பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 30, 2019

சிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்!




ஒரு சினிமா பார்க்க போனது குத்தமாய்யா என நினைக்கும் அளவு ஆனது சிவகார்த்திகேயனின் “ஹீரோ” பட அனுபவம். அதுவும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க நினைத்தது தான் என் மாகுற்றம். காலையில் தியேட்டரில் நுழையும் போதே அத்தனை கூட்டம். கியூவில் நின்று டிக்கெட் எடுக்கவும் வெட்கம். “சபரிமலைக்கு மாலை போட்டவர்களுக்கு ஆச்சாரமான தனி கியூ”வெல்லாம் கொடுக்காத தியேட்டரின் அராஜகம்... அதை விடுங்கள். தனிப்பதிவாக போடும் அளவு பக்தாள்ஸ்க்கு கொடுமை நடக்கின்றது இந்த பெரியார் பூமியில்!

யாராவது சிரித்த மூஞ்சியான் வருவான், டிக்கெட் எடுத்து தருவான் அல்லது தியேட்டர் ஓனரோ, அவ்வளவு ஏன் சிவகார்த்திகேயனோ கூட வந்து “அடடே அபிஅப்பாவா இது? நீங்கல்லாம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா தியேட்டரை பசு மாதிரி கயித்தை கட்டி உங்க வீட்டுக்கு ஓட்டி வந்து படத்தை போட்டு காமிக்க மாட்டேனா? சரி சரி உள்ளே வாங்க” என அழைத்துப்போவார்கள் என்றெல்லாம் அதீத கற்பனை செய்து கொண்டே அங்கிருந்த ஒரு பூச்செடி நிழலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தான் இந்த பதிவின் “ஹீரோ” வந்தான். கவனித்து படிக்கவும். படத்தின் ஹீரோ அல்ல! பதிவின் ஹீரோ!

பார்க்க ரொம்ப சுமாராக செம்பட்டை தலையுடன், கசங்கிய பேண்ட், அதற்கு சம்பந்தமில்லா ஒரு முழுக்கை சட்டை அதில் ஒரு கை மட்டும் மடித்து விட்டு வாயில் பான்பராக் குதப்பலோடு அருகே வந்தான். “சார்... நிங்க தானே தொல்காப்பியன்?”

ரொம்ப அசிரத்தையாக “ஆமாம்” என்றேன்!

“சித்தப்பா உங்களை எனக்கு தெரியும். என்னை தான் உங்களுக்கு தெரியாது” என்றான்.

எனக்கு குழப்பம். இந்த மாதிரி எனக்கு யாரையும் தெரியாதே என நினைத்துக் கொண்டு... “நீங்க?” என எழுத்தேன். சித்தப்பா என்று உரிமையாக வேற சொல்றான்!

“சித்தப்பா, சுத்தரமூர்த்தி ஃப்ரண்டு நான்”

“எந்த சுந்தரமூர்த்தி?” என்றேன்.

“கொரநாடு... ஆட்டோ கூட ஓட்டுவானே. அதான் அடிக்கடி ஜெயிலுக்கு எல்லாம் போவானே அந்த சுந்தரமூர்த்தி தான்”

எனக்கு ஞாபகம் வந்து விட்டது. பதிமூன்று ஆண்டுகள் முன்பாக ஒரு மண்டலத்துக்கு நான் ஒரு நாய் வளர்த்தேன்.  என்னை ஆறுமாதத்துக்கு ஒரு தபா என நாய் கடித்து வைப்பதை ஏற்கனவே பக்கம் பக்கமாக நான் எழுதி தொலைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அந்த நாய்கடி சாபத்தை போக்க ஒருத்தன் குடுத்த ஐடியா அது. “டேய் மச்சி, நீயே ஏன் ஒரு நாய் வளர்க்க கூடாது? நீ ஒரு நாய்க்கு ஓனரா ஆகிட்டா மத்த நாயெல்லாம் “ஒரு நாயோனரை நாம கடிக்கக்கூடாது” என அதுங்க சங்கத்திலே முடிவெடுத்து உனக்கு போட்ட “ரெட்கார்டை” வாபஸ் வாங்கிடலாம்ல. அதனால நீ இன்ன்னிக்கே ஒரு நாய் வாங்குற. நாயோனர் ஆகுற” என அருள்வாக்கு கொடுத்து விட்டு மறைந்து விட்டான். நானும் நாய்படாத பாடு பட்டு ஒரு கருப்பு கலர் பொமரேனியன் 1000 ரூபாய் கொடுத்து  வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தேன். வந்ததுமே சண்டை வீட்டிலே.

“நம்ம வீட்டிலே இதல்லாம் பழக்கமில்லை. தவிர அதை என்னால மெயிண்டெய்ன் பண்ணல்லாம் முடியாது. வேண்டுமானா உங்களுக்கு சோறு வைக்கும் போது அதுக்கும் ஒரு தட்டு வைக்கிறேன். ஆனா அது கக்கா போவதை எல்லாம் என்னால சுத்தம் பண்ண முடியாது. எங்கப்பா என்னை ராணி மாதிரி வளர்த்தாங்க” என பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் என் சகதர்மினி. ராணியே நாய் வளர்க்கும் போது ராணி மாதிரி வளர்க்கப்பட்டவங்க நாய் ஆய் போனா சகிச்சுக்க மாட்டாங்களா என நினைத்துக் கொண்டு நாய் மெய்ண்டெய்னர் ஒருத்தனை தேடி மீண்டும் நாய் போல அலைந்த போது தான் இந்த சுத்தரமூர்த்தி ஆபத்பாந்தவனாக வந்தான். தூரத்து உறவு தான். படிக்க போகலையாம். தினமும் ரெண்டு வேளை வந்து நாயை கக்கா அழைத்துப்போய் வந்து குளிக்க வைத்து விட்டு போகனும் என்னும் ஒப்பந்த அடிப்படையில் வந்தவன். சுத்தி வளைத்து நான் அவனுக்கு சித்தப்பா முறை என்பதை என் அம்மா அரைமணி நேரம் விளக்கியதால் அவன் அன்று முதல் சித்தப்பா என அழைக்க தொடங்கினான்.

ஒரு நாள் அவன் ட்யூட்டியில் இல்லாத நேரம் என் நாய்க்கு அவசரம்... கக்கா போய்விட்டது. என் வீட்டம்மணி வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து “இனி இந்த வீட்டில் நாய் இருக்கனும் இல்லாட்டி நீங்க இருக்கனும். நீங்களே முடிவெடுத்துக்குங்க” என கறாராக சொல்லிவிட வீட்டுக்கு ஒரு நாய் போதுமென்கிற மனோநிலையில் 48 நாள் நாயோனராக இருந்த நான் அதை விற்க முடிவெடுத்து விட்டேன். நாயின் ஆரம்பவிலை.... நமக்கு லாபம் எதுவும் வேண்டாம் என முடிவெடுத்து அதே 1000 என நிர்ணயித்து விலை பேசி, அதை யாரும் வாங்க முன்வராததால் அதை 800 ஆக குறைத்து பின்னர் நான் தான் விலையை ”குரைத்து குரைத்து” 100 ரூபாய்க்கு ”இங்கே அழகிய பமரேனியன் கிடைக்கும்” என என் கழுத்தில் போர்டு மாட்டிக்காத குறை தான். அப்பவும் யாரும் முன்வராத காரணத்தால் “இங்கே கருப்பு பமரேனியன் குட்டியும் கூடவே அசோசரீஸ் (கட்டும் சங்கிலி, சாப்பிடும் தட்டு) இலவசம் என சொல்லியும் .... பின்னர் நாயும், அசோசரீஸ் மற்றும் 200 ரூவாய் தரப்படும் என்னும் நிலைக்கு நான் வந்தேன். போணியாகவில்லை. நாயும் நானும் அலையாத தெரு இல்லை. “சார்... நாய் வாங்கலையோ நாய்” என்று கூவாத குறை தான். சில உறவினர்கள் என்னை பார்த்ததும் கதவை மூடும் நிலைக்கு வந்து விட்டார்கள் என்பதை உணர்ந்தேன். அப்போது தான் சுந்தரமூர்த்தி மீண்டும்  வந்தான். நானோ லீவ் முடிந்து துபாய் திரும்பும் நாளும் வந்தது. குடும்பத்துடன் சினிமா, கோவில் என அலைய வேண்டிய நான் நாயோடு அலைந்தேன்.

“சித்தப்பா, சூப்பர் பார்ட்டி கொண்டு வந்திருக்கேன். நீங்க படும் கஷ்டத்தை சொன்னேன். அவனுக்கு அழுகையே வந்துடுச்சு. நாயையும் கொடுத்து மேலே 1000 ரூபாயும் கொடுத்தா அவன் போனா போவுதுன்ன்னு அதை வாங்கிப்பதாக சொல்றான்” என்றான். எல்லாம் என் நேரம். ஒரு வழியாக டீலை முடித்து விட்டு துபாய்க்கு போய் விட்டேன். பின்னர்  சின்னவனாக இருந்த சுந்தரமூர்த்தி வளர்ந்து சாராய வியாபாரம், அடிதடி, ஜெயிலுக்கு போதல் என அபரிமிதமான வளர்ச்சியாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.

இப்போ வாங்க விஷயத்துக்கு!

“ஓ...ஞாபகம் வருதுப்பா. சுந்தரமூர்த்தி ஃப்ரண்டா நீனு? என்ன பண்ணிகிட்டு இருக்கே. அவனை எப்படி தெரியும்?”

“சித்தப்பா, நான் திருடரா இருக்கேன். அவனை நம்ம மாயவரம் சப்ஜெயில்ல தான் வச்சி பார்த்தேன். அதிலிருந்து நல்ல பழக்கம். உங்களைப்பத்தி சொல்லியிருக்கான். அதான் பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டேன். உங்க வீடு கூட எனக்கு தெரியும் ” ....(திருடர்ர்ர்ர்ர் மரியாதையா சொல்லிக்கிறானாமாம்... தொழில் பக்தி?!)

எனக்கு பகீரென்றது.  “என்னது திருடரா? என்னப்பா சொல்ற. நீ எந்த ஏரியா?” கொஞ்சம் நகர்ந்து கொண்டே கேட்டேன்.

”எல்லா ஏரியாவும் நம்ம ஏரியா தான். எங்க கிடைக்குதோ அங்க திருடுவேன்” என்றான்.

“அட அதை கேட்கலை. எந்த ஏரியா பையன் நீனு?”

“எல்லாம் என் ஊர் தான்னு வள்ளுவரே சொல்லியிருக்காருல்ல”

“எந்த வள்ளுவர்? சமீபத்திலே பி.ஜே.பி ல சேர்ந்தாரே அவரா?’

“பி.ஜே.பி ந்னா? என்றான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  ஒரு அயோக்கியனா இருந்து கொண்டு பி.ஜே.பியை தெரியலையே இவனுக்கு. பின்ன எப்படி தாமரை தமிழ்நாட்டில் மலரும் என நினைத்துக் கொண்டேன்.  பின்னர் அவனே

“ஆமா, ஒரு சுருட்டை தலை அக்கா தாமரை மலரும் தாமரை மலரும்னு சொல்லுமே. அதைக்கூட கட்சில இருந்து நீக்கிட்டாங்களே அந்த கட்சியா?” என்றான்.

“டேய் அதை நீக்கலை. அதை பாட்டில்ல அடைச்சி 5 வருஷத்துக்கு ஆந்திராவிலே ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்காங்க. 5 வருஷம் ஆனதும் திறந்து விட்ட பின்ன நீ இப்படி பாஜகவை தெரியாதுன்னு சொன்னது தெரிஞ்சா உன் காதை கடிச்சு வச்சிடும். ஆமா வள்ளுவர் எப்ப எல்லாம் என் ஊர் தான்னு சொன்னாரு” எனகேட்டேன்.

“அவரு தான் நிறைய சொல்லியிருக்காரே பக்கம் பக்கமா. இந்த சப்ஜக்டும் சொல்லியிருப்பாருதானே” என்றான்.

தியேட்டரில் கூட்டம் மேலும் மேலும் அதிகமாகிகொண்டே வந்தது. ஒரு ப்ரவுன் கலர் ஷூ போட்ட மப்டி போலீஸ் மீசையை நீவிக்கொண்டே என்னை பார்த்துக்கொண்டே போனார். நான் கொஞ்சம் அவனிடமிருந்து பூச்செடி நிழலில் இருந்து நகர்ந்து வெயிலில் நின்றேன்.

