பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label ஓ.பி ஷைனி. Show all posts
Showing posts with label ஓ.பி ஷைனி. Show all posts

April 16, 2012

2 ஜி அலைக்கற்றை வழக்கும், மாத்தூர் அடித்த அந்தர் பல்டியும் வழக்கம்போல் ஊடகங்களின் மௌனவிரதமும்!




பக்கத்து வீட்டுக்காரன் நம் மீது பொறாமைப்பட்டாலே நம்மால் தாங்க முடியவில்லை. இந்திய திருநாட்டின் மதிப்பு மிக்க காபினட் அமைச்சராக பல வருடம் வாஜ்பாய் தலைமையிலான அரசு முதலே பதவி வகித்து வரும் ஆ.ராசா அவர்களுக்கு பொருளாதார வளம் கொழிக்கும் தொலைத்தொடர்புதுறை 2009ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் முறையாக வழங்கப்பட்டதில் இருந்து பற்றி எரியாத வயிறுகளே இல்லை என்னும் அளவு இருந்தது என்னவோ உண்மை. இந்த கட்டுரையில் நான் திரு. ஆ.ராசா அவர்களுக்காக வக்காலத்து வாங்கப்போவதில்லை. அது என்னுடைய வேலையும் இல்லை. ஆனால் நடக்கும் விஷயங்கள் எல்லாம் ஆ.ராசா அவர்கள் விஷயத்தில் ஆரம்பம் முதல் இந்த அலைக்கற்றை விவகாரத்தில் அவர் தரப்பு மட்டும் ஏன் இப்படி ஒட்டு மொத்தமாக "கார்னர்" செய்யப்படுகின்றார் என்பதில் இருந்து என்னவோ நடக்கின்றது ஆனால் நடக்கும் விஷயங்கள் அத்தனை ஒரு நல்ல விஷயமாகப்படவில்லை என்றே மனதிற்கு படுகின்றது.

கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் எல்லாமே அலைக்கற்றை விஷயம் ஒட்டு மொத்த டெல்லி வட்டாரங்களையும் சூடாக்கி வரத்தொடங்கியது. எந்த வட இந்திய தொலைக்காட்சிகளை திறப்பினும் கோட், சூட் மாட்டிய எதேனும் ஒரு பொம்மைகள் ஒட்டு மொத்த இந்தியாவையே ஆ.ராசா அவர்கள் கொள்ளையடித்து பெரம்பலூருக்கு கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு வந்தது போன்ற ஒரு பிரம்மை உண்டாக்கப்பட்டத. யாருக்கும் எதும் புரியவில்லை."ஸ்பெக்ட்ரம்" என்று ஆங்கிலத்தில் இருக்கும் வக்கபல்லரி புதிதாய் பலர் வாயில் புகுந்து புறப்பட்டது. அதற்கான தமிழ் வார்த்தை என்ன என்று அகராதி புரட்டிப்பார்க்கப்பட்டு "அலைக்கற்றை" என நாமகரணம் சூட்டப்பட்டது. அது முதல் தமிழக பத்திரிக்கைகள் தீனி போடப்பட்ட "மத" யானைகளாக பிளிறத்தொடங்கின.

