பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 15, 2011

நானும் ஆடுகளம் பார்த்தாச்சு! பிடிங்க பொங்கல் பரிசாக இந்த விமர்சனத்தை!!!

இந்த கைலி கட்டும் வித்தை இருக்கின்றதே அது பெண்கள் "V" தாவணி கட்டுவதைப்போல ஒரு அழகான கவிதை. கைலியை கட்டி சுருட்டி விட்டு அதன் சுருட்டலில் நீராராடியா கார்பரேட் லாபிக்கு வாங்கின அறுபது கோடியை வைத்து ஒரு சுருட்டு சுருட்டினாலும் வருமான வரித்துறை என்ன அந்த ஆண்டவனே வந்தாலும் ஒன்னும் பிடுங்க முடியாது. அத்தனை ஒரு லாவகம் இருக்கும் அந்த சுருட்டலில். அதன் பின்னர் இரண்டு கையையும் தொடை வரை தொங்கவிட்டு வலது பக்க தொடையை வலது பக்க விரல்களாமும் அது போல இடது பக்க தொடையை இடது கைவிரல்கலாலும் அப்படியே ஒரு கொத்தா பிடித்து முழங்கையை முட்டியை அசார் ஃபோர் அடிக்கும் போது கை மணிக்கட்டை திருப்பும் அதே 45 டிகிரிக்கு தூக்கி பின்பக்க புட்டத்தில் ஒரு எக்ஸ்ட்ரா தூக்கு தூக்கு அபடியே முன்பக்கமாக பிடித்த அந்த இரண்டு கொத்து கைலிதுணியை குஞ்சாக்காகோபனுக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு மாதிரி ஒரு முடிச்சு போட்டா விஷயம் முடிஞ்சுது. பார்த்தா ராஜராஜசோழன் படத்திலே குந்தவைக்கு டிரஸ் போட்ட மாதிரி முன் கொசுவம் வைத்த ஒரு அழகிய தோற்றம் வந்துவிடும். அப்படி வந்தடுச்சுன்னா அப்படி கைலி கட்டிய அந்த விடலை பையனுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும் பாருங்க" இந்த பூமியை ஜெயிச்சுட்டேன். வேற என்ன கிரகம் இருக்கு பாக்கி?"ன்னு இந்த உலகத்தை பார்த்து கேட்பது போல ஒரு அசால்ட்டான திமிர் வரும். அதுவும் அவன் சிவகங்கை மாவட்டம் வெள்ளளூர், உறங்கான்பட்டி, கூட்டுறவுப்பட்டி ஏரியா என்றால் இன்னும் கொஞ்சம் அசால்டான திமிர் வரும்.

காசு பணம் அவனுக்கு முக்கியமில்லை. இன்னும் சொல்ல போனா "கம்முனாட்டி வளர்த்த பிள்ளை கழிசடை"ன்னு சொல்லுவாங்களே அது போல தட்டி வளர்க்க அப்பன் இல்லாத தன் ஆசைப்பட்ட மாதிரி விட்டேர்த்தியாக "சேவக்கட்டு" மேல ஆசை இருந்தால்... அதை செயல்படுத்த ஒரு நல்ல வாத்தியார், வீட்டுக்கு வந்தா படுக்க ஒரு காரைவீடு, பொங்கி போட ஒரு அம்மா... இது தான் களம் என முடிவாகிப்போனது. களம் இது தான் என்கிற போது ஆடித்தீர்க்க வேண்டியது தானே. இயக்குனர் வெற்றிமாறன் ஆடித்தீர்த்து விட்டார். அவர் ஆட்டத்துக்கு முழு காரணம் அவருக்கு கிடைத்த அந்த பொருத்தமான "இயக்குனர்களின் நடிகன்" தனுஷ். தனுஷ் சொன்ன மாதிரி பார்க்க பார்க்க பிடித்து தான் போனது அவரை.

நன்கு தெரிந்த ஒரு பொருளை விளம்பரம் செய்து வியாபாரத்தை பெருக்குவது ஒரு காசு பணம் வசதி இருக்கும் எவனும் செய்து விடலாம். அதாவது "பிராண்டு" மாத்திரம் விளம்பரம் செய்தால் போதுமானது. ஆனால் "புதிய கமாடிட்டியை" யும் விளம்பரம் செய்து அதன் கூடவே "பிராண்டை"யும் விளம்பரப்படுத்தி வெற்றி இலக்கை எட்டுவது சாதாரண விஷயம் இல்லை. இங்கே "சேவக்கட்டு" என்கிற புதிய கமாடிட்டியையும் சேர்த்து அந்த சேவல் கோட்டை தொடுகின்றதா, மூக்கு 120 செகண்டுக்குள் தரையை தொடுகின்றதா என்பது போன்ற "புதிய கமாடிட்டி"யை அறிமுகம் செய்த இயக்குனர் மணிமாறன், தியேட்டரில் நான் சீட் முனைக்கு வந்து கைதட்டிய போது தன் முயற்சியில் முழு வெற்றி பெற்றுவிட்டதாகவே உணர்ந்தேன். இது தமிழ் சினிமாவுக்கு புதிதான ஒரு விஷயம். கிழக்கு சீமையில் சேவல்கட்டு தான் திருப்புமுனை காட்சியாக இருந்தாலும் இத்தனை விலாவாரியாக அதில் சொல்லப்படவில்லை.

அது போல அந்த சேவலுக்கு ஜாக்கியாக வரும் கருப்பு என்கிற பாத்திரத்தில் வரும் தனுஷ் பற்றி இந்த பதிவு முழுமைக்கும் சொல்லிகொண்டே போகலாம். நான் துபாய் குதிரை பந்தயம் பற்றிய ஒரு பதிவே போட்டிருக்கேன். அரை டன், ஏழு அடி குதிரைக்கு மேலே 45 கிலோ ஜாக்கி. அவன் உருவத்துக்கு அந்த ஜெயண்ட் மேலே ஏற்றி விட்டால் தான் உட்காரவே முடியும். அதிலே அந்த நாட்டு அரசரின் சொந்த குதிரையாக இருந்தாலும் அந்த குதிரை ஓனர் தான் அதாவது அரசர் தான் தன் இரு கைகளால் ஏந்தி கொள்ள ஜாக்கி அந்த உள்ளங்கையின் மீது தன் உள்ளங்கால் பாதம் வைத்து ஒரு ஜம்ப் செய்து ஏறி குதிரையில் உட்காருவார். அது தான் அந்த (அரசரானாலும் சரி) அந்த ஜாக்கிக்கு கொடுக்கும் உச்ச பட்ச மரியாதை. அது போல இயக்குனர் மணிமாறன் இந்த சேவல் ஜாக்கிக்கு தனுஷுக்கு கொடுக்கும் மரியாதை பல நல்ல காட்சிகளை "நடிப்பை" காட்டவே கொடுத்து இருப்பது தான். அதை திறம்பட செய்திருக்கின்றார் தனுஷ். வெல்டன் தனுஷ். இன்னும் இருபது வருஷம் பின்னர் தனுஷ் தன் பேரப்பிள்ளைகள் கிட்டே "ஆடுகளம்" பற்றி பெருமையாக கூட சொல்லிக்கொள்ள ஒரு படம் இது தனுஷுக்கு.

கதை என்று பார்த்தால் இரண்டு விஷயம் தான்.1. அத்தனை ஒரு பிரமாதமான கதை இல்லை.அல்லது 2. மணிமாறனுக்கு அந்த கதையை அழகாக சொல்ல தெரியவில்லை. வசனம் என்று பார்த்தால் மதுரை சிவகங்கை மாவட்ட அழகிய ஸ்லேங். "கொண்டேடேடே புடுவேன்" "சங்க அறுத்துடேன்" என வழமையான மதுரை ஸ்லேங் என எழுதிவிட்டு போகலாம். ஆனால் அதை அந்த மாடுலேஷனோடு சரியான இடத்தில் வைத்து அழகுபடுத்திய விதத்தில் தான் அந்த வசனங்கள் உயிர் பெற்றன. ஆகையால் இதற்கும் இயக்குனருக்கே ஷொட்டு.

