பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label திமுக அதிமுக. Show all posts
Showing posts with label திமுக அதிமுக. Show all posts

May 15, 2011

பழம் பெரும் திமுக தொண்டரிடம் ஒரு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!!!

திமுக வெற்றி வாய்பை இழந்து விட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தாகிவிட்டது. இனி அதிமுக விமர்சன வலையத்துக்குள். கட்சியினர் போட்ட கணக்குகள் தவிடு பொடி ஆகிவிட்டன. பத்திரிக்கையாளர்கள் தாங்கள் போட்ட கணக்குகளை தூசி தட்டி ஆராய்சி செய்து கொண்டிருக்கின்றனர். எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம் இருந்தது என்பது உண்மை தான் எனினும் கொஞ்சமும் தளர்ந்தோ ஒடிந்தோ விடவில்லை. நேற்றே எங்கள் ஊர் மயிலாடுதுறையில் உள்ள அண்ணா பகுத்தறிவு மன்றம் சென்று பார்த்த போது கட்சி பெரிசுகள் எதுவுமே நடக்காதது போல பேப்பர் படித்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பழுத்த 78 வயது பெருசு கிட்டே ஒரு பேசிப்பார்ப்போமே என பேசினேன். அவர் பெயர் ரங்கன்.


அபிஅப்பா: என்ன மாமா கட்சி தோத்துடுச்சு. எப்படி இருக்கு உங்க மனசு?


ரங்கன்: ரொம்ப திருப்தியா இருக்கு மாப்ள. இன்னும் சொல்ல போனா தமிழக வாக்காளர்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கு திமுகன்னு தான் சொல்லனும்.


அபிஅப்பா: என்ன மாமா புது சிந்தனையா இருக்குதே நீங்க பேசுறது?


ரங்கன்: இல்ல மாப்ள! சிந்தனை என்னவோ ஒன்னு தான். ஆனா இதை புது கோணம்ன்னு வேணா சொல்லு. விஜய்காந்து ஒரு பிரச்சாரத்திலே சொன்னாரு. அண்ணா ஆவி அவர் கனவிலே வந்து அதிமுகவுடன் கூட்டு சேர்ன்னு சொன்னதா. எனக்கு ஆவி, சாமில எல்லாம் நம்பிக்கை இல்லாட்டியும் ஒருவேளை அதல்லாம் உண்மையா இருக்கும் பட்சத்தில் அண்ணாவின் ஆவி அப்படி சொன்னாலும் சொல்லியிருக்கும். ஏன்னா விஜய்காந்து தனிச்சி நின்னு இருந்தா இன்றைக்கு கதையே மாறிப்போயிருக்கும். திமுக சென்ற முறை போல 80- 90 சீட் வாங்கியிருக்கும். காங்கிரஸ் தயவிலே ஆட்சி அமைந்திருக்கும். ஆக காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் வாங்கி இருக்கும். தமிழக இலட்சினை முத்திரை காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்தும் நிலை வந்திருக்கும். பின்னர் முக்கிய இலாக்கா கேட்டு அங்கே இருந்து மிரட்டல் அதிகரித்து இருக்கும். இவரும் பணிவார். பின்னர் அடுத்த அடுத்த தேர்தலில் 110 -110 என பங்கீடு கேட்பர். பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பின்னர் நீ 80 நான் 140 என்பர். இப்படியாக போனால் அண்ணா அமைத்து தந்த அந்த பேஸ்மெண்ட் போயே போயிருக்கும். ஆனால் இப்போது அண்ணா திமுக தான் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்து இருக்கு. இந்த ஆட்சியை அகற்றுவது திமுகவுக்கு மிகவும் எளிது. அடுத்த முறை திமுக வரும். ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது தடுக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே அண்ணாவின் ஆவி விஜய்காந்தின் கனவில் வந்து சொல்லியிருக்குமோ என நினைக்கவும் தோன்றுகிறது.

அபிஅப்பா: என்ன மாமா அண்ணாவின் மன்றத்தில் உட்காந்துகிட்டு மூடநம்பிக்கை கருத்து பேசுறீங்களே?

ரங்கன்: இல்ல மாப்ள, நான் மூடநம்பிக்கை பேசவில்லை. அந்த விஜய்காந்து பேச்சில் இருந்த எனக்கு சாதகமான ஒரு விஷயத்தை எடுத்து கொண்டு பேசினேன். அத்தனையே!

அபிஅப்பா: அப்படின்னா காங்கிரஸ்க்கு ஆட்சியில் பங்கு கூடாதுன்னு சொல்லும் நாம எதுக்கு காங்கிரஸ் கூட கூட்டணி வச்சுக்கனும்?

ரங்கன்: காங்கிரஸ் கூட நாம கூட்டணி வச்சுப்பது நமக்கு சாதகமாக அதிக இடங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்று தான் இருக்க வேண்டும். தவிர ஆட்சியில் பங்கு என்பதை தமிழக மக்கள் ஒத்துக்கவில்லை என்பதை எண்பதுகளில் கலைஞரும் நாமும் புரிந்து கொண்ட பின்னரும் அதே தவறை 31 ஆண்டுகள் கழித்தும் கலைஞர் செய்வார் என நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. வெறும் 119 சீட் தான் நிற்கிறோம் என்ற போதே கண்டிப்பாக இந்த கட்சி ஜெயிச்சா கூட்டணி ஆட்சி வரும் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது. அதற்கு மக்கள் ஒத்துக்கவில்லை. அதனால் தான் மிக முக்கியமாக திமுக தோற்றது.

அபிஅப்பா: திமுக தோல்விக்கு அது மட்டும் தான் காரணம் என உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க?

ரங்கன்: இல்லை அதுவும் ஒரு காரணம்னு தான் சொல்ல வந்தேன். முக்கியமாக இந்த ஒரு காரணத்தை சரி செஞ்சு இருந்தாலே மத்த காரணங்கள் அடிபட்டு கூட போயிருக்கலாம்.

அபிஅப்பா: அப்படின்னா?

ரங்கன்: அப்படின்னா அப்படித்தான்.அதாவது கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே 35 சீட்டுகள் மட்டுமே. அதுவும் நாங்கள் ஒதுக்கும் சீட்டுகள் மட்டுமே என சொல்லியிருக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் பாமகவுக்கு 18 இடமும், விசிக்கு 4 இடமும், காங்கிரசுக்கு 31 இடமும் மட்டும் கொடுத்து மீதி இடங்கள் திமுக நின்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அட்லீஸ்ட் காங்கிரசுக்கு 35 க்கு மேல் தந்திருக்க கூடாது. குறைந்தது திமுக 150 சீட்ல நின்னு இருக்கனும்.

அபிஅப்பா: காங்கிரஸ் தான் ஒரு 90 தொகுதிகள் இனம் கண்டு வைத்திருப்பதாகவும் அதில் 30 இடங்கள் காங்கிரஸ் தனித்து நின்றால் கூட வெற்றி என்றும் அடுத்த 30 தொகுதிகள் கூட்டணி அமைத்தால் வெற்றி எனவும் மீதி 30 தொகுதிகள் ஒரு 1000 முதல் 2000 ஓட்டு வித்யாசத்திலாவது ஜெயித்து விடும் என கையிலே லிஸ்ட் வச்சுகிட்டு நின்னாங்களே மாமா?

ரங்கன்: ஆமாம். அதிலே வரும் முதல் 30 தொகுதியில் தான் மாயவரமும் வைத்து இருந்தனர். அதாவது தனித்து நின்றால் கூட வெற்றி என்று.ஆனால் எதை வைத்து அந்த லிஸ்ட் எடுக்கப்பட்டது என புரியவில்லை. ஏனனில் இரண்டு வருடம் முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கூடமயிலாடுதுறை தொகுதியில் குறிப்பாக மயிலாடுதுறை சட்டமன்ற பகுதியில் மணிசங்கர் 4000 வாக்குகள் குறைவாகத்தானே பெற்றார்? பின்னர் எப்படி யாரால் எப்படி அந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டு ராகுல்காந்திக்கு தரப்பட்டது என திமுக தலைமை கேட்டிருக்க வேண்டும்.