யார் யாருக்கு எல்லாம் குறைந்த செலவில் செல்போன் சர்வீஸ் வழங்க ஆ.ராசா வழிவகை செய்தாரோ அந்த ரிக்ஷா தொழிலாளி முதல் அடித்தட்டு மக்கள் கூட "ஸ்பெக்ட்ரம்" பற்றி புதுப்புது கதைகளாக செல்பேசினர். ஆ.ராசாவின் கவனம் இதிலெல்லாம் சிதறியதாக தெரியவில்லை.2010 ம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி ஐந்து நாள் பயணமாக ரஷ்யா சென்றார். அங்கே இரு நாடுகளுக்கு இடையே தகவல் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ரஷிய தொலை தொடர்பு துறை அமைச்சர் இகோர் செகோலேவுடன் அமைச்சர் ஆ.இராசா பேச்சு நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.இதனைத் தொடர்ந்து, ரஷிய நாட்டின் தகவல் தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் பார்வையிடும் ஆ.ராசா 16-ந்தேதி டெல்லி திரும்புகிறார். ஆக மடியில் கனமில்லை என்கிற மனோபாவம் மட்டும் ஆ.ராசா அவர்களின் செயல்பாடுகளில் நன்கு தெரிகின்றது. ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கின விஷயங்கள் பற்றி ஆ.ராசா அவர்கள் "பாவம் எதும் தெரியாதவர்கள். இல்லாத விஷயத்தை ஊதிப்பெரிதாக்கினால் அது நீதிமன்றம் சென்றால் கூட வழக்கு நிற்காது" என நினைத்து விட்டார் என்றே நினைக்கிறேன். ஆனால் அப்படி ஊதிப்பெருக்கியவர்களில் சிலருக்கு கூட "இது ஒன்றும் இல்லாத விஷயம் தான், ஆனால் ஊதிப்பார்ப்போம். அந்த புயலில் ராசா அடித்து செல்லப்பட்டால் லாபம். அசையாமல் நின்றால் நமக்கு நட்டமேதுமில்லை" என்று தான் ஆரம்பித்தனர். ஆனால் ஒட்டு மொத்த இந்திய ஆதிக்க ஊடகங்களும் அந்த விஷயத்தை இப்படி ஊதிப்பெரிதாக்கும் என ஆ.ராசா அவர்களோ அல்லது அவர் சார்ந்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகமோ சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றே இப்போது நினைக்க தோன்றுகின்றது.

ஆ.ராசா அவர்கள் ரஷ்ய பயணம் முடித்து விட்டு தாயகம் திரும்பும் முன் அந்த ஐந்து நாட்களில் இவர் மீது வழக்கு தொடுக்க தேவையான முகாந்திரம் இருப்பதாக சில ஆவணங்களை சி பி ஐ தயாரித்து விட்டது என்றே நினைக்கும் அளவுக்கு அப்போது தான் சுடச்சுட பதவி ஓய்வு பெற்ற அகில இந்திய டெலிகாம் செக்ரட்ரி பதவியில் இருந்த ஐ ஏ எஸ் அதிகாரி டி.எஸ்.மாத்தூர் என்பவரை கெட்டியாகப்பிடித்துக்கொண்டது சி பி ஐ. அந்த மாத்தூர் என்னும் உத்தமபுத்திரன் மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்தார் என்ற அரசல் புரசல் செய்திகள் உலா வந்த நேரத்தில் அதுவே சி பி ஐக்கு வசதியாகப்போனது. அதை சொல்லி மிரட்டியே கூட இவரை பிடித்து எதாவது அவசர வாக்குமூலம் வாங்கினால் அதை உச்ச நீதிமன்றத்தில் காட்டியே ஆ.ராசா மீது வழக்கு தொடுப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் சென்று அவரது அனுமதியோடு வழக்கு தொடுத்து விடலாம் என நினைத்தது சி பி ஐ.

சி பி ஐ நினைத்தது போலவே மாத்தூர் என்னும் மாடு அவர்கள் தாளத்துக்கு வசதியாக தலையாட்டியது. ‘2 ஜி’ அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு பற்றி நான் சொன்ன ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டார் அமைச்சர் ராசா. - ‘2 ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கியது தொடர்பான கோப்புகளில் நான் கையெழுத்திட வில்லை. மேலும் எனது ஒப்புதலையும் ராசா பெறவில்லை. ஏலம் விடுவதன்மூலம் ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்யலாம் என்ற எனது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை" என சி பி ஐ வசம் டி எஸ் மாத்தூர் வாக்குமூலம் அளிக்க கிட்டத்தட்ட அதன் காரணமாகவே ஆ.ராசா அவர்கள் மீது வழக்கு சோடிக்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்துக்கு ராசாமீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனுமதி கேட்கப்பட்டது. அப்படி அனுமதி கேட்கப்பட்ட அனைத்து அரசு நடைமுறை கடிதங்கள் எல்லாமே டி எஸ் மாத்தூரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டே தயாரிக்கப்பட்டது.




