பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label முகநூல். Show all posts
Showing posts with label முகநூல். Show all posts

October 16, 2014

முகநூல் என்பது மு.க நூலாகவும், மு.க.ஸ்டாலின் நூலாகவும் ஆனது!

தளபதியின் தமிழ் முகநூல் பக்கம்


அது மார்ச் மாதம் 31ம் தேதி, 2011ம் தேதி... தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்திருந்த நேரம். தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராகவும், நம் பாசமிகு தளபதி அவர்கள் துணை முதல்வராகவும் கொலுவீற்றிருந்து நல்லாட்சி நல்கிய காலம் அது. அன்று தான் நம் துணை முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள் இணையத்தில் முகநூல் பக்கம் முதன் முதலாக நுழைகின்றார். அதற்கு முன்பே டாட்.காம் வழியே இணையத்தில் அவர் கோலேச்சிக்கொண்டிருந்தாலும் Facebook என்னும் சமூகவலைதளமான "முகநூலில்" அப்போது தான் நுழைகின்றார். அதன் பின்னர் ஏப்ரல் 3ம் தேதி 2011 அன்று ஒரு சோதனை பதிவிடுகின்றார். என்னவென்று தெரியுமா?


"ஆதரிப்பீர் உதயசூரியன்"


. இது தான் அந்த ஒற்றை வரி. தன் நாடி நரம்புகளில் திமுக மீதும், அதன் இரு வண்ண கொடி மீதும், அதன் உதயசூரியன் சின்னத்தின் மீதும், அதன் கொள்கைகள் மீதும் அதி தீவிர வெறி கொண்ட ஒருவரால் மட்டுமே இது சாத்தியம். ஆத்திகர்கள்  புதிதாய் ஒரு பேனா வாங்கினால் எழுத ஆரம்பிக்கும் போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பர். சுயநலமிகள் தன் பெயரை எழுதிப்பார்ப்பர். ஆனால் தளபதி அவர்கள் விழிப்பிலும், உறக்கத்திலும் உதயசூரியனை மனதில் சுமப்பவர் என்பதால் முதல் பதிவே "ஆதரிப்பீர் உதயசூரியன்".



இன்னும் சொல்லப்போனால் அப்போது முகநூல் வழி பிரச்சாரம்  செய்தது என்பது தளபதி அவர்களை தவிர்த்து விரல் விட்டு எண்ணும் அளவுக்கே திமுகவின் சார்பாய் இருந்தனர். இன்னும் மிகக்குறிப்பாக சொல்லப்போனால் 2011ல் மே மாதம்  சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்த பின்னர் தான் "இணையதள திமுக" என்னும் முகநூல் குழுவை மெல்வின் பாக்கியநாதன், டான் அசோக் உள்ளிட்ட சிலர் சேர்ந்து ஆரம்பித்தனர். இன்று பலநூறு திமுக முகநூல் குழுக்கள் இருப்பதற்கு முன்னோடியான முதல் குழு "இணையதள திமுக" ஆகும். ஆனால் அதற்கும் முன்பாகவே திமுக சார்பாக முழு நேர முகநூல் பிரச்சார பீரங்கியாக இருந்தது தளபதி அவர்களின் முகநூல் பக்கமே ஆகும். போர் என்றால் முன் வரிசையில் வழிநடத்தி போகும் வீரனே "தளபதி". திமுகவின் பிரச்சார போரில் கூட நவீன அறிவியல் பிரச்சாரத்தை திமுகவில் முதன் முதலில் முன்னின்று வழிகாட்டியது  கழக பொருளாளர் திரு.மு.க.ஸ்டாலின்  என்பதால் தான் "தளபதி" என அன்பாக திமுகவினர்  அவரை அழைக்கின்றனர் என்பதை இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.



அந்த காலகட்டத்தில் சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் பல லட்ச "விருப்ப"ங்களோடு முகநூலில் உலாவந்த காலகட்டம் அது. அப்போதெல்லம் சுப்ரமணியசுவாமி போன்றவர்கள் முகநூல் கணக்கு துவங்கி பல வருடங்கள் ஓடிவிட்ட நிலை. அதே போல கிரிக்கெட் உலகின் கடவுள் எனப்படும் சச்சின் போன்றவர்களும் அதே நிலையில் இருந்தனர். ஆனால் ஒரு பிராந்திய கட்சியின் தலைவர்களில் ஒருவரான துணை முதல்வர் முகநூல் பக்கம் வந்தது அப்போது தான். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் தன் முகநூல் பக்கத்தை துவங்கினார். எத்தனை பேர் தன் முகநூல் பக்கத்தில் விருப்ப சொடுக்கிட்டு வருகின்றனர் என்பது பற்றியெல்லாம் அவர் கவலை கொண்டதாக தெரியவில்லை. அதே போல விருப்ப சொடுக்கு வாங்க வேண்டும் என்பதற்காக சுப்ரமணிய சுவாமி போல ஹேஷ்யங்கள் எழுதுவதும், அவதூறுகள் எழுதுவதும், மற்றவர்களை அவதூறு பேசுவதுமெல்லாம் இல்லை.


தன் கருத்துகள், திமுகவின் கொள்கைகள், திமுகவின் வளர்ச்சிகள், திமுக சந்திக்க வேண்டிய சவால்கள், திமுக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், திமுக தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள், தன் திமுக இளைஞரணி செயல்பட வேண்டிய வழிகள், தன் சுற்றுப்பயணங்கள் இப்படியாக தினம் தினம் தன் இயக்கத்துக்கான போர்வாளாக தன் "முகநூல்"பக்கத்தை நாள் தோறும் மிளிர வைத்தார்.


கடமையை செய் - பலனை எதிர்பாராதே என இவர் தன் பிரச்சாரத்துக்காக மட்டுமே முகநூலை பயன்படுத்தி வருவதால் இன்று முகநூலின் அதிகாரபூர்வ அங்கீகாரமான வெரிபைடு அந்தஸ்தையும் பெற்று விட்டது. ஆமாம் தமிழகத்தின் மட்டுமல்ல இந்திய அரசியல் தலைவர்களில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது தமிழ் முகநூல் பக்கம் இன்றைய நிலையில் (இன்றைய தேதி 16.10.2014 ) 2,90,475 விருப்பங்களுடன் முன்னிலையில் உள்ளது. (இரண்டு லட்சத்தி 90 ஆயிரத்து நானூற்று எழுபத்தி ஐந்து) இந்த கட்டுரை உங்கள் கண்ணில் படும் நேரத்தில் அனேகமாக அது 3 லட்சத்தை தாண்டி போகக்கூடும். அதே போல தளபதி அவர்களின் ஆங்கில முகநூல் பக்கம் 1,15,919 (ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 919) விருப்பங்களுடன் உள்ளது.  அதில் குறிப்பாக 18 முதல் 25 வயது கொண்டவர்களே அதிகமானோர் என்பது இன்னும் ஒரு வியப்பான செய்தியாகும்.
தளபதியின் ஆங்கில முகநூல் பக்கம்



இதற்கடுத்தபடியாக நம் தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கம் இன்றைய நிலையில் 2,69,481 (இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 481) விருப்பங்களுடன் அடுத்த நிலையில் உள்ளது. இத்தனைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் முகநூல் கணக்கை தொடங்கிய தேதி 13.08.2012 அன்று தான். அதாவது கிட்ட தட்ட தளபதி அவர்கள் ஆரம்பித்த பின்னர்  17 மாதங்களுக்கு பின்னரே துவங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைவர் கலைஞர் அவர்களது இந்த சாதனையை பாராட்டி தி இந்து தமிழ் நாளிதழ் கூட நான்கு நாட்கள் முன்பாக தலைவர் கலைஞர் அவர்கள் முகநூல் விருப்ப கணக்கில் முதலிடம் வகிப்பதை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டது. அப்போதே தளபதி அவர்கள் முகநூல் விருப்ப கணக்கு அதை விட தாண்டி இருந்தது என்றாலும் திமுக தொண்டர்கள் எவருமே இதை ஒரு போட்டியாக கருத வில்லை என்பதால் "தி இந்து" நாளிதழின் செய்தியை குறை கூறாமல், தவறை சுட்டிக்காட்டாமல்  கொண்டாடியே மகிழ்ந்தனர். வேருக்கு கொடுக்கும் மரியாதையை உணர்ந்தவர்கள் திமுக தொண்டர்கள் என்பதுக்கு இதுவே ஒரு சாட்சியாகும். இதைத்தான் தளபதி அவர்களும் விரும்புவார்கள்.
தலைவரின் முகநூல் பக்கம்




விரைவில் தலைவர் அவர்களும், தளபதி அவர்களும் இந்திய அரசியல்வாதிகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி என சொல்லப்படும் இணைய வழி பிரச்சாரங்களில் வேறு எந்த அரசியல்வாதிகளும் தொட முடியாத தூரத்தில் இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். (இப்போதே அப்படித்தால் உள்ளது நிலமை)எதிர்கால இளைஞர் கூட்டத்தை  இணைய வழி பிரச்சாரம் மட்டுமே ஈர்க்கும் என்பதை உணர்ந்த அரசியல் இளைஞர்கள் திமுகவின் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழகத்தின் எதிர்காலம் தளபதி அவர்களும்  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  அந்த இரு கண்களுக்கும் திமுக தொண்டர்கள் சார்பாக வாழ்த்துக்கள்!
தலைவர் கலைஞர் முகநூல் வெற்றியை பற்றி "தி இந்து" நாளிதழ்



தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கம் https://www.facebook.com/Kalaignar89


தளபதியின் தமிழ் முகநூல் பக்கம் https://www.facebook.com/MKStalin


தளபதியின் ஆங்கில முகநூல் பக்கம் https://www.facebook.com/MKStalin.Official.English?fref=ts


தளபதியின் ட்வீட்டர் பக்கம் https://twitter.com/mkstalin


தளபதியின் இணைய பக்கம் http://mkstalin.in/




September 8, 2013

திராவிடம் என்ன செய்து கிழித்தது? அல்லது "அண்ணா" என்னும் பல்கலை கழக மாணவர்களும், அவர்கள் பிள்ளைகள் "அண்ணா பல்கலை கழகத்தில் படிப்பதும்!



5.8.2013 காலை ஆறு மணிக்கு வழக்கம் போல நாளிதழ்கள் வாசித்து கொண்டு இருக்கும் திமுக மாணவர் அணி துணை செயலர் திரு.பூவை ஜெரால்டு அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட செய்தியை பார்த்த பின் உடம்பில் ஒரு வித புத்துணர்சி. உடனே கடலூரில் இருக்கும் திமுக மாணவர் அணி மாநில அமைப்பாளர் திரு.கடலூர் புகழேந்தி அண்ணன் அவர்களுக்கு போன் செய்ய அந்த முனையில் இருந்து குரல்... "தம்பி வணக்கம்! நானே உனக்கு போன் செய்ய இருந்தேனப்பா. ஒரு விஷயம் சொல்லனும், உடனடியா ஒரு வேலை செய்யனும்" என சொல்ல இவர் "அண்ணே, அதுக்கு முன்ன ஒரு சந்தோஷமான செய்தி. நம் தமிழகத்தில் இருந்து ஒரு தம்பி சேலம் ஆத்தூர் பக்கத்தில் இருக்கும் ஒரு குக்கிராமமாம். facebook - முகநூலில் இருக்கும் ஒரு பெரிய குறையை கண்டு பிடித்து அதை சுட்டிக்காட்டி சரி செய்து 12,500 யு எஸ் டாலர்  பரிசு வாங்கி இருக்காரு அண்ணே" என சொல்ல கடலூர் புகழேந்தி அண்ணனுக்கு ஒரே வியப்பு. தான் எந்த விஷயத்துக்காக போன் செய்ய இருந்தோமோ அதற்காகவே தன் தம்பிமார்கள் போன் செய்திருப்பது குறித்து அளவில்லா மகிழ்வு.

