பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 19, 2011

மயிலாடுதுறை தீவிபத்து!!!

இன்று மாலை ஒரு 6.30 இருக்கும். மயிலாடுதுறை கொத்ததெரு தம்பிக்குநல்லான் பட்டிணம் வாக்குசாவடியில் வாக்குப்பதிவு எல்லாம் முடிந்து வாக்கு இயந்திரம் சீல் எல்லாம் வைத்து விட்டு அதை சேகரித்து போகும் லாரி வருகைக்காக எல்லா கட்சியினரும் காத்து கொண்டு இருந்தோம். எப்போது வண்டி வரும் என யாருக்கும் தெரியாது. ஒரு முறை இரவு 3 மணிக்கு கூட வந்து சேகரித்து சென்றது. அது வரை எல்லா கட்சியினரும் கட்சி பேதம் இன்றி ஒன்றாக டீ சாப்பிடுவதும், எத்தனை சதவீதம் பதிவு ஆனது என்கிற இன்ன பிற விஷயங்கள் பேசிக்கொள்வதுமாக இருப்பர். அதுவும் அந்த எங்கள் வார்டு கொஞ்சம் பதட்டம் வாய்ந்த வார்டு. . திமுக நகரசெயலர் குண்டாமணி என்கிற செல்வராஜும் அதே வார்டு வேட்பாளர். அதே போல அதிமுக நகர செயலர் செந்தமிழனும் அதே வார்டு . செந்தமிழனின் சகோதரி தான் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் அதிமுகவுக்கு. அதனால் எல்லோருமே அங்கே நின்று கொண்டு இருந்தனர். அப்போது தான் என் தம்பி செல்லிடபேசியில் ஒரு அழைப்பு வந்தது. கம்பனி ஆள் தான் பேசினான். "சார், நான் பெரியகடை தெருவில் தான் இருக்கேன். இங்கே ஜனதா ஃபுட்வேர் கடையில் தீ பிடித்து விட்டது, இப்ப தான் அதில் உள்ளே இருப்பவர்கள் வெளியே ஓடி வந்து கொண்டு இருக்கிறார்கள்" என சொன்ன போது அங்கிருந்த எல்லோருக்கும் கிட்ட தட்ட அதே நேரத்தில் அதே போல அழைப்பு.

மற்ற ஊர்களை போல அல்ல மயிலாடுதுறை. மிகப்பெரிய ஊர் எல்லாம் இல்லை. ஆனால் சுற்று வட்டார டெல்டா விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே டவுன் இது தான். கடைதெரு என பார்த்தால் இரண்டே தெரு தான். ஒட்டு மொத்த நெரிசலும் அங்கே தான் இருக்கும். அதே தெருவில் தான் மாயவரத்து மகா பெரிய ஜவுளி கடைகளும், உலகப்புகழ் பெற்ற ஏ.ஆர். சி நிறுவன நகைக்கடைகளும், பெரிய மளிகை கடைகளும் , ஹோட்டல்களும், இரும்பு கடைகளும், வெடிக்கடைகளும் என கலந்து கட்டி இருக்கும். சுற்று வட்டார எல்லா மக்களும் அங்கே தான் தீபாவளி வியாபாரம் செய்ய வந்திருப்பர். அதும் இன்று நகரத்தில் தேர்தல் நாளாகியதால் காலையில் ஓட்டு போட்டு விட்டு அரசாங்க விடுமுறையை குடும்பத்துடன் உல்லாசமாக கழித்து தீபாவளி "பர்சேஸ்" முடித்து கொண்டு போகலாம் என கடைத்தெருவே ஒரே கூட்ட நெரிசல்.

