பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 11, 2019

2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது? - ஒரு விரிவான பார்வை!



ஒவ்வொறு தேர்தலின் போதும் “அலை வீசுகின்றது, அலை வீசுகின்றது” என பேசுவதை பார்த்திருக்கின்றோம்! அது என்ன அலை? 

ஆதரவு அலை! ஒரு குறிப்பிட்ட கட்சியின் மீது திடீரென ஒரு நல்ல அபிப்ராயம் வரும். அல்லது அந்த கட்சி வெற்றி பெற்றால் “இன்னார் தான் முதல்வர் என்றோ அல்லது இன்னார் தான் பிரதமர்”என்றோ மக்களுக்கு ஒரு எண்ணம் தானாகவே தோன்றிவிடும். அப்படி தோன்றும் போது மக்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்து விடுவார்கள். அதே நேரம் ஊடகங்கள் அதை ஹேஷ்யங்களாக மக்கள் மனதில் விதைத்து விடுவார்கள். அப்படி விதைக்கும் போது அது ஆரம்பத்தில் கொஞ்சமாக ஆரம்பித்து தேர்தல் நெருங்க நெருங்க பூதாகரமாகி அது வாக்கு போடும் போது பிரதிபலித்து விடும்.

சென்ற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அப்படித்தான் மோடி அலை மிகச்சிறப்பாக ஊடகங்கள், பாஜகவின் சமூகவலைத்தள பொய்ப்பிரச்சாரங்கள் வழியாக அருமையாக பரவத்தொடங்கியது. அதன் பின்னர் பேசியவர்கள் எல்லோரும் கத்திப்பாரா பாலத்தின் மீது தினம் தினம் கடந்து போகின்றவர்கள் கூட அந்த பாலத்தின் கழுகுப்பார்வை வடிவம் தெரியாத காரணத்தால் அதைக்கூட குஜராத் பாலம் என்றே சிலாகித்து அந்த பொய்யை வசதியாக பரப்பினர். அதே போல ஸ்பெயின் நாட்டு சாலைகள் கூட குஜராத் சாலைகள் ஆகின. குஜராத்தில் தேனாறும், பாலாறும் ஓடுவதாகவும் மோடி பிரதமர் ஆகிவிட்டால் அந்த பாலாறு, தேனாறு எல்லாம் மடை மாற்றம் ஆகி நாட்டின் எல்லா மாநிலத்துக்கும் வந்து விடும் என நம்பினர். தவிர இந்தியாவில் எப்போதுமில்லா முறையாக “பிரதமர் வேட்பாளர்” என பகிரங்கமாக பாஜகவால் மோடி அறிவிக்கப்பட்டார். அது இந்தியாவில் அதுவரை இல்லாத புதிய பிரச்சார யுக்தியாக இருந்தது. நேரு காலம் முதல் மொரார்ஜி, இந்திரா என எல்லோரும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாமல் தேர்தலுக்கு பின்னர் தான் அந்த கட்சியின் தேர்வான எம்.பிக்கள் வழியாக பலத்த பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் பிரதமர்கள் ஆனார்கள். நேருவுக்கே அப்போது பட்டேல் போட்டியாக இருந்தார். இந்திராவுக்கு மொரார்ஜி போட்டியாக இருந்து பின்னர் காமராஜரால் இந்திரா பிரதமர் ஆனார். வி.பி சிங், குஜ்ரால், தேவகௌடா, சந்திரசேகர் என எல்லோருமே “பிரதமர் வேட்பாளராக” இல்லாமல் தேர்தலுக்கு பின்னர் தான் பலத்த பஞ்சாயத்துகளுக்கு பின்னர் தான் பிரதமர் ஆனார்கள். 2004ல் சோனியா தான் பிரதமர் வேட்பாளர் என சூசகமாக ஹேஷ்யங்கள் பரப்பப்பட்டு ஆனால் தேர்தல் முடிந்ததும் திடீரென எந்த காரணத்தினாலோ மன்மோகன் சிங் பிரதமர் ஆனார்.  1991ல்நரசிம்மராவ் கூட ராஜீவ் மரணத்துக்கு பின்னர் பல பஞ்சாயத்துகளுக்கு பின்னர் தான் பிரதமர் ஆனார். ஆனால் இந்திய சரித்திரத்தில் மோடி தான் பகிரங்கமாக “பிரதமர் வேட்பாளர்” என அறிவிக்கப்பட்ட “சம்பவம்” இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக நடந்தது. காரணம் இந்திய அரசிலமைப்பில் மக்கள் நேரிடையாக பிரதமரை தேஎர்வு செய்யும் முறையே கிடையாத போது “பிரதமர் வேட்பாளர்” என்பது எங்கிருந்து வரும். தேர்வாகிய எம்.பிக்கள் தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற நிலையில் “பிரதமர் வேட்பாளர்” என சொல்வதே நகைமுரண் தான்.



அத்தனை ஏன்? தமிழகத்தில் கூட அண்ணா மறைவுக்கு பின்னர் கூட நாவலர் தான் முதலில் “தற்காலிக முதல்வராக” இருந்து பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து தான் கலைஞரை முதல்வராக்கினர். எம்.ஜி.ஆருக்கு அந்த பிரச்சனை இல்லை. ஏனனில் அதிமுக என்பது அவரது தனிப்பட்ட கம்பனியாக இருந்ததால் வென்றால் அவர் தான் முதல்வர் என மக்களுக்கு தெரிந்தது. ஆனாலும் அவர் முதல்வர் வேட்பாளர் ஆக அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்கு பின்னர் தான் அவர் முதல்வராக ஆனார். அவர் மறைவுக்கு பின்னர் ஜானகி முதல்வரானதும் அப்படித்தான். ஆனால் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக முதன் முதலாக பாஜக மோடியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது. காரணம் பாஜக மீது மக்களுக்கு அத்தனை பெரிய கரிஷ்மா கிடையாது. பாஜக என்னும் கட்சியை அவர்கள் முன்னிருந்தி மட்டும் தேர்தலை சந்தித்து இருந்தால் இந்த அளவு க்ளீன் ஸ்வீப் அடித்திருக்காது. ஏனனில் பாஜக என்பது மக்களைப் பொருத்தவரை “மதவாதக்கட்சி” என்னும் பயம் இருந்தது. அதன் காரணமாகத்தான் ஒரு பொம்மையை அவர்கள் செய்தார்கள். அந்த பொம்மைக்கு கரிஷ்மாவை பொய்யாக கட்டமைத்தார்கள். அதன் காரணமாகத்தான் கத்திப்பாரா பாலம் குஜராத் பாலமாகியது. ஸ்பெயின் சாலை குஜராத் சாலை ஆகியது. மோடி என்னும்  பொம்மை “தேவதூதன்” ஆகிப்போனார். மக்களும் இந்த புதிய முறை “பிரதமர் வேட்பாளர்” என்பது இந்திய அரசிலமைப்புகு எதிரான சொல் என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு தேவையான அவகாசம் இல்லாமல் போனது.



ஆனால் மோடிக்கு கூட குஜராத் கலவரம் என்னும் மைனஸ் பாயிண்ட் இருந்தது. ஆனால் அந்த மைனஸ் பாயிண்ட் என்னும் கோட்டை அழிக்காமல் அழிக்கவும் முடியாது என்பது தெரிந்ததால் அதை விட கொஞ்சம் பெரிய கோடு போட்டார்கள். அங்கும் அவர்கள் பயன்படுத்தியது பொய்ப்பரப்புரை தான். ஸ்பெக்ட்ரம் என்னும் பெரிய கோட்டை போட்டு குஜராத் கலவரம் என்னும் கோட்டை சிறியதாக்கினர். காங்கிரஸ் அந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது என்பதே உண்மை. காங்கிரஸ் நினைத்து இருப்பின் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரனை போதும் உச்சநீதிமன்ற நேரிடை கண்காணிப்பில் சி பி ஐ ஸ்பெஷல் கோர்ட் தேவையில்லை என விஷயத்தை முடித்து இருந்திருக்கலாம். ஆனால் சிதம்பரம் போன்றவர்களின் துர்போதனை காங்கிரஸ் தலைமையை குழப்பி விட்டது தான் காங்கிரஸ் ஒரு எதிர்கட்சியாகக்கூட வராமல் போனதுக்கு காரணம். வினை விதைத்த சிதம்பரம் கூட வெற்றி பெற முடியாமல் போனமைக்கு அது தான் காரணம். நிற்க.... ஆக பாஜக மோடி என்னும் பொம்மைக்கு சீவி சிங்காரித்து ஒரு போலி கரிஷ்மா உண்டாக்கி வெற்றியை சாதகமாக்கிக்கொண்டது.

2014 மே மாதம் நடந்த தேர்தலுக்கு 6 மாதம் முன்பாகவே அதாவது 2013 நவம்பர், டிசம்பரிலேயே பாஜக மோடியை தயாரிக்க ஆரம்பித்து விட்டது. தேர்தல் சூசகங்கள் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என ஊடகங்களை பேசவைத்து விட்டது. 2014 ஜனவரி, பிப்ரவரியில் அத்வானியை எல்லாம் சமாளித்து அவரை போட்டியில் இருந்து விலக்கி விட்டது. ஆர்.எஸ்.எஸ் நேரிடையாக பஞ்சாயத்தில் இறங்கியது. பாபர் மசூதி இடிப்பு வழக்கை காட்டி மிரட்டியது ஆர்.எஸ்.எஸ். கண்டிப்பாக பாஜக தான் வெல்லும். மோடி பிரதமர் ஆகட்டும். வந்ததும் பாபர் மசூதி வழக்கை முடித்து விட்டு அடுத்த 2 ஆண்டில் வரும் ஜனாதிபதி தேர்வில் அத்வானியை ஜனாதிபதி ஆக்கிடலாம் என டீலிங் போட்டது. ஆனால் அடுத்த 2 ஆண்டில் அத்வானியை அந்த வழக்கில் இருந்து காப்பாற்றவில்லை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. இழுத்தடித்து ஜனாதிபதி ஆக்காமல் விட்டது. காரணம் ஆர்.எஸ்.எஸை பொருத்தவரை அவர்களுக்கு தனிமனித கரிஷ்மாவெல்லாம் முக்கியமில்லை. ஆட்சித்தலைமை என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலையாட்டி பொம்மையாக மட்டும் இருந்து விட்டால் போதும் என நினைக்கும் சித்தாந்தம் கொண்ட அமைப்பு. ஆகவே அத்வானி இப்போதும் கூட திரிசங்கு நிலையில் இருகின்றார்.

ஆக 2014 மே மாத தேர்தலுக்கு 6 மாதம் முன்பாகவே ஆர்.எஸ்.எஸ் அழகாய் காய்களை நகர்த்தி 2014 மார்ச் மாதத்தில் ”மோடியை” முறைப்படி அறிவித்து ஆட்சியை பிடித்து விட்டது. இந்த கட்டுரையின் இரண்டாம் பத்தியின் ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா “ஆதரவு அலை”. அதைத்தான் விரிவாகப்பார்த்தோம்.

இதே போல இன்னும் ஒரு அலை இருக்கின்றது. அது .....

“எதிர்ப்பு அலை”.... எமர்ஜென்சி முடிந்த பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திராவுக்கு எதிராக அகில இந்திய கட்சிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இந்திராவை எதிர்த்ததே .... அது எதிர்கட்சிகள் மீதான ஆதரவு அலை அல்ல... இந்திரா மீதான எதிர்ப்பு அலை. அதே போல 1996ல் ஜெயாவுக்கு எதிராக தமிழகத்தில் நடந்ததே அது ஜெயா மீதான எதிர்ப்பு அலை தான். வளர்ப்பு மகன் திருமணத்தில் ஆரம்பித்து இமாலய ஊழல், சர்வாதிகாரத்தனம், ஊடகங்கள் மீதான அடக்குமுறை என ஜெயாவுக்கு எதிராக எழுந்த “எதிர்ப்பு அலை” அவரை வீழ்த்தியது. இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன “எதிர்ப்பு அலை”க்கு. மொரார்ஜியின் ஆட்சிக்கு பின்னர் மீண்டும் இந்திரா வெற்றி பெற்றதும் எதிர்கட்சிகள் மீதான “ஒற்றுமையின்மை” என்னும் எதிர்ப்பும் “நிலையான ஆட்சி கொடுக்க அவர்களால் இயலவில்லை” என்னும் எதிர்ப்பு அலையும் தான் மீண்டும் இந்திரா வெற்றிபெற காரணம்.

ஆதரவு அலையும் பார்த்து விட்டோம், எதிர்ப்பு அலையும் பார்த்து விட்டோம். அடுத்த அலை என்பது....

 “அனுதாப அலை” - இது கொஞ்சம் மோசமான ரகம்! இந்திராகாந்தியின் கொடூர கொலைக்கு பின்னர் மக்கள் ஓவென அழுது முடித்திருந்த நேரம். ஆனால் உடனே ராஜீவ் பிரதமர் ஆகிவிட்டாரெனினும் உடனே அந்த அனுதாப அலையை பயன்படுத்திக்கொள்ள நினைத்து ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்தார். அவர் நினைத்தது வீண்போகவில்லை. காங்கிரஸ்  வரலாற்றில் இதுவரை இல்லா அளவுக்கு 400க்கும் அதிகமான இடங்களில் ராஜீவ் வெற்றி பெற்றார். அதே நேரம் மாநிலங்களவையிலும் பலம் இருந்தது. தான் நினைத்த எல்லாம் செய்தார் ராஜீவ். கட்சித்தாவல் தடை சட்டம் முதல் பஞ்சாயத்து ராஜ் வரை அவருக்கு சுலபமாக கைகூடியது.

அதே போல எம்.ஜி.ஆர் நோயில் படுத்த போதும் அதே அனுதாப அலை என்பது மீண்டும் அதிமுகவை 3 வது முறையாக ஆட்சியில் அமர்த்தியது. ஆனால் அந்த தேர்தலில் எம் ஜி ஆர் உடல் நலமுடன் இருந்திருந்தால் நிலை வேறாக இருந்திருக்கும். ஆனால் அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1987ல் நடந்த தமிழக உள்ளாட்சித்தேர்தலில் எம்.ஜி.ஆர் இருக்கும் போதே திமுக அபரிமிதமான வெற்றி பெற்றது. ஏனனில் அப்போது எம் ஜி ஆர் மீதான அனுதாபம் முடிந்து விