பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 21, 2017

திமுகவின் பொருளாளராக அமர திருமதி. கனிமொழி அவர்களுக்கு காலம் “கனி”ந்து விட்டது!



 “ஸ்பெக்ட்ரம்” வழக்கில் “திமுக” விடுதலை!  ஆமாம்! இது தனிப்பட்ட நபரான அண்ணன் ஆ.ராசா அவர்கள் விடுதலையோ அல்லது தனிப்பட்ட அம்மா திருமதி தயாளு அம்மையார் அவர்கள் விடுதலையோ அல்லது தனிப்பட்ட திருமதி கனிமொழி அவர்கள் விடுதலையோ என கருத முடியாது! இது திமுகவின் விடுதலை! மேற்சொன்ன தயாளு அம்மையார் அனுபவித்த மன உளைச்சல்,  ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் அடைந்த  மன உளைச்சல், சிறைவாசம், அவமானங்கள் ஆகியவைகளை குறைத்தும் மதிப்பிட முடியாது! அதே நேரம் திமுக என்னும் இயக்கம் பட்ட இன்னல்கள் என்பதை ஒரு பட்டியலில் அடைத்தும் விட முடியாது. திமுக என்பது சுமார் ஒரு கோடி உறுப்பினர்களால் கட்டமைக்கப்பட்ட கோட்டை. அதில் ஒரு செங்கல் பழுதானாலும் அந்த கோடி தொண்டனுக்கும் மன உளைச்சல் தான்! ஆனால் அண்ணா கண்ட அந்த இயக்கத்தை 50 ஆண்டுகளாக எவ்வித சேதாரமுமின்றி காத்து வரும் தலைவர் கலைஞர் அவர்கள் இந்த “ஸ்பெக்ட்ரம்” பழியால் பட்ட வேதனை சொல்லி மாளாது! ஆகவே இது கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பு!


எப்படி கொண்டாடலாம் என்பதில் தான் இப்போதைக்கு திமுகவின் கவனம் இருக்க வேண்டும்! அந்த கொண்டாட்டங்கள் தமிழகத்தின் கடைக்கோடி ஆட்களை சென்றடைய வேண்டும்! என்ன செய்யலாம் அதற்கு? ஒரு மாநில மாநாடு நடத்தி “ஸ்பெக்ட்ரம்” விழா எடுக்கலாம்! திமுகவின் 11 வது மாநில மாநாடு “ஸ்பெக்ட்ரம் சிறப்பு மாநாடு” என பெயரிட்டு அதை கொண்டாடலாம். அதற்கு முன்பாக அந்த மாநாட்டு விளக்க கூட்டம் தமிழகம் முழுமையும் நடத்தி பொதுமக்களிடம் நம் அப்பழுக்கின்மையை கொண்டு சேர்க்கலாம்! ஸ்பெக்ட்ரம் வழக்கு என்பதே தனிப்பட்ட நபர்களை அழிக்க நடத்தப்பட்ட வியூகம் அல்ல! 1949ல் ஆரம்பிக்கப்பட்டு அண்ணா அவர்களையும் சேர்த்து ஆறு முறை முதல்வர் பதவியையும் பிடித்த இயக்கம்! சமூக நீதியை காத்த இயக்கம்! அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றிய இயக்கம்! அப்படிப்பட்ட இயக்கத்தை அழிக்க நடந்த யுத்தத்தில் திமுக இப்போது வென்றுள்ளது. ஆகவே இதன் “வெற்றிக்கொண்டாட்டம்” என்பது விண் முட்ட நடத்தப்பட வேண்டியது அவசியம். 



இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு என்பது திமுக என்னும் இயக்கத்தின் மீது மத்திய ஆட்சியாளர்கள் மற்றும் ஆதிக்க சக்திகளை ஒருங்கே தன்னகத்தே கொண்ட  ஒரு விஷப்பாம்பு புற்றான மத்திய தணிக்கைக்குழு, அதற்கு மகுடி ஊதும் பிடாரன்களான ஆதிக்க ஊடகங்கள் ஆகியவைகள் சேர்ந்து தொடுக்கப்பட்ட யுத்தம்! யுத்தகளத்தில் அந்த எதிரணியினர் பிணையாக பிடித்து வைத்து போரை ஆரம்பித்தது யாரைத்தெரியுமா.... தயாளு அம்மையார், ஆ.ராசா, கனிமொழி ஆகியவர்களைத்தான்! இந்த போரில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது! ஆம்! பிணையில் பிடிபட்டவர்களே யுத்தமும் செய்தார்கள். திமுகவின் ஒட்டு மொத்த படையணியும் ஊக்கம் கொடுத்தது! இயக்க தலைமையோ தன் முழு ஆதரவையும் கொடுத்து அழகு பார்த்தது! பிணையில் பிடிபட்டவர்கள் போராடினார்கள். ஒரு வருடம்,இரு வருடம் அல்ல... ஏழு ஆண்டுகள் நடந்த தொடர் போராட்டம் அது! போர் தொடுத்தவர்கள் தான் அடிக்கடி நிராயுதபாணியாகினர். பிடிபட்ட ஆ.ராசா அவர்களோ “இன்று போய் நாளை வா” என அனுப்பிய அதிசயம் அடிக்கடி நிகழ்ந்தது. போரின் முடிவில் கூட வெற்றி தோல்வியை அறிவிக்க கூட அவர்கள் நேற்று போய் இன்று தான் வந்தனர் என்பது தான் ஆச்சர்யமே! இன்றோ திமுக என்னும் இயக்கத்தை அழிக்க நடந்த போரில் நம்மவர்கள் திமுக தலைமைக்கோ, அல்லது தொண்டர்கள் என்னும் படையணிக்கோ அல்லது தங்களுக்கோ எவ்வித சேதாரமும் இல்லாமல் வெற்றிக்கனியை பறித்துக்கொண்டு வந்து நம் செயல்தலைவர் காலடியில் சமர்பித்து விட்டனர். அதை நம் செயல்தலைவரோ தலைவரிடமுமும், பொதுச்செயலாளரிடமும் பகிர்ந்து கொண்டார்.

பொதுவாக ஒரு போருக்கு பின்னால் அதன் வெற்றிக்கு பின்னாள் போர் செய்த அந்த வெற்றி வீரருக்கு மன்னர் பரிசளிப்பது வழக்கம் தானே? அதைத்தான் நம் செயல்தலைவர் அவர்களும் செய்வார் என நம்புகின்றோம் படையணியின் கடைக்கோடி வீரர்கள்!

திமுக என்னும் ஆலமரத்தின் விதை போட்டு அதை செடியாக்கி, மரமாக்கியவர் நம் அண்ணா அவர்கள்! 1949ல் நம் இயக்கத்தை தோற்றுவித்த போது அதற்கு தலைமை பொறுப்பான தலைவர் கிடையாது, பொதுச்செயலாளர் கிடையாது, பொருளாளர் கிடையாது. ஒரு கூட்டுக்குழு தான் அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வந்தது. அதன் பின்னர் இயக்கம் வளர்ந்து வளர்ந்து வரும் போது அதாவது மூன்றாண்டுகளில் 1952ல் அந்த கூட்டுக்குழு மட்டுமே சமாளித்து விட முடியாது என்னும் நிலை வந்தது. அப்போது தான் அண்ணா அவர்கள் பொதுச்செயலாளர் ஆனார். அப்போது நெடுஞ்செழியன், ஈ.வி.கே சம்பத் ஆகியோர் தலைமை நிலைய செயலர்கள் ஆனார்கள். கவனிக்க... அப்போது துணைப்பொது செயலாளர் என்னும் பதவி திமுகவில் இல்லை. தலைவர் பதவி என்பதை அண்ணா அவர்கள் “பெரியாருக்காக” காலியாக வைத்திருந்தார். அந்த 1952ல் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அந்த மாபெரும் இயக்கத்துக்கு கும்பகோணத்தை சேர்ந்த திரு. குடந்தை கே.கே.நீலமேகம் அவர்கள் முதன் முதலாக பொருளாளர் ஆனார்கள். அப்போது திமுகவுக்கென்று சொத்துகள் கிடையாது. “பொருள்” அவ்வளவாக கிடையாது. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் காலணா தான் கட்சியின் பொருள். அதற்கு கூட அப்போதிருந்தே திமுக தன் வரவு செலவுகளை துல்லியமாக வைத்திருந்தது. ஆக அப்படி முதல் பொருளாளர் ஆனவர் தான் குடந்தை கே.கே.நீலமேகம் அவர்கள். அப்போது அவருக்கு அண்ணா அவர்களுக்கு சமமான வயது தான் இருக்கும்!  அதாவது 40 பிளஸ் தான்! ஆக நம் இயக்கத்தில் ஒரு பொறுப்புக்கு வர வேண்டும் எனில் வயது என்பது ஒரு பொருட்டல்ல. உழைப்பும் தியாகமும் தான் பொறுப்புக்கு தகுதி என்னும் நிலை தான் அப்போது முதலே!

அதன் பின்னர் வருடம் ஆக ஆக, இயக்க பொறுப்புகள் பலருக்கு வருகின்றது. அது போலவே அண்ணா அவர்கள் காலத்திலேயே நம் தலைவர் அவர்களுக்கும் “பொருளாளர்” பொறுப்பும் வருகின்றது. தலைவர் அவர்கள் பெயரிலேயே “நிதி” வைத்திருப்பவர் அல்லவா? அதனால் திமுக என்னும் இயக்கத்துக்கு ஆங்காங்கே கட்சி அலுவலகங்கள் இயக்கத்தின் பெயரால் தொண்டர்களிடம் துண்டேந்தி வாங்கப்படுகின்றது. அது போல தேர்தல் நேரத்தில் நிதி திரட்ட வேண்டுமா? அஞ்சியதே இல்லை இந்த கருணா “நிதி” அவர்கள்! தேர்தல் நேரத்தில் தேர்தல் நிதி வசூல் செய்யும் பொறுப்பு அப்போது பொருளாளர் ஆக இருக்கும் இப்போதைய தலைவர் கலைஞர் அவர்களிடம் இருந்தது. அண்ணா அவர்கள் பத்து லட்சம் இலக்கு என சொன்ன போது அதை 11 லட்சமாக கொண்டு வந்து கொட்டியவர் கலைஞர். அது போல தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படுகின்றது அண்ணாவால்! அந்த மாபெரும் கூட்டத்தில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்துக்கொண்டே வந்த அண்ணா அவர்கள் கடைசியாக “சைதாப்பேட்டை தொகுதி....” என சொல்லிவிட்டு அமைதி காக்க... கூட்டம் ஸ்தம்பித்து போய் நிற்கின்றது. இது வரை கலைஞர் பெயரை சொல்லவில்லை அண்ணா எனும் போது தொண்டர்களுக்கோ குழப்பம். ஏனனில் அப்போதே கலைஞர் அவர்கள் சட்ட மன்றத்துக்கு பத்து வருட சீனியர். ஆமாம் 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சை என வெற்றி பெற்றவர். அண்ணா கூட்டத்தினரின் ஆரவாரத்தை அதிகப்படுத்தி “சைதாப்பேட்டை தொகுதியில் நிற்பவர் மிஸ்டர் 11 லட்சம்” என அறிவித்தார்! இது தான் ஒரு பொருளாளர் அவர்களுக்கு அழகு!  பொருளாளராக தலைவர் கலைஞர் அவர்கள் சிறப்பாக செயல்பட்டமைக்காக அண்ணாவால் கொடுக்கப்பட்ட பரிசு தான் அந்த “மிஸ்டர் 11 லட்சம்” என்னும் பட்டம்!

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அந்த பொருளாளர் பதவி என்பதை அண்ணாவின் மறைவுக்கு பின்னர் இயக்கத்துக்கு புதிய பொறுப்புகள் அமைக்கப்பட்டு கலைஞர் அவர்கள் தலைவர் பதவிக்கு வருகின்றார். அப்போது பொருளாளர் ஆனவர் தான் எம் ஜி ஆர். எம் ஜி ஆரை பொருளாளர் ஆக்கியவர் தலைவர் கலைஞர். 1969ல். பொருளாளர் பதவி என்பது நம் இயக்கத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய பதவியாகும். பின்னாளில் அதே எம் ஜி ஆர் “கணக்கு கேட்டு”  இயக்கத்தை உடைத்து துரோகம் செய்து விட்டு போனவர் என்பதை நாடே அறியும். “கணக்கு சொல்ல வேண்டிய இடத்தில்” இருந்த எம் ஜி ஆர் அவர்களே “கணக்கு கேட்ட” விந்தை எல்லாம் ஏன் நடந்தது எனில் எம் ஜி ஆர் போன்ற நம்பிக்கையில்லா ஆட்கள் அந்த பதவிக்கு வந்தமைதான் காரணம்!

அதன் பின்னர் சில பல மாற்றங்கள் ஆன பின்னர்  பிற்காலத்தில் அண்ணன் சாதிக்பாட்சா பொருளாளர் ஆனார். அவர் மறைவுக்கு பின்னர் அண்ணன் ஆற்காடு வீராசாமி அவர்கள் பொருளாளர் ஆனார். அவரது வயோதிகத்தின் காரணமாக பின்னர்  அப்போது துணைப்பொதுச்செயலாளர் ஆக பொறுப்பு வகித்த நம் செயல்தலைவர் அவர்கள் பொருளாளர் பொறுப்புக்கு வந்தார்! அதன் பின்னர் பொருளாளர் பொறுப்பில் இருக்கும் போதே நம் தலைவர் அவர்களின் வயோதிகத்தின் காரணமாக நம் இயக்க தொண்டர்கள் விருப்பத்தாலும், அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் நீண்ட நாள் வற்புறுத்தல் காரணமாகவும், மிக மிக முக்கியமாக தன் 14 வயது முதல் கழக கொடி பிடித்து மிசாவில் அடிபட்டு ரத்தம் சிந்தி, இளைஞர் அணியை தொடங்கி இயக்கத்தில் புதுரத்தம் பாய்ச்சி, வைக்கோ போன்றவர்கள் பிரிந்த பின்னரும் இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்தி வந்த தகுதியின் அடிப்படையில் நம் செயல்தலைவருக்கு அந்த பொறுப்பை வழங்கி மகிழ்ந்தார் தலைவர். அன்றைக்கே பொருளாளர் பொறுப்பை மற்ற யாருக்காவது தலைவர் ஒதுக்கி தந்திருக்கலாம். ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் காலம் கனியட்டும் என காத்திருந்தார்.

இன்றைக்கு தான் அந்த காலம்  “கனி”ந்துள்ளது என நம் செயல்தலைவர் அவர்களும் உணர்ந்திருப்பார்கள். கடந்த பத்து நாட்களாகவே இந்த 2 ஜி வழக்கின் தீர்ப்பு தேதி குறித்த பின்னரே திருமதி கனிமொழி அவர்களுக்கு பெரிய வரலாறு கொண்ட திமுகவின் பொருளாளர் பொறுப்பை கொடுக்கலாமா என்பது பற்றிய ஹேஷ்யங்கள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன. பேராசிரியரும், செயல்தலைவரும் சாதாரணமாக சந்தித்தால் கூட இது பற்றிய பேச்சுகள் தான் நடந்தன என புலனாய்வு பத்திரிக்கைகள் எழுதின. சமூக வலைத்தளங்களில் இயக்கத்தினர் உள்ளேயே ஒரு சிலர் இது பற்றி எழுதுவதும், அதற்கு பதில் சொல்லும் விதமாக சண்டை நடப்பதும் நடந்து கொண்டுள்ளதை பார்க்க முடிகின்றது. நல்ல விபரமான ஒரு  முகநூல் கட்டுரையாள நண்பர் ஒருவர்  கூட “கனிமொழிக்கு பொருளாளர் பதவிக்கான தகுதி இருக்கின்றதா எனில் கண்டிப்பாக ஆம் என்பேன். ஆனால் தவிர்க்க வேண்டும் என்பேன். காலம் கனியட்டும் என்பேன்” என முத்தாய்ப்பு வைத்தார்.

ஆக கனிமொழி அவர்களுக்கு பொருளாளர் பதவி கொடுத்து அவரது தியாகத்துக்கும்,  உழைப்புக்கும் மரியாதை செய்வது என்பது குறித்து கிட்டத்தட்ட எல்லோருக்குமே ஆர்வம் உள்ளது என்பது புலனாகின்றது. ஆக கனிமொழி அவர்களுக்கான வயது தான் அவர்களுக்கு ஒரு காரணமாக இருக்கின்றது எனில் முதல் பொருளாளர் திரு. கே.கே.நீலமேகம் அவர்கள் அந்த பதவிக்கு வந்த போது அவருக்கு ஆன வயதை விட திருமதி கனிமொழி அவர்களுக்கு சற்று கூடுதலாகத்தான் ஆகின்றது. 1969ல் பிறந்த அவர் இதோ இன்னும் 15 நாட்களில் ஜனவரி 5ம் தேதி 2018 அன்று தன் 49 வயதை எட்டுகின்றார். தியாகத்துக்கும் எவ்வித குறைவும் வைக்கவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியிலும் திமுக என்னும் இயக்கத்துக்கு மிகுந்த பெயரை பெற்றுத்தந்துள்ளார். இயக்க  தேர்தல் பரப்புரைகள், தனக்கு இயக்கத்தில் கொடுக்கப்பட்ட மகளிர் அணி பொறுப்பு என எதிலும் அவர் தன் திறமையை காட்ட தவறியது இல்லை. தொண்டர்களிடம் பாசமாக பழகும் இயல்பு கொண்டவர்.இந்திய தலைவர்கள் எல்லோரிடமும் அறிமுக பழக்கம் ஆனவர்.  எல்லாவற்றுக்கும் மேலாக நம் செயல்தலைவர் அவர்கள் ஒரு கோடிட்டால் அந்த கோட்டின் மீது மட்டுமே நடக்கும் குணம் கொண்டவர். தலைமைக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர். இவர் மீது இதுவரை சொல்லப்பட்ட சொத்தை வாதம் 2 ஜி வழக்கு என்பதும் இப்போது தீயிலிட்ட சருகாகிவிட்டது. ஆகவே திருமதி கனிமொழி அவர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் “பொருளாளர்” பொறுப்பை கொடுப்பதற்கு இதுவே சரியான தருணம்! அப்படி கொடுக்கும் பட்சத்தில் அந்த இனிய செய்தி தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நிலையில் கூட யாரும் எதிர்பாராத அதீத முன்னேற்றத்தை கொடுக்கும் என்பதில் ஐயமேதுமில்லை! 

திமுகவை அழிக்க நினைத்து ஆதிக்க சக்திகளை எதிர்த்து போரிட்டு வென்றமைக்கான பரிசாக நம் செயல்தலைவர் இதை அறிவிக்கலாமே!

இது  ஒரு சாதாரண கடைக்கோடி தொண்டன் செயல்தலைவர் தளபதி அவர்களுக்கு வைக்கும்  கோரிக்கை மட்டுமே என்பதையும் மற்றவர்கள் உணர்க!

November 10, 2017

“ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா” - நூலின் மீதான என் பார்வை!



பெயரை கேட்டாலே ஒரு வித பயம் வந்து அடிவயிற்றில் பிசைகின்றதா? ஆமாம். அது ஒரு சின்ன நூல் தான். மொத்தம் 46 பக்கங்கள் தான் அந்த நூல். பொதுவாக 46 பக்கங்கள் கொண்ட ஒரு அச்சு பிரதியை “கையேடு” என சொல்வதே வழமை. ஆனாலும் நான் அதை “நூல்” என சொல்கின்றேனெனில் அதன் உள்ளீடு அத்தகையது. எழுதியவர் மீது “தேச துரோக குற்றம்” சுமத்தி வழக்கு பதியவைக்கும் அளவுக்கு அந்த 46 பக்கங்களில் விஷயம் இருக்கின்றது எனில் அது “நூல்” வகையறாக்களை சார்ந்தது என்பதே என் கருத்து!


பொதுவாக எல்லோரும் ஆறுகள், தண்ணீர் வராமை, வறட்சி, வட நாட்டில் வெள்ளம் போன்ற செய்திகள் வரும் போதெல்லாம் முனுமுனுக்கும் வார்த்தைகள் “கங்கையும் காவிரியையும் இணைக்க வேண்டும். அக்கே தண்ணீர் வெள்ளமாக போகின்றது, இங்கே காவிரி உள்ளிட்ட தென்னக ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன, ஆகையால் அவைகளை இணைக்க வேண்டும்” என்பதாகவே இருக்கும். போதாக்குறைக்கு பாரதியார் வேறு பாட்டெல்லாம் பாடி விட்டு போய்விட்டார் எனும்போது இந்தியாவின் வடக்கில் ஓடும் ஆறுகளை தெற்கில் இருக்கும் ஆறுகளோடு இணைக்க வேண்டும் என்னும் எண்ணம் நம் மனதில் பசுமரத்து ஆணியாக பதிந்து விட்டது என்பதே உண்மை. நிலைமை இப்படி இருக்க திடீரென்று ஒரு கலகக்குரல் “நதிகளை இணைக்க வேண்டாம்” என எழுந்தால் நாம் முதலில் அதை புறந்தள்ளுவோம். பின்னர் பரிகசிப்போம், ஏளனம் செய்வோம், கோபப்படுவோம் உச்சகட்டமாக “அந்த கலகக்காரனை புடிச்சு உள்ள போடுங்க போலீஸ்கார்” என வீரவசனம் பேசுவோம். யாராவது ஒருவராவது “அந்த கலகக்காரர் நதிகளை இணைப்பதை ஏன் எதிர்க்கின்றார்” என்பது பற்றி அவருடைய கருத்தை கேட்டோமா எனில் இல்லை என்பதே உண்மை.


ஜப்பான் வாட்டர் ட்ரீட்மெண்ட் என்கிற ஒரு விஷயம் உண்டு. காலை வழக்கமாக ஒருவர் எழுந்திருக்கும் நேரத்தின் ஒரு மணி நேரம் முன்பாக அலாரம் வைத்து எழுந்து 3 லிட்டர் குளிர்நீர் குடிக்க வேண்டும். அதற்கு முன்னர் பல்துலக்குவது என்பது கூடாது. இது ஒரு ட்ரீட்மெண்ட். அத்தனையே. முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிடில் புறந்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருங்கள். அவ்வளவு தான் விஷயம்! அதே போலத்தான் இந்த புத்தகமும். அதன் உள்ளே இருக்கும் விஷயம் என்ன என்றே தெரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ள முயலவும் இல்லாமல் அதை பரிகசிப்பதும், எதிர்பதும் அத்தனை ஒரு உத்தமமான செயல் அல்ல!அது போலவே எந்த கருத்தாக இருந்தாலும் முதலில் கேளுங்கள்! சாத்தியமா, சாத்தியப்பட்டால் பலன் கொடுக்குமா என்பதை பகுத்தறிந்து பின்னர் பரிகசிக்கவோ அல்லது எதிர்கவோ செய்யுங்கள் என்பதே என் வாதம்!


நதிகளை இணைக்க வேண்டும் என்னும் விஷயம் நம் குழந்தை பருவத்தில் இருந்து மந்திர சொல் போல மனதில் பதிந்து விட்டது. அதை இந்த 30 ரூபாய் நூல் கொண்டு அத்தனை சுலபமாக அழித்து விட இயலுமா எனில்.... இயலும் தான் போலிருக்கின்றது. காரணம் அதற்கான முகாந்திரம் இருப்பதால் தான் அரசு எழுதிய நூலாசிரியர் மீது “தேச துரோக வழக்கு” தொடுத்துள்ளது. இதே திராவிட முன்னேற்ற கழகம் சார்ந்த மாநில செய்தி தொடர்பு செயலர் திரு. கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் நதிகளை இணைக்க வேண்டி பல சட்ட வழி போராட்டங்களை தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றார் பல ஆண்டுகளாக! உச்சநீதி மன்றம் வரை நடையாய் நடந்து ஒரு சில தீர்ப்புகளையும் பெற்று விட்டார். அவரது இலக்கு என்பதும் தமிழக விவசாய நலன் தான் முடிவுப்புள்ளி. அதே போல இந்த நூலின் ஆசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களின் இலக்கும் அதே தமிழக விவசாய நலன் தான். வழிகள் தேன் வேறு வேறு. ஆனால் இலக்கு என்பது ஒன்றே ஒன்று “விவசாய நலன்”. ஆக பேராசிரியர் ஜெயராமன் இந்த நூல் வழியாக எந்த விதமான தேச துரோகத்தை செய்து விட்டார் என்பது தான் புரியவில்லை. அனேகமாக வழக்கை தொடர்ந்த அரசுக்கும் புரியாது என்றே நினைக்கின்றேன். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அது பற்றி பேசிக்கொள்வோம். இப்போது நூலின் கருத்துக்கு வரலாம்!


நதிகள் இணைப்பு எனில் நம் மனதில் ஓடும் பிம்பம் என்பது கங்கை முதல் காவிரி வரை வாய்க்கால் வெட்டி அதன் வழியே தண்ணீரை கொண்டு வருவது. அது பாய்ந்து அடித்து நுரை பொங்க உத்தபிரதேசத்தில் இருந்து மத்திய பிரதேசம் வந்து அந்த மாநிலத்தை வளம் பெற செய்து, அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா என வரும் வழி முழுமையும் வளமாக்கி பின்னர் தமிழகம் வந்து தமிழக அனைத்து மாவட்டம் வழியாக பாய்ந்து ஓடி வளமாக்கி... இத்யாதி... இத்யாதி... இப்படித்தானே கற்பனையில் இருக்கின்றோம்... ஆனால் இந்த நூலில் ஆசிரியர் அவர்கள் அதில் தான் தன் முதல் சந்தேகத்தை தெளிவாக தெளிக்கின்றார்.


இந்திய நதிகளை இணைக்க ஆகும் செலவு, அதற்கான கால அவகாசம், அந்த கால அவகாசம் முடியும் போது குறிப்பிட்ட அந்த செலவு எத்தனை அதிகமாகும் என்பதில் ஆரம்பித்து தொடர்கின்றார். அரசு மதிப்பில் 20 லட்சம் கோடி ஆகும். அது கால்வாய் வெட்டி முடிக்கும் போது 30 லட்சம் கோடியை தொடும் என அரசு சொன்னதை எடுத்து இயம்புகின்றார். இந்த பணத்துக்கு அரசு எங்கே போகும் என வினா எழுப்புகின்றார். அங்கே தான் முதல் இடி விழுகின்றது அவருக்கும் நமக்கும்! அதாவது அரசு அந்த பணத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பனிகள் மற்றும் உலக வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள் வழியாக மூலதனமாக பெறும். சும்மா வருவாளா சுந்தரி?


சுமார் இருபது வருடங்கள் முன்பாக இந்திய  தேசிய நெடுஞ்சாலைகள் எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன. தங்க நாற்கர சாலைகள் இந்தியா முழுமையும் நான்கு வழி சாலைகளாக போடப்பட்டுள்ளதே? அது போது மாநில நெடுஞ்சாலைகள் கூட போடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வந்தது? இவற்றில் பல கிலோமீட்டர் சாலைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சாலை போட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுத்து விட்டு சுங்க வரி வசூலித்து அதை எடுத்துக் கொள்கின்றனர். சாலை போடுவதற்கும், அதை பராமரிக்கவும் சாலையில் செல்லும் இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் எல்லாமே சாலை வரி கட்டுகின்றோம். ஆனாலும் இந்த தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட சாலைகளுக்கு தனியாக ஒவ்வொறு பயணத்தின் போதும் சுங்க வரி (டோல்கேட்) கட்டுகின்றோம். அதே போல இந்திய கார்ப்பரேட் கம்பனிகள், வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பனிகள் எல்லோரும் நதிகளை இணைக்க முன்வரும் போது அந்த நதிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? சாலை போட்டால் அதில் பயணிக்கும் வாகனங்களில் இருந்து சுங்க வரி வசூலிக்கலாம். அதுவே நதி எனில் என்ன செய்வார்கள்? யார் யாருக்கு தண்ணீர் தருகின்றார்களோ அவர்களிடம் மீட்டர் போட்டு காசு வசூலிப்பார்கள். ஆனால் இப்போது காவிரியில் தண்ணீர் வருகின்றது எனில் விவசாயிகளுக்கு இலவசமாக தண்ணீர் வரும். தண்ணீர் இலவசம் என்பதால் அந்த விவசாயி தான் விதைக்காகவும், உரம், பூச்சி மருந்துகள், விவசாய கூலி போன்ற செலவுகள் போக தனக்கான லாபம் வைத்து ஒரு குறிப்பிட்ட விலைக்கு அந்த விளைச்சலை விற்க இயலும். அதுவே கார்ப்பரேட் கம்பனிகளிடம் இருந்து முக்கிய மூலதனமான தண்ணீரை விலை கொடுத்து வாங்கினால் என்ன ஆகும்? விற்பனை செலவு பன்மடங்காக உயரும். கொள்முதல் இடத்திலேயே விலை உயர்வு எனில் கடைசியாக அது தரகர்கள் வழி பயணித்து பயனாளிக்கு வரும் போது அந்த விளைச்சலின் விலை என்பது இப்போது இருப்பதை விட மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதை தான் நூலாசிரியர் தன் சந்தேகமாக சொல்கின்றார்.  அவர் தெளிவாக இப்போதைக்கு 30 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசோ அல்லது அந்த நதி பாய்ந்து வரும் மாநில அரசுகளோ இந்த செலவை செய்ய முடியாது அதனால் வேறு வழியில்லாமல் உலக மற்றும் இந்திய கார்ப்பரேட் கம்பனிகளுக்கு ஆறுகளை விற்பதை தவிர வேறு வழி இல்லை என்கிறார்.

மேலும் அந்த கார்ப்பரேட் கம்பனிகள் விவசாயத்துக்கு கொடுப்பதை விட தொழிற்சாலைகளுக்கு அதுவும் கார்ப்பரேட் கம்பனிகளுக்கு தான் முன்னுரிமை தருவார்கள் என்றும் ஐயுறுகின்றார். அவரது அச்சத்திலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கின்றது. மறுப்பதற்கில்லையே! இதோ தாமிரபரணியை உறிஞ்சி எடுத்து பெப்சி தயாரிப்பதை நாம் கண் முன் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம். இப்படி நதிகள் இணைப்பால், காசு கொடுத்தால் கார்ப்பரேட் கம்பனிகளில் இருந்து தண்ணீர் கிடைக்கும் என அறிந்தால் அகில உலகுக்கும் இந்த செயற்கை குளிர்பான கம்பனிகள் ஒட்டு மொத்த உற்பத்தி இடமாக இந்தியாவைத்தானே தேர்வு செய்யும். அப்படி செய்யும் போது “ஆகா நமக்கு ஏற்றுமதி வரி கிடைக்கின்றது. நாம் வல்லரசு ஆகலாம்” என அரசியல்வாதிகள் சப்பை கட்டு கட்டுவார்கள். அந்த நதிகளின் புதிய கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயி தண்ணீருக்கு கொடுக்கும் காசை விட கொஞ்சம் தூக்கலாக கொடுக்கும் தொழிற்சாலை முதலாளிகளுக்கு தானே முன்னுரிமை கொடுப்பார்கள். ஆக விவசாயம் படுத்து விடும். இந்தியா முழுமையும் நதிகள் இணைந்தாலும் விவசாய நிலம் தரிசாக கிடக்கும். அதை ஏன் தரிசாக போட்டுக்கொண்டு என்று அந்த நிலத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்வான் அந்த ஏழை விவசாயி என அச்சப்படுகின்றார் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன்.

நதிகள் இணைப்பினால் நடக்கும் முதல் கோணல் இது! அடுத்தது “சாத்தியமின்மை” பற்றி அந்த நூலில் விரிவாக சொல்கின்றார். உலகில் எங்கெங்கு நதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் எத்தனை சாத்தியமானது. அப்படி சாத்தியமானதற்கு காரணம் என்ன? அப்படியே இணைத்த பின்னர் அந்த திட்டம் தோல்வியில் முடிந்த வரலாறுகள் எல்லாம் விரிவாக அந்த நூலில் குறிப்பிடுகின்றார். உதாரணத்துக்கு  “சீனாவில் வடக்கு - தெற்கு நீர் மாற்றும் திட்டம்”. இதில் திட்டம் சாத்தியமானதற்கு காரணம் சீனா முழுமையும் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்பதால் இணைப்பு சாத்தியம் ஆனது. ஆனால் மிகப்பெரிய பலனை தரவில்லை என்கிறார் ஆசிரியர். 80 பில்லியன் டாலர் செலவில் 2002ல் தொடங்கி அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. 3,30,000 மக்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்தனர். 45 பில்லியன் கனமீட்டர் நீர் தெற்கில் இருந்து வடக்கே மஞ்சள் ஆறுக்கு கொண்டு செல்லப்பட்டும் முழுமையான பலன் தரவில்லை என்கிறார் ஆசிரியர். (பலன் தரவில்லை என்று ஒரு வரியில் முடித்து விட்டார் தவிர எப்படி பலன் தரவில்லை என விளக்கவில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். 45 பில்லியன் கன மீட்டர் மடைமாற்றம் செய்யப்பட்டும் பலன் இல்லை என்பது என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை) ஆனால் அதே நேரம் 3,30,000 குடியிருப்புகள் இழப்பு என்பது ஒரு வரலாற்று சோகம் என்பதை மறுப்பதற்கில்லை.

அடுத்து ஸ்பெயின் நாட்டில் டாகுஸ் - சேகுரா நீர் மாற்றம் திட்டம்! இது 1978ல் நிறைவேறிய திட்டம் இது. இதில் நான்கு ஆறுகள் இணைக்கப்பட்டன. டாகுஸ், ஜூகார்,சேகுரா, குவாடியானா ஆகிய ஆறுகள் இணைக்கப்பட்டதால் 1.7 லட்சம் ஹெக்டேர் நில பாசனம், தவிர 78 நகராட்சிகளுக்கு குடிநீர் என கோலாகலமாக நடந்தது. ஆனால் நாள்பட நாள்பட டாகுஸ் ஆற்றில் நீர் வற்றி அங்கிருந்த மீன் வகைகள் அழிந்து மேலும் நிலையான தண்ணீர் இல்லாமல் அத்திட்டம் தோல்வி என்கிறார் ஆசிரியர்.ஆனால் அது ஒற்றை கலாச்சாரம், மொழி என்பதால் இணைப்பு என்பது சாத்தியம் ஆனது என தெளிவு படுத்துகின்றார்.  இதே போல தென் ஆப்பிரிக்காவில் லெசோதா பீடபூமி நீர்த்திட்டம் 1950ல் ஆரம்பிக்கப்பட்டு 36 வருடங்கள் கழித்து அந்த திட்டம் முடிந்தது. அதுவும் ஒரே தேசிய இனத்தின் உள்ளேயே நடந்த இணைப்பு என்பதால் சாத்தியம் ஆனதாக சொல்கின்றார் ஆசிரியர். ஆனால் பல தேசிய இனங்கள் கொண்ட இந்தியாவில் நதிகள் இணைப்பு என்பது சாத்தியம் இல்லை என்பதில் நூலாசிரியர் உறுதியாக இருக்கின்றார். காரணம் அவர் ஏற்கனவே இங்கு பார்த்து கொண்டிருக்கும் சண்டைகள்!

ஆனால் நூலாசிரியர் ஒத்துக்கொண்ட ஒரு நதிநீர் இணைப்பு என்பது இந்தியாவின் உள்ளே கிருஷ்ணா - கோதாவரி இணைப்பு என்றே நினைக்கின்றேன். இந்த ஆறுகள் விஜயவாடா அருகே இணைக்கப்பட்டது. அந்த ஆறுகள் ஒரே தேசிய இனமான தெலுங்கு பேசும் மக்கள், ஒரே கலாச்சார மக்கள் போன்ற காரணங்களால் சாத்தியம் ஆனது என்பதை ஆசிரியர் விளக்குகின்றார். அதனால் 1 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுவதையும் ஆசிரியர் சொல்லி விட்டு இதை கருத்தில் கொண்டு அனைத்து ஆறுகளையும் இணைத்து விடலாம் என நினைக்கக்கூடாது என்கிறார்... அதற்கான காரணத்தையும் சொல்கின்றார்.  இதோ அவர் சொல்லும் உதாரணம் தெலுங்கு கங்கா திட்டம். கிருஷ்ணா நிதியை சென்னை ஸ்ரீசைலம் அணையில் இருந்து 406 கிமீ தூரம் கால்வாய் அமைத்து பூண்டி நீர்த்தேக்கம் கொண்டு வந்து சென்னை மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்வது என்பது திட்டம். ஆந்திரா என்பது வேறு மொழி, தமிழ் வேறு தேசிய இனம் என்கிறார் ஆசிரியர். இதில் எனக்கு உடன்பாடில்லை. இருவருமே திராவிடம் என்னும் ஒரே இனம் தான். மொழி தான் வேறு என்பது என் கருத்து. ஆனால் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் அடிப்படையில் ஒரு தமிழ்தேசியவாதி என்பதால் எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை என்பினும் அவர் சொல்ல வந்த கருத்தை சொல்கிறேன். அதாவது இந்த திட்டம் 1977ல் தமிழ்நாட்டுக்கும், கிருஷ்ணா நதி நீர் பயன்பாட்டாளர்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலம் சேர்ந்து கையெழுத்தானது. அதன் படி மற்ற மூன்று மாநிலமும் மாநிலத்துக்கு 5 டி எம் சி தண்ணீர் என சேர்த்து 15 டி எம் சி தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும். ஒரு வழியாக திட்டம் 1996ல் தான் நிறைவேறியது. அதற்கு எம் ஜி ஆர் அரசும் (அன்னை இந்திரா, என் டி ஆர் முன்னிலையில் அப்போது எம் ஜி ஆர் 30 கோடி ரூபாய் காசோலையை ஒரு சந்தன பேழையில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் முன்பணமாக கொடுத்தார்) கலைஞர் அரசும், பின்னர் ஜெயலலிதா அரசும் மாறி மாறி வகை தொகையில்லாமல் பணம் கொடுத்து கொடுத்து அந்த கால்வாய் 1991- 1995ல் மிக தாமதமாக கிடப்பில் போடப்பட்டும், மெதுவாக நடந்தும் ஒரு வழியாக திமுகவின் ஆட்சி காலத்தில் 1996ல் செப்டம்பர் 26ல்  கலைஞர் ஒரு பொதுமேடையில் சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து ஒரு குடம் தண்ணீர் பெற்றார். மொத்தம் சுமார் 700 கோடியில் முடிய வேண்டிய திட்டம் 2013 வரை சுமார் 4000 கோடியை தாண்டி விழுங்கி விட்டது.

இதோ இப்போது சமீபத்தில் ஜெயலலிதா மறைந்த உடன் ஓ.பன்னீர்செல்வம் குறுகிய காலம் முதல்வராக இருந்த போது அவர் ஓடிச்சென்று ஆந்திர முதல்வரிடம் கேட்டாராம். அவரும் தண்ணீர் கொடுத்தாராம் என எல்லா பத்திரிக்கையிலும் மாய்ந்து மாய்ந்து எழுதினார்களே... அதன் பின்புலத்தை விளக்குகின்றார் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள். அங்கே தண்ணீர் கேட்க சென்ற தமிழக முதல்வரிடம் ஆந்திர முதல்வர் கேட்ட தொகை 443 கோடி. உடனே ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு பகுதி பணத்தை கொடுப்பதாக ஒத்துக் கொண்டு தண்ணீர் பெற்றார். மேலும் சந்திரபாபு நாயுடு அவர்கள் தமிழக பள்ளிகளில் தெலுங்கு மொழி தொடர வேண்டும் என கேட்டமைக்கும் தமிழக முதல்வர் தலையை ஆட்டிக்கொண்டு வந்தார். அப்படி இருந்தும் ஒப்பந்தப்படி 15 டி எம் சி தண்ணீர் இது வரை வந்தது இல்லை. ஓ.பன்னீர் செல்வம் 2 டி எம் சி வேண்டும் என கேட்க அதற்கு சந்திரபாபு நாயுடு தான் ஏற்கனவே 1 டி எம் சி தந்து விட்டதாகவும் மீதியை தருவதாகவும் சொன்னார். (2007ல் திமுக ஆட்சியில் அதிகபட்சமாக 4 டி எம் சி வந்தது. 2013ல் 2 டி எம் சி வந்தது. மற்ற படி அதிமுக ஆட்சியில் நீர் வரவே இல்லை. இது தான் நடந்தது. 

ஆக வேறு வேறு மொழிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் வழியாக நதி நீர் இணைப்பு என்பது எப்படி சாத்தியமில்லை என்பதற்கு மேற்படி உதாரணத்தை தருகின்றார் ஆசிரியர். ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் அவர் சொல்வதை! ஆக ஒரு மாநிலத்துக்கும் அடுத்த மாநிலத்துக்குமே நதி நீர் இணைப்பில் நீர் பெறும் மாநிலம் இத்தனை கோடி கொடுத்து தான் போராடி நீர் வாங்கும் நிலை. இதிலே கார்ப்பரேட் கம்பனிகளுக்கு நதிகளை தாரை வார்த்து விட்டு அவர்களிடம் காசு கொடுத்து விவசாயிகள் வாங்க வேண்டிய நிலை வந்தால் என்ன ஆகும் என்பது தான் நூலாசிரியரின் ஆதங்கம்!

அடுத்து ஆசிரியர் நதிநீர் இணைப்பால் நிகழும் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றி அதிகமாக கோபப்படுவதை இந்த நூலில் நாம் எங்கும் பார்க்க நேரிடுகின்றது. ஆறுகள் வீணாக கடலில் கலக்கின்றது என்பதை ஆசிரியர் சரி தான் என்பது தான் எனக்கு ஒத்துக்கொள்ள இயலவில்லை. அவர் அதாவது அவர் எனில் அவரில்லை... பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நதிகள் கடலில் கலக்காமல் போவதால் கடலின் உப்புத்தன்மை அதிகரிக்கும். அதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும் என ஒரு வாதம் வைக்கின்றார்கள். கடலில் கலக்கும் ஆறுகள் என்னைப்பொறுத்தவரை கடலில் கரைக்கும் பெருங்காயம் போலத்தான். ஆறுகள் வழியே கலக்கும் நன்னீர் கடலின் உப்புத்தன்மையை மிதமாக்கும் என்கிற வாதத்தை என்னால் ஏற்க இயலவில்லை. அது போல ஒரு படுகையில் இருந்து புதிதாக ஒரு கால்வாய் வெட்டி அதன் வழியாக வரும் மீன்கள் புதிய படுகையில் வாழாது அழிந்து விடும் என சொல்வதையும் என்னால் ஏற்க இயலவில்லை. ஏனனில் ஒரு வரை உயிரினம் தான் வாழ தகுதி இல்லை தான் போகும் இடம் என அறிந்தால் அங்கு போகாது. உதாரணத்துக்கு காவிரி ஆறு பூம்புகாரில் கடலில் கலக்கின்றது. காவிரியில் விரால், ஆத்து கெண்டை, குறவை போன்ற ஆற்று மீன்கள் வாழும். அவைகள் தவறிக்கூட காவிரி கலக்கும் பூம்புகாரில் அப்படியே கடலுக்கு உப்பு தண்ணீரில் சென்று விடாது. தன் இருப்பிடம் எது என தெரியும் அவைகளுக்கு. அது போல கொள்ளிடம், ராஜா வாய்க்கால் பகுதிகளில் முதலைகள் உண்டு. அந்த ஆறுகள் கடலில் தான் கலக்கின்றன. என்றாவது ஒரு நாள் ஒரு முதலையாவது உப்பு நீருக்கு தவறிப்போய் சேர்ந்து இறந்து மிதந்தது உண்டா? கிடையாது. இயற்கை அந்த சக்தியை அந்த உயிரினங்களுக்கு வழங்கி இருக்கின்றது. அது போல அந்த முகத்துவார பகுதிகளில் மடவாய் மீன் என்று ஒன்று இருக்கும். அந்த மீன்கள் கடலின் உப்பு நீர், ஆற்றின் நன்னீர் ஆகியவை கலக்கும் இடத்தில் இருக்கும். அவைகள் சுத்த உப்பு நீரான ஆழ் கடலுக்கும் செல்லாது. அது போல சுத்தமான நன்னீரான ஆற்றின் மற்ற பகுதிகளுக்கும் வராது. அவைக்ள் நன்னீர்+உப்புநீர் கலக்கும் இடத்தில் மட்டுமே வாழும். இது தான் இயற்கை! அதனால் நூலாசிரியரின் அந்த வாதத்தை நான் ஒத்துக்கொள்ள போவதில்லை.

