பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 25, 2013

"இரட்டைக் குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டுமல்ல.........:-((



2010ன் மத்தியிலேயே "2 ஜி ஸ்பெக்ட்ரம்" என்னும் வார்த்தை புகுந்து புறப்படாத வாய்களே இந்தியாவில் இல்லை என்னும் அளவு வெற்றிகரமான பிரச்சாரத்தை  இந்திய ஆதிக்க ஊடகங்கள்  அலறித்துடித்து செய்தன. "ஆ.ராசா - தொலைத்தொடர்பு துறை - திமுகவை சேர்ந்த அமைச்சர் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ரூபாய்களை வாரி சுருட்டிக்கொண்டு தமிழகத்துக்கு கொண்டு போய்விட்டார். " "இதுக்குதான்யா சொல்வது இந்த பிராந்திய கட்சிகளை நம்பக்கூடாதுன்னு. இப்ப பாரு நம்ம ஸ்டேட் பணத்தையும் சேர்த்து கொண்டு போய்ட்டானுங்க" என்ற ரீதியிலான பேச்சுகள் எங்கும் எங்கும், பங்கு சந்தை முதல் பொதுக்கழிப்பிடம் வரை இது மட்டுமே பேச்சு.


தமிழக மக்களோ பகலில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சீரியலில் மட்டுமே கோடிகளை பார்த்தவர்கள். "அம்மா நான் பேங்குல போய் ஒரு 300 கோடி எடுத்துகிட்டு வரும் போது ஒரு பத்து கோடிக்கு டீ சாப்பிட்டு, 24 கேடிக்கு ஹேர்கட் பண்ணிகிட்டு அப்படியே அந்த ராமசாமி பணம் கேட்டான் அவனுக்கு ஒரு 32 கோடி கொடுத்துட்டு வர்ரேன்" என்பன போன்ற சீரியல்களில் மட்டுமே கோடிகளை பார்த்து வந்தவர்களுக்கு இந்த ஒன்னேமுக்கால் லட்சம் கோடி என்பது அதும் அரசாங்கத்தை சேர்ந்த சி பி ஐ போன்ற "பெரிய போலீஸ்" சொல்வது எல்லாம் நினைத்து  அரண்டு போயினர். இப்போது அந்த வழக்கு கிட்ட தட்ட முடியும் தருவாயில் அந்த "பெரிய போலீஸ்" என்னும் சி பி ஐ என்பது "சிரிப்பு போலீஸ்" ஆனது தேசிய கொடுமைதான்!


தமிழகத்திலோ இது எல்லாவற்றுக்கும் மேலாக விரைவில் 2011 மத்தியில்  தேர்தல் வர இருந்த நிலை. ஆதிக்க சக்திகளுக்கோ ஜெயாவை இப்போது முதல்வராக ஆக்காவிடில் இன்னும் எத்தனை ஜென்மம் ஆகுமோ தெரியாது அவர்கள் முதல்வர் அதிகாரத்தில் அமர! இதுவே காஞ்சி மடமாக இருப்பின் ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு இருள்நீக்கி சுப்ரமணியம் பாலியல் குற்றச்சாட்டில் வெளியே போயின் அடுத்து ஒரு செந்தமிழ்செல்வனோ, தேன்துளிவளவனோ வந்து அந்த நாற்காலியில் அமர வாய்ப்பில்லை. அதனால் அந்த பதவி பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. ஆனால் முதல்வர் நாற்காலி அப்படியா? அண்ணா போட்டு வைத்த அஸ்திவாரம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு  போதுமானதாக இருந்தாலும் நடுவே எம் ஜி ஆரின் சில வீக்னெஸ் காரணமாக நடுவே அதிஷ்டவசமாக ஜெயாவின்  ஆட்சி அவர்களுக்கு கிடைத்தது. அதை மீண்டும் தக்க வைக்க வேண்டும் எனில் ராசாவுக்கு எதிராக இப்போது கிடைத்த ஸ்பெக்ட்ரம் ஆயுதத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே இயலும் என அவர்கள் உனர்வுகளை மட்டுமே டெலிபதி மூலம் கூடி பேசிக்கொண்டு செயல்பட்டனர். அதன் விளைவு 2 ஜி ஸ்பெக்ட்ரம் விஷயம் ஊதிப் பெருக்கப்பட்டது. என்ன நடக்கின்றது என நடுநிலையாளர்கள் யூகிக்கும் முன்பே ஆ.ராசா அவர்கள் கைது செய்யப்பட்டு, ஊடகங்கள் ஆடித்தீர்த்து விட்டனர். நீதிபதிகள் கூட திகைத்து போயினர்.


சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சி பி ஐ வழக்கு தொடுத்தது. ராசா அவர்கள் மொரீசியஸ்ல பணம் வச்சிருக்காரு, துபாய்ல பணம் வச்சிருக்காரு என சி பி ஐ டைரக்டரே "இந்தியா டைம்ஸ்"க்கு பேட்டி கொடுத்தார். ஆச்சு 2 வருஷத்துக்கு மேல. இதுவரை சி பி ஐ முட்டைக்கு முடி புடுங்கி கொண்டு இருந்ததா என தெரியவில்லை. ஆனால் துபாய், மொரீசியஸ் பணம் விவகாரம் என்ன ஆச்சு என ராசா அவர்கள் சி பி ஐ டைரக்டரிடம் கேட்கும் போது "அதல்லாம் ஊலூலூலாய்க்கு" என்கின்றனர்.

சி ஏ ஜி முதலில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி என்றது. அதை சி பி ஐ நம்பியது. வழக்கு போடும் போது அது 33000 கோடியாக சுருங்கியது. பின்ன கொஞ்சம் கொஞ்சமாக காற்றுப்போன பலூன் போல 7000 கோடி ஆனது. பின்னர் போகிற போக்கை பார்த்தால் அரசாங்கம் ராசாவுக்கு 10000 கோடி தரவேண்டும் என சொல்லும் போலிருக்கு.


அதல்லாம் போகட்டும். சி பி ஐ வழக்கு அதன் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கு. அதை உச்சநீதிமன்றம் தனிக்கவனம் செலுத்தி கவனித்துக்கொண்டு உள்ளது. இதனிடையே  ஆ.ராசா அவர்கள் ஆட்சிக்காலத்தில் தொலைத்தொடர்புத்துறை அனுமதி அளித்த 122 அலைக்கற்றை உரிமங்கள் உச்சநீதிமன்றத்தால் நீக்கப்படுகின்றது. வழக்கில் சம்மந்தப்பட்ட ஆ.ராசா அவர்கள் அந்த வழக்கில் விசாரிக்கப்படவில்லை. ஏன்? ஏன்? ஏன்?? ஏனனில் உச்சநீதிமன்றம் "முன்முடிவெடுத்து" விட்டதோ என்கிற ஐயம் பொதுமக்களுக்கு வருகின்றது. உடனே ஆ. ராசா அவர்கள் வழக்கை மறுசீராய்வு செய்ய வேண்டும் என கேட்டு மனு செய்கிறார். அதில் தன்னையும் விசாரிக்க வேண்டும். தன் தரப்பு விளக்கங்களை கேட்க வேண்டும் என சொல்கிறார். அது மட்டுமல்ல மத்திய அரசும் மறு சீராய்வுக்கு கேட்கின்றது. இரண்டுமே தள்ளுபடி ஆகின்றது. இதில் நீதி எங்கே போனது? இது என்ன கொடுமை? இது தான் ஜனநாயக நாட்டின் முறையா? தான் சம்மந்தப்பட்ட வழக்கில் தன் மீது பழி வரும் வகையில் ஒரு தீர்ப்பு தன்னை விசாரிக்காமலே, தன் விளக்கத்தை கேட்காமலே என்னும் கொடுமை ஆ.ராசா என்னும் தனிப்பட்ட நபருக்கு! இது தான் இந்திய நீதியா?