எள் போட்டால் எள் எடுக்க முடியாது என்பார்களே அப்படி ஒரு கூட்டம். நான் மதியம் அந்த பக்கம் போன போதே அப்படி ஒரு கூட்டம். அதும் தீப்பிடித்ததாக சொல்லப்படும் இந்த கட்டிடம் ஜனதா செருப்புகடை ஒரு மூன்று மாடி கட்டிடம். கேரளாவில் இருந்து பிழைப்புக்காக மாயவரம் வந்த இஸ்லாமிய சமூகத்து மக்கள். ஒரு சின்ன டீக்கடை ஆரம்பித்து இன்று இந்த அளவு முன்னேறி வருபவர்கள். நல்ல உழைப்பாளிகள். அதிலே தீப்பிடித்தால் என்ன ஆகும்? வரிசையாக கடைகள். அதும் பக்கத்து பக்கத்து கடைகள் எல்லாம்... நாகோடா ஜூவல்லரி, கல்யாணி கவரிங் என கடைகள், தவிர பெரியநாயகி மளிகை என்னும் பெரிய கடை, வாசன் காபி தூள் போன்ற கடைகள். அதன் இடது பக்கமோ மிகப்பெரிய "கறார் ஜவுளி கடை" . எதிர் வரிசையில் ஏ ஆர் சி கடைகள் என வரிசையாக கடைகள்.

கடைகள் போகட்டும், அதில் உள்ளே இருக்கும் மக்கள் கதி என்ன என்ற பதட்டம் இங்கே பூத்தில் இருக்கும் ஒட்டு மொத்த அரசியவாதிகளையும் ஆட்டிவிட, ஓட்டு பெட்டியாவது ஒன்றாவது என போட்டு விட்டு எல்லோரும் அங்கே ஓடினர். நான் வீட்டுக்கு வந்து பின்னே அங்கே போகலாம் என நினைக்கும் போதே அமரிக்காவில் இருந்து மயிலாடுதுறை சிவாவின் தொலைபேசி. அடுத்து சீமாச்சு அண்ணன், அண்ணி என வரிசையாக தொலைபேசிகள். இவர்களுக்கு எப்படி அதற்குள் தெரியும் என நான் நினைத்து கொண்டிருக்கும் போதே பதிவர் மயில்ராவணனிடம் இருந்து தொலைபேசி. சரியென நினைத்து கலைஞர் செய்திகள் வைத்தால் அதில் பிளாஷ் நியூஸ் என ஓடுகின்றது. அதற்குள் குடந்தையில் இருந்து என் அக்கா விடம் இருந்து தொலைபேசி. கலைஞர் செய்திகளில் "மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் மூன்றடுக்கு வணிக வளாகத்தில் தீ... உள்ளிருக்கும் மக்களின் ஓலம். ஒரு தீயணைப்பு வண்டி மட்டுமே இருப்பதால் தீயை அணைக்க சிரமம்...." இப்படியாக செய்தி ஓடுகின்றது. ஆன்லைனில் முகநூலில் இருந்த தோழர் அன்சாரி "அண்ணே எத்தனை சதம் ஓட்டு பதிவு ஆகியது, என கேட்க நான் இந்த விஷயத்தை சொன்னேன், அதற்கு அவர் "அப்படியா முதலில் அங்கே போங்க. உங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்யுங்க" என சொன்னார்.

நான் உடனே அங்கே போன போது பெரியகடை தெரு குஜ்னி பேப்பர் மார்ட் முன்பாகவே வண்டிகள் செல்ல முடியாத அளவு கூட்டம். கடைத்தெருவில் முழுக்க முழுக்க இருட்டு. கிட்ட தட்ட ஒரு பத்தாயிரம் மக்கள் கூட்டம். தீயணைப்பு வண்டிகள் ஒரு பத்து இருக்கும். இத்தனைக்கும் காவிரி ஒரு 200 மீட்டர் தூரம் தான். காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதனால் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. வந்த எல்லா தீயணைப்பு வாகனத்திலும் போதுமான அளவு தண்ணீர் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் எந்த வண்டியும் உள்ளே செல்ல முடியா வண்ணம் பாழாய்ப்போன பார்வையாளர்கள். க்யூரியாசிட்டியின் உச்சம். எப்படி எரிகின்றது என பார்க்கும் ஆர்வமும், அதை தன் செல்போனில் படம் பிடித்து அதை நண்பர்களிடம் காட்டி மகிழ அல்லது ஏதோ ஒன்று.. பகிர்ந்துக்கனும் என்கிற ஆர்வம் தான் அதிகமாக தெரிந்தது. அந்த ஜனதா செருப்பு கடை முழுக்க எரிந்து போயிருந்தது. அதன் மேல் மாடி தகதகவென எரிந்து கொண்டிருக்க அதன் மேல்மாடியில் பற்றிய தீ வடக்கே (காவிரி இருக்கும் திசையில்) பரவி அதே தெருவின் முனையில் பெரியகடைதெரு அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி வரை வந்து விட்டது. அந்த அர்சனா வில் இருந்து நான்காவது கடையில் இருந்து வரிசையாக வெடிக்கடைகள்.

மக்கள் கூட்டம் அதிகம். தீபாவளி பர்சேஸ்க்காக வந்த மக்கள் அலறி ஓடிவிட, வேடிக்கை பார்க்க வந்த மக்கள் தான் மிக அதிக தொல்லை கொடுத்து கொண்டு இருந்தனர். "மேன் லிஃப்டர்" வாகனம் எதும் உள்ளே நுழைய முடியவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி தெருவிளக்கு போட பயன்படுத்தும் "மேன்லிஃப்டர்" வாகனம் அந்த எரியும் கடை முன்னே முதலிலேயே வந்தது கூட்டத்தின் உள்ளே மாட்டிக்கொண்டு நிற்க வந்த தீயணைப்பு வீரர்கள் அதிலே ஏறி அந்த கட்டிடத்தினை நெருங்கும் போது கூட்டம் விசில் அடித்தும் ஆரவாரித்தும் செய்த கூத்துகள் மகா அசிங்கம்.

ஒரு கட்டத்தில் திமுகவின் நகரசெயலர் குண்டாமணி, அதிமுக செந்தமிழன் ஆகியோர் கூட்டத்தினரை வேட்டியை மடித்து கட்டி கொண்டு ஒரு பெரிய கம்பை எடுத்து கொண்டு தள்ளி வழி ஏற்படுத்தி கொடுக்க ஒரு நான்கு தீயணைப்பு வாகனம் உள்ளே வந்தது. இத்தனைக்கும் எரியும் கடையின் லெதர் பொருட்கள் ஒருவித துர்நாற்ற புகையை கக்க சிலருக்கு மூச்சு முட்டி மயக்கம் வந்தது. பீய்ச்சி அடித்த தண்ணீரால் சாலைகள் ஒரு சாண் அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனாலும் அதை எல்லாம் யாரும் பொருட்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதில் மட்டுமெ குறியாக இருந்து தொலைத்தனர்.

அப்போது ஓ.எஸ் மணியன் அதிமுக எம் பி வர அவர் பின்னால் ஒரு ஐம்பது பேர் வர ஒரு பாழாய் போனவன் வாழ்க கோஷம் போட அவர் அவனை "புட்ரா அவனை புட்ரா" என திட்ட அவன் ஓடிப்போக அவர் தன் கூட வந்தவர்களை வர வேண்டாம் என சொல்லிவிட்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு செந்தமிழன், குண்டாமணி ஆகியோர் இருந்த இடத்துக்கு போய்கொண்டே தன் செல்லிட பேசியால் யாருக்கோ பேசிக்கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் அங்கே ஒரு சுழல் விளக்கு காரில் டவாலி வர கூடவே நாகை ஆட்சியரும் வந்தார். அதற்குள் தேமுதிக எம் எல் ஏ பால அருள்செல்வன், பாஜகவின் நாஞ்சில்பாலு, திமுகவின் எஸ்கொயர் சாதிக், வர்தகர் சங்க பாண்டு, சீமாட்டி பாய் எல்லோரும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக கூட்டத்தை ஒழுங்கு செய்ய அதற்குள் அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி பெரும் சத்தத்துடன் கொழுத்து விட்டு எரிய தொடங்கியது. அதற்குள் ஒரு நான்கு தீ வண்டிகள், எரிந்து கொண்டிருக்கும் கடைகளை விடுத்து எரியாத கடைகள் மேல் சுத்தமாக தண்ணீர் ஊற்றி நனைத்து விட்டது. அதனால் தீ பரவுவது முதலில் தடுக்கப்பட்டது.

பின்னர் தன் உயிரை பணயம் வைத்து இரு வீரர்கள் ஒரு வழியாக அந்த ஜனதா செருப்புகடை மாடிக்கு தாவி ஏறி (அதற்கு முன்னதாக தன்னை தானே தண்ணீரால் நனைத்து கொண்டனர்) நெருப்பை அணைக்க, அது வரை தீயின் வெளிச்சத்தில் எரியும் இடமாவது தெரிந்து கொண்டிருந்தது போய் கும்மிருட்டில் ஒரே புகை மண்டலம் ஆகியது.

அதற்குள், ஓ எஸ் மணியன் போனில் பக்கத்து பக்கத்து ஊர்களில் இருந்து தீ வண்டி வரவழைத்து விட , ஆட்சியர் வந்தவுடன் முதல் வேலையாக அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை எல்லாம் மூட சொன்னார். (நான்கு நாட்கள் பின்னர் மாலை 5 மணிக்கு தான் டாஸ்மாக் திறக்கப்பட்டது) பின்னர் காவிரியில் இருந்து எரியும் இடம் வரை அந்த தீ வண்டிகள் சகஜமாக போய் வரும் அளவு வசதியாக "பார்வையாளர்கள்" எவனும் இருக்காதபடி வழி ஏற்படுத்தி கொடுக்க திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, காங்கிரஸ் எல்லாம் கை கோர்த்து யாரையும் விடாமல் நிற்க, பின்னர் தான் தீயணைப்பு வீரர்கள் அங்கே பம்பரமாக சுழண்டு சுழண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நான் மெல்ல வெளியேறி வீட்டுக்கு வந்தேன். மணி இப்போது பத்து. ஆனால் இன்னனும் தீ நின்ற பாடில்லை. ஆனால் உயிரிழப்பு இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நிம்மதி. (திமுக குண்டாமணிக்கு சட்டையே காணும், அது போல எப்போதும் ஜவுளிக்கடை பொம்மை போல அசங்காமல் மொட மொட வெள்ளையில் உலாவரும் செந்தமிழன் மடித்து கட்டிய வேட்டியும் கசங்கிய கரிபிடித்த சட்டையுமாகவும், தேமுதிக அருள்செல்வம் எம் எல் ஏ அலங்கோலமாகவும், நாஞ்சில் பாலு கரிபடிந்த முகத்தோடும், கைகோர்த்து நிற்க....ஒரு இயற்கை பேரிடர் வந்தால் தான் நாங்கள் ஒற்றுமையாக இருந்து தொலைவோம் என நீங்கள் சொன்னால் எத்தனை பேரிடர்களையும் நாங்கள் தாங்குவோம் என நினைத்து கொண்டே வந்து சேர்ந்தேன். என்னைப்போலவே எல்லா மயிலாடுதுறையானும் நினைத்திருப்பான் அதை காணும் போது என்றே நினைக்கிறேன்!


October 9, 2011

பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும் !!!


இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் திமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளரும் , தளபதி அவர்களின் உற்ற தோழருமான தோழர் திரு ஹசன் முகமது ஜின்னா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் கூறிய அந்த வார்தைகளை நான் கேட்க கேட்க மகிழ்வின் உச்சத்துகே சென்றேன். அவர் சொன்னது இது தான். "நேற்று தலைவர் கலைஞர் அவர்களை அறிவலயத்தில் சந்தித்த போது முகநூலில் நீங்கள் எல்லோரும் எழுதியதை நகல் எடுத்து கொடுத்தேன். உங்கள் பதிவுகளை எல்லாம் தலைவர் படித்தார்.... என மேலும் மேலும் சொல்ல எனக்கு அதற்கு மேல் காதில் எதும் விழவில்லை. உடனே என் அம்மாவிடம் போனை கொடுத்தேன். அம்மாவிடமும் திரு.ஜின்னா அவர்கள் விஷயத்தை சொன்ன போது 'அந்த மவராசன் என் பையன் எழுதியதை படிச்சாராப்பா" என நா தழுதழுக்க நான் உணர்சிக்குவியலாய் இருந்தேன்.

பின்னர் ஒரு அரைமணி நேரம் கழித்து அவரே எனக்கு தொலைபேசி "நான் நடந்ததை அப்படியே என் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கேன். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அங்கே இட்டுள்ளேன்" என கூறினார். அவரது முகநுலில் எழுதியதை இங்கே தருகின்றேன்.

=================================================

நேற்று இரவு தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்தேன், தினத்தோறும் தலைவர் கலைஞர் அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தாலும் அவரை புதிதாக பார்க்கின்ற அனுபவத்தையே தலைவர் கலைஞர் ஒவ்வொருமுறையும் ஏற்படுத்துவார். என்னை குழந்தையாய் கையில் எடுத்து கொஞ்சியிருக்கிறார். சிறு வயது முதல் அவரை நான் பார்த்துவந்தாலும் என்றும் எனக்கு அவர் பிரமிப்புதான்.
தலைவர் கலைஞர் அவர்கள் அறைக்கு உள்ளெ சென்றவுடன் “என்ன? என்று பாசத்துடன் ஒரு வார்த்தை கேட்டார். ஃபேஸ்புக்கில் தலைவர் அவர்களை பற்றி இணையத்தினர் எழுதியுள்ள கருத்துகளை கொண்டுவந்திருக்கிறேன் எனச் சொல்லி கையிலிருந்த ப்ரிண்ட் அவுட்களை தலைவர் கையில் கொடுத்தேன்.
அறிவாலயத்திலிருந்து கிளம்புகின்ற அலர்ட் பி,எஸ்.ஓ கொடுத்துவிட்டதால் தலைவர் கையில் வாங்கி வீட்டில் போய் படிப்பார் என்று நினைத்தேன். கார் தயாராக நிற்கிறது. எல்லோரும் தயார் நிலையில் இருக்கிறார்கள். தலைவர் கையில் வாங்கியதை அப்படியே வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்றில்லாமல் அங்கேயே பிரித்து படிக்கத்தொடங்கினார். அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும் அருகிலிருந்து விளக்கினார். டி.கே.எஸ் அவர்களிடம் தலைவர் படிப்பதை அப்படியே வீடியோ எடுங்கள் ஃபேஸ்புக்கில் போடுவோம் , நண்பர்கள் மகிழ்வார்கள் என்று சொன்னவுடன் அவருடன் அதனை உடனே படம்பிடித்தார்.
இரண்டுபக்கம் தாண்டியவுடன் தலைவர் நிமிர்ந்து இனாமுல் யார் என்று கேட்டார். கழகத் தோழர் , தொடர்ந்து கழகத்திற்காக எழுதிக்கொண்டிருப்பவர் என்று சொன்னேன். தொல்காப்பியன் பக்கம் வந்தவுடன் மீண்டும் இன்னொரு முறை படிக்கத் தொடங்கினார். நான் உடனே சொன்னேன் மயிலாடுதுறையை சேர்ந்தவர், இணையத்தில் எங்கெல்லாம் கழகத்தை விமர்சிக்கிறார்களோ அங்கு இவர் , அப்துல்லா, யுவகிருஷ்ணா உள்ளிட்ட பல நண்பர்கள் பலர் பதிலடி கொடுக்கக்கூடியவர்கள் என்றேன். காதில் கேட்டுக்கொண்டே படிப்பதை தொடர்ந்தார். திடீரென்று வைரமுத்து தி.மு.க என்று ஒருவர் எழுதியிருக்கிறாரே என்றார், ஆம், இவரும் மதுரைக்கரார்தான் என்றேன். எல்லோருடைய பதிவுகளையும் நிதானமாக படித்தார். பலரும் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி கலைஞ்சரிடம் கர்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று புத்தகம் எழுதிய கோவி.லெனின் கூட தன்னுடை பார்வையை பதிந்திருக்கிறார் என்றேன், ம்! பார்த்தேன் என்றார் தலைவர். அத்தனை குறுகிய நேரத்தில் எல்லாவற்றையும் படித்துமுடித்துவிட்டு எழுதிய பெயர்களை நினைவும் வைத்துக்கொண்டு பார்த்தேன் என்று சொல்கிறாரே என்பதை வழக்கம்போல் வியந்தேன்.
படித்துமுடித்துவிட்டு பேப்பரை நீட்டினார் நான் அதை வாங்க, என்னிடம் கொடுக்க மறுத்து தலைவருடய உதவியாளர் நண்பர் நித்யாவிடம் கொடுத்தார். காரனம் ஒருவேளை வீட்டிலும் போய் இன்னும் நிதானமாக படிக்கலாம் என்று நினைத்திருப்பார்.
நான் என் கையில் இருந்த என் ஐபோனை தலைவரிடம் நீட்டி ஃபேஸ்புக் பக்கத்தை காட்டி இதில் வந்திருப்பதைத்தான் தலைவர் படித்தீர்கள் என்றேன், ஐபோனையும் கையில் வாங்கி அதிலும் படித்தபோது என்ஃபீல்டர் பதிவு இருந்தது, நான் என்ஃபீல்டர் யார் என்பதை சொன்னவுடன் அப்படியா என்று வியந்து கேட்டார்.
ஃபேஸ்புக்கில் இணையதள தி.மு.க, இனமான இணைய தி.மு.க இப்படி பல க்ரூப்களை இளைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னேன். மேலும் இணைய நண்பர்களை ஒருங்கினைத்து சமீபத்தில் பெரியார் திடலில் மெல்வின் என்கிற நண்பர் கூட்டம் நடத்தினார், தலைமை கழக பேச்சாளர்கள் ஒப்பிலாமணி, இளம்பரிதி போன்றவர்கள் கலந்து கொண்டு அவர்கள் பேச்சுக்கு இந்த பக்கங்களிலிருந்து பலவற்றை பயன்படுத்திகொள்கிறோம் என்று சொன்னார்கள் என்பதை சொல்லி 2011 தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு நண்பர் ”விக்கல் நிற்க விஷம் குடித்த தமிழக மக்கள்” என்று பதிவு செய்திருந்தார் என்பதை கேட்டவுடன் என்னது? என்று மீண்டும் கேட்டு நன் சொன்னதற்கு வாய் விட்டு சிரித்தார். கலைஞர் ஆட்சியில் நடந்த திருமணங்கள் ரத்து கணவன்கள் கொண்டாட்டம், மனைவிகள் திண்டாட்டம் என்ற பதிவையும் சொன்னவுடன் மிகவும் ரசித்தார் தலைவர் கலைஞர். நம் நண்பர்களின் அனைத்து பதிவுகளையும் தலைவர் படித்தார் என்ற திருப்தியுடன் தலைவரிடம் சொல்லிவிட்டு வெளிவந்தேன். அதன்பிறகு தலைவர் அந்த அறையைவிட்டு காருக்கு செல்ல நண்பர் வினோத் அழைத்துக்கொண்டு வந்தார். தலைவர் காரில் ஏறுகிற நேரத்தில் என்னை பார்த்து வருகிறேன் என்று சொல்லி மெதுவாய் சிரித்தார். அந்த சிரிப்பில் என் உழைப்பை இன்றைய இளையதலைமுறையும் அறிந்திருக்கிறார்கள், என் உழைப்பு வீன்போகவில்லை என்கிற பெருமிதம் தெரிந்தது
===================================================

மேலே இருக்கும் வரிகள் தான் அவரது முகநூலில் எழுதிய வாசங்கள். அவரது முகநூல் ஐடி http://www.facebook.com/profile.php?id=100000241241891 அதிலே வீடியோவும் காணக்கிடைக்கும்.

இந்த ஒரு சின்ன அங்கீகாரம் போதும். நாங்கள் திராவிடமுன்னேற்ற கழகம் என்பது ஒரு பேரியக்கம். ஒன்னரை கோடி உறுப்பினர்கள். நான் கடைசி தொண்டன். என் எழுத்தை படிக்கும் என் தலைவன். இதை உலகில் எந்த ஜனநாயக கட்சியில் காணமுடியும்? சொல்லுங்கள் தோழர்களே!

ஒரு தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள நெருக்கம் , பாசம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் திமுகவை விட்டால் வேறு ஏது கட்சி இருக்கின்றது இந்த உலகில்?

இரண்டு வருடம் முன்னே ஒரு ஜூன் மாதம் இரண்டாம் தேதி, மயிலாடுதுறையின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் மிசா. அ. செங்குட்டுவன் மரணப்படுக்கையில் இருக்கின்றார். வாழ் நாள்வரை பெரியார் வழியில், அண்ணா வழியில், கலைஞர் வழியில் வாழ்ந்த அக்மார்க் நாத்திகன். எல்லா கட்சி உறுப்பினர்களும் போய் பார்கின்றனர். அவர் கண்களில் இருந்து கண்ணீர். "அண்ணே ரொம்ப வலிக்குதா" எனக்கேட்ட ஒருவரிடம் "இல்லை நான் மிசாவை பார்த்தவன். எனக்கு உடல் உபாதை வலிக்கும் போதெல்லாம் என் தம்பி ஸ்டாலின் மிசாவில் பூட்ஸ்காலால் மிதிபட்ட போது இது போல வலித்து இருக்குமா, அல்லது இதை விட அதிகமாக வலித்து இருக்குமா என எனக்கு நானே பட்டிமன்றம் நடத்திப்பேன்" என சொல்கிறார். கேட்டவர்கள் கலங்கி போனார்கள். ஒரு கட்டத்தில் அவர் கண்களில் கண்ணீர். "அண்ணே, ஏன் அழுற?" என கேட்டோம். "இல்லடா தம்பிங்களா, நான் கடவுள் இல்லைன்னு கடைசி வரை இருந்துட்டேன். இப்ப இருந்தா நல்ல இருக்கும்னு தோணுது" ( மக்களே தசாவதாரத்தில் மட்டும் கமல் குழப்பியது போல) . அதுக்கு ஒரு உடன்பிறப்பு " அண்ணே, சரி சரி வா வா எதுனா கோவிலுக்கு" என கூப்பிட்ட போது " போடா போட பொறம் போக்கு, நான் உசிரோட இன்னும் ஒரு நாள் இருக்கனும்னு நினைச்சது வேற காரணம். நான் இன்னிக்கு செத்தா திமுக கொடி எல்லாம் மாயவரத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும், அது கூடாது. ஏன்னா விடிஞ்சா என் தலைவன் பிறந்த நாள். ஜூன் 3. அன்னிக்கு நான் பார்த்து பார்த்து ஏத்துன கொடி எல்லாம் அரைக்கம்பத்தில் இருக்க எனக்கு மனசு வரலை. அதனால தான் சொன்னேன். கடவுள்ன்னு எவனாவது இருந்த சொல்லி அனுப்பு. நான் ஜூன் 3 அன்னிக்கு வர்ரேன்ன்னு" என சொன்னார்.

ஆனால் அவர் உயிர் பிரிந்தது. மயிலாடுதுறை நகரகழகம் தலைவர் பிறந்த நாள் காரணமாக சென்னை செல்வதா அல்லது என்ன செய்வது என தெரியவில்லை. தளபதியிடம் இருந்து செய்தி வருகின்றது. "அண்ணன் மிசா. அ. செங்குட்டுவன் உடல் அடக்கம் நடக்கும் வரை அங்கிருந்து யாரும் இங்கே வரக்கூடாது. நான் என்னால் இயன்ற வரை வருகிறேன்" என. பின்னர் பேராசிரியர் அன்பழகனார் முரசொலியில் கட்டம் போட்டுட்டார். அதாவது மயிலாடுதுறையில் திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என!

இது தான் திமுக! ஒரு தலைவனுக்கும் ஒரு தொண்டனுக்கும் இடையேயான ஒரு பாசப்பிணைப்பு!

வாழ்க திமுக! வாழ்க கலைஞர்! வாழ்க தளபதி!