அதே போல கால்வாய் வெட்டுவதால் அங்கு வாழும் மனிதர்கள் இடம் பெயர வேண்டும் என அவர்களுக்காக பச்சாதாபம் அடைகின்றார் பேராசிரியர் ஜெயராமன். உண்மை தான். ஆனால் தவிர்க்க இயலாதது. அவர் இது விஷயமாக ஆதங்கப்படும் போது “தஞ்சாவூரில் வைரமுத்து பேசும் போது நதிகளை இணைக்க வேண்டும் என புரியாமல் பேசுகின்றார்” என்கிறார். நியாயமாக பார்த்தால் பேராசிரியரின் இந்த விஷயத்துக்காக அதாவது பல லட்சம் மக்கள் குடிபெயர வேண்டும் என்கிற காரணத்துக்காக வேண்டியாவது நதிகள் இணைப்புக்கு  திரு. வைரமுத்து அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஏனனில் வைகை அணை கட்டப்பட்ட போது தன் கிராமம் அழிந்ததை அழுது அழுது பேயத்தேவர் என்னும் கதாபாத்திரத்தை கதாநாயகனாக கொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதியவர் தான் திரு. வைரமுத்து அவர்கள். இப்படி நதிகள் இணைக்கும் போது பல கள்ளிக்காட்டு இதிகாசங்கள் பிறக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்!

மேலும் இந்த நதிகள் இணைப்பு ஏன் சாத்தியமில்லை என்பதற்கு நூலாசிரியர் சொல்லும் இன்னும் ஒரு காரணம்..... சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் பன்னாட்டு நதிகள். அவைகள் சீனா, வங்காள தேசம், பாகிஸ்தான், நேப்பாளம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஆறுகள். நாம் நம் வசதிக்கு கங்கையை, பிரம்மபுத்திராவை, சிந்து நதியை கால்வாய் வெட்டி தெற்கே கொண்டு வந்து விட முடியாது. அதற்கு மற்ற நாடுகள் அனுமதி வேண்டும். அப்படி அவைகள் அனுமதித்தால் சீனாவும் நாங்களும் எங்கள் பகுதியில் வரும் அந்த ஆறுகளை வெட்டி உள்ளே இழுத்துக் கொள்கிறோம் என உரிமை கோரும். அது போல பாகிஸ்தான், வங்காள தேசம், நேப்பாள் ஆகியவைகள் போர்க்கொடி தூக்கும் அபாயம் இருக்கின்றது என்கிறார் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள். ஆக இதுவும் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம் தான்!

சரி வேறு என்ன தான் வழி? ஒரு திட்டம் கொண்டு வ்ந்தால் அதற்கு குறை சொல்லும் கலகக்காரர்கள் தான் இருப்பார்கள். தீர்வு சொல்ல மாட்டார்கள் என சொல்வார்கள். அதாவது ஒரு பழமொழி “கட்டுன வீட்டுக்கு நொட்டை சொல்ல வந்துட்டான்” என்பார்கள். ஆனால் பேராசிரியர் அவர்கள் தீர்வாக ஒரு விஷயம் சொல்லி இருக்கின்றார். தமிழகத்தை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அது மட்டுமே காவிரிக்கு உரிய நீரை பெற்றுத்தரும்.உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்தாலே போதும் தமிழகத்துக்கு தேவையான நீர் கிடைத்து விடும் என்கிறார் பேராசிரியர். இப்போது தமிழகத்தில் 84 அணைகள் இருப்பதை ஆசிரியர் குறிப்பிட்டு அதில் நீர் தான் இல்லை என்பதையும் கோடிட்டு காட்டுகின்றார். காவிரி தீர்ப்பாயம் தனது இறுதி தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டி எம் சி நீர் தர வேண்டும் என்றது. அது இயற்கைக்கு மாறானது. ஆனால் தமிழக அரசு 250 டி எம் சி வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றது. ஆனால் (ஜெயலலிதா ஆட்சியில்) தமிழக வழக்கறிஞர் வாயையே திறக்கவில்லை. ஆக இது போன்ற குளறுபடிகள் தீர்க்கப்பட்டாலே போதும் தமிழகத்துக்கு தேவையான நீர் கிடைக்கும். இயற்கை வளம் அழியாது. யாரும் குடிபெயர வேண்டாம். இது மட்டுமே ஒரே தீர்வு என்கிறார் நூலாசிரியர்.

மேலே நான் சொன்னது எல்லாம் அந்த நூலில் இருந்து மேலோட்டமாக சொன்ன விஷயங்கள் மட்டுமே. அந்த நூலில் இயற்கை ஆர்வலர்கள், பொறியாளர்கள், இந்திய நதிகளை இணைக்க வேண்டி செயல்பட்ட திட்ட பொறியாளர்களின் கூற்றுகள், அப்துல் கலாம் அவர்களின் திட்டம், அது போல இந்தியா முழுமைக்கும் ஆறுகள் வழியே கிடைக்கும் நீர் எவ்வளவு? அதில் வீனாக போவது, ஆவியாதல் போன்றவைகள் போக மீதம் நாம் பயன்படுத்தும் நீரின் அளவு போன்ற பல விஷயங்களை ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார்!


இப்போது நதிநீர் இணைப்பை ஆதரிப்போர் நாளையே நதிகள் இணைக்கப்பட்டு, பின்னர் கார்ப்பரேட் ஆசாமிகள் காசுக்கு நீரை விவசாயிக்கு விற்கும் நிலை வந்தால் இப்போது ஆதரிப்பவர்கள் தங்கள் சொத்தை விற்று விவசாயிகளுக்கு பதில் அந்த நீருக்கான காசை கொடுப்பார்களா என கோபமுடன் கேட்கின்றார் நூலாசிரியர்! பதில் தான் இன்னும் வரவில்லை!  என்னைக்கேட்பின், இப்படி ஒரு வராத பதிலை நதிகள் இணைப்புக்கு முட்டு கொடுக்கும் பலரை கேட்பதை விட ஒற்றை சாளர முறையில் அரசாங்கத்திடமே “நதிகளை இணைத்தால் எங்களுக்கு இலவச நதி நீர் எப்போதும் போல வேண்டும். அதில் மாநில உரிமை மறுக்கப்படக்கூடாது, விளை நிலங்களை கார்ப்பரேட் கம்பனிகள் தொழிற்சாலை அமைக்க விற்பனை செய்ய தடை சட்டம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஆறுகளை இணைக்க ஒப்பந்தம் போட வேண்டும்” என்கிற விஷயங்களை கேட்டு போராடலாமே என்பது தான்!



தவிர கார்ப்பரேட் சாமியார்களின் ஆட்டம் நதிகள் இணைப்பு விஷயத்தில் ஜக்கி வாசுதேவ் போன்ற காட்டை அழித்தவர்கள் திடீரென நதிகளை பாதுகாக்கவும், இணைக்கவும் குபீரென புறப்பட்டு மிஸ்டு கால் கொடுக்க சொல்வது எல்லோருக்குமே கொஞ்சம் பயத்தை தான் கூட்டுகின்றது. எலி ஏன் அம்மனமாக ஓடுகின்றது என நினைக்க தோன்றுகின்றது.


நான் மேலே சொன்ன விஷயங்கள் தான் “ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா” என்கிற பேராசிரியர் ஜெயராமன் அவர்களின் நூல் பற்றிய என் கருத்துகள்!


