பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 15, 2008

வீரசேகர விலாஸும், மாமாவும், சீட்டு கச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்!!! பாகம் # 1

இங்கே நான் சொல்ல போவது ஒன்றுக்கொன்று தொடர்புடைய நான்கு விஷயங்கள் பற்றிய ஒரு கோர்வை நிகழ்வை. எங்கள் ஊரில் அப்படி ஒரு சத்திரம் இருப்பது அனேகமாக இந்த தலைமுறைக்கு தெரிய வாய்பில்லை. அந்த "வீரசேகர விலாஸ்" முக்கியமான வடக்கு வீதி, சின்ன கடை தெருவில் இருந்தும் அதன் வெளித்தோற்ற தன்னடக்கத்தின் காரணமாக அந்த வழியே போய் வருபவர்களை அத்தனை கவர்ந்தது இல்லை.

சாலையில் இருந்து திடீரன உயர்ந்து தோன்றும் அந்த 12கருங்கல் படிகள் வழியே மேலே ஏறினால் மேல் படியில் இருந்து பேருந்து ஓட்டுனரோடு ஒரு சின்ன கை குலுக்கல் நிகழ்த்திவிடலாம். அந்த சத்திரத்தின் மேல் படியில் ஏறி உள்ளே நுழைந்ததுமே வலதும் இடதுமாக மூன்று அடி ஆழ முற்றங்கள் இருக்கும். அதிலே இரு பக்கமும் தண்ணீர் குழாய்கள். அந்த முற்றங்களுக்கு மேல் கூறை ஏதும் கிடையாது. அந்த நடை பாதையை தாண்டினால் அந்த முற்றங்களுக்கு நேர் எதிர் பதமாக வலது இடது பக்கமாக உயர்ந்த திண்ணைகள். ஒவ்வொறு திண்ணையிலும் குறைந்தது ஐம்பது ஐம்பது பேர் படுத்து உறங்கலாம். அந்த திண்ணையை தாங்கும் 18 ரங்கூன் மத்தள தூண்களின் மேல் அந்த தாங்கு கட்டையில் கூட மர வேலைப்பாடு தொட்டு பார்க்க தூண்டும். திண்ணையில் சிமெண்ட் வண்ணம் வலது பக்கம் சிகப்பு, இடது பக்கம் நீலம் என சிமெண்ட் பாலில் மெழுகி குளுமையின் உச்சமாக இருக்கும். அதன் சுவர் அத்தனை வழவழப்பாக இருப்பதற்கு இதோ நாளை காலை நடை பெற போகும் கல்யாணத்திலே எத்தனை பேர் எத்தனை காரணங்கள் சொல்ல போகிறார்கள் என பார்ப்போம். தலை வைத்து படுக்க தலையனை மாதிரி கட்ட பட்டிருக்கும். இப்போது இந்த திண்ணை வரை போதும். ஒரேயடியாக வீர சேகர விலாஸ் பற்றி எழுதினால் இந்த தலைப்பு நம்மை பார்த்து சிரிக்கும்.

அந்த "வீரசேகர விலாஸ்" என்பது நாட்டுகோட்டை நகரத்தார் வீடு தான். ஆனால் அது கல்யாண சத்திரமாகி போனது தனி கதை. காரைக்குடி நகரத்தார், வைத்தீஸ்வரன் கோவில் தரிசனத்துக்கு போகும் போதும், தங்கள் மூதாதையரான பட்டினத்தார் வாழ்ந்த பூம்புகார் என்கிற காவிரி பூம் பட்டினத்துக்கும் போகிற வழியில் இளைப்பாற வேண்டி மயிலாடுதுறையில் கட்ட பட்ட வீடாகத்தான் இருக்க வேண்டும் அந்த சத்திரம்.

எங்கள் வீட்டு திருமணம் எல்லாமே அந்த சத்திரத்தில் தான் நடக்கும். கல்யாண பத்திரிக்கை தவிர வேறு எங்கும் "வீரசேகர விலாஸ்" என்னும் பெயரை நாங்கள் பயன் படுத்தியது கிடையாது. எங்களை பொறுத்த வரை அது செட்டியார் சத்திரம் தான். ஆடி, புரட்டாசி, மார்கழி தவிர எல்லா மாதத்திலும் எங்கள் வீட்டு திருமணம் அங்கே கண்டிப்பாக உண்டு. நாளை நடக்க போவது ஒரு அண்ணன் கல்யாணம்.

பெண் வீடு திருப்புகலூர் என்னும் சைவ ஸ்தலமாம். அந்த மணமகள் எங்களுக்கு மிகவும் நெருக்கமான் சொந்தம் தான் என இன்று மாலை வள்ளியம்மை அத்தை விலாவாரியாக "அரை மணி நேரம்' என் அம்மா, பெரியம்மா, சித்தி கூட்டத்துக்கு மத்தியில் உட்காந்து விளக்க போகிறார்கள். இருந்தும் அவர்களுக்கு அது புரிய போவதில்லை என்பது வேறு விஷயம்.

இங்கே வள்ளியம்மை அத்தையை பற்றி சொல்ல வேண்டியது கட்டாயமாக போய் விட்டது. அத்தை ரொம்ப ராசி என்று அத்தையே கூறி கொள்வதாலும் எங்கள் பெரிய தாத்தாவையே நேருக்கு நேர் நின்று "அண்ணா சாப்பிட வாங்க" என கேட்ட சரித்திரம்(?) அவர்களுக்கு இருந்ததாலும் வேறு வழியே இல்லாமல் எல்லோருமே மரியாதை கொடுப்பார்கள். அத்தை என்றால் எங்களுக்கு அத்தை இல்லை, எங்கள் அப்பா, பெரியப்பா, சித்தப்பாவுக்கு எல்லாம் தான் அத்தை. ஆனால் நாங்களும் அத்தை என்றே கூப்பிட்டு பழகி விட்டது.அதனால் கிட்ட தட்ட ஊருக்கே அத்தை. அத்தைக்கு அடையாளம் என பார்த்தால் சிகப்பு கல் 7 கல் வைத்த தோடு, வைர மூக்குத்தி, வெற்றிலை போட்டு சிவந்த உதடுகள், ராசிபுரம் பம்பர் பட்டு புடவை, காலில் முத்து வைத்த மெட்டி, ஆனால் செறுப்பு அணிவதில்லை. தலைமுடி தும்பை பூவாக அள்ளி செறுகப்பட்டு இருக்கும்.கோல்டு பிரேம் போட்ட கண்ணாடி, கிட்டே போனால் வெற்றிலை வாசனையை விட அதன் கூட சேர்த்து போட்ட கிராம்பும், கத்தைகாம்பும் ஒரு வித ரம்மிய வாசானையை கொடுக்கும். கையிலே ஒரு நெளி மோதிரம், சாதாரன வலையல், கழுத்திலே ஒரே ஒரு முறுக்கு சங்கிலி, இத்தனைக்கும் சிகரம் வைத்தது மாதிரி ஒரு சில்வர் வெற்றிலை பெட்டி. அதன் மூடியில் "M. வள்ளியம்மை" என பொறிக்க பட்டிருக்கும். அதன் மூடியை திறந்து பார்த்தால் அது இரண்டாக பிரிக்க பட்டு இருக்கும். அதன் உள்ளே வெள்ளியால் ஆன ஒரு சுண்னாம்பு கரண்டா, வெள்ளியால் ஆன பல்குத்தும் குச்சி, வெள்ளி காதுகுடைப்பான், சின்னதாக ஒரு சிக்கு எடுக்கும் ஒரு வெள்ளி குச்சி இருக்கும். அந்த செல்ல பெட்டியை அத்தையின் கையிலிருந்து பிடுங்கிவிட்டால் அத்தையை அடையாலம் காண்பது மிகவும் கடினம். அத்தைக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது காரனமாகத்தான். அத்தைக்கு என்ன தான் வேலை? ஒரு கல்யாணம் நடக்க போவது எனில் அ முதல் ஃ வரை அத்தையின் அதிகாரமே கொடிகட்டி பறக்கும். பெண்ணோ மாப்பிள்ளையோ சத்திரத்தின் உள்ளே நுழையும் முதல் சத்திரத்தை காலி செய்துவிட்டு வரும் போது வேலைக்காரி மடியை தடவி எவர்சிலவர் டம்ளரை வெளியே எடுத்து " என்கிட்ட யாரும் ஏமாத்த முடியாது" அப்படீன்னு சவடால் விட்டு விட்டு சத்திரத்தை காலி செய்யும் வரை அத்தையின் அட்டகாசங்கள் தான். ஆனால் அத்தையின் வெள்ளி சாமன்களிள் ஏதாவது ஒன்று வழக்கம் போல ஒவ்வொறு கல்யாணத்திலேயும் காணாமல் போவது தனி விஷயம்.

சத்திரத்தை பற்றி அறிமுகம் செய்தாகிவிட்டது. நாளை நடக்கும் திருமணம் பற்றியும், அத்தை பற்றியும் சொல்லியாகி விட்டது. மாமாவும் சீட்டு கச்சேரியும் பற்றி இப்போது பார்க்கலாம். இதோ திருவீழிமிழலை கிராமத்தில் இருந்து தென்பாதி மெயின் ரோட்டுக்கு ஆடி அசைந்து வருவது தான் மாமா. அவர் கையிலே பாருங்கள் ஒரு பை, அதிலே வெற்றிலை சமாச்சாரங்கள் அடங்கின ARC ஜுவல்லரியின் ரெக்சின் பேக், அதன் உள்ளே மூலவியாதிக்கான களிம்பு, வெள்ளி பொடிடப்பா, அதை தவிர குழந்தை மாதிரி சுற்றி வைத்திருக்கிறாரே அது நேற்று கும்பகோணத்தில் இருந்து "டவுன் கிளப்பில்" இருந்து வக்கீல் சோமசுந்தரத்திடம் சொல்லி வாங்கி வந்த சீட்டு கட்டு, சிங்கப்பூர் கட்டு. பிளாஸ்டிக் கட்டு. "சுத்து வட்டாரத்திலே ஒருத்தன்கிட்ட கிடயாதுல்ல" என மாமா சொடக்கு போட்டு சொலவது பார்க்க நன்றாக இருக்கும். மாமா ஆற்றை தாண்டி பாலத்தில் வரும் போதே "கோல்டன்" நின்று விடும். மாமாவின் தகவல் பரிமாற்றம் அத்தனை சுத்தம். நேற்று கும்மோணம் போய் வரும் போதே இன்று மதியம் 2 மணி வண்டிக்கு மாயவரம் வரும் விஷயத்தை சொல்லி விடுவார். ஓட்டுனரும் காத்திருப்பார். வந்து பேருந்தில் ஏறி உட்காந்ததுமே ஓட்டுனரிடம் கேட்பார் " ஒன் மொதலாளி ஊர்ல தானே இருக்காரு. சொல்லிடு நான் இன்னிக்கு செட்டியார் சத்திரத்திலே தான் இருப்பேன்ன்னு" இதோ இன்னும் 40 நிமிடத்தில் மாமாவும் வந்து நம் ஜோதியில் ஐக்கியமாக போகிறார்!

November 13, 2008

மீண்டும் "அபிஅப்பா" - புத்தம் புதிய காப்பி!!!



வணக்கம் மக்கா! விட்டேனும் விட்டேன் ஒரு மாத லீவ் தமிழ்மணத்துக்கு! அப்படியே லீவ் எக்ஸ்டன் பண்னி பண்ணி நாள் ஓடி போயிடுச்சு. நடுவே காலை ஆட்டி கொண்டிருப்பதை காட்டி கொள்ள ஒரு பதிவு போட்டேன்.

ஒரு வழியா லீவ் கிடைத்து இந்தியா வந்து டிங்கரிங், புட்டி பார்த்து புது பெயிண்ட் அடிச்சு புத்தம் புதிய காப்பியா ஆகி இதோ இப்போது வெள்ளோட்டம் விட்டு கொண்டிருக்கிறேன். இன்று முதல் புதியதாக பிறந்து இருக்கிறேன் "அபிஅப்பா".

இந்த ஒரு மண்டல விடுப்பில் என்னை காணுமேன்னு சந்தோஷ பட்டவங்க எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கறேன். ‘என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது!”

மற்றபடி இந்த மயிலாடுதுறை காற்று இருக்கே அது எங்களுக்கு உயிர் மாதிரி! ஊர் போய் சேர்ந்த உடனேயே ஒரு வித புத்துணர்சி வந்துடுச்சு மனசுக்கும் உடம்புக்கும். ஊரில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. நகராட்சி காண்டிராக்ட்காரர்களுக்கு உடனடி பணம் பட்டுவாடா செய்ய படுகின்றது. காரணம் எங்கள் நகராட்சி தலைவர் ஏற்கனவே ஒரு கண்டிராக்ட்காரராக இருந்த காரணத்தால் என நினைக்கிறேன். பண பட்டுவாடா விஷயத்தில் அவர் ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு இருந்திருப்பார் போல இருக்கு. அடுத்த தடவையாவது கொசுக்கடியில் கஷ்டப்படும் ஒருவரை தலைவர் ஆக்க வேண்டும்.

பஸ்ஸ்டாண்டு எங்கே அமைப்பது என்கிற பட்டிமன்றம் இன்னும் முடியவில்லை. பெரிய ராஜன் தோட்டம் தன் பழைய பொலிவை இழந்து விட்டது. முன்பெல்லாம் வெற்று கிரவுண்டாக இருந்து இரவில் கஞ்சா அடிக்கும் கனவான்களுக்கும், குடிகார குசும்பன்களுக்கும் பொக்கிஷமாகவும், காலையில் கார் ஓட்ட பழகும் பணக்கார அம்மனிகளுக்கும், திருட்டு தம் அடிக்கும் கத்துகுட்டிகளுக்கும், செட்டிதெருவில் இருந்து வழியும் சாக்கடையில் ஸ்னானம் செய்யவரும் நமீதாக்களுக்கும், ஞானாம்பிகை மகளிர் கல்லூரி மாணவிகளின் பாதுகாவலர்களுக்கும் அப்படி ஒரு வசதியாக இருந்தது. ஆனால் இப்போதோ அதிலே சுத்தியும் காம்ப்பவுண்ட் போட்டு வி.ஐ.பி கேட் போட்டு செக்யூரிட்டி போட்டு பெரிய பெரிய வாயில் நுழையாத பெயர் உள்ள விளையாட்டுகளுக்கான இண்டோர் ஸ்டேடியங்களும், உவ்வே அசிங்கமான அவுட்டோர் ஸ்டேரியங்களும் கேலரிகளும், காலை நேரத்தில் வாக்கிங் போகும் எல்லாவயது ஜோடிகளின் அலப்பரைகளும், சோடியும் பல்புகளும் பார்க்கவே கஷ்டமாக இருக்கின்றன. மணிசங்கர் அய்யர் டவுன் டவுன்.

வழக்கத்துக்கு மாறாக காவிரியில் தண்ணீர் பொங்கி வழிந்து போகின்றது. வழக்கம் போல 300 பொடியன்களை சர்வே செய்ததில் 299 பேருக்கு “அந்த” இடத்தில் மாத்திரம் டவுசர் ஓட்டையாக இருக்கின்றது. மீதி ஒருத்தனுக்கு டவுசரே இல்லை.சர்வேயில் நட்டுவும் உண்டு.

ஒரு அமதியான பெண், ஒரு துடிப்பான பெண், ஒரு கடலை போடும் பையன் ஆகியோர் பஸ்ஸ்டாண்டு கடைவாசலில் நின்று அந்த கடலை பையனுக்கு அந்த துடிப்பான பெண் பதில் சொல்லி கொண்டு இருந்தால் அந்த கடலைக்கும், அமைதிக்கும் இடையே தான் காதல் என்னும் காந்தி காலத்து பார்முலா இன்னும் மாறவே இல்லை.

