பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 21, 2012

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... என் மூஞ்சி அத்தனை பிஞ்சாவா இருக்கு????


எனக்கும்  சமீபகாலமாக (?) வயசாகி கொண்டு இருப்பதாக உணர்கிறேன். காலை எட்டு மணிக்கு எல்லாம் "என்னாச்சு இட்லி" எனவும் மதியம் 1 மணிக்கு "இன்னிக்கு கறி சோறு இல்லியா?" எனவும் அது போல டான்னு இரவு எட்டு மணிக்கு  "அய்யோ பசிக்குதே" என அலறும் போது தான் எனக்கும் வயசு ஆகிகிட்டே இருப்பதை உணர்ந்தேன்.

என் வயசில் இருப்பவன் எல்லாம் எங்கள் ஊரில் நாலு பஞ்சாயத்து எட்டு கோர்ட்டுன்னு போய் கொண்டு இருக்கும் போது நான் மட்டும் தேமேன்னு இருப்பதாய் உணர்ந்தேன். உடனே ஓடிப்போய்  என் வயது தாதாவாய் பில்டப்பு ஆனவனை கேட்டேன். அவனுக்கு வருவது எல்லாம் டைவர்ஸ் கேஸ் தான் என்றும்,  தான் அதில் தான் எக்ஸ்பர்ட் எனவும் சொன்னான்.

கிட்ட தட்ட எல்லா தாதாவுக்கும் பைனான்ஸ் கேஸ் தான் முதலில் வரும் என்றும் பின்னே "சீனியர்" ஆன பின்ன தான் டைவர்ஸ் கேஸ் எல்லாம் வரும் எனவும் சொன்னான். ஆனால் அவனுக்கு முதலில் வந்ததே டைவர்ஸ் கேஸ் தான் எனவும் மேலும் "டேய் முதல்ல டைவர்ஸ் கேஸ் வந்த  தாதா எல்லாம் பெரிய ஆளுங்கடா" என அவன் சொன்ன  போதே நான் முதலில் டைவர்ஸ் கேஸ் தான் என் முதல் கேஸ் என முடிவெடுத்து வந்து விட்டேன். எனக்கு எப்போதுமே டாப் கியர் தான் ஒத்து வரும்.

வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் "சரி இப்ப சொல்லு யாருக்கு டைவர்ஸ் வேணும்?" என   நாற்காலியில் அட்டானிக்கால் போட்டு முதல் கேள்வியை நான் கேட்டது என் முதல் தப்பு. "எனக்குங்க எனக்குங்க எனக்குங்க" என என் மனைவி சொன்னது எனக்கு என்னவோ அபசகுணமா பட்டுச்சு.
ஒரு வழியா சமாதானம் செய்து விட்டு என் அக்கா பையன்கள், என் மனைவியின் அக்கா பையன், பொண்ணுங்க எல்லாருக்கும் டைவர்ஸ் வாங்கி பஞ்சாயத்தை ஆரம்பிக்கலாம் என நினைத்து என் முயற்சியை தொடர்ந்தேன்.

அடுத்த நாளே என் மனைவியின் அக்கா பையன் போன் செய்தான்..." சித்தப்பா ஒரே பிரச்ச்னையா இருக்கு, அது மாசமா ஆகிடுச்சு" என சொல்லிகிட்டு இருக்கும் போதே நான் "டைவர்ஸ் செஞ்சுடலாம் ஒன்னியும் பிரச்சனை இல்லை"ன்னு மேல மேல பஞ்சாயத்தை தொடர அவன் போனை கட் பண்ணிட்டான். அடச்சே... சந்தோஷமா சொல்லியிருக்கான் போலிருக்கு. பொண்டாடி வாந்தி எடுப்பதுக்கு  எல்லாம் டைவர்ஸ் செய்ய மாட்டாங்க  போலிருக்கு....

ஒரு கட்டத்தில் ஒரு டைவர்ஸ் கேஸ் கூட என் கிட்டே வராத காரணத்தால் கோவத்திலே அப்டி இப்டி இருந்துட்டு  வீட்டுக்கு வந்தேன். அப்போ நிஜமாகவே டைவர்ஸ்காக வீட்டுக்கு ஒரு பிரச்சனைக்காக வந்த அக்கா பையன் மற்றும் மருமகள் கிட்டே நான் பேசிய பேச்சு என் நண்பன்  நெப்போலியனை விட அதிகமாக கொடுத்த காசுக்கு மேல கூவியதால  அவங்க போகும் போது " எங்க வாழ்கையிலே வெளக்கு ஏத்தி  வச்சுட்டீங்க மாமா"ன்னு  போக எனக்கு மனசே ஒடிஞ்சு போச்சுது.

என் மனக்கவலையில் நான் சோகமாக இருக்க வீட்டுக்கு வந்த அம்மா "என்னடா தம்பி"ன்னு கேட்க நான் விபரம் எல்லாம் சொன்னேன். அதுக்கு அவங்க "இதுக்கு தாண்டா சொல்வாங்க பெத்தவங்க ஆசீர்வாதம் வேணும்னு" சொல்லி தனக்கும் அப்பாவுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுன்னு சொல்லி அவங்க சொல்ல நானும் சந்தோஷமாக முதல் பஞ்சாயத்தை எடுத்தேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அவ்வ்வ்வ்வ்... பஞ்சாயத்து முடிவில் அம்மாவுக்கு அது வரை தம்பி வீட்டில் சவுக்கியமாக இருந்த அம்மாவுக்கு கீழ் ரூமும், "நான் இருக்கும் வீட்டில் தான் அப்பாவும் இருப்பாங்க அதனால மேல் மாடி ரூம்ல 2 டன் ஏசி போட்டு அப்பாவுக்கும்" என சொல்ல ... போச்சுடா செலவு மேல செலவு....


என் மூஞ்சி ஒரு டைவர்ஸ்க்கு கூட யோக்கிதை இல்லாம போய்டுச்சான்னு நான் அழுதுகிட்டே என் மனைவி கிட்டே கேட்டேன். அதுக்கு அவங்க "நான் தான் அப்பவே சொன்னனே, உங்களுக்கு முதல் கேஸ் நான் கொடுக்கிறேன்"ன்னு சொல்லி பீதி கிளப்ப... கும்பகோணத்தில் அக்கா வீட்டின் அடுத்த வீட்டில் ஒரு டைவர்ஸ் கேஸ் வந்திருக்கு ன்னு நல்ல சேதி வந்துச்சு.

முதன் முதலாக ஒரு நல்ல பஞ்சாயத்து வந்ததால் குடும்ப சகிதம் சென்றேன். கேஸ் என்னவோ செம கேஸ் தான். பையன் பேர் பாலமுருகன். அவன் பொண்டாட்டி பேர்.... ம்ம்ம்ம் சரி பாலமுருகின்னு வச்சுகுங்க. பையன் சின்ன வயசில் இருந்தே எனக்கு தெரிந்தவன். ஆனா அவனுக்கு படிப்பறிவு சுத்தமா இல்லை. ஆனா பகுத்தறிவு ஜாஸ்தி. கிட்ட தட்ட அவன் பத்தாவது பாஸ் செய்யவும் அதன் பின்னே பாலிடெக்னிக் பாஸ் செய்யவும் அவன் அப்பா மட்டும் அல்ல ஒட்டு மொத்த அரசாங்கமும் எல்லா பகீரதபிரயதனும் செஞ்சாங்க.

அவன் கேஸ் தான் என் கிட்டெ வந்துச்சு. ஆனா படிப்பிலே தான் அப்டி இப்டி.. ஆனா லவ்ஸ்ல கெட்டிக்காரன். அடிச்சான் பாருங்க சிக்சர்... அவன் கூட எட்டாவது படிச்ச நம்ம பாலமுருகி ஒன்பதாவது போச்சுது.  பின்ன பத்தாவது, பின்ன ... அப்படியே எம் எஸ் சி படிச்சு எம் பில் கூட படிச்ச போது நம்ம பாலமுருகன் ஒரு வழியா பத்தாம்பு வந்து அங்கயே கான்கிரீட் போட்டு உட்காந்துட்டன்.

பின்ன இவனை ஒட்டு மொத்த அரசாங்கமும் பின் பக்கம் தூக்கி தினத்தந்தி பேப்பரை கொளுத்தி காமிச்சு  பாஸ் பண்ண வச்சு பின்ன ஒரு பாலிடெக்னிக்ல ஒக்காத்தி வச்சி அவனும் "கேம்பஸ்"ல ஜெயிச்சு (ஜெயிக்க வச்சி) அட சாமிங்களா.. அவன் இன்னிக்கு நல்ல நிலையில் இருக்கான். அவன் "ஜில்லுன்னு ஒரு காதலா" நல்ல மெக்கானிக்கா .... இல்லை இல்லை இஞ்சினியரா இருந்து தொலைக்கிறான். அவன் பொண்டாட்டியாகிய பாலமுருகி கன்சால்டேட் பெசிஸ்ல அந்த ஊர்ல லெக்சரரா ஒரு காலேஜ்ல 2999 ரூபாய் வாங்கி கிட்டு இருக்கு.

போதும் இந்த முன்கதை சுருக்கம் எல்லாம். இப்ப நான் இங்க கும்பகோணம் வந்ததே இவங்க டைவர்ஸ்க்கு தான். பிரச்சனை எதும் இல்லை. தன் புருஷன் பி ஈ படிக்கனும். அதான் அதுக்கு ஆசை. இல்லாட்டி டைவர்ஸ்.

நான் போனேன். பேசினேன். பொண்ணு சொன்னுச்சு. "எனக்கு என் புருஷன் பி ஈ படிக்கனும். நான் கொஸ்டின் பேப்பர் வாங்கி தர்ரேன், நல்ல சூபர்வைசரா கொண்டு வந்து பிட் அடிக்க வைக்கிறேன், மொபைல்ல ஆன்சர் அனுப்பறேன், மொபலை அனுமதிக்க வைக்கிறேன், அதும் முடியலையா.. பேப்பர் சேஸ் பண்றேன்" இப்படியாக பேசப்பேச நான் என் மனைவியை தான் பார்த்து முறைத்தேன். இப்படில்லாம் ஒரு பொண்டாட்டி இருந்தா நானெல்லாம் ஜனாதிபதியா ஆகியிருப்பேன்:-(

முதல் சிட்டிங்ல கேஸ் முடிஞ்சிடுமா என்ன? சரி பரிட்சை எழுதட்டும். பய புள்ள எப்படியும் பாஸ் பண்ண மாட்டான். நமக்கு வெற்றி தான் என நினைத்து கொண்டேன்.

அத்தோடு அந்த கேஸ் பத்தி மறந்து விட்டேன். அதன் பிறகு அக்கா பையன்கள், மனைவியின் அக்கா பையன்கள், பொண்ணுகள் எல்லாம் என் கிட்ட பஞ்சாயத்துக்கு வரும் போது தனித்தனி ஆட்டோவிலே வந்துட்டு போகும் போது என் சுசுகில கட்டிபுடிச்சுகிட்டு டாட்டா சொல்லிட்டி " அங்கிள் பஸ்டாண்டிலே வண்டிய போட்டுட்டு போறேன், நீங்க நடந்து வந்து எடுத்துகுங்க"ன்னு சொல்லிட்டே போனாங்க.

ஒரு கட்டத்தில் நான் வெறுத்துப்போய் உட்காந்து இருக்க என் மனைவி "ஏங்க நாம வேணா டைவர்ஸ் பண்ணிக்கலாமா?" என மீண்டும் ஆசையாய் கேட்க  அப்போது தான் அந்த போன் வந்துச்சு. அந்த பாலமுருகி கிட்டே இருந்து. ஆண்டவன் என்னை கைவிடவில்லை என ஆசையாய் எடுத்தேன்.

"சார் உடனே வாங்க"ன்னு எனக்கு உடம்பெல்லாம் மின்சாரம். "போய்ட்டு வெற்றியோட  ஒரு டைவர்ஸ்ஸோட  வர்ரேன்"ன்னு சொல்லி கிளம்பினேன்.

கும்பகோணம் போகும் போன பின்னே அந்த வீட்டில் நுழையும் முன்னமே எனக்கு சகுனம் சரியில்லை. ஏன்னா புருஷன் பொண்டாட்டி இருவருமே சந்தோஷமா  "வாங்க வாங்க"ன்னு கூப்பிட்டாங்க.

நானும் அமைதியா உட்காந்து கேட்டேன். "அண்ணே உங்க ராசியே ராசி, உங்க மூஞ்சி டைவர்ஸ் செய்யல்லாம் ஒத்து வரலைண்ணே" என அந்த பாலமுருகி கிண்டல் செய்தது என் வியாபாரத்துக்கு வைக்கும் ஆப்பு  மாதிரியே இருந்துச்சு.

அந்த பெண் தான் பேசிச்சு. "அண்ணே! நான் இவரை பி ஈ படிக்க ஆசைப்பட்டது என்னவோ உண்மை தான். நானும் கொஸ்டின் பேப்பர் எல்லாம் வாங்கினேன்.  சூபர்வைசர் எல்லாம் சரி கட்டினேன். ஆனா பாருங்க அன்னிக்கி பார்த்து இங்க கரண்ட் போச்சுது. என் மொபைல்லயும் சார்ஜ் இல்லை. சரி கொஸ்டின் பேப்பர் க்கு ஆன்சர் பண்ண முடியலைன்னு அந்த முயற்சிய கைவிட்டேன். பின்ன பேப்பர் ச்சேஸ் பண்ண ஆரம்பிச்சேன். அப்ப தான் அண்ணே நான் திருந்தினேன்"னு மூச்சு விடாம சொன்ன போது எனக்கு ஒரே குழப்பம். எல்லாம் சரியா தான பேச்சுதுன்னு. பின்ன அந்த பெண் தொடர்ந்து  பேசுச்சு.

"சரின்னு நான் பேப்பர் ச்சேஸ் பண்ண போன போது தான் அந்த பேப்பர் திருத்துபவர் வந்து இவரோட பேப்பரையே காமிச்சாரு அண்ணே. காமிச்சுட்டு "இனிமே உன் புருஷன்  பி ஈ பாஸ் செய்யனுமான்னு நீயே முடிவெடும்மான்னு சொல்லிட்டாரு அண்ணே"ன்னு சொன்னுச்சு.

அப்படி அந்த பேப்பரில் என்ன எழுதி இருந்துச்சுன்னு நானும் ஆர்வமா கேட்க அந்த பாலமுருகி சொன்னுச்சு "அண்ணே அவரு பேப்பரிலே " Hurry!! Recharge with Rs.64 (All Local call mobile calls at 30p/min for 30 days)& get free RC 12 (30 lacal /std mins for 3 days ) Recharge now" அப்படின்னு அந்த பேப்பர்ல இருந்துச்சு அண்ணே! இதுக்கு பின்ன என் புருசன் பி ஈ படிச்சா என்ன படிக்காட்டி என்ன? நாங்க இனி சந்தோசமா இருப்போம். எல்லாம் உங்க ராசி தாண்ணே"

நான் தொய்ந்து போய் வீட்டுக்கு வந்தேன். என் மனைவி என் சோக முகத்தை பார்த்து என்னிடம் ஒரு டம்ளர் மோர் கொடுத்து விட்டு முதலில் கேட்ட அதே கேள்விய கேட்டாங்க "ஏங்க நாம வேணா டைவர்ஸ் செஞ்சுப்புமா?"

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... என் மூஞ்சி அத்தனை பிஞ்சாவா இருக்கு????



உடன்பிறப்புகளுக்கு தலைவர் எழுதிய கடிதம் இல்லை இது, ஒரு உடன்பிறப்பு தலைவருக்கு எழுதிய கடிதம்!!!



பொதுவாக 'முரசொலி' யில் உடன்பிறப்புகளுக்கு தலைவர் எழுதும் கடிதம் வரும். பார்த்தும் இருப்பீர்கள். ஆனால் முதன் முதலாக ஒரு உடன்பிறப்பு தன் தலைவருக்கு எழுதிய கடிதம் பார்த்தது உண்டா?


என் தலைவரை பற்றி சிந்தித்தால் சந்தோஷம், என் தலைவரை பற்றி பேசினால் சந்தோஷம், என் தலைவரை பற்றி எழுதினால் மிக்க சந்தோஷம். இது ஒரு கடிதம். மிக மிக சாதாரண கடிதம்.ஆனால் இது ஒரு உணர்சிக்குவியல்.  இரண்டு நாட்கள் முன்னதாக "முரசொலி"யில் வந்த கடிதம். ஆனால் அந்த கடிதம் 'எடிட்' செய்யப்பட்ட கடிதம். என் தலைவன் கிட்ட இருந்து அவரை கவனிப்பவர்களுக்கு தெரியும். அவருக்கு 90 வயதா? டீன் ஏஜ் வயதா என்பது? அவருக்கு ஈடாகுமா இப்போ இருக்கும் டம்ளர் குரூப்ஸ்? முதலில் கிட்ட வாங்கடா, அவருக்கு சரிசமமா கபடி ஆடுங்கடா என சொல்ல தோன்றும்.

விரைவில் இன்னும் பத்தே வருடம் என் தலைவனின் நூற்றாண்டு வரும். அதில் கூட என் தலைவன் எங்களை ட்ரில் வாங்க போகின்றார். "வாழ்க வசவாளர்கள்" என சொல்லிவிட்டு நாங்கள் எங்கள் அடுத்த கட்ட பயணம் செய்ய தயாராகிவிட்டோம். எங்களுக்கு அவருக்கு சமமாககூட இல்லை. அவரின் ஓரளவுக்காவது சுறு சுறுப்பு வேண்டும். இதோ தோழர் அசன் முகமது ஜின்னா அவர்கள் எங்கள் தலைவருக்கு எழுதிய 'எடிட்' செய்யப்படாத கடிதம். அவரது அனுமதி கேட்டா கொடுக்க மாட்டார் என எனக்கு தெரியும். இருந்தாலும் சிறிய மனஸ்தாபத்துடன் இதை அனுமதிப்பார் என்று தெரிந்தே இதை இங்கே பெருமையுடன் வெளியிடுகிறேன்! இதோ அவரது கடிதத்தை படியுங்கள்

!
*************************************


உயிரினும் இனிய தலைவர் அவர்களுக்கு, வணக்கம்.


