பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 31, 2014

ஜெயலலிதா அம்மையாரின் சொத்து குவிப்பு வழக்கு - 18 வருடம் கடந்து வந்த பாதை!!!


செப்டம்பர் 20, 2014 - சரித்திரத்தில் இடம் பெறப்போகும் நாள். ஜெயா அம்மையார் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாள்.  கடந்த 28.08.2014 அன்று வாத, பிரதிவாதங்களை எல்லாம் முடித்து விட்டு  நீதிபதி டி குன்ஹா அவர்கள் எதிர்வரும் 20.09.2014 அன்று தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

நல்ல தீர்ப்பு நல்க இருக்கும்  நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா அவர்கள் 


 ஆக இடையே 23 முழு நாட்கள் உள்ளன. அந்த நீதிபதி சரியான தீர்ப்பை எழுத வசதியாக திமுகவினர் நாம் ஒவ்வொறுவரும்  தலைவர் எழுதிய "சொத்து குவிப்பு வழக்கு - ஒரு தொடர்கதை" என்னும் அந்த  புத்தகத்தின் ஆங்கில பதிப்பை அனுப்பி வைத்தால் அவருக்கும் இந்த வழக்கில் அம்மையார் இந்த 18.09.1996 அன்று எஃப் ஐ ஆர் போட்டதில் இருந்து தீர்ப்பு வர இருக்கும் 20.09.2014 வரை இந்த 18 ஆண்டுகளில் எத்தனை நீதிபதிகள், எத்தனை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அழுது விட்டனர், எரிச்சல் அடைந்தனர், கண்டித்தனர் என்ற சரித்திரம் முழுமையும்  அந்த நீதிபதிக்கும் புரியவரும். அந்த சொத்து குவிப்பு வழக்கின் இந்த 18 ஆண்டு சரித்திரத்தை என்னால் முடிந்த அளவு இங்கே சுருக்கமாக பதிகின்றேன். தலைவர் எழுதிய புத்தகத்தின் சாறு தான் இந்த பதிவு. அல்லது அந்த புத்தகத்தின் சுருக்கம் என்றோ அல்லது "புத்தக விமர்சனம்" என்றோ கூட வைத்துக்கொள்ளுங்கள் தோழர்களே!


தலைவர் கலைஞர் எழுதிய புத்தகத்தை சுமார்  81 தனித்தனி செய்திகளாக வரிசைக்கிரமமாக வடிகட்டி கொடுத்துள்ளேன் இங்கே. சொத்து குவிப்பு வழக்கு சொத்து குவிப்பு வழக்கு என்றெல்லாம் பேசும் பலருக்கு கூட அதன் முழுபரிமாணம் தெரியவில்லை. ஏனனில் இது ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். இந்த சொத்து குவிப்பு நடந்த போது பிறந்த குழந்தைகள் இன்று திருமணம் ஆகி பிள்ளைகுட்டிகளுடன் இரண்டு முறை தேர்தலில் ஓட்டும் போட்டு விட்டவர்கள். ஆகவே நம் இந்திய திருநாட்டின் மூத்த அரசியல்வாதியான மிகப்பழுத்த அரசியல் ஞானமும், அரசியல் அறிவும்,  ஞாபக சக்தியும் கொண்டு இந்த 91 வயதிலும் இதோ தன் தொகுதிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் குறித்துக்கொண்டு களமாட கிளம்பிவிட்ட வீர சிங்கம் டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய அந்த புத்தகத்தை சிலர் படித்து இருக்கலாம். பலர் படிக்காமல் கூட இருக்கலாம் என்பதால் நான் இங்கே அதை பிழிந்து சாறு எடுத்து கொடுத்துள்ளேன்.



 இதிலே நான், விசாரணையின் போது ஜெயா தரப்பினர் செய்த மாய்மாலங்கள், நாடகங்கள், பொய்கள், புரட்டுகள் இவைகளை பற்றி எல்லாம் சொல்லவில்லை. ஆனால் எப்படி இந்த 18 வருடம் இழுத்தடிக்கப்பட்டது என்பதை மட்டும் சொல்லி இருக்கின்றேன். எத்தனை நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஜெயா தரப்புக்கு சாதகமாக இருந்து வந்தனர், அதை எல்லாம் மீறி எப்படி நம் திமுகவின் பொது செயலாளர் பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்கள் இந்த வழக்கை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்பதை மட்டுமே இந்த பதிவில் சொல்லி இருக்கின்றேன்.  இப்போது படியுங்கள். இதை படிக்க கொஞ்சம் பொறுமை அவசியம். ஆனால் படித்து பாருங்கள். எத்தனை விதமாக நீதியை தங்களுக்கு சாதகமாக ஆக்க முயன்றனர் ஜெயா தரப்பினர் என்பது புரியும். இதோ இப்போது படியுங்கள்......



1. 1991 முதல் 1996 மே மாதம் வரை ஜெயா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தார். அவர் முதல்வராக ஆவதற்கு முன்னர் 01.07.1991 அன்று அவரே தாக்கல் செய்த அபிடவிட் டின் படி அவரது சொத்து மதிப்பு என்பது 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய்.



2.  ஐந்து ஆண்டுகள் அவர் முதல்வராக பதவி வகித்த பின்னர் 30.04.1996ல் அவரது சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாய். இத்தனைக்கும் அவர் அந்த 5 வருடத்தில் வாங்கிய சம்பளம் என்பது மாதத்துக்கு 1 ரூபாய் மட்டுமே. ஆக 5 வருடத்துக்கு சேர்த்து அவர் வாங்கிய சம்பளம் என்பது வெறும் 60 ரூபாய் மட்டுமே.



3. அவர் ஆட்சியில் இருந்த போதே, ஜெயா அவர்கள் ஊழல் செய்து சொத்து குவித்து வருவதாக அப்போதைய ஆளுனர் டாக்டர் சென்னா ரெட்டியிடம் திமுக சார்பாக 28 ஊழல்களை  பட்டியலிட்டு  (539 பக்கம்) கொடுத்தது. அதில் 25 வது ஊழல் தான் இந்த வழக்கு.



4. 15.04. 1995ல் இந்தியா டுடே பத்திரிக்கை ஜெயாவின் சொத்து குவிப்பு பற்றி நீண்ட கட்டுரை வெளியிட்டது.



5. சுப்ரமணிய சுவாமியும் ஆளுனரிடம் ஜெயா சொத்து குவித்து வருவதாகவும் அதனால் வழக்கு தொடர அனுமதி கொடுக்கும் படியும் ஆளுனர் டாக்டர் சென்னா ரெட்டியிடம் அனுமதி கேட்டார். அதன் காரணமாக சுப்ரமணிய சுவாமி மற்றும் சந்திரலேகா ஆகியோர் மீது அதிமுகவினர் 06.04.1995 அன்று ஜனதா கட்சி கூட்டத்தில் புகுந்து கற்கள் மற்றும் செருப்பால் அடித்து அராஜகம் செய்தனர்.

அப்போதைய தமிழக ஆளுனர் டாக்டர் சென்னா ரெட்டி அவர்கள்


6. ஆளுனர் சென்னாரெட்டி அவர்கள், வழக்கு தொடுக்க சுப்ரமணிய ஸ்வாமிக்கு அனுமதி கொடுத்தார். அதன் காரணமாக ஆளுனர் சென்னா ரெட்டியை திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஜெயா அவர்கள் 27.04.1995 அன்று தீர்மானமே போட்டார்.



7. சுப்ரமணிய ஸ்வாமி ஜூன் 14,1996ம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை சுட்டி காட்டி மனு தாக்கல் செய்தார்.

போலீஸ் அதிகாரி லத்திகாசரண் அவர்கள்


8. நீதிமன்றம், அப்போது போலீஸ் அதிகாரியாக இருந்த லத்திகாசரண், மற்றும் வி.சி பெருமாள் ஆகியோரை விசாரிக்கும் படி 26.06. 1996 அன்று உத்தரவிட்டது.



9. அந்த விராசணையை தடுக்க வேண்டும் என ஜெயா தமிழக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனால் சிறிது காலம் வழக்கு விசாரிக்கப்படவில்லை. பின்னர் உயர் நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது. உடனே ஜெயா தனக்கு முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் "முடியாது. இதில் ஊழலுக்கான முகாந்திரம் உள்ளது" என அதை தள்ளுபடி செய்தது.



10. பின்னர் போலீஸ் அதிகாரி வி.சி பெருமாள் தன் விசாரணையை நடத்தி இந்த வழக்கில் ஊழல் செய்தமைக்கான ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து திரு.நல்லம்ம நாயுடு அவர்களையும் அவர்களுக்கு துணையாக 16 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்தார். அந்த குழுவை அமைத்த தேதி 07.09.1996.



11. திரு.நல்லம்ம நாயுடு அவர்கள் எஃப் ஐ ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்த தேதி 18.09.1996 ஆகும்.