அபிஅப்பா: காங்கிரசார் தான் எதற்கும் ஒத்து வரவில்லையே. 63 சீட் வேண்டும் அதும் தான் நினைத்த தொகுதி வேண்டும் என கேட்டு வாங்கினார்களே? பின்பு என்ன செய்வது?

ரங்கன்: அதான் சொன்னேன். அதற்கு இடம் கொடுக்காமல் உனக்கு 35 சீட் மட்டும் தான். ஒத்து கொண்டால் கையெழுத்து போடு. இல்லாட்டி என் குடும்பத்தை ஒட்டு மொத்தமாக தூக்கி முடிஞ்சா உள்ளே போடு என சொல்லியிருக்கனும். திமுக 185 இடங்கள் நின்றிருக்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு பின்னே தொகுதி பங்கீடு இழுபறியில் திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்ட முடிவில் அன்றைக்கு காங்கிரஸ் உறவு முறிவு என சொன்ன போது ஒட்டுமொத்த திமுக தொண்டர்களிடம் ஒரு எழுச்சி வந்ததே அதை பயன்படுத்தி கொண்டிருக்க வேண்டும்.

அபிஅப்பா: சரி மாமா அப்படி 185 இடம் நின்று திமுக தோற்றால்?

ரங்கன்: அப்படி 185 இடங்கள் திமுக நின்றால்.... மூன்று விஷயம் தானே நடக்கும். 1.திமுக வாஷவுட். 2. திமுக 50 இடம் பெற்று பிரதான எதிர்கட்சி அல்லது 3. திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இது மூன்று தானே நடந்து இருக்கும். திமுக வாஷ்அவுட் அல்லது 50 சீட் வெற்றி என்னும் நிலை வந்திருந்தால் " எங்களுக்கு மானம் பெரிது என நினைத்து காங்கிரசுடன் கூட்டு சேரவில்லை. அதனாலே தோற்றோம்" என சொல்லிக்கலாம். ஜெயித்தால் இன்னேரம் ரயில்வேயை எங்களுக்கு கொடு என டெல்லியை வற்புறுத்தி கேட்கலாம் (தமிழக நலன் கருதி). இப்போது எதற்குமே வழியில்லாமல் போனது.

அபிஅப்பா: ஆக திமுக தோல்விக்கு காங்கிரஸ் மட்டுமா காரணம்??

ரங்கன்: அப்படி இல்லை.மற்ற பல காரணங்களும் நாம் 185 சீட்டில் நின்றிருந்தால் அடிபட்டு போயிருக்கும் என்றே சொன்னேன்.

அபிஅப்பா: அப்படியென்றால் வேறு என்ன காரணங்கள் திமுகவின் தோல்விக்கு இருந்தன?

ரங்கன்: சினிமா. சினிமா. சினிமா.

அபிஅப்பா: புரியலை மாமா.

ரங்கன்: தமிழன் எப்பாதுமே கலாரசிகன். பொழுதுபோக்கில் ரசனையோடு ஈடுபடுபவன். அதனால் தான் தன்னை ஆள்பவனை கூட அந்த துறையில் இருந்து கூட தேர்ந்தெடுத்தான் எடுத்து கொண்டும் இருக்கின்றான். அந்த சினிமா தொழிலை திமுக தலைமை நசித்து விட்டதாக பரப்புரை செய்யப்பட்டது எதிர்கட்சியினரால். அதற்கு பத்திரிக்கையாளர் சோலை கூட எழுதியிருந்தார். எடுப்பது 3 படம். அதற்கு 300 விளம்பரம் அவர்கள் தொலைக்காட்சியில். அவர்களை தவிர வேறு யாரும் படம் எடுக்க முடியவில்லை என பரப்புரை செய்தது மக்களிடம் சென்று சேர்ந்தது. அப்போது எழுபதுகளில் ரிக்ஷாகாரன் சினிமாவை அலைக்கழித்தது போல இப்போது காவலன் படம் அலைக்கழிக்கப்பட்டதாக பரப்புரை செய்யப்பட்டது. அதை சீண்டாமல் இரூந்திருந்தால் தானாகவே மக்கள் விஜய் படங்களை அதற்கு முன்னர் 6 படங்களை தோற்கடித்தது போல தோற்கடித்து இருப்பர். தேவை இல்லாமல் அதை சீண்டியது தவறு.