உலகத்தின் பார்வை உங்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. உண்மைத் தமிழினம் உங்கள் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கிறது. ஏசுவோர்-ஏளனம் செய்வோர்-எதற்கும் உதவாதோர் எத்தனை விமர்சனங்களை வைத்தாலும், எதிர்ப்புகளையும் தடைகளையும் ஏற்படுத்தினாலும் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் தங்களின் மனஉறுதிக்குக் கிடைத்த வெற்றிதான் டெசோ மாநாடு. தங்கள் பொதுவாழ்வுப் பயணத்தின் நெடுகிலும் எந்தத் தமிழினத்திற்காகக் குரல் கொடுத்து வருகிறீர்களோ, அந்தத் தமிழினத்தின் நிலையை உலக நாடுகளின் கவனத்திற்கும் ஐ.நா. அவையின் பார்வைக்கும் கொண்டு சென்று, நிரந்தரத் தீர்வு காண்பதற்கான பெரும்பணியை மேற்கொண்டுள்ள டெசோ அமைப்பின் மாநாட்டில் தங்களுடனும் தளபதியுடனும் அருகிலிருந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை என் வாழ்நாளின் சிறந்த தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

இமயத்தைத் தோளில் சுமப்பது போன்ற கடினமானப் பணியை, குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாயின் கவனத்துடன் தாங்கள் செயலாற்றியதை எண்ணி எண்ணி வியக்கிறேன். ஜூலை 4ஆம் நாள் கழகத்தின் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம். தமிழகச் சிறையின் கொள்ளளவைவிட 4 மடங்கிற்கு கழகத்தினர் தமிழகம் முழுவதும் போராட்டக் களம் கண்டதால், ஆட்சியாளர்கள் அஞ்சி நடுங்கி, அனைவரையும் மாலையிலேயே விடுவித்தனர். அந்தப் போராட்டத்தில் பங்கேற்று விடுவிக்கப்ட்ட நான், தங்களைக் காண வருகிறேன். தமிழகம் முழுவதுமிருந்தும் போராட்ட வெற்றிச் செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வெற்றியில் இரண்டொரு நாட்களாகவது திளைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் யாருக்குமே ஏற்படும். ஆனால், தலைவரோ, அந்த வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியளித்துவிட்டு, வழக்கம்போல் கழகப்பணியில் ஈடுபட்டதுடன், என்னைப் போன்றவர்களிடம் டெசோ மாநாட்டுப் பணிகள் எந்தளவில் இருக்கிறது என்று கேட்டீர்கள். அடுத்த களம் எது, அதில் வெற்றி காண்பது எப்படி என்று சிந்திக்கின்ற தங்களின் போர்க்குணம் என்னைக் கூனிக் குறுகச் செய்தது.

டெசோ மாநாட்டிற்கும் ஆய்வரங்கற்கும் வருவதற்கு ஒப்புதல் தெரிவித்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பட்டியலைக் கேட்டு, அவர்களின் வருகை குறித்த விவரங்களை என்னிடம் விசாரித்தீர்கள். இலங்கைத்தமிழ்ப் பிரதிநிதிகளை அழைத்து வரும் பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் அது பற்றிய விவரங்களைக் கேட்டறிகிறீர்கள். மாநாடு தொடர்பான மற்ற பணிகள் குறித்து கழக நிரவாகிகளிடம் உத்தரவிடுகிறீர்கள். ஓய்வு என்ற ஒரு சொல்லே உங்கள் அகராதியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதோ என்று ஆச்சரியப்பட்டு நின்றேன்.

ஜூலை 20ஆம் நாள் மாலை 6 மணிக்கு அறிவாலயத்திற்குத் தலைவர் வந்துவிடுவார் என்று முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. நாங்களும் அங்கு வந்து காத்திருக்கிறோம். 6 மணி என்றால் எப்படியும் 7 மணியாவது ஆகும் நம் தலைவர் வருவதற்கு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மிகச்சரியாக 5.59க்கு அறிவாலயம் வாசலில் உங்கள் கார் வந்து நிற்கிறது. வழக்கமாக வரும் பாதுகாப்புக்கான பூனைப்படையினரைக் காணவில்லை. அவர்கள் தங்கள் இல்லத்திற்கு வந்து சேராத நிலையிலும், மாநாட்டுப் பணிகள் பற்றி ஆலோசிக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்றதும் பாதுகாப்பு பற்றிக்கூடக் கவலைப்படாமல் அறிவாலயத்திற்கு வந்துவிட்டீர்கள். எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கழக நிர்வாகிகள் வரத் தாமதமானாலும் குறித்த நேரத்தில் தளபதி வந்துவிடுவது வழக்கம். அந்த வழக்கம், எங்கிருந்து அவருக்குப் பழக்கமானது என்பதை அன்று புரிந்துகொள்ளள முடிந்தது.

தங்களிடம் ஒவ்வொரு நாளும் பாடம் கற்றுக்கொள்ள எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகவே டெசோ மாநாட்டுப் பணிகள் அமைந்தன. ஜூலை 24ந் தேதியன்று ஆலோசனைகள் முடித்து தாங்கள் புறப்படும்போது, என்னையும் தங்கள் காரில் ஏறிக்கொள்ளச் சொன்னீர்கள். எனக்கு இன்ப அதிர்ச்சி. தயங்கி நிற்கிறேன். அப்போது நீங்கள், “பாதியில் இறக்கிவிட்டுவிடுவேன்னு பார்க்குறியா?” என்று கேட்கிறீர்கள். “நீங்கள் எங்களை ஒருபோதும் பாதியில் இறக்கிவிடமாட்டீங்கய்யா” என்று என் நெஞ்சத்து வார்த்தைகள் உதட்டின் வழியே வெளிப்பட்டன. என் தந்தை அசன் முகமது அவர்கள் தங்களோடு காரில் பயணித்திருக்கிறார். கழகத்துடனான எங்கள் குடும்பத்தின் பயணம் இன்றும் என்றும் தொடரும். தாங்களோ தளபதியோ ஒரு போதும் பாதியில் இறக்கிவிட்டுவிட மாட்டீர்கள் என்பதைத்தானே எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக இந்த இயக்கத்தில் பயணிப்பது காட்டுகிறது.

கார் பயணத்தின்போது நான் தயக்கத்துடனும் அமைதியுடனும் உட்கார்ந்திருக்கிறேன். ஆனால், தலைவர் நீங்களோ தங்கள் அனுபவத்தில் சிறு துணுக்கு அளவுகூட இல்லாத என்னிடம் கருத்தகளைக் கேட்கிறீர்கள். இந்திய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி அவர்கள் வெற்றி பெற்ற செய்தி பற்றி பேச்சு வருகிறது. சுதந்திர இந்தியாவில் குடியரசுத் தலைவர்களாக பதவியேற்வர்களில் 7 பேர் தலைவரின் முயற்சியாலும் ஆதரவாலும்தான் குடியரசுத் தலைவர் ஆனார்கள் என்று நான் சொன்னதும், அவ்வளவு இருக்காதே? என்கிறீர்கள். நான் வரிசையாக ஒவ்வொரு பெயரைச் சொல்ல, தாங்கள் விரல் விட்டு எண்ணியதும், அதன்பிறகு அந்தத் தேர்வுகள் குறித்த தங்களின் விளக்கங்களும், தாங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் எத்தனை கவனத்துடன் இருக்கிறீர்கள் என்பதை எனக்கு உணர்த்தியது.

ஒரு நாள் கேபாலபுரத்தில், டெசோ மாநாட்டில் ஒலிபரப்புவதற்கான ஈழத்தமிழர் துயர் துடைப்புப்பாடலின் ஒலிப்பேழையைத் தலைவர் அவர்களோடு நாங்களும் கேட்கிறோம். தாங்கள் சொல்லியிருந்த திருத்தத்தை செய்துமுடித்து பேராசிரியர் சுப.வீ அவர்கள் அந்த ஒலிப்பேழையைக் கொண்டு வந்து போட்டுக் காட்டுகிறார். இருட்டறையில் உள்ளதடா ஈழம் என்று தொடங்கும் தலைவரின் பாடலைக் கேட்கும்போது நெஞ்சம் விம்மி, கண்கள் கலங்குகிறது அனைவருக்கும். அதில் ரத்தம் கொதிக்கிறதே என்பதற்குப் பதில் ரத்தம் துடிக்கிறதே என்று இருக்கிறது. தாங்கள்தான் அதை சுட்டிக்காட்டுகிறீர்கள். ஆனால், அங்கே தங்களோடு அந்தப் பாடலைக் கேட்ட அண்ணன் எ.வ.வேலு, அண்ணன் க.பொன்முடி, அமைப்புச்செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம் உள்ளிட்ட எல்லோருமே ‘ரத்தம் கொதிக்கிறதே’ என்றுதான் இருக்கிறது என்கிறார்கள். தங்கள் உதவியாளர் நித்யாவை அழைத்து, ரீவைண்ட் செய்து போடச் சொல்கிறீர்கள். அப்போதுதான் எல்லோரும் கவனமாகக் கேட்கிறார்கள். தாங்கள் சொன்னதுபோல, ‘ரத்தம் துடிக்கிறதே’ என்றுதான் அதில் இடம்பெற்றிருந்தது. செய்யப்பட்ட திருத்தம் பதிவாகவில்லை என்பதை சுப.வீ உள்ளிட்ட எல்லோரும் உணர்கிறார்கள். ஒற்றை வார்த்தைகூட தப்பிப்போய்விடாதபடி தாங்கள் எவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள் என்பதைக் கண்டு வியந்தேன்.