12 ஜெயாவின் வீட்டையும் , ஐதராபாத் திராட்சை தோட்டத்தையும் நேரில் சென்று சோதனை செய்ய திரு.நல்லம்ம நாயுடு அவர்கள் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட தேதி 16.10.1996.



13. அனுமதி கிடைத்த தேதி 06.12.1996. ஆனால் அன்றைய தேதியில் அம்மையார் ஜெயா அவர்கள் வேறு ஒரு வழக்கில் கைதாகி சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தார்.



14. ஆகவே அங்கு சென்று திரு.நல்லம்ம நாயுடு அவர்கள் ஜெயாவிடம் வீட்டை சோதனை செய்ய அனுமதி கொடுத்த நீதிமன்ற ஆணையை காட்டி அதன் படி ஜெயாவும் தன்  பிரதிநிதிகளாக (ரெப்ரசெண்டிடிவ் ஆக ) ஜெயராமன், விஜயன் ஆகியோரை நியமித்தார்.


ஜெயலலிதா மற்றும் சசிகலா (நகைகளுடன்)

15. அதன் பின்னர் 07.12.1996 முதல் 12.12.1996 வரை ஜெயாவின் வீடும், ஐதராபாத் தோட்டமும் சோதனை செய்யப்பட்டு அங்கே இருந்த தங்க, வைர நகைகள், வெள்ளி பாத்திரங்கள், ரொக்க பணம் எல்லாம் கைப்பற்றப்பட்டு அதிலே வெள்ளி பாத்திரங்கள் தவிர மற்றவை எல்லாம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அவைகள் சென்னை ரிசர்வ் பேங்கில் வைக்கப்பட்டன.வெள்ளி பாத்திரங்கள் ஜெயாவின்  பிரதிநிதியாக (ரெப்ரசெண்டேடிவாக )ஜெயாவால் நியமிக்கப்பட்ட ஜெயராமன் மற்றும் விஜயன் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டன. அவைகள் போயஸ் தோட்டத்துக்கு மீண்டும் எடுத்து செல்லப்பட்டன. (இது நடந்தது 12.12.1996, இதனால் வந்த சிக்கல் அதாவது வழக்கு இழுத்தடிக்கும் செயல் 17 வருஷம் கழித்து 2013ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வரும் பாருங்கள். அது இந்த பதிவின் பாயிண்ட் # 57)



16. பின்னர் இதற்காக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம்  முன்னிலையில் சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஜூன் 4, 1997ம் தேதி அன்று சென்னை தனி நீதிமன்றத்தில் ஜெயா அம்மையார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டு மற்றும் நான்காம் குற்றவாளிகள் சசிகலாவும் இளவரசியும்
மூன்றாம் குற்றவாளி சுதாகரன் அவர்கள் 


17. ஜூன் 5,1997ல் ஜெயா,சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது.



18. வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றம் சென்றனர். அது தள்ளுபடி ஆன தேதி அக்டோபர் 21, 1997. பின்னர் வழக்கில் அவர்களும் சேர்க்கப்பட்டு 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர்.



19. தனிநீதிமன்றம் அமைக்கப்பட்டது செல்லாது என ஜெயா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அது அங்கே தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அதே வழக்கை உச்சநீதிமன்றம் எடுத்து சென்றார். அங்கும் 14.05.1999 அன்று நீதிபதிகள் ஜி டி நானாவதி, எஸ்.பி.குர்துக்கர் ஆகியோர் அதை தள்ளுபடி செய்து தனி நீதிமன்றம் அமைத்தது சரி தான் என தீர்ப்பு அளித்தனர்.



***************************


 கிட்ட தட்ட இது வரை 5 வருடங்கள் முடிந்து விட்டன. இந்த ஐந்து வருடமும் அதாவது 1996 மே மாதம் முதல் 2001 மே மாதம் வரை திமுக ஆட்சி தான் நடந்து வந்தது. ஆயினும் ஜெயா தரப்பில் மிக சுலபமாக இந்த ஐந்து ஆண்டுகளும் வழக்கை செஷன்ஸ் கோர்ட், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தனி சிறப்பு நீதிமன்றம் என எல்லாவற்றிலும் மாற்றி மாற்றி தடை கேட்டு கேட்டு வழக்கை இழுக்கடிக்க முடிந்தது. ஆனால் மே மாதம் 2001ல் திமுக ஆட்சி போய் ஜெயா தலைமையிலான அதிமுக ஆட்சி வந்து விட்டது. பின்னர் அம்மையார் அந்த அரசு வழக்கை எப்படி இழுக்கடிப்பார் என்பதை இப்போது பார்ப்போம்....

**************************
ஓ.பன்னீர் செல்வம் அவர்கள்


20. மே மாதம் 2001ல் பதவி ஏற்ற ஜெயா அவர்கள் பதவி ஏற்றதே செல்லாது என 21.09.2001ல் உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. அதன் காரணமாக ஜெயா முதல்வர் பதவியில் இருந்து விலகி ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார்.




21. மீண்டும் 02.03.2002ல் இடைத்தேர்தலில் வென்று ஜெயா முதல்வர் ஆனார். அதுவரை வழக்கு ஆமை வேகத்தில் தான் சென்றது. மீண்டும் இந்த தனி நீதிமன்ற வழக்கு நவம்பர் மாதம் 2002ல் தான் தொடங்கியது. அப்போது தனி நீதிமன்ற நீதிபதியாக ஆர்.ராஜமாணிக்கம் இருந்தார்.



22. ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேரிடம் மீண்டும் விசாரணை என நீதிமன்றம் அறிவித்தது. அதன் படி அந்த விசாரணை பிப்ரவரி 2003 வரை நடந்தது. அந்த சாட்சிகள் இப்போது அதிமுக ஆட்சி நடந்தமையால் பல்டி சாட்சிகள் ஆயினர். உயிர் பயம் இருக்கத்தானே செய்யும் அவர்களுக்கும்..



23. அப்போது குற்றவியல் சட்டம் 313ன் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் வராமல் அவர்கள் இருப்பிடம் சென்று வாக்குமூலம் வாங்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக நடந்த இந்த அநியாயத்தை அரசு வழக்கறிஞர் கொஞ்சம் கூட ஆட்சேபிக்கவில்லை. ஏனனில் அவர் ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்.

வழக்கின் சூத்திரதாரியில் ஒருவரும் கழக பொது செயலாளருமாகிய பேராசிரியர் க.அன்பழகன் 


24. இதனால் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் விசாரணை அதிகாரிகளும் அரசு வழக்கறிஞரும் ஜெயாவுக்கே சாதகமாக செயல்படுவார்கள் எனவே வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.



25. சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 28, 2003ல் இந்த வழக்கு விசரணைக்கு தடை விதித்தது. அதன் பின்னர் உச்சநீதிமன்றம் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் வழக்கை விசாரித்து இந்த வழக்கை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் மாற்றியது . அப்படி மாற்றிய தேதி நவம்பர் 18, 2003.



26. அப்படி பேராசிரியர் அன்பழன் அவர்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எஸ்.எஸ்.ஜவகர் ஐ ஏ எஸ், என்.வி பாலாஜி என்னும் ஆடிட்டர் ஆகியோர் சாட்சிகள் பல்டி சாட்சிகள் ஆனதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ் .என். வரியவா, எச்.கே.சீமா ஆகியோர் குறிப்பிட்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றினர்.



27. அந்த தீர்ப்பில் நீதிபதிகள் ஜெயாவை "இவர்கள் நீதியில் குறுக்கிடுகின்றார்" என கடுமையாக எச்சரிக்கின்றனர்.



28. அந்த தீர்ப்பிலே நீதிபதிகள் "கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் கர்நாடக அரசோடு கலந்து பேசி இந்த வழக்குக்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதுவும் ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும், அது போல குற்றவியல் சட்டத்தில் மிக மிக அனுபவம் கொண்ட ஒரு மூத்த வழக்கரிஞரை அரசு வழக்கறிஞராக நியமித்து அவருக்கு ஒரு ஜூனியர் வக்கீலும் கொடுக்க வேண்டும். வழக்கை தினம் தினம் விடாமல் நடத்த வேண்டும். பல்டி சாட்சி சொன்னவர்களை விசாரித்து பல்டி அடித்தது உண்மை எனில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சாட்சிகளுக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையான உத்தரவு பிறப்பித்தனர்.



29. மேற்படி தீர்ப்பை வழங்கிய தேதி 18.11.2003. ஆனால் பெங்களூரில் நீதி மன்றம் அமைத்தாலும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விடுவிப்பு  செய்தால் தான் அங்கே வழக்கு தொடர முடியும். ஆனால் அம்மையார் ஆட்சி தமிழகத்தில் நடந்ததால் அந்த வழக்கை பத்து மாதங்கள் கழித்து தான் விடுவிப்பு செய்து பெங்களூருக்கு மாற்றியது. அப்படி மாற்றிய தேதி 10.09.2004. அதாவது இதற்கே எட்டு வருடங்கள் ஓடிவிட்டன. (அதன் பின்னர் பெங்களூரில் இந்த வழக்கு பத்து வருடங்கள் நடந்து வருகின்றது)



30. 28.03.2005ல் பெங்களூரு கோர்டில் வழக்கின் எல்லா ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தவிர தமிழக அரசுக்கும் கொடுக்கப்பட்டது.



31. அப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பப்புசாரே என்பவர். அவரிடம் ஜெயா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு செய்யப்பட்டது. பின்னர் 1 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது.



32. 18.04.2005 அன்று வரை நீதிபதி பப்புசாரே வழக்கை ஒத்தி வைத்தார். அன்றும் ஜெயா, சசி என குற்றம் சாட்டப்பட்டவர்கள் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஜெயா தரப்பு சீனியர் வக்கீல் கூட வரவில்லை.ஏன் என்று அவர் ஜூனியரிடம் நீதிபதி கேட்ட போது "சீனியர் வக்கீலுக்கு ஜுரம்" என காரணம் சொல்லப்பட்டது. அதற்கு நீதிபதி அவர்கள் "சரி அவர் வராமல் போகட்டும், ஆனால் ஜெயா, சசி , இளவரசி, சுதாகரன் எங்கே? இனியும் அவர்கள் வராவிட்டால் நான் இதை வராமையை காரணம் காட்டியே நீதிமன்ற தீர்ப்பை சொல்ல நேரிடும் என கடுமையாக எச்சரித்தார். பின்னர் மே மாதம் 9ம் தேதி 2005க்கு வழக்கை ஒத்தி வைத்தார்.



33. மே மாதம் 9ம் தேதியும் ஜெயா வரவில்லை. ஆனால் அவர் வழக்கறிஞர் நீண்ட அவகாசம் கேட்டார். எரிச்சல் அடைந்த நீதிபதி பப்புசாரே அவர்கள் "அதல்லாம் முடியாது. 16.05.2005 அன்று வழக்கை ஒத்தி வைக்கிறேன். அன்று ஜெயா, சசி உள்ளிட்ட எல்லோரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். கடந்த ஆறு மாதமாக நான் தினம் தினம் வந்து உட்காந்து விட்டு போகிறேன். எனக்கு தனிமை சிறையில் இருப்பது போல இருக்கின்றது என கோபமாக உத்தரவிட்டார். ஒரு நீதிபதியே தான் தனிமை சிறையில் இருப்பது போல இருக்கின்றேன் என கூறியது அகில இந்திய அளவில் நீதிமன்றங்களை அதிர வைத்தது. ஆனால் 16.05.2005 அன்றும் ஜெயா , சசி, உள்ளிட்ட யாரும் நீதிமன்றத்துக்கு வரவில்லை.அதன் பின்னர் நீதிபதி பப்புசாரே ஓய்வு பெற்றுவிட்டார். பிறகு நீதிபதி பி.ஏ.மல்லிகார்ஜுனையா பதவிக்கு வந்தார்.



34. 16.05.2005 அன்று ஜெயாவின் வழக்கறிஞர் தங்களுக்கு லண்டன் சொத்து குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கை தங்களுக்கு வேண்டும் என (இந்த வழக்குக்கு சம்பப்ந்தம் இல்லா வேறு வழக்கு அது) கேட்க அதற்கு நீதிபதி பி.ஏ.மலிகார்ஜுனையா அவர்கள் " இது வழக்கை இழுத்தடிக்கும் செயல்" என கடும் கோபத்துடன் எச்சரித்தார்.



35.மேலும் நீதிபதி அவர்கள் "சரி நான் தருகிறேன். அதை கொடுத்த பின் நாளை முதலாவது நீங்கள் வாதாட முடியுமா?" என கேட்டு விட்டு 1800 பக்க அந்த லண்டன் சொத்து குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிக்கையை கொடுத்தார். உடனே ஜெயாவின் வக்கீல் "இதை படித்து பார்த்து முடிக்க எனக்கு 3 வார கால அவகாசம் வேண்டும் என்றார். பின்னர் வழக்கு 25.05.2005 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.



36. ஜெயாவின் லண்டன் சொத்து குவிப்பு வழக்கு தனியே சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தூங்கி கொண்டு இருந்தது. அதை இந்த வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடுத்தார். அது வரை இந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த முடியவில்லை.  சில பல நாட்கள் விசாரணைக்கு பின்னர்  பெங்களூரு உயர்  நீதிமன்றம் அதற்கு அனுமதி கொடுத்தது.



37. பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கோடு லண்டன் சொத்து குவிப்பு வழக்கை சேர்த்து நடத்தினால் தேவை இல்லாமல் இழுத்தடிக்கும் செயல் இது என்று பேராசிரியர் அன்பழகன் அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று இந்த வழக்கை தனியாக நடத்த வேண்டும் என வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. பின்னர் பேராசிரியர் கோரிக்கையை ஏற்று பெங்களூரு சிறப்பு நீதி மன்றம் சொத்து குவிப்பு வழக்கை மட்டும் தொடர்ந்து விசாரணை செய்யலாம் என தீர்ப்பளித்தது.



38. இப்படியாக நான்கு ஆண்டுகள் பல வித வாய்தாக்கள் வாய்தாக்கள் என இழுக்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் 3.3.2010 அன்று 42 அரசு தரப்பு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை மாற்றம் செய்ய வேண்டிஅதே சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா தரப்பு ஒரு புதிய வழக்கு தாக்கல் செய்தது. அது 5.3.2010 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.



39. இதற்கிடையே சென்னை சிறப்பு நீதிமன்றம் லண்டன் சொத்து குவிப்பு வழக்கில் 5.6.1997ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய வழக்கு தொடுத்தார் ஜெயா. அதுவும் 10.3.2010ல் கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



40. உடனே கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த அந்த வழக்கை ஜெயா தரப்பு உச்சநீதிமன்றம் எடுத்து சென்றனர். ஒரு வழியாக உச்சநீதிமன்றம்  வழிகாட்டுதலின்படி இந்த சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணையை தொடரலாம் 3.5.2010 என நாள் குறித்தது சிறப்பு நீதிமன்றம்.



41. உடனே அதே சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா தரப்பினர் "இந்த விசாரணை முழுவதும் சட்ட விரோதம். எனவே இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்" என  18.04.2010ல் புதிய மனு தாக்கல் செய்தனர். அதை 27.04.2010ல் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே இதை எதிர்த்து ஜெயா தரப்பு உச்சநீதிமன்றம் சென்று புதிய மனு தாக்கல் செய்தனர்.



42. உச்சநீதிமன்றம் "இந்த மனுவை நீங்கள் எஸ்.எல்.பி மனுவாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வர தேவையில்லை. அதனால் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு சென்று அங்கே மனு தாக்கல் செய்யவும்" என சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர்.



43. மீண்டும் 07. 5.2010 அன்று விசாரணை நீதிமன்றத்தில் "இந்த வழக்கு பற்றி உச்சநீதிமன்றத்தில் 11.5.2010 அன்று விசாரணைக்கு வருவதாகவும், அதனால் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்து அது சிறப்பு நீதிமன்றத்தில் ஒத்துகொள்ளப்பட்டு விசாரனை ஒத்தி வைக்கப்பட்டது.



44. அதே மே மாதம் 2010ல் 70,000 பக்கங்கள் கொண்ட அந்த சொத்து குவிப்பு ஆவணங்கள் மூன்று காப்பிகள் வேண்டும் என ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு அதுவும் 26.6.2010ல் கொடுக்கப்பட்டது. அதுவரை விசாரணை இல்லாமல் ஆகியது.



45. உடனே 15.7.2010 அன்று இதே சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா சார்பில் அந்த 70,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை ஆங்கிலத்தில் வேண்டாம் என புதிய மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 21.7.2010ல் சுதாகரன் தரப்பிலும் அதே போன்று ஆங்கிலத்தில் வேண்டாம், தமிழில் தான் வேண்டும் என புதிய மனு கொடுக்கப்பட்டது. இவை இரண்டையும் 22.7.2010ல் சிறப்பு நீதிமன்றம் சில வழிகாட்டுதல்கள் கூறி நிராகரித்தார்.



46. உடனே சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயா தரப்பு கர்நாடக உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால் சாட்சிகள் வந்திருந்தும் சிறப்பு நீதிமன்றம் அவர்களிடம் விசாரிக்க முடியவில்லை. ஏனனில் குற்றவாளிகள் தரப்பு தான் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு போய் விட்டதே. அதனால் மீண்டும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.



