பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 20, 2012

அத்திப்பூக்கள், சரவணன் - மீனாட்சி , தங்கம், புதியதலைமுறை இன்ன பிற...


போலி சாமியார்களை விட சீக்கிரமா  கவனிக்கப்பட வேண்டிய லிஸ்டிலே "சீரியல் சாமியார்கள்" தான் இருக்காங்க. எல்லா சீரியல்லயும் ஒரு சாமியார் இருக்காங்க. பெரும்பாலும் கதாநாயகி போகும் கோவில்ல தான் இருப்பாங்கன்னு நீங்க நினைச்சா... ஐ ஆம் சாரி.... கதை நகரும் களங்கள் எல்லா இடத்திலும் ஏதேனும் கோவில் இருக்குமே, அங்கல்லாம் ஆஜர் கொடுக்குறாங்க. கேட்டா (நான் கேட்கலைங்க... கதாநாயகி கேட்டா 'நான் இங்க 'தீர்த்த யாத்திரை'க்கு வந்திருக்கேன் என ஒரே பதிலை சொல்றாங்க.காவி உடை, குவாட்டர் கண்கள் (அதாவது சின்ன கண்)அதிலே "வெறி"த்த பார்வை... பின்ன இருக்காதா? அழகான கதாநாயகி கிட்டே தான் அவங்க டூட்டி... ஒட்டிய தாடி, தவிர கதாநாயகி "என் கஷ்டம் எல்லாம் எப்ப தான் தீரும்" என கேட்கும் டீபால்ட் கேள்விக்கு ... அஃப்கோர்ஸ் பார்வையாளர்களாகிய நாமும் தான்... பதில் சொல்லாம மோட்டுவளையை பார்ப்பாரே ... அப்போ அச்சு அசலா இலங்கை பிரச்சனை எப்போ தீரும்னு மன்மோகன்சிங்கை நிருபர்கள்  கேள்வி கேட்டா அவரு பார்ப்பாரே ஒரு பார்வை அது போல "எனக்கே தெரியலையேம்மா" என சோனியா காந்தி போட்டோவை பார்ப்பாரே அதே பார்வை...

இதல்லாம் எங்க இருந்து ஆரம்பிச்சுது இதல்லாம் என யோசித்து பார்க்கிறேன்... கிட்ட தட்ட "அண்ணாமலை" சீரியல்ல ஒரு கோமண சாமியார் வழியா தான் இந்த தொத்து வந்திருக்கனும் என நினைத்துக்கொண்டேன். வாழ்க சித்தி. வாழ்க எம் ஆர் ராதா!

************************

தம்பி வீடு கட்டும் போது மார்பிள் போட வந்தவரிடம் விலை சம்மந்தமா பேரம் நடந்த போது அவரிடம் "என்ன சார் நீங்க? அதான் மார்பிள் போடுறவங்க எல்லாம் ஹேர் கட் பண்ணிக்க போனா கூட ஒரு இரண்டு கோடி ரூபாய் பாக்கெட்ல போட்டு கிட்டு போறாங்க. டீ குடிக்க போனா ஒரு கோடி ரூபாய் எடுத்துட்டு போய்விட்டு மீதி சில்லரையை டிப்ஸ் ஆக கொடுத்டுட்டு வர்ராங்க, நீங்க என்னடான்னா சதுர அடிக்கு ஒரு ரூபாய் குறைக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க"என கேட்டு வச்சேன். அவர் பதறிப்போய் "அய்யோ எங்க இந்த கூத்து எல்லாம் நடக்குது?" என கேட்க  நான் சொன்னேன்... "மதியம் ரெண்டு மணிக்கு அத்திப்பூக்கள் பாருங்க சார். சன் டிவில வருது.அதிலே தான் இதல்லாம்" என சொல்ல அந்த மார்பிள் ஓனர் கொஞ்சம் பதட்டம் தணிந்து "ஆமா சார் ஆமா. நானும் இதை எல்லாம் கேள்விப்பட்டு அதை ஒரு நாள் பார்த்தேன். இங்க 25,000 ரூபாய் செக் ரிட்டர்ன் ஆகிடாம இருக்க காலை 12 மணிக்குள்ள நான் படும் பாடு எனக்கு தான் தெரியும்" என சொன்னார். அத்திப்பூக்கள் சீரியலை என்ன செய்யலாம்? வாடகைத்தாய், வளர்ப்பு அம்மா, அம்னீஷியா, டொம்னீஷியா, சீரியல் சாமியார், மந்திரக்கிழவி, கம்பனி போர்டு மீட்டிங், பங்கு வர்த்தகம் என சகல விஷயங்களும் அத்திப்பூக்கள்ல கொலை செய்யப்படும். முடிஞ்சா பாருங்க. சவாலாகவே சொல்றேன்.. முடிஞ்சா பாருங்க... நீங்களே சாமிய வேண்டிப்பீங்க... சீக்கிரம் அது முடிஞ்சு தொலையனும் என!

*****************************

"தங்கம்"... இரவு சன் டிவில ஒளிபரப்பு ஆகுது. நான் பள்ளி படிக்கும் காலத்தில் வைகாசி பொறந்தாச்சு என்னும் பிரசாந்த் அறிமுகம் ஆன படத்திலே வந்து அறிமுகம் ஆன காவிரி என்னும் பெண்... இல்லை .. இல்லை...ஆண்ட்டி தான் இதிலே காமடி ரோல் பண்றாங்க. அவங்க மட்டுமா காமடி பண்றாங்க. அதிலே ஸ்ரீலஸ்ரீ விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி ரங்கராஜாய தியாகராஜாய தெருப்புழுதி மண்ணாங்கட்டியாக என்னவோ ஒரு தொண்டைமான் என்னும் செல்ல பெயராலும் "அய்யா" என்னும் முழுப்பெயராலும் அழைக்கப்படும் கலைக்குடும்ப தலைமகன் விஜயகுமார் அவர்கள் முழு நேர காமடியன். அவர் மச்சானாக குலசேகரன் என்னும் கேரக்டரில் வரும் நபர் நவதுவாரங்களிலும் மிளகாய் வச்ச மாதிரி பேசும் ஆள் தான் வில்லன். இன்னும் சொல்லப்போனா காமடி வில்லன். இந்த வில்லன் ஆக்ரோஷமா வசனம் பேசினா குழந்தைகள் கெக்கேபிக்கே கெக்கேபிக்கேன்னு சிரிக்கும். இந்த அய்யா இருக்காரே அய்யா அவரு அப்பப்ப அந்த வில்லனை அழிக்க கொந்தளிச்சு எழுவார். பின்ன அவர் மகள் வனிதா விஜயகுமார் அடிச்ச அடில கைல கட்டு போட்டு கிட்டு நடித்து வருவது நியாபகம் வந்து தொலைக்கும் போலிருக்கு. அப்படியே காத்து புடுங்கி விட்ட மாதிரி சாய்ந்து உட்காந்து விடுவார். முன்பெல்லாம் ஒரு படிப்பும் வரலைன்னா பெற்றோர்கள் "இவனுக்கு படிப்பே வரலை. அய்யோ பாவம் ஒரு டீச்சர் டிரைனிங்காவது படிக்க வைப்போம்" என படிக்க வைப்பாங்க. ஆனா இங்க அய்யா குடும்பத்திலே கதையிலே ஒரு புதுமை இருக்கட்டுமே என ஐ ஏ எஸ் படிக்க வைத்து எல்லாரும் அங்க இப்ப ஐ ஏ எஸ் ஆகிட்டாங்க. ஒரு கட்டத்துல நான் முதலில் சொன்ன அந்த காமடி கேரக்டர் காவிரியும் ஐ ஏ எஸ் படிக்கிறாங்க. ( அதுக்கு முன்ன அவங்க படிச்ச படிப்பு எட்டாம் கிளாஸ் பெயில் என்பது உபரி தகவல்) . சீரியல் முடியும் சமயத்தில் அனேகமாக அய்யா வீட்டுல பால் கறக்கும் மினிம்மா முதல் பீஸ் போட வரும் பையன்,தெவசம் பண்ண வரும் அய்யர்  வரை ஐ ஏ எஸ் ஆகிவிடும் அபாயம் உள்ளது. இது சம்மந்தமாக ஒரிஜினல் அக்மார்க் ஐ ஏ எஸ் அதிகாரிகள் சங்கத்திலே எதுனா ரிட் போட்டு அந்த தங்கம் சீரியலை ஓவர் காமடி உடம்புக்கு ஆகாது என சொல்லி தடை வாங்க வேண்டும் என சமூகத்தின் சார்பாக விண்ணப்பிக்கிறேன்.