உடல்நலன் பற்றி கவலைப்பட்டுக்கொண்டோ, இந்த வேலையையெல்லாம் நாம் கவனிப்பதா என்று அலட்சியம் காட்டுவதோ இல்லாமல் மாநாட்டின் ஒவ்வொரு பணியையும் உங்கள் மேற்பார்வையில்தான் நிறைவேற்றினீர்கள். மாநாட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் போதுமானதாக இருக்காது என்று சொல்லப்பட்டவுடன், தளபதியிடம் தொண்டர் படையை உருவாக்கும்படி கூறினீர்கள். தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி பாயுமே! தளபதி உருவாக்கிய தொண்டர் படைதான், போலீஸ் பாதுகாப்பே இல்லாத டெசோ மாநாட்டில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாதபடி பாதுகாத்து, போக்குவரத்து நெருக்கடியில்லாமலும் தவிர்த்தது.

எனது நண்பர் திருவண்ணாமலை நேரு நட்பு முறையில் சில ஆலோசனைகளை எனக்குச் சொல்வார். “எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். உங்கள் இலக்கிலிருந்து கவனம் சிதறிவிடும். விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அதைப் புறக்கணித்து நம் செயல்களைத் தொடரவேண்டும் விமர்சனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் செயல் தேங்கிவிடும். தேங்கி நிற்கின்ற எதுவுமே தீங்குதான். ஆறுபோல ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் அனைவருக்கும் பயன் தரும்” என்று சொல்வார். தலைவரிடம் அதை அனுபவரீதியாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

காலி டப்பாக்களில் கல்லைப் போட்டு உருட்டியதுபோல வாய்ப்பேச்சு வீரர்கள் எப்படியெல்லாம் விமர்சித்தார்கள். அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, டெசோ மாநாடு வெற்றிபெற்றிருக்கிறது என்றால் அதற்குத் தலைவரின் ஓய்வறியா செயலாற்றலே காரணம். நிச்சயமாக வெற்றி பெறமுடியும் என்கிற போர்க்களத்தில் யாரும் இறங்கலாம். இந்தக் களம் கடினமானது என்றும் இது பெருஞ்சோதனை என்றும் சொல்லப்படும் நேரத்தில் அந்தக் களத்தில் இறங்கி, வெற்றியை உறுதி செய்வதற்குப் பெயர்தான் பேராற்றல். இன்று அந்தப் பேராற்றலைக் கொண்ட ஒரே தலைவர் நீங்கள் மட்டும்தான்.

என் தந்தை அசன் முகமது அவர்கள் முரசொலியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவங்களைப் பல முறை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். தலைவர் அவர்களிடமிருந்து போன் வந்தால், யார் அதை எடுத்துப் பேசுவது என்று தயங்குவார்களாம். காரணம், தலைவர் என்ன மனநிலையில் இருக்கிறார்? எப்படிப் பேசுவார்? திட்டினால் என்ன செய்வது? என்பதுதான் தயக்கத்திற்குக் காரணமாக இருக்குமாம். எந்தளவுக்கு நியாயமான கோபம் இருக்கிறதோ, அதைவிட அதிகமான அளவுக்கு உயர்ந்த குணமும் நகைச்சுவை மனமும் தலைவரிடம் உண்டு என்பதை என் அப்பா சொல்லியிருக்கிறார். டெசோ மாநாட்டுப் பணிகளின் போது தங்கள் அருகிலிருந்து அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

தாமதமாகும் பணிகளைப் பற்றி அறிந்ததும் தங்களிடமிருந்து சீற்றமான வார்த்தை வெளிப்படும். அடுத்த சில நிமிடங்களில், வேறொரு பணி சிறப்பாக நிறைவேறியதற்காகப் பாராட்டான வார்த்தைகள் இயல்பாக வரும். டெசோ லெட்டர் பேடில் மாநாட்டின் மைய நோக்கம் குறித்து சுருக்கமாக எழுதவேண்டும். எப்படி எழுவதும் என்று எல்லோரும் குழம்பிக்கொண்டிருந்தபோது, தலைவர் வந்தீர்கள். அந்த லெட்டர் பேடை வாங்கினீர்கள். அடுத்த 5 நிமிடத்தில் தெளிவான-விரிவான நோக்கத்தை வெளிப்படுத்தும் வார்த்தைககளால் குறிப்பை எழுதிக் கொடுத்தீர்கள். மாநாட்டின் தீர்மானங்கள், விளக்கவுரைகள் இவை தொடர்பாக இரவு 3 மணியளவில் கூட குறிப்புகளை எடுத்தவர் நீங்கள் என்பதை அறிவேன். அந்தக் குறிப்புகளைப் பதிவு செய்யும்படி உதவியாளர் நித்யாவிடம் தாங்கள் கூறியபோது, அந்த நேரத்தில் பேப்பர் இல்லை என்கிற நிலவரத்தை அவர் சொல்ல, ”பேப்பர் இல்லையா, உனக்குத் தூக்கம் வருகிறதா?” என்று கேட்டு, விழிப்பை உண்டாக்கியவர் நீங்கள்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு பற்றி தங்களிடம் சொல்லப்பட்டதும், அதன் செயல்பாடு பற்றிக் கேட்டீர்கள். போர்க்களத்தில் சிக்கியவர்கள்-சிறைப்பட்டவர்கள் ஆகியோருக்குத் துணை நிற்பது என்று தங்களிடம் சொன்னார்கள். உடனே தாங்கள், “இதைத்தானே பெருஞ்சோறளித்த சேரலாதன் என்று இலக்கியம் சொல்கிறது. அவன் போர்க்களத்தில் சிக்கியவர்களுக்கு சோறும் நீரும் அளித்தவனாயிற்றே!“ என்று சொல்லி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழினம் எத்தகைய சிந்தையும் செயல்பாடும் கொண்டிருக்கிறது என்பதை என்னைப் போன்ற இளையவர்களுக்கு உணர்த்தினீர்கள். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் என்ற அய்யன் வள்ளுவரின் வரிகளுக்கேற்ப, டெசோ மாநாட்டுப் பணிகளில் எதனை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்து ஒப்படைத்து, அனைத்தையும் ஒருங்கிணைத்து வெற்றிகாணச் செய்ததது தாங்கள்தானே!

மாநாட்டில் பங்கேற்ற உலகநாடுகளின் தலைவர்கள் அனைவரும், இத்தனை வயதில் இப்படி உழைக்கும் ஆற்றல்மிக்க ஒரு தலைவரை நாங்கள் கண்டதில்லை என ஆச்சரியத்தோடு சொன்னார்கள். மலேசியாவிலிருந்து வந்திருந்த அந்நாட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த யுஸ்மாடி யூசுஃப், அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்குதத் தேர்தல் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அவர் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியபோது, தமிழக காவல்துறையினர் தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். மாநாடு ரத்தாகிவிட்டது. நீங்கள் திரும்பிப்போகவேண்டும் என்று சொல்ல, “நான் திரும்பிச் சென்றால் இரண்டு நாடுகளிடையே பிரச்சினை ஏற்படும். ஏன் நான் திரும்ப வேண்டும் என்பதை எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். அதன்பிறகுதான் காவல்துறையினர் அவரை அனுமதித்திருக்கிறார்கள்.

தலைவரின் உழைப்பாலும் சிந்தனையாலும் உருவான வள்ளுவர் கோட்டத்தையும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருவூலத்தையும் பார்த்துவிட்டு, இதுவரை உலகளவில் எந்தத் தலைவரோடும் நான் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டதில்லை. ஆனால், உங்கள் தலைவரோடு  ஒரு படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று மனம் விட்டுச் சொன்னார்.

மலேசியாவின் எதிர்க்கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள அவரிடம், மாறிவந்தால் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி தருவதாக அந்நாட்டு ஆளுந்தரப்பு சொன்னபோதும் கட்சி தாவதா மனஉறுதி கொண்டவர் யுஸ்மாடி  யூசுஃ.ப். அவர் தங்கள் கட்சித் தலைவர் அந்நாட்டில் எதிர்கொண்ட அரசியல் அடக்குமுறைகள் பற்றி விளக்கினார். நாமும் நமது மாநிலத்தில் உள்ள அடக்குமுறைகளைச் சொன்னதுடன், கருவூலத்தில் உள்ள மிசா காலக் கொடுமைகள் பற்றிய பதிவுகளைக் காட்டி, தளபதி அவர்கள் ஓராண்டுகாலம் கடும் சித்ரவதைகளுடன் சிறைவாசத்தை எதிர்கொண்டதையும் விளக்கினோம். அதனால்தான் உங்கள் தலைவரும் தளபதியும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள என்றார் யூசுஃப்.

