பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 13, 2012

நிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான்! வாழ்க காவல்துறை! மிக்க நன்றி!


என் செல்போன் இப்போது என்னிடம் இல்லை :

அது ஒரு பெரிய சுவாரஸ்யாமான கதை. நேற்று நான் சென்னையில் இருந்து மயிலாடுதுறை வர வேண்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். அடுத்த ரயில் மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தான் என சொன்னதால் எனக்கு பேருந்து பயணம் ஒத்து வராமையால் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து விட்டேன். அப்போது நண்பர்கள் போனில் பேசிக்கொண்டு இருந்தமையால் போனில் பேட்டரி தீர்ந்து விட்டது. உடனே அங்கே இருந்த  பாயிண்டில் ஏற்கனவே மூன்று போன்கள் இருந்தன. அதிலே ஒன்றில் மாட்டி விட்டு பக்கத்தில் அமர்ந்து பேப்பர் படிக்க தெடங்கினேன்.

ஒரு இரண்டு நிமிடம் தான் அதிகபட்சமாக ஆகியிருக்கும். என் செல்போனை காணவில்லை. சார்ஜரும் இல்லை. அங்கே சார்ஜ் போட்டுக்கொண்டு இருந்த இரு கல்லூரி பெண்களிடம் "அய்யோ என் செல்போனை காணவில்லை. யாராவது எடுத்து போனதை பார்த்தீர்களா, கொஞ்சம் உங்க போனில் இருந்து என் போனுக்கு போன் செய்யுங்க" என சொன்னதுக்கு அவங்க பயந்து கொண்டு மாட்டேன் என சொல்ல நான் ஓடிப்போய் ரயில்வே பாதுகாப்பு ஸ்டேஷனுக்கு விஷயத்தை சொன்னேன்.

அந்த ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கொஞ்சம் பீதியை கிளப்பியது. ஒருவனை ஜட்டியோடு கைவிலங்கு இட்டு அதை ஒரு நாற்காலியில் பினைத்து இருந்தனர். எல்லாருமே ஒரு வித பரபரபுடன் வேலை செய்து கொண்டு இருக்க என்னை ஒரு இன்ஸ்பெக்டர் விசாரித்து விட்டு "ஆமா காலைல இருந்து பத்து பேர் வந்து புகார் சொல்லிட்டாங்க, ஆனா புகார் எழுதி கொடுங்கன்னு சொன்னா யாரும் முன்வரவில்லை" என சொல்ல அதற்கு நான் "சார் நான் புகார் எழுதி தர்ரேன் சார்" என சொன்னேன். அவர் ரைட்டரை நோக்கி கைகாண்பிக்க அவர்களே பேப்பர் பேனா எல்லாம் கொடுக்க நான் விளக்கமாக புகார் எழுதி கொடுத்தேன். இன்ஸ்பெக்டர் அவரது போனில் இருந்து என் நம்பருக்கு அழைக்க அது ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.

புகாரை பதிவு செய்யலாமா என அவர் மீண்டும் கேட்க நான் "தாராளமா செய்யுங்க சார்" என சொன்னேன். அப்போது மதியம் 2.30 ஆகி இருந்தது. நான்கு மணிக்கு கிளம்ப வேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் வந்து நிற்க நான் போய் ஏறிவிட்டேன்.மனசே சரியில்லாமல் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் செல்போன் வாங்கி என் நம்பருக்கு போன் செய்ய அதிஷ்டவசமாய் ரிங் போனது. யாரோ எடுத்தாங்க. உடனே நான் "சார் அது என் செல்போன் தான். நான் எக்மோர்ல இருக்கேன். அதை கொடுத்தா நான் அதிலே இருக்கும் நம்பர் எல்லாம் எடுத்து கிட்டு போனையும் உங்க கிட்டே தர்ரேன்" என சொல்லி கொண்டே இருக்கும் போது அவன் போனை கட் பண்ணிட்டான்.