*******************************

கனாக்காணும் காலங்கள் - இது விஜய் டிவியில் இரவு,பகல், நள்ளிரவு, விடிகாலை, காலை என சகல நேரமும் மறு ஒளிபரப்பாகும். எப்போ முதல் ஒளிபரப்பு என்பது அவங்களுக்கே தெரியாது. இதிலே என்ன புதுமைன்னா ஒரு 5 ஆண் பசங்க, 4 பெண் பசங்க, ஒரு சோடாபுட்டி புரபசர், ஒரு பிரின்சிபால், ஒரு கரஸ்பாண்டண்ட். இதான் மொத்த கேரக்டரும். இந்த 12 பேருக்காக ஒரு பிரம்மாண்ட காலேஜ். இது சத்தியமா புதுமை தான். ஒரு பால்வாடியை எடுத்துகிட்டா கூட 50 பசங்க திமு திமுன்னு இருக்கும் காலத்தில் 12 பேருக்காக ஒரு காலேஜ் நடக்குது. அந்த பசங்க சினிமா போவாங்க, லவ் பண்ணுவாங்க, அவுட்டிங் போவாங்க, விளையாடுவாங்க, ஸ்ட்ரைக் பண்ணுவாங்க, புரபசரை கிண்டல் பண்ணுவாங்க.. ஆக மொத்தம் படிப்பை தவிர எல்லாம் செய்வாங்க.

இதிலே சமீபத்திலே ஒரு கூத்து என்னான்னா ஒரு தாதா ஜே சி பி எல்லாம் எடுத்து கிட்டு காலேஜை இடிக்க வர்ராரு. இந்த 12 பசங்களும் கொந்தளிக்கிறாங்க. "அய்யோ நாம படிக்கும்(?) காலேஜை இடிச்சுட்டா கல்விக்கடவுள் சரஸ்வதிக்கே அவமானம்" என்கிற ரேஞ்சில் டென்ஷன் ஆகிடுறாங்க. உடனே காலேஜ்ல படிக்கும் ஒரு பையனின் சித்தி தான் மினிஸ்டர். அவங்களை கூப்பிட அவங்களும் டவாலி, சிவப்பு விளக்கு வச்ச காரில் வந்து தாதா கிட்டே கெஞ்சிகிட்டு இருக்காங்க. உடனே ஒரு டீல்க்கு வர்ராங்க. அந்த தாதாவோட பையன் இருக்கும் கிரிக்கெட் டீம் கூட இந்த காலேஜ் கிரிக்கெட் டீம் விளையாடி ஜெயிச்சா அந்த பலகோடி பில்டிங் இனாம் என டீல். (ஸ்ஸ்ஸ்ஸ் மயக்கம் வருதுடா சாமி) அந்த காலேஜ்ல படிக்கும் மொத்த பசங்களே 5 பேர் தானே என நான் கவலைப்பட்டேன். 11 பேருக்கு எங்க போவாங்க? ஆனா டைரக்டர் கொஞ்சமும் கவலைப்படலை. மேட்ச் ஆரம்பிக்க இன்னும் சில வருஷங்கள் ஆகும் என நினைக்கிறேன். (இஞினியரிங் கோர்ஸ் மொத்தமே நான்கு வருஷம் தானே.. டைரக்டர் கோட்டை விட்டுட்டாரா என  குனியமுத்தூர் வரதன் வாசகர் கடிதம்  எழுதினா கடுப்பாகிடுவேன் மைலார்ட்.... எனக்கு இதுக்கு மேல எழுத அழுகை அழுகையா வருது.

*********************

பொதுவாவே தமிழ் சினிமா பார்த்து பார்த்து எதுனா கல்யாணத்துக்கு போனாவே தாலி கட்டும் நேரத்தில் "நிறுத்துங்க கல்யாணத்தை"ன்னு சொல்லனும் போலவே தோணும்.(எனக்கு இனிமே திருமண பத்திரிக்கை வைப்பவர்கள் கொஞ்சம் யோசிச்சு வைக்கவும்) விஜய் டிவில சரவணன் - மீனாட்சி என்னும் தொடர் வருது. அந்த கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு தான் இன்னிக்கு டாக் ஆஃப் தமிழ்நாடு. அத்தனை இடைஞ்சல் அந்த கல்யாணத்துல. பிரணாப் ஜனாதிபதி ஆனா என்ன? சங்மா ஆனா என்ன? கலாம் ஆனா என்ன? சரவணன் மீனாட்சி கல்யாணம் நல்ல படியா நடந்து தொலையனும் - இதான் இப்போதைய தமிழக வேண்டுதல்.... என்னவோ போங்கப்பா


*****************************
சரி சீரியல் எல்லாம் தான் இந்த லட்சனத்தில் இருக்குதுன்னு நடுநிலையா ஒரு செய்தி பார்ப்போம் என நினைச்சா அது எல்லாத்துக்கும் மேல காமடியா இருக்கு.


தமிழகத்தில் ஏழு வயது குழந்தை டெங்கு காய்சலுக்கு பலி - இக்குழந்தை கடந்த திமுக ஆட்சியின் போது பிறந்தது. அப்படி அது பிறந்திருக்காவிடில் இன்று அது இறக்கும் நிலை வந்திருக்காது என பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர்.இப்படியாக ஒரு குழந்தை மரணத்துக்கு திமுக காரணம் ஆகிவிட்டது. - இப்படிக்கு புதிய தாலைமுறை செய்திகளுக்காக நடுநிலையாக பீர் முகமது.


சென்னையில் தாம்பரத்தில் ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 75 சவரன் கொள்ளை. தப்பி ஓடிய கொள்ளைக்காரன் நேராக கோபாலபுரம் நோக்கி ஓட்டம். கோபாலபுரத்தில் பிரபல அரசியல் தலைவர் இருப்பது நாம் எல்லாம் அறிந்ததே - இப்படிக்கு புதியதலைமுறை செய்திகளுக்காக நடுநிலையாக பீர்முகமது.



**********************************
பை தி பை.. அபிஅப்பா நல்லா காமடியா எழுதிட்டாருன்னு சொன்னா, அது மகா பாவம். நான் ஜஸ்ட் மேற்கண்ட சீரியல் கதைகள் மட்டுமே எழுதினேன். அது காமடியா ஆகியிருந்தா  முழு கிரியேட்டிவிட்டியும் அதன் இயக்குனர்களை மட்டுமே சார்ந்தது என உறுதி அளிக்கிறேன்!

June 12, 2012

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கேலிச்சித்திரம் - ஒரு பார்வை!



இன்றைக்கு ஒரு வாரகாலமாக பரவலாக "இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட கேலிச்சித்திரம்" என்றும் சொற்கள் சுலபமாக எல்லோர் வாயிலும் புகுந்து வருகின்றது. அது என்ன கேலிச்சித்திரம்? அது என்ன புத்தகத்தில் வந்துள்ளது? என்ன பிரச்சனை?
இந்திய மத்திய அரசின் கல்விக்கான சார்பு கழகம் National Council of Education Research and Training (NCERT)  சார்பில் வெளியிடப்பட்டுள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசியல் அறிவியல் (political science) பாடத்தில் எட்டாம் பிரிவில் 153ம் பக்கத்தில் தமிழக அரசியலை பற்றிய பாடத்தில் "1965ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பின் காரணமாக திமுக 1967ல் ஆட்சியை பிடித்தது" என்ற பொருள் வரும் படியாக ஒரு பாடம். அதை மாணவர்களுக்கு இன்னும் புரியும் படியாக விளக்குவதாய் நினைத்துக்கொண்டு ஒரு கேலிச்சித்திரம் இட்டுள்ளனர். அந்த கேலிச்சித்திரம் வரைந்தவர் பிரபல கேலிச்சித்திரக்காரர் தமிழகத்தை சேர்ந்த ராசிபுரம் கே. லெஷ்மன். 1965 கால கட்டத்தில் அவர் வரைந்து அப்போது பத்திரிக்கைகளில் வெளியான கேலிச்சித்திரம் இன்றைக்கு யாரோ ஒரு நியாபகசக்தி புண்ணியவான் கைங்கர்யத்தால் மீண்டும் மத்திய அரசு சார்ந்த பாடத்திட்டத்தில் புகுந்து தன் விஷமத்தன வரலாற்று திரிபுகளை மாணவர்கள் மத்தியில் உண்டாக்க செய்கின்றது.

