பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 25, 2008

உளுந்தூர்பேட்டை காத்தவராயனுக்கு போன் போடுங்கப்பா!!!




ஒரு 5 வருஷம் முன்ன விசா மாற்றும் விஷயமாக பக்கத்திலே ஒரு சின்ன தீவு "கிஷ் அய்லாண்டு"ன்னு, அங்க போயிட்டு வர வேண்டி இருந்துச்சு. ஒரு 50 பேர் உக்காந்து போகும் அளவு சின்ன விமானம். அதன் பேரு தான் விமானம். ஆனா அது ஒரு மானம் கெட்ட விமானம். உள்ளே அத்தனை கச்சடா. ஜன்னல் பக்கம் எல்லாம் துணி ஸ்கிரீன் அழுக்கா போட்டிருந்தாங்க. சீட் எல்லாம் வியர்வை சொட்ட சொட்ட பட்டான் உக்காந்த மாதிரி படை படையா இருந்துச்சு. சரின்னு சீட் மேலே ஒரு பேப்பரை போட்டு என் உடம்பின் எந்த பாகமும் சீட்டிலே படாத மாதிரி லாவகமா குந்திகிட்டு எதுனா விசில் வச்சிகிட்டு கண்டக்டர் இருக்காரான்னு சுத்திலும் பார்த்தேன். யாரும் இல்லை. பின்னே விரல் நுனியால அந்த ஸ்கிரீனை விலக்கினேன். அங்க தான் நம்ம இந்த பதிவோட ஹீரோ உளுந்தூர்பேட்டை காத்தவராயன் பெயர் எழுதி இருந்துச்சு. வஞ்சகமே இல்லாம எல்லா இந்திய மொழியிலும் தன் காதலிகள் பெயரையும் அந்த காதல கனவான்கள் எழுதி இருந்தனர். சில பேர் அனடாமி பாடம் நடத்தியிருந்தனர். கையிலே பேனா இல்லாதவர்கள் பைலட் கிட்டே வாங்கி எழுதியிருப்பானுங்க போல இருக்கு. சரி விஷயத்துக்கு வருவோம்.

" அன்புள்ள புனிதா நா ஒன்ன கதலிக்கிறேன்,
நீ என்னை கதலிக்கிறியா?
நா ஒன்ன பிளேன்ல கூட்டி பொவன்.
நா சன்ன பக்கம் நீ எனக்கு பக்கமா இருக்க
முத்தம் கொடு

இப்படிக்கு
காத்தவராயன்
3,வாத்துகார தெரு,
(டீ கடை எதுக்க)
உளுந்தூர்பேட்டை(போஸ்ட்)
த.நா-இந்தியா
என் துபாய் நம்பர்050 3803271
எனக்கு பொன் பன்னு''

இப்படித்தான் அந்த பிளைட் ஜன்னல் பக்கம் எழுதியிருந்துச்சு. அப்படியே குறிச்சுகிட்டேன். இது போதாதா நமக்கு. திரும்ப துபாய் வந்த பின்னே முதல் வேலையா நம்ம காத்தவராயனுக்கு போன் பண்ணினேன்.

"ஹலோ காத்தவராயனா"

"ஆமாங்க"

"நான் ரஷ்யா பிளைட் கம்பனியில இருந்து பேசறேன். நீங்க பிளைட்டிலே கன்னா பின்னான்னு எழுதி நாசம் பண்ணிட்டீங்க. அதுக்கு சுண்ணாம்பு அடிக்கும் காசை நீங்க தான் தரனும். இன்னும் 1 வாரத்துகுள்ள 3000 திர்காம் ரெடி பண்ணுங்க.நாங்க வந்து வாங்கிகறோம்"

"அய்யோ நான் எழுதலீங்க என் கூட வந்த மலையாளி தாங்க எழுதினாரு"

"அடங்கொய்யால மலையாளி எப்படி தமிழ்ல எழுதினாருய்யா"

"சார் சார் என் சம்பளமே 450 திருகாம் தானுங்க, அந்த இடத்துல மட்டும் பெயிண்டு அடிக்கும் காச குடுக்குறேன் சார்"

"சரி சரி பின்ன பேசறேன்"

ஆகா இதை வச்சி 1 வாரம் ஓட்டலாம் போல இருக்கேன்னு நெனச்சுகிட்டு ரூம்க்கு வந்து பசங்க கிட்டே விஷயத்தை சொன்னேன்.உடனே ஒருத்தன் நம்பரை குடுங்கன்னு வாங்கினான்.