எமர்ஜென்சி காலத்தில் தளபதி எதிர்கொண்ட சித்ரவதைகளைப் பற்றி அறிந்த மொராக்கோ நாட்டைச் சேர்ந்த உண்மை மற்றும் நீதி ஆணையத்தின் தேசியத் தலைவர் அஃபெகோ முபாரக் மிகவும் வேதனையடைந்தார். காரணம், அவர் மொராக்கோ நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டபோது royal house எனப்படும் அரண்மனையில் இருந்த அஃபெகோ முபாரக்கும் அவரது குடும்பத்தினரும் மொத்தமாகக் கைது செய்யப்பட்டனர். அஃபெகோவின் தந்தைக்கு ராணுவ ஆட்சி 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அஃபெகோவும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் 4 ஆண்டுகாலம் சிறையில் அடைபட்டிருந்தனர். பிறகு, ராணுவ ஆட்சி நீங்கி unitral parliamentary constitutional monarchy என்கிற நாடாளுமன்ற ஆட்சி முறை மொராக்கோவில் அமைந்தபிறகே அஃபெகோவின் தந்தை, 11 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின் விடுதலையானார். ஆட்சியாளர்களின் பழிவாங்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அஃபெகோவுக்கு எமர்ஜென்சிக் காலக் கொடுமைகளும் அப்போது தலைவரும் குடும்பத்தினரும் பட்ட துன்பங்களும், தளபதி சிறைப்பட்டதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தலைவர் மீதும் தளபதி மீதும் அவருக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டதுடன், தளபதிக்கு கென்டகி கர்னல் விருது கிடைத்தது பற்றி மாநாட்டு மேடையில் பெருமையுடன் பேசினார்.

சுவீடன் சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்தவரான நசீம் மாலிக், நமது  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்து இங்கே வந்து தரையிறங்கினார். உலக நடப்புகள் பற்றியெல்லாம் விவாதித்தபடி வந்திருக்கிறார்கள. நசீம் மாலிக்கிடம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் எங்கள் கட்சி உள்ளது. பலநாடுகளில் ஆட்சியில் இருக்கிறது. எங்கள் கட்சி சார்பில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறதென்றால் யாரையும் வேலை வாங்கமாட்டோம். அந்த ஊரில் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் யார் இருக்கிறார்களோ அவர்கள் பிரதமராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்கள் டிராக் பேண்ட் போட்டுக்கொண்டு, தங்கள் மனைவி மற்றும் நிர்வாகிகளோடு வந்து, அந்த கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வார்கள் என்றார்.

நாங்கள் அவரிடம், கழகம் எப்படி ஒரு குடும்பம் போல செயல்படுகிறது என்பதையும், கழக ஏடான முரசொலியைத் தலைவர் தன் தலையிலும் தோளிலும் சுமந்து சென்றதையும், தளபதியும் ஒவ்வொரு ஊராகச் சென்று கழகத்தை வளர்ப்பதையும் எடுத்துச் சொன்னோம். நசீம் மாலிக் மிகுந்த ஆச்சரியமடைந்தார். தலைவரைப் பாராட்டி பரிசளித்ததுடன், வளர்ந்து வருகிற தலைவர் என்று தளபதியை மாநாட்டு மேடையில் அவர் பேசியதற்கு காரணம், தங்கள் இருவர் மீதும் ஏற்பட்ட மதிப்புதான்.

துருக்கி நாட்டைச் சேர்ந்தரான ஐ.நா. பன்னாட்டு ஆணையத் தூதர் கெமால் இல்திரிம்ஸ், பல்வேறு நாட்டு அதிபர்களை சந்தித்து விவாதிக்கக் கூடியவர். உலக அரசியல் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளவர். அவரும் கருவூலத்தைப் பார்த்து, தலைவரின் பொதுவாழ்வு செயல்பாடுகளைப் பார்த்து வியந்து, டெசோவின் வளர்ச்சியில் தன்னையும் ஒருவராக இணைத்துக்கொண்டு, அடுத்த டெசோ மீட்டிங்கை  அர்ஜென்டினாவில் நடத்துவோம் என்றார்.

ஈழப்பிரச்சினை தொடர்பாக ஐ.நா மனித உரிமை அவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த நாடான நைஜீரியாவிலிருந்து வந்திருந்த மேமோவும் தலைவரின் செயல்பாடுகளை அறிந்து வியந்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைத்து நாட்டினருமே தமிழகத்தில் இப்படியொரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காத்து இந்த இனத்தின் நலனுக்காகவே பாடுபட்டு வரும் தலைவரையும் அவருக்குத் துணை நிற்கும் தளபதியையும் மனதாரப் பாராட்டினர்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு, போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசின் மீது நிறைய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. அதற்கு இலங்கை அரசு பதில் தர வேண்டும் என்றும் நிர்பந்தித்துள்ளது. அத்தகைய அமைப்பின் தேசிய இயக்குநர் ஆனந்த் குருசாமி, டெசோ மாநாட்டிற்கு வருகிறார் என்றதும், அதை எப்படியாவது கெடுத்துவிடவேண்டும் என இங்கே ஈழப் பிரச்சினையைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் வியாபாரிகள் கடும் முயற்சிக் செய்தனர். ஆனால், அம்மெனஸ்டி இன்டர்நேஷனல் அமைப்போ, “எங்களுக்கு நோக்கம்தான் முக்கியம். எங்கள் கருத்தை எடுத்துச் சொல்ல ஒரு ப்ளாட்பார்ம் தேவை. எனவே நாங்கள் டெசோ மாநாட்டில் பங்கேற்பதை யாரும் தடுக்க முடியாது என உறுதியாகக் கூறிவட்டது.

ஈழத்தமிழர் நலனுக்காக யார் குரல் கொடுத்தாலும் ஆதரிக்கும் இயக்கம்தான் தலைவரின் தலைமையிலான தி.மு.கழகம். ஜெயலலிதா இதற்கு முன் என்னவெல்லாம் பேசியிருக்கிறார் என்பது தெரியும். ஆனாலும், அவர் ஆட்சியில் ஈழத்தமிழர் நலனுக்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த இயக்கம் தி.மு.க. ஆனால், தி.மு.கவை எதிர்க்கும் அமைப்புகளோ, ஈழத்தமிழர் நலனைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு, கழகத்திற்கு எதிராகவே செயல்படுகின்றன. ஈழத்தை வைத்து இங்கே பிழைப்பு நடத்தும் அவர்களால் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த பலன் என்று ஏதாவது ஒன்றைச் சொல்லமுடியுமா? வெறும் வாயை மெல்லுகிறார்கள். வெறுங்கையால் முழம் போடுகிறார்கள்.

தலைவரே உங்களின் உழைப்பின் பயனை மாநாடு தொடங்குவதற்க முன்பே உணர முடிந்தது. தாங்கள் எடுத்த நடவடிக்கை பல நாட்டு ஆதரவினைப் பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு, ஐ.நா. மனித உரிமை அவையின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடு. ஆனால், அந்நாட்டு அதிபரின் அரசியல் ஆலோசகர் அனுப்பிய வாழ்த்துச்செய்தியில், ‘டெசோவில் எங்களையும் இணைத்துக் கொள்கிறோம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதுதான் உங்கள் மாபெரும் முயற்சிக்கான முதற்கட்ட வெற்றி.

இப்படிப்பட்ட சிறப்புமிக்க மாநாட்டில் நானும் பணியாற்ற வாய்ப்பளிக்கும் வகையில், தளபதி தலைமையிலான வரவேற்புக் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராக நியமித்து, தங்கள கடிதத்தில் என் பெயரையும் குறிப்பிட்டு, மாநாட்டு மேடையில் மூன்று தீர்மானங்களைப் படிக்கும் வாய்ப்பையும் அளித்ததைக் காலம் உள்ளவரை நெஞ்சில் நன்றியுடன் நிலைநிறுத்தியிருப்பேன்.

துருக்கி நாட்டைச் சேர்ந்தரான இல்திரிம்ஸ் சென்னையிலிருந்து விமானம் ஏறும்போது, என் வீட்டை விட்டுப் போவது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என்று சொன்னார். அதுதான் நம் தமிழ் மண்ணின் பெருமை. அத்தகைய பெருமைமிக்க இனத்தின் உரிமைகளும் அடையாளங்களும் பறிபோய்விடக்கூடாது என்பதற்காகத்தான் தலைவர் அவர்கள் அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இனமானப் பேராசிரியரும் தளபதியும் தங்களுக்குத் துணைநிற்க, கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் உங்கள் பின்னே அணிவகுத்து நிற்கிறார்கள். அந்த உடன்பிறப்புகளில் ஒருவனான நான் பெற்ற வாய்ப்பையும் அனுபவத்தையும் நன்றியுணர்ச்சியுடன் பதிவு செய்யவேண்டும் என்பதாலேயே இந்த நீண்ட கடிதத்தை எழுதியுள்ளேன்.