கதாநாயகி! ஒரு அழகிய பதுமை. ஆங்கிலோ இந்திய பெண் கதாபாத்திரம். அந்த பெண்ணை விடுங்க. அந்த பெண் குடியிருக்கும் அந்த ஆங்கிலோ இந்திய குடியிருப்பு...அங்கே என் கண்ணுக்கு தெரிவது படத்தின் ஆர்ட் டைரக்டர் தான். ஒரு அழகிய பதுமை இருக்கும் போது அவள் குடியிருப்பு அப்படியே திருச்சி பொன்மலைப்பட்டி ஆங்கிலோ இந்திய வீடு மாதிரி ஒரு சர்வ சுத்தமாக ஆங்கிலேய வாசனையுடன் வீட்டில் ஒரு கிருஸ்மஸ் ஸ்டார் கூட விட்டு விடாமல் அங்கே தெரியும் ஆர்ட் டைரக்டருக்கு ஒரு சபாஷ்.

ஆடுகளம்! அதாங்க டோர்ணமண்ட் நடக்கும் இடம் மற்றும் சூழல். ஒரு ஒரு பெரிய குடும்பங்கள் மோதும் சென்சிட்டிவான ஒரு போட்டிக்கு நடுவர் ஒரு ஸ்டாப் வாட்ச் கூட இல்லாமல் சர்வ சாதாரணமாக தென்னந்தோப்பு, 3 லட்ச ரூபாய் பந்தயம் எல்லாம் "பெட்" கட்டும் ஒரு போட்டிக்கு ஒரு ஸ்டாப் வாட்ச் கூட இல்லாமல் தன் கைக்கடிகாரத்தை பார்த்து தீர்ப்பு சொல்லும் இடமாகட்டும், வர்ணனை செய்பவர் இடையிடையே அதே டேபிளில் ஒரு குவாட்டை உடைத்து ஊத்தி கொண்டு வர்ணிப்பதாகட்டும், சேவல் சண்டை ஒரு ரவுண்டு முடிந்ததும் சேவலுக்கு தண்ணீர் காட்ட விடப்படும் 5 நிமிட கேப்பில் அதை எடுத்து கொண்டு ஓடும் ஜாக்கிகள், அதன் பின்னர் ஓடும் கூட்டம் அங்கே சேவல் கழுத்து ரத்தைத்தை தன் வாயால் உறிஞ்சி எடுத்து துப்பி, கிழிந்த இடத்தை நரம்பு, ஊசி கொண்டு தைத்து அடுத்த ரவுண்டுக்கு தயார்படுத்தலாகட்டும், புதிதாய் முளைத்த டிஜிட்டல் பேனர்களாகட்டும் எல்லாமே ஒரு சேவல்கட்டுக்கு போய் வந்த திருப்தி. இந்த காட்சி அமைப்புகளுக்கு நான் யாருக்கு பாராட்டு தெரிவிப்பது. தான் அவதானித்ததை அழகாய் சொல்ல தெரிந்த இயக்குனருக்கு மீண்டும் பாராட்டுகள்.

