அப்பாடா! நாலு வருஷமா பலரை பாடா படுத்திய "கோலங்கள்" கிட்ட தட்ட முடியும் தருவாய்க்கு வந்து விட்டது. நான் சில வருஷங்கலாகவே "கோலங்கள்" பார்ப்பதில்லை. எனக்கு தெரிஞ்சு கோலங்கள் பார்க்கும் ஒரே பதிவர் நம்ம கைப்புள்ள தான். ஆனா இங்க மாயவரம் வந்த பின்னே பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். பக்கத்து வீட்டு பாடாவதி பாட்டிக்கு இன்னமும் இலவச தொலைக்காட்சி கொடுக்கப்படாத காரணத்தாலும், கோலங்கள் பார்க்காவிட்டா பாட்டி பரலோகம் போய்விடக்கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாலும் கோலங்கள் நம்ம வீட்டிலே ஓடித்தொலையும்.


அதும் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க அந்த ஆதி பையன் சகட்டு மேனிக்கு பக்கத்தில் கிடைப்பவன் எவனா இருந்தாலும் டுப்பாக்கி எடுத்து நெத்தி பொட்டில் வைத்து தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரி நாபிக்கமலத்தில் இருந்து கத்துறான். அது என்ன கூத்து நெத்தி பொட்டில் வைத்து சுடும் கெட்ட பழக்கம். நெஞ்சிலே சுட்டா கதைக்கு ஆகாதா. வேற எங்கயும் சுட்டா செத்து தொலைய மாட்டாங்கலா? அதுவும் என்னை போன்ற ஆட்களுக்கு துப்பாக்கின்னு பேப்பர்ல எழுதி எச்சில் தொட்டு மேலே ஒட்டினா கூட யதேட்ஷம்.
இந்த கூத்திலே கோலங்கள் கிளைமாக்ஸ் எழுதி அனுப்பும் போட்டி "அவள் விகடன்"ல நடக்குதாம். அபியும் அபிஅம்மாவும் ஆளுக்கு ஒரு பக்கமா இது பத்தி சிந்திச்சுகிட்டு இருப்பதோட இல்லாம என்னையும் அபிப்ராயம் கேட்க நான் "தொல்காப்பியனுக்கும் தீபாவெங்கட்க்கும் கல்யாணம் இது தான் கிளைமாக்ஸ்"ன்னு பொதுவா தான் சொன்னேன்.இப்படி இரண்டு பக்கமும் அடி விழும்னு நினைக்கவில்லை. மக்கா நான் சொன்ன கிளைமாக்ஸ் பத்தி உங்க அபிப்ராயம் என்னன்னு சொல்லிடுங்க.
நட்ராஜ் அளும்புக்கு அளவே இல்லாம போச்சு. தன் தீவாளி டுப்பாக்கியை எடுத்து வந்து ஒரு பேப்பரை நீட்டி என் நெத்தி பொட்டில் வைத்து "கையேத்து போது கையேத்து போது"ன்னு சொன்ன போது பெருமையாக இருந்தது. என்னையும் மதித்து துப்பாக்கி காட்டி கையெழுத்து கேட்க கூட ஆள் இருக்குதேன்னு. "தம்பி நான் அத்தனைக்கு ஒர்த் இல்லை. வேணுமின்னா அம்மா நெத்தில துப்பாக்கிய வைடா, நான் வெளியில் இருந்தென்ன உள்ளுகுள்ள இருந்தே என் ஆதரவை தர்ரேன். ஆனா டெக்கான் கிரானிக்கல்ல வேண்டாம், கொஞ்சம் இரு செக் புக் எடுத்து வாரேன் அதிலே வாங்கினா எனக்கும் பிரயோசனமா இருக்கும் என சமாதான படுத்தினேன்.
தம்பி இப்படி கையெழுத்துக்கு மிரட்டின போது தான் அபிக்கு பிராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்து வாங்க நியாபகம் வந்தது. நேரே எடுத்து வந்து என்னை தாண்டி அவ அவங்க அம்மா கிட்ட கையெழுத்து வாங்க போகும் போது எனக்கு பொசுக்குன்னு போச்சு. பின்னே கெஞ்சி கூத்தாடி நான் கையெழுத்து போட்டேன். என்ன கொடுமை ஆண்டவா இதல்லாம். நானெல்லாம் கெஞ்சி கூத்தாடி என் பிராக்ரஸ் ரிப்போர்ட்க்கு கையெழுத்து வாங்கியது போக இப்போ இப்படி ஆச்சு. இதிலே கூத்து என்னான்னா பேரண்ட்ஸ்க்கு டீச்சர் அதிலே நோட் எழுதி விட்டிருக்காங்க. அடுத்த முறை இன்னும் முயற்சி செஞ்சு முதல் ரேங் வாங்கனும்னு. நானும் அதுக்கு பக்கத்திலே எழுதி வச்சேன் "அடுத்த முறை அவ முதல் ரேங் வாங்கும் அளவு சொல்லி தரனும்ன்னு.
அந்த எபிசோட் பார்த்ததில் இருந்து நட்ராஜ் வீட்டில் ஒரே துப்பாக்கி பிரயோகம் தான். துப்பாக்கியை நீட்டி "ஹேண்ட்ஸ் அப்"ன்னு சொன்னா இரண்டு கையையும் மேலே தூக்கிடனும், அது தான் அந்த விளையாட்டின் முக்கியமான ரூல்ஸ்ன்னு ஐநா சபை அங்கீகரிச்சு இருக்குன்னு நட்ராஜ் திடகாத்திரமாய் நம்புகிறான். இப்படித்தான் அவனை பார்த்து நான் சொல்ல கூடாத வார்த்தை சொல்லிவிட்டேன். பயங்கர கோவத்தோட என்னை கடிக்க வந்த போது நான் இரண்டு கையால் தடுத்து கொண்டே இருக்க அவன் ஓடிப்போய் துப்பாக்கி எடுத்து வந்து ஹேண்ட்ஸ் அப் சொல்லி நான் கை தூக்கின பின்னே நிதானமாக கடித்து வைத்தான். இதுக்கு நெஜ துப்பாக்கியால் சுட்டிருக்கலாம். அப்படி என்ன சொல்ல கூடாத வார்த்தையா? "ஸ்கூலுக்கு போறியா"ன்னு கேட்டு விட்டேன். அதான் அத்தனை கோவம் வந்துடுச்சு. இருக்காதே பின்னே. "எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"ன்னு வள்ளுவர் சொன்னது பொய்க்குமா என்ன?
திடீர்ன்னு என் சின்ன அக்கா நேத்து போன் செஞ்சு "என்னடா உன் பையன் உன்னை மரியாதை இல்லாமல் பேசுறானாமே"ன்னு கேட்டாங்க. தவறு! நட்ராஜின் காம்பிளான் வளர்ச்சியை காண சகிக்காத பூஸ்ட் கம்பனி பரப்பும் வதந்தி இது. அய்யர் ஆத்து குழந்தை 'அபிவாதே' சொல்வது போல பவ்யமாக நின்று கொண்டு தான் நேத்து கூட என்னை திட்டினான் என்பதை நானும் மரியாதையாக அக்காவிடம் சொன்னேன்.
கடந்த நவம்பர் 13 ம் தேதி சந்தோஷமாக தூங்கி கொண்டிருக்க "என்னங்க சீக்கிரம் எழுந்து ரெடியாகுங்க, இன்னிக்கு கல்யாணம்"ன்னு சொல்ல எனக்கு பேரதிர்ச்சி. இல்லை ஒரு தடவை ஆனதே போதும் என சொல்லி புரண்டு படுத்து கொண்ட போது "அய்யோ சாமீ இது வேற ஆசை இருக்கா கல்யாணம் உங்களுக்கு இல்லை மாயவரத்தானுக்கு"ன்னு சொன்னாங்க தங்கமணி. "அப்படியா நேரா சுவரொட்டிக்கு போ, அங்க வாழ்த்து போட்டிருப்பாங்க. அங்க துளசி டீச்சர் "வாழ்த்து(க்)கள்"ன்னு போட்டிருப்பாங்க. அதிலே கோபி "ரிப்பீட்டேய்"ன்னு போட்டிருப்பான். அதை காபி பேஸ்ட் செஞ்சு "டபுள் ரிப்பீட்டேய்"ன்னு போடு. நான் தூங்கி எழுந்து வந்து போன் செஞ்சுடறன்"ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "அய்யோ இன்னிக்கு என்ன நாள் ஐப்பசி 27, நவம்பர் 13 , மாயூரநாதருக்கு திருக்கல்யாணம், இது மூணுமே 43 வருஷத்துக்கு பின்னே ஒரே நாள்ல வந்திருக்கு"ன்னு சொன்ன போது கூட எனக்கு அந்த சரித்திர பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நாளின் மகிமை புரியவில்லை. பின்னே எழுந்து வந்து மெயில் பார்த்த போது ஷைலஜா அக்காவின் வாழ்த்து பார்த்த போது தான் "இன்று புதிதாய் பிறந்த உணர்வு" வந்தது.எனக்கு இப்போதைக்கு தேவையான "அன்னை"யின் அருளுரை அனுப்பியிருந்தாங்க. இந்த வருஷம் புதிதாக தேர்முட்டிலிருக்கும் வல்லப கணபதி கோவிலில் இருந்து மாயூரநாதர் திருகல்யாணத்துக்கு "மாப்பிள்ளை அழைப்பும்" வைத்திருந்தனர். கொடுத்து வைத்த மாப்பி!