47. மீண்டும் ஒரு வழியாக கர்நாடக உயர்நீதிமன்றம் அவர்களை சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தது. மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் 19.10.2010ல் விசாரணைக்கு தடை கேட்டனர். பின்னர் ஒத்தி வைப்பு... பின்னர் 16.11.2010, 18.11.2010 என ஒத்தி வைப்பு மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றம் செல்லுதல் பின்னர் 25.11.2010, பின்னர் அங்கேயும் நிராகரிப்பு பின்னர் 30.11.2010க்கு ஒத்தி வைப்பு, பின்னர் ஜெயா தரப்பு இதை எடுத்து கொண்டு உச்சநீதிமன்றம் சென்று புதிய மனு தாக்கல், அதன் பின்னர் வழக்கு 15.12.2010க்கு ஒத்தி வைத்தல்...பின்னர் நான்கு நாட்கள் விசாரணை, பின்னர் 18.1.2011க்கு ஒத்தி வைத்தல், பின்னர் வழக்கறிஞரின் தந்தையார் இறந்து விட்டதாக மீண்டும் ஒத்திவைத்தல், இப்படியாக பல முறை வாய்தாவும் மனு போட்டு தடுத்தலும் இடையிடையே சாட்சிகள் விசாரணை மற்றும் குற்றவாளிகள் விசாரணை ... இப்படியாக போய் கொண்டு இருந்த போது இங்கே தமிழகத்தில் திமுக ஆட்சி மாறி மே மாதம் 2011ல் ஜெயா தரப்பு அதிமுக ஆட்சிக்கும் வந்து விட்டது.



48. 2011ல் மத்தியில் இங்கே தமிழகத்தில் திமுக ஆட்சி மாறி அதிமுக ஆட்சி அமைந்து குற்றவாளி ஜெயா தமிழக முதல்வர் ஆனார். அதனால் வழக்கை சட்டமன்ற நாள், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம், என்றெல்லாம் காரணம் காட்டி மிக சுலபமாக இரண்டு வருடம் வாய்தா மேல் வாய்தா வாங்கி கடத்தினர்.

மனம் கொந்தளித்து பதவி விலகிய அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அவர்கள்..


49. அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த திரு. ஆச்சார்யா அவர்கள் மிகுந்த திறமை உள்ளவர் குற்றவியல் வழக்குகளில்.... அவரும் அதிமுக மற்றும்  முதல்வராக ஆகிவிட்ட ஜெயா அரசு கொடுத்த தொல்லைகள் காரணமாக வழக்கில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார்.  திரு.ஆச்சார்யா அவர்கள் பதவி விலகிய நாள் 17.01.2013. மே மாதம், 2011ல் ஜெயா தமிழக முதல்வராக வந்த பின்னர் திரு. ஆச்சார்யாவுக்கு கொடுத்த தொல்லைகளை அவரே தனது ராஜினாமாவை கொடுத்து விட்டு மனம் நொந்து புலம்பிவிட்டு தான் விலகினார். அவர் தன் ராஜினாமா கடிதத்தை கர்நாடக உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி திரு. விக்ரமஜீத் சென் அவர்களுக்கு அனுப்பிய போது அவர் அதை ஏற்கவில்லை. பின்னர் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்ற பின்னர் வந்த கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ஸ்ரீதர் ராவ் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டார். இதற்கெல்லாம்  முன்பாகவே பெங்களூரு சிறப்பு  நீதிபதி மல்லிகார்ஜுனா  ஓய்வு பெற்று சென்று அங்கே புதிய நீதிபதியாக பாலகிருஷ்ணா அவர்கள் வந்து விட்டார். அதே போல ஆச்சார்யாவுக்கு பதிலாக பவானிசிங் என்பவர் அரசு வழக்கறிஞராக ஆனார். அதனால் காட்சிகள் மாறின. வழக்கு வேறு வித போக்கோடு போனது. பவானிசிங் கிட்ட தட்ட ஜெயா தரப்பு வக்கீல் போலவே செயல்பட்டார். அதே போல நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களும் ஒரு மாதிரியாக நடந்து கொண்டார். நல்லவேளை அவர் ஓய்வு பெறும் நிலைக்கு வந்தார்.


திமுகவின் பேராசிரியர் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி (தர்மபுரி) திரு. தாமரைச்செலவன் அவர்கள்

50. வழக்கை உன்னிப்பாக கவனித்து வரும் திமுக தரப்பு, பவானிசிங் அவர்கள் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதை  கண்டுபிடித்தது. இதே போன்று தான் 2003ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் இதே வழக்கு நடந்த போது அரசு வழக்கறிஞர் அவர்கள் முதல்வராக இருந்த ஜெயாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் திமுகவின் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் வழக்கு தொடுத்து கர்நாடகாவுக்கு மாற்றினார். அதே போல பத்து ஆண்டுகளுக்கு பின்னர் 2013ல் தமிழகத்தில் ஜெயா ஆட்சி வந்ததும் கர்நாடகாவின் அரசு வழக்கறிஞரே இப்படி ஜெயா தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதால் திமுகவின் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் மீண்டும் பவானிசிங் அவர்களை நீக்கி வேறு நல்ல வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு தொடுத்த தேதி 2.2.2013.


 37 எம் பிக்கள் தங்கள் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டிய அரசு வழக்கறிஞர் உயர்திரு.பவானிசிங் அவர்கள்

51. இதில் தான் மிக மிக அதிசயமான இந்திய நீதிமன்றம் மற்றும் உலக நீதிமன்ற வரலாற்றில்  ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது ஜெயா தரப்பில் " எங்களுக்கு அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் தான் வேண்டும், அதே போல எங்களுக்கு நீதிபதியாக ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணா தான் வேண்டும் என பேராசிரியர் அன்பழகன் அவர்கள் மனுவில் (உச்சநீதிமன்றத்தில் இது நடந்தது) வாதிட்டனர். ஆனால் உச்சநீதிமன்றம்  கர்நாடக உயர்நீதிமன்றம் தான் பவானிசிங்கை நியமித்தது என்பதால் அவரை மாற்ற வேண்டும் எனில் கர்நாடக உயர்நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் அது போல ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணா மீண்டும் இதில் தேவை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியது.



52. அதே நேரம் கர்நாடக உயர்நீதிமன்றம் பேராசிரியரின் மனுவை விசாரித்து பவனிசிங்கை நீக்கி உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஜெயா தரப்பு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றது. அங்கே சென்று "எங்களுக்கு எதிராக வாதாட அரசு தரப்பில் திரு.பவானி சிங் தான் வேண்டும்" என்கிற விசித்திர வாதத்தை வைத்தது. மகா..ஸ்ரீ..ஸ்ரீ நீதிபதி சவுகான் அவர்கள் (உச்சநீதிமன்றம்) "அப்படியே ஆகட்டும்.. பவானி சிங் அவர்களே உங்களுக்கு எதிராக வாதாடட்டும்" என ஒப்புதல் கொடுத்தார் என்பது தான் விசித்திரம்.



*******************

இந்த வழக்குக்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒரு விஷயம் இங்கே இடையிலே சொல்ல வேண்டும். ஜெயாவுக்கு இப்போது சொந்தமாக இருக்கும் கொடநாடு எஸ்டேட் விஷயமாக (அதுவும் ஒரு ஆங்கிலேயரிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்டது தான்) அங்கே இருந்த பொது பாதையை ஜெயா தரப்பினர் ஆக்கிரமித்து பாதையை மூடிவிட அது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காகியது. அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் சில காரணங்களால் மாற்றப்பட்டு வேறு நீதிபதி வந்தார். அதை எதிர்த்து ஜெயா தரப்பினர் "எங்களுக்கு பழைய நீதிபதி தான் வேண்டும் என அங்கேயே மனு தாக்கல் செய்தனர். உடனே உயர் நீதிமன் தலைமை நீதிபதி அவர்கள் "நீதிபதிகளை மாற்றும் அதிகாரம் எங்களுக்கு உண்டு" என கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டனர்.

ஆனால் ஜெயா தரப்பு விடாப்பிடியாக இந்த பிரச்சனையை உச்சநீதிமன்றம் எடுத்து சென்று மனு செய்தனர். அங்கே அதை விசாரித்த உச்சநீதிமன்றம் மிக மிக கோபமாக இந்த தீர்ப்பை வழங்கியது.
 \\ The chief justice of India asked : "what do you want? Ypu are bench hunting. The chief justice of chennai high court knows many things which you may not know. You have absolutely no right to say that your matter should be heard by a particular judge \\

 அதாவது \\ உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு நீங்கள் சொல்லும் நீதிபதி தான் வேண்டும் என வேட்டையாடுகின்றீர்களா? உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தெரியும். குறிப்பிட்ட நீதிபதி தான் வேண்டும் என கேட்க உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை\\

 இப்படி தீர்ப்பு சொன்னவர் இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள். இதல்லாம் நடந்தது 04.04.2008 அன்று... டெல்லி உச்ச நீதிமன்றத்தில். இப்படி கடுமையாக குட்டு வாங்கியும் திருந்தாத ஜெயா அவர்கள் மீண்டும் 2013லிலும் அதே போல தனக்கு நீதிபதி பாலகிருஷ்ணாதான் வேண்டும், தனக்கு எதிராக வாதாட அரசு வக்கீலாக பவானிசிங் தான் வேண்டும் என கேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றார் என்பதை இங்கே மீண்டும் நியாபகப்படுத்துகின்றேன். இப்போது மீண்டும் நாம் பாயிண்ட் நம்பர் #53ல் இருந்து இந்த பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கின் சரித்திரத்தின் உள்ளே போவோம் வாருங்கள்!

***********************



53. இந்த பவானி சிங் எப்படி அரசு வழக்கறிஞர் ஆனார்? என நாம் பார்க்க வேண்டும். ஆச்சார்யா அவர்கள் பதவி விலகிய போது அவருக்கு பதில் வேறு ஒரு மூத்த குற்றவியல் வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய கட்டாயம் கர்நாடக அரசுக்கு இருந்தது. உடனே கர்நாடக அரசு நான்கு திறமையான மூத்த குற்றவியல் வழக்கறிஞர்கள் பட்டியலை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியது. அந்த பட்டியலில் இருந்த ஒருவரை கூட நியமிக்காமல் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக (தற்காலிக) இருந்தவர் தன்னிச்சையாக இந்த பவானிசிங்கை நியமித்தார். இதை நாம் சொல்லவில்லை. அரசு அட்டர்னி ஜெனரல் வாகன்வதி அவர்கள் தான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்த நீதிபதி யார் தெரியுமா? கொஞ்சம் மேலே சென்று பாயிண்ட் # 49 ஐ படியுங்கள். ஆச்சார்யாவின் ராஜினாமாவை ஏற்காமல் இருந்து பின்னர் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதியாக சென்று விட்ட நீதிபதி திரு. விக்ரமஜீத் சென்  அவர்களுக்கு பின்னர் கர்நாடக உயர்நீதிமன்ற தற்காலிக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர்ராவ்... அவசர அவசரமாக ஆச்சார்யா வின் ராஜினாமாவை ஏற்று கொண்டாரே அவர்தான் அரசு கொடுத்த பட்டியலில் இல்லாத பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தார். அம்மையார் ஜெயா அவர்கள் திரு. ஸ்ரீதர்ராவ் அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளார். ஹூம்... சட்டம் ஒரு இருட்டறை என அண்ணா சொன்னது தான் நியாபகத்தில் வருகின்றது.



54. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி திரு.நல்லம்ம நாயுடு அவர்கள். அவர் ஓய்வு பெற்ற பின் அந்த இடத்தில் அதிமுக அரசு டி.எஸ்.பி. திரு. சம்பந்தம் அவர்களை நியமித்தது. இவர் இந்த வழக்கில் 99 வது சாட்சியாவார். இவரை நீதிமன்றம் சம்மன் செய்து அழைத்து சாட்சியை பதிவு செய்ய வேண்டிய நிலையில் அவர் ரகசியமாக கொண்டு வரப்பட்டு குற்றவாளிகளுக்கு சாதகமாக சாட்சி அளிக்க செய்தார்கள். இதை கடுமையாக எதிர்க்க வேண்டிய பவானி சிங் கொஞ்சம் கூட எதிர்க்காமல் சும்மாவே இருந்தார்.



55. இந்த டி எஸ் பி சம்பந்தம் முன்னர் அரசு வக்கீலாக இருந்த ஆச்சார்யா காலத்திலேயே அவருக்கு தெரியாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.பாலகிருஷ்ணாவுக்கு "இந்த வழக்கை மீண்டும் ஆரம்பம் முதல் விசாரணை செய்ய வேண்டும்" என கடிதம் எழுதினார். உடனே திமுக இதில் தலையிட்டு விஷயத்தை கர்நாடக உயர்நீதி மன்றத்துக்கு சென்று அங்கே இந்த டி.எஸ்.பி சம்பந்தம் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். அப்படிப்பட்ட அந்த டி எஸ் பி சம்பந்தம் இப்போது எப்படி சாட்சி சொல்லி இருப்பார்????



56.இதுவரை ஜெயா தரப்பு வக்கீல்கள் வாய்தா வாங்கியதையும் , நீதிமன்ற தடை வாங்கியதையும் தான் பார்த்திருப்பிர்கள் இந்த சொத்து குவிப்பு வழக்கில். இனிமேல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் வாய்தா வாங்கும் விந்தை எல்லாம் பார்க்க போகின்றீர்கள். பவானி சிங் 28.2.2013 அன்று 259 சாட்சிகளின் சாட்சிய விபரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களை படித்து பார்க்க இரண்டு மாதம் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என வாய்தா கேட்டார். ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா கொடுக்கவில்லை. ஆனால் பவானிசிங் இதற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் கூட செல்லவில்லை. ஆனால் நீதிமன்றம் பக்கம் வரவில்லை.இவரின் இது போன்ற செயல்களை கண்ட திமுக,சிறப்பு நீதிமன்றத்தில் தங்களையும் அரசு தரப்போடு சேர்ந்து இந்த வழக்கில் வாதாட அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா அவர்கள் "வாதாட அனுமதி இல்லை என்றும் ஆனால் சொல்ல வேண்டியதை எழுத்து பூர்வமாக அவ்வப்போது கொடுக்கலாம்" என்றும் தீர்ப்பளித்தார். அதன் பின்னர் தான் திமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (அப்போது பாராளுமன்ற உறுப்பினர்) திரு. தாமரைசெல்வன் உள்ளிட்ட மூவர் அந்த வழக்கில் ஆஜராகி கவனித்து அவ்வப்போது எழுத்துபூர்வ பதில்களை தாக்கல் செய்தனர். பவானிசிங் வாங்கிய முதல் வாய்தா இது. பின்னர் தொடர்ந்து அவர் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வாங்கியதை விட அதிக அளவில் வாய்தா வாங்கி சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்ப்போம்....



57. நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு ஓய்வு பெற இன்னும் ஒரு மாதகாலமே இருந்த நிலையில் ஜெயாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டு சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்த வைர, வைடூரிய, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் (இந்த வெள்ளி பாத்திரங்கள் மட்டும் ரிசர்வ் வங்கியில் இல்லாமல் ஜெயாவின்  பிரதிநிதிகளிடம் இருந்தது. அதை கொஞ்சம் மேலே போய் அதாவது 12.12.1996 , 17 வருஷம் முன்பாக.... இதே பதிவில் பாயிண்ட் # 15ல் பார்க்கவும்) ஆகிய வற்றை சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு அதை நீதிபதி பாலகிருஷ்ணா பார்வையிட்ட பின்னர் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் தான் ஓய்வு பெறும் முன்பாகவே இதை எல்லாம் பார்வையிடாமல் தீர்ப்பு சொல்லிவிட வேண்டும் என நீதிபதி பாலகிருஷ்ணா அவசரம் காட்டினார். ஏனனில் மிக விரைவில் ஒரு வருடத்தில்  நாடாளுமன்ற தேர்தல் வர இருந்தது. அதற்கு முன்பாக ஜெயா தன்னை குற்றமற்றவர் என வெளியே வந்து விட வேண்டும் என துடித்தார். அதற்கு நீதிபதி பாலகிருஷ்ணாவும் உடன்பட்டார் என்பதால் தானே இதே நீதிபதியும் இதே அரசு வழக்கறிஞரும் தான் எனக்கு வேண்டும் என ஜெயா உச்சநீதிமன்றம் வரை சென்றார் என்பது இதை படிக்கும் உங்களுக்கு புரிகின்றதா?



