடையூரில் நடந்தது. அதன் பொருட்டு அத்தனை பிரபல வலைப்பதிவர்களும் மயிலாடுதுறைக்கு வருகை தந்திருந்தனர். எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்வு! ஒரே கொண்டாட்டம்! என் வலைப்பூவுக்கு உலகலாவிய அங்கீகாரம் கிடைத்தது போல பேரானந்தம். மேலும் திரு. சமஸ் அவர்கள் மீது எல்லைகடந்த அன்பு. அவரை ஒரு முறை நேரில் பார்த்து நன்றி தெரிவித்துக்கொள்ள ஆசைப்பட்டேன்.

சம்பவம் 2: செப்டம்பர் மாதம், 2013ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பிரலமான “The Hindu"  நாளிதழ் தன் தமிழ்ப்பதிப்பை ஆரம்பித்தது. இந்தியா முழுமைக்கும் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என விளம்பரம் ஆஹா ஓஹோ என கொடிகட்டி பறந்தது.  நிச்சயம் அது ஒரு தரமான பத்திரிக்கையாக இருக்கும் என எல்லோருமே நம்பினார்கள். காரணம் “சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” என்னும் பொதுபுத்தி தான் :-)  19.09.2013  என நினைக்கின்றேன்.. முதல் இதழ் வெளி வந்தது. 16 பக்கங்கள் மெயின் பேப்பர், அடுத்து மேலும் 16 பக்கங்களுக்கு இன்னுமொறு மெயின் பேப்பர், தவிர திருச்சி பதிப்புக்காக எட்டு பக்கம் என ஆக மொத்தம் 40 பக்கங்கள் வெளியான அந்த முதல் இதழில் “கருணாநிதி” என்னும் பெயர் என்பது கிடையாது. இத்தனைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் அரசியலில் உச்சகட்டமாக அடுத்து வர இருக்கு நாடாளுமன்ற தேர்தல் முனைப்பிலும் தவிர பத்தாவது மாநில மாநாடு நடத்தி விடலாம் என்னும் சிந்தனையிலும் இந்திய அரசியலில் தவிர்க்க இயலாத மாபெரும் சக்தியாக, இருந்த நேரம். ஆனால் அன்று வெளியான “தி இந்து தமிழ் நாளிதழில்” மருந்துக்கு கூட கருணாநிதி என்னும் பெயர் இடம்பெறவில்லை. நான் ஆர்வமுடன் முதல் இதழை வாங்கி அரக்க பரக்க “கருணாநிதி” என்னும் பெயரை தேடித்தேடி அலுத்து விட்டேன். மிகுந்த கோவத்தில் என் வலைப்பூவில் “"தி இந்து" - தமிழ் தினசரி நாளிதழ் - "தரம்" பத்து பைசா!!!” என்னும் கட்டுரையை எழுதி முடித்து விட்டேன். அத்தனை கோவம் எனக்கு! ஒரு நூற்றாண்டு கண்ட பத்திரிக்கையின் தமிழ் பதிப்பில் வாழும் தமிழாக இருக்கும் கலைஞர் பற்றி வசைபாடியாவது ஒரு வார்த்தை எழுதாமல் அவரை புறக்கணித்த செயல் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் மனம் போன போக்கில் எழுதி குவித்து விட்டேன்.

சம்பவம் 3:  திருச்சியில் திமுகவின் பத்தாவது மாநில மாநாடு பிப்ரவரி 15,16 தேதிகளில் 2014ம் ஆண்டு நடக்க தேதி குறித்து விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்தன. எல்லா பத்திருக்கைகளும் அதே செய்தியை தான் வெளியிட்டன. எங்கும் பரபரப்பு. யார் பேசினாலும் திருச்சி திமுக பத்தாவது மாநில மாநாடு பற்றிய பேச்சுகள் தான். இந்த நிலையில் அதாவது மாநாடு நடக்க இருந்த பதினைந்து நாட்கள் முன்பாக ஜனவரி 31ம் தேதி, 2014ல் இதே “தி இந்து தமிழ் நாளிதழ்” ஒரு அரைப்பக்க கட்டுரை வெளியிடுகின்றது. தலைப்பு என்ன தெரியுமா? ”ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்” . இது தான் அந்த தலைப்பு. முழுக்க முழுக்க தலைவர் கலைஞர் தலைமையிலான இந்த திமுக அஸ்தமனம் ஆகிக்கொண்டிருப்பதாக கட்டுரை சொன்னது. படிக்க படிக்க கோவம், கண்ணீர் என எனக்கு தாங்க முடியவில்லை. கட்டுரையின் முடிவில் எழுதியது யார் என போட்டிருந்தார்கள். எழுதியவர் “சமஸ்” அவர்கள். நண்பர் சமஸ் அவர்கள் அப்போது விகடன் குழுமத்திலிருந்து தி இந்து தமிழ் நாளிதழுக்கு சென்று விட்டார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான் மிகுந்த மதிப்பு வைத்திருந்த ஒரு நண்பர் இப்படி ஒரு கட்டுரை எழுதினால் என்னவென்று சொல்வது? அதுவும் தன் முதல் இதழில் தலைவர் கலைஞர் அவர்களை புறக்கணிப்பு செய்த பத்திரிக்கையில் இன்னும் 15 நாளில் 25 லட்சம் திமுக தொண்டர்கள் கூட இருந்த நிலையில் இப்படி ஒரு கட்டுரை அரைப்பக்கம் வருகின்றது எனில் என்ன காரணமாக இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகின்றேன்.


சம்பவம் 4:  பிப்ரவரி 15,16, 2014 திமுக பத்தாவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறுகின்றது. இரண்டாம் நாள் அதாவது 16.2.2014 அன்று திமுகவின் அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேசுகின்றார்... அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்ன ஏது என்றெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை. 15 நாட்கள் முன்பாக தி இந்துவில் வந்த அந்த “பேரியக்கத்தின் அஸ்தமனம்” கட்டுரையை எடுத்து பிரித்து மேய்கின்றார். கட்டுரையாளர் சமஸ் அவர்களை தூக்கி போட்டு பந்தாடுகின்றார். மேடையில் தலைவர் கலைஞர், பேராசிரியர்,  நம் செயல்தலைவர், தோழமை கட்சி, கூட்டணி கட்சி தோழர்கள் என எல்லோரும் இருக்கின்றனர். கூட்டத்தில் நம் இணைய தோழர்கள் தினகரன் அரசு உள்ளிட்ட நாங்கள் ஒரு குழுவாக அமர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். மேடையின் இடது பக்கத்தில் அரியலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான திரு எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மேடையில் தாவி ஏற வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இருக்கும் போது அண்ணன் துரை முருகன் அவர்கள் பேச்சுக்கு இங்கே விசில் பறக்கின்றது. எழுந்து நின்று கை தட்டுகின்றோம். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வேலையை விட்டு விட்டு மேடையிலிருந்த திரு. எஸ்.எஸ் சிவசங்கர் சார் அவர்கள் துரைமுருகன் அண்ணன் அவர்கள் பேச்சை அருகில் நின்று கேட்டு மெய்மறந்து நிற்கின்றார். ஆக கடந்த 15 நாட்களாக “பேரியக்கத்தின் அஸ்தமனம்” என்னும் நெஞ்சில் பாய்ந்த முள்ளை எடுத்து வீசிவிட்டு அந்த காயத்தில் களிம்பு தடவும் அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேச்சு அன்றைக்கு அப்படி ஒரு பேச்சு!

***************


ஆக மேற்கண்ட இந்த நான்கு சம்பவங்களும் இப்போது நான் படித்து முடித்த “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” புத்தகத்தை படித்து முடித்த போது நெஞ்சில் நிழலாடுவதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்பதால் முதலில் அதை பகிர்ந்து கொண்டு பின்னர் அந்த புத்தகத்துக்கு வருகின்றேன். மேலே சொன்ன சம்பவங்களில் சம்பவம் 2ல் நான் என் வலைப்பூவில் “"தி இந்து" - தமிழ் தினசரி நாளிதழ் - "தரம்" பத்து பைசா!!!” என எழுதினேன் என்று சொன்னேன் அல்லவா... அதில் முத்தாய்ப்பாக ஒரு வரி எழுதி இருந்தேன்... //40 பக்கம் நான்கு ரூபாய். அதாவது பக்கத்துக்கு பத்து பைசா விலை! இதன் "தரமும்" பத்து பைசா மதிப்பிலானது மட்டுமே! இந்த பத்து பைசா என்னும் தரத்தை “தி இந்து  தமிழ் நாளிதழ்” உயர்த்திக்கொள்ள வேண்டும் எனில் இதே புறக்கணிக்கப்பட்ட அந்த மாபெரும் பத்திரிக்கையாளர் - அரசியல்வாதி போன்ற பன்முகம் கொண்ட தலைவர் கலைஞரை பற்றி “உண்மை” களை எழுதி பிராயச்சித்தம் தேடிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை! // இது தான் அந்த முத்தாய்ப்பு வரிகள்! ( அந்த வலைப்பூவின் சுட்டி இதோ http://abiappa.blogspot.com/2013/09/blog-post_16.html ) ஆக சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து தி இந்து தமிழ்நாளிதழ் மற்றும் “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” புத்தகத்தின் நூல் பொறுப்பாசிரியருமான திரு சமஸ் அவர்களும் ஒரு அருமையான பிராயச்சித்தம் தேடிக்கொண்டனர்.