என்றும் அன்புடன்

அசன்முகமது ஜின்னா
மாநில இளைஞர் அணி துணை செயலர்
திராவிட முன்னேற்ற கழகம் - தலைமை நிலையம்


August 6, 2012

நாஞ்சில் சம்பத் என்னும் பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாய் கொக்கரிக்கின்றது ..... (டெஸோ மாநாடு)


டெஸோ மாநாடு நடைபெற இருக்கும் Y M C A மைதானத்தில் பந்தல் வேலையை பார்வையிடும் (தன் 90வது வயதிலும்) கலைஞர் அவர்கள்

எதிர்வரும் ஆகஸ்ட் 12ம் தேதி 2012 அன்று சென்னையில் டெஸோ மாநாடு நடத்தப்படும் என கலைஞர் அறிவித்த அன்றைய தினத்தில் இருந்து திமுகவினரோ, அல்லது அந்த டெஸோ அமைப்பில் இருப்பவர்களோ கூட யாரும் இந்த மாநாட்டு செய்திகளை முனைப்போடு மக்களிடம் எடுத்துச்செல்லவில்லை என சொல்லும் அளவுக்கு இலங்கை அரசும், (ஆமாம், இலங்கை அரசே தான்), மற்றும் எப்போதும் போல கலைஞர் எது செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற மனோநிலையில் இருக்கும் மனோவியாதியஸ்தர்களும் வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்க ஆரம்பித்ததன் விளைவு... டெஸோ குழுவினருக்கு "விளம்பர" மிச்சம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது கிண்டல்கள், கேலிகள் என கலைஞர் எதிர்ப்பாளர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்க, இங்கே டெஸோ மாநாட்டு குழுவினர்  அமைதியான முறையில் அதே நேரம் துரித கதியில் மாநாட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு உள்ளனர்.

கலைஞர் அவர்கள், தன் 24 மணி நேரம் போதாமல் மாநாட்டு வேலைகளில் மூழ்கிக்கிடக்க அவரது பரிவாரங்கள் தான் பாவம். அனேகமாக அவர்கள் ஆகஸ்ட் 12க்கு பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டு ஆசுவாசம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை.

இதனிடையே மதிமுகவின் வைக்கோ, நெடுமாறன், சீமான் போன்ற,  ஈழப்பிரச்சனையை அரசியல் வியாபாரமாக்கிவர்கள் வயிற்றில் புளி கரைக்கப்பட்டு என்ன பேசுகிறோம் என எதும் தெரியாமல் பிதற்றிக்கொண்டு இருக்கின்றனர். ஒருவனை முதுகில் அடிக்கலாம். வயிற்றில் அடிக்கலாமா கலைஞரே? அவர்கள் பிழைப்பில் மண் போடலாமா? அதனால் தான் பிதற்றுகினனர் போல.  பிணம் தின்னி அரசியல்வாதிகளை அப்படி அடித்தால் கூட தவறில்லை என்றே தோன்றுகின்றது இப்போது. ஏனனில் அவர்களது சமீபத்திய உளறல்கள் அப்படியாகவே இருக்கின்றன.

இதில் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் இதயத்தை இரும்புப்பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு பேசும் பேச்சுகள் பல சமயம் எரிச்சலாகவும் சில சமயங்களில் அயற்சியாகவும் உள்ளன. சமீபத்தில் கூட  "டெஸோ மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கூட எங்களுக்கு இனி எதிரிகள் தான். அவர்களும் தமிழின விரோதிகள் மற்றும் துரோகிகள் தான்" என திருவாய் மலர்ந்துள்ளார். இனியாவது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் "டெஸோ" மாநாடு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் திமுகவின் 36 மாவட்ட செயலர்கள் தங்கள் தங்கள் மாவட்ட குழு கூட்டம் நடத்தி முடித்து விட்டனர். நகர, ஒன்றிய, பேரூர் கழகங்கள் தங்கள் கூட்டம் நடத்தி முடித்து விட்டன. கிளைக்கழக கூட்டம் எல்லாம் முடிந்து விட்டன. அதிலே எடுத்த முடிவின் படி பொதுமக்களும் மாநாட்டுக்கு ஏன் வ வேண்டும் என தெருமுனைக்கூட்டங்களும், பெரிய கூட்டங்களும் நடந்து கொண்டு உள்ளன. கிட்டத்தட்ட திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் வரை செய்தி போய் சேர்ந்து விட்டது. டெஸோ மாநாட்டுக்கு வர வேண்டி போக்குவரத்து, தங்குமிடம், சாப்பாடு ஆகிய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன தொண்டர்கள் மத்தியில்.  சிறை நிரப்பும் போராட்டத்துக்கே இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் என்றால் இதற்கு அதை விட ஐந்து மடங்கு கூட்டம் வரும் என காவல்துறை கைபிசைந்து நிற்கின்றது. முதல்வரோ இதற்கெல்லாம் கவலைப்படாமல் கொடநாட்டில் இருக்கின்றார்.

ஈழத்தமிழர்களே! ஒரு பத்து லட்சம் பேரை ஒரே இடத்தில் திரட்டி உலகின் முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்களை கொண்டு வந்து அவர்களை வைத்தே மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றி.... இந்த மாநாடு என்பது ஏதோ திமுகவினரின் பொழுது போக்கிற்காக இல்லை... ஒரு சென்சிட்டிவான ஈழப்பிரச்சனைக்காக என்பதை வரும் முக்கியஸ்தர்களிடம் விளக்கி அதை அவர்கள் எந்த அளவு கொண்டு சென்று உலக அளவில் பரப்ப வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு ஒரு அருமையான நிகழ்வு நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் ..... நரம்பில்லா நாக்குக்கும், மூளை இல்லா கபாலத்துக்கும், இதயம் இல்லா மார்புக்கும் சொந்தக்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டியே இப்பதிவு.

என்னது அது? நாஞ்சில் சம்பத்தா, அல்லது நஞ்சில் தோய்த்த அம்பா? என்னது அது? ம்ம்ம்ம்... டெஸோ மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் அவர்களுக்கு இனி எதிரியாமாம். என்ன ஒரு உணர்வு. சீமான், நெடுமாறன், வைக்கோ, சம்பத் போன்ற இன்ன பிற செல்லாக்காசுகள் இத்தனை நாள் இது போல ஒரு கூட்டம் கூட்டி உலக நாடுகளை அவர்கள் பக்கம்  திரும்பச்செய்தனரா? அல்லது இனிமேலாவது அப்படி உலகப்பார்வையை உங்கள் மீது விழ வைத்து ஈழத்தமிழர் பிரச்சனையை உலகலாவிய பிரச்சனை ஆக்க முயற்சியாவது செய்தது உண்டா? அல்லது அந்த தெம்போ, திராணியோ உங்களுக்கு இருக்கின்றதா முதலில். இதோ நாங்கள் மாநாட்டுக்கு வரும் சில முக்கியஸ்தர்களை பற்றி சொல்கின்றோம். அவர்களை நீங்கள் எல்லாம் போய் அவர்கள் நாட்டிலாவது பார்க்க இயலுமா? அல்லது பார்த்தாலும் உங்கள் ஒரு கை ஓசை ஒலி எழுப்புமா? அத்தனை பேரையும் ஒரே இடத்தில் கூட்டக்கூடிய வலிமையோ அல்லது திறமையோ உங்களுக்கு உண்டா? உங்களால் முடிந்தது எல்லாம் பாவம்... அந்த புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் காசுகளில் நார்வே, ஸ்வீடன், செர்மனி, அமரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என இன்ப சுற்றுலா போய் அங்கே ஒரு மூடிய அரங்கில் தொண்டை நரம்பு புடைக்க முழக்கமிட்டு கைத்தட்டல் போதையை ஏற்றிக்கொண்டு விமானம் ஏறி தமிழகம் வந்து "போய் வந்த" பொருளாதார திமிரில் கலைஞரை வசை பாடுவீர்கள்.

ஆனால் டெஸோ மாநாடு அப்படி இல்லை நஞ்சில் புழுத்த புழுக்களே, யாரெல்லாம் உலக அரங்கில் உன்னத நிலையில் மனிதாபிமானத்தோடு, மனிதநேயத்தோடு உலகை உலுக்கும் சக்தியோடு இருக்கின்றனரோ அவர்களை இங்கே ஒரே குடைக்கு கீழே கொண்டு வருகிறோம். உரக்க பேசுவதை விட அவர்களுக்கு உரைக்கும் விதத்தில் பேசப்போகிறோம். உங்களைப்போல மூடிய அரங்கில் முக்காடிட்டு அழுவது போல அல்லாமல் திறந்த அரங்கில் உலகமே பார்க்கும் படி ஈழத்தமிழர்களின் வாழ்வாதார உரிமைக்காக, வரும் உலக தலைவர்களை உலுக்கப்போகின்றோம்.  மனித நேயம் மாண்டுவிட்டதா என அவர்கள் மனதை கரைக்கப்போகிறோம். அவர்கள் உங்களுக்கு இனி எதிரிகளா? நாஞ்சில் சம்பத் என்னும் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என கொக்கரிக்கின்றது. எங்களுக்கு பூனைகளை பற்றி கவலை இல்லை. மனிதர்களைப்பற்றி மட்டுமே அக்கரை. இதோ அந்த மாநாட்டுக்கு வரும் ஒரு சிலர் பற்றிய அவர்களது விபரங்களை தந்து இருக்கிறோம். படியுங்கள். இனியாவது தெளியுங்கள்!