"ஹல்லோ காத்தவராயனா, நாங்க துபாய் முனிசிபாலிட்டியில இருந்து பேசறோம். நீங்க துபாய் கக்கூஸ்ல எழுதி வச்சிருந்தீங்க இல்லியா உங்க அட்ரசை அதுக்கு வெள்ளை அடிக்கனும். அதுக்கான சார்ஜ் நீங்க முனிசிபாலிட்டியிலே வந்து கட்டிடுங்க - 3000 திர்காம்"

"அய்யா அது நான் எழுதலீங்க, ஆமா எந்த கக்கூஸ் பர்துபாய் பஸ்ட்டாண்டு கக்கூசா இல்லாட்டி டேரா அல் நாசர் ஸ்கொயர் கக்கூசாங்க"

போனை பொத்தி கொண்டு ரூம் மெட் எங்க கிட்ட சொல்றான் "இவன் வளச்சு வளச்சு துபாய்ல எழுதியிருக்கான் போல இருக்கு"ன்னு.

"ஹல்லோ மிஸ்டர் காத்து, நாங்க இது வரை ஒரு கக்கூஸ்ல தான் செக் பண்ணியிருக்கோம். ஒரு ஸ்பெஷல் டீம் போட்டு எல்லா கக்கூஸ்லயும் செக் பண்ண சொல்லியிருக்கோம். ஆக நீங்க எதுக்கும் ஒரு 10000 திர்காம் ரெடி பண்ணுங்க, நாங்க வந்து வாங்கிக்கறோம்"ன்னு சொல்லி போனை வச்சுட்டான்.

அப்போது அடுத்த ரூம் மெட் உள்ளே வரவும், அவனிடம் சொல்லி சிரிச்சோம். அவன் "அந்த போன் நம்பர் குடுங்கன்னு கேட்டு வாங்கிகிட்டு நம்ம காத்துக்கு போன் பண்ணினான்.

"ஹல்லோ மச்சான் எப்படி இருக்கிய"

""நீங்க யாருங்க"

"என்னை தெரியலையா புனிதாவோட அண்ணன். நானும் துபாய் வந்துட்டேன். இப்ப தான் உங்க போன் நம்பர் கிடைச்சுது"

"புனிதாவுக்கு அண்ணன் கிடையாதே, ஓ பெரீப்பா பையன் சோமுங்களா? என் நம்பர் எப்புடி கெடச்சுது"

"உங்க நம்பர் தான் ஒலகத்துக்கே தெரியுமே, நான் நைஃப் பார்க்கிலே பார்த்தேன் மச்சான். ஒங்களுக்கு புனிதாவை கட்டி வக்கிறதா முடிவு பண்ணிட்டோம். எப்ப போவலாம் ஊருக்கு, எத்தன பவுன் போடுவீங்க"

"ரொம்ப சந்தோஷமுங்க மச்சான். நா ஒரு 3 பவுன்ல சங்கிலி போடுறங்க, புனிதா எப்புடி இருக்குங்க, ஒங்க சித்தப்பாரு வெஷயம் தெரிஞ்ச பின்ன அதை போட்டு அடிச்சாருங்க, அதுல மனசு கேக்காம துபாய் வந்தவன் தான். அந்த சாமி தான் அவரு கண்ண தொறந்து மனச மாத்தியிருக்குங்க"

"என்ன மச்சான் ஒரு 10 பவுனாவது போடுவீங்கன்னு நெனச்சேன்"

"இல்லீங்க ஒரு பிளைட் கம்பனில ஒரு நண்பருக்கு 3000 தரனும், பல்தியா(முனிசிபாலிட்டி) நண்பருக்கு வேற தரனும். நா கல்யாணத்துக்காக சீட்டு போட்டிருந்தனா, அதை எடுத்து தான் தரணும். நேரமே சரியில்லைங்க"

"அப்புடியா சரி, நான் பின்ன பேசறேன், ஆனா ஒங்களுக்கு நல்ல சேதி சொன்னதுக்காக எனக்கு பேண்ட், சட்டை, வாட்ச், மோதரம் எல்லாம் போடனும் சரியா, ஆனா இனிமே இந்த கக்கூஸ், பார்க் இங்கல்லாம் எழுதறத விடுங்க"

"சரிங்க மச்சான், சத்தியமா இனிமே வூட்டுக்கு லெட்டர் கூட எழுத மாட்டேன் மச்சான்"

அப்போ வேற ஒரு நண்பர் வந்தார் ரூமுக்கு. அவர் ஒரு டிரான்ஸ்போர்ட் ஆபீசர். ஒரு நாளைக்கு 300 போன் வரும். சும்மா டிவில நியூஸ் கூட கேக்க விடாம போன்ல தொன தொனன்னு பேசிகிட்டே இருப்பார். அவரையும் கலாய்க்க வேண்டிய கட்டாயத்திலே இருந்தோமா, அப்ப அவரு தான் வாங்கின புது போனை குடுத்து பார்க்க சொன்னார். ஒருத்தன் மாத்தி ஒருத்தன் பார்த்துகிட்டே வந்தோம். அதிலே ஒருத்தன் நம்மா கத்தவராயன் நம்பர்க்கு அவர் போனை டைவர்ட் பண்ணி விட்டுட்டான்.