அந்த் கேலிச்சித்திரம் என்ன சாராம்சம் உள்ளடக்கியது எனில் ஒரு கரும் பலகையில் சில வாசகங்கள் இருக்கின்றன. அந்த வாசகங்கள் இருக்கும் பலகையை பல மாணவர்கள் சேர்ந்து கல்லால் அடிக்கின்றனர். அந்த பலகையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் வாசகம் என்ன தெரியுமா? "இந்தி கிடையாது. இந்தி கிடையாது. ஆங்கிலம் மட்டுமே, இந்தி கிடையாது" . இது தான் அந்த வாசகம். அந்த பலகையை தான் தமிழக மாணவர்கள் கல் கொண்டு அடிக்கின்றனர். போகட்டும்.. அந்த பலகையின் பின்னே இருவர் நிற்கின்றனர். யார்? ராஜாஜியும்,அப்போதைய முதல்வர் பக்தவத்சலமும். இருவரும் ஒரு விஷயம் பேசிக்கொள்கின்றனர். யாரைப்பார்த்து? யாருடைய செயலைப்பார்த்து? அந்த கல் கொண்டு அடிக்கும் மாணவர்களை பார்த்து. என்ன பேசிக்கொள்கின்றனர்? "அப்பன்னா இவனுங்களுக்கு இங்கிலீஷும் தெரியாது போல..."
அந்த கேலிச்சித்திரத்தில் ராஜாஜி தமிழக மாணவர்களை பார்த்து  தமிழக மாணவர்களை கேலி செய்த வாசகங்கள் இவைகள். தோழர்களே, உங்களுக்கு அந்த கேலியின் பரிமாணம் தெரிகின்றதா? இப்போது அந்த கேலிச்சித்திரம் உங்களுக்குள் மாற்றம் ஏற்படுத்துகின்றதா?  சரி அந்த மாணவர்கள் அதாவது அந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட  மாணவர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கு? யார் அவர்கள்? ராஜாஜி அல்லது ராஜாஜியின் மனோநிலையை பிரதிபலித்த கேலிச்சித்திரக்காரர் ஆர்.கே . லெஷ்மண் சொன்னது சரியா? சரி அப்போதைய கால கட்டத்தில் அப்படி ஒரு கேலிச்சித்திரம் வரைய காரணம் என்ன? தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்றால் என்ன? அதன் 'வால்யூம்" எத்தனை பெரியது. பலியான உயிர்கள் எத்தனை? என பார்ப்போம்.....கொஞ்சம் பெரிய பதிவாக இருப்பினும் முடிந்தவரை  சுலபமாக  சொல்ல முயற்சிக்கிறேன்.....

முதலில் நாம் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட காலத்திற்கு போகவேண்டும். தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் செப்டம்பர் 26ல் 1938ல் நடந்த போராட்டத்துக்கு போக வேண்டும். அதிலே பெரியார், அண்ணா உட்பட பலருக்கு நான்கு மாதம் சிறை தண்டனை கிடைத்தது. அதிலிருந்து நாம் இந்தி திணிப்பு  எதிர்ப்பு பாதையில் நடந்து வந்தால் மிகுந்த நேரம் ஆகும். அதனால் நாம் 1938 முதல் 1963ம் ஆண்டு வரை ஓடியே கடந்து விடுவோம்.

அப்போது நேரு அவர்கள் இந்திய நாட்டு பிரதமர். லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் உள்துறை அமைச்சர். 1963ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி பாராளுமன்றத்தில் ஆட்சி மொழி மசோதாவை தாக்கல் செய்கிறார். அதன் படி 1965ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் இந்தி மட்டுமே இந்திய ஆட்சி மொழியாக இருக்கும். அரசாங்கத்தின் ஆணைகள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும். அப்போது மாநிலங்கள் அவையில் அண்ணா அவர்கள் உறுப்பினர். மக்களவையில் நாஞ்சில் மனோகரன் இருந்தார். அண்ணா அவர்கள் " இந்த மசோதாவின் 3 வது விதியின்படி ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பிடித்துக்கொள்ளும். இது இந்தி பேசாத மாநில மக்களுக்கு நிரந்தர தீமை உண்டாக்கும்" என தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் எந்த பிரயோசனமும் இல்லை. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.

உடனே தமிழகத்தில் 1963 ஏப்ரல் 29ல் ஒரு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அண்ணா அதில் இந்தி ஆட்சி மொழியாக ஆனால் என்ன என்ன கஷ்டம் வரும் நமக்கு என ஆதாரத்துடன் பேசினார். 1965 ஜனவரி 26க்குள் நாம் நமது கிராமம் தோறும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என பேசினார்.  இந்"தீ" பரவ ஆரம்பித்தது தமிழகம் எங்கும். இதனிடையே தமிழக முதல்வராக இருந்த காமராஜர் பதவி விலகி கட்சிப்பணிக்கு வந்து விட்டு பக்தவத்சலம் அவர்கள் முதல்வராக ஆனார்.

உடனே 1963ம் ஆண்டு அக்டோபர் 13 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்தி திணிப்பு  எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அண்ணா பேசினார். பேச்சு என்றால் அது பேச்சு. அணல் காற்று. அண்ணா அவர்கள் அரசியல் சட்டம் மொழிப்பிரிவு 17ம் விதி இருக்கும் சட்ட நகலை 1963 நவம்பர் 17 அன்று பொது இடத்தில் கொளுத்துவது என்றும் அவருடன் சேர்ந்து டி. எம். பார்த்தசாரதி, டி.கே. பொன்னுவேலு, வி.வெங்கா, கே.பி.சுந்தரம் ஆகியவர்கள் கொண்ட ஐவர் அணி மாலை 4 மணிக்கு அறிவகத்தில் இருந்து புறப்பட்டு மெரினா சென்று அங்கே எரிப்பது என அறிவித்தார். அதன்படி அண்ணா அவர்கள் அந்த நாளில் புறப்பட்டு சென்று எரிக்கும் முன்னரே அமைந்தகரையில் கைது செய்யப்பட்டார். ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். அவருடன் இந்தி திணிப்பு  எதிர்ப்பு போராட்ட குழுவின் முதல் அணியும் சிறை சென்றது.

அது போல ஒரு குழு தமிழகத்தின் ஒவ்வொறு பகுதியிலும் சென்று அடித்தட்டு மக்கள் வரை இந்தி நுழைந்தால் என்ன என்ன பாதகம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யும் வேலையை கலைஞர் அவர்கள் தலைமையிலான குழு செவ்வனே  செய்தது.

அண்ணா அவர்கள் சிறை புகுந்த அந்த ஆறு மாதத்தில் அண்ணாவின் வளர்ப்பு அண்ணை (சித்தி) காலமானார். அண்ணா மிகுந்த மனவேதனை அடைந்தார். அதே போல அண்ணா சிறையில் இருக்கும் போதே நேரு அவர்கள் மறைந்தார். அண்ணா சிறையில் இந்தி எதிர்ப்பை கைவிட்டு விட்டார் என்றெல்லாம் ஊடகங்கள் இப்போது போலவே அப்போதும் பொய் பரப்புரை செய்தன. அந்த ஆறு மாதத்தில் அண்ணாவின்  கைவலியின் காரணமாக உடல் நலமும் மோசமாகியது. அண்ணா சிறை மீண்டு வெளியே வந்தார். அதற்குள் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பிரதமர் ஆனார். நேரு மறைவினால்  மத்திய அரசில் ஏற்பட்ட சுனக்கம் காரணமாக இந்தி திணிப்பு  என்பது அமைதியாக இருப்பது போன்ற தோற்றம் கொடுப்பினும், அந்த மசோதா நேரு காலத்தில் 1963ல் நிறைவேற்றம் ஆகிவிட்டபடியால் கண்டிப்பாக 1965 ஜனவரி 26 குடியரசு தினத்தின் முதல் அமலாக்கத்துக்கு வந்து விடும் என நினைத்த கலைஞர் தீவிர இந்தி திணிப்பு  எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

1964 ஏப்ரலில் அண்ணா சிறை மீண்டு வெளியே வந்த பின்னர் அந்த மசோதா அமலுக்கு வர எட்டு மாதங்கள் மட்டுமே இருந்தது. மத்திய அரசும் அப்போது மீண்டும் அந்த மசோதா மீது ஆர்வம் காட்ட தொடங்கியது. 1965ம் ஆண்டும் வந்தது.

மத்திய அரசு குடியரசு தினத்தின் அன்று இந்தி திணிப்பு மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டியது. அதனால் அண்ணா அவர்கள் 1965 ஜனவரி 26 அன்று துக்க தினமாக அறிவித்தார். அதிலேயும் மிகுந்த ஜாக்கிரதையாக "குடியரசு வாழ்க, ஆனால் இந்தி ஆட்சி மொழி ஆக்கப்படுவது ஒழிக" என்னும் கோஷத்துடன் மீண்டும் போராட்டத்தில் இறங்கினார். அண்ணா, கலைஞர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. திமுக தலைவர்கள் அனைவரும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் இந்த இடைப்பட்ட அதாவது 1963 ஏப்ரல் 13 முதலான காலகட்டத்தில் கலைஞர் பட்டிதொட்டி எங்கும் இந்தி திணிப்பின் பாதகம் எடுத்து பிரச்சாரம் செய்த காரணத்தால் திமுகவின் மாணவர் அணியினர் மிகுந்த உத்வேகத்துடன் போராட ஆரம்பித்தனர். இதுவரை இப்படி ஒரு போராட்டம் இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில் கூட நடந்தது இல்லை என்னும் அளவுக்கு போராட்டம் நடந்தது.

திருச்சி மாவட்டம் சின்னசாமி , சென்னை கோடம்பாக்கம் சிவலிங்கம், சென்னை விருகம்பாக்கம் அரங்கநாதன் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். திருச்சி மாவட்டம் சேர்ந்த ஒரு தலைமை ஆசிரியர் வீரப்பன் என்பவர் தீக்குளித்து இறந்தார். கோவை மாவட்டம் சேர்ந்த முத்து என்னும் விவசாயி தீக்குளித்து இறந்தார். மயிலாடுதுறையை சேர்ந்த ஏ.வி.சி கல்லூரி மாணவர் சாரங்கபாணி அவர்கள் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொண்டு சாகும் நேரத்தில் கூட இந்தி திணிப்பு  ஒழிக, தமிழ் வாழ்க என கோஷமிட்டு கொண்டே உயிர் நீத்தார்.

ஐநா சபையில் இந்த போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள ஊடகங்கள் பட்டினி சாவு என்றும் குடும்ப சண்டை என்றும் காதல் தோல்வி எனவும் எழுதின. சமீபத்தில் தோழர். செங்கொடி வீரமரணத்தை கூட காதல் தோல்வி என தினமலர் எழுதியதே அப்படி அப்போதே நம் போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்பட்டன. எல்லா ஊர்களிலும் மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். முதல்வர் பக்தவத்சலம் அவர்களை காண சென்ற மாணவர்கள் தடியடிக்கு உள்ளானார்கள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் ஊர்வலம் போன போது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டு ராஜேந்திரன் என்னும் மாணவர்  மாண்டார்.

1965 பிப்ரவரி எட்டாம் நாள் சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் கூடினர். போராட்ட திட்டம் வகுத்தனர். அதன்படி பிப்ரவரி 9,10 ஆகிய நாட்களில் தமிழகத்தின் அனைத்து அஞ்சல் அலுவலகம் முன்பாக போரடுவது. பிப்ரவரி 11ம் தேதி தமிழகத்தில் ரயில் மறியல். பிப்ரவரி 12ம் தேதி பொதுமக்களை திரட்டி பொதுவேலை நிறுத்தம் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னையில்  அண்ணாசலை அஞ்சல் அலுவலகம் முன்பாக போராட்டம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து சென்னை மாநிலக்கல்லூரி திடலில் இந்தி பிரச்சாரசபா வெளியிட்ட புத்தகங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மதுரை, கோவை, தஞ்சை, திருச்சி, வேலூர் என எல்லா இடங்களிலும் போராட்டம் வெடித்தது.

திருப்பூரில் 2000 மாணவர்கள் ஊர்வலம் நடத்திய போது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டு ஒரு மாணவர் பலியானார். ஆத்திரம் கொண்ட மாணவர்கள் போலீஸ் மீது தாக்குதல் தொடுத்தனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது.அடுத்த நாள் இரயில் மறியல் போராட்டம் நடந்தது. மாணவர்கள் ரயில்வே நிலையத்தில் குவிக்கப்பட்ட போலீசாருக்கு பயப்படாமல் ரயிலை ஓடவிடாமல் நிறுத்தினர். ரயில் இன் ஜினில் கருப்பு கொடி கட்டப்பட்டது. ரயில் பெட்டிகள் தீயிடப்பட்டன. அடுத்த நாள்  பொதுமக்களும் மாணவர்களுக்கு ஆதரவாக போராடி பொது வேலை நிறுத்தம் நடந்தது.மாணவர்கள் கிளர்சியை போலீசாரால் கட்டுப்படுத்த இயலாமல் ராணுவம் வரவழைக்கப்பட்டது. தமிழ்நாடே பற்றி எரிந்தது.

பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் "ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்கும் என அறிவித்தார். அண்ணா, கலைஞர் ஆகியோர் மாணவர்களை போராட்டத்தை நிறுத்தும் படி வேண்டுகோள் விடுத்தனர். மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா ஒரு அறிவிப்பு செய்தார் ஆங்கிலத்தில். கவனிக்க 1965 ஜனவரி 26 முதல் அரசு அறிவிப்புகள் இந்தியில் இருக்கும் என மசோதா நிறைவேற்றிய மத்திய அரசு ஆங்கிலத்தில் ஒரு அறிவிப்பு செய்கிறது. அது என்னவெனில் " இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும். தயவு செய்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்"

1963 ஏபரல் 13 ல் ஆரம்பமான இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரே நாளில் முடிவுக்கு வருமா? அதும் இத்தனை மாணவர்கள் உயிர் இழந்த நிலையில்? போராட்டம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்தது.

இப்போது இந்த கட்டுரையின் மேலே குறிப்பிட்ட கேலிச்சித்திரத்துக்கு வருவோம். இந்த கால கட்டத்தில் தான் அந்த கேலிச்சித்திரம் ஆர்.கே.லெஷ்மன் அவர்களால் வரையப்பட்டது. அதைத்தான் இப்போது மாணவர்களுக்கு பொலிட்டிகல் சயின்ஸ் கற்று தருகிறேன் என National Council of Education Research and Training (NCERT)   ஒரு சில வரிகளில் இந்த கேலிச்சித்திரம் போட்டு விஷமப்பிரச்சாரம் செய்கின்றது. இப்போது சொல்லுங்கள் தோழர்களே, இது சரியா? ஒரு மிகப்பெரிய போராட்டம் இப்படி கொச்சைப்படுத்தப்படுவது முறையா? இதை படிக்கும் மாணவர்கள் ஒரு தவறான புரிதலுடன் ஒரு பாடம் படிப்பது அவசியமா? வரலாற்று திரிபு அல்லவா இது? இதை அனுமதிக்கலாமா? இதே அந்த National Council of Education Research and Training (NCERT) கழகத்துக்கு நம்முடைய ஒரே கேள்வி தான். ஒரு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்னும் மாபெரும் போராட்டத்தை "ஜஸ்ட் லைக் தட்" ஒரு வரியில் கொச்சைப்படுத்தியும், ஒரு கேலிச்சித்திரம் வழியே நக்கல் அடிக்கவும் முடிந்த உங்களால் சமூக நீதி காவலர் திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது நீதிபதி மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த முயன்ற போது  வடநாட்டில் ஆரிய மாணவர்களும், ஆரிய அடிவருடி மாணவர்களும் சேர்ந்து உடலில் தீவைத்து கொளுத்தி கொள்வது போல போராட்டம் செய்தமை குறித்து நக்கல் விட இயலுமா? ஒரு கேலிச்சித்திரம் வரைந்து மாணவர்களுக்கு "பொலிட்டிகல் சயின்ஸ்" நடத்த இயலுமா? முடியாதுல்ல... அப்படி எனில் இந்த கேலிச்சித்திரத்தையும் உடனடியாக நீக்க வேண்டும். உங்களுக்கு சீண்டிப்பார்க்க அம்பேத்காரும், தமிழக மாணவர்களும் தான் கிடைத்தனரா?