58. ஒருவழியாக சில பல தடைகளுக்கு பின்னர் கர்நாடக அரசு, கர்நாடக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எல்லாரும் அங்கே இங்கே என இழுக்கடித்து (அதுவரை விசாரணை தடை) பின்னர் நீதிபதி பாலகிருஷ்ணா மீது நீதிமன்ற வட்டாரத்தில் மதிப்பு குறைந்து விடும் நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணா "என் சொந்த காரணங்களால் பதவி நீட்டிப்பு வேண்டாம்" என சொல்லிவிட செப்டம்பர் 30, 2011 அன்றே விடுவிக்கப்பட்டார். பின்னர் தற்காலிகமாக நீதிபதி முடிகவுடர் என்பவரை அக்டோபர் 3,2013ல் கர்நாடக உயர்நீதிமன்றம் நியமித்தது. அதன் பின்னர் அக்டோபர் 29 , 2013 அன்று கர்நாடக உயர்நீதிமன்ற குழு கூட்டம் கூடி நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா என்பவரை தனி நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது. அவர் நவம்பர் 7, 2013ல் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் நவம்பர் 7,2013 முதல் 28.08.2014 வரை இந்த வழக்கை தீர விசாரித்தார். இந்த பத்து மாதத்தில் இவரது விசாரணை காலத்தில் கூட பலவித தடைகள், வாய்தாக்கள் என மிகவும் சிரமப்பட்டு கடைசியில் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தொகுத்து வழங்கும் கடைசி கட்டத்தில் கூட இழுத்தடிப்பு செய்யப்பட்டு கடந்த 28.08.2014 அன்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அவர்கள் தனது முடிவுரையாக " இத்துடன் இந்த வழக்கு விசாரணை முடிந்தது. 14 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் நான் மேலும் சில ஆவணங்களை படித்து பார்க்க வேண்டும். எனவே எனக்கு முழுமையாக 3 வாரங்கள் தேவைப்படுகின்றது. எனவே எதிர்வரும் செப்டம்பர் 20, 2014 அன்று தீர்ப்பு வழங்கப்படும். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார். இப்போது மைக்கேல் டி குன்ஹா அவர்கள் விசாரணை காலத்தில் அந்த பத்து மாதத்தில் ஜெயா தரப்பால் மற்றும் அரசு வழக்கறிஞர் தரப்பால் செய்யப்பட்ட தடைகளை இனி பார்ப்போம்...



59. மைக்கேல் டி குன்ஹா நீதிபதியாக வந்த பின்னர் 27.1.2014 அன்று ஜெயா தமிழக முதல்வராக இருப்பதால் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், சசிக்கு கண் வலி என்றும், இளவரசிக்கு சர்க்கரை நோய் என்றும் சுதாகரனுக்கு மூட்டு வலி என்பதாலும் அவர்களும் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் என குற்றவாளிகள் தரப்பு மனு செய்தது. இதை எதிர்க்க வேண்டிய பவானிசிங் அமைதியாக இருந்தார். எனவே நீதிபதி குன்ஹாவுக்கு வேறு வழி இல்லாமல் வாய்தா கொடுக்க நேர்ந்தது. ஆனாலும் அவர் "மருத்துவ சான்றிதழ் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் இந்த ஒரு முறை மட்டும் வாய்தா தருகின்றேன்" என்றார்.



60. அடுத்து ஜெயாவின் வக்கீல் "கைப்பற்ற பொருட்களை திரும்ப தர வேண்டும்" என புதிய மனு தாக்கல் செய்தார். நீதிபதி அவர்கள் "இத்தனை நாள் கேட்காமல் இப்போது கேட்பது வழக்கை இழுத்தடிக்கும் செயல்" என்றார். அப்போது நீதிபதி பவானி சிங் அவர்களை பார்த்து "உங்கள் பதில் என்ன இதற்கு? என கேட்ட போது பவானிசிங் "இதற்கு பதில் சொல்ல எனக்கு 2 வாரம் வாய்தா வேண்டும்" என்றார். இந்த அதிசயமும் நடந்தது. குற்றவாளிக்கு சாதகமாக அரசு வழக்கறிஞர் வாய்தா கேட்டமை. இதற்கு தான் உச்சநீதிமன்றம் வரை சென்று ஜெயா தரப்பு பவானிசிங் சார்பாக வாதாடி பெற்றது போலும்.



61. மீண்டும் மீண்டும் பவானிசிங் வாய்தா கேட்ட போது நீதிபதி அவர்கள் "இது நீதிமன்றமா? வாய்தா மன்றமா?" என கோபமாக கேட்டார். பின்னர் ஜனவரி 20, 2014 அன்று ஜெயா தரப்பு கைப்பற்ற பொருட்கள் பட்டியல் வேண்டும் என கேட்டு ஒரு மனு செய்தது. அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.



62. பின்னர் வழக்கறிஞர்களின் இறுதி வாதம் பிப்ரவரி 3ம் தேதி முதல் நடைபெறும் எனவும், முதலில் அரசு தரப்பு பவானிசிங் அதன் பின்னர் ஜெயா தரப்பு வாதம் என்றும் இது தினம் தோறும் நடக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவு என்றும் கண்டிப்பாக சொன்னார் நீதிபதி அவர்கள்.



63. பிப்ரவரி 3ம் தேதி இறுதி வாதம் தொடங்கினால் மே மாதம் 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தீர்ப்பு வெளியாகிவிடும் என்பதால் பயந்து போனது ஜெயா தரப்பு. உடனே தங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு வழக்கறிஞர் பவானிசிங் மூலமாகவே அதே பிப்ரவரி 2014ல் ஒரு புதிய மனு தாக்கல் செய்ய வைத்தது. அந்த புதியமனுவில் பவானிசிங் "17 வருடம் முன்பாக ஜெயாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க, வைர, வைடூரிய நகைகளை  நீதிபதி முன்பாக சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து கொண்டு வந்து பார்வையிட செய்ய வேண்டும் என முன்பு பேராசிரியர் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார் அல்லவா? அந்த பட்டியலில் இருந்த வெள்ளி பொருட்களையும் 1,116 கிலோ அதாவது ஒரு டன்னுக்கும் மேலாக இருந்த வெள்ளி பொருட்களையும் இங்கே கொண்டு வர வேண்டும் என மனு தாக்கல் செய்தார். கொஞ்சம் மேலே சென்று (17 வருஷம் மேலே போக வேண்டாம். பாயிண்ட் # 15க்கு போகவும்) படியுங்கள். அந்த வெள்ளி பொருட்களை அரசு கைப்பற்றவே இல்லை. ஜெயாவின் பிரதிநிதிகளான ஜெயராமன், விஜயன் ஆகியோரிடம் ஒப்படைத்தாகி அவைகள் போயஸ்கார்டனுக்கு போய் விட்டாகியது. அதை த்தான் மீண்டும் இங்கே கொண்டு வர வேண்டும் என பவானிசிங் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த பிரதிநிதி பாஸ்கரன் என்பவர் இறந்தும் விட்டார்.



64. இத்தனைக்கும் பாஸ்கரன் இறந்து விட்டமைக்கான சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டும் அதை ஏற்காமல் பவானி சிங் பாஸ்கரன் தான் அந்த வெள்ளி பொருட்களை திரும்ப கொடுக்க வேண்டும் என கேட்டு காலம் தாழ்த்திக்கொண்டு இருந்தார். இதை விசாரித்து முடித்து அந்த மனுவை தள்ளுபடி செய்ய மைக்கேல் டி குன்ஹாவுக்கு ஒரு மாதம் பிடித்தது. ஆகவே இறுதி வாதம் என்பது பிப்ரவரி 3ல் ஆரம்பிக்க வேண்டியது மார்ச் 7,2014க்கு தள்ளி போனது. அந்த ஒரு மாத காலம் இழுத்தடிக்காமல் இருந்தால் வழக்கின் தீர்ப்பு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வந்து இன்றைக்கு 37 எம் பிக்களும் அதிமுகவில் வெற்றி பெற்றிருக்க முடியாது. எனவே இந்த 37 அதிமுக எம்பிக்களும் தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து கும்பிட வேண்டிய தெய்வம் திரு.பவானிசிங் அவர்களே!



65. மீண்டும் மார்ச் 7,2014 அன்று இறுதி வாதம் செய்ய வேண்டிய பவானி சிங் நீதிமன்றத்துக்கு வரவே இல்லை. மீண்டும்10ம் தேதி ஒத்திவைப்பு, அப்போதும் பவானி சிங் வரவில்லை. மீண்டும் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு. பின்னர் 14ம் தேதி வந்த பவானிசிங் தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் 10 நாட்கள் வாய்தா வேண்டும் என கேட்க நீதிபதி மிகவும் எரிச்சலடைந்து பவானிசிங்கின் ஒரு நாள் ஊதியமான 65,000 ரூபாயை அபராதமாக விதித்தார். மீண்டும் 15ம் தேதியும் பவானிசிங் ஆஜராகவில்லை. அதனால் அன்றைக்கும் 65,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டது.



66. சரி என்று நீதிபதி ஜெயா தரப்பு வக்கீலை இறுதி வாதத்துக்கு அழைக்க அவர்களோ "முதலில் அரசு வழக்கறிஞர், பின்னர் தான் நாங்கள் வாதிடுவோம்" என மறுத்து விட்டனர். பின்னர் மீண்டும் ஒத்திவைப்பு.