"தம்பி, எப்படி கண்டு பிடிப்பாயோ தெரியாது. அந்த தம்பி நாளை காலை சென்னையில் அறிவாலயத்தில் இருக்க வேண்டும். ஒரு தமிழன் செய்த சாதனை இது. இதுவே ஒரு வடநாட்டு பையன் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பின் நாடே கொண்டாடும். நாம் நம்மாள் முடிந்தது தமிழின தலைவர், தமிழின தளபதி ஆகியோரிடம் அந்த தம்பியை அழைத்து வந்து ஆசி வாங்கி ஒரு மிக உயர்ந்த இடத்தில் வேலைக்கு அமர்த்த வேண்டும். இது திமுக மாணவர் அணியின் கடமை என உணர்ந்து வேகமாக செயல்படுப்பா. நானும் இதோ கடலூரில் இருந்து கிளம்பி சென்னை வருகிறேன். இந்த விஷயத்தை தளபதியிடம் எடுத்து சென்று சேர்க்கவும். அவரின் கான்வாய் இப்போது தமிழகத்தின் எந்த மாவட்டத்தின் எந்த மூளையில் போய்க்கொண்டு இருக்கிறதோ தெரியவில்லை. எப்படியாவாது பிடித்து செய்தியை சொல்லுப்பா. நாளை அந்த அருள் என்னும் தம்பி சென்னையில் இருக்க வேண்டும். அவர் வாழ்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட வேண்டும்" என சொல்கிறார்.

உடனே திரு.பூவை ஜெரால்டு அவர்கள் தொடர்பு கொண்டது சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர், வழக்கறிஞர் திரு.சேலம் தமிழ் அவர்களை. விஷயத்தை கேள்விப்பட்ட அவர் "அண்ணே, அருள் என்னும் தம்பி சேலம் பக்கத்தில் இருக்கும் ஆத்தூர் என மட்டுமே தெரியுது. வீடு எங்கே, ஆத்தூரா அதுக்கு பக்கத்திலே எதுனா கிராமமா என எதுவும் தெரியலை. போகட்டும். நம் மாணவர் அணி பசங்களை விட்டும் நானும் நேரிடையாகவும் சென்று எப்படியும் அந்த தம்பியை கண்டு பிடித்து அங்கு சென்னைக்கு அழைத்து வருகிறேன் , விஷயங்களை உடனுக்குடன் உங்களுக்கும் போன் செய்கிறேன் என சொன்ன போது நேரம் காலை 9 மணி. தேதி செப்டம்பர் 5, 2013.

உடனே "whats up"ல் போட்டு தளபதியின் தளகர்த்தர் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு ஐ பி எஸ் அவர்களிடம் திரு ஜெரால்டு தெரிவிக்க தளபதி கான்வாயில் தளபதிக்கு பின்னர் உள்ள காரில் இருந்த திரு. ஐ பி எஸ் அதை பார்த்து விட்டு அடுத்த ஊரில் தளபதியிடம் விஷயம் தெரிவிக்க "சரி நான் நாளை சென்னை வருகிறேன். அறிவாலயத்தில் பத்து மணிக்கு சந்திக்கலாம்" என சொன்ன போது மதியம் 1 மணி ஆகியிருந்தது.

அந்த மாணவரை பார்க்கும் முன்னர் அவர் செய்த சாதனை என்ன என்று மேலோட்டமாக பார்த்து விடுவோம். முகநூல் உபயோகிப்பாளர் அதிலே ஒரு புகைப்படத்தை இட்டால் அதை இட்டவரை தவிர்த்து வேறு யாரும் அழிக்க இயலாது. ஆனால் அருள் ஒருநாள் ஒரு புகைப்படம் இட்ட பின் அது அழிக்கப்பட்டு இருக்கவே அந்த முகநூல் ப்ரொக்ராமில் இவர் உள்நுழைந்து அதன் மென்பொருள் கட்டமைப்பில் இருந்த ஒரு bug காரணமாக இப்படி நிகழ்வதை உணர்ந்து கொண்டு இதை முகநூல் அலுவலகத்துக்கு சொல்ல அவர்கள் "இதற்கு சாத்தியம் இல்லை" என சொல்ல மீண்டும் அருள் அவர்களிடம் "சரி அப்படியானால் நான் நீங்கள் இடும் படத்தினை அழிக்கிறேன். பின்னர் நம்பவும்" என சொல்லி அழிக்க பின்னர் சுதாரித்து கொண்ட அவர்கள் உண்மையை உணர்ந்து இவரிடமே அதை சரி செய்ய சொல்லி இவரும் அதை வீடியோ பதிவாக எடுத்து அந்த bug களையப்பட்டு சரி செய்ய, உடனே அவர்கள் இவரது வங்கி கணக்கில் 12,500 பவுண்ட் பணம் இட்டு ஒரு வாழ்த்து கடிதமும் அனுப்பி அந்த செய்தியை இந்திய பத்திரிக்கைகளுக்கும் அனுப்பினர். இது தான் அந்த தம்பி செய்த சாதனை.