ஆனால் ஒரு பக்கம் சி பி ஐ நீதிமன்றம் வழக்கு நடக்கும் போதே தினம் தினம் ராக்கெட் வேகத்தில் நடக்கும் போதே, இடயே பாரளுமன்றம் விழித்துக்கொண்டது. அரசு கொள்கை முடிவில் நீதிமன்றம் எப்படி தலையிடலாம்? ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரனை செய்யட்டும் என ஒரு குழுவை பாராளுமன்ற சபாநாயகர் திருமதி. மீராகுமார் அமைத்தார். நல்ல விஷயம் தான். அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அதில் உறுப்பினர்கள். பி சி ச்சாக்கோ என்னும் கேரள எம் பி தான் அந்த நாடாளுமன்ற கூட்டு விசாரனை குழுவுக்கு தலைவர். அதிலே அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இந்த சாக்கோ அவர்கள் நல்லவர், வல்லவர், நீதிமான், நேர்மையின் சிகரம் என்றெல்லாம் பாராட்டப்படுபவர். நல்லது.


அங்கும் விசாரனை. ஆனால் இதுவரை குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா அவர்கள் விசாரிக்கப்படவில்லை. இதிலே பிரதமர் மன்மோகன் சிங்கையும், அப்போது நிதிஅமைச்சராகவும் இப்போதும் நிதி அமைச்சராகவும் இருக்கும் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்ற பாஜக கட்சியின் கோரிக்கை இதுவரை பி.சி சாக்கோவால் நிராகரிக்கப்பட்டுக்கொண்டுள்ளது. அதற்கு காங்கிரஸ் எம் பிக்கள் (அந்த குழுவில் இருக்கும் எம் பிக்கள்) ஒத்துக்கொள்ளவில்லை. என்ன பயமோ? யார் அறியோம். இதற்கிடையே அந்த குழுவில் இருக்கும் திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா போன்றவர்கள் அந்த விசாரனையில் ஆ.ராசாவையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். ஏன்? மடியில் கனமில்லை. விசாரனைக்கு பயமில்லை. இதுவரை அந்த கோரிக்கையும் மறுக்கப்பட்டுக்கொண்டுள்ளது. என்ன காரணம்?


சரி, இவர்களை விசாரிக்காமலே நல்ல தீர்ப்பு வருமா என பார்க்கின் அதற்கான வாய்ப்பும் குறைவாக தெரிகின்றது. காரணம்... அங்கே சாட்சிகளாக வரும் தொலைத்தொடர்பு அதிகாரிகளும், அட்டர்னி ஜெனரல் போன்றவர்களும் முன்னுக்கு பின் முரணாக, தான் தப்பித்துகொண்டால் போதும் என்கிற ரீதியில் ராசா அவர்கள் மீது பழி போட்டு வருகின்றனர். இத்தனைக்கும் அவர்கள் சி பி ஐ நீதிமன்றத்தில் சொன்ன சாட்சிகள் வேறு மாதிரி. இதை எல்லாம் பத்திரிக்கையில் பார்க்கும் ஆ.ராசா அவர்கள் தன்னையும் ஜே பி சி யில்  விசாரிக்க வேண்டும் என கோரி சபாநாயகர் திருமதி மீராகுமார் அவர்களுக்கு நான்கு நாட்கள் முன்பாக ஒரு மூன்று பக்க கடிதம் எழுதுகிறார். அதன் தலைப்பிலேயே "ரகசியம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் முடிவெட்டும் கடையில் கூட வழித்த முடியை துடைத்து போட அந்த கடித நகல் தான் இன்று இந்தியா முழுமையும் பயன்படுகின்ற அளவு இணையம் முழுக்க வெளிவந்து விட்டது. இந்திய அரசாங்கம் "ரகசியங்களை" பாதுகாக்கும் லட்சனம் இது. அது நமக்கு இப்போதைக்கு தேவையில்லை. ஆனால் அதன் சாராம்சம் என்ன? இதோ அந்த கடித்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பாருங்கள்..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


மதிப்பிற்குரிய  பாராளுமன்ற சபாநாயகர் அவர்களுக்கு!


1998 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட 2 G அலைக்கற்றை கொள்கை, அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நான் ஆஜராக வேண்டும் என்று அதில் இடம் பெற்றுள்ள சில உறுப்பினர்கள் கோரி வருவதாக அறிகின்றேன்.

2007ம் ஆண்டு மே 17 முதல் 2010 ம் ஆண்டு நவம்பர் 14 வரை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக நான் இருந்த போது 2008ம் ஆண்டில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கப்பட்டன.

அலைக்கற்றை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எனது தரப்பு விளக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்காமல் 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அந்த 122 அலைக்கற்றை உரிமங்களையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது. அதை மறு சீராய்வு செய்யக்கோரி நான் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக மத்திய தொலை தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அட்டர்னி ஜெனரல் போன்றோர் ஆகராகி வருகின்றனர். ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்கள் குழுவிடம் அளிக்கும் விளக்கம் உண்மைக்கு புறம்பாகவும் குற்றத்தை வேறொறுவர் மீது சுமத்தும் வகையில் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்தியின் மூலம் அறிகின்றேன்.

இந்த விவகாரத்தில் தவறாகவும், முழுமையான ஆதாரங்கள் இல்லாமலும் பாராளுமன்ற கூட்டுக்குழு வழிநடத்தக்கூடாது. அதனால் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நானே நேரில் ஆஜராகி தொலைதொடர்பு கொள்கை, தொலைதொடர்பு உரிமங்கள் வழங்குவதில் அரசு கடைபிடித்த கோட்பாடு, இதில் யாருக்கெல்லாம் உரிமையும் பங்கும் உண்டு என்பதை விளக்குவதே சரியாக இருக்கும்.

அலைக்கற்றை தொடர்பான தீர்ப்பில் இந்திய ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட அரிய இயற்கை வளமான அலைக்கற்றை   பண பலம் கொண்ட சிலராலும் அரசு நடைமுறையை மாற்றும் சக்தி படைத்தவர்களாலும் அனுபவிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஆலைக்கற்றை முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை சி பி ஐ நீதிமன்றத்தில் எனது பதவிக்காலத்தில் ராணுவம் பகிர்ந்து கொண்ட அல்லது அது பயன்படுத்தி வந்த அலைக்கற்றை வழங்கப்படவில்லை என சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனது பதவிக்காலத்தில் பயன் படுத்தாமல் இருந்த அலைக்கற்றையை கண்டறியவும் அவற்றை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை ஒருக்கிணைக்கும் பணியையும் மத்திய தொலைத்தொடர்பு துறை மேற் கொண்டது.

ஆனால் எனக்கு முன்பு அமைச்சராக இருந்தவர்கள் அலைக்கற்றையை பயன்படுத்தாமல் இருந்ததால் தான் அரசுக்கு உண்மையான வருமான இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத்தலைவர் மூலம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் ஏலம் நடத்தி அலைக்கற்றையை ஒதுக்குவது அரசின் நோக்கம் அல்ல , நாட்டின் தொலைத்தொடர்பு வளர்ச்சியை அதிகரிக்க நிறுவனங்களின் வருவாய் அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள் விளக்கினர். மேற்க்கண்டவாறு 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிலவும் பல முரண்பாடுகளை பாராளுமன்ற கூட்டுக்குழுவிடன் என்னால் விளக்க முடியும். இதன் மூலம் மறைக்கப்படும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். சி பி ஐ நீதிமன்றத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சட்ட விரோதமாக அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு தான் விசாரிக்கப்படுகின்றது இப்போது. அந்த விசாரணை பாதிக்காத வண்ணம் அலைக்கற்றை கொள்கை அதை அமல்படுத்திய நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதனால் என்னை விசாரனைக்கு அழைக்கும் படி பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு உத்தரவு இட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ஆ. ராசா


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு மனிதன் தனக்கான நீதி கிடைக்க எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது. என்னை விசாரியுங்கள் விசாரியுங்கள் என கதறுவது இந்த பக்கம். ஆனால் ஆனால்....

கடந்த 17 வருடமாக ஜெயலலிதா மீது ஒரு சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து கொண்டுள்ளது. இதுவரை இந்திய சரித்திரத்தில் இல்லாத அதிசயமாக 100 முறைக்கும் மேல் வாய்தா வாங்கப்பட்டு அல்லது கொடுக்கப்பட்டு, நீதிபதிகள் மேலேயே குற்றம் சாட்டப்பட்டவர் புகார் சொல்வதும், என்னால் மன உளைச்சல் தாங்க இயலவில்லை என ஆச்சார்யா என்னும் அரசு வழக்கறிஞர் துண்டைக்காணும் துணியைக்காணும் என ஓடுவதும் இன்னும் வழக்கு முடிந்தபாடில்லை. ஏன்? ஏன்? ஏன்? இத்தனைக்கும் அந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தால் அதன் வழிகாட்டுதல் படி தான் சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. ஏன் என நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டாமா?


ஆ.ராசா அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட போது திமுக தலைவர் சொன்னார் "ராசா ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீது கொண்ட பொறாமையால் அவதூறு சொல்லப்படுகின்றது" என்றார். உடனே நடுநிலை நாயகர்கள் "இந்த கருணாநிதிக்கு வேறு வேலை இல்லை. சென்சிட்டிவ் பிரச்சனை வரும் போதெல்லாம் தாழ்த்தப்பட்டவன் என்ற ஆயுதம் எடுப்பார்" என கேலி பேசின.


ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகளை பாருங்கள். உண்மை என்ன? தன்னை விசாரிக்க சொல்லும் ஆ.ராசாவுக்கு  மறுக்கப்படுகின்றது, ஆனா ஜாதி இந்துக்கள் ப.சிதம்பரம் தன்னை விசாரிக்க கூடாது என சொன்னால் அது ஏற்கப்படுகின்றது. ஆதிக்க சாதியை சேர்ந்த ஜெயாவுக்கு 17 வருசம், 100க்கு மேல் வாய்தா என அள்ளி அள்ளி சலுகைகள் வழங்கப்படுகின்றது. மேலும் டான்சி வழக்கில் கூட ஜெயா குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட போதும் கூட "கொழந்தே, அப்டீல்லாம் செய்யக்கூடாது. அரசாங்க சொத்தை ஆட்டைய போட்டியா.. ஒடனே திருப்பி கொடுத்துடு, நீ போட்ட கையெழுத்து போடலைன்னு சொன்னியா, இனி அப்படி செய்யக்கூடாது கொழந்தே" என சொல்லி விட்டு தண்டனை இல்லை என சொல்கின்றது நீதிமன்றம்.


ஆனால்ஆ. ராசா அவர்களுக்கு?????? தான் குற்றமற்றவர் என நிரூபிக்க தன்னை விசாரியுங்கள் என சொல்லியும் இனியும் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுமானால் "இரட்டைக்குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டும் நடக்கவில்லை... இந்திய நீதியிலும் ரெட்டை குவளை முறை தான் நடந்து கொண்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகும்! காந்தி தேசத்தில் காந்திக்கு செய்யும் உண்மையான மரியாதை ரூபாய் நோட்டுகளில் அவரை படம் போடுவது மட்டுமல்ல... அவரது தீண்டாமை கொடுமை  ஒழிப்பு கொள்கைக்கு  புடம் போடுவதும் கூடத்தான் என்பதை இந்த தேசம் உணரட்டும்!

13 comments:

  1. என்ன அபி அப்பா சார் , ஏன் இந்த பொழைப்பு? இந்த ஜால்ராவை அதிமுகவில் அடித்தாலும் முன்னேற வாய்ப்பிருக்கு

    ReplyDelete
  2. உண்மைகளை உரக்க சொல்லி இருக்கிறீர்கள்.இது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் போகுமோ ?
    "இரட்டைக்குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டும் நடக்கவில்லை... இந்திய நீதியிலும் ரெட்டை குவளை முறை தான் நடந்து கொண்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகும்!
    மேல குறிப்பிட்ட இந்த வரிகள் தான் உண்மையாக இருக்குமோ ?

    ReplyDelete
  3. "இரட்டைக்குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டும் நடக்கவில்லை... இந்திய நீதியிலும் ரெட்டை குவளை முறை தான் நடந்து கொண்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகும்!

    இந்த வரிகள் உண்மை ஆகிவிடுமோ ?
    பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  4. your are wost person to support 2g

    ReplyDelete
  5. ARUMAIYAANA PATHIVU .. NIYAAYAMAANA KELVI....
    hello mr. thamizhan avargale admk vil ulla thondan evanum yosithu oru vari adikka maattaan.. aariya adivarudikalin pathivukal thaan admk pathivukal..

    ReplyDelete
  6. மக்களின் (சங் பரிவார் ) மனதை திருப்திபடுத்த அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியது போல்.தாழ்த்தப்பட்ட ராஜாவுக்கும் (உயர்சாதி ) மக்களை திருப்திபடுத்த தண்டனை வழங்குகிறோம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்கும் ஆச்சரிய படவேண்டாம்.உச்சநீதிமன்ற தீர்ப்புபடி அலைகற்றை மறு ஏலத்தில் எடுக்க இந்த முறையும் (இரண்டாவது முறை ) ஒரு பயலும் (கம்பெனி ) முன் வரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.(ராஜா )

    ReplyDelete
  7. மக்களின் (சங் பரிவார் ) மனதை திருப்திபடுத்த அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியது போல்.தாழ்த்தப்பட்ட ராஜாவுக்கும் (உயர்சாதி ) மக்களை திருப்திபடுத்த தண்டனை வழங்குகிறோம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்கும் ஆச்சரிய படவேண்டாம்.உச்சநீதிமன்ற தீர்ப்புபடி அலைகற்றை மறு ஏலத்தில் எடுக்க இந்த முறையும் (இரண்டாவது முறை ) ஒரு பயலும் (கம்பெனி ) முன் வரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.(ராஜா )

    ReplyDelete

  8. ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு பொருளை விற்பனை செய்ய வேண்டுமானாலும், அதன் மேலாளருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு டிஸ்கவுன்ட் தர மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கும். அதற்கும் மேலே ...அல்லது ரொம்ப பாட்டம் ரேட் என்றால் அந்த நிறுவனத் தலைவர் மட்டுமே டிஸ்கவுன்ட் தரமுடியும். இது இயற்கை.

    அப்படி இருக்க... இதில் ராஜாவை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் ஒப்புதலோடுதான் ராஜா செயல் பட்டு இருக்க முடியும். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் இவர்களுக்கு ராஜா மாட்டிக் கொண்டு விட்டார்.

    2ஜி ஊழலில் எங்களுக்கு தொடர்பில்லை என்று கூறி ராஜா மீது பழி போட்டு தேர்தலை சந்தித்தது காங்கிரஸ் அரசு. இதோ மீண்டும் தேர்தல் வருகிறது. மீண்டும் ராஜா மீது குற்றம் சுமத்தி அவரை உள்ளே தள்ளி, எங்களுக்கும் இதற்கும் சம்பதம் யில்லை என்று கூறி மறுபடியும் தேர்தலை சந்திக்க வருகிறது காங்கிரஸ் என்ற ஓநாய்.

    ReplyDelete
  9. நகைச்சுவை என்ற லேபல் கொடுக்க மறந்துவிட்டீர்கள்!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))