அப்படியாக ஒரு 2 நாள் காத்தவராயனை காத்துபோனராயனா மாத்தி பின்னே இனிமே பொது இடத்திலே இப்படி எல்லாம் எழுத கூடாதுன்னு சொல்லி அனுப்பினோம். அப்பவும் ஒரு ரூம் மெட் அவனோட கொடுங்கோல் மேனேஜர் நம்பரை மிஸ்டர் காத்துகிட்டே கொடுத்து " வெள்ளி கிழமை காலை 6.00 மணிக்கு போண் பண்ணி குட்மார்னிங் சொல்ல சொல்லி அனுப்பினான்.

இப்போ 2 நாள் முன்ன பெட்டிய நோண்டிகிட்டு இருந்தப்ப அந்த நம்பர் கிடைத்தது. சரி காத்து இப்ப எப்படி இருக்குன்னு பார்ப்போம்ன்னு போன் பண்ணினேன். வேற யாரோ எடுத்தாங்க.

"ஹல்லோ காத்தவராயனா?"

"இல்ல நான் முத்து"

"இதுக்கு முன்ன இந்த நம்பர் யார் கிட்டே இருந்துச்சு"

"ம் இதுக்கு முன்ன மைசூர் மகாராஜா வச்சிருந்தாரு, அதுக்கு முன்ன சொப்பன சுந்தரி வச்சிருந்தாங்க, ஆனா அவங்களை யார் வச்சிருக்காங்கன்னு தெரியாது. போனை வைய்யா"

ஒரு வேளை பிளாக் படிக்கிறவனா இருப்பானோ. இத்தன வெவரமா இருக்கான்!!!

முடிஞ்சா இந்த முத்துவை கலாய்ச்சி பாருங்கப்பா போன் பண்ணி!

September 22, 2008

கலக்கிட்ட சந்துரூஊஊஊஊ!!!!!!

நான் ஒரு 5 வருஷம் முன்ன ஒரு உப்புமா கம்பனியிலே ஒரு 2 மாதம் வேலை பார்த்தேன். உப்புமான்னா சாதாரண உப்புமா இல்லை. கிட்ட தட்ட நம்ம பெனாத்தலார் பாணியிலே ஸ்ட்ராங்கான உப்புமா. நான் ஏமாந்ததே அந்த கம்பனியின் சைன் போர்டை பார்த்து தான். அத்தன பெரிய போர்டு.அந்த கம்பனியிலேயே அதான் பெரிய விஷயம்ன்னு எனக்கு பின்ன தான் தெரிஞ்சுது. சரி இது தான் துபாய்லயே பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி போல இருக்குன்னு நெனச்சு தான் இண்டர்வியூவுக்கு போனேன். நான் கேட்ட சம்பளத்தை கேட்டதும் அந்த மேனேஜர் மட்டும் இல்லை அந்த கம்பனியே ஆடி போச்சு. மேனேஜர் சொன்னார்" எங்க கம்பனியின் மொத்த லேபர்ஸும் சேர்ந்து வாங்கும் சம்பளம் இது"ன்னு. நானும் சரி தற்காலிகமா இருப்போம்ன்னு சேர்ந்துட்டேன்.கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனின்னா பெரிசா புது பில்டிங் எல்லாம் எடுத்து செய்ய மாட்டாங்க. சும்மா ஓட்டை உடைசல் அடைக்கும் கம்பனி.


ஒரு நாள் மேனேஜர் கூப்பிட்டு ஒரு செல் நம்பர் கொடுத்து "இவர் பேர் சந்திரசேகர். இவரு கம்பனியிலே ஏதோ தண்ணி ஒழுகுதாம். அபுதாபியிலே இருக்கு. நீ போய் பார்த்துட்டுவா. பின்னே இங்க வந்து எத்தனை லேபர், எதுனா பிலாஸ்டிக் ரோல், சிலிகான் சீலண்ட் எடுத்துட்டு போய் ஓட்டையை அடச்சிடு"ன்னு சொன்னார். எனக்கு தான் அபுதாபி போறதுன்னா அத்தன ஒரு குஷி வந்துடுமா. சரி அப்படியே போய் நண்பர்களையும் பார்த்துட்டு வந்துடுவோம்ன்னு சும்மா ஒரு ஜீன்ஸ், டி ஷர்ட், சாதாரன செருப்புன்னு கிளம்பிட்டேன். அபுதாபி போய் ஒரு கூட்டமே இல்லாத ஹோட்டலா பார்த்து உக்காந்து ரிலாக்சா ஒரு டீயை குடிச்சுகிட்டே அந்த சந்திரசேகருக்கு போன் பண்ணினேன்.