இவர் வரிவிலக்கு போன்ற எத்தனையோ செய்திருக்கலாம் சிவிமாவுக்கு. அது பற்றி சந்தோஷம் அந்த படத்தயாரிப்பாளருக்கு மட்டுமே. அது சினிமா ரசிகனை சந்தோஷப்படுட்தவில்லை. இவர் சினிமாவுக்கு செய்த நன்மைகள் விழலுக்கு இறைத்த நீராகி போனது. கலைஞரின் பேரன்கள் உதயநிதியும், துரை தயாநிதியும் சினிமா தொழிலுக்கு வந்திருக்க கூடாது. வேறு எத்தனையோ தொழிகள் இருக்கும் போது அவர்கள் சினிமா தொழிலுக்கு வந்திருக்க கூடாது. ஒரு தொழிற்சாலை அமைத்து பத்தாயிரம் குடும்பத்துக்கு சோறு போட்டிருந்தால் கூட ஜெயித்து இருக்கலாம். எந்த சினிமா ரசிகனும் ஒரு பத்து வருஷம் கழிச்சு "ஆகா "கோ"ன்னு ஒரு படம் எடுத்தான்யா ஒரு தயாரிப்பாளர். அவன் நல்லா இருக்கனும்" என பாராட்ட மாட்டான். அவனுக்கு அன்று இரவோடு அந்த சந்தோஷம் முடிந்துவிடும். ஆனால் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து தன் மகனை மகளை படிக்க வைக்கும் ஒரு தொழிலாளி அந்த சாப்பாட்டை சாப்பிடும் நேரத்திலாவது தன் முதலாளியை நினைத்து பார்ப்பான். நன்றி சொல்லுவான் மனதின் உள்ளேயாவது. இனியாவது ரெட்ஜெயண்ட், க்ளவுட் நைன் எல்லாம் மூடுவிழா நடத்தினால் சந்தோஷம்.

அபிஅப்பா: ஆக சினிமா மட்டும் தான் காரணமா இன்னும் இருக்கின்றதா காரணங்கள் திமுக தோல்விக்கு?

ரங்கன்: அதே குடும்பம் தான். ஆனால் இது வேறு கோணம். கலைஞரும், ஸ்டாலினும், அழகிரியும் முதல்வர், அமைச்சர்கள். அதனால் கிடைக்கும் சம்பளம் இத்யாதி வசதிகள் அவர்களின் வாரிசுகளுக்கு போகும் போது எப்படி ஆசையாக அனுபவிக்கின்றனரோ அது போல இவர்கள் தேர்தலில் நிற்கும் அந்த ஒரு மாதகாலத்துக்கு கூட உதயநிதியோ, துரைதயாநிதியோ பிரச்சாரத்துக்கு வராமல் இருந்தது உழைக்கும் திமுக தொண்டனுக்கு ஒரு வித வருத்தட்தை கொடுத்தது. ஆனால் அதே நேரம் கலைஞரின் மகள் செல்வியும் ஸ்டாலினின் மனைவி துர்காவும், அழகிரியின் பெண்ணும் கூட களத்தில் நின்ற போது அவரது வீட்டு ஆண் வாரிசுகள் சினிமாவை கொண்டாடிக்கொண்டு இருந்தது வருத்தத்தின் உச்சகட்டம்.