தலைவர் கலைஞர் அவர்களை தன் முதல் இதழில் புறக்கணித்தமைக்காகவும், பேரியக்கத்தின் அஸ்தமனம் என எழுதியமைக்காக திரு. சமஸ் அவர்களையும் நான் நிந்தித்தேன். அதற்காக இந்த நூலை படித்த பின்னர் இப்போது வருத்தமும் தெரிவித்து பகிரங்க மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன். ஏனனில் புத்தகம் அல்ல அது. சுமார் நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் பொக்கிஷங்களில் ஒன்று! திமுகவினர் வீட்டில் வைத்து பாதுகாக்க வேண்டிய ‘பத்திரம்’ அது! கலைஞர் என்றாலே எட்டிக்காயாக மனதில் பதியம் போட்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது!

மொத்தம் 210 பக்கங்கள்! அத்தனையும் முத்துக்கள். அட்டையையும் விட்டு வைக்கவில்லை. “தமிழ்வெல்லும்” என தலைவர் கலைஞரின் கையெழுத்தால் ஆரம்பிக்கப்பட்ட புத்தகத்தின் கடைசி பி அட்டையில் நம் அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதையும், அதற்கான காரணங்கள் இன்னமும் இருக்கின்றன என விளக்கம் கொடுத்தமையுடன் முடிகின்றது அந்த புத்தகம்!

அந்த புத்தகம் தனி ஒருவரால் எழுதப்பட்டது அல்ல. அதை ஒரு தொகுப்பு. தலைவர் கலைஞர் அவர்களை பற்றி மேல்நாட்டு அறிஞர் டேவிட்ஷூல்மன் (சங்க இலக்கியத்தை ஹீப்ரூ மொழியில் மெழிபெயர்த்தவர்) முதல் கலைஞரின் உதவியாளர்கள்  திரு.நித்யா, சமையல் பணியாளர் திரு முத்து செல்வம் பிரகாஷ் வரை இந்த புத்தகத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். தலைவர் கலைஞரையும், திராவிடத்தையும் வாழ்த்தியிருக்கின்றார்கள்.

இந்தியாவின் சிறந்த அரசியல்வாதிகள், தோழமை கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், முன்னாள் பிரதமர், நீதியரசர்கள், காவல்துறை உயரதிகாரிகள், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், இந்திய காவல்பணி அதிகாரிகள், பிரபல பத்திரிக்கையாளர்கள், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்கள், தலைவர் கலைஞரின் வாரிசுகள், உறவினர்கள் அத்தனை ஏன்.... சாமானியர்கள் கூட கலைஞரை பற்றி தங்கள் எண்ணங்களை ஆசையுடன் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட எல்லா பிரிவினரும் தங்கள் சார்ந்த துறையில் கலைஞரின் செயல்பாடுகள் என்ன என்பதை சொல்லும் போது பிரம்மிப்பு தான் மேலிடுகின்றது!

அதில் சில பொருளாதார கட்டுரைகள் .... எனக்கு எப்போதுமே... எனக்கு மட்டுமல்ல நான் பொதுவாக சொல்கிறேன்... பொருளாதார கட்டுரைகள் படிக்கும் போதே பாதியில் நல்ல தூக்கம் வரும். நான் கூட நினைப்பதுண்டு... இவர்கள் தங்கள் பேனா மையில் நைட்ரோவிட் கலந்து எழுதுகின்றார்களா என்று. ஆனால் இந்த புத்தகத்தில் அப்படி இல்லை. கொஞ்சம் கலோக்கியல் மாத்திரையும் கலந்து கொடுத்திருப்பது தான் சிறப்பு! அதற்கு பின்னர் வருகின்றேன்!

முதலில் நான் சிலாகித்த கட்டுரை என்பது எழுத்தாளர் ஒருவர்  எழுதியது. ஒரு வேளை... ஒரு வேளை என்னை எழுதியிருக்க சொல்லியிருந்தால் அந்த மூன்று பக்கங்கள் எழுத்தாளர் இமயம் என்னும் பெயருக்கு பதில் “சாமானியன் அபிஅப்பா” என வந்திருக்க கூடும். அதை எழுதியது ஒரு சாதாரணன். திட்டக்குடி ஆள். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்ப்பினர் என்பதை அவரது வாக்கியங்கள் மூலம் உணர்கின்றேன். அவர் எழுத்து என்பது தான் அபாரம். அந்த சிறுவன் கட்சியில் எப்படி சேர்ந்தான்.. அதற்கு அவன் வாடகை சைக்கிள் எடுத்து போன விஷயம்.. அங்கே டீக்கடை வைத்திருக்கும் ஒன்றிய செயலர் தனக்கும் டேபிள் மீது இலை போட்டு இட்லி வைத்து உபசரித்து, கட்சியில் சேர படிவம் கொடுத்து.... அடடே.. அடடே.. அந்த சின்ன பையன் சின்ன வயதில் “நம்மையும் மதித்து டேபிள், சேர், வாழை இலை.. அதில் இட்லி, பின்னர் தோளில் கை போட்டு உறுப்பினர் படிவம்... இதை படிக்கும் போது சிலிர்க்காமல் இருந்தால் அது அனேகமாக “அந்த 74 நாட்கள்” புகழ் ஜெயாவாக மட்டுமே இருக்க முடியும்! அந்த பையன் கட்டுரையை முடிக்கின்றார்.... (கவனியுங்கள்... பையன் சின்னவனா இருந்த போது ந் விகுதி... இப்போது இர் விகுதிக்கு நான் வந்து விட்டேன். //  அவனுடைய வாழ்க்கையில் கலைஞருக்கு யாரெல்லாம் எதிரிகளோ அவர்கள் எதிரிகள். கலைஞருக்கு பிடித்தமானவர்கள் அவனுக்கும் பிடித்தமானவர்கள். எம்.ஜி.ஆருக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் கலைஞரை காட்டிலும் 100 மடங்கு பகை அவனுக்கு இருந்தது. அவர் நடித்த சினிமாக்கள் கூட பார்க்க மாட்டான். அப்படித்தான் ஜெயா மீதும், வைக்கோ மீதும், பயணங்கள் போது கலைஞரை பற்றி யாராவது குறை சொன்னால் பாய்ந்து விடுவான். தன் அப்பா, அம்மாவை திட்டினால் கூட அமைதி காப்பான். கலைஞரை திட்டி விட்டால் அவ்வளவு தான்/// இது தான் அந்த வைர வரிகள். அதில் முத்தாய்ப்பு வைக்கிறார் பாருங்கள்.....

// “இன்று அவன் பெயர் இமையம். எழுத்தாளர். யோசித்துப்பார்க்கின்றார். கட்சி அவருக்கு கொடுத்தது என்ன? நேரிடையாக அவருக்கு அது அள்ளிக்கொடுத்து விடவில்லைதான்! ஆனால் ‘கட்சி கூட்டத்துக்கு வா! கட்சிக்காரன் திருமணத்துக்கு வா! கட்சிக்காரன் செத்து விட்டான் வா!//  என அவனை சாதி பாராமல் அழைக்கும் தகுதியை அந்த உறுப்பினர் கார்டு அவருக்கு கொடுத்ததை சொல்கின்றார் அந்த எழுத்தாளர் இமையம்! 

கட்சியில் அவருக்கு பொறுப்பு கிடையாதாம். அவரே சொல்கின்றார். ஆனால் பெரிய பதவி ஒன்று உண்டாம். ஆனால் தலைவர் கலைஞர் ஊருக்கு வந்து விட்டால் உச்சஸ்தாயில் “டாக்டர் கலைஞர் வாழ்க” என்னும் அந்த பொறுப்பை மட்டும் அவரிடமே வைத்துள்ளாராம்... இதில் போட்டி போட எந்த சாதி வேண்டுமாகின் வந்து பார்க்கட்டும் என மல்லுகட்டும் உயர்தர திமுககாரர் கட்டுரை அது! இந்த நேரத்தில் நான் என் வலைப்பூ பதிவான '’கலைஞரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி?' ( http://abiappa.blogspot.com/2012/01/blog-post_05.html ) என்னும் பதிவை நினைத்துப்பார்க்கின்றேன். எழுத்தாளர் இமையம் என்பர் இருக்கும் இடம் நோக்கி கரம் குவிக்கின்றேன்!

ஒரு கட்டுரை ... நான் ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்களின் நேர்முக அரசு உதவியாளர் திரு சண்முகநாதன் அவர்கள் பதிவை முழுவதும் பதிந்து விட்டேன். அது பற்றி பின்னர் பேசுகின்றேன். அடுத்து தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போதும், இப்போது ஓய்வுபெற்ற போதும் (நான் நேர்முக உதவியாளர் பற்றி சொன்னேன்... தலைவருக்கு ஓய்வு ஏது?) இப்போதும் உடனிருக்கும் திரு. இராஜமாணிக்கம் அவர்கள்! மிக மிக மிக அருமையான கட்டுரை அது! அடிப்படையில் திரு இராஜமாணிக்கம் அவர்கள் ஒரு மொழிப்போர் தியாகி. திரு. எம். நடராசன் அவர்கள் போன்ற மொழிப்போர் தியாகி! எம். நடராசன் என்பவர் சமீபம் 30 ஆண்டுகளாக மட்டுமே சசிகலா நடராசன் என நம்மாள் அறியப்பட்டார் என்பது தான் காலக்கொடுமை. திரு. எம் நடராசன் அவர்களோடு மொழிப்போர் தியாகிகள் தான் திரு. இராசமாணிக்கம் அவர்கள்.  திரு இராசமாணிக்கம் அவர்கள் ஒரு படிப்பறிவு இல்லாத கிராமத்தில் பிறந்த சாதாரண ஆள். அதிலே படித்து இன்றைக்கு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆகி ஓய்வு பெற்று இப்போதும் தலைவர் கலைஞர் கூட இருப்பவர்.  (இவரைப்பற்றி கூட என் வலைப்பூவில் நான் எழுதியதை பார்க்க வேண்டுமா ... இங்கே பாருங்கள் http://abiappa.blogspot.com/2012/06/blog-post_12.html ) இவரது அந்த கட்டுரை அல்லது நேர்காணல் என எதுவேண்டுமாகின் வைத்துக்கொள்ளுங்கள்...

அதில் ஒரு கேள்வி... “தலைவர் கலைஞர் எதற்கெல்லாம் கோபப்படுவார்?”  ... இவர் பதிலை பாருங்கள்.... பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் விஷயம் வரும் போது அதில் வார்த்தை தவறி யாராவது பிற்ப்பட்டோர் என சொல்லி விட்டால் கோபப்படுவார்.

ஆக நான் மேலே சொன்ன ஒரு வரி என்பது ஒரு பி ஹெச் டிக்கான ஆய்வு கட்டுரைக்கான தலைப்பு! ஒரு முனைவர் பட்டத்துக்கான தலைப்பு என் தலைவரின் சாதாரண ஒரு சொல் வாக்கியம் என்பதை உணர்க! இதில் ஒரு சமூக கருத்தும், தமிழ் விளையாட்டும் இருக்கின்றது. பிற்படுத்தப்பட்டோர் என்னும் சொல்லாடலுக்கும் பிற்பட்டோர் என்னும் சொல்லாடலுக்கும் இருக்கும் வித்யாசத்தை எவன் ஒருவன் உணர்கின்றானோ அது தான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்யாசம்! தட்ஸ் ஆல்!

பிற்ப்பட்டோர் என சொன்னால் அவன் நிஜமாகவே பிற்ப்பட்டவன்... ஆனால் பிற்படுத்தப்பட்டவன் என சொன்னால் அவனுக்கு மேலே ஒரு ஆதிக்க சாதி இருந்து செயல்பட்டது என்பது பொருள். அவனை பிற் படுத்தினார்கள் யாரோ என்னும் பொருள் இருக்குதா இல்லியா? திரு. இராஜமாணிக்கம் என்னும் அவரது ஐ ஏ எஸ் படித்த உதவியாளர் அந்த பேட்டியில் ஜஸ்ட் லைக் தட் சொல்லி விட்டு சென்ற வார்த்தைகளில் தலைவர் கலைஞர் விளையாடியதை காண்பீர் மக்களே! காண்பீர்!

நம் செயல்தலைவர் அவர்களிடம் ஒரு பேட்டி... அடடா அருமை...

அப்பா உங்களை அடித்தாரா போன்ற சில்லி கேள்விகள்.. அதை விடுங்கள்.. ஆனால் அவரது பதில்கள் தான் அற்புதம்... செயல்தலைவரின் பதில்களில் இருந்து ஒரு விஷயம் நன்கு புரிந்து கொள்ள இயலும்.... இதை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என புரியவில்லை. எம் தலைவர் செயல்தலைவர் அவர்கள் என்பது ஒரு சுயம்பு... யாரும் கைதூக்கி வளராது தானாக வளர்ந்த சுயம்பு என்பது புரிய வரும்!  சொல்கிறேன் கேளுங்கள்...

பொதுவாக நம் பிள்ளைகள் விஷமம் செய்தால் என்ன செய்வோம். அதிக பட்சம் பக்கத்து வீட்டு ராமநாதன் கிட்டே சொல்வோம்... “சார் அவன் சைக்கிள்ல ரொம்ப வேகமா போறான். நான் சொன்னா கேட்க மாட்டான். நீங்களாவது கொஞ்சம் அதட்டி சொல்லுங்க சார்” ... இதானே நடக்கும்.. ஆமாம் அதான் நடந்தது. செயல்தலைவர் விஷயத்திலும் அதான் நடந்தது.என்ன ஒன்று... நம் லெவலுக்கு பக்கத்து வீட்டு ராமநாதன். தலைவர் கலைஞர் லெவலுக்கு எம்.ஜி. ஆர். அது தான் நடந்தது. “இனி நீ திமுக கூட்டம் எல்லாம் போடக்கூடாது. இது தான் உன் அப்பா விருப்பம்” என எம் ஜி ஆரால் அன்பாக கண்டிக்கப்பட்டவர் தான் நம் செயல்தலைவர்! எம் ஜி ஆரால் கண்டிக்கப்பட்டவர்கள் பலருண்டு. அதில் சிலர் இப்போது சுண்டு விரல் மற்றும் ஆட்காட்டி விரல் மட்டும் நீட்டி மற்ற விரல் மடக்கி காண்பிக்கின்றனர். ஆனால் அந்த 16 வது வயதில் தன் நடுவிரலை மட்டும் நீட்டி காண்பித்தவர் தான் நம் செயல்தலைவர் அவர்கள்!

எம். ஜி .ஆர் அவர்களை அழைத்து வந்து கோபாலபுரம் வாசலில் போட்ட அண்ணா பிறந்தநாள் கூட்டம் போட்டவர் அவர்! முரசே முழங்கு என்னும் நாடகத்தை தமிழகம் முழுமையும் 40 இடங்களில் நடத்தி விட்டு வந்து 1971ல் திமுக வெற்றி பெற்றதும் வெற்றிக்கூட்டம் நடத்தியவர் தான் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். ஆக நம் செயல் தலைவரின் முதல் பிரச்சார வெற்றி என்னும் அந்த 185/234 என்பதை இன்னும் திமுகவே எட்டவில்லை. அப்போது அந்த “முரசே முழங்கு”் நாடகத்தி வெற்றி விழா எம். ஜி ஆர் தலைமையில் நடந்த போது தலைவர் கலைஞர் சொன்னார்... “இது நிறைவு விழா” என்று. ஆனால் நம் செயல்தலைவரோ “இது முடிவல்ல... ஆரம்பம்” என்றார் அப்போதே... ஆக நம் தலைவர் என்னும் சூராவளியால் தடுக்க இயலா சுயம்பு தலைவர் தான் எம் சுனாமி செயல்தலைவர் அவர்கள்!

அடுத்து தலைவரின் தவப்புதல்வி திருமதி கனிமொழி அவர்களின் பேட்டி!

அந்த கட்டுரையில்.... மாடியில் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து விட்டு  திரு முரசொலி மாறன் அவர்கள் வேகமாக மாடிப்படி  இறங்கி வருகின்றார்கள். கீழே சிறுமியாக நம் இப்போதைய திமுக பாராளுமன்றக்குழு தலைவர் திருமதி கனிமொழி அவர்கள்! அந்த சிறுமியை பார்த்து நின்று அய்யா முரசொலி மாறன் சொல்கின்றார் “உன் அப்பாவை எல்லா நேரத்திலும் அரசியல்வாதியாக இருக்க சொல்லாதே” என! பின் கார் கிளம்பி செல்கின்றது. சிறுமி கனிமொழி மேலே செல்கின்றாள்... அப்பாவை பார்க்கின்றாள்... “என்னம்மா உன் பெரிய அத்தான் என்ன சொல்லிட்டு போறான்?” என்கிறார் தலைவர்!

அந்த சிறுமிக்கு அந்த நேரத்தில் தன் தந்தையின் வாசகங்கள் மனதில் படியவில்லை. தன் பெரிய அத்தான் திரு.முரசொலி மாறன் சொன்ன வார்த்தைகள் தான் மனதில் பதிகின்றன! நான் நினைத்துப்பார்க்கின்றேன். பல சமயம் சில விவாதங்களில் “அபிஅப்பா நீங்க அவர் இடத்தில் இருந்து பாருங்க” என்னும் சொல் திருமதி கனிமொழி அவர்களிடத்தில் இருந்து வரும்! நான் அமைதியாகிவிடுவேன். இந்த இடத்தில் நான் நினைத்துப்பார்ப்பது ஒரு விஷயம்  .... நம் செயல்தலைவர் “அவரை நான் மட்டுமல்ல, என் தங்கை கனிமொழி மட்டுமல்ல எல்லோருமே தலைவர் என்று தான் அழைப்போம்” என்னும் வாக்கியம் பாருங்கள். அதுவும் உண்மை தான். நானே பலமுறை திருமதி கனிமொழி அவர்களிடம் கேட்டுள்ளேன். தலைவரை எப்படி அழைப்பீர்கள் என்று!