67. அதன் பின்னர் சிறப்பு நீதிமன்றம் தனக்கு விதித்த அபராதம் 1 லட்சத்தி 30 ஆயிரம் ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டும் என பவானிசிங் கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றார். அங்கே வேலைக்கு ஆகவில்லை என உச்சநீதிமன்றம் சென்றார். அங்கே தனக்காக வாதாட நாகேந்திர ராவ் என்ற ஒரு "சிட்டிங்" வாதாட பல லட்சம் வாங்கும் மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதாடினார். அந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி பி. எஸ்.சவுகான். இவர்தான் ஜெயா தரப்பு "எங்களுக்கு எதிராக பவானிசிங் தான் வாதாட வேண்டும்" என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது அந்த விசித்திர வழக்கை விசாரித்து "சரி பவானிசிங்கே நடத்தட்டும். பாவம் குற்றவாளிகள் ஆசைபடுகின்றார்கள். அதனால் பவானிசிங்கே நடத்தட்டும்" என்கிற ரீதியில் தீர்ப்பு அளித்தவர் ஆவார். பவானிசிங் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மூன்று வாரங்கள் (21 நாட்கள்) வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.வழக்கோ அபராதம் நீக்கப்பட வேண்டும் என்று. ஆனால் தீர்ப்போ "பவானிசிங் உடல் நிலை சரியில்லை எனவே மூன்று வாரம் ஒத்தி வைப்பு என்று. இந்த கொடுமை எங்காவது நடக்குமா? இங்கே நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலையில் அடித்து கொள்ளாத குறை தான். எந்த உச்சநீதிமன்றம் இவருக்கு "தினமும் இந்த வழக்கை நடத்தி விரைவில் தீர்ப்பு சொல்ல வேண்டும் என சொன்னதோ அதே உச்சநீதிமன்ற பென்ச் 3 வாரம் தடை விதித்து ஜெயாவை நாடாளுமன்ற தேர்தல் வரை காப்பாற்ற நினைக்கின்றது.



 68.  பின்னர் உச்ச நீதிமன்றத்திலேயே விசாரணை. இருவர் பென்ச். யார் தெரியுமா நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் ஜே.செல்லமேஸ்வரன் அடங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயையும் குறைத்து 20 ஆயிரம் மட்டும் அபராதம் எனவும் தீர்ப்பு வழங்கினர். தவிர "அம்மா செத்துட்டாங்க, ஆயா செத்துட்டாங்கன்னு ஆஜராகாமல் இருக்க கூடாது" என தீப்பளித்து உத்தரவிட்டனர்.



69. 21.3.2014 முதல் பவானிசிங் தன் இறுதி வாதத்தை வேறு வழி இல்லாமல் தொடங்கினார். கிட்ட தட்ட 65 கோடி அளவுக்கு இருந்த இந்த சொத்து குவிப்பு வழக்கு என்பது இந்த 18 வருடத்தில் 5000 கோடிக்கு உயந்து விட்டது. அதை நீதிமன்றம் மட்டுமல்ல இந்திய தேசமே ஒரு வித பயத்துடன் பார்த்தது. இதையே தன் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் சுட்டி காட்டி விளக்கி பேசினார்.



70. ஜெயா வாங்கி குவித்துள்ள சொத்துகள் பட்டியல் என்பது மிக மிக மிக அதிகம். அதில் சில்வற்றை மட்டும் இங்கே தருகின்றேன். (இது நான் சொன்னது இல்லை. பவானிசிங் - அரசு வழக்கறிஞர் கொடுத்த பட்டியலில் சில மட்டும்) சென்னை- வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கர் பரப்பளவில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர் பங்களா, கொடநாட்டில் (ஊட்டி)800 ஏக்கர் மற்றும் அதன் உள்ளே பங்களாக்கல்,காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்யாகுமரியில் மீர்குளம்,சிவரங்குளம்,வெள்ளங்குளம் பகுதியில் 1,190 ஏக்கர்கள், தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர், ரிவர்வே அக்ரோ ஃபார்ம் பெயரில் 100 ஏக்கர், 30 கலர்களில் கார்கள் மற்றும் ட்ராக்டர்கள், ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், 32 புதிய கம்பனிகள், அந்த கம்பனிகள் பெயரில் பல சொத்துகள்,தவிர தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி, கைக்கடிகாரங்கள், பட்டு புடவைகள் (இவைகள் பல கோடி மதிப்பு) இப்படியாக 306 இடங்களில் அசையா சொத்துகள் தமிழகம் மற்றும் ஆந்திராவில்......... ஆக மொத்தம் சுமார்  5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதை நீதிமன்றத்தில் தக்க ஆதாரங்களுடன் அரசு வழக்கறிஞர் பட்டியலிட்டார்.



71. இப்படியாக மார்ச் மாதம் 2014ல் வழக்கு போய்கொண்டு இருந்த போதே லெக்ஸ் ப்ராபர்டி என்னும் ஜெயாவின் கம்பனி சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு புதிய வழக்கு தொடுத்தது. (அடுத்த தடை?) "எங்கள் கம்பனி சொத்துகளை ஜெயாவின் சொத்தாக காட்டப்பட்டுள்ளது. எனவே அதை விடுவிக்க வேண்டும். அந்த விசாரணை முடியும் வரை மூல வழக்கை விசாரிக்காமல் தடை விதிக்க வேண்டும்" (அதான பார்த்தேன்) என புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.



72. நீதிபதி குன்ஹா உங்கள் வழக்கையும் விசாரிக்கிறேன். ஆனால் மூல வழக்குக்கு தடை என்பதை ஏற்க முடியாது. அந்த விசாரணை கண்டிப்பாக  தனியே நடக்கும் என கூறி அதை தள்ளுபடி செய்தார்.மேலும் நீதிமன்றத்தில் வழக்கை இழுத்தடிக்க முயன்ற காரணத்தால் லெக்ஸ் ப்ராபர்டி கம்பனிக்கு 10,000 அபராதம் விதித்தார். இது நடந்தது மார்ச் 14, 2014 அன்று.



73. உடனே லெக்ஸ்ப்ராபர்டி கம்பனி இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது. அங்கே நீதிபதி சத்யநாராயணா ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கினார். "சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதம் மிகவும் குறைவு. எனவே அதை பத்து மடங்கு உயர்த்தி ஒரு லட்சம் ஆக 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றார். (எத்தனை செருப்படிகள்???)



74. ஆனால் லெக்ஸ் ப்ராபர்டி கம்பனி இதை தூக்கி கொண்டு உச்சநீதிமன்றம் சென்றது. அங்கே நம் செல்ல நீதிபதி அதாவது பவானிசிங் இருக்கட்டும் என ஜெயாவுக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்ன சவுகான் இருந்தார். அவரும் லெக்ஸ்ப்ராபர்டிக்கு (அந்த பென்சில் செல்லமேஷ்வரன், இக்பால் ஆகியோரும் இருந்தனர்) எச்சரிக்கை செய்து தள்ளுபடி செய்தனர்.



75. இதே போல மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ ஃபார்ம் ஆகிய கம்பனிகளும் தனி தனியாக மூல வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு பரிசாக "அபராதம்" பெற்றனர்.



76. அடுத்த அஸ்திரமாக சசி, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்கள் சொத்து முடக்கி வைத்ததை எதிர்த்து (இந்த 18 ஆண்டுக்கு பின்னர் வழக்கு முடியும் தருவாயில்) புதிய மனு செய்து வழக்கை இழுக்க பார்த்தனர். இப்போது நீதிபதி டி குன்ஹாவே கிட்ட தட்ட வக்கீல் போல சில பல கேள்விகளை கேட்க எல்லோரும் வாயடைத்து போயினர். பின்னர் 2500 பக்கங்கள் கொண்ட தொகுப்பை பவானி சிங் தன் இறுதி வாதமாக வைத்து ஒரு வழியாக முடித்தார்.



77.பின்னர் உச்சநீதிமன்றமும் லெக்ஸ் ப்ராபர்டி சொத்துகள் ஜெயாவின் சொத்துகளே என தீர்ப்பளித்தது. இது நடந்தது 13.05.2014.



78. பின்னர் டி எஸ் பி சம்பந்தம் சாட்சியில் மறைத்த விவகாரங்கள் பின்னர் டி.குன்ஹா, பின்னர் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எல்.நாராயணசாமி, பின்னர் விடுமுறை கால நீதிபதி ஆனந்த பையா ரெட்டி  ஆகியோர்கள் மிக மிக கடுமையாக அதிமுக அரசின் டி எஸ் பி சம்பந்தம் மற்றும் அவரது குழுவினரை (ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு) கண்டித்து "உங்களின் இது போன்ற செயல்கள் உங்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் போது பாதிப்பை உங்களுக்கு உண்டாக்கும்" என எச்சரித்தனர்.



79. 25.05.2014 அன்று ஜெயா வக்கீலில் தாயார் இறந்து விட்டதால்  அன்றைக்கு சசி வக்கீலை பார்த்து வாதம் செய்யுங்கள் என நீதிபதி அழைக்க அவர்கள் "ஜெயா வக்கீல் முடித்த பின்னர் தான் நாங்கள் ஆரம்பிபோம்" என அடம் பிடிக்க நீதிபதி 3000 ரூபாய் அபராதம் விதித்தார்.