அபிஅப்பா: கனிமொழி கூட எல்லா ஊர்களுக்கும் பிரச்சாரத்துக்கு வந்தாரே?

ரங்கன்: ஆனைக்கு அர்ரம் - குதிரைக்கு குர்ரம் ஹாஹ்ஹா! திமுகவின் பெரிய பின்னடைவு ஸ்பெக்ட்ரம் பிரச்சனை. இந்த நேரத்தில் கனிமொழியை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்திருக்கவே கூடாது. கனிமொழியை அறிவாலயத்தில் அமர்த்தி அங்கிருந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வேலையை கொடுத்து மட்டும் இருக்க வேண்டும். கனிமொழி வராமல் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் கனிமொழிக்கு ஆட்சிஅதிகாரத்தில் முக்கியத்துவம் இருக்காது என நினைத்த கலைஞர் கனிமொழியை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்தார். கனிமொழி பிரச்சாரத்துக்கு வரும் முன்னர் அந்த அந்த பகுதி எதிர்கட்சியினர் "இதோ பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் செய்த கனிமொழி உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றார். அவர்களுக்கா உங்கள் ஓட்டு என எதிர் பிரச்சாரம் செய்தனர். இது தேவை இல்லாத வேலை திமுகவுக்கு. கொளத்தூருக்கு பிரச்சாரத்துக்கு கனிமொழி வர வேண்டாம் என ஸ்டாலினே கூட கேட்டுக்கொண்டதாக பத்திரிக்கைகள் எழுதின. அப்படி எனில் அதன் தாக்கம் ஸ்டாலினுக்கு தெரிந்த அளவுக்கு கலைஞருக்கு தெரியாத அளவு ஆகிவிட்டது.

அபிஅப்பா: மின்சார தட்டுப்பாடு காரணம் இல்லையா தோல்விக்கு?

மின்சார தட்டுப்பாடு என்பதை விட மின்சார விரயம் அதிகம் ஆனது என்பதே உண்மை. விரயம் செய்தது மக்கள். ஆனால் எப்போதும் போல முள் குத்திவிட்டது என்று தானே சொல்கிறோம். நான் சென்று முள்ளை குத்தி கொண்டதை ஏற்றுக்கொள்வதே இல்லை நாம். ஒரு கோடி இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக எல்லோர் வீட்டிலும் இரண்டு டிவிக்கள். மாமியாருக்கு ஒரு டிவி, மருமகளுக்கு ஒரு டிவி. கிரிக்கெட் பார்க்க ஒரு டிவி, சீரியல் பார்க்க ஒரு டிவி என எப்போதுமே இரண்டு டிவியும் ஓடிக்கொண்டு இருக்கும். ஒரு டிவிக்கு ஒரு நாலைக்கு கால் யூனிட் என்றாலும் ஒரு நாளைக்கு 25 லட்சம் யூனிட். ஆக மின்சார பற்றாகுறைக்கு கலைஞர் வழங்கிய இலவச வண்ண தொலைக்காட்சியும் காரணமாக போய்விட்டது. ஆனாலும் சில மானியங்கள் நிப்பாட்டப்பட்டு ஒரு யூனிட் 13 ரூபாய்க்கு தனியாரிடம் இருந்து வாங்கி இங்கே வழங்கி நிலமையை சீர் செய்து இருகலாமோ என கூட நினைக்கிறேன். நான் நினைத்து என்ன ஆக போகின்றது?

அபிஅப்பா: காரணங்கள் அவ்வளவு தானா? இன்னும் இருக்கின்றதா?