நம்ம கிட்ட ஒரு பொருப்புன்னு குடுத்துட்டாதான் பிரிச்சு மேஞ்சிடுவோம்ல. எப்படியாவது அந்த கம்பனியிலே நல்ல பேர் வாங்கி ஒட்டு மொத்த ஓட்டை அடைக்கும் காண்டிராக்டயும் வாங்கி நம்ம கம்பனிய ரித்தீஷ் மாதிரி ஒலக தரத்துக்கு கொண்டு வந்துடனுங்குற ஆசையிலே அப்படியே நுனி நாக்கு இங்லிபீசுல "ஹாய் மிஸ்டர் சந்துரு ஹவ்வார்யூ"ன்னு ஆரம்பிச்சு சும்மா பொளந்து கட்டிகிட்டு இருந்தேன். உங்களுக்கு எங்கயோ ஒழுகுதாமேன்னு கடைசியா வந்த விஷயத்துக்கு வந்தேன். வெள்ளை மாளிகையிலே ஒழுகினா கூட ஹிலாரி வூட்டுகாரர் எங்களைத்தான் கூப்பிடுவாராக்கும் என்கிற அளவு பீலா விட்டேன்.

மனுஷனுக்கு உதரல் எடுத்துடுச்சு. சந்துரு சந்துருன்னு ரொம்ப நாள் பழகின மாதிரி பொங்கிகிட்டே இருக்கேன். அவரும் என்கிட்ட சார் சார்ன்னு பம்மிகிட்டே இருக்கார். நான் ஹோட்டல்ல இருப்பதாகவும் அன்றைக்கே வந்து பார்க்க முடியாது, பர்சனல் வேலை இருப்பதாகவும் சொன்னேன். அதுக்கு அவரும் சரி சார் சரி சார்ன்னு ஏக பவ்யம் காட்டினாரு. நீங்க தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு கார் அனுப்பறேன்னு சொன்னார். நான் என்னவோ ஹில்ட்டன்ல தங்கியிருப்பது போல நெனச்சுகிட்டர். ஆக நான் டீ குடிக்க ஹோட்டலுக்கு வந்த விஷயத்தை அப்புடியே கோழி அமுக்குவது போல அமுக்கிவிட்டு "வேண்டாம் வேண்டாம் நான் என் காரிலேயா வந்துடுறேன் சந்துரு"ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டு நண்பர்கள் வீட்டுக்கு போயிட்டு அதிலே ஒருத்தர் அடுத்த நாள் காலையிலே வந்து அந்த கம்பனி வாசல்ல விட்டுட்டு போனார்.

கம்பனின்னா அது 10 மாடி இண்டலிஜண்ட் பில்டிங். மிக பெரிய ஆயில் கம்பனி. வாசல்ல செக்யூரிட்டி எல்லாம் மிலிட்டரி. எல்லார் கையிலயும் மிஷின் கன். நான் அந்த செக்யூரிட்டிகிட்ட வந்து "ஐ நீட் டு மீட் மிஸ்டர் சந்துரு"ன்னு சொன்னேன். அவன் என்னை ஏற இறங்க பார்த்துட்டு கிட்ட தட்ட என்னை புழு மாதிரி பார்த்துட்டு எந்த சந்துருன்னு கேட்டான். நான் சொன்னேன் "மிஸ்டர் சந்திரசேகர், அவரோட போன் நம்பர் இது தான்"ன்னு சொன்னேன். அவ்வளவு தான் அவனுக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. பட படன்னு யார் யாருக்கோ உள்ளே போன் பண்ணினான். முதல்ல தலைமை செக்யூரிட்டிக்கு போன். அவர் சர்ன்னு ஒரு சைரன் வச்ச ஜீப்பிலே வந்துட்டார். என்னை ஒரு குற்றவாளி ரேஞ்சுக்கு சுத்தி நின்னு விசாரிக்கிறாங்க. எனக்கோ பயம் நம்ம சந்துரு எதுனா திருடிகிட்டு மாட்டிகிச்சு போல இருக்கு அதான் அதை தேடி வந்த நம்மை இப்படி டார்ச்சர் பண்றாங்க போல இருக்குன்னு நெனச்சுகிட்டேன்.ரொம்ப நேர விசாரனைக்கு பின்னே ஸ்பீக்கர்ல ஒரு லேடியை கூப்பிட்டாங்க. அவ என்னவோ அரபில அவங்க கிட்ட பேசினா. நான் உடனே போனை எடுத்து நம்ம சந்துருக்கு போன் பண்ணினேன்.

"என்ன சந்துரூ இப்படி கொடையிரானுங்க"ன்னு கேட்டதுக்கு "சார் வந்துட்டீங்களா கொஞ்சம் இருங்க"ன்னு சொன்னார். பின்ன அந்த செக்யூரிட்டி ரூம்ல இருந்த ஸ்பீக்கர்ல நம்ம சந்துரு குரல். உக்காந்து இருந்தவன் எல்லாம் எழுந்து அட்டென்ஷன்ல நிக்கிறான். "செண்ட் மை கெஸ்ட் டு மை ரூம் இம்மீடியட்லி"ன்னு சொல்லிட்டு என் போன்ல கூப்பிட்டு "வெரி சாரி சார், உங்களோட மீட்டிங்கால மத்த மீட்டிங் எல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்"ன்னு சொன்னார். எனக்கு மெதுவா ஒரு பயம் வந்துச்சு. ரொம்ப பீலா விட்டிருக்க படாதோன்னு தோணுச்சு. செக்யூரிட்டி எல்லாம் என்னை ஒரு வித பயம் கலந்த மரியாதையோட பார்கிறானுங்க. என்னை சந்துரு சார் ரூமுக்கு கூட்டிகிட்டு போக செக்யூரிட்டி எல்லாம் போட்டி போடுறானுங்க. அவங்க தலைவர் தானே அழைச்சுகிட்டு போவதா சொல்லி அழைச்சுகிட்டு போறார். நானும் சப்பக்கு சப்பக்குன்னு செருப்பு சத்தத்தோட போறேன். எல்லாரும் என்னையே பார்க்கிறாங்க.

என்னவோ ஏழுமலையான் தரிசனம் மாதிரி கதவு திறந்துகிட்டே போறான் அந்த செக்யூரிட்டி. ஒவ்வொறு கதவுக்கு முன்பும் ஏகப்பட்ட சோதனை. எங்க பார்த்தாலும் கேமிரா கண்கானிப்பு.கடைசியா நம்ம சந்துரு ரூம் வாசலுக்கு வந்தாச்சு. கதவை திறந்து அந்த செக்யூரிட்டி என்னை உள்ளே அனுப்பிட்டு வாசல்லயே நின்னுகிட்டான். நம்ம சந்துருவை பார்த்ததுமே எனக்கு குலை நடுங்கி போயிடுச்சு. சினிமாவிலே ஒரு பணக்கார அப்பாவா ஒருத்தர் வருவாரே வயசானவர், வெள்ளை தாடி வச்சுகிட்டு, நல்ல வெயில்லயும் கோட், சூட் மாட்டிகிட்டு இருப்பாரே அவரை போல இருக்கார் சந்துரு.எனக்கு அப்பவே லைட்டா நடுக்கம் வந்துடுச்சு. சந்துரு அந்த செக்யூரிட்டிய பாத்து ஒரு கத்து கத்தினார் பாருங்க எனக்கு அப்பவே ப்டம் விட்டு போச்சு. கண்ணிலே பட்டாம் பூச்சி பறக்குது. "செக்யூரிட்டி ஹூ இஸ் திஸ், நானே ஒரு முக்கிய கெஸ்ட்டுக்காக வெயிட் பண்ணிகிட்டு இருகேன், இவனை யார் இங்கே விட்டது. மேன் அப்பாய்ன்மெண்ட் இருக்கா மேன்?" அப்படீன்னு கத்துறார். அந்த கெஸ்ட்டே நான் தான்னு சொல்லிடலாமா இல்லாட்டி அப்படியே ஓடி போயிடலாமான்னு நெனச்சுகிட்டே இருக்கும் போதே அந்த செக்யூரிட்டி நான் தான் அந்த கெஸ்ட்ன்னு சொல்ல அவர் முகம் போன போக்கை பார்க்கனுமே....அப்படியே கல்கத்தா காளி மாதிரி ஆயிட்டார்.