நான் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் ஓடிவந்து "சாமி" என்கிற வேறு ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் என்னை "பதட்டப்படாதீங்க. உங்க நம்பரை சொல்லுங்க" என சொல்லி விட்டு என் நம்பருக்கு போன் செய்தார். ரிங் போனது. அவன் எடுத்தார். உடனே அந்த கிரைம் இன்ஸ்பெக்டர் " அய்யா வணக்கமுங்க. நான் ஒரு பிஸ்கட் கம்பனில கூலி வேலை பார்க்குறனுங்க. நான் சென்னைக்கு வந்தேனுங்க. நான் சென்னைக்கு போக வேண்டிய ஆள் நம்பர் அதுல இருக்குதுங்க. கொஞ்சம் நீங்க எங்க இருக்கீங்கன்னு சொன்னா நான் வந்து நம்பர் வாங்கிப்பேனுங்க. என் கைல முன்னூத்து சொச்சம் பணம் இருக்குதுங்க. அதையும் தர்ரேங்க. அந்த போனும் நீங்களே வச்சுகுங்கய்யா. புண்ணியமா போவுமுங்க" என சொல்ல அந்த மனமிளகிய திருடன் "அய்யய்யோ நான் பாண்டிபசார்ல பக்கத்துல சத்யா பசார்ல இருக்கேனே. சரி காசோட வாங்க"ன்னு சொல்ல அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் "அடடே பாண்டிபசாருங்களா, அங்க என் நண்பர் இருக்காருங்கய்யா, கொஞ்சம் இருங்க அவரு நம்பரை கான்பரன்ஸ்ல போடுறேன். அவரு ஒரு குடை யாவாரிங்க, அவரு கிட்ட கொடுத்துங்கய்யா" என சொல்ல அந்த திருடனும் சரி என்றான்.

உடனே நம்ம இன்ஸ்பெக்டர் கொஞ்சம் இருங்கன்னு சொல்லி அவனை ஹோல்டுல போட்டுட்டு வேற நம்பருக்கு போன் செஞ்சாரு " பாண்டிபஜார் கிரைம் இன்ஸ்பெக்டர் அய்யாங்குளா. நான் எக்மோர் ஆர் பி எஃப் கிரைம் இன்ஸ்பெக்டர் சாமி பேசுறேங்க.வணக்கமுங்க அய்யா. இப்ப லைன்ல ஒரு அக்யூஸ்டு ஹோல்டுல இருக்கான். இப்ப உங்க பேரு தொரைசாமிங்கய்யா, குடையாவாரி. அவன் அங்க பக்கத்திலே சத்யா பசார்ல இருக்கான், செல்போன் தீஃப்ய்யா அவன். அனேகமா ஒரு பத்து செல்போன் அவன் கைல இருக்கும். இருங்க அவனை கான்பரன்ஸ்ல போடுறேன். அவன் அடையாளம் கேட்டுட்டு போய் அள்ளுங்கய்யா, நானும் அங்க வர்ரேன்" என சொல்லிவிட்டு அவருடன் லைன் கொடுத்தார்.

பின்னர் அந்த பாண்டி பஜார் இன்ஸ்பெக்டர் " அய்யா வணக்கமுங்க. நான் தொரசாமிங்கய்யா. கொடை யாவாரிங்க. அய்யா அடையாளம் சொன்னா வந்து வாங்கிபனுங்கய்யா" என சொல்ல அவன் அடையாளம் சொல்ல .... பின்னர் அந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து நம்ம இன்ஸ்பெக்டர் கிட்டே போன் வந்துச்சு. இவர் எல்லாத்துக்கும் "உம் உம் சரிங்கய்யா சரிங்கய்யா" என சொல்லி விட்டு என்னிடம் ஒரு பேப்பரில் ஒரு அட்ரஸ் எழுதி கொடுத்து விட்டு இங்க இருக்கும் உங்க போன் அங்க போய் வாங்கிகுங்க" என சொன்னார். அப்போது மணி மாலை 3 மணி. ஒரு மணி நேரத்தில் நான் அங்கே போய் இடம் தேடி வாங்கிட்டு ரயிலை பிடிக்க முடியாது என்பதால் ரயில் ஏறிவிட்டேன். மயிலாடுதுறை போனதும் சென்னையில் இருக்கும் யாரிடமாவது பேசி வாங்கலாம் என அரை மனதுடன் ஏறிவிட்டேன்.

இதிலே என்ன ஒரு கூத்துன்னா பாண்டிபசார் இன்ஸ்பெக்டர் ஜீப்ல அங்க ரெண்டே நிமிஷத்திலே போயிட்டாரு. இவன் சொன்ன அடையாளத்திலே அவனை நோக்கி போகும் போதே செல்போன்கள் இருந்த பையை விற்க வந்த கடையிலேயே போட்டு விட்டு ஓடிட்டான். அவனை பிடிக்க வந்த இஸ்மாயில் என்னும் கடைக்காரரை கீழே தள்ளிவிட்டு ஓடிட்டான். கிட்ட தட்ட இருபது செல்போன்கள்.