ரங்கன்: இன்னும் இருக்கின்றது. நானும் நீயும் இதை எல்லாம் பேசி பயன் இல்லை. பொதுக்குழுவில் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. மிக முக்கியமான சிலவற்றில் கட்சியின் உள்ளடி வேலைகள் பற்றி ஆராய வேண்டும். தைரியமாக சில மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட வேண்டும். உதாரணமாக நாகை மாவட்டத்தில் மாவட்ட செயலாளரின் நிலைப்பாடு . இருப்பது மொத்தம் ஆறு தொகுதிகள். 1.நாகை 2. வேதாரண்யம் 3. கீழ்வேளூர் (தனி) 4. மாயவரம் 5. பூம்புகார் 6. சீர்காழி. இதில் கீழ்வேளூர் மட்டுமே திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதுவும் திருவாரூர் மாவட்டம் சேர்ந்த மதிவானனுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு வேளை மதிவாணன் வெற்றி பெற்று அமைச்சராக ஆகும் பட்சத்தில் நாகை மாவட்டத்தில் தனிப்பெரும் செல்வாக்கோடு மாவட்ட செயலராக இருக்கும் தனக்கு பாதிப்பு வருமோ என எண்ணி மதிவாணனுக்கு விஜயன் வேலை செய்ய வில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. 700 ஓட்டுகள் வித்யாசத்தில் அவர் தோல்வி. வேதாரண்யம் தொகுதியை பா.ம.க பெறுகின்றது. அங்கே சிட்டிங் எம் எல் ஏ வேதரத்தினம் எளிமையானவர். இன்று சுயேச்சையாக நின்று இரண்டாமிடம். பத்தாயிரம் ஓட்டு வித்யாசம். தோல்வி. மாயவரம் 3000 ஓட்டில் காங்கிரஸ் தோல்வி. சீர்காழி சிட்டிங் எம் எல் ஏ பன்னீர் செல்வம் சிறந்த வக்கீல். அவருக்கு சீட் இல்லை. வி சி அங்கே தோல்வி. இப்படியாக பல உள்ளடி வேலைகள் திமுகவில். பல மாவட்டங்களில் இப்படியாக. உடனடியாக கட்சி களை எடுப்பு நடக்க வேண்டும். இதை எல்லாம் முரசொலி மாறன் இருந்தால் பொதுக்குழுவில் தைரியமக பேசுவார். அவர் இல்லை. அது போல வீரபாண்டியார் பேசுவார். ஆனால் அவரும் இப்போது பேச இயலாது. என்ன நடக்கின்றது என பார்ப்போம்.

அபிஅப்பா: அப்படின்னா திமுக வின் எதிர்காலம்?

ரங்கன்: திமுக இதை விட பெரிய தோல்வி எல்லாம் பார்த்த கட்சி. இந்த தோல்வி தான் உங்களுக்கான பூஸ்ட். இனியாவது மமதை ஒழிந்து கட்சி வேலை பாருங்க. இந்த தோல்வி கலைஞர் உங்களுக்கு கட்சியை வளர்க்க கொடுத்த பரிசு என நினைத்து கொள்ளுங்கள்.

அபிஅப்பா: ஒ அப்படின்னா தெனாலி மாதிரி "இதுவும் ட்ரீட்மெண்ட்டோ தங்க மச்சான்":-)) சரி காங்கிரசின் நிலை என்ன மாமா?

ரங்கன்: காங்கிரஸ் தமிழக தலைவர் தங்கபாலு தோல்விக்கு பொறுப்பேற்று தன் ராஜினாமாவை சமர்பிப்பார்.

அபிஅப்பா: பின்னே என்ன நடக்கும்?

ரங்கன்: இடது கையால் ராஜினாமா கடிதம் கொடுப்பார். வலது கையால் "எதிர் வரும் தமிழக காங்கிரஸ் தலைவரின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. தலைமையை மாற்ற வேண்டும்" என புகார் கொடுப்பார்.

(நான் ரங்கன் மாமாவிடம் பேசியது 14.05.2011 காலை 7 மணிக்கு. அதன் பின்னர் தான் தங்கபாலு ராஜினாமா விஷயம் வெளியானது)

அபிஅப்பா: அதிமுக செயல்பாடுகள் தெரிய ஆறு மாதம் பிடிக்குமா?

