பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label காதலர் தினம். Show all posts
Showing posts with label காதலர் தினம். Show all posts

February 14, 2009

"காதல் ஜீப்பில் நானும் தொத்திக்கவா?"- காதலர் தின ஸ்பெஷல் மீள் பதிவு!!!

காதலர் தினம் வந்துட்டா போதும் தமிழ்மணம் முழுக்க காதல்வயப்பட்டு போய்விடுகின்றது. நல்ல கவிதைகள் பிரசவமாகின்றன. நிறைய புலம்பல்கள், கொஞ்சம் சந்தோஷங்கள், கொஞ்சம் பெருமூச்சு, கொஞ்சம் பொறாமைகள், கொஞ்சம் கர்வம் இப்படி கலந்துகட்டியான பிரயாணிகளுடன் காதல் ஜீப் போய் கொண்டு இருக்குது தமிழ்மனத்திலே. அடியேனும் ஒரு சின்ன சைஸ் ரவுடிதான், ஸோ எச்சூச்மீ எனக்கும் கொஞ்சம் இடம் கொடுங்க, நானும் தொத்திகறேன்! ஆனா இது ஒரு மீள் பதிவு தான்! என்ன செய்ய காதலை பத்தின சரக்கு அத்தனையே என் கிட்ட:-))


**********************************************


அந்த தாவணி தேவதையின் பெயர் சூடிக்கொடுத்த சுடர் கொடி. அவளின் வசீகரமே அவள் தலைமுடிதான். மற்ற பெண்களின் சடையின் அடர்த்தி இவள் சடையின் ஒரு பிரிக்கு சமமாக இருக்கும். அத்தனை மொத்தமான சடை அவள் முட்டிகால வரை பிரண்டு ஆட்டம் போடும். அவள் கொஞ்சம் குள்ளமான உருவம். நிறம் என்று பார்த்தால் மாநிறம் தான். அவள் சிகப்பாக இருந்திருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்காது. நல்ல திருத்திய முகம். ஆனால் எப்போதுமே ஒரு மெல்லிய சோகம் இழந்து ஓடும் உதடுகள். கண்கள், அதன் உள்ளே ஓடி விளையாடும் அந்த கருப்பு திராட்சகள் கிட்ட தட்ட ஆண்கள் அத்தனை பேரையுமே "அட" போட வைக்கும்.


என் வீட்டுக்கு எதிர் வீடு அவளின் உறவினர் வீடு. அவள் வீடு எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ தள்ளி இருந்தது. +2 வரை அங்கே படித்துவிட்டு கல்லூரிக்காக உறவினர் வீட்டுக்கு வந்து விட்டாள். ஒரு காலை நேரத்தில் அவளின் உடமைகள் அடங்கிய ஒரு ஒயர் கூடையோடு அவளின் அப்பா அழைத்து வந்த போது தான் நான் முதன் முதலாக பார்த்தேன். அந்த வினாடியை இந்த நிமிடம் வரை என்னால் மறக்க முடியவில்லை. அவளுக்காகவே நான் தட்டச்சு பயிற்சிக்கு சென்றேன். அவளை கவர எத்தனை முயற்சிகள்.


ஆனால் அவள் எதற்கும் அசைந்து கொடுக்காதமையால் ஒரு நாள் தட்டச்சு பயிற்சி பள்ளியின் வாசலில் இருந்த அவள் சைக்கிளோடு என் சைக்கிளையும் இணைத்து பூட்டிவிட்டு காத்திருந்தேன். வந்து பார்த்த அவள் கொஞ்சமும் கோபிக்கவில்லை. "என்னங்க நம்ம சைக்கிளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க" என சொல்லிவிட்டு மெல்லியதாக சிரித்தாள். எனக்கு ஆயிரம் வண்ணத்து பூச்சிகள் மனதில் பறக்க தொடங்கி விட்டது. என்னை இந்த உலகமே கவனிக்க தொடங்கியது போல ஒரு நினைவு. என்னை சுற்றி ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். என் வேடிக்கை பேச்சுகளால் நான் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். என்னுடைய அந்த குணம் தான் அவளுக்கு பிடித்ததாம். குசூலோடித்கொதுடுங்த்கதன்.சுடர்கொடி என எல்லாம் கிருக்க தொடங்கினேன். எந்த மரத்தை பார்த்தாலும் இதயம் வரைய ஆரம்பித்தேன். ஒரு சீப்பும் கொஞ்சம் முக பவுடரும் நிரந்தரமாக என் சட்டை பையில் வந்து குடியிருக்க தொடங்கியது. எந்த காரை பார்த்தாலும் அந்த கார் கதவின் கண்ணாடியில் என்னை பார்க்க தொடங்கினேன். ஏனனில் அதில் மட்டுமே கொஞ்சம் குண்டாக தெரிந்தேன்.


அவள் கூந்தலுக்கு பூ வைக்க ஆசைப்பட்டேன். அவள் என் கூடவே இருக்க ஆசைப்பட்டேன். நண்பர்களை விட்டு தனியே வந்து சிந்திக்க தொடங்கினேன். அபத்த கவிதைகள் பொங்கி பொங்கி வந்தன. பொங்கியதை எல்லாம் பேப்பரில் வாந்தியாக எடுத்தேன். நானே படித்து மகிழ்ந்தேன். என்னை நம்பாமல் சலூன் கடைகாரரை நம்பினேன் மீசை திருத்த!அம்மாவின் சமையல் பிடிக்காமல் போனது. அப்பாவின் பேச்சுகள் அலுப்பாக இருந்தன. நான் என்ன வண்ணத்தில் உடை உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆளாள் அவள். வித விதமாக என்னை போட்டோ எடுத்து கொள்ள ஆசையாக இருந்தது. அதை அவள் பார்க்க வேண்டும் என்பதில் அதீத ஆசையாக இருந்தது. அவள் போட்டோவை என் இதயத்துக்கு இணைப்பாக ஒட்டி கொள்ள ஆசையாக இருந்தது. ஒரு குச்சியில் அந்த போட்டோவை கட்டி எனக்கு 1 முழத்துக்கு முன்பாக ஆடிக்கொண்டிருக்க அபத்த யோசனை வந்து தனியே வீட்டின் அறையிலே செய்து பார்க்க தூண்டியது. "தென்றலே என்னை தொடு" படமும் "வருஷம் 16" படமும் எனக்கு ராமாயண மகாபாரதமாக ஆகியது.


