பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 15, 2019

“தோழர் சோழன்” மீதான என் பார்வை! - அபி அப்பா என்கிற தொல்காப்பியன்.





அது ஒரு அழகிய மழைக்காலம். ஆண்டு 2011, நவம்பர் 5ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகம் “அன்பகத்தில்” அந்த கூடுகை நிகழ்வு. அய்யா சுப.வீரபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன், அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.எஸ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, மன்னார்குடியின் புதிய எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா, அசன் முகமது ஜின்னா  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இணையத்தில் செயல்படுபவர்களின் கூட்டம் அது. பார்வையாளர்களும் பேசலாம். தங்கள் கருத்துகளை பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பு அது. அப்போது ஞானமணி என்னும் பையன். பெரம்பலூர் மாவட்டம் சார்ந்த பையன். முதுகலை படிப்பு முடித்து விட்டு அப்போது சென்னையில் முனைவர் பட்டத்துக்கு படித்துக் கொண்டிருக்கின்றார் ஒரு பல்கலைகழகத்தில். பேச ஆரம்பிக்கின்றார்.

சிறிது நேரத்தில் மேடையில் அழ ஆரம்பிக்கின்றார்.  அழுகையினூடே விஷயத்தை சொல்கின்றார். “சார், நான் பெரம்பலூர் மாவட்டம்  சார்ந்தவன். இங்கு நான் படிக்கும் பல்கலைகழக விடுதியில் பெரம்பலூர் காரனா நீ? 2ஜி பணம் எல்லாம் எங்க வச்சிருக்கே? ஒன்னே முக்கால் லட்சம் கோடியை அப்படி எங்கடா பதுக்கி வச்சிருக்கீங்க?” என கேட்கிறாங்க சார். பெரம்பலூர்காரன் என்பதால் ஏன் சார் அவமானம் செய்றாங்க? எங்க ராசா அண்ணன் ஊருக்கே நல்லது செஞ்சவரு சார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பெரம்பலூர்ல நல்லது தான் சார் செஞ்சாரு. எங்களுக்கு ஏன் சார் இந்த கஷ்டம்?” பேசிவிட்டு மீண்டும் அழுகை. கூட்டம் நிசப்தம் ஆனது. அடுத்தடுத்து பலரும் பேசினார்கள். அரியலூர் மாவட்ட செயலாளர் திரு. எஸ். எஸ்.சிவசங்கர் அவர்கள் எழுந்தார். பேசினார். “நான் இங்கே இணையத்தில் நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நேரிடையாக சொல்லப்போவது கிடையாது. ஆனால் நீங்கள் எப்படி செயல்பட்டால் வெற்றி என்பதை சொல்கிறேன். இதோ இங்கே பேசிய தம்பி ஞானமணி அவர்கள் 2 ஜி விஷயம் பற்றி பேசி அதனால் அவரை அவமானம் செய்வதாக வருத்தமாக பேசினார். இது 2011ம் ஆண்டு நவம்பர் மாதம். நான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து 6 மாதங்கள் தான் ஆகின்றது. பலருடைய பேச்சுகளும் அத்தனை ஏன்? திமுகவினர் கூட சிலர் “நாம் 2 ஜி விவகாரத்தால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம்” என வெளிப்படையாகவே பேசுவதையும் நாம் காண்கின்றோம். இல்லை. இதே அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் அண்ணன் ஆ.ராசாவின் பாராளுமன்ற தொகுதி இருக்கும் நீலகிரி ஆகிய இந்த மூன்று மாவட்டங்களிலும் நம் திமுக பெற்ற வெற்றி என்பது மூன்றில் இரண்டு பங்கு வெற்றியாகும். இந்த மூன்று மாவட்டங்களில் நாங்கள் வெளிப்படையாக 2 ஜி விஷயத்தையே பரப்புரையாக கொண்டு செயல்பட்டோம். மற்றவர்கள் பேச தயங்கிய போது நாங்கள் பேசினோம். தைரியமாக மக்களை அதே 2 ஜி விஷயத்தை சொல்லி எங்கள் மீது எந்த தவறும் இல்லை என பரப்புரை செய்தோம். தமிழ்நாடு முழுவதும் இதோ மேடையில் இருக்கும் அய்யா சுபவீரபாண்டியன், ஆசிரியர் வீரமணி, அண்ணன் திருச்சி சிவா ஆகியோர் 2 ஜி பற்றிய பரப்புரை செய்தனர். ஆனால் இணையம் வழியாக அப்போது மிகக்கடுமையான பொய்ப்பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்தன. அங்கே இணையத்தில் அப்போது இதோ எதிரே அமர்ந்துள்ள அபிஅப்பா என்கிற தொல்காப்பியன், யுவகிருஷ்னா போன்ற வெகுசிலரே 2 ஜி பற்றி பெரிய பெரிய கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களால் இணையத்தில் அத்தனை பெரிய ஆரிய கூட்டத்தின் பொய்ப்பிரச்சாரத்தை சமாளிக்க இயலவில்லை. இதோ இப்போது எதிரே சுமார் 150 பேர் இருக்கின்றீர்கள். அதில் பாதி அளவு அவர்களுக்கு அப்போது கிடைத்திருந்தாலும் பெரிய மாற்றமே நடந்திருக்கும்.  நான் இதை குறிப்பாக தம்பி ஞானமணிக்கு தான் சொல்கிறேன். நம் மடியில் கனம் இல்லை எனும் போது வழியில் பயம் எதற்கு? அண்ணன் ஆ.ராசா அவர்கள் சிவசங்கரிடம் 500 கோடி கொடுத்து வைத்துள்ளார் என்று கூடத்தான் நான் போட்டியிட்ட அதே குன்னம் தொகுதியில் பொய்ப்பிரச்சாரம் செய்தனர். நான் அங்கு விளக்கம் சொன்னேன். வென்றேன். பயந்து போய் முடங்கினால் மேலும் மேலும் அடி விழும். திமிறி எழு தம்பி ஞானமணி. ஆமாம். நான் ஸ்பெக்ட்ரம் புரட்சியாளர் அண்ணன் ஆ.ராசாவின் மண்ணுக்கு சொந்தக்காரன் தான் என சொல். யாராவது உன்னை கேலி செய்யும் முன்னர் உன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போதே நான் “ஸ்பெக்ட்ரம் புரட்சி மண் சார்ந்தவன்” என சொல். கேட்பவர்களுக்கு அது ஆச்சர்யம் கொடுக்கும். அப்போது தான் விளக்கம் கேட்பார்கள். அவர்களுக்கு புரியவை. இதோ குன்னம் தொகுதியில் புரிந்து கொண்ட மக்கள் போட்ட ஓட்டுகளால் நான் இன்று எம்.எல்.ஏ ஆனதுபோல நீயும் அவர்களை வெல்வது சுலபம்” 

இது தான் அன்று திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களின் பேச்சு. இதோ “தோழர் சோழன்” நாவலின் கதாசிரியர்  அதே எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் தான். என்னடா இது! இது ஒரு நூல் விமர்சனம் என நினைத்து கச்சேரி பத்து நிமிடத்தில் முடிந்து கார பஜ்ஜி சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என நினைத்து ஏமாந்து போன வாசகர்களே... இது ஒரு ஃபுல் மீல்ஸ் மாநாடு. வந்தது வந்து விட்டீர்கள். தயவு செய்து வாருங்கள் அந்த சோழனோடு பயணிப்போம்.

இதோ அந்த நாவலின் கதாநாயகன் இராஜேந்திர சோழன் என்னும் “சோழன்” . கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன். இசை ஆர்வம் கொண்டவன். இளையராஜா எனில் சுவாசம் அவனுக்கு. பகுதி நேரமாக மேடைகளில் பாடுவான். அன்றும் அப்படித்தான் குருவாலப்பர் கோவிலிலிருந்து  கும்பகோணம் போக வேண்டும்.  மாலையில் குடந்தையில் ஒரு கச்சேரி. அது முடிந்து அடுத்த நாள் காலையில் அங்கேயே கல்லூரிக்கு போக வேண்டும். பேருந்துகள் வரவில்லை. ஏதாவது ஸ்ட்ரைக் ஆக இருக்குமோ என நினைக்கும் போது அரியலூர் அருகே மருதையாறு பாலம் வெடித்து பலர் இறந்து விட்ட செய்தி தெரிகின்றது. குறுக்கு சாலை வழியே போய் சிதம்பரம் - கும்பகோணம் பேருந்தை  பிடித்து கச்சேரி போகின்றான். ”வாய்யா குண்டு வச்ச ஊர்க்காரரே” என வரவேற்பு. அவமானமாக இருந்தது சோழனுக்கு. அடுத்த நாள் கல்லூரி செல்லும் போது சக மாணவர்கள் மத்தியில் அதே போன்ற பரிகாசங்கள். நொந்து போகின்றான். அதே கல்லூரியில் ஜெயம்கொண்டான் பகுதியில் இருந்து ஒரு விரிவுரையாளர் இருக்கின்றார். அவரிடம் செல்கின்றான். “வாங்க தோழர்” என அழைக்கின்றார். வாங்க தோழர் எனும் அந்த வார்த்தை பிரயோகமே அவனை கொல்கின்றது. ”என்ன சார், நீங்களுமா?” என்கிறான் சோழன். பின்னர் அந்த விரிவுரையாளர் ஒரு அழகான சமாதானம் சொல்கின்றார் அந்த மாணவன் சோழனுக்கு.

இதோ பசுமாட்டை கொண்டு வந்து தென்னை மரத்தில் கட்டி விட்டேன் வாசகர்களே! ஞானமணி தான் அந்த சோழன். ஜெயம்கொண்டான் விரிவுரையாளர் தான் எஸ்.எஸ் சிவசங்கர். 2 ஜி விவகாரம் தான் மருதையாறு பாலம் குண்டு வெடிப்பு. கச்சேரி தோழர்களும், கல்லூரி மாணவர்களும் தான் சமூகம். இன்னும் சொல்லப்போகின் சிவசங்கர் சாரின் சொந்த ஊர் ஜெயம்கொண்டான் தான் மற்றும் ஞானமணியின் சொந்த ஊர் தான் பெரம்பலூர் மாவட்டம். என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். ஆக பத்து பொருத்தம் பக்காவாக இருக்கும் போது நான் ஏன் அந்த பசுவை தென்னை மரத்தில் கட்டக்கூடாதுங்குறேன்.




விஷயத்துக்கு வருவோம். கதையின் களம் என்பது பெரம்பலூர், அரியலூர் மாவட்ட கிராமங்கள் மற்றும் அந்த முந்திரிக்காடு பகுதிகள். கதையின் களம் என்பது தான் மிக முக்கியம். நான் சில காலம் முன்பாக ஒரு கதை படித்தேன். என் நண்பர் ஒருவர் எழுதி அனுப்பியிருந்தார். கிருஷ்ணகிரி சார்ந்தவர். தான் கதை நன்றாக எழுதுவதாக அவரே பலமுறை சொல்லியிருக்கின்றார். அவர் ஒரு கதை எழுதி எனக்கு அனுப்பி பல ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எப்போதாவது போன் செய்யும் போது “ஏங்க, நான் அனுப்பிய கதையை பத்தி இன்னனும் ஒன்னும் சொல்லலையே?” என வருந்துவார். நான் அதை இன்னமும் படித்து முடித்தபாடில்லை. காரணம் கதையின் ஆரம்பம் தான். ஆரம்பத்திலேயே கதை கந்தல் ஆகிவிட்டது. அவர் காவிரி டெல்டா பகுதி பற்றிய கதை எழுத ஆரம்பித்துள்ளார். அதாவது கதாநாயகன் மயிலாடுதுறை பக்கமாக செம்பனார்கோவில். நாயகன் தன் ஆட்டை மேய்க்க செல்கின்றான். “நம் குப்புசாமி செம்பனார்கோவிலில் இருந்து கிழக்காக 25 கிமீ தொலைவில் இருக்கும் மலையில் தன் ஆடுகளை மேய்த்து விட்டு வீடு திரும்பினான். திரும்பும் போது இருட்டி விட்டது. அவன் கண்கள் சுழண்டு மயக்க நிலைக்கு வந்து விட்டான்” இப்படியாக ஆரம்பிக்கின்றது கதை. அத்தோடு என் கண்கள் சுழன்று விட்டது. அப்போது மூடி வைத்தது தான் அந்த கதையை. ஆக ஒரு கதைக்கு களம் என்பது அத்தனை முக்கியம். அது போல கதையின் காலம் அதை விட முக்கியம்.இங்கே  கதையின் காலம் என்பது 1985 முதல் சுமார் 1989 வரையிலான காலங்கள். கதை நடக்கும் காலங்களில் எம்ஜிஆர் உயிருடன் இருந்தார். மரித்தும் போகப்போகின்றார். இந்திரா அம்மையார் இறந்து விட்ட காலத்தின் அருகேயான காலம். ராஜீவ் பிரதமர். அண்ணா அறிவாலயம் திறக்கும் நேரம். வன்னியர் சங்கம் உச்சகட்டமாக மரங்களை வெட்டி இட ஒதுக்கீட்டு போராட்டம் நடத்திய காலம். இன்னும் சொல்லப்போனால் பாமக என்னும் கட்சி தோன்றவே இல்லாத காலம்.

ஆக நாவலாசிரியருக்கு கதையின் களமும், காலமும் அழகாய் கைகூடி வந்து விட்டது. இனி கதை என்பது அவருக்கு சுலபமான விஷயமாகிவிட்டது. தன் பதின்ம வயதுகளில் பார்த்த, கேட்ட கதைகளை ஒரு பார்வையாளராக தூர நின்றும், அந்த கதையின் போக்கில் சென்று பார்த்தும் எழுத ஆரம்பிக்க வேண்டிய வேலை மட்டுமே அவருக்கு மீதமிருந்தது. அவதானித்ததை அழகிய விறுவிறுப்பான எழுத்து நடையில் கொண்டு வருவது ஒரு சவால். ஆனால் நூலாசிரியருக்கு அது பெரிய விஷயமில்லை. ஏனனில் எழுத்து அவருக்கு வசியப்பட்ட விஷயம். சரி கதை என்பது உண்மை கதையா? புனைவா? அல்லது கற்பனையா (புனைவு வேறு கற்பனை வேறா என்ன?)  ... இது அக்மார்க் உண்மை கதை தான். கதாபாத்திரங்கள் சிலரது பெயர் மாற்றப்பட்டிருக்கலாம். சில கதாபாத்திரங்கள் கற்பனையாக உள்ளே வந்திருக்கலாம். அது போல ஒரு +2 படிக்கும் அல்லது கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு இளைஞனின் பார்வையாகத்தான் கதை இருக்கின்றது என்றே அவதானிக்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் தன்னை தான் சார்ந்த பூமிப்பகுதியை 1000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட இராஜேந்திர சோழனாக கற்பிதம் செய்து கொண்டும், அது போல இளையராஜாவை தன் மூச்சாய் சுவாசிக்கும், மேலும் தன்னை ஒரு பாடகனாக நினைத்துக் கொண்டு இசையை இரண்டற காதலிக்கும் ஒரு பையனின் பார்வை, அந்த வயதுக்கே உரிய புரட்சிகளின் மீதான ஈர்ப்பு கொண்ட, ஒரு சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடைப்பட்ட  பருவம் கொண்ட ஒரு பார்வையாளன் “சோழன்” தான் நூலாசிரியர் என்றே கடுமையாக அவதானிக்கின்றேன்.  என் அவதானிப்பு தவறாகக்கூட இருக்கலாம். வெட்டுப்புலி நாவல் போன்றோ அல்லது இருவர் திரைப்படம் போன்றோ பம்மாத்துகள் செய்யாமல் எம்.ஜி.ஆர், ஈழத்தின் கேனல் குணேந்திரன், பிரபாகரன், தழித்தமிழ்நாடு கோரும் விடுதலைப்படை இயக்கத்தின் தலைவர் தமிழரசன், டி ஜி பி ஸ்ரீபால்,  வன்னியர் சங்கம், மருதையாறு பாலம் குண்டு வெடிப்பு, வெடிப்பு நடந்த தேதி, பொன்பரப்பி ஸ்டேட் வங்கி கொள்ளை என அப்பட்டமாக உண்மை கதையாக எழுதப்பட்டுள்ளது.

விஷயம் இது தான். “சோழன்” அந்த முத்திரிக்காட்டு பகுதியில் வாழும் ஒரு கல்லூரி மாணவன். விவசாயக்குடும்பம் சார்ந்தவன். கிராமிய மேடை நாடகம், இசைக்கச்சேரி (ஆர்கெஸ்ட்ரா) போன்றவைகளில் ஆர்வம் கொண்டவன். ஒரு நாள்பாடும் போது ஒரு பெரியவர் ..பெயர் பிச்சைபிள்ளை என்பவர் விருப்பப்பாடலாக எழுதிக்கொடுத்த துண்டு சீட்டில் இருக்கும் கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தின் புரட்சிகர பாடலை பாடுகின்றான். பின்னர் அந்த பெரியவர் அழைப்பின் பேரில் புரட்சிகர அமைப்புக்காக பாடுகின்றான்.அமைப்பின் மீது ஏதோ ஒரு நியாயம் இருப்பதாக உனர்கின்றான். அதை செயல்படுத்தவும் ஆசைப்படுகின்றான். எப்படி? டியூஷனுக்கு மாணவர்களை கட்டாயமாக வரச்சொன்ன ஒரு வாத்தியாரை தலையில் துண்டு போட்டு மூடி அடித்து திருத்தும் அளவுக்கு அந்த இயக்கத்தின் மீது அவனை அறியாமல் ஒரு ஈர்ப்பு வருகின்றது. மீன்சுருட்டிக்கு உரம் வாங்க போகும் போது ஒரு செங்கொடி போராட்டத்தை பார்க்கின்றான். ஒரு ஆதிதிராவிட சமூக பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களை கைது செய்ய சொல்லி நடக்கும் போராட்டம். அங்கே காவல்துறையின் தடியடி.  அடிக்கும் கம்பு ஒன்று தான். அடிவாங்கும் சதையும் ஒன்று தான். ஆனால் அதை காவலர்கள் செய்தால் அது தடியடி. மற்றவர்கள் செய்தால் அடிதடி. ஆஹா தமிழ் எப்படி பிரித்து மேய்கின்றது பாருங்கள். ஆக அந்த தடியடி நம் சோழனை வெகுவாக பாதிக்கின்றது.

சோழனை பாட அழைத்த பிச்சைபிள்ளை வாயிலாக பெரியவர் என்னும் இயக்க தலைவர் தமிழரசன் பற்றி அறிகின்றான். மேலும் ஈர்ப்பு வருகின்றது. இயக்கம் செய்வது எல்லாம் மக்கள் நலனுக்கே என்னும் கருத்து விதை அவனுள் ஆழமாக பதியம் ஆகின்றது.

இயக்கம் ஈழத்தில் இருக்கும் பிரபாகரனுக்கு ஆதரவாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் அமரிக்கா போன பின்னர் ஆதரவு இழந்த நிலையில், இந்திராவும் மறைந்து விட்ட நிலையில், ராஜீவ் அத்தனை ஆதரவாக புலிகளுக்கு இல்லாத காலத்தில் தமிழக மக்கள் ஆதரவை நாடுகின்றனர். அதற்கு தமிழரசன் போன்றவர்கள் உதவுகின்றார்கள். இப்படியான நிலையில் தான் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி மருதையாறு பாலத்தை தகர்க திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் நோக்கம் மக்கள் இழப்பு அல்ல. பாலத்தை மட்டும் தகர்க்க வேண்டுமென்பதே என நாவல் சொல்கின்றது. நம்புவதும் நம்பாததும் வாசகர்கள் முடிவு. ஆனால் திட்டம் திசைமாறி சுமார் 30 பேர் உயிரிழப்பு ஆகின்றது. சோழன் அப்போது தான் குடந்தை கல்லூரியில் “குண்டு வைத்த ஊர்க்காரன்” என அவமானப்படுத்தப்படுகின்றான்.  இதோ இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோமே அந்த நிகழ்வு தான் அது!

ஒரு கட்டத்தில் இயக்கம் நடத்த பணம் தேவைப்படும் போது பொதுமக்களிடம் இருந்து பணம் பெறுவது அவர்கள் இயக்க கொள்கைக்கு விரோதமானது என்பதால் எந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றார்களோ அதே அரசாங்கத்திடம் இருந்து பணத்தை அடிக்கும் விதமாக பொன்பரப்பி ஸ்டேட் வங்கியை கொள்ளை அடிக்க இயக்கம் முடிவெடுக்கின்றது. எல்லோரும் மறந்து விட்ட அந்த செப்டம்பர் முதல் தேதி 1987 பொன்பரப்பி ஸ்டேப் வங்கி கொள்ளை சம்பவம் நடக்கின்றது. ஒரு மிகத்தேர்ந்த எழுத்தாளர்கள் மட்டுமே இப்படி ஒரு நிகழ்வை இயக்கம் திட்டம் தீட்டியது முதல் அப்போது யார் யார் எந்த பகுதிகளில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதும், பயன்படுத்தப்போகும் வாகனம் எது? எந்த வழியே தப்பிப்பது? என்ன விதமான ஆயுதங்கள் என்பதையும், அதே போல போலீஸ் தரப்பில் டி.எஸ்.பி முதல் ஆர்ம்டு போர்ஸ் வரை எங்கே எங்கே எப்படி நிற்க போகின்றார்கள் என்பதையும், கடைசி நேரத்தில் வந்து இணைந்து கொண்ட எஸ்.பி ஒரு வாடிக்கையாளர் போல ஒரு கைத்தறி சொசைட்டியில் போய் அமர்ந்து கொள்வதும் என மிக நேர்த்தியாக எழுதியுள்ளார் நூலாசிரியர். சீட் முனைக்கு ... சீட் முனைக்கு என்பார்களே.... இந்த அத்தியாயங்கள் எல்லாம் அது போல அதிரிபுதிரி வகை எழுத்துக்கள்.

இந்த பதிவை எழுதும் நான் பொன்பரப்பி சம்பவம் நடந்த போது டிகிரி முடித்துவிட்டு சென்னையில் வேலையில் இருந்த நேரம். அப்போது ஒரு நாள் மாலை முரசில் “பொன்பரப்பி வங்கி கொலையில் தீவிரவாதி தமிழரசனை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்” என தலைப்பிட்டு வந்த போது “நல்லா வேணும் ராஸ்கல்ஸ்” என என் மனது குதூகலித்தது. ஆனால் காலம் பல கடந்து இந்த நாவல் வழியே தான் தெரிகின்றது அதனுல் இருந்த அரசியல் புதிர்கள்! இதோ இன்று கூட பொன்பரப்பியில் ஸ்டேட் பேங் அதே இடத்தில் இருக்கின்றது. அருகில் “பொதுமக்கள் செய்த வீர தீர செயலுக்காக” ஒரு சமுதாயக்கூடத்தை கட்சி அன்பளிப்பாக ஸ்டேட் வங்கி கொடுத்துள்ளதையும் பார்க்கலாம். சரித்திரம் எப்படியெல்லாம் மாற்றி எழுதப்படுகின்றது என்பதை இந்த நாவல் படித்து முடித்த பின்னர் நீங்கள் அறிவீர்கள். யார் கண்டது... நாளையே வீரப்பன் உயிரை குடித்த ரிவால்வர் இது தான் என ஒரு துப்பாக்கி அருங்காட்சியகத்தில் “மோர் குவளை”க்கு பதிலாக வைக்கப்படக்கூடும்... 