இதை எல்லாம் விடுங்கள். ஒரு சாதாரணமான, நான் மேலே முதல் பத்தியில் சொன்ன மாதிரியான கைலி கட்டி ஒரு மடக்கிவிடப்பட்ட சட்டை போட்ட ஒருவனுக்கு லட்டு மாதிரி ஒரு பெண் அவனை நோக்கி ஒரு எஸ்கேப்பிசத்துக்காக காதலிக்கிறேன் என சொல்லும் போது ஒரு உணர்ச்சி வருமே அதை எப்படி சொல்வது? கிட்ட தட்ட ரஜினிகாந்தின் பெண் தனுஷ் கிட்டே காதலை சொன்ன போது ஒரிஜினலாக இப்படித்தான் ஒரு உணர்வும் வந்திருக்கும் தனுஷுக்கு. அதைத்தான் இப்படி அழகியல் கவிதையாக வடித்து கொடுத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அப்போது அந்த கைலி கட்டும் அழகு மாறும் பாருங்க. பார்க்க கண் கோடி வேண்டும். "இனி என்ன வேண்டும் இந்த உலகத்தில்" என கைலியை இரு கைகளாலும் தூக்கி தன் முக வெட்கத்தை தலை மூடி மறைத்தும், தன் தோள்பட்டைக்கு மேலாக தூக்கியும் தன் அந்தரங்க பாகம் எல்லாம் திறந்து கிடந்தாலும் "அவளுக்கே என்னை பிடித்து விட்டது. உங்களுக்கு என்னடா லுச்சா பசங்களா" என உலகத்தை பார்த்து ஒரு அலட்சிய நிகழ்வை நடத்தி காண்பித்த தனுஷ் உங்களுக்கு இந்த வருடம் தேசிய விருது கொடுத்தாலும் தகும். அந்த செயலுக்கு ஜி வி பிரகாஷ் அமைத்த இசையும், அந்த"ஆத்தே ஆத்தே உன்னை வெள்ளாவி வச்சு வெளுத்தாங்களா, வெயிலே படாம வளர்த்தாங்களா" என்கிற வரிகளை எழுதிய விரல்களாகட்டும் பாராட்டுக்கு முழுமையானவை தான்.

ஈழக்கவிஞர் ஜெயபாலன் ஆகட்டும் அவரது மனைவியாக வரும் 'மீனாள்" ஆகட்டும், நல்லவரா கெட்டவரா என சொல்ல முடியாத கிஷோர் ஆகட்டும் அந்த சேவக்கட்டு போட்டியாளர் இண்ஸ்பெக்டர் ஆகட்டும் எல்லாருமே நடிப்பு புலிகள். படத்திலே வரும் போலீஸ்ஸ்டேஷன் ஒரு ரியல் போலீஸ்ஸ்டேஷன் மாதிரி ஒரு ரியாலிட்டி.

பந்தயத்தில் ஜெயித்து கிடைத்த 3 லட்சம் பணத்தை கொண்டு வந்து ஒரு கைலி விரித்து அதில் கொட்டி அம்மாவிடம் காட்டும் போது ஒரு விதமான எக்ஸ்பிரஷன் அதே அம்மா பின்னர் ஒரு சூழலில் 'இனி சேவல்கட்டு பக்கம் போகாதே" என சொல்லும் போது காரை பெயர்ந்து போகும் படியாக சுவற்றை அடித்து விட்டு கோபப்படும் போதும் அம்மா இறந்த பின்னர் நார்மலான சோக முகமும், கடைசி கட்டத்தில் தன் குருநாதரின் சந்தர்ப்ப வச சூழ்ச்சி தெரிந்த பின்னர் "ச்சே போங்கண்ணே" என அலுத்து ஒரு இயல்பான நடிப்பை காட்டுவாரே தனுஷ்.. உங்களுக்கு மீண்டும் மீண்டும் சபாஷ்.

ஆங்கிலோ இந்திய கூட்டத்தில் ஒரு பார்ட்டியில் கதாநாயகியின் பாட்டி என்ன தொழில் செய்கிறாய் என கேட்ட போது "காக் காக் போட்டிங். மை காக் வெரி பிக்" என சொல்லி எல்லோரும் ஒரு வித அர்த்த புஷ்ட்டியோடு சிரிக்கும் போது அசடு வழியும் கதாநாயகி நடிப்பு ரியல் அசடு வழிதல். இது போல படம் நெடுக சொல்லிக்கொண்டே போனாலும்.....