80. இப்படியாக ஆகஸ்ட் மாதம் 10 தேதி வரை  வரை எல்லா குற்றவாளி தரப்பும் வாதம் முடிந்த பின்னர் அரசு தரப்பு தொகுப்பு வாதம் 5 நாட்கள் பவானிசிங் நடத்தினார். அதன் பின்னர் ஜெயா தரப்பு தொகுப்பு வாதம் முடிந்தது. அப்போது கூட அடுத்த குற்றவாளிகள் தொகுப்பு வாதம் செய்ய இழுக்கடித்தனர். ஒரு வழியாக நீதிபதி நீங்கள் தொகுத்து வழங்காவிட்டால் நான் அதை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு தேதியை அறிவிப்பேன் என எச்சரித்தார்.



81. அதன் பின்னர் ஆகஸ்ட் 28, 2014 அன்று எல்லாம் முடிந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. மைக்கேல் டி குன்ஹா அவர்கள் எதிர்வரும் "இந்த வழக்கின் வாத பிரதிவாதம் , பின்னர் தொகுப்பு வாதம் எல்லாம் முடிந்தது. பொதுவாக 2 வாரத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் நான் இன்னும் சில ஆவணங்களை படிக்க வேண்டி இருப்பதால் எனக்கு முழுமையாக 3 வாரங்கள் தேவைப்படுகின்றது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பை நான் எதிர்வரும் 20ம் தேதி, செப்டம்பர் மாதம் 2014 அன்று வழங்க இருக்கின்றேன். எனவே வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளியான ஜெ.ஜெயலலிதா, இரண்டாம் குற்றவாளியான சசிகலா, மூன்றாம் குற்றவாளி வி.என்.சுதாகரன் மற்றும் நான்காம் குற்றவாளியான இளவரசி ஆகியோர் கண்டிப்பாக அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என முடித்துள்ளார்.



********************************



ஆக ஜூன் 14, 1996ல் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில்  ஆரம்பிக்கப்பட்ட வழக்கானது அங்கிருந்து பயணப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் சென்று அங்கிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்து அங்கிருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சென்று அங்கிருந்து கர்நாடக உயர்நீதிமன்றம், பின்னர் உச்சநீதிமன்றம் மீண்டும் கர்நாடக  உயர்நீதிமன்றம், மீண்டும் பெங்களூரு பரப்பன அக்கிரஹாரம் சிறப்பு நீதிமன்றம்... என ஒரு பெரிய சுற்று சுற்றி வந்துள்ளது இந்த வழக்கு. பல நீதிபதிகள் இந்த வழக்கை பார்த்து விட்டனர். பல அரசு வழக்கறிஞர்கள் இதில் உள்ளே நுழைந்து வெளியே வந்து விட்டனர். வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் இறந்தும் விட்டனர். இன்னும் சொல்லப்போனால் முதன் முதலாக இந்த சொத்து குவிப்பு விஷயத்தை ஆளுனரிடம் போய் புகாராக கொடுத்த திமுக பெரும் தலைகளில் அய்யா முரசொலி மாறன், நாஞ்சிலார் ...அத்தனை ஏன் ஆளுனராக இருந்த டாக்டர் .சென்னா ரெட்டி ஆகியோர் கூட மறைந்து விட்டனர்.  66 கோடியாக இருந்த சொத்து குவிப்பு வழக்கு என்பது இப்போது 5000 கோடியாக மாபெரும் வளர்ச்சி பெற்று விட்டது.  1991-1996 ல் நடந்த இந்த குற்றம் காரணமாக போடப்பட்ட இந்த வழக்கு இடையே இரண்டு முறை திமுக ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகளை கடந்து விட்டது. அதே போல குற்றவாளி தரப்பும் இரண்டு முறை எட்டாண்டுகாலம் ஆட்சிக்கு வந்து விட்டது. நடுவே பத்தாண்டுகாலம் வழக்கு தொடுத்த திமுக மத்தியில் கூட ஆட்சி அதிகாரத்தில் இருந்து விட்டது. இத்தனை மாற்றங்கள் இருப்பினும் "வாய்தா" என்பது மட்டுமே மாறாத ஒன்றாக இருந்தது இந்த வழக்கில். 



கலைஞரின் இந்த புத்தகம் "சொத்து குவிப்பு வழக்கு - ஒரு தொடர்கதை" என்னும் இந்த புத்தகம் சுமார் எட்டு நாட்கள் (2014 பாராளுமன்ற தேர்தலுக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில் ) முரசொலியில் கலைஞர் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதங்களே ஆகும். அதையே திராவிட முன்னேற்ற கழகம் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளது.



இந்த புத்தகத்தை இந்திய தண்டனை சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு (B.L., M.L.,) பாடமாக வைக்கக்கூடிய அனைத்து தகுதிகளையும் கொண்டது. ஒரு வழக்கில் எந்த எந்த விதத்தில் வாய்தா வாங்க சட்டத்தில் இடம் உண்டு என்பதையும், அதே நேரத்தில் எப்படி எல்லாம் சில நீதிபதிகள் சட்ட விரோதமாக நடந்து கொள்ள கூடாது என்பது பற்றியும் போதிக்கின்றன. அதே போல 18 ஆண்டுகள் ஒரு வழக்கை குற்றவாளிகள் எப்படி எல்லாம் சட்டத்தின்  ஓட்டையில் புகுந்து தப்பிக்கின்றனர் என்பதையும் சுட்டி காட்டுகின்றது. எனவே இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சட்டத்தின் ஓட்டைகளை சரி செய்யும் நிபுணர்கள் கொண்டு இனி இப்படி ஒரு தவறு இந்திய சட்ட விதிகளில் இருக்க கூடாது என நினைத்து அதை சரி செய்யவும் கூட இந்த புத்தகம் பயன் படும்..பயன்பட வேண்டும். 91 வயதில் ஒருவர் ஒரே ஒரு வழக்கை மையமாக கொண்டு ஒரு ஆராய்ச்சியே செய்து முடித்து  ஆய்வு கட்டுரை (தீசிஸ் சப்மிட்) சமர்பித்துள்ளது போல இருக்கின்றது இந்த புத்தகம். இந்த ஒரு காரணத்துக்காகவே நம் தமிழக அம்பேத்கார் சட்ட பல்கலைகழகம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு "டாக்டர்" பட்டம் வழங்க வேண்டும். 



இந்த 18 வருடங்களில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் இந்த ஒரே வழக்கில் நடந்துள்ளன என்பதை விட இந்த வழக்கின் தீர்ப்புக்கு இன்னும் முழுமையாக 20 நாட்கள் இருக்கும் நிலையில் இந்த வழக்கு இன்னும் எத்தனை தடைகளை தாண்ட வேண்டி இருக்குமோ என அஞ்சவும் தோன்றுகின்றது. இதை எல்லாம் மீறி செப்டம்பர் 20, 2014 அன்று தீர்ப்பு வெளிவர வேண்டும். அதுவும் நல்ல தீர்ப்பாக,நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்ப்பாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என நேற்று 30.08.2014ல் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதும் நியாபகம் வருகின்றது. அதே போல இந்த வழக்கு ஒரு தாய் வழக்கு தான். இதன் தீர்ப்புக்கு பின்னர் இந்த வழக்கு போடபோகும் குட்டி வழக்குகள் எத்தனை எத்தனை வரும் தெரியுமா? இன்னும் சொல்லப்போனால் இப்போது திமுகவினர் மீது "சொத்து அபகரிப்பு, நில அபகரிப்பு" வழக்குகள் பொய்யாக போடப்படுகின்றதே... அப்படி இல்லாமல் உண்மையான நில அபகரிப்பு, சொத்து அபகரிப்பு வழக்குகள் கொடநாடு எஸ்டேட்டை அடிமாட்டு விலைக்கு விற்ற(மிரட்டி பிடுங்கிய) ஆங்கிலேயர் முதல் இசை அமைப்பாளர் கங்கை அமரன் வரை வரிசை கட்டி நிற்கப்போகின்றனர். அதே போல ஆள் கடத்தல், மிரட்டுதல் என வரிசை கட்டி வரப்போகின்றன இப்போது உள்துறையை தன்னிடம் வைத்து கொண்டு இருக்கும் முதல்வர் மீது. சட்டம் என்ன செய்ய போகின்றது என பார்ப்போம்!



நீதி வெல்லட்டும்! நியாயம் பிறக்கட்டும்!! 



புத்தகத்தின் பெயர்: "சொத்து குவிப்பு வழக்கு - ஒரு தொடர்கதை"
ஆசிரியர்: டாக்டர் கலைஞர். மு.கருணாநிதி
வெளியீடு: திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா அறிவாலயம், 367&369, அண்ணா சாலை, சென்னை - 600 018
விலை: 50 ரூபாய்
நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கும் நல்ல தலைவர்கள்!