ரங்கன்: தேவை இல்லை. ஆறுமணி நேரம் போதும். 500 கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டிடம் பழைய இடத்துக்கு போகும். அப்படி போனால்...

அபிஅப்பா: போனால்?

ரங்கன்: அடுத்து திமுக ஆட்சி தான் என்பது தெளிவாகும். ஏனனில் ஜெயலலிதா திருந்தவில்லை என பொருள் கொள்ளப்படும். அது தான் தொடரும். அப்படியெனில் திமுக அமைதியாக இருந்து கவனித்து வர வேண்டும். கட்சி பணிகள் மாத்திரம் செய்து வந்தால் போதுமாகும். திமுக வெற்றி தான் அடுத்தடுத்த தேர்தல்களில்.

அபிஅப்பா: அப்படியெனில் புதிய தலைமை செயலகம் என்ன ஆகும்?

ரங்கன்: பொதுக்கழிப்பிடமாக மாறும் (சிரிக்கிறார்) கலைஞர் காப்பீடு திட்டம் அழிக்கப்பட்டு அதற்கு பதிலாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆரம்பிக்கப்படும் என அறிவித்து அந்த இடம் மருத்துவமணை ஆகும். முதல்வர் அறை பிணவறையாக மாற்றம் பெரும்.

அபிஅப்பா: அதிமுக காங்கிரஸ் உறவு எப்படி இருக்கும்?

ரங்கன்: அமோகமாக இருக்கும். அனேகமாக அதிமுக காங்கிரஸ் கூட்டணி கூட உண்டாகலாம் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு! மாற்றம் ஒன்றே மாறாதது என்பது முதலில் ஆட்சி அரசியலுக்கு தான்.

அபிஅப்பா: பத்திரிக்கைகள் நிலை?

ரங்கன்: நக்கீரன் கூடிய சீக்கிரம் "சேலஞ்ச் " அடுத்த பாகம் எழுத ஒரு வாய்ப்பு. மற்ற பத்திரிக்கைகள் வழக்கம் போல இருக்கும்.வடிவேலு வீட்டில் கல் அடிப்பப்படும். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவ்து தான் முதல் வேலை என ஜெயலலிதாவின் பேட்டியை எல்லா பத்திரிக்கையும் ஆசையுடன் வெளியிடும்!


=========================================================



குறிப்பு: நான் பேசிக்கொண்டு இருந்த விஷயங்கள் அதிகம் எனினும் சிலவற்றை மட்டுமே இங்கே கொடுத்துள்ளேன். பதிவின் நீளம் காரணமாக மீதியை கொடுக்க முடியவில்லை. திமுக தோற்பதால் என்னவோ எனக்கு தனிப்பட்ட வகையில் எவ்வித முன்னேற்ற தடையும் இல்லை என்பதை பலரும் அறியாமல் அசிங்கமாக போடும் பின்னூட்டம் மனதுக்கு எரிச்சலையே தருகின்றது. எப்போதும் போல இந்த கட்டை சாகும் வரை திமுகதான் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன். நானோ என் குடும்பதின் எந்த ஒரு நபரோ அரசாங்க உத்யோகத்திலோ, அரசு சார்பு உத்யோகத்திலோ, திமுக சார்பு அல்லது திமுக நிறுவனங்களிலோ உத்யோகத்தில் இல்லை. அது போல அரசாங்க காண்டிராக்ட் போன்ற எதிலும் சம்மந்தப்படவில்லை. நான் 21 வருடங்கலாக அயல்நாட்டில் பணிபுரிந்தவன் என்பதும் பலருக்கும் தெரியும். இதை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகின்றேன்! திமுக தோற்றுவிட்டதே நீ ஏன் இன்னும் தூக்குபோட்டு சாகவில்லை என கேட்ட அனானிகளுக்கு: திமுகவுக்காக நான் உயிர் கொடுக்க தயார். ஆனால் உங்களைப்போல அனானிகள் சொன்னதுக்காக உயிர் கொடுப்பது என்பது முட்டாள் தனம் என்பதால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கபடுகின்றது.