( இக்கட்டுரையில் சாராம்சம் என்பது ராசா நிரபராதி என்று வாதிடுவதோ அல்லது அதற்கு சமமான விஷயங்களோ அல்ல. ஆனால் வழக்கின் போக்கு இப்போது எப்படி ஒருதலைப்பட்சமாக போய் கொண்டு இருக்கின்றது என்கிற ஆதங்கத்தினை பதிவு செய்யும் ஒரு முயற்சியேயாகும். )

இதற்கிடையே உச்சநீதிமன்ற கருத்து, பின்னர் ராசா அவர்கள் திமுக தலைமை கேட்டுக்கொண்டதுக்கு இணங்க அந்த வருட நேரு பிறந்த நாளில் பதவி விலகினார். பின்னர் கைது செய்யப்பட்டார் என்பது எல்லாம் கிடக்கட்டும். நாம் இங்கே குறிப்பிடப்படும் விஷயமே இத்தனைக்கு காரணமாக இருந்த டி எஸ் மாத்தூர் என்னும் உத்தம புத்திர யோக்கிய சிகாமணியின் வாக்குமூலம் தானே? அதாவது அவர் ஏலமுறை பின்பற்றலாம் என சொன்னதை ராசா கேட்காமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என செய்து நாட்டுக்கு ஒன்னேமுக்கால்லட்சம் கோடி நட்டம் ஆகிவிட்டது என்றெல்லாம் அண்டப்புளுகு ஆகாச புளுகு புளுகினாரோ ,அதன் பின்னர் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டது. என்ன தெரியுமா? "இல்லை, டி எஸ் மாத்தூர் சொல்வது யாவும் புனைவு மட்டுமே. அது சம்மந்தமாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்திலும் மாத்தூர் கலந்து கொண்டார். அத்தோடு மட்டுமல்லாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் பழைய நிலையே தொடர வேண்டும் என பரிந்துரை செய்தும் அவர் கைப்பட எழுதி பரிந்துரை செய்தும் கையெழுத்து போட்டுள்ளார். அவரது பரிந்துரையின் பேரிலேயே அமைச்சராக இருந்த ஆ.ராசா அவர்கள் அதை அமைச்சரவை ஒப்புதலுடன் கையெழுத்து இட்டுள்ளார்" என கூறியதோடு மட்டுமல்லாமல் அது அந்த மாத்தூர் கையெழுத்து இட்ட ஆவணங்கள் அனைத்தையும் வெளியிட்டது. (படத்தில் காணவும்)











ஆனால் அதற்குள் மாத்தூர் அவர்கள் காலை ஒரு தொலைக்காட்சியில் மதியம் ஒரு தொலைக்காட்சியில், இரவினில் ஒரு தொலைக்காட்சி என தன்னிடம் இருந்த அத்தனை விதமான கோட்டு, சூட்டுகள் பளபளக்க பேட்டி கொடுத்து கொண்டே இருக்க அந்த நேரம் ட்ராய் வெளியிட்ட மாத்தூரின் அண்ட புளுகு ஆதாரங்களை வெளிக்காட்ட எந்த ஒரு வட இந்திய சேனல்களும் முன்வரவில்லை, அச்சு ஊடகங்கள் அதற்கு மேல் வரிந்து கட்டிக்கொண்டு எழுத ஆரம்பித்தன. அது போதாது என்று தமிழக ஜெயா டிவியில் ரவிபெர்னார்ட் என்பவர் தன் லூயிபிலிப் சட்டை அழுக்காகாமல், ஷூ பாலீஷ் மின்னலடிக்க இதே மாத்தூரின் கருத்தை பல வித முகபாவங்களுடன் ஒரு விலைமகளுக்கே உரித்தான ஏற்ற இறக்கமுடன் பேட்டி எடுத்து கோயபல்ஸ் ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தார். இதே ரவிபெர்னாட் பற்றி ஊடக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஒரு வித எள்ளல் உண்டு. இவர் ஜெயா தொலைக்காட்சியில் சட்டசபை தேர்தலில் முடிவு அறிவிக்கவும் அது பற்றி விவாதிக்கவும் ஒரு முறை நியமிக்கப்பட்ட நேரத்தில் அதிமுக தோல்வியடைந்து திமுக வெற்றி வாகை சூடி பின்னர் கலைஞர் பதவிப்பிரமாணம் செய்து முடித்தும் விட்ட நிலையில் கூட நேரலை நிகழ்வில் "அதிமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைக்க இருக்கின்றது" என்று சொல்லிகொண்டே இருக்க ஜெயா தொலைக்காட்சி ஊழியர்கள் சிலர் இந்த ரவிபெர்னார்டை "கொடுத்த காசுக்கு மேலே கூவிவிட்டாய் .போதும் போ " என சொல்லி குண்டுக்கட்டாய் தூக்கிப்போனதாக ஊடகவியலர் மத்தியில் கேலிப்பேச்சுகள் புழக்கத்தில் இப்போதும் உண்டு. (கேலி பேசியவர்கள் அதே வறுமை நிலையில் இருக்க ரவிபெர்னார்டோ இப்போது மாநிலங்கள் அவை உறுப்பினராக ஆகி பணம் பகட்டோடு இருக்கின்றார் என்பது உபரி செய்தி - நீதி: பணம் பத்தும் செய்யும், பொய் பதினொன்றும் செய்யும்)

ஆக எல்லாம் ஆனது. ராசா அவர்கள நீதிமன்றத்தில் வழக்கை சந்திப்பதாக ச்சொல்லி இதுவரை பிணை கூட கேட்காமல் நாள் தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு விபரங்களை தானே ஒரு வழக்கறிஞராகவும் இருப்பதால் தானே வாதாடியும் தன் வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு குறிப்புகள் கொடுப்பதும் (அவரது வழக்கறிஞரே அதை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் ஒரு முறை குறிப்பிட்டார்) ஆக வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

நாம் இங்கே குறிப்பிடுவது வழக்கு நடைபெறும் முறை குறித்தே. அது பற்றி மட்டுமே! வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர்கள் வழக்கு நடைபெறும் எல்லா நாட்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பது சட்ட விதிமுறையா என்பது குறித்து எமக்கு தெரியாது. ஆனால் பரப்பன அக்கிரகாரத்தில் நடைபெறும் ஜெயா மீதான வழக்கில் அப்படித்தான் ஜெயா ஆஜராகிக்கொண்டு இருக்கின்றாரா என்பது எம் கேள்வி! குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நேரிடை கேள்வி கேட்கும் வழக்கின் கடைசி கட்ட நடைமுறையின் போது கூட ஜெயாவும் அவரது தோழியாக இருந்து சமீபத்தில் தங்கையாகிப்போன சசிகலாவும் நீதிமன்றம் செல்ல முடியாது என அலைக்கழிக்கும் போது தினம் தினம் வழக்கில் ஆஜராகும் ஆ.ராசா அவர்கள் கடைசி வரிசையில் அமர்ந்தால் கூட பள்ளி மாணவரை ஆசிரியர் மிரட்டும் பாணியில் நீதிபதியால் அவமானப்படுத்தப்படுவதும் "முன் வரிசையில் வந்து பேசாமல் உட்கார்ந்து வழக்கை கவனிக்கவும்" என நீதிபதி சொல்வதும் அங்கே சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றதே, அப்போது நீதி என்பது இந்தியாவில் எல்லோருக்கும் சமம் என்பது பொய்யோ என்ற எண்ணம் நமக்கு வலுக்கின்றது.