சுந்தரம் தியேட்டர் இடிக்கப்பட்டு அந்த பக்கம் போகவே மனசு “வருஷம் 16” படத்தை ஞாபகப்”படுத்துகின்றது”. அந்த இடத்தில் சாரதாஸ் வர போகுதாம். கூறைநாட்டில் கே.எஸ் பட்டு செண்ட்டர் வந்துவிட்டது. சாரதாஸ் மட்டும் வரட்டும் சீமாட்டி அவுட்டுடான்னு ஜோசியம் சொல்லி கொண்டு போகிறார்கள் அந்த இடத்தை கடப்பவர்கள்.

தாசில்தார்கள் இன்னமும் பேண்ட்டை இன் செய்யாமல், செறுப்பு போட்டு கொண்டு அதிலும் சிலர் வெற்றிலை போட்டு கொண்டு “இதுக்கு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ் இருக்குப்பா”ன்னு சொல்லி கொண்டுதான் இருக்கின்றனர். முனிசிபாலிட்டியில் நாமம் போட்ட நாராயனன் எல்லோரையும் “ந்தா ஓரமா நில்லு”ன்னு ஒருமையில் சொல்லி குலப்பெருமை காக்கின்றார்.

பி.எஸ்.என்.எல் கஸ்ட்டமர் சர்வீஸ் அருமையாக இருக்கின்றது. “சார் இந்த பேக்கேஜ் எடுத்தா உங்களுக்கு இத்தனை நஷ்ட்டம் வரும். நான் சொல்றதை சொல்லிட்டேன் அதுக்கு மேல உங்க இஷ்ட்டம்”

பஸ்ஸில் இருந்து பொலிச்சுன்னு வெற்றிலை துப்புபவர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை. பேருந்து நிலைய கட்டண கழிப்பிடம் மற்ற எல்லா ஊர்களை காட்டிலும் அருமையோ அருமை.

எல்லா ஹாஸ்பிட்டல்களிளும் கூட்டம் வழிகின்றது. டாக்டர்கள் ஒரு ஹாஸ்பிட்டலில் இருந்து அடுத்த ஹாஸ்பிட்டலுக்கு அடுத்த அடுத்த ஆப்ரேஷன்களுக்கு ஜெட் வேகத்தில் பறக்கின்றனர்.

“அடுத்த கெட் டு கெதர் எங்க வச்சுக்கலாம்” என யூனியன் கிளப்பில் எல்லா ரோட்டரி, ஜேசீஸ், லைன்ஸ் என ஒத்துமையாக ஒரே டயலாக்கை பேசுகின்றனர்.

இது எதுக்குமே சம்மந்தம் இல்லாமல் மாயூரநாதரும், அவயாம்பிகையும் கோவிலுக்கும் லாகடம் காவிரிகரைக்கும் காலை போய் இரவு திரும்பி இந்த ஐப்பசி மாதத்தை சந்தோஷமாக கழிக்கின்றனர். நேற்று திருகல்யானம். நாளை அடுத்தநாள் தேர் திருவிழா. 14ம் தேதி கடை முழுக்கு திருவிழா! மகாதானதெருவில் இரு பக்கமும் கடைவிரித்தாகி விட்டது. நான் கூட ஒரு பலூன் வாங்கினேன். இன்னும் பஞ்சுமிட்டாய் வாங்கவில்லை.

அதல்லாம் போஒகட்டும் டோண்டு சார் பாணியில் சொல்ல போனால் சமீபத்தில் 39 வருஷத்துக்கு முன்பு இதே நாளில் எடுக்கப்பட்ட என் போட்டோ எதேர்சையாக இன்று பழைய குப்பையை கிளறும் போது கிடைத்தது. எப்படி களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி இருக்கேனா?

நாளை முதல் வழ்க்கம் போல கிறுக்க போகிறேன்! முதல் கிறுக்கல் ஒரு சின்ன தொடர் எழுத உத்தேசம். பெயர் “வீரசேகரவிலாசும், மாமாவும்,சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்” பெயர் எப்படி இருக்கு?

நாளை சந்திப்போமா!