அந்த இஸ்மாயில் கிட்டே பாண்டிபசார் இன்ஸ்பெக்டர் கிடைத்த எல்லா செல்போன்கள் மாடல் மற்றும் பெயர்கள் எல்லாம் எழுதி வாங்கிட்டு எல்லா போனுக்கும் அதிலே இருக்கும் எதுனா நம்பருக்கு போன் செஞ்சு செல்போன் ஓனர் யார்ன்னு கேட்டு ஒப்படைத்து அவங்க கிட்டே கையெழுத்து வாங்கிட்டு அதை என் கிட்டே கொண்டு வந்து கொடுக்கனும் என சொல்லிட்டு போயிட்டார்.

அந்த இஸ்மாயில் என் போன்ல இருந்த முதல் நம்பராக இருந்த "அப்துல்லா" நம்பருக்கு போன் செய்ய அது ஸ்விட் ஆஃப் ஆகி இருந்தைமையால் அவர் வேறு நம்பரை தேட அதிலே நம் நண்பர் பதிவர் காரைக்கால் இஸ்மாயில் பெயரை வைத்து இருக்க "அடடே நம்ம பெயரா இருக்குதே" என நினைத்த இஸ்மாயில் அந்த பதிவர் இஸ்மாயில்க்கு போனை போட்டு "இது யார் போனுங்க" என கேட்க இது "அபிஅப்பா" போன் என சொல்ல அதற்கு அந்த இஸ்மாயில் "அப்படியாங்க. இது திருட்டு போய் கிடைச்சுது. அவரு கிட்ட சொல்லி என் கிட்ட வந்து வாங்கிக்க சொல்லுங்க" என சொன்னதும் நம்ம பதிவர் இஸ்மாயில் என் நண்பர் என்பதால் என் மனைவி நம்பருக்கு மயிலாடுதுறைக்கு போன் செய்து "அண்ணி, அபிஅப்பா செல்போன் ரயில்வே ஸ்டேஷனில் திருட்டு போச்சுது. அது பாண்டி பசார்ல இன்ன அட்ரஸ்ல இருக்குது. போய் வாங்கிக்க சொல்லுங்க" என சொல்ல உடனே என் மனைவி  சென்னையில் இருக்கும் என் அண்ணன் சம்மந்தம் என்பவருக்கு போன் செய்து விஷயம் சொல்ல நான் இரவு பத்து மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும் முன்ன என் போன் கிடைத்து விட்டது. ஆனால் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை. இன்னும் இரண்டு நாளில் நான் மீண்டும் சென்னைக்கு போனதும் தான் என் கைக்கு வரும்.

நான் சாமி என்னும் ஆர் பி எஃப் கிரைம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து நன்றி சொன்னேன். அதற்கு அவரு "சார், காலை முதல் செல்போனை குறிவச்சு ஒருத்தன் அடிச்சிருக்கான். ஆனா வந்து யாரும் தைரியமா ஒரு புகார் எழுதி தரலை. ஏன்னா பயம். கோர்ட் கேஸ்ன்னு ஆகுமேன்னு பயம். பின்ன எப்படி நாங்க எங்க போய் தேடுவது. பாருங்க இப்ப பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் புகார் கொடுத்தா நாங்க இன்னிக்கு பிடிச்ச 20 செல்போனையும் அந்த புகார் செஞ்சவங்களுக்கு திருப்பி கொடுத்திருக்கலாம். போலீசார் உங்கள் நண்பன்னு ஏன் இன்னனும் நினைக்காம இருக்காங்க மக்கள்? நன்றில்லாம் வேண்டாம். இனிமே இது போல அலட்சியமா இருக்காதீங்க." என சொன்னார்.

நிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான்! வாழ்க காவல்துறை! மிக்க நன்றி! மிக்க நன்றி!

14 comments:

  1. இந்த ஒரு விஷயத்த வெச்சு போலீச்காரன்களை நம்பீராதீங்க

    ReplyDelete
  2. பாராட்டுக்குரியவர் அந்த காவல்துறை நண்பர்.... அவரைப் பாராட்டி பதிவிட்ட உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. இந்த பதிவு போட்டது உங்க தம்பிக்கு தெரியுங்களா? கொல்லப்போறாரு? ஜெ. ஆட்சி நல்லாயிருக்குன்னு காட்டி விட்டாய் என்று?