அவள் சடையை பிடித்து இழுக்க ஆசை வந்தது. எங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என எழுதி பார்க்க வைத்தது. யாருடைய கல்யாண பத்திரிக்கையிலோ அந்த மணமக்களுக்கு பதிலாக எங்கள் பெயரை எழுத வைத்தது மனது. அவள் சாதாரண ஜுரத்துக்கு அவள் உறவினர் சைக்கிளில் டாக்டர் வீட்டுக்கு போய் திரும்பியவுடன் நான் போய் டாக்டரிடம் "டாக்டர் அபாய கட்டத்தில் இருந்து தாண்டிவிட்டாளா இல்லையெனில் அப்போலோ கொண்டு போகலாமா" என கேட்டு டாக்டரை மயக்கமடைய வைத்தேன். முப்பத்தி இரண்டு பக்கத்துக்கு எல்லாம் கடிதம் எழுதி அவளிடம் கொடுக்க வைத்தது மனது. பின் அவளிடமிருந்து 37 பக்க பதில் கடிதத்தை உடனே படிக்காமல் நடு மைதானத்துக்கு கொண்டு போய் உரக்க படிப்பது, பின்னே "சூடிகொடுத்த சுடர் கொடி குலோத்துங்கன்" என்கிற அவள் கையெழுத்தை மட்டும் கிழித்து வாயில் போட்டு விழுங்குவது, (அது போயிருக்கும் ஒரு 500 கையெழுத்து வயித்து குள்ளே)பிரசவத்துக்கு அவளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு வாசலில் நான் கையை பிசைந்து கொண்டிருப்பதாக நினைத்து கொண்ட்தெல்லாம் கொஞ்சம் அதிகபட்சம் தான்.


நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு. அவளோ பெண்கள் கல்லூரியில் முதல் ஆண்டு. நான் இளமறிவியல் முடித்து அடுத்த கட்டத்துக்கு போகும் போது அவள் இன்னும் அதிகமாகவே என்னை விழுங்கிவிட்டிருந்தாள். காதலி உடையவன் என்கிற கர்வம் எனக்கு தனி அந்தஸ்தை கொடுத்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தான் அவள் வீட்டுக்கு விஷயம் தெரிய வர அவள் படிப்புக்கு பாடை கட்டப்பட்டு அவளின் சொந்த ஊருக்கும் அழைத்து போக பட்டாள். நானும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. காதலிப்பது என்பது கற்பு இழப்புக்கு சமமாக அவள் வீட்டார் நினைத்தார்கள்.அவசர அவசரமாக அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க நாலு திக்கும் ஆட்கள் பறந்தார்கள்.(ஆறு மாதங்களுக்கு பின்…………………)



அந்த சுடிதார் தேவதையின் பெயர் பிந்தியா. அவள் சேர நன்னாடு. விரித்து விட்ட ஈர தலைமுடியும், நெற்றி சந்தனமும், மயக்கும் கீரி விட்டது மாதிரியான கண்களும்,அவளின் நெடிய உருவமும், எலுமிச்சம் பழ வண்ணமும் ஆண்கள் அத்தனை பேரையும் நின்று பார்க்க வைக்கும். அந்த வண்ணமே அவளின் சிறப்பம்சம், அவள் கொஞ்சம் மாநிறமாக இருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்க மாட்டாள். எப்போதுமே அவள் உதடுகளில் ஒரு வித மின்னல் கீற்று மாதிரியான குறும்பு ஓடிக்கொண்டே இருக்கும்.………………… போங்கப்பா பதிவு ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டது …மாற்றம் என்பது மட்டுமே மாறாதது இவ்வுலகில்!!!!!


********************************


குறிப்பு: 1. எதுனா படம் கலர்ஃபுல்லா கேட்டேன் ஜீவ்ஸ் கிட்டே! 5 நிமிடம் ஆகும் பர்வால்யான்னு கேட்டார், அதுக்குள்ள இந்த பதிவை போட்டுடறேன்.


2. இதிலே வர்ர கதாவெசல்ஸ் எல்லாம் அக்மார்க் கற்பனை தான்!


3. ஜீவ்ஸ் எடுத்த போட்டோ வந்தாச்சு! என் கழுத்தில் கத்தி வைத்து அன்பாக "இந்த போட்டோ வரலைன்னா" என கேட்டு கொண்டதன் பேரிலும் படம் மிக அருமையாக இருப்பதன் பேரிலும் பதிவை காறி துப்ப நினைப்பவர்கள் இந்த போட்டோவை பார்த்து விட்டு விட்டு விடுவார்கள் என்கிற தடுப்பாட்ட பாலிசியின் படியும் படம் வெளியிடப்படுகின்றது.

4. ஜீவ்ஸ்ன் படத்தில் இருக்கும் கடலை விவசாயி நான் இல்லை:-))