நிற்க..... இந்த நூலின் ஆசிரியர் அவர்கள் இந்த நூலை எழுதி வெளியிட்டு மூன்று நாட்களில் அவர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்து விட்டது! அப்படியெனில் எங்கோ இடிக்கின்றதே! ஆக பேராசிரியர் நதிகள் இணைப்பினால் வரப்போகும் தீமைகளை பட்டியலிட்டாரே... அதன் படி தான் நடக்க போகின்றதா? இந்திய அரசு ஆறுகளை கார்ப்பரேட் கம்பனிகளுக்கு விற்கப்போவது  உண்மையா?


இந்த நதிகள் இணைப்பு என்பது என்னளவில் சாத்தியப்படக்கூடியது என்பதும், காசு கொடுத்து கார்ப்பரேட் கம்பனிகளிடம் இருந்து வாங்க தேவை இருக்காது என்றும் நினைக்கின்றேன். ஆனால் பேராசிரியரின் கருத்துகளை புறந்தள்ளவும் இயலாது!

*****************************************

நூலின் பெயர் : நதிகள் இணைப்புத் திட்டம் - “ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா” 

நூலாசிரியர் : முனைவர், பேராசிரியர் த.ஜெயராமன் M.A., M.Phil., P.hd., 

நூல்களை பெற:       புத்தகச்சோலை (பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர்)
பெரியார் மாளிகை, 
44, மகாதானத்தெரு,
மயிலாடுதுறை - பின் கோடு 609 001

போன்: 04364 228634

செல்: 9842007371,9443395550

விலை: ரூபாய் 30/=

நூலாசிரியர் பற்றிய மேலதிக விபரங்களை இத்துடன் இணைத்துள்ள இன்று வெளியான ஜூனியர் விகடன் கட்டுரையை புகைப்படமாக வெளியிட்டுள்ளேன். அதில் பார்க்கவும்!


நன்றி! வணக்கம்!
 


August 30, 2017

நெல்லை ஆரோக்ய எட்வின் அவர்களின் “நீட் தேர்வு” பற்றிய ஒரு பார்வை!

இது எங்கள் நண்பர் திரு. நெல்லை நாங்குநேரி தொகுதி திமுகவின் ஆரோக்ய எட்வின் அவர்கள் “நீட் தேர்வு”பற்றிய ஒரு மினி ஆய்வுக்கட்டுரை. கட்டுரையின் அனைத்து அம்சங்களும் அருமை. இதற்காக அவர் சேர்த்து தொகுத்து எழுதியிருக்கும் பல விஷயங்கள் புதியவைகள். கட்டுரை சம்பந்தமாக அவர் தயாரித்த கிராஃப் படங்கள் புரியும் படியான புதுமைகள். அந்த கட்டுரை அவரது முகநூல் பக்கத்தில் வந்துள்ளது. ஆனால் கருப்பு வெள்ளை எழுத்துகளில் படிப்பதைக்காட்டிலும் சில முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்டி, வேறு வேறு வண்ணத்தில் தீட்டி, தேவையான இடத்தில் தேவையான புகைப்படங்களை இட்டு அழகாய் காட்டும் பொருட்டு நான் இதை என் வலைத்தளத்தில் பதிகின்றேன். ஒரு வேளை எட்வின் அவர்களுக்கு இந்த கட்டுரையின் வடிவம் பிடித்து இருப்பின் அவரே ஒரு வலைப்பூ ஆரம்பிக்க இந்த முயற்சி ஒரு உந்து சக்தியாக விளங்கும் என நினைக்கின்றேன்.  இனி கட்டுரையை வாசியுங்கள்!

***********************************
தமிழக மருத்துவக்கல்லூரி இடஒதுக்கீடு, பயனடையும் தாழ்த்தப்பட்டவர்கள்! மங்காத மருத்துவ தரம்!

ஆய்வு: நெல்லை எட்வின்

நீட் தேர்வு அநீதி குறித்து தற்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் “நீட்” தேர்வை ஆதரிப்போர், மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு குறித்தும் குறிப்பிடுவதோடு, இந்த இட ஒதுக்கீட்டால் மருத்துவத்துறையின் தரம் குறைவதாகவும் (!) குறைபட்டுக்கொள்கிறார்கள்.


நீட் தேர்வால் சமூக நீதிக்கு ஆபத்தா? இடஒதுக்கீட்டால் மருத்துவத்துறையின் தரம் குறைந்ததா ? மருத்துவர்களின் தரம் குறைந்ததா ? நமது மாநிலத்தின் மருத்துவத்துறை எவ்வாறு உள்ளது என்று கடந்த பல நாட்களாக, பல்வேறு தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்தேன்.


அதன் சாராம்சம்தான் இந்த சிறு ஆய்வுக்கட்டுரை . இந்த கட்டுரையில் கடந்த ஐந்தாண்டு நடைபெற்ற மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை டேட்டா சேகரிக்கப்பட்டு அலசி ஆராயப்பட்டது. அதன் தாக்கத்தை உண்மை நிலையை வெளிகொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.
உண்மையிலேயே இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் இந்த துறையில் முன்னேறியிருக்கிறார்களா என்பதும் ஆராயப்பட்டுள்ளது.


இந்த டேட்டா அனைத்தும் அரசால் பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட பல வெப்சைட்களில் தேடி எடுக்கப்பட்டவை. ஒருசில டேட்டாவை நான் இப்போது இருக்கும் நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்று கூர்நோக்கி (projection) பார்த்துள்ளேன்.
இந்த எதிர்கால ப்ரோஜெக்ஷன் என்னுடைய தனிப்பட்ட மற்றும் பல வெப்சைட்களில் நான் படித்ததினால் வந்தது.


மாணவர் சேர்க்கையும் இட ஒதுக்கீடும்:-

தமிழக மாணவர் சேர்க்கையானது நீட் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இடஒதுக்கீடு (69%) அடிப்படையில்தான்.

அதாவது
Other category (Open Competition) – 31 %, BC – 30 %, MBC – 20 %, SC – 18 % , ST – 1 %
இதற்குள் அருந்ததியருக்கு மற்றும் இஸ்லாமியருக்கு உள் ஒதுக்கீடும் உண்டு ஆனால் இதுதான் பிரதான ஒதுக்கீடு.

இந்த ஆய்வில் நான் தெரிந்துகொண்டது இந்த மருத்துவத்துறையை டாமினேட் செய்வது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே (நீங்கள் நினைப்பதுபோல் உயர் சாதியினர் அல்ல).

இடஒதுக்கீடு மட்டுமல்லாமல் ஓபன் காம்பெடிஷன் (Other Category) சீட்டுகளையும் அதிகம் பிடிப்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்களே.
அதாவது இந்த துறையில், எம்பிபிஎஸ் படிப்பில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏதெனும் ஒருவகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களே!

அதாவது, 100இல் 95 சீட் பிற்படுத்தப்பட்டவர்களுக்கே.
ஒட்டுமொத்தமாக 95% இருக்கும் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 95%தான் கிடைக்கிறது. மீதி 5% இருக்கும் உயர்சாதினர்களில் , 3% சீட்களை பிராமணர்களே பெற்றுக்கொண்டுவிடுகிறார்கள் . இது அவர்களோடு உயர்சாதிப்பிரிவில் போட்டியிடும் சைவ பிள்ளைமார் , கார்காத்தார் பிள்ளைமார் போன்ற வகுப்பினருக்கு மிகவும் கடினமாக இருக்கிறது..

உயர்சாதியினர் போட்டியிடும் ஓபன் காம்பெடிஷனிலும் அவர்களுடன் போட்டியிட்டு அதிக சீட்களை வெல்பவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களே (BC, MBC etc) கடந்த பத்து வருடங்களாக (இந்த வருடம் நீங்கலாக ..ஏனென்றால் இந்த வருடம் ரேங்க் இல்லை) டாப் 20 ரேங்க் பட்டியலில் 16ல் இலிருந்து 18 இடங்களை பிடிப்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான்.

மேலே சொன்ன அனைத்தும் நான் மிக துல்லியமாக (ஒரு சில குறைகள் இருந்தாலும்) ஆராய்ந்து அழகான கம்ப்யூட்டர் சார்ட்டில் (computer based charts) செய்துள்ளேன்.. கீழே இருக்கும் படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.




இந்த படம் கடந்த 5 ஆண்டுகளில் எந்த சாதியினர் எத்தனை சீட் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது இந்த படம் ஒன்றே போதும் எவ்வாறு பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று மருத்துவ துறையில் கொடிகட்டி பறக்கிறார்கள் என்று சொல்வதற்கு.