சரி போகட்டும்! நாம் மேலே குறிப்பிட்ட டி எஸ் மாத்தூர் ஒரு நான்கு நாட்கள் முன்னதாக குறுக்கு விசாரணைக்கு ஆட்படும் போது அவர் ஏலமுறை வேண்டாம், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என பரிந்துரை செய்த ஆவணங்களை க்காட்டி ஆ.ராசாவின் வழக்கறிஞர் கேள்வி கேட்ட போது அதற்கு மாத்தூர் மழுப்பல் பதிலாக "ஆம் நான் இதில் கையெழுத்து போட்டது உண்மை தான், ஆனால் வாழ்மொழியாக அதல்லாம் வேண்டாம் ஏலத்தில் விடலாம் என சொன்னேன்" என மீண்டும் அண்டபுளுகு சொன்ன போது (கவனிக்க இவர் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி. இந்த ஒரு பதிலுக்காகவே ஐ ஏ எஸ் அதிகாரிகள் இவர் மீது ஐ ஏ எஸ் சங்க நடவடிக்கை எடுக்கலாம்) ராசாவின் வழக்கறிஞர் குரலை உயர்த்தி சில கேள்விகளை கேட்க நீதிபதியோ "நீங்கள் குரலை உயர்த்தி பேசினால் நானும் குரலை உயர்த்தி பேச வேண்டி இருக்கும்" என சொல்ல வழக்கம் போல ஊடகங்கள் வடையை தின்பதை விட்டுவிட்டு ஓட்டையை எண்ண ஆரம்பித்து விட்டன. வடையின் ருசி யாருக்கும் தெரியாமல் போனது. நீதிமன்றங்களில் சில சூழல்களில் குரல் உயர்த்தி பேசுவது என்பது எல்லாம் தவிர்க்க இயலாத விஷயம் தான் என சில வழக்கறிஞர்கள் கூட ஒத்துக்கொள்கின்றனர்.

எல்லா தொலைக்காட்சியிலும் மாய்ந்து மாய்ந்து மாத்தூர் சொன்ன பொய்யை காட்டிய அந்த தொலைக்காட்சி ஊடகங்கள் இப்போது எங்கே போயின? அழுக்கு படாத சட்டை போட்டு விலைமகள் நடிப்பை நடித்த ரவிபெர்னார்ட் எங்கே? 18 மாதங்கள் முன்னதாக பரப்பிய பொய்யை இப்போது உண்மை வெளிவரும் போதாவது காட்டி தங்கள் பாவத்தை கழுவ முன்வந்தனரா? இல்லை! ஏன் இப்படி ஒரு ஆதிக்க வெறி அந்த ஊடகங்களுக்கு!

ஒரு தெருவில் பத்து பெண்களின் தாலியை அறுத்து கொண்டு போன திருடன் ஒரு நாள் கையும் களவுமாக பிடிபட தாலி பறிகொடுத்த பெண்கள் அவனை கட்டிப்போட்டு விட்டு காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துவிட்டு ஆத்திரத்தில் நான்கு அடி அடித்தும் விடுகின்றனர். பின்னர் வந்த காவல்துறையினர் திருடியவனை பரிவோடு நடத்திவிட்டு தாலிபறிகொடுத்த பெண்களை "அடித்துவிட்டதாக" வழக்கு போட்டு உள்ளே தள்ளுகின்றனர். இது போன்ற செய்திகள் அடிக்கடி தினத்தந்தியில் வரும். இதற்கும் நாம் மேலே கூறிய பாட்டியாலா நிகழ்வுக்கும் ஆறு வித்யாசம் கண்டுபிடியுங்கள் பார்ப்போம். கண்டுபிடிக்க இயலாது!

இதை தமிழ் அச்சு ஊடகங்கள் கூட "ராசாவிடம் நீதிபதி கண்டிப்பு" என்கிற தலைப்பிட்டே வெளியிடுகின்றன! ஆனால் உலகமகா உத்தமன் யோக்கிய சிகாமணி மாத்தூர் பற்றியோ அவர் அப்போது எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் பரப்பிய பொய்யுரை பற்றியோ இப்போது நீதிமன்றத்தில் அடித்த அந்தர் பல்டி பற்றியோ ஏன் நம் ஊடகங்கள் வாய் திறக்கவில்லை? உங்களை கட்டிப்போட்ட மந்திர நூல் எது? எப்போது உண்மை பேசுவீர்கள்? இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருப்பீர்கள்?

காட்சிகள் மாறும்! காலம் மாறும்! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்னும் நிலை வரும்!