போனாலும்.... போனாலும்... முடிச்சு போடுவது என்பது ஒரு கதை எழுதிகிட்டே வரும் போது முடிச்சுகள் விழுந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் அதை கதை முடியும் தருவாயில் அதை அவிழ்த்துகொண்டே வருவது தான் கதையின் வெற்றி இருக்கின்றது. பாக்யராஜ் படம் "ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி" படம் ஏகப்பட்ட முடிச்சுகளோடு வந்து கொண்டே இருக்கும். கடைசி அரை மணி நேரத்தில் ஒன்னு ஒன்னாக அதை எல்லாம் சரிசெய்து கொண்டே வருவார். எல்லாம் முடிந்து கிட்ட தட்ட கதாநாயகனும் நாயகியும் சேர்ந்து முடித்த பின்னும் ஒரு சின்ன நெருடல் இருக்கும் படம் பார்ப்பவர்களுக்கு. அதாவது ஒரு டுபாக்கூர் குடும்பத்துக்கு ஒரு செக் கொடுத்து இருப்பாங்க. அதை அப்படியே விட்டுருந்தால் கூட குடிமுழுகிப்போய்விடாது. ஆனாலும் படம் முடியும் கடைசி ஒரு நிமிடத்தில் அதையும் சரி செய்வார் பாக்யராஜ். அப்படிப்பட்ட பாக்யராஜிடம் வெற்றிமாறன் சென்று ஈகோ பார்க்காமல் "சார் இது வரை எடுத்த படம் இது தான். இதை எப்படி முடிப்பது?" என கேட்டு செய்திருந்தால் கண்டிப்பாக இது ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.

இது தான் படத்தை பற்றிய என்பார்வை. குறை இருப்பின் மன்னிக்கவும். கோர்வையாக சொல்லியிருக்க கூட மாட்டேன். நான் படம் பார்ப்பது மிகவும் அரிது. அதிலும் முதல் நாள் பார்ப்பது என்பது அரிதான விஷயம்.

6 comments:

  1. 'ஆடுகளம்' பற்றி இண்டு, இடுக்குனு ஒன்னுவிடாமல்
    ஆராய்ச்சி பண்ணி விமரிசனத்தை எழுதிட்டீங்க, அபிஅப்பா!
    சூப்பர்.
    அப்புறம் நீங்களே இந்தப் பதிவை ஒரு (மறு) தரம் படிச்சிட்டு,
    இயக்குனர் பெயர் என்ன என்று கண்(டிப்பாகக் கண்)டுபிடித்து
    சொல்லுங்கள், அபிஅப்பா!

    ReplyDelete
  2. nice abi appa. nanum padam paththuttu solrane.

    ReplyDelete
  3. Vimarsantha padikim pothu, padam pakanamnu aasaiya than iruku... Aana peerless theatre la pakkanumnu ninacha kazhtama iruku.... Nxt weekend chennai la poi than pakanum...

    ReplyDelete
  4. "பாக்யராஜிடம் வெற்றிமாறன் சென்று ஈகோ பார்க்காமல் "சார் இது வரை எடுத்த படம் இது தான். இதை எப்படி முடிப்பது?" என கேட்டு செய்திருந்தால் கண்டிப்பாக இது ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கும். "

    அழகான ஆழமான கருத்து.............

    ReplyDelete
  5. One of the best review for the film so for I've read. Hmmm, you are the stand-out stylist among Fleet Street film critics. The description about Danush when Tapsee pointed out him for escaping is same as that of the feeling that I had when I saw the film. O'course blood o' same kind.

    ReplyDelete
  6. அன்பின் அபி அப்பா - அருமையான அலசல் விமர்சனம் - ஒரு தடவை அதுவும் முதல் நாளில் பார்த்துவிட்டி இவ்வ்ளவு நுணுக்கமாக விமர்சனம் எழுதும் திறமை வாழ்க. மிக மிக இரசித்தேன் விமர்சனத்தை. ஒவ்வொரு வரியினையும் படத்துடன் இணைத்துப் பார்த்து மகிழ்ந்தேன். நல்லதொரு விமர்சனம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))