ஸ்வீடன் - திரு. நசீம் மாலிக்

திரு.நசீம் மாலிக் அவர்கள்

திரு. நசீம் மாலிக் ஸ்வீடன் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினரும், அந்த நாட்டின் பழமையானதும், மிகப் பெரியதுமான சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தலைவரும் ஆவார்.


மனித உரிமை ஆர்வலரான இவர் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்த பல்வேறு கருத்தரங்கள், ஆய்வரங்களில் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் ஈழப் பிரச்சனை குறித்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டுக் கூட்டத்திலும், ஸ்வீடன் பாராளுமன்றத்திலும் பேசக்கூடிய வாய்ப்பை பெற்றவர்.


The International Human Rights Commission (IHRC) has appointed H.E. Malik Nasim Ahmed (Elected Reserve Member of the Swedish Parliament) as the International Human Rights Commission’s Ambassador for Human Rights and Peace At Large for Scandinavia Countries from Sweden from 16th April 2012.
H.E. Malik Nasim was also appointed as a GOODWIL AMBASSADOR OF PEACE AND HUMANITY, Sweden, by Dr. Dr. Datu Camad Ali, Founding Chairman & Executive President of Southern Philippines Muslim &Non-Muslim Unity & Development Association (SPMUDA International).


H.E. Malik Nasim is renowned for his services to humanity and his efforts for the efforts of human rights and peace. He is working for the democracy, Right of vote for all the citizens of every country and freedom of expression and speech, as these are the fundamental requirements for the establishment of lasting peace in the world.

He also is working against the severe persecutions on religious and ethnic grounds. He is a firm believer of religious freedom and tolerance. These two important appointments are clear evidence of his love and services for mankind.


ஓ.ஐ.சி: - திரு, கெமால் யில்டிரிம்


இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி யில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உறுப்புநாடுகளாக உள்ளன. இந்த ஓ.ஐ.சி அமைப்பானது ஐக்கிய நாடுகள் அவையின் UNTC (United Nations Treaty Collection)-ன் கீழ் இயங்கும் பன்னாட்டு அமைப்பு ஆகும். இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் சர்வதேச மனித உரிமை ஆணையமும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளனர். சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் தூதரான திரு, கெமால் யில்டிரிம் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஈழப் பிரச்சனை தொடர்பாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றிட முயல்வளார்.


நைஜீரியா: இதில் இருந்து டெஸோ மாநாட்டுக்கு வருகை தருகின்றனர்.

நைஜீரியா நாடு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐக்கிய நாடுகள் அவையின் ஏதிலிகள் நல ஆணையத் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடு ஆகும். நைஜீரிய அரசாங்கத்தின் சார்பாக டெஸோ மாநாட்டுக்கு வருகை தருவதாக உறுதி அளித்துள்ளனர். வரும் செய்தி உறுதி செய்யப்பட்ட பின் அவர்கள் பெயர்கள் மற்றும் விபரங்கள் இங்கே அப்டேட் செய்யப்படும் தோழர்களே!


 மலேசியா: - திரு. யுஸ்மாடி யூசுப்

திரு.யுஸ்மாடி யூசுப் அவர்கள்  கிழக்காசிய பசிபிக் ட்ரியேனியல் மாநாட்டில் பேசும் காட்சி 

திரு. யுஸ்மாடி யூசுப் அவர்கள் மலேசிய பாராளுமன்ற உறுப்பினராகவும் மலேசிய நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டியின் சர்வதேசப் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.

பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சியாகும். மேலும் திரு. யுஸ்மாடி யூசுப் அவர்கள் தமிழ் அமைப்பினருடன் இணைந்து மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதரைச் சந்தித்து ஈழத்தமிழர் நலன்காக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பீப்பிள்ஸ் ஜஸ்டிஸ் பார்ட்டி ஈழத்தமிழர்கள் மற்றும் மலேசியாவில் ஏதிலிகளாகக் குடியேறியுள்ள ஈழத் தமிழர்களின் நலம் காட்க பல்வேறு நிதியுதவிகளையும் செய்துள்ளது. சமீபத்தில் இந்தக் கட்சியினர் ஈழத்தமிழர்களுக்காக நிதி சேகரித்துக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

\\ usmadi was born in Balik Pulau, Penang. A Kampung Boy (his story was written in an article entitled From Balik Pulau to Washington D.C. in Al Islam Magazine issue February 2006). He had his early education at Sekolah Kebangsaan Sungai Korok in Balik Pulau and continued his high school at SMKA Al-Mashoor (Lelaki), Pulau Pinang and Sultan Alam Shah Islamic College in Klang.

Yusmadi is a graduate of law (LL.B) from International Islamic University Malaysia where he studied both common law and Islamic law.. He is a Partner at a regional law firm law firm in Malaysia where he specializes in public interest litigation and criminal defense cases. Yusmadi’s involvement in Human rights activism at the local and international level was duly recognised when he was nominated by the US Embassy of Kuala Lumpur to participate in the International Visitors Leadership Program (IVLP) for Multi Regional Human Rights Advocacy Programme, 2004 in USA.

Apart from practicing law, he is a Fellow at the Institut Kajian Dasar (Institute for Policy Research) and a founding Director of GERAK (Movement for Democracy and Anti-Corruption) in Malaysia. Yusmadi was also a founding member of Malaysia America Friendship Alumni Association (MAFAA). In early 2005 Yusmadi was selected by Phoenix TV (a Hong Kong based TV station) to represent the Malaysian Youth for a documentary on successful Asian youths entitled The Neighboring Country Story. Yusmadi is a prolific writer and his views on law and politics are sought after by both print and electronic media in Malaysia.
He writes a weekly column, "Dengan Izin" ("May It Please the Court") on legal and social issues for the leading Malaysian daily, Utusan Malaysia.

In 2006 he was nominated as Hubert H. Humphrey Fellow for Law & Human Rights and was selected by the Fulbright Board to pursue posgraduate studies, LL.M (International Legal studies with specialization in Human Rights) at American University Washington College of Law in Washington D.C.
In Summer 2008, he was selected as Draper Hills Democracy & Development Fellow at Center on Democracy, Development & the Rule of Law, Stanford University.

In the recent Malaysia 12th general election, Yusmadi was elected as Member of Parliament of Malaysia for Balik Pulau, Pulau Pinang and was also appointed as Chairman of International Affairs, People's Justice Party (KeADILan). Yusmadi is married to Fahda Nur, a lawyer and they are blessed with two children (Aqil and Rayidah).

மொராக்கோ: - திரு. டாய்டா முகமது
மொராக்கா பாராளுமன்றம் - இங்கேயும் ஈழத்தமிழன் நிலை குறித்து வாதாட இயலும் திரு.டாய்டா முகமது அவர்களால்...

மொராக்கோ நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான திரு. டாய்டா முகமது அந்நாட்டில் அனைவரும் அறிந்த மனித உரிமை ஆர்வலர் ஆவார். இவர் தனிப்பட்ட முறையிலும், சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் தான் பொறுப்பு வகிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் பல்வேறு ஈழ ஏதிலிகளுக்கு உதவியுள்ளார். ஈழப்பிரச்சனை குறித்து மொராக்கோ பாராளுமன்றத்தில் பேசித் தீர்மானம் நிறைவேற்ற ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.


அம்னெஸ்டி இன்டர்நேசனல்: - ஒரு முக்கிய பிரமுகர் கலந்து கொள்கிறார்:


நோபல் பரிசு பெற்ற மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேசனல் உலகப் புகழ் பெற்ற அமைப்பாகும். ஈழத் தமிழர்கள் தொடர்ந்து அங்குள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பலமுறை கண்டனங்களைத் தெரிவித்துள்ள அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு அவ்வப்போது இலங்கையில் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வறிக்கைகளை ஐக்கிய நாடுகள் அவைக்கும், உலக நாடுகளின் பார்வைக்கும் கொண்டுவருகிறது. அம்னெஸ்டி இன்டர்நேசனல் டெசோ அமைப்புடன் இணைந்து ஈழ மக்களுக்காகப் பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளது.