இப்போது விஷயத்துக்கு போவோம்!

சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திரு சேலம் தமிழ் ஆத்தூர் சென்று நண்பர் அருள் வீட்டை தேடுகின்றார். ஒரு வழியாக அங்கு இருக்கும் பள்ளிகளில் எல்லாம் விசாரித்து சேலம் ஆத்தூரில் இருந்து ஆறு கிமீ தூரத்தில் இருக்கும் கந்தசாமிப்புதூர் என்னும் குக் கிராமத்தில் இருக்கும் அருள் அவர்களின் தந்தையார் வைத்திருக்கும் பெட்டிக்கடை முன் நிற்கின்றார். அந்த சாதனையாளர் அருளை கண்டு பிடித்து விட்ட திருப்தியில் திரு பூவை ஜெரால்டு அவர்களுக்கு போன் செய்ய அருளின் தந்தையாரிடம் விஷயத்தை சொல்ல அப்போது தான் தெரிந்தது மாணவர் அணி தோழர்களுக்கு... அந்த குடும்பமே ஒரு அப்பழுக்கற்ற திராவிட முன்னேற்ற கழக குடும்பம் என்று. ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர் "அண்ணா " யுனிவர்சிட்டியில் பயின்ற மாணவர் இந்த சாதனை நிகழ்த்தி இருப்பது குறித்து அவரிடம் சொல்லி அந்த மாணவர் எங்கே என கேட்ட போது "பையன் எப்போதும் கம்பியூட்டரை வச்சு தட்டி கிட்டு இருப்பான் தம்பி. அந்த படிப்புக்கு தான் படிச்சான். படிக்க வச்சேன் கஷ்டப்பட்டு. (B.E.,) இப்போ வேலை தேடி சென்னைக்கு போயிருக்கான் என் தம்பி ஒருத்தவரு வீடு இருக்கு தாம்பரத்திலே. அங்க போயிருக்கான்" என சொல்ல... அப்போது பூவை ஜெரால்டு அவர்கள் "அய்யா நாளை காலை அறிவாலயத்தில் நம் தலைவரையும் தளபதியையும் சந்தித்து ஆசி வாங்கி விட்டு பின்னர் உங்க மகனுக்கு  ஒரு உயர்ந்த இடத்தில் வேலையிலும் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும். நீங்களும் அங்கே வந்திருக்கும் தமிழ் என்னும் எங்கள் தோழருடன் சென்னை வர முடியுமா? வந்து நாம் அருளை தாம்பரத்தில் இருந்து அழைத்துக்கொண்டு போகலாம்" என சொல்ல அருள் அவர்களின் தந்தையோ "கரும்பு தின்ன கூலி வேண்டுமோ?" என கேட்டு விட்டு சென்னைக்கு வழக்கறிஞர் தமிழ் அவர்களுடன் கிளம்பி,பின்னர் அவர்கள் தாம்பரம் வந்து அருளை அழைத்து கொண்டு,காடலூரில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்து விட்ட அண்ணன் இள.புகழேந்தி அவர்களை சந்தித்த போது செப்டம்பர் 6, காலை மணி 6.

பின்னர் பத்து மணிக்கு மாநில மாணவர் அணி அமைப்பாளர் திரு. இள. புகழேந்தி, திரு.பூவை ஜெரால்டு, சேலம் மாணவ அணி அமைப்பாளர் திரு. தமிழ் ஆகியோரோடு மாணவர் திரு. அருள் மற்றும் அவரது தந்தையார் அறிவாலயம் சென்ற போது மணி காலை பத்து. 10.30க்கு தளபதி அங்கு வர அன்று கட்சியில் தன்னை இனைத்துக்கொள்ள வந்த தேமுதிக மாநில துனை செயலர் திரு. ஆஸ்டின் அவர்கள் பக்கத்தில் இருக்க தளபதியை சந்தித்தனர். தளபதி தனக்கு அந்த மாணவர் அருள் போர்த்திய பொன்னாடையை திருப்பி அந்த பையனுக்கே போர்த்தி அழகு பார்த்தார்.