அதற்கு அவர்கள் ஒரு முறை  “தி ரோஸ் ஈஸ் தி ரோஸ் ஈஸ் தி ரோஸ்.... என சொல்லி சிரித்தபடியே... “நான் மட்டுமல்ல, அண்ணன் கூட ... அண்ணன் மட்டுமல்ல என் அம்மா கூட, பெரியம்மா கூட தலைவர்ன்னு தான் சொல்லுவோம்... மிக சில சமயம் நான் அப்பா என்பேன்....” என்றார். இந்த இடத்தில் நான் அய்யா முரசொலி மாறன் அவர்கள் ஒரு சண்டை போட்டுக்கொண்டே கீழே வந்து திருமதி கனிமொழி அவர்களிடம் (அப்போது சிறுமி என வைத்துக்கொள்ளுங்கள்) சொன்னது “எப்போதுமே அரசியல்வாதி என இருக்க சொல்லாதே”...

மனசாட்சியாக இருந்தாலும் கட்சி என வந்து விட்டால் குடும்பம் கூட கட்சி தான் எனத்தான் பார்த்துள்ளார் தலைவர் கலைஞர்!ஆனால் எனக்கென்னவோ அப்படி தெரியவில்லை. அப்படியாகின் “இதோ கீழே இறங்கி போகும் முரசொலி ஆசிரியர் என்ன சொன்னார் என்றோ அல்லது நம் கட்சி எம்.பி என்ன சொன்னார் என்றோ கேட்டிருக்க வேண்டும்! ஆனால் “உன் பெரியத்தான் என்ன சொன்னார்?” என கேட்கும் தொணி என்ன? ஒரு வேளை மனிரத்னம் படம் போல அஷோக்கை கவுதம் என்றோ , கவுதமை அஷோக் என்றோ வேண்டுமென்றே அழைக்கும் விஜயகுமாரின் உத்தியா?  யாமறியேன் பராபரமே!

இதையெல்லாம் விடுங்கள்! இன்னும் ஒரு கட்டுரை இருக்கு.... விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் கட்டுரை தான் அது! அதன் கடைசி வரிகள்!  நான் பார்த்தவரை இந்த பேட்டியாளர்கள், கட்டுரையாளர்கள் எல்லோருமே கடைசி பாராவில் கலங்க வைத்து விட்டனர். ரவிக்குமார் கட்டுரை போலவே தான் திரு சண்முகநாதன் கட்டுரையும்! “அய்யா, நான் 11 மணி வரை இங்க தான் இருக்கேன். என்னை திட்டுவீங்களே! அதற்காகவாவது கூப்பிடுங்கள்” என கதறிய போது கலங்காத நெஞ்சம் உண்டா? அது போலவே ரவிக்குமார் கட்டுரையும் முடிகின்றது..

// விட்ட இடத்தில் இருந்து தான் பேசுவார் அவர். அதாவது மனசில் நம்மோடு பேசிக்கொண்டு இருக்கின்றார். இப்போது அப்படியே தான்... அதாவது என்னோடு பேசிக்கொண்டு தான்  இருக்கின்றார். அது எனக்கு கேட்கின்றது// இந்த விரிகள் படிக்கும் போது தான் நான் அழுதேன்... ஆமாம் நானும் அதை உணர்ந்தேன்... விட்ட இடத்தில் இருந்து தான் அவர் கண்கள் பேசியது. நானும் அதை தொடர்ந்தேன். மௌனம் என்பது அழகிய மொழி என்பது எனக்கும் அப்போது தான் புரிந்தது. ரவிக்குமார் ... நீங்கள் நல்ல எழுத்தாளர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை!

பேராசிரியர் கட்டுரை... அடடா அருமை! தன் ஊர் அதாவது எங்கள் ஊர் மயிலாடுதுறை பற்றி பேசுகின்றார். அதில் மகாதானத்தெரு, பட்டமங்கலத்தெரு பற்றி பேசுகின்றார்.. அடடா... இந்த புத்தகத்தில் இரண்டு இடத்தில் மயிலாடுதுறை வருகின்றது. 1930களில் மயிலாடுதுறை, மாயூரநாதர் கோவில் பிரவேசம் பற்றிய ஒரு இடத்தில் மற்றும் பேராசிரியர் கட்டுரையில் வருகின்றது. அதில் மகாதானத்தெருவை மகாதேவத்தெரு என எழுத்துப்பிழையா அது அல்லது சொற்ப்பிழையா என தெரியவில்லை. எனக்கு பேராசிரியர் ஞாபக சக்தியில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. இதை அடுத்த பதிப்பில் திருத்துவார்கள் என நம்புகிறேன். அது போல “ர்” விட்டுப்போன ஒரு இடம் இருக்கு! அது எல்லாம் பெரிய குறை இல்லை இத்தனை பெரிய பொக்கிஷத்தில்!