சரி. நாம் கேலிசித்திரத்தின் சாராம்சத்துக்கு இப்போது வருவோம். அதாவது ராஜாஜி அதிலே என்ன சொல்கிறார் எனில் குல்சாரிலால் நந்தாவின் ஆங்கில  அறிவிப்பு தாங்கிய பலகை மீதும் மாணவர்கள் கல் அடிக்கின்றனர் எனில் அவர்களுக்கு ஆங்கிலமும் சரிவர தெரியாது என்னும் பொருள் வருகின்றதே? அப்படி எனில் அப்போது மாணவர்களாக இருந்தவர்களில் அப்போது அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் ஈரோட்டில் இப்போது புகழ்வாய்ந்த வழக்கறிஞராக செயலாற்றி வரும்மிகச்சிறந்த பெரியாரியவாதி திரு. பழனிசாமி கருப்பண்ணன் அவர்களை இன்று நானே நேரிடையாக கேட்டேன். "உங்களுக்கு எல்லாம் ஆங்கிலம் தெரியாது என பொருள்படும் படியான கேலிச்சித்திரம் வரைந்துள்ளதை  இப்போது பாடத்திட்டமாக மத்திய அரசு வைத்துள்ளதே?" என . அதற்கு அவர் " நான் அந்த போராட்டத்தில் எங்களுடன் பங்கெடுத்தவர்கள் பட்டியல் தருகிறேன். அதில் பலரும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், ஐ ஏ எஸ் ஆபீசர்கள், சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் இப்படியாக இருந்தோம், இருக்கின்றோம். அப்படி இருக்க அந்த கேலிச்சித்திரம் ஒரு காழ்ப்புணர்வால் வரையப்பட்டது. இது கண்டிக்கப்பட வேண்டிய செயல். நான் பட்டியல் தருகிறேன்" என சொல்லி ஒரு நீண்ட பட்டியல் கொடுத்தார். அதை அப்படியே தருகிறேன். அடைப்புகளில் அவர்கள் வகித்த பதவிகள் உள்ளன.


(திரு.பழனிச்சாமி கருப்பண்ணன் அவர்கள்)

அதாவது போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்த அப்போதைய மாணவர்கள் திரு. எல். கணேசன், (பாராளுமன்ற உறுப்பினர்)செஞ்சி ராமச்சந்திரன் (மத்திய அமைச்சர், இவர் பஸ் எரிப்பு வழக்கில் மாட்டப்பட்டார்), கி.ராஜமாணிக்கம்( ஐ ஏ எஸ் அதிகாரி, கலைஞர் முதல்வராக இருந்த போது அவரது செயலாளர்) (அவரது தலைமையில் தஞ்சையில் இந்தி எதிர்பு மாநாடு. கி.ராசமாணிக்கம் தலைமையில் அண்ணா . ஜி.டி. நாயுடு துவக்கிவைத்து உரையாற்றினார்கள். முக்கியமாக மதுரையில் கா. காளிமுத்து (தமிழக அமைச்சர்) சட்டத்தை எரித்து சிறைசென்றவர்கள், டாக்டர் இலக்குவணார் மதுரையிலே அரசியல்சட்டப்பிரிவை எரித்து சிறைசென்வர். திரு. துரைமுருகன்(தமிழக அமைச்சர்)வைக்கோ (எம்.பி) என்கிற .வை.கோபால்சாமி ,  ஜீவாகலைமணி என்ற நண்பர், ரவிச்சந்திரன் என்ற கவல்துறைத்தலைவருடைய மகன், தற்போது ஒய்வுபெற்று காவல்துறை டி. ஐ. ஜி நண்பர் தவிட்டுப பாளையத்தைச்சார்நத பாண்டியன். அவர் டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு டெலிகேட்டாக மாநிலக்கல்லுாரியிலிருந்து சென்றார். துரைமுருகன் வகுப்பு தோழர் ஊத்தங்கரையைச்சார்ந்த நண்பர் நடேசன்  தி்ருச்சி நேசனல்கல்லுாரில் படித்தவர், செய்தி மககள் தொடர்பு துறை இனை இயக்குநராக இருந்து ஒய்வு பெற்றவர். சென்னை லாகாலேஜ் ராஜாமுகமது (எம்.ஜி.ஆர் அரசில் தமிழக அமைச்சர்) , ரகுபதி என்பவர் செயின்ஜோசப்கல்லுர்ரி,எம். நடராசன்(தமிழரசி பத்திரிக்கை ஆசிரியர்(அரசு பி ஆர் ஓ வாக பணியாற்றியவர்) (அதங்க சசிகலா நடராசன்), திருச்சியில் வேங்குடுசாமிஎ னபவர் போக்குவரத்தில்பணியாற்றி ஒய்வு பெறறவர், ராஜ்குமார் மன்றாடியார் , விருதுநகர் சீனிவாசன்(எம் எல் ஏ) ,இரா.ஜனார்த்தனன்,எஸ்டிசோமசுந்தரம்(தமிழக அமைச்சர்) இவரு எல்லாம் டி. கே.சியின் குருப் (அதாவது இப்போது வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன் அவர்களின் தந்தையார். டி.கே.சீனிவாசன் (தத்துவமேதை) ,. பினனையுர் பன்னீர்செல்வம் புஷ்பம் கல்லுாரி(அவர் நடராசனின் நண்பர்.அவரும் பஸ் எரிப்பு வழக்கில்கைதுசெய்யப்பட்டார்.)ரகுபதி மிக முக்கியமானவர் (திருச்சி செயின் ஜேசப் கல்லுாரி ஐ ஏ எஸ்ஆகி ஒய்வு பெற்றுவிட்டார்),தஞ்சை கார்மேகம் அவர்கள் (எல் ஜி அவர்களின் நண்பர், செய்தி மக்கள் தொடர்பு துறையில்  இனை இயக்குனராக பணீயாற்றி ஓய்வு பெற்றவர்),  திருச்சி மேலகல்கொண்டார் கோட்டை என்னும் இடத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற சொல்லி அண்ணா அவர்கள் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார்.  போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த தியாகிகள் அந்தந்த ஊர்களில் உரிய மரியாதையுடன் கவுரவிக்கப்பட்டனர். (மயிலாடுதுறையில் மேம்பாலத்துக்கு பெயர் மாணவர் தியாகி சாரங்கபாணி மேம்பாலம்)

இப்படியாக திரு பழனிச்சாமி  கருப்பண்ணன் அவர்கள் நீண்ட பட்டியல் கொடுத்தார். இந்த பழனிசாமி கருப்பண்ணன் அவர்கள் மிக தீவிரமாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்.  முன்னாள் முதல்வரின் செயலர் கி.ராஜமாணிக்கம் அவர்களுடைய மற்றும் திரு எல்.கணேசன் ஆகியோருடைய கல்லூரி நண்பர். விடுதி நண்பர். அவர் எல்ஜி யோடு சட்ட மன்ற உறுப்பினர் அறை என் 225 எம் எல்ஏ விடுதியில்தங்கி 1973 முதல் 1975 வரை சென்னை ஒரு கல்லூரியில்  விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர் என்பது உபரித்தகவல்.

இப்போது சொல்லுங்கள் தோழர்களே! மேற்சொன்ன இவர்களுக்கா ஆங்கிலம் தெரியாது? ராஜாஜியின் குரலை பிரதிபலித்த ஆர்.கே. லஷ்மண் வரைந்த கேலிச்சித்திரம் காழ்புணர்வுடன் கூடிய விஷமத்தனமானது என்பதற்கு மேல் சொன்ன லெஜண்டுகள் தான் சாட்சிகள்.

அந்த கேலிச்சித்திரம் நீக்கப்பட வேண்டும். அதற்கான முழு முயற்சியும்  ஒட்டுமொத்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டும்! செய்வார்கள் என நம்புவோம்!



June 3, 2012

கலைஞர் என்ன சாதித்து கிழித்தார்?



இன்று ஜூன் மாதம் 3ம் நாள். கலைஞர் அவர்களின் 89ம் ஆண்டு பிறந்த தினம். அவரை வாழ்த்துபவர்கள் ஒரு பக்கம், வசை பாடும் சிறு குழுக்கள் ஒரு பக்கம் இருப்பினும் இந்த கலைஞர் அப்படி என்ன சாதித்து கிழித்து விட்டார் என எதுவுமே தெரியாமல் கேட்கும் நடுநிலைவாதிகளுக்காகவே இந்த கட்டுரை. இதன் சாராம்சம் முரசொலி போன்ற பத்திரிக்கைகள், முரசொலி மலர்கள், சில அரசு ஆவணங்கள் உதவியோடு தொகுக்கப்பட்டது தான். நன்றி முரசொலிக்கு! கலைஞர் ஆற்றிய சாதனைகளை கொஞ்சம் சிரமம் பாராமல் வாசித்து பாருங்கள். உங்கள் கருத்துகளை தராளமாக சொல்லுங்கள்!

இந்த இனிய நாளில் கலைஞரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்! வாழ்க கலைஞர்! தன் வாழ்நாளில் நூற்றாண்டு காணப்போகும் ஒரே அரசியல் தலைவர் உலகிலேயே கலைஞர் மட்டுமே என்னும் புகழ் உண்டாகட்டும் அவருக்கு. அவரால் தமிழும், திராவிடமும் உயரட்டும். தமிழகம் தலைநிமிரட்டும்!

 "கலைஞர் என்ன சாதித்து கிழித்தார்?" என கேட்பவர்களுக்காகவே இந்த பதிவு என்பதால் அதையே தலைப்பாகவும் வைத்துவிட்டேன். தலைப்பு சில கலைஞர் அபிமானிகளுக்கு சின்ன உறுத்தல் கொடுக்கும் என்பதால் இந்த விளக்கம்!

                                                    *****************************

1969 முதல் 1976 வரையிலான ஆட்சி காலத்தில்:



1. பிச்சைகாரர்கள் மறு வாழ்வு திட்டம்.

2. இலவச கண்ணொளி வழங்கும் திட்டம்.

3. திருக்கோவில்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கருணை இல்லங்கள்

4. கை ரிக்சாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்சாக்களை வழங்கும் திட்டம்.

5. ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டம்.

6. அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண திட்டம்.

7. ஜாதி கலப்பு திருமணம் செய்து கொண்டோருக்கு 1969 - 76 ல் தங்க பதக்கம் வழங்கும் திட்டம்.1989-90ல் நிதி உதவி ரூபாய் 5000, 1996- ல் 10,000 ரூபாய், 1997 முதல் 20,000 ரூபாய்.

8. அரசு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு திட்டம்.

9. பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் திட்டம்.

10. டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திட்டம். 1975ல் தொடக்கம், 1989ல் நிதி உதவி ரூபாய் 5000. 1997-98ல் ரூபாய் 7000, 1999-2000 ல் ரூபாய் 10,000

11. குடிசை மாற்று வாரியம், சுற்றுலா வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கம்.

12. ஆதிதிராவிடர் இலவச கான்கிரீட் வீட்டு வசதி திட்டம்.

13. சிங்காரவேலர் நினைவு இலவச வீட்டு வசதி திட்டம்.

14. தலைமை செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோ நலன் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு தனித்துறை உருவாக்கம்.

15. மாநில திட்டக்குழு உருவாக்கம்.

16. பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து பிற்படுத்தப்பட்டோர் , ஆதி திரவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது.

17. காவல் துறை மேம்பாட்டிற்கு 1969ல் முதலாவது காவல் ஆணையம். 1989ல் இரண்டாம் காவல் ஆணையம். 2006ல் மூன்றாவது காவல் ஆணையம்.

18 .பேருந்துகள் அரசுடைமை ஆக்குதல். போக்குவரத்து கழகங்கள் உருவாக்குதல்.

19. அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு திட்டம்.

20 விவசாய தொழிலாளர்களுக்கு அனுபோக தாரர்கள் குடியிருப்பு மனை உரிமை சட்டம்.

21. சேலம் உருக்காலை திட்டம்.

22. பதினைந்து ஏக்கர் நில உச்ச வ்ரம்பு சட்டம். ஒரு லட்சத்தி எழுபத்தி எட்டாயிரத்து எண்னூற்று எண்பது ஏக்கர் உபரி நிலம் கைப்பற்றப்பட்டு 1,37,236 விவசாயிகள் பயன் அடைய செய்தது.

23. சிப்காட் தொழில் வளாகங்கள்.

24. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்.

                       ******************************************

1989 - 1991 ஆண்டு ஆட்சிகாலத்தில் செய்த சாதனைகள்:

1.  மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம்.பொங்கல் போனஸ் முதலான பல சலுகைகள்.

2. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிட தனிச்சட்டம்.

3. ஏழைப்பெண்கள் பயன் பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம். நிதி உதவி, 1989ல் ரூ 5000, 1996ல் ரூ 10,000, 2006ல் ரூ 15,000 2007ல் 20,000, 2010ல் 25,000 ஆக உயர்வு.

4. ஈ வெ ரா நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம். தாழ்த்தப்பட்ட வகுப்பு, மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி. 2008ல் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி.

5.கருவுற்ற பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம். 1989-90ல் ரூ 200, 1996-2001ல் ரூ 500, 2006ல் ரூ 6,000 வழங்கப்பட்டது.

6. மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலம் எங்கும் சுய உதவி குழுக்கள்.

7.வன்னியர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 20 சதம் தனி இட ஒதுக்கீடு.

8. தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் 18 சதம் இட ஒதுக்கீடு நிர்ணயித்து பழங்குடி இனத்தவருக்கு ஒரு சதம் தனி ஒதுக்கீடு.

9. மகளிர்க்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதம் இட ஒதுக்கீடு.

10. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.

11. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல்.

                              ***************************************

1996- 2001 ஆட்சிகால சாதனைகள்:

1. உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை, சமூக சீர்திருத்தத்துறை என புதிய துறைகள் உருவாக்கம்.

2. சென்னையில் டைடல் பூங்கா.

3. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு.

4. பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம்.

5. உழவர் சந்தை திட்டம். (14.11.1999)

6. வரும் முன் காக்கும் திட்டம் (29.11.1999)

7. கால்நடை பாதுகாப்பு திட்டம். (2000)

8. பள்ளிகளில் வாழ்வொளி திட்டம். (1999)

9. விவசாய தொழிலாளர் நல வாரியம்  உட்பட தொழிலாளர் நலனுக்கான தனித்தனி நல வாரியங்கள்.

10. தமிழ்மொழி வளர்சிக்கு தனி அமைச்சகம்.

11. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்.

12. தென்குமரியில் 133 அடி உயர ஐயன் திருவள்ளுவர் சிலை.

13. ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் தடைப்பட்டு கிடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்.

14. கிராமங்களில் சிமெண்ட் சாலைகள்.

15. வரலாறு காணாத வகையில் ஆறு, குளம் அனைத்திலும் தூர்வாறும் பணி.

16. சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம்.

17. கிராமப்புற மாணவர்களுக்கு தொழில் கல்லூரிகளில் 15 சதம் இட ஒதுக்கீடு திட்டம்.( அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முடக்கப்பட்டது)

18. கிராமப்புறங்களுக்கு மினி பஸ் திட்டம்.

19. சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்.

20. சேமிப்புடன் கூடிய மகளிர் சிறு வணிக கடன் திட்டம்.வங்கியின் வாயிலாக சுழல் நிதி வழங்கும் திட்டம்.

21. பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம்.

22. மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பு.உலக நெறியில் எழில் கொழிக்கும் வடிவுடன் கட்டடங்கள்.

23. பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம்.

24. அண்ணா மறு மலர்ச்சி திட்டம்.

25. நமக்கு நாமே திட்டம்.

26. பத்தாயிரம் சாலைப்பணியாளர்கள் நியமனம்.

27. அதிமுக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட 13000 மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் நியமனம். (இப்போது அதிமுக அரசால் அவர்கள் மீண்டும் நடுத்தெருவில்)

                                       **********************************

2006 முதல் 2010 வரை ஆட்சியில் செய்த சாதனைகள்:






1. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி. ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்கள் பலன்.

2. மாதம் தோரும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணை, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, மைதா, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு வழங்கல்.

3. மான்ய விலையில் மளிகை பொருட்கள் என 50 ரூபாய்க்கு பத்து சமையல் பொருட்கள்.

4. 22,40,739 விவசாய குடும்பங்களுக்கு 7000 கோடி ரூபாய் கூட்டுறவு கடன் தள்ளுபடி.

5. விவசாயிகளுக்கான பயிர்கடன் வட்டி 2005-2006ல் 9%, 2006-2007ல் 7%, 2007-2008ல் 5%, 2008-2009ல் 4%, 2009-2010ல் பயிர்கடன் வட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

6. 2005-2006ல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூ 600, 2010-11ல் சாதா ரக நெல் விலை 1050 ரூ, சன்ன ரக நெல்விலை 1100 ரூ.

7. மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள். மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு.

8. பயிர்க்காப்பீடு திட்டத்தில் 2006ல் 50 சதம் காப்பீடு தொகையை அரசே மான்யமாக வழங்கி ஊக்கப்படுத்தியதால் 2005 - 2006ல் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில் 2009-2010ம் ஆண்டு 7,80000 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர்காப்பீடு செய்தனர். கடந்த் நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 891 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

9. கரும்பு விவசாயிகளுக்கு 2005-2006 ல் டன் ஒன்றுக்கு கிடைத்த விலை 1024 ரூபாய், 2009-10ல் 1650 ரூபாய் என ஏற்றப்பட்டது. 2010-11 முதல் போக்குவரத்து கட்டணம் மற்றும் ஊக்க தொகையுடன் சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ 2000 ஆக்கப்பட்டது.

10. ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனம் மூலம் 31.03.2000 வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் தள்ளுபடி.

11. நில அடமானத்தின் மீது தொழில் செய்ய வழங்கப்பட்ட பண்ணை சாரா கடன்களுக்கு வட்டி , அபராத வட்டி எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு வாங்கிய கடன் அசல் தொகையை செலுத்தினால் கடன் ரத்து.

12. மாநிலத்துக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகர திட்டத்தின் கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி, குண்டாறு இணைப்பு திட்டம்.

13. 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டம்.

14. கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உனவு தான்ய உற்பத்தி 2005-2006ல் 61 லட்சம் டன், 2008-2009ல் 95 லட்சம் டன்னாக உயர்வு.

15. விவசாய தொழிலாளர் நல வாரியம் உட்பட 31 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 2 லட்சத்தி 21 ஆயிரத்து 504 உறுப்பினர்கள் சேர்ப்பு.

16. 13,6482 அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 616,43,44,832 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

17. 2687கோடியே 30 லட்சத்து 35 ஆயிரத்தி 794 ரூபாய் செலவில் ஒரு கோடியே 13 லட்சத்து 57 ஆயிரத்து 454 குடும்பங்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டன.

18. 360 கோடி செலவில் 20 லட்சத்தில் 660 குடும்பங்களுக்கு எரிவாய் இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள்.
19. ஒரு லட்சத்தி 57 ஆயிரத்தி 57 நிலமற்ற ஏழை விவசாயிகள் குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது.

20. 6,99,917 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள்.

21. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்சி நாள் என பள்ளிகளில் கல்வி விழா.

22. 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள் மாணவ மாணவியர்களுக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வாழைப்பழங்கள் வழங்கப்பட்டன.

23. தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்துகும் மேற்ப்பட்ட மாணவ மாணவியருக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பு கட்டணங்கள் ரத்து. 11 லட்சம் மாணவ மாணவியருக்கு 10, 12ம் வகுப்புகளில் அரசு தேர்வுக்கு கட்டணங்கள் ரத்து.

24. பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்தி 75 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கலை, அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் படிப்பு கட்டணம் ரத்து. 2010-11 முதல்  எம் ஏ, எம் எஸ்சி வகுப்புகளுக்கும் படிப்பு கட்டணம் ரத்து.

25. படிப்பை தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற தொழிற் பயிற்சிகளை சமுதாய கல்லூரிகள் மூலம் பெற ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலை பல்கலைகழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.

26. ஆண்டுதோறும் 24 லட்சத்தி 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும் 2 லட்சத்தி 99 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்.

27.ஏழை மகளிர்க்கு பட்ட படிப்பு வரை வழங்கப்பட்ட இலவச கல்வி முதுகலை பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு.

28. தொழிற்கல்வி படிப்புக்கான நுழைவு தேர்வு ரத்து.

29. கோவை திருச்சி நெல்லை ஆகிய இடங்களில் நான்கு புதிய அண்ணா தொழில் நுட்ப பல்கலைகழகங்கள்.

30. 2006க்கு பின் ஒரத்த நாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுகோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்.

31. மாவட்டத்து ஒரு மருத்துவ கல்லூரி கோட்பாட்டின் படி விழுப்புரம், திருவரூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஆறு புதிய மருத்துவ கல்லூரிகள்.

32. அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவணம், விழுப்புரம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை , ராமநாதபுரம் திருவண்ணாமலை, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி , கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள்.

33. பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பாடம் என சட்டம்.

34. நூற்றாண்டு கனவை நனவாக்கி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைப்பு.

35. அருந்தமிழ் சான்றோர் 110 பேரின் நுல்களை நாட்டுடமை - 7 கோடியே 27லட்சம் ரூபாய் பரிசு தொகை.

36. 4020 திருக்கோவில்களில் 387 கோடி செலவில் திருப்பணிகள் செய்து குழமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

37.2010ல் மேலும் 1100 திருக்கோவில்கள் 100 கோடி செலவில் குழமுழுக்கு.

38. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண திட்ட நிதி உதவி 10,000 ரூ என்பது 25,000 ரூ ஆக உயர்வு. 2,92000 ஏழை பெண்களுக்கு 520 கோடி நிதி உதவி.

39. கருவுற்ற ஏழைப்பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி திட்டத்தின் கீழ் 20லட்சத்தி 11 ஆயிரத்து 517 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1052 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி உதவி.

40. 50 வயது கடந்து திருமணம் ஆகாமல் வறுமையில் வாடும் 9158 ஏழை மகளிர்க்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை.

41. தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என அறிவிப்பு.

42. வரும் முன் காக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 14, 894 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 37 ஏழைகள் பயன்.

43. தமிழகத்தில் உள்ள 1421 ஆரம்ப சுகாதார நிலயத்திலும் புதிதாக உண்டாக்கப்பட்ட 117 ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தலா 3 செவிலியர்களை பணியமர்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிப்பதால் அங்கு 2005-06ல் நடைபெற்ற மகப்பேறு எண்ணிக்கை 82,530 என்பது 2009-10ல் 2,98853 ஆக மூன்று மடங்கு உயர்ந்து கிராமப்புற மகளிர் மகிழ்வு.

44.குழந்தைகள் உயிர் காத்திட மூடிய அறுவை சிகிச்சைக்கு 20,000 ரூபாய். திறந்த அறுவை சிகிச்சைக்கு 50,000 ரூபாய், கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு 1 லட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி.

45. 21.11.2007ல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம், 3.6.2006ல் தொடங்கப்பட்ட பள்ளி சிறார் இதய அறுவை சிகிச்சை திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களி கீழ் 3264 சிறார்களுக்கு 17 கோடியே 10 லட்சம் சொலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவ மனைகள் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தைகள் காக்கப்பட்ட்னர்.

46. கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்திட ஈ எம் ஆர் ஐ நிறுவனத்துடன் இணைந்து 15.9. 2008ல் தொடங்கப்பட்ட 385 ஊர்திகளுடன் கூடிய அதி நவீன அவசரகால மருத்துவ ஊர்தி சேவை திட்டம் தமிழகம் முழுமைக்கும். 401152 பேர் இதனால் பயன். ஆபத்தான நிலையில் இருந்த 20,154 உயிர்கள் காப்பு.

