பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 24, 2012

கலா ரசிகமணியும் ஒரு சின்ன கதையும்!


(முதல் வரிசையில் இடமிருந்து வலமாக ஐந்தாவதாக திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள்)


ஒரு விஷயத்தில் ஒருவர் பெரிய அப்பாடக்கராக இருப்பது ஒரு தனி திறமை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அந்த விஷயத்தின் வீரியத்தை அதன் நுனுக்கத்தை அணு அணுவாக ரசிப்பது, ரசிக மணியாக இருப்பது என்னைப்பொறுத்த வரை ரொம்ப பெரிய விஷயம். ரசிக்கும் போது அந்த விஷயத்தில் இருக்கும் நிறை மட்டும் சிலரது கண்ணுக்கு தெரியும். சிலருக்கு "சுப்புடு"த்தனம் இருக்கும். அதல்லாம் விஷயமில்லை. ஆனால் ரசிக்கும் மனோபாவம் இருக்கின்றதே... அதற்கு மிகப்பெரிய ஞானம் வேண்டும். இது சம்மந்தமாக ஒரு கதை கூட உண்டு. அனேகமாக இது மகாபாரதத்தில் வரும் ஒரு குட்டிக்கதை என நினைக்கிறேன்.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம் என்று பொத்தாம் பொதுவாக ஆரம்பிப்பதை விட விஜயபுரி என்னும் தேசத்தை விஜயன் என்னும் மகாராஜா ஆண்டு வந்தான் என ஆரம்பிப்பது உங்களை இன்னும் கொஞ்சம் குழந்தை பருவத்துக்கு அழைத்து சென்று குதூகலிக்க வைக்கும் என்பதால் அப்படியே ஆரம்பிப்போம்.

அந்த மன்னன் விஜயனுக்கு  பிறந்த நாள் வந்தது. வழக்கமாக அவன் பிறந்த நாளுக்கு பள்ளி பாடசாலைகளுக்கு சென்று அங்கு பயிலும் மாணவர்களின் தனித்திறமைக்கு போட்டி வைத்து பரிசுகள் வழங்குவது வழக்கம். அந்த வருடமும் அது போல போட்டிக்கு மந்திரி ஏற்பாடு செய்து இருந்தார். மன்னன் விஜயன் மந்திரியை பரிசுக்கு தேர்ந்தெடுக்கும் குழுவுக்கு தலைவராக நியமனம் செய்தான். போட்டிகள் ஆரம்பம் ஆனது. ஒரு சின்ன பெண் குழந்தை அந்தரத்தில் ஒரு கயிற்றின் மீது நடந்து வந்தது. ஒரு பையன் தீ வளையத்தில் புகுந்து வந்தான். ஒரு பையன் சிறிய ஊசியை தரையில் இருந்து கண்களால் எடுத்து காட்டி அசத்தினான்.  எல்லா குழந்தைகளும் தங்கள் திறமையை காட்டி அசத்தினர்.

மந்திரியும் எல்லோருக்கும் மதிப்பெண் கொடுத்து கொண்டே வந்தார். கடைசியாக ஒரு சின்ன பையன் களத்தில் குதித்தான். அவனோ கால் கொஞ்சம் ஊனமுற்ற மாற்று திறனாளி. அவன் களத்தில் குதித்ததும் எல்லோரும் சிரித்தனர். ஆனால் அவன் பொருட்படுத்தவில்லை. தான் எல்லோராலும் கேலி செய்யப்படுவதைப்பற்றி கவலைப்படவில்லை.

உடனே மன்னர் அந்த பையனைப்பார்த்து "தம்பி உனக்கே கால் முடியாது. இங்கே பார்த்தாயா, எத்தனை பேர் என்ன என்ன விதமான பிரம்மிக்க தக்க வகையில் தங்கள் திறமையை காட்டினர். உன்னால் அது போல முடியுமா? அதனால் நீ போட்டியில் இருந்து விலகிவிடு" என்றார். அதற்கு அந்த மாணவன் "இல்லை மன்னரே, எனக்கு தெரிந்த வித்தையை நான் செய்ய அனுமதி கொடுங்கள்" என்றான். மன்னரும் அவனிடம் " சரி நீ என்ன செய்ய போகின்றாய்" என கேட்டார். அதற்கு அவன் "மன்னா நான் பசுவின் கன்றுக்குட்டி போல துள்ளி துள்ளி குதிக்கும் வித்தையை செய்ய போகிறேன்" என்றான். உடனே இதை கேட்ட மன்னர் முதலான எல்லோரும் சிரித்தனர். கன்றுகுட்டி போல துள்ளி குதிப்பது எல்லாம் ஒரு வித்தையா, இதை தான் எல்லாரும் சுலபமாக செய்யலாமே என எள்ளி நகையாடினர். ஆனால் மந்திரி மட்டும் சிரிக்காமல் அதில் ஏதோ விஷயம் கண்டிப்பாய் இருக்கும் என நம்பி அமைதியாக இருந்தார். மன்னரும் அந்த மாணவன் மனம் நோகாமல் இருக்க வேண்டி வித்தை காட்ட அனுமதி கொடுத்தார்.

அந்த மாணவனும் அந்த விளையாட்டுக்களத்தில் கன்றுக்குட்டி போல துள்ளி துள்ளி வந்தான். எல்லோரும் மீண்டும் சிரித்தனர். கூர்ந்து கவனித்த மந்திரி மட்டும் களத்தின் உள்ளே குதித்து அந்த கன்றுக்குட்டியாய் துள்ளிக்கொண்டு இருந்த மாணவன் அருகே சென்றார். பின்னர் அந்த பையன் முதுகில் தன் விரலால் தொட்டார். மீண்டும் வந்து தன் இருக்கையில் மன்னரின் அருகே அமர்ந்து கொண்டார்.

எல்லோரும் தங்கள் திறமையை காட்டி முடிந்த பின்னர் மந்திரி அவரவர்களுக்கான மதிப்பெண் இட்டு வரிசைப்படுத்தி முதல் பரிசை அறிவிக்க எழுந்தார். மன்னன் விஜயனும் முடிவை ஆர்வமாக பார்க்க வேண்டி எழுந்து நின்றான். தீயில் புகுந்து வந்த மாணவனும், அந்தரத்தில் கயிற்றில் நடந்து வந்த மாணவியும் மிகுந்த ஆர்வத்துடன் தாங்கள் தான் முதல் பரிசு பெறுவோம் என்ற நம்பிக்கையில் எழுந்து நின்றனர்.

மந்திரி முதல் பரிசை அறிவித்தார். 5....4.... 3..... 2......1 .... அந்த கன்றுக்குட்டி போல் துள்ளிக்குதித்த மாற்றுத்திறனாளிக்கு முதல் பரிசு என அறிவித்தார். மன்னன் விஜயன் மற்றும் அந்த கூட்டமே அதிர்ச்சியானது. மன்னன் விஜயன் மந்திரியை பார்த்து "மந்திரியாரே, இந்த பையனை விட மற்றவர்களின் திறமை அசாத்தியமாக இருக்க நீர் ஏன் இந்த மாணவனை பரிசுக்கு தேர்ந்தெடுத்தீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" என கோபமாக கேட்டான்.

அதற்கு மந்திரி "மன்னா, கயிற்றில் நடப்பதும், தீயில் புகுந்து வருவதும் ஓரளவு பயிற்சியால் வந்து விடக்கூடிய திறமை தான். ஆனால் இந்த மாணவன் கன்றுக்குட்டியாகவே மாறினான். அதற்கு அசாத்திய யோக பயிற்சி வேண்டும். உலகத்தில் எந்த மனிதருக்கும் இல்லாத ஒரு குணம்  மாடுகளுக்கு உண்டு. நம்மை ஒருவர் தொட்டால் நம் உடம்பே சிலிர்க்கும். ஆனால் மாடுகளை நாம் ஒரு இடத்தில் தொட்டால் அந்த இடம் மட்டுமே சிலிர்க்கும். அந்த மாணவன் கன்றுக்குட்டி போல துள்ளும் போது நான் போய் அவனை முதுகில் விரலால் தொட்டேன். உடனே அவன் அந்த தொட்ட இடத்தை மட்டும் சிலிர்த்து காட்டினான். அவன் அந்த கன்றுக்குட்டி வித்தை காட்டும் போது கன்றுக்குட்டியாகவே மாறிவிட்டான். அதிலே மனம், மூளை எல்லாம் ஒன்று திரட்டி ஒன்றிவிட்டான். இதற்கு தான் மற்ற வித்தைகளை விட அசாத்திய பயிற்சி வேண்டும்" என சொன்னார்.

உடனே மன்னர் அந்த மாணவனுக்கு பரிசு கொடுத்தது மட்டுமல்லாமல் மந்திரியின் அபரிமிதமான ரசிப்பு தன்மைக்கும் பரிசு கொடுத்தார்.

கதை முடிந்தது. இதை ஏன் இங்கே சொல்கிறேன் எனில் இந்த பதிவின் முதல் பாராவுக்கு மீண்டும் செல்லுங்கள். ......... இப்போது மீண்டும் இங்கே வாருங்கள். சில வருடங்கள் முன்பாக "கன்னத்தில் முத்தமிட்டால்" என்னும் படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலை பதிவர் தோழி ஜெஸீலா ஒரு விமர்சனம் செய்து பதிவிட்டு இருந்தார்கள். நான் பல இடங்களில் அந்த பதிவை சிலாகித்து எழுதி இருக்கின்றேன். அந்த தாக்கத்துக்கு பின்னர் இப்போது ஒரு பதிவு படித்தேன்.

ஒரு சட்ட மன்ற உறுப்பினர், ஒரு மிகப்பிரபல கட்சியின் மாவட்ட செயலர்.... காலை கண் விழித்தவுடனேயே தொகுதி பிரச்சனை, மாவட்ட பிரச்சனை, அரசியல் பிரச்சனைகள், சண்டைகள், சமாதானங்கள்... இரவு தூங்கும் வரை பிரச்சனகள் என முழு நேரமும் போராட்ட வாழ்க்கையின் ஊடே அவரது காரில் மேட்டுப்பாளையம் நோக்கி போகும் போது தான் கேட்கும் ஒரு பாடலை சிறியதாக மிக சிறியதாக ஆனால் வீரியமாக ஒரு விமர்சனம் எழுதுகின்றார். அவரது முகநூல் மற்றும் சமீபத்தில் ஆரம்பித்து இருக்கும் தன் வலைப்பூவில் அதை பதிகின்றார்.

 பொதுவாக எனக்கு கங்கை அமரன் மீது பெரிய அபிப்ராயம் என்பது இருந்தது இல்லை. இளையராஜா குரல் பிடிக்கும், ஜானகி குரல் பிடிக்கும், இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும் தான். ஆனால் இந்த விமர்சனத்துக்கு பின்னர் கங்கை அமரன் மீது "அடடே இவர் ஒரு நல்ல கவிஞர்" என்னும் அபிப்ராயமும் இளையராஜா மற்றும் ஜானகி அவர்கள் குரல் மீது காதலும் இளையராஜாவின் இசை என்பது ஒரு "பிரவாக நதி" என்னும் எண்ணமும் என் மனதில் வந்து சிம்மாசனம் போட்டு அமந்து விட்டது . அவரது விமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும் http://ss-sivasankar.blogspot.in/2012/10/blog-post_21.html . முகநூலுக்கு அவர் பழையவர்  என்பினும்  இப்போது புதிதாக வலைப்பூ பக்கம் வந்துள்ள குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர்அவர்கள்,  சட்டமன்ற நிகழ்வுகள், தான் பார்த்தது, கேட்டது, ரசித்தது ஆகியவற்றை  தன் வலைப்பூ பக்கங்களில் எழுத இருப்பதாக கூறியுள்ளார். தான் முகநூலில் எழுதிய சில பதிவுகளை தன் புதிய வலைப்பூவில் இதுவரை சுமார் 45 பதிவுகள் பதிந்துள்ளார். இன்னமும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைக்கவில்லை. விரைவில் இணைப்பார். அவரை பதிவர்கள் சார்பாக வரவேற்போம்.

6 comments:

  1. குட்டிக்கதை அருமை...

    /// ஆனால் ரசிக்கும் மனோபாவம் இருக்கின்றதே... அதற்கு மிகப்பெரிய ஞானம் வேண்டும். ///

    உண்மை தான்... இன்பத்தையும்... துன்பத்தையும் ...

    குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர்அவர்களின் வலையைப் பார்க்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
  2. வலைப்பூ அறிமுகத்திற்கு நன்றி. அவரது வலைப்பூவினை படிக்கிறேன்.

    ReplyDelete
  3. அண்ணா, மிக்க நன்றி. உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  4. MLA க்கே அறிமுகம் கொடுக்கிற அளவுக்கு பெரியவரான அபி அப்பா வாழ்க வாழ்க ;-)))))

    ReplyDelete
  5. அட! எங்க ஊர் எம் எல் ஏ!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))