இந்த அத்தியாயத்தின் போதே சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலைய கதை ஒன்றை   உள்ளே நுழைக்கின்றார் நூலாசிரியர். கதையின் ஆரம்பத்திலிருந்து கதாநாயகனாக இருந்த நம் சோழன் இயக்கத்தின் தலைவர் கதையின் உள்ளே நேரிடையாக உள்ளே நுழைந்ததும் “பெரியவர்” தான் நாயகன் என ஆகும் அளவு ஆகிவிட்டது. அது அப்படித்தான் ஆகும் என நினைத்து நூலாசிரியர் கனகத்தின் கதையை உள்ளே கொண்டு வந்து மீண்டும் “சோழனுக்கு” பட்டாபிஷேகம் செய்து வைக்கின்றாரோ என சந்தேகம் எழுகின்றது. ஆனால் “முந்திரிக்காட்டின் புரட்சி” என்னும் கதையும் “கனகத்தின் கண்ணீர் காவியம்” என்னும் நாவலும் “சோழன்” என்னும் கயிறு கொண்டு அழுத்தமாய் கட்டி “இந்த காரணத்துக்காகத்தான் கனகத்தை உள்ளே கொண்டு வந்தேன் என அழகாய் நூலாசிரியர் வாசகர்களை நம்ப வைப்பது அபாரம். வில்லனை துரத்திக் கொண்டு பாலக்கோடு செல்வதும், மலையுச்சி,  மலையூர், புலிரசம் என அசத்தலாகப்போகின்றது. இந்த கதையில் போலீசாரே வில்லன்கள். நல்ல போலீஸ்களான கணபதி ஏட்டு, அப்துல்லா எஸ்.ஐ, மற்றும் மந்திரி அழுத்தத்தால் மாற்றலாகிப்போகும் எஸ்.பி என ஒரு நல்ல போலீஸ் குழுவும் இருக்கின்றது. அவர்களோடு சேர்ந்து சோழனும் ஓடுகின்றான். கடைசியில் வில்லன் போலீஸ் ராமசுந்தரமும், குத்தாலம் சம்பந்தம் பி.சியும் என்ன ஆனார்கள்? சோழன் சம்ஹாரம் செய்தானா? அல்லது பாதிக்கப்பட்ட வேறு யாராவது சம்பவம் செய்தார்கலா? அல்லது இதையெல்லாம் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையின் எஸ்.ஐ அப்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தினாரா? எல்லாமே அருமையாக கோர்வையாக தந்துள்ளர் நூலாசிரியர்.

சின்ன வயதில் 45 காசு டிக்கெட் எடுத்து விட்டு மணலை குவித்து சாய்மானத்துக்கு பெண்கள் பகுதியையும் ஆண்கள் பகுதியையும் பிரிக்கும் சின்ன கட்டை சுவற்றில் சாய்ந்து கொண்டு ரீல் எத்தனை என பார்க்கும் போது  24 ரீல்கள் என காட்டினால் ஒருவித சந்தோஷம் வருமே... அது போல 49 ரூபாய்க்கு இரண்டு நாவல்கள் படித்த திருப்தி... அதே நேரம் இரண்டுமே விறு விறு ரகம்... அருமை சிவசங்கர் சார். 

நாவலின் பல பகுதிகள் குறிப்பாக அந்த முந்திரிக்காட்டின் முழு வரைபடத்தையும் எழுத்தால் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அழகு, மருதையாறு பாலம் குண்டு வைக்கும் முன்பாக போராளிகள் போடும் ஸ்கெட்ச், அது போல பொன்பரப்பி வங்கி கொள்ளைக்கு போகும் போது போடும் திட்டம், அதே நேரம் போலீசார் போடும் திட்டம், மலையூர் கிராமம், பாலக்கோடு பகுதிகள், இயக்க பாடல் பாடிவிட்டு கு.வல்லம் கிராமத்தில் ஒரு ஆதிதிராவிடர் வீட்டில் சாப்பிடும் முந்திரிக்காய் சாம்பார், கனகத்தின் கண்ணீர் கதை, நதியா என்னும் பிஞ்சு கருகி சாவது, கணபதி ஏட்டின் இரக்க சுபாவம், எஸ்.பியின் நேர்மை... இப்படியாக பல கதாபாத்திரங்களும் நம்மோடு வாழ்கின்றன.