அடுத்து


மேலே இருக்கும் படத்தில் ஓப்பன் கோட்டா (open category where anyone can compete for the seats) என்ற பிரிவில் அதாவது உயர் சாதியினருடன் போட்டியிட்டு தேர்வில் வெற்றிபெற்று அங்கேயும் அதிக இடத்தை பிடிக்கிறது பிற்படுத்தப்பட்டமக்கள்தான் (BC,MBC,SC etc)


ஏன் நீட் தேர்வை நமது கட்சியும், தளபதி அவர்களும் இவ்வளவு எதிர்க்கிறார்கள் என்பதற்கு அடுத்து வரும் புள்ளிவிவரங்கள்தான் காரணம்.
கடந்த 10 வருடங்களாக, உயர்சாதியினர் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே சேர்கிறார்கள் (இந்த வருடம் நீட் தேர்வினால் இது 8% ஆகியிருக்கிறது)
இங்குதான் பிரச்சினை.

வெறும் 48ஆக இருந்த அவர்கள் எண்ணிக்கை இன்று திடீரென 211ஆக உயர்கிறது.

இப்படி வருடா வருடம் சென்றால் கூடிய விரைவில் உயர்சாதியினரின் எண்ணிக்கை பலமடங்கு கூடி மறுபடியும் பிற்படுத்தப்பட்டவர்கள்பின்னுக்கு செல்லும் நிலை ஏற்படலாம். நாளை இதையே காரணம் காட்டி, இடஒதுக்கீடையும் ஏதாவது செய்தால் பிற்படுத்தப்பட்ட்பிள்ளைகளின் கனவு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூக நீதியே சமாதியாகிவிடும்.

அடுத்து



மேலே உள்ள இந்த படமானது கடந்த 5 வருடங்களில் இட ஒதுக்கீடு இருந்தால் எவ்வளவு பேர்இல்லையென்றால் எவ்வளவு பேர் ஒவ்வொரு சாதிபிரிவிலும்  மருத்துவர்களாகியிருப்பார்கள் என்பது விளக்கப்படுகிறது.

அதாவது இடஒதுக்கீடு அடிப்படியில் மாணவர் சேர்க்கை இல்லை என்றால் , பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் உயர்சாதி (FC) மாணவர்கள் 350இலுருந்து 400 சீட்கள் அதிகம் வாங்குவார்கள் . தலித் (SC) மற்றும் மிகவும் பின்படுத்தப்பட்ட (MBC) மாணவர்கள் கணிசமாக இழப்பார்கள்.

அடுத்து



இந்த படமானது நீட் தேர்வின் அடிப்படியில் நடந்தால் வெறும் 48 சீட்டிலிருந்து உயர்சாதியினர் 2020இல் 400 சீட்கள் பெறுவார்கள்.
அதாவது இதுவரை 2% பெற்றவர்கள் இதனால் 20%இருக்கும் மேலே பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பிற்படுத்தப்பட்ட் நானூறுபேர் மருத்துவராக முடியாது. பிற்படுத்தப்பட்ட (MBC,BC,SC etc) சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு காத்திருக்கிறது.

அடுத்ததாக


இப்போது இருக்கும் 5 ஆண்டு டேட்டாவை வைத்து (2017ஐ அடித்தளமாக வைத்துகொன்டு/Base year) எதிர்காலத்தை கணித்தால் அதாவது இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தால் அல்லது இப்போது ரத்து ஆனால் உயர்சாதியினர் பாதிக்குமேல் அதாவது 5% உள்ள அவர்கள் 50% சீட்களை வெல்வதற்கு வாய்ப்பு அதிகம் . 

அதாவது இட ஒதுக்கீடு இல்லையென்றால் இந்தத்துறையும் உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
இடஒதுக்கீட்டால் நமது மருத்துவத்துறை பாதிப்படைந்ததா?
இல்லை, கடந்த பல வருடங்களாக நமது மாநிலத்தில் இடஒதுக்கீடு மூலம்தான் இந்த துறையில் மாணவ சேர்க்கை நடக்கிறது.
ஆனாலும் இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவத்துக்கு நமது மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவிலேயே மெடிக்கல் டூரிசம் என்று சொல்லப்படும் மருத்துவத்திற்காக வெளிநாட்டிலும் மற்ற மாநிலத்திலும் அதிகம் விரும்பும் நகராக நமது சென்னை விளங்குகிறது.
நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவ காலோரிகள் இங்குதான் உள்ளது . தலைசிறந்த மருத்துவர்கள் இங்குதான் உள்ளார்கள்.
எந்த ஒரு நோயை எடுத்துக்கொண்டாலும் அதற்கு மூன்று அடுக்கு வைத்தியம் அல்லது கவனிப்பு தேவை (three levels of “care”)


1. முதல் அடுக்கு -Primary Care – to Prevent the Disease – நோய் வராமல் தடுக்க. அல்லது ஆரம்ப நிலையில் வைத்தியம் பார்க்க


2. இரண்டாவது அடுக்கு -Secondary Care – To Treat Disease – வைத்தியம் பார்க்க


3. மூன்றாவது அடுக்கு -Tertiary Care – To Treat Complications – நோயினால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க


இதில் முதல் அடுக்கு கவனிப்பை ஆரம்ப சுகாதார நிலையங்களும் (அந்த இயக்குனரகத்தில் பெயரில் ஆரம்ப சுகாதாரம் , தடுப்பு மருத்துவம் இருப்பதை கவனியுங்கள்) இரண்டாம் அடுக்கு கவனிப்பை அரசு மருத்துவமனைகளும், மூன்றாம் அடுக்கு கவனிப்பை மருத்துவக்கல்லூரிகளும் அளித்து வருகின்றன
.
உதாரணமாக

• சுகப்பிரசவம் என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பார்க்கலாம்

• அறுவை சிகிச்சை என்றால் அரசு மருத்துவமனைகளில் பார்ப்பார்கள்

• சிறிது சிக்கல் (உயர் இரத்த அழுத்தம், வெட்டு, மஞ்சள்காமாலை, இரட்டை குழந்தைகள், இரத்த போக்கு) என்றால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பார்க்கலாம்.

இந்த மூன்றடுக்குமே அரசாங்கத்தால் மிக சிறப்பாக பல வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருவதும் நம் மாநிலத்திலேதான்.

வட மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது நாம் எவ்வளவு மேம்பட்டு இருக்கிறோம் என்பது கீழ்வரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. .


மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு) தமிழ் நாடு - 149 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87 ; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான் - 48 ; சத்தீஸ்கர் - 23 ; இந்திய சராசரி : 36


Infant Mortality Rate (IMR சிசு மரண விகிதம் 1000 பிறப்புக்கு) :- 
தமிழ் நாடு - 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி : 40


Maternal Mortality Rate (MMR - ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்) தமிழ் நாடு - 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285 ; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167


தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) :- தமிழ் நாடு - 86.7% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2% ; மபி - 48.9% ; உபி - 29.9% ; ராஜஸ்தான் - 31.9% ; சத்தீஸ்கர் - 54% ; இந்திய சராசரி : 51.2%


கல்வி விகிதாசாரம் (Literacy Rate) :- தமிழ் நாடு - 80.33% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79% ; மபி - 70% ; உபி - 69% ; ராஜஸ்தான் - 67% ; சத்தீஸ்கர் - 71% ; இந்திய சராசரி : 74%


ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):- ----------------------------------------------------------- தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919


மனித வள குறியீடு (Human Development Index)
தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ;ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087


ஏழ்மை சதவீதம் (Poverty % of people below poverty line) தமிழ் நாடு - 11.28% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63% ; மபி - 31.65% ; உபி - 29.43% ; ராஜஸ்தான் - 14.71% ; சத்தீஸ்கர் - 39.93% ; இந்திய சராசரி : 21.92%


ஊட்டசத்து குறைபாடு குழந்தைகள் (Malnutrition) தமிழ் நாடு - 18% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5% ; மபி - 40% ; உபி - 45% ; ராஜஸ்தான் - 32% ; சத்தீஸ்கர் - 35% ; இந்திய சராசரி : 28%


நண்பர்களே… இட ஒதுக்கீட்டால் மருத்துவத்துறையில் பாதிப்பு ஏற்படுகிறதா? இந்த இட ஒதுக்கீட்டால் பயன்பெறுபவர் எவர்? நீட் தேர்வால் பாதிக்கப்பு யாருக்கு என்ற கேள்விகளுக்கெல்லாம் தற்போது விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

நீட் தேர்வை நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் இந்த ஆய்வு தெளிவாக்கியிருக்கும் என்றும் நம்புகிறேன்.
இதில் ஏதேனும் சந்தேகம் தங்களுக்கு இருந்தால் கேட்கலாம்.

******************************

கட்டுரையாளர்: நெல்லை நாங்குநேரி ஆரோக்ய எட்வின்


திரு. எட்வின் அவர்களின் இந்தப்பதிவின் முகநூல் சுட்டி

 https://www.facebook.com/permalink.php?story_fbid=750200835152798&id=747725028733712