"நீயா நீயா மேன் அது உன்னால முடியுமா அந்த தண்ணியை அடைக்க, சொல்லு சொல்லு எந்த மெத்தேடுல சரி பண்ணுவ சொல்லு, உனக்கு இந்த பிரச்சனையோட வீரியம் என்னான்னு தெரியுமா?"அப்படி இப்படீன்னு கத்திகிட்டே இருக்கார். நான் சொன்னேன் "சார் பிலாஸ்டிக் பேப்பர் வச்சு, சிலிகான் சீலண்ட் போட்டு..."ன்னு ஏதோ உளறிகிட்டே இருக்கேன். உடனே தன் கையிலே இருந்த ரிமோட் வச்சு அந்த ரூம்ல இருந்த எல்.சி.டி மானிட்டர்ல பிரச்சனைக்கு உரிய இடத்தை நேரா சூம் பண்ணி காமிச்சார். அப்பவும் கத்துவதை நிப்பாட்டலை. அது என்னா பிரச்சனைன்னா அந்த பில்டிங் கிரவுண்ட் புளோருக்கு கீழே 4 ப்ளோர் கார் பார்க்கிங். பக்கத்திலே கடல் இருக்கு. புட்டிங் சரியா போடாமையோ என்ன பிரச்சனையோ தெரியல கடல் தண்ணி ஊற ஆரம்பிச்சு ஒரு மோட்டார் போட்டு தண்ணிய வெளியே எடுக்கிறாங்க. பெரிய லெவல் பிரச்சனை. கிட்ட தட்ட அந்த பில்டிங்ககே இடிக்க வேண்டிய நிலமை. உலக லெவல்ல கன்சல்ட் பண்ணிகிட்டு இருக்காங்க அந்த் பிரச்சனைய சரி பண்ண. நான் என்னவோ சர்வ சாதாரணமா பிலாஸ்டிக், சிலிகான் சீலண்ட்ன்னு சின்ன பிள்ளை தனமா சொல்லி அவர் குருதி அழுத்தத்தை எகிற செஞ்சுட்டேன். மனுஷன் என்னை குத்தி கொதறி தொண்டை வரண்டு போய் தண்ணிய குடிச்சுட்டு குடிச்சுட்டு திட்டுறார். எனக்கோ ஒரு வழியா வெளியே விட்டா தேவலை போல இருக்கு. அவருக்கு இருந்த கொலவெறியிலே அந்த செக்யூரிட்டிய விட்டு சுட சொல்லிடுவாரோன்னு பயமா போச்சு.

நடு நடுவே அவருக்கு வந்த போன்ல "நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், இன்னும் அரை மணி நேரத்துக்கு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு வேற சொல்லிகிறார். ஆக நமக்கு இன்னும் அரை மணி நேரத்துக்கு குமுறி எடுக்க போறான்னு தெரிஞ்சுது. அந்த அரை மணி நேரமும் சும்மா வானத்துக்கும் பூமிக்குமா பறந்து பறந்து திட்டி தீர்த்தார். திட்டு எல்லாம் ஸ்டாக் தீர்ந்து போச்சுன்னா யோசிச்சு யோசிச்சு திட்டுறார். கடைசியா கெட் அவுட்ன்னு கத்தின போது தான் எனக்கு கொஞ்சம் பயம் போச்சு. சரின்னு வெளியே வந்தேன். அவருக்கு என்னை திட்டினது பத்தலை போல இருக்கு. திரும்பவம் கூப்பிட்டார். கூப்பிட்டு "டேய் என் அப்பா அம்மா கூட இப்படி சந்துரு சந்துருன்னு தலையிலே அடிச்ச மாதிரி கூப்பிட்டதில்லை... இந்த கம்பனியே என்னை பார்த்து பயப்படுது..என்னை சந்துரு சந்துருன்னு உன் வேலைக்காரனை கூப்பிடுவது போல கூப்பிட்டியே மகாபாவி....உன்னை நான் இந்த ஜென்மத்துல எங்கயும் பார்க்க கூடாது...கெட் அவுட்..........."ன்னு கத்த நான் ஓடியே வந்துட்டேன். உள்ளே போகும் போது அந்த செக்யூரிட்டிகிட்டே இருந்த மரியாதை திரும்பி வரும் போது தலை கீழா மறி போயிருந்துச்சு. கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறை தான்.

மெதுவா வெளியே வந்து என்னை ஆசுவாச படுத்திக்க ஒரு டீக்கடையிலே உக்காந்தேன். அப்போ என் மேனேஜர் கிட்ட இருந்து போன். "என்ன ஆச்சு எத்தன ரோல் பிலாஸ்டிக் தேவைப்படும், எத்தன லேபர் தேவைப்படும்ன்னு பார்த்தியா? அந்த சந்துரு ஆள் எப்படி, காண்டிராக்ட் நமக்கு தானே"ன்னு கேட்டார். நான் அதுக்கு "சார் சந்துரு நல்ல பையன் சார். பசு மாதிரி குணம். ஆனா பாருங்க அவன் ரேன்சுக்கு ஒரு மேனேஜர் லெவல்ல தான் பேசுவானாம். அதனால நீங்க கிளம்பி இங்க வாங்க. நான் கிளம்பி அங்க வர்ரேன். இங்க வந்துட்டுசந்துருக்கு போன் பண்ணி பேசுங்க. சும்மா தைரியமா பேசுங்க. எத்தன பிளாஸ்டிக் ரோல் தேவைன்னு சந்துருகிட்டயே கேளுங்க.சந்துரு பையன் நல்ல குணமான பையன். கிளம்பி உடனே வாங்க"ன்னு சொல்லிட்டு மெதுவா கிளம்பி துபாய் வந்து சேர்ந்தேன்.