“அட என்ன சித்தப்பா... எதுக்கு என்னை பார்த்து ஒதுங்குறீங்க. ஒரு திருடர் கூட நிக்கிறது அசிங்கமா இருக்குதா? இதுக்கெல்லாம் அசிங்கம்  பார்த்தா முடியுமா? இதோ நீங்க கூடத்தான் காவி வேட்டி கட்டிகிட்டு மீசையும் தாடியுமா அசிங்கமா இருக்கீங்க. நான் வெட்கப்படாம பக்கத்தில் நிக்கலையா?”

ஆஹா.... இவன் நம்மை அசிங்கப்படுத்தாம விட மாட்டான் போலிருக்கு. நமக்கே எப்பவாவது தான் சினிமா பார்க்க மூட் வரும். இப்போ சுத்தமா போச்சுது இவனால. இவன் கூட பேசிகிட்டு இருப்பதை ஏற்கனவே ஒரு போலீஸ்கார் பார்த்துட்டார். சரி இன்னிக்கு சந்திராஷ்டமம் வேலையை ஆரம்பிச்சிடுச்சு என நினைத்துக் கொண்டு வண்டி வச்சிருந்த இடத்துக்கு நகர்ந்தேன்.  வண்டிசாவியை சட்டைப்பையில் இருந்து எடுக்கும் போது டிக்கெட் எடுக்க வைத்திருந்த 200 ரூபாய் நோட்டும் உடன்பிறவா சகோதரி போல கூடவே வந்தது.

“அட என்ன சித்தப்பா... டிக்கெட் வாங்கனுமா? இருங்க... நான் ஒரு நிமிஷத்துல வாங்கி வரேன்” என சொல்லிக்கொண்டே சடக்கென அந்த 200 ரூபாய் நோட்டை பிடுங்கிக்கொண்டு கூட்டத்தில் புகுந்து விட்டான்.  எனக்கு பதக் பதக் ஆனது இதயம். சரி வந்துடுவான் என நினைத்துக் கொண்டேன். கூட்டம் எல்லாம் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போகப்போக நான் நிற்கும் இடம் காலியாகிக்கொண்டே வந்தது. எனக்கு பயம் வந்தது லைட்டா. 200 ரூவா இன்னிக்கு எள்ளு தான் போல என மனசு சொன்னது. ஆளைக்காணும். அவன் பேர் கூட எனக்கு தெரியாதே...

இனி அவன் வரமாட்டான் என்னும் முடிவுக்கு வந்தேன்.சுந்தரமூர்த்திக்கு நெருக்கமான வேறு ஒரு சொந்தக்காரருக்கு போன் செய்து சுந்தரமூர்த்தி நம்பர் வாங்கி சுந்தரமூர்த்திக்கு போன் செய்தேன். யாரோ பெண் குரல் கேட்டது.

“சொல்லுங்க மாமா?”

“என்னது மாமாவா?”

அது என் பெயரை சொல்லி நீங்க தானே பேசுறது என்றது. ஆமாம் என்றேன். “உங்க பெயரை தான் அவங்க போன்ல போட்டு வச்சிருக்காங்கலே... அவங்க பொண்டாட்டி தான் நான் என்றது.

“சரிம்மா... அவன் எங்கே?” என்றேன்.

“அவங்க திருச்சிக்கு போயிருக்காங்க மாமா ஒரு வேலையா. வர இன்னும் 15 நாளாவது ஆகும்”

“சரி, அவன் போன் நம்பர் கொடு”

“இருங்க. அவங்களே உங்ககிட்ட பேச சொல்றேன். உங்க நம்பரை அனுப்பறேன் அவங்களுக்கு” என சொல்லி வைத்து விட்டது.

அந்த மீசைநீவி மீண்டும் என்னை உற்றுப்பார்த்துக் கொண்டு நடையை கட்டினார். நான் அந்த அளவு ஒர்த் இல்லை என போய் அவரிடம் சொல்லலாமா என அபத்தமாக நினைத்துக் கொண்டேன். வீட்டில் என் மனைவி பர்சில் இருந்து 150 ரூபாய் எடுத்தால் கூட வியர்த்து விடும். அவங்க தேடும் முன்னமே “அதுல எதுனா 150 குறைஞ்சா நான் தான் எடுத்தேன்னு நீ தப்பா சந்தேகப்படக்கூடாது” என உளறியே மாட்டிக்குவேன். அத்தனை ஒரு பூஞ்சை நான். எனக்கெல்லாம் மீசை நீவுதல் ரொம்ப அதிகம். இந்த திருடன் கூட எனக்கு பத்து நிமிஷ சகவாசம் தான். அய்யோ புலம்ப வச்சுட்டானே....

போன் ரிங் டோன் ஒலித்தது... “மாட்டிக்கிச்சு...மாட்டிக்கிச்சு... மாட்டிக்கிச்சு” ஹிப்பாப் ஆதி நேரம் காலம் தெரியாமல் ரிங் டோனில்...

“அல்லோ நான் தான் சுந்தரமூர்த்தி பேசுறேன் சித்தப்பா. திருச்சி ஜெயில்ல இருக்கேன்”

அப்பாடா... என் 200 எப்படியும் கிடைச்சிடும்...

“நல்லா இருக்கியாடா? அங்க வசதியெல்லாம் எப்படி? சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குதா?”

அய்யோ... என்னவோ அவன் துபாய்ல இருந்து போன் பேசுவது போல “அங்க ரோடு நல்லா இருக்கா? அரிசி சோறு கிடைக்குதா? மழை பெய்யுதா?”ன்னு குசலம் விசாரிச்சு கிட்டு இருக்கேன். “சரி நீ ஜெயில்ல இருந்து எப்படி போன் பண்ற?” என்றேன்.

“இப்பதான் வீட்டுல இருந்து எனக்கு போன் பண்ணி உங்க நம்பர் கொடுத்து பேச சொன்னுச்சு. இங்க ஒரு நம்பர் இருக்கு. அவசர ஆத்திரத்துக்கு கொடுத்து வச்சிருக்கேன் அதுகிட்ட. சரி விஷயத்தை சொல்லுங்க” என்றான்.

அங்க ரொம்ப பிசி போலிருக்கு அவன். நாலு வரியில் ப்ளாஷ்பேக்கினேன்.

“சரி அவன் பேர் என்ன?’

“தெரியாது”

“பேர் கூட தெரிஞ்சுக்காம 200 ரூவா குடுத்தீங்களே.. நீங்க....”

“இருடா இருடா... கெட்ட வார்த்தை எல்லாம் பேசக்கூடாது. அசிங்கமா இருக்குல்ல”

“சரி அங்க அடையாளம் சொல்லுங்க”

நான் என்ன ஜெயில் வார்டனா? அங்க அடையாளம் பார்த்து வைக்க. அவனுங்க தொழில் ரீதியாவே என்கிட்ட பேசினா நான் என்ன செய்யட்டும்? ஆங்... அந்த முழுக்கை சட்டையில் ஒரு கை மடிச்சு விட்டிருந்தான்னு சொன்னேன்ல... அதிலே முழங்கைக்கு கீழே ஒரு பெரிய வெட்டு தழும்பு. அதை சொன்னேன்.... உடனே சுதாரித்துக் கொண்டான்.

 “வேற எதாவது? வலது தொடைக்கு மேலே இடுப்புக்கு கீழே மச்சம் இருந்துச்சா?”

“டேய் அந்த அளவுக்கு எல்லாம் அவன் தூக்கி காமிக்கலை. அவன் சுன்னத் பண்ணியிருப்பானா இல்லியான்னு எல்லாம் எனக்கு எப்படி தெரியும்?”

‘அட அவன் பாவாடை சித்தப்பா” என்றான்.

“கிருஸ்டியனா?” என்றேன்..

“இல்லை... இந்து தான். அவன் பேரு பாவாடைசாமி. நல்ல பயலாச்சே... ஆனா சரியான திருட்டுப்பய. அவன் கிட்ட போய் யாராவது பணம் குடுப்பாங்கலா? சரி வீட்டுக்கு போங்க. நான் 15 நாளில் வந்துடுவேன். வந்து ரெக்கவர் பண்ணிடலாம். ஆனா அதுக்குள்ள அவன் உள்ள வராம இருக்கனும். எதுக்கும் சாமிய வேண்டிகிட்டு போங்க வீட்டுக்கு” என்றான்.