 பின்னர் எப்படி எப்படி அந்த 'பக்' எடுக்கப்பட்டது என விளக்கம் கேட்டு மகிழ்ந்து "இதோ தலைவர் வந்து விட்டார். போய் ஆசீர் வாதம் வாங்கி வாருங்கள்" என சொல்லி அனுப்பும் போது புகழேந்தி அண்ணனிடம் தளபதி "ஒரு நல்ல கம்பனியில் அந்த தம்பிக்கு வேலை வாங்கி கொடுப்பது நம் மாணவர் அணியின் கடமை" என சொல்ல புகழேந்தி அண்ணன் "கண்டிப்பாக" என சொல்லிவிட்டு கலைஞர் இருக்கும் இடம் நோக்கி வந்தனர். பின்னர் தலைவர் விரிவாக அந்த சாதனை பற்றி கேட்டுவிட்டு பாராட்டினார். சால்வை போர்த்தி வாழ்த்தினார். 

அருளின் அப்பாவுக்கு அந்த அறையை விட்டு வரவே மனமில்லையாம். தான் வாழ்நாள் முழுமைக்கும் பெற்ற பெரிய பாக்கியம் ஆக இதை நினைத்தாராம். தன் பையன் பட்டம் வாங்கி வந்து காண்பித்த போது கூட இத்தனை புளகாங்கிதம் அடையவில்லையாம். அத்தனை ஒரு மகிழ்வாம்.

மீண்டும் அந்த தம்பி அருளை அழைத்து கொண்டு கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்று பேட்டி எல்லாம் கொடுத்து விட்டு இந்த இரண்டு நாட்களாக மாணவர் அணி ஒரு நல்ல கம்பனியில் அந்த மாணவருக்கு வேலைக்காக உழைத்துக்கொண்டுள்ளது. அனேகமாக இன்னும் இரண்டு நாளில் அந்த தம்பி நம் தளபதி கையால் appoinment order வாங்கி கொள்ளும் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வரலாம்.

நிற்க..... ஜூலை 2010ம் ஆண்டு, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் என்னும் ஒரு குக்கிராமத்தினை சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவர் தான் இந்திய ரூபாய்க்கான சின்னத்தை வடிவமைத்தார். இன்று உலகம் முழுமையும் அந்த சின்னத்தை தான் பயன்படுத்துகின்றனர். யார் இந்த உதயகுமார்? அவர் படித்த படிப்பு என்ன என்று பார்த்தோமானால் அவருடைய தந்தையார் திரு. தர்மலிங்கம் ஒரு முன்னாள் திமுக சட்ட மன்ற உறுப்பினர். திமுக குடும்பம். இந்த உதயகுமார் படித்தது சென்னை "அண்ணா" பல்கலை கழகத்தில். திரு. தர்மலிங்கம் படித்ததோ "அண்ணா" என்னும் பல்கலைகழகத்தில். அது போலவே இந்த அருள் படித்ததும் "அண்ணா" பல்கலை கழகத்தில். இந்த அருளின் அப்பா படித்தது "அண்ணா" 'என்னும்' பல்கலை கழகத்தில். (இப்போது அந்த உதயகுமார் கவுகாத்தி ஐ ஐ டி யில் உதவி பேராசிரியர்)
மேற்கண்ட இரு மாணவர்களுமே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 


நான் என்ன சொல்ல வருகின்றேன் தெரியுமா? புரியவில்லையா???? "திராவிடத்தால் வாழ்கிறோம்" என்ற தலைப்பில் தன் வலைப்பூவில் எழுதி வரும் திரு.கடலூர் இள புகழேந்தி அண்ணனின் தொடரை படியுங்கள். புரியும். நாம் எப்படியெல்லாம் வாழ்ந்தோம் ... எப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் திராவிடத்தால்... இனி எப்படி எல்லாம் வாழப்போகிறோம் திராவிடத்தால்... கடலூர் அண்ணனின் வலைப்பூவுக்கு செல்ல இங்கே சொடுக்கவும். http://elapugazhendhi.blogspot.in/ திராவிடத்தால் வாழ்ந்தோம் என்ற சொல்லுக்கு உதாரணம் இந்த உதயகுமார், அருள் போன்றவர்கள் என்பதில் ஐயம் ஏதும் உண்டோ?