குறிப்பாக செயராஜ் மற்றும் அப்துல்லா பாத்திரங்கள். நாவலைப்படித்தவர்கள் அடடே அது என்ன செயராஜ் கூட அப்துல்லாவை ஒப்பிடலாம் என கேட்கலாம். இந்த நாவலில் இந்த இருவர் மட்டும் தான் தென்னை மரத்துக்கு ஒரு குத்து, பனை மரத்துக்கு ஒரு குத்து என இரண்டு குத்து குத்தும் ஆசாமிகள். செயராஜ் என்பவன் இயக்கத்தின் பெரியவர் கூடவே இருந்து தொன்னை மரத்துக்கு ஒரு குத்தும் பின்னர் தனியாக டி எஸ் பி வீட்டுக்கு சென்று பனை மரத்துக்கு ஒரு குத்தும் போடும் துரோகி. கிட்டத்தட்ச அந்த இயக்கம் வேரோடு சாய்ந்தமைக்கு அவனும் ஒரு காரணம். 87களில் அவன் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு இயக்கத்தை காட்டிக்கொடுத்து தமிழரசன் மரணத்துக்கு காரணமாகின்றான். அனேகமாக இன்று அவன் ஒரு அரசு அதிகாரியாக இருக்கலாம். தமிழரசனை கொல்ல உதவியதுக்காக அவனுக்கு வேலை கிடைத்து இன்றைக்கு 34 ஆண்டு சர்வீசில் சுத்து வட்டாரத்தில் எங்காவது தாசில்தாராக இருந்து பாக்கெட் நிரப்பிக் கொண்டிருக்கலாம்.  கிட்டத்தட்ட அப்துல்லா பாத்திரமும் அப்படித்தானே. என்ன ஒன்று அப்துல்லா இருப்பது அரசாங்க உத்யோகம். ஆனால் மலையூர் மலையில் அப்துல்லா “சோழனை” வழிகாட்டும் விதம் பேச்சளவில் நன்றாக இருக்குமே தவிர “குச்சி இருக்குதா (ஜெலட்டின்) கையிலே... அவனுங்க மூஞ்சில போடு” என சொல்வது, தான் இருக்கும் அரசாங்க உத்யோகத்துக்கு ஏற்ற செயலாக எனக்கு தெரியவில்லை. அதனால் தான் செயபால் கூட ஒப்பிடுகின்றேன். படிக்கும் போது மேலும் அதை உணர்வீர்கள்!

இந்த நாவல் வந்ததும் உளவுத்துறை எல்லாம் அமேசான் கிண்டில் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து 49 ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கி கசக்கி கசக்கி கண்களை கூர்தீட்டியது என தினசரிகளில் வந்த செய்தியை படித்தேன். சாராயம் காய்ச்சுவது எப்படி என விலாவாரியாக நம் தோழன் கிழுமாத்தூர் மகி ஒரு பதிவு போட்டால் அது சட்டப்படி குற்றம் தான். ஆனால் முடிவில் இரண்டு வரிகள் “இப்படிப்பட்ட சாராயம் உடலுக்கு தீங்கு. ஆகவே இப்படியெல்லாம் காய்ச்சி குடிக்காதீர்கள்” என எழுதிவிட்டால் அது நீதிபோதனை பதிவாகிவிடும். பல வன்முறை சினிமாக்கள் அதைத்தான் செய்கின்றன. ஆனால் இந்த நாவல் அது போன்ற பூசிமெழுகும் வேலை எல்லாம் செய்யவில்லை. தீவிரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை. அதை வளர்க்கும் விதத்தில் மூளைச்சலவை செய்யவும் இல்லை. நடந்த சம்பவத்தை ஒரு கதைசொல்லியின் பார்வையிலிருந்து சொல்கின்றது. அப்படியும் நாவலாசிரியர் ஒரு கட்டத்தில் அப்துல்லாவை வைத்து கால் பக்கம் நீதிபோதனையும் செய்வார் நம் சோழனுக்கு. ஆகவே உளவுத்துறை அந்த கால் பக்கத்தை கிழித்து கக்கத்தில் வைத்துக் கொண்டு மேலிடத்தில் சென்று “நத்தின் சார் நத்திங்... எவ்வரிதிங் ஓக்கே சார்” என போகவேண்டியது தான்.