“என்னடா திருட்டுப்பயல் கிட்டே போனது எப்படி திரும்பி வரும்?” என்றேன்.

“அட சும்மா இருங்க. திருடன்னா எப்போதுமா திருடிகிட்டே இருப்பான். அவனுக்கும் ஆஃப் ட்யூட்டி டைம்னு இருக்கும்ல. அவன் திருடன் தான். ஆனா ரொம்ப  நல்லவன்” 

எனக்கு குழப்பம். ஒரு திருடன் எப்படி நல்லவனா இருக்க முடியும்? 

வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

வீட்டம்மணி “ஏங்க...தியேட்டருக்கு போய் ஒருத்தன் கிட்டே காசு கொடுத்து டிக்கெட் வாங்க சொன்னா ஒரு இடத்திலே நிக்க மாட்டீங்கலா? ஒரு பையன் வந்து ஒரு டிக்கெட்டும் மீதி 50 ரூவாயும் கொடுத்துட்டு போனான். அவன் நிக்க சொன்ன இடத்திலே நிக்க மாட்டீங்கலா?” என்றார்.

அப்பாடா.... கும்பிட்ட தெய்வம் நம்ம காசை காப்பாதிடுச்சு...

“சரி... சரி அவனை உள்ளே விடலையே?”

“அதப்படி? அவன் தான் வெயில்ல வந்திருக்கான். உபகாரம் செஞ்சவனுக்கு ஒரு வாய் மோர் குடுக்க கூடாதா. அவனை உட்கார சொல்லி மோர் குடுத்தேன். டிக்கெட்டும் மீதி காசும் குடுத்துட்டு கால்ல வென்னீர் ஊத்தினது போல கெளம்பிட்டான்”

“சரி டிக்கெட்டை குடு” என சொல்லி வாங்கிக்கொண்டு தியேட்டர் வந்து விட்டேன்.

படம் பார்த்து முடித்தேன். படம் எனக்கு பிடித்து இருந்தது. (அப்பாடா சினிமா விமர்சனம் செஞ்சாச்சு)

படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்த திருப்தியில் வீடு வந்து சேர்ந்த போது என் மனைவி ரொம்ப பிசியாக இருந்தாங்க.

“பசிக்குது. சாப்பாடு எடுத்து வை” என்றேன்.

“இருங்க. டேபிள் மேலே டிவி பக்கத்தில் தான் என் வாட்ச் வச்சிருந்தேன். காணும். கொஞ்சம் தேடிப்பாருங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”

எனக்கு பகீர் என ஆனது. வீட்டு மாடிக்கு ஓடி சுந்தரமூர்த்தியிடம் இருந்து வந்த நம்பருக்கு கால் செய்தேன். யாரோ எடுத்தார்கள். “சுந்தரமூர்த்தி கிட்டே பேசனும்” என்றேன். “உங்க பேர் சொல்லுங்க” என்றார். சொன்னேன். சுந்தரமூர்த்தி லைனுக்கு வந்தான்.

“டேய் வீட்டுக்கு வந்து அவன் டிக்கெட் குடுத்துட்டு வாட்சை திருடிகிட்டு போயிட்டாண்டா?” என்றேன். உடனே அவன் ..

“அவன் தான் திருட்டுப்பயல் என சொன்னேனே?” என்றான்.

“அவன் நல்லவன்னும் சொன்னியே?”

“ஒரு திருடன் எப்படி நல்லவனா இருக்க முடியும் சித்தப்பா? நீங்க என்ன லூசா?” 

கீழே வந்தேன். என் மனைவியிடம்.....

“சரி... இன்னிக்கு எத்தனை மணி வரைக்கும் எனக்கு சந்திராஷ்டமம் இருக்கு?”

“நாளை வரை இருக்கு உங்களுக்கு. நான் வாட்சை தானே தேட சொன்னேன்.  அதுக்குள்ள எதுக்கு மாடிக்கு ஓடினீங்க? இறங்கி வந்து  சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுறீங்க? நீங்க என்ன லூசா?”

ஆமாம்! நான் லூசு தான்” என்றேன்!

1 comment:

  1. ஹாஹா... நல்ல அனுபவம் தான் போங்க!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))