47. அரசு ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுகளில் 2 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம்.

48. உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டம் 2009 ஜூலை முதல் நடைமுறை. ஒரு கோடியே, 44 லட்சத்து 32 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடைந்தன. 2010 வரை அந்த திட்டத்தில் 87 ,135 ஏழை மக்களுக்கு 246 கோடியே 79 லட்சத்தி 30 ஆயிரம் ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

49. 1,05494 கைத்தறி நசவாளர்களுக்கும் 90,547 விசைத்தறி நசவாளர்களுக்கும் சிறப்பு தொகை செலுத்தி மின் இணைப்பு பெற 2,39,511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்.

50. 2,22,569 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 46,91 கோடி முதலீட்டில் 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு 12 அரசாணைகள் வெளியிடப்பட்டு 37 தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில்  2010 வரை 12 தொழிற்சாலைகள் திறப்பு.

51) 3,53,801 படித்த வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு 240 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

52. 4,65,658 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

53. புதுப்பிக்க தவறிய 2,70000 இளைஞர்கள் 2001 முதல் பதிவு மூப்புடன் மீண்டும் புதுப்பித்து பயன்.

54. முதியோர் ஆதரவற்றோர் உதவித்தொகை மாதம் 200 முதல் 400 ரூபாய் என உயர்வு.7,39,541 முதியோரும், 7,90,041 ஆதரவற்றோரும் இதனால் பயன்.

55.கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகையாக மாதம் 200 ரூ என்பது 500 ரூ என உயர்த்தப்பட்டு 2006 முதல் ஆண்டு தோறும் 10,000 கடும் மாற்று திறணாளிகள் பலன்.

56. 1989ல் தர்மபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின் மூலம் இதுவரை உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களில் எண்ணிக்கை 4,41,311. இவற்றுள் ஊரக சுய உதவி குழுக்கள் 3,0 2092. நகர்புற சுய உதவி குழுக்கள் 1, 39,219. இக்குழுவில் சேர்ந்துள்ள மகளிர் எண்ணிக்கை 69,91000. இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை மொத்தம் கடன் தொகை 6342 கோடியாகும்.

57. 2006 க்கு பின் 17,12000 மகளிர் கொண்ட1,25493 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உண்டாக்கப்பட்டன. 2,81,883 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுழல் நிதி 281 கோடியே 88 லட்சம் ரூபாய். மகளிர் சுய உதவி குழுக்கள் போலவே 2006க்கு பின் 19,885 இளைஞர் சுய உதவி குழுக்களும் 30,000 நகர்புற சுய உதவி குழுக்களும் 10,772 விவசாயிகள் கூட்டுப்பொறுப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

58. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகிய 56,748 இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

59)  2,033 கோடி ரூபாய் செலவில் 10,096 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்.2010ல் 2,514 ஊராட்சிகளில் 508 கோடி ரூபாய் செலவில் இத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

60. அதே போல அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 810 கோடி செலவில் 420 பேரூராட்சிகளில் கட்டமைப்பு பணிகள்: 2010ல் 141 பேரூராட்சிகளில் 70 கோடி செலவில் கட்டமைப்பு பணிகள். நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 லட்சம் செலவில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

61. மாநகராட்சி நகராட்சிகளில் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்கு செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி.

62. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிர்வு. 2006-07ல் எட்டு விழுக்காடு. அதாவது 2112 கோடி ரூபாய். 2007-2008ல் 9 விழுக்காடு.  2008-2009ல்  9 விழுக்காடு. அதாவது 2959 கோடி ரூபாய். 2009-10ல் 9.5 விழுக்காடு. அதாவது 3316 கோடி என உயர்வு. 2010-11ல் 10 விழுக்காடு. அதாவது 4,030 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

63. 12,094 கோடி ரூபாய் செலவில் 57 ஆயிரத்து 787 கிமீ நீள சாலைகளில் மேம்பாட்டு பணிகளும் பராமரிப்பு பணிகளும் நிறைவேற்றப்பட்டன.

64.   4,730   கிமீ நீளமுள்ள சாலைகள் இருவழித்தடங்கள் ஆக அகலப்படுத்தப்பட்டன.

65. தமிழகத்தில் உள்ள சாலைகளில்  1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச்சிறு பாலங்கள் 881 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டன.

66. தமிழகத்தில் உள்ள 4,676 கிமீ தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கிமி நீள சாலைகள் நான்கு வழிச்சாலைகள் ஆக மாற்றப்பட்டுள்ளன.

67. தலவரி, தலமேல்வரி, தண்ணீர் தீர்வை அனைத்தும் ரத்து. நிலவரி ஏக்கர் ஒன்றுக்கு புஞ்ஜை நிலத்துக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் எனவும் நஞ்சை நிலத்துக்கு 50 ரூ என்பது 5 ரூ எனவும் பெயரளவுக்கு மட்டுமே வசூலிக்க அரசாணை.

68. ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய நான்கு நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

69. அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்.

70. தர்மபுரி மாவட்டத்தில் ஆரூர் புதிய கோட்டம், காஞ்சி மாவட்ட்த்தில் தாம்பரம் புதிய கோட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை புதிய கோட்டமென மூன்று புதிய கோட்டங்கள்.

71. திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம், கரூர் மாவட்டம் தரங்கம்பட்டியை தலைமை இடமாக கொண்டு கடவூர் , கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, வேலூர் மாவட்டம் ஆம்பூர், திருப்பூர் மாவட்டம் வடக்குகுளம், காஞ்சி மாவட்டம் ஆலந்தூர், சோழிங்கநல்லூர் என ஒன்பது புதிய வட்டங்கள் உண்டாக்கப்பட்டன.

72. கட்டணம் உயர்த்தப்படாமல் 12,137 புதிய பேருந்துகளுடன்  மேலும் 3000 புதிய பேருந்துகள்.

73. இஸ்லாமிய சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.

74. அருந்ததியர் சமூக அவலம் தீர 3 சதம் உள் ஒதுக்கீடு.இதன்காரணமாக 2009-2010ல் 56 மாணவர்கள் மருத்துவ கல்லூரியிலும், 1165 மாணவர்கள் பொறியியல் கல்லூரியிலும் சேர்ந்து பயில்கின்றனர்.

75. சமத்துவ சமுதாயம் காணும் நோக்கில் அனைத்து சாதியரும் அர்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளை சேர்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

76. அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவ புரங்கள் தந்தை பெரியார் சிலைகளுடன் நிர்மானிக்கும் திட்டம் நடைமுறை.

77. சென்னை கோட்டூர்புரத்தில் உலகத்தரத்திலான 200 கோடி மதிப்பிலான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.

78. 1000 கோடி ரூபாய் செலவில் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச்செயலகம்.

79. 100 கோடி செலவில் அடையார் பூங்கா திட்டம்

80. சென்னை மாநகர் குடிநீர் பற்றாக்குறை முற்றிலும் தீர்த்திட வடசென்னை மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றம்.

81. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ருபாய் நிதியுதவியுடன் தென்சென்னையில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.

82. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள்.

83. 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.

84.  630 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றம்.

85. மதுரவாயிலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு 1655 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பறக்கும் சாலை திட்டம் (கிட்டத்தட்ட முடியும் நேரத்தில் அதிமுக அரசு முடக்கி விட்டது)

86. மத சுதந்திரம்பேண கட்டாய மதமாற்ற சட்டம் ரத்து.

87. மூன்றாவது காவல் ஆணையம், மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி ஆர். பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு அது வழங்கிய 444 பரிந்துரைகளில் 2010 வரை 278 பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

88. 2,12,981 சத்துணவு பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம் - ஓய்வூதியம்.

89. டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5,115 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் ஆறாம் ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக 11, 099 கோடி ரூபாய் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிலுவை தொகையாக அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டது.

90. 21 லட்சம் குடிசை வீடுகளை ஆறு ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்னும் புரட்சிகரமான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு முதல் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகளுக்கும் மேலாக கட்டி கொடுக்கப்பட்டும் விட்ட நிலையில் அடுத்து வந்த அதிமுக அரசு அந்த திட்டத்தை முடக்கிபோட்டது.