அடுத்த நாள் தேர். அமோகமா இருந்தது புது தேர். புது வட கயிறு. அமர்களமாக இருந்தது. தேர்காசு கிடைக்குமா என நினைத்து போன எனக்கு ஏமாற்றம். நான் தான் கொடுக்கனுமாம். நட்ராஜ் தான் கலக்ஷன் குவித்து கொண்டிருந்தான். சட்டையை கழட்டி "ரைட் ரைட் போலாம்"என கங்குலி மாதிரி சுழட்டி சுழட்டி தேர் ஓட்டினான். அவன் 4 வீதியும் தேர் இழுத்தான் என சொல்வதை விட தேர் வடத்தை தொங்கி கொண்டு வந்தான் என்பதே சரி.

அடுத்த நாள் மயிலாடுதுறையின் மகத்தான கடைமுழுக்கு." போன வருஷத்தை விட இந்த வருஷம் கூட்டம் அதிகம்" "நாங்க அந்த காலத்திலே கட்டு சோறு கட்டிகிட்டு வண்டி கட்டிகிட்டு வருவோம்" போன்ற டெம்பிளேட் வசனங்கள் "மஞ்ச சட்டை போட்ட ஒரு பிக்பாக்கெட் லாகடத்து உள்ளே வந்துகிட்டு இருக்கான், முந்தானையை இழுத்து போத்திகங்கம்மா" என ஸ்பீக்கரில் அலறும் போலீஸ்காரர், அதை தொடர்ந்து மஞ்ச சட்டை போட்ட அத்தனை பேரும் கழட்டி கக்கத்தில் வைத்து கொள்ளுதல், முழங்கால் வரை சேறு அப்பிய சோர்ந்து போய் கைகோர்த்து நிற்கும் ஸ்கவுட் பசங்க, இதுக்கு மத்தியில் சீமாச்சு அண்ணா போட்ட 2000 ஃபுல் மீல்ஸ்க்குகூட்டம், (தவிர காலல குளிர் நேரத்தில் 2000 கப் சூடான பில்ட்டர் காபியும் கூட) "இந்த மாயூரநாதர் எப்பவும் இப்படித்தான் மாமி ஆடிக்கு வான்னு சொன்னா அமாவாசைக்கு தான் வருவார், அய்யாரப்பர் பாருங்கோ பஞ்சகஜம் கட்டினோமா, மாமிய கூட்டிண்டோமான்னு விருட்ன்னு வந்துட்டார்"ன்னு அலுத்துக்கும் மகாதான தெரு மாமியும், உங்க அவயாம்பாவுக்கு குஞ்சம் வச்ச ஜடை போடவே சுந்தரம் குருக்களுக்கு சாயரட்சை ஆகிடும் மாமி"ன்னு முகவாய் கட்டையில் இடிச்சுக்கும் ரெட்டை தெரு மாமியும் காவிரியில் இடுப்பளவு தண்ணீரில் தீர்த்தவாரிக்காக காத்து கொண்டிருக்க பழைய மூங்கில் பாலத்தில்(இப்போது கான்கிரீட்பாலம்) இருந்து தொபக்கடீர்ன்னு குதித்து கொண்டிருக்கும் வானரங்கள் ஒரு பக்கமுமாக அல்லாகலப்பட்ட்து இந்த வருஷ கடை முழுக்கு.
இப்படியாக ஐப்பசி மாதம் நல்ல படியாக முடிந்தது மாயவரத்தில்.