அண்ணன் துரைமுருகன் கட்டுரை.... ஒரு சமயம் கடையநல்லூரில் இருந்து ராஜாமணி என்கிற தொண்டர் வந்தார். வந்ததும் தன் மாவட்ட உள்ளூர் கோஷ்டி சண்டையை நீளமாக விவரித்தார். கலைஞருக்கு கோபம் வந்தது. “என்னய்யா நான் உசிரை கொடுத்து கட்சியை காப்பாத்திகிட்டு இருக்கேன். நீங்க சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க”ன்னு செல கோவமா திட்டிட்டார். வந்தவர் போய்விட்டார். பின்னர் என்ன நினைத்தாரோ தலைவர். உடனே எங்களை கூப்பிட்டு அவரை அழைத்து வர சொன்னார். அந்த தொண்டர் பஸ்ஸ்டாண்டு போய்விட்டார். நாங்கள் அவரை பிடித்து அழைத்து வந்தோம். உடனே தலைவர் “யோவ்... நான் என்னவோ கோவத்தில் இருந்தேன். நீ உன் குறையை சொல்ல வந்திருக்க ... இத்தனை தூரம் பயணம் செஞ்சு! நான் பாட்டுக்கு என் கோவத்தை கொட்டிட்டேன். என்னை மன்னிச்சுடுய்யா” என்றார். அந்த பெரியவர் அழுதுவிட்டார். இது தான் கலைஞர் என்று தன் கட்டுரையில் சொல்லி இருக்கின்றார். அண்ணன் துரைமுருகன் போன்றவர்கள் பல நூல்கள் எழுதலாம். அத்தனை கருக்கள் இருக்கின்றன அவர்களிடம்!

இதே போல ஒரு முறை தங்கம் தென்னரசு சார் ஒரு விஷயம் சொன்னார்... “ஒரு முறை ஒரு முக்கியஸ்தர் வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. வந்தவுடன் தலைவர் “ஏன்யா லேட்டு?” என்றார். அதற்கு அவர் “மவுண்ட் ரோட்டுல ரொம்ப ட்ராபிக் ஆகிடுச்சு தலைவரே”ன்னு சொன்னது தான் தாமதம். தலைவர் ரொம்ப கோபமாகிட்டார். “அடடே! அந்த மவுண்ட் ரோடு என்பது அண்ணாசாலை என கெசட்ல மாறிடுச்சுய்யா. இது கூட தெரியாம எப்படி?”ன்னு கேட்டார்” என சொல்ல சொல்ல நாங்கள் எல்லாம் “இதுக்கெல்லாமா கோவப்படுவாங்க” என்பது போல நான்  தங்கம் சாரை பார்த்தேன். “ஐஞ்சு பைச திருடினா தப்பா?” என அன்னியன் கேட்கும் டயலாக் தான் எனக்கு அவர் முகத்தில் தெரிந்தது. அப்போது காரை ஓட்டியது மதன்குமார். காரில் இருந்தது நான், சதக், அறந்தை ராஜுமுருகன், சூரியன் சக்தி, ஆரூர் பாலா... இது நடந்தது இந்த புத்தகம் வெளிவந்த மூன்று ஆண்டுகள் முன்பாக கத்தாரில். ஆனால் இப்போது வெளியான இந்த புத்தகத்தில்  தலைவர் கலைஞரின் நேர்முக உதவியாளர் திரு. ராஜமாணிக்கம் அவர்கள் பேட்டியில் இதே விஷயம் இருக்கின்றது. ஆக தலைவர் கலைஞர் அவர்களின் பர்ஃபெக்‌ஷன் என்பது எல்லா விஷயத்திலும் தெரிகின்றதா?

நான் சொல்ல வந்த விஷயத்தில் கொஞ்சம் கூட சொல்லி முடிக்கவில்லை... நிறைய இருக்கின்றது அந்த புத்தகம் பற்றி!

எனக்கு இந்த புத்தகம் பரிசளித்த என் அன்பு அண்ணன் திரு. கு.மா.பா. இளங்கோவன் அவர்களுக்கு நன்றிகள்!

பின்னர் மீண்டும் தொடர்கின்றேன்....