    ReplyDelete
  4. நல்ல விடயம்

    ReplyDelete
  5. தொலைந்த போனின் மாடல் என்ன சார்?

    ReplyDelete
  6. நல்ல விஷயம் நடந்தால் பாராட்டுவோரை எனக்கு மிகவும் பிடிக்கும். காவல்துறையில் மக்கள் விரோதிகள் மிகுந்து இருந்தாலும்... அங்கே மக்களுக்கான உற்ற நண்பர்கள் எங்கேயாவது இருந்தால் உடனடியாக அவர்களை சுட்டிக்காட்டி பாராட்டும் உயர்ந்த மனப்பக்குவம் தற்போது குறைந்து வருகிறதே... என்ற கவலையில் நான் இருக்கும் போது மெய்யாலுமே பிக் பூஸ்ட் உங்க பதிவு சகோ.அபி அப்பா..! அதிலும் கட்சி அரசியல் கடந்து பாராட்டியது சபாஷ் போட வைக்கிறது..! வாழ்த்துகள் சகோ..! பதிவுக்கு மிக நன்றி..!

    ReplyDelete
  7. மயிலாடுதுறை அபிஅப்பா அவர்களே உங்களுக்கு ஒரு செய்தி சொல்றேன் . ஒரு காலம் இருந்தது அது "ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா" என்பது . அப்பொழுது அனைவரும் சேவை செய்பவர்களாக இருந்தார்கள் . ஒரு தவறு நடந்தால் அதனை முறையோடு கேட்பார்கள் . மிசாரமில்லை. அதனை அரசை கேட்பதற்கும் அல்லது ஒரு மனு கொடுக்கவும் யாருமில்லை . இப்பொழுது அதனை அரசியல் நோக்கில் பார்கிறார்கள் ஆனால் சேவை நோக்கில் அணுகுவதில்லை . நீங்கள் பழைய மாயவரத்து மனிதர் அதனால் உங்களால் முடிந்தது செய்தீர்கள் . "நல்லார் ஒருவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை"யாக வந்து சேவையும் செய்து மற்றவரையும் தொடர விரும்புகின்றீர்கள் . வாழ்த்துகள்

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு, நன்றி சகோ.

    ReplyDelete
  9. @ஜோதிஜி திருப்பூர் anna ,,abhi appa yaru .. parunga RPf than parati irukkar .. namma TN police illai :)

    ReplyDelete
  10. Very good post. We have to give the credit to the police man. Please go in person and say thank you. No need to think of the bad people.
    Thanks Abi appa

    Nalina

    ReplyDelete
  11. பதிவை ரசித்தேன்!

    எதற்கெடுத்தாலும் எல்லாவற்றிலும் அபத்த அரசியலை நுழைக்கும் அப்ரோச்சை நம் மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    உடனே நடவடிக்கை எடுத்த போலீஸ்காரரின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது. இது போன்ற நல்ல காரியங்கள் நடந்தால் உடனே அவருடைய மேலதிகாரிகளுக்கும் ஃபோனிலாவது தெரிவியுங்கள். நாங்கள் இங்கே அப்படி செய்வது வழக்கம். (சரியாக வேலை செய்யாதவர்களை பெண்டு எடுக்கிறோம் அல்லவா? ஒரு சேஞ்சுக்கு இப்படியும் செய்யவேண்டும்!)

    ReplyDelete
  12. சூப்பர் அண்ணே! என்னோட போன் கூட காணாம போச்சு! அந்த இன்ஸ் அய்யாவ திருப்பூர் ட்ரான்ஸ்பர் பண்ணுனாங்கன்னா போயி வணக்கம் வெச்சு ஒப்பாரி போட்டுருவேன்! ;-)))

    ReplyDelete
  13. அருமையான இந்த பதிவை நாங்கள் பெற நீங்கள் உங்கள் செல் போனை தொலைக்க வேண்டியதாகி விட்டது

    ReplyDelete
  14. இந்த அருமையான பதிவை நாங்கள் பெற நீங்கள் செல் போனை தொலைக்க வேண்டியதாகி விட்டது

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))