======================
மேலே இருக்கும் செய்திகள் உதவி திரு.அசன் முகமது ஜின்னா அவர்கள், டெஸோ மாநாட்டு வரவேற்பு குழு செயலர் - திமுக தலைமையகம்)

======================

நாஞ்சில் சம்பத் என்னும் பூனை தன் கண்ணைக் கட்டிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாய் கொக்கரிக்கின்றது




டெசோ குறித்து ஒரு ஈழ தமிழரின் பார்வை....(இணயத்தில் இருந்து) (செய்தி உதவி திரு ஜே பி பிரகாஷ் அவர்கள்)

\\ யார் குத்தி என்றாலும் அரிசியாக வேண்டும். தமிழீழத்தில் நான்கு இலட்சம் மக்கள் தற்காலிக கொட்டில்களில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எந்த அடிப்படை வசதியும் இன்றி வாழ்கிறார்கள். போர்க்காலம் போலவே இராணுவம் வட - கிழக்கு மாகாணங்களில் குவிக்கப்பட்டு இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. சிவில் நிருவாகம் முடக்கப்பட்டுள்ளது. தமிழர்களது அன்றாட வாழ்க்கையில் இராணுவம் தலையிடுகிறது. கோயில் திருவிழா, விளையாட்டுப் போட்டி, திருமணம் எதுவாக இருந்தாலும் இராணுவம் தலையிடுகிறது. தங்களையும் அழைக்குமாறு நிர்ப்பந்தம் செய்கிறது. தமிழர்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்குப் பாரிய தளங்களை அமைத்து வருகின்றன. பவுத்தர்கள் வாழாத ஊர்களில் இராணுவம் விகாரைகள், தூபிகள், புத்தர் சிலைகள் ஆகியவற்றை நிறுவுகின்றது. தென்னிலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் அடாத்தாகக் கொண்டுவந்து குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களது தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. சுருக்காகச் சொன்னால் இனச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது. பண்பாட்டுப் படுகொலை (Cultural Genocide) மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பின்னணியில் திமுக நடத்தும் டெசோ மாநாடு வரவேற்கப்பட வேண்டிய மாநாடு. அதனை எதிர்ப்பவர்கள் கள நிலை தெரியாது கருணாநிதி மீதுள்ள கோபத்தால் எதிர்க்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் தமிழீழ மக்களின் இருப்புக்கு யார் ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டாலும் அது மலையளவு உதவியாக ஈழத் தமிழர்களால் எண்ணப்படும்....\\




****************


உண்மையாகவே ஈழத்தமிழர்கள் மீது அக்கரை இருப்பின் இனியாவது இந்தப்பக்கம் வாருங்கள் ஈழவியாபாரிகளே!ஆனால் வரும் போது வியாபாரி வேஷம் கலைத்து விட்டு மனிதநேயம் தாங்கி வாருங்கள்.ஆகஸ்ட் 12, 2012 - சென்னை டெஸோ மாநாட்டில் சந்திப்போம் தோழர்களே!

August 4, 2012

அண்ணாவின் வீடு காஞ்சீபுரத்தில்.... தமிழகத்தில் ஒரு நல்ல வைப்ரேஷன் இருக்கும் இடம் !!!


நேற்று காஞ்சீபுரம்  போனேன். அறிஞர் அண்ணாவின் வீட்டுக்கு போய் சுத்தி பார்த்தேன். அடடா....... அடடா ................... என்ன ஒரு வைப்ரேஷன். ஒரு தமிழ்நாட்டின் சரித்திரத்தை  புரட்டிப்போட்ட மகான். இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் காங்கிரஸ் தமிழகத்தில் வளரவிடாமல் வேரில் ஆசிட் ஊற்றிய அதிசய அதிரச மனிதன் பிறந்து வளர்ந்த வீடு. அடடே அடடே.... வீட்டின் முன்பக்கம், அதை தாண்டி ரேழி... அதை தாண்டி கூடம், அதிலே அவரது தனி ரூம், அவரது படுக்கை, அதன் மீடு விரிக்கப்பட்ட திமுக பார்டர் போட்ட சால்வை, அவரது சாய்வு நாற்காலி, கூடத்தில் அவரது கையெழுத்து பிரதிகள் அடங்கிய கண்ணாடி பெட்டிகள், முற்றம்... அதை தாண்டி சமையல் அறை. அதிலே மரத்தூள் அடுப்பு, மற்றும் கொடியடுப்புகள், அதன் மேல் புகைக்கூண்டு, ஒரு அழகிய டைனிங் ஹால், இடையே மாடிப்படி, அதன் மேல் ஒரு விசாலமான திறந்த வெளி (அது இப்போது அலுமினியம் ஷீட் போடப்பட்டு உள்ளது) அதில் ஒரு சிமெண்ட் சாய்வு படுக்கை.(இதிலே படுத்து வானத்தை பார்த்தால் ஆயிரம் கதை எழுதலாம்.. தவிர கொசுறாய் இருக்கும் நேரத்தில் தமிழக தலை எழுத்தை கூட மாற்றி எழுதலாம்)  தவிர மாடியில் ஒரு தனி படுக்கை அறை.

அங்கிருந்து ஒரு படி... அது வாசலுக்கு வரும். அதன் கைப்பிடி பார்டர் கருப்பு சிவப்பு. எங்கு நாம் தொடினும் அண்ணாவின் பேச்சுகள் ஒலி வடிவமாக நம் காதில்.... ஒரு வயதான பெண் மற்றும் அந்த வீட்டை பராமரிக்க இரண்டு ஆண்கள். இந்த மூவரும்.... இந்த மூவரும்.... அண்ணா மீது பக்தி கொண்ட உயிர்கள். "அய்யா போட்டோ எடுக்க கூடாது" என அன்பாக கட்டளை இடுகின்றனர். அதையும் மீறி போட்டோ எடுத்தாலும் தடுக்க மாட்டாத அடாவடி ஆட்கள் இல்லை. ஆனாலும் நமக்கு போட்டோ எடுக்க மனம் இல்லை.  சிதம்பரம் நடராஜர் கோவிலில் "போட்டோ எடுக்க அனுமதி இல்லை" என அறிவிப்பு செய்யப்படுவதை மீறி ஆன்மீக வாதிகள் தெரியாத்தனமாக புகைப்படும் எடுப்பார்களோ அது போல இந்த நாத்திக வாதிகள் செய்வதில்லை. விதிகள் இருக்கும் போது அதை பின்பற்றித்தான் பார்ப்போமே என்னும் நிலைப்பாடு இந்த நாத்திகர்களுக்கு!
அங்கே அண்ணா உடுத்திய உடைகள், கண்ணாடி, பேனா, மைக்கூண்டு எல்லாம் உள்ளது. ஆனாலும் என்னை கவர்ந்த விஷயம்... அண்ணாவின் டைரி.... அதிலே சும்மா சில சில துணுக்குகள்  எழுதி வச்சிருக்கார். அதிலே ஒன்று.....அதாவது ஒரு ஹோட்டல் சர்வரும், சாப்பிடுபவரும்...

\\
சாப்பிடுபவர்: என்னய்யா சர்வர், வடை ரொம்ப மோசமாவும் இருக்கு, சின்னதாகவும் இருக்கு?

சர்வர்: ஆமாங்க! கொஞ்சம் யோசிச்சு பாருங்க. வடை மோசமாகவும் இருந்து பெரிசாகவும் இருந்தா என்னா கஷ்டம் உங்களுக்கு?\\

என் கூட வந்த தோழர் அருள் பிரகாசம் சொன்னார் ஒரு வார்த்தை! "நல்லா நினைச்சு பாருங்க தொல்காப்பியன், மின்வெட்டும் அதிகமாக்கி அதுக்கு கட்டணமும் மும்மடங்கு அதிகமாக்கிய ஜெயா அரசின் நிலைப்பாட்டை தான் அன்றே அண்ணா சொன்னாரோ?" என சொன்னார். நல்ல வேலை, மின்வெட்டு அதிக நேரம் இருப்பது நல்லது என்றே  மனசு நினைத்தது. (கறை நல்லது என்பது போல:-))

மாடியில் ஒரு இடத்தில் அண்ணா அவர்கள் பயன்படுத்திய "சக்கர நாற்காலி" கருப்பு சிவப்பு நிறத்தில் இருந்தது. தொட்டுப்பார்த்தேன். "அண்ணா, எம் அண்ணா...." என களுக் என நீர் என் கண்களில். ரமணருக்கு புற்று நோய் - அண்ணாவுக்கு புற்று நோய் என்றெல்லாம் என் மனசு என்ன என்னவோ முடிச்சு போட்டது. அழுத கண்களுடன் கீழே வந்தேன்.


வீட்டை விட்டு வெளியே வரும் பொது "C.N.Annadurai. M.A., In - Out " என்ற கருப்பு சிவப்பு பலகை இருப்பதை பார்க்கிறேன். அண்ணா Out என்பதை மனசு ஏற்க மறுக்கின்றது. அண்ணா ஆல்வேஸ் "இன்" மட்டுமே எங்கள் மனதில் என நினைத்துக்கொள்கிறேன்.

54ம் எண் இலக்கம் உடைய அந்த வீட்டின் பக்கத்து வீடு இரண்டுகளும் அதாவது 53 மற்றிம் 55 ஆகியவை சிதைந்து போய் உள்ளன. என்னை அந்த வீட்டுக்கு அழைத்து போன தோழர் அருள் பிரகாசம் அய்யா அவர்கள் மிக உணர்சி வசப்பட்ட (அவர் அந்த ஊர் தான்) நிலையில் இந்த இரு வீட்டிலும் என்னவோ டிஸ்ப்யூட் இருக்கு. அரசாங்கம் நினைத்தால் அதையும் வாங்கி பூங்காவாக்கி, அண்ணா வீட்டை சுற்றி வரும் நிலை உண்டாக்கலாம் என சொல்கிறார்.

அவர் என்னிடம் சொன்னதை நான் இங்கே பதிந்து விட்டேன். இந்த பதிவை பார்க்கும் நம் திமுக மட்டுமல்ல அதிமுக தொண்டர்கள் யாராவது கூட இதற்கான முயற்சி எடுக்கலாமே! நாங்க திமுகவினர் ஆசை ஆசையாக உதவி செய்வோமே!