September 20, 2008

சிறிது நேரத்திற்கு முன் போன்!!!

அண்ணன் வடுவூர் குமார் போன் பண்ணியிருந்தாங்க. அமீரக ஜோதியிலே ஐக்கியமாயிட்டாங்க!! அண்ணனுக்கு நான் சொன்ன அறிவுரை நான்கு.
1.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்
2.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்
3.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்
4.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்

வாழ்க வளமுடன்!!!

September 8, 2008

அந்த தாவணி தேவதையின் பெயர்.............

அந்த தாவணி தேவதையின் பெயர் சூடிக்கொடுத்த சுடர் கொடி. அவளின் வசீகரமே அவள் தலைமுடிதான். மற்ற பெண்களின் சடையின் அடர்த்தி இவள் சடையின் ஒரு பிரிக்கு சமமாக இருக்கும். அத்தனை மொத்தமான சடை அவள் முட்டிகால வரை பிரண்டு ஆட்டம் போடும். அவள் கொஞ்சம் குள்ளமான உருவம். நிறம் என்று பார்த்தால் மாநிறம் தான். அவள் சிகப்பாக இருந்திருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்காது. நல்ல திருத்திய முகம். ஆனால் எப்போதுமே ஒரு மெல்லிய சோகம் இழந்து ஓடும் உதடுகள். கண்கள், அதன் உள்ளே ஓடி விளையாடும் அந்த கருப்பு திராட்சகள் கிட்ட தட்ட ஆண்கள் அத்தனை பேரையுமே "அட" போட வைக்கும்.

என் வீட்டுக்கு எதிர் வீடு அவளின் உறவினர் வீடு. அவள் வீடு எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ தள்ளி இருந்தது. +2 வரை அங்கே படித்துவிட்டு கல்லூரிக்காக உறவினர் வீட்டுக்கு வந்து விட்டாள். ஒரு காலை நேரத்தில் அவளின் உடமைகள் அடங்கிய ஒரு ஒயர் கூடையோடு அவளின் அப்பா அழைத்து வந்த போது தான் நான் முதன் முதலாக பார்த்தேன். அந்த வினாடியை இந்த நிமிடம் வரை என்னால் மறக்க முடியவில்லை. அவளுக்காகவே நான் தட்டச்சு பயிற்சிக்கு சென்றேன். அவளை கவர எத்தனை முயற்சிகள். ஆனால் அவள் எதற்கும் அசைந்து கொடுக்காதமையால் ஒரு நாள் தட்டச்சு பயிற்சி பள்ளியின் வாசலில் இருந்த அவள் சைக்கிளோடு என் சைக்கிளையும் இணைத்து பூட்டிவிட்டு காத்திருந்தேன். வந்து பார்த்த அவள் கொஞ்சமும் கோபிக்கவில்லை. "என்னங்க நம்ம சைக்கிளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க" என சொல்லிவிட்டு மெல்லியதாக சிரித்தாள். எனக்கு ஆயிரம் வண்ணத்து பூச்சிகள் மனதில் பறக்க தொடங்கி விட்டது. என்னை இந்த உலகமே கவனீக்க தொடங்கியது போல ஒரு நினைவு. என்னை சுற்றி ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். என் வேடிக்கை பேச்சுகளால் நான் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். என்னுடைய அந்த குணம் தான் அவளுக்கு பிடித்ததாம். குசூலோடித்கொதுடுங்த்கதன்.சுடர்கொடி என எல்லாம் கிருக்க தொடங்கினேன். எந்த மரத்தை பார்த்தாலும் இதயம் வரைய ஆரம்பித்தேன். ஒரு சீப்பும் கொஞ்சம் முக பவுடரும் நிரந்தரமாக என் சட்டை பையில் வந்து குடியிருக்க தொடங்கியது. எந்த காரை பார்த்தாலும் அந்த கார் கதவின் கண்ணாடியில் என்னை பார்க்க தொடங்கினேன். ஏனனில் அதில் மட்டுமே கொஞ்சம் குண்டாக தெரிந்தேன்.

அவள் கூந்தலுக்கு பூ வைக்க ஆசைப்பட்டேன். அவள் என் கூடவே இருக்க ஆசைப்பட்டேன். நண்பர்களை விட்டு தனியே வந்து சிந்திக்க தொடங்கினேன். அபத்த கவிதைகள் பொங்கி பொங்கி வந்தன. பொங்கியதை எல்லாம் பேப்பரில் வாந்தியாக எடுத்தேன். நானே படித்து மகிழ்ந்தேன். என்னை நம்பாமல் சலூன் கடைகாரரை நம்பினேன் மீசை திருத்த!அம்மாவின் சமையல் பிடிக்காமல் போனது. அப்பாவின் பேச்சுகள் அலுப்பாக இருந்தன. நான் என்ன வண்ணத்தில் உடை உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆளாள் அவள். வித விதமாக என்னை போட்டோ எடுத்து கொள்ள ஆசையாக இருந்தது. அதை அவள் பார்க்க வேண்டும் என்பதில் அதீத ஆசையாக இருந்தது. அவள் போட்டோவை என் இதயத்துக்கு இணைப்பாக ஒட்டி கொள்ள ஆசையாக இருந்தது. ஒரு குச்சியில் அந்த போட்டோவை கட்டி எனக்கு 1 முழத்துக்கு முன்பாக ஆடிக்கொண்டிருக்க அபத்த யோசனை வந்து தனியே வீட்டின் அறையிலே செய்து பார்க்க தூண்டியது. "தென்றலே என்னை தொடு" படமும் "வருஷம் 16" படமும் எனக்கு ராமாயண மகாபாரதமாக ஆகியது. அவள் சடையை பிடித்து இழுக்க ஆசை வந்தது. எங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என எழுதி பார்க்க வைத்தது. யாருடைய கல்யாண பத்திரிக்கையிலோ அந்த மணமக்களுக்கு பதிலாக எங்கள் பெயரை எழுத வைத்தது மனது.

அவள் சாதாரண ஜுரத்துக்கு அவள் உறவினர் சைக்கிளில் டாக்டர் வீட்டுக்கு போய் திரும்பியவுடன் நான் போய் டாக்டரிடம் "டாக்டர் அபாய கட்டத்தில் இருந்து தாண்டிவிட்டாளா இல்லையெனில் அப்போலோ கொண்டு போகலாமா" என கேட்டு டாக்டரை மயக்கமடைய வைத்தேன். முப்பத்தி இரண்டு பக்கத்துக்கு எல்லாம் கடிதம் எழுதி அவளிடம் கொடுக்க வைத்தது மனது. பின் அவளிடமிருந்து 37 பக்க பதில் கடிதத்தை உடனே படிக்காமல் நடு மைதானத்துக்கு கொண்டு போய் உரக்க படிப்பது, பின்னே "சூடிகொடுத்த சுடர் கொடி குலோத்துங்கன்" என்கிற அவள் கையெழுத்தை மட்டும் கிழித்து வாயில் போட்டு விழுங்குவது, (அது போயிருக்கும் ஒரு 500 கையெழுத்து வயித்து குள்ளே)பிரசவத்துக்கு அவளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு வாசலில் நான் கையை பிசைந்து கொண்டிருப்பதாக நினைத்து கொண்ட்தெல்லாம் கொஞ்சம் அதிகபட்சம் தான்.

நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு. அவளோ பெண்கள் கல்லூரியில் முதல் ஆண்டு. நான் இளமறிவியல் முடித்து அடுத்த கட்டத்துக்கு போகும் போது அவள் இன்னும் அதிகமாகவே என்னை விழுங்கிவிட்டிருந்தாள். காதலி உடையவன் என்கிற கர்வம் எனக்கு தனி அந்தஸ்தை கொடுத்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தான் அவள் வீட்டுக்கு விஷயம் தெரிய வர அவள் படிப்புக்கு பாடை கட்டப்பட்டு அவளின் சொந்த ஊருக்கும் அழைத்து போக பட்டாள். நானும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. காதலிப்பது என்பது கற்பு இழப்புக்கு சமமாக அவள் வீட்டார் நினைத்தார்கள்.அவசர அவசரமாக அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க நாலு திக்கும் ஆட்கள் பறந்தார்கள்.

(ஆறு மாதங்களுக்கு பின்…………………)


அந்த சுடிதார் தேவதையின் பெயர் பிந்தியா. அவள் சேர நன்னாடு. விரித்து விட்ட ஈர தலைமுடியும், நெற்றி சந்தனமும், மயக்கும் கீரி விட்டது மாதிரியான கண்களும்,அவளின் நெடிய உருவமும், எலுமிச்சம் பழ வண்ணமும் ஆண்கள் அத்தனை பேரையும் நின்று பார்க்க வைக்கும். அந்த வண்ணமே அவளின் சிறப்பம்சம், அவள் கொஞ்சம் மாநிறமாக இருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்க மாட்டாள். எப்போதுமே அவள் உதடுகளில் ஒரு வித மின்னல் கீற்று மாதிரியான குறும்பு ஓடிக்கொண்டே இருக்கும்.…………………

போங்கப்பா பதிவு ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டது …மாற்றம் என்பது மட்டுமே மாறாதது இவ்வுலகில்!!!!!