இந்த நாவலில் குறைகள் இல்லையா எனில்... உண்டு... ஒரு சில இருக்கத்தான் செய்கின்றது. அதல்லாம் நெக்லிஜிபிள். எழுத்தாளர் சுஜாதா சொல்வார்... ஒரு அறையின் உள்ளே நுழையும் போது சுவற்றில் ஒரு கடிகாரம் மாட்டியுள்ளதை எழுதினால் பிற்பாடு கதை நகரும் போது அந்த கடிகாரம் ஏதாவது வேலை செய்ய வேண்டும். ஏன் அதை எழுதினோம் என்பதற்காக அது மணி காட்ட வேண்டும். அல்லது கீழே விழுந்து உடையவாவது செய்யனும் என்பார். அது போல மருதையாறு பாலத்தகர்ப்பு விபத்தில் மாட்டப்போகும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் சென்னை எக்மோரில் கிளம்ப தயாராக இருக்கின்றது.  திருச்சி சங்கம் ஓட்டல் உரிமையாளர் சின்னபாபு ஏ.சி கோச்சில் ஏறுகின்றார். காங்கிரஸ் மாநில தலைவர் பழனியாண்டி மற்றும் அப்போது புதிதாக ராஜீவ் அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்த ப.சிதம்ப்ரம் ஆகியோர் பெயர்கள் ஏ.சி கோச் பட்டியலில் இருக்கு, ஆனால் அவர்கள் ஏறவில்லை. பின்னர் விபத்து நடந்து முடிந்ததும் திருச்சிக்கு விமானத்தில் வந்து இறங்கிய விமானத்தில் இருந்து சிதம்பரம் அதன் பின்னர் மாதவராவ் சிந்தியா ஆகியோர் வருகின்றார்கள். ஆக சிதம்பரம் அந்த ரயிலை தவற விட்டு விட்டார் என கொள்வோம் போகட்டும். ஆனால் சங்கம் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் வைர வியாபாரி அசோக் கோபால்  ஆகியோர் பற்றி ரயில் ஏறும் போது சிரத்தையாய் எழுதிய நூலாசிரியர் விபத்து நடந்ததை விளக்கி எழுதும் போது அவர்கள் மாண்டார்களா அல்லது மீண்டார்களா என்பது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பது சின்ன குறை.

இரண்டு விஷயங்கள்....

1. கலைஞர் அடிக்கடி சொல்வார்... அய்யா பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவை பார்த்திராவிட்டால் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று. நல்லது தலைவர் கலைஞர் அவர்கள் பெரியார், அண்ணாவை பார்த்தது பல நன்மைகளை தமிழகத்துக்கு கொடுத்தது. பார்த்திராவிடில் கலைஞரும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகி யாருக்கும் பயன்படாமல் போயிருப்பார். 

2. இந்த நாவலில் சோழனின் வாக்குமூலம் ... “நான் மட்டும் பெரியவரை (அதாவது தமிழரசனை) பார்த்து இருந்தால் இந்த வர்க்கப்போராட்டத்தின் வழியே   “நியாயங்களை” வழங்கியிருப்பேன்” என்பான். அதாவது நம் “சோழன்” தீவிரவாத நக்சல் இயக்கத்தின் வழி சென்றிருப்பான். ஆனால் வென்றிருப்பானா என்பது விடை தெரியா விஷயம். ஆனால் நல்லவேளை தமிழரசனை பார்க்கவில்லை. அனேகமாக அதன் காரணமாக இப்போது அதே பகுதியில் ஜனநாயக வழிப்படி மக்களை சந்தித்து வாக்குகள் பெற்று ... யார் கண்டது அந்த பகுதி எம்.எல்.ஏ கூட ஆகியிருக்கலாம்! 



நூலின் ஆரம்பத்தில் மறைந்த பெரியவர் எஸ்.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு நூலாசிரியர் நன்றி தெரிவித்து ஒரு பக்கம் இருக்கின்றது. அய்யா அவர்கள் ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவர் பின்னர் ஆண்டிமடம் சட்டமன்ர உறுப்பினர் ஆக இருந்த காலத்தில் இயக்க தோழர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில்  அரசியல் பொதுநீரோட்டத்தில் இணைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு பெரம்பலூர், அரியலூர் பகுதிகள் அமைதியாக இருக்க இதுவும் ஒரு காரணம் என்றே கருதுகின்றேன். அவர்கள் திமுகவோ, அதிமுகவோ, அவ்வளவு ஏன் பாமக மற்றும் விசி போன்ற சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளில் கூட இருக்கட்டும். ஆனால் அவர்கள் வீடுகளில் நிம்மதியான உறக்கம் இப்போது இருக்கின்றதே... அந்த முயற்சியை எடுத்த அய்யா எஸ். சிவசுப்ரமணியன்  அவர்களுக்கு நூலை சமர்ப்பணம் செய்தமையே அருமையான செயல்!


மொத்தத்தில்  ”தோழர் சோழன்” அவசியம் படிக்க வேண்டிய நாவல்! கரும்புரவியில் சோழன் ராஜபாட்டையில் வாயுவேகம், மனோவேகத்தில் பறக்கின்றான்!

- அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்

1 comment:

  1. நூலைப்போலவே துணிவுமிக்க விமர்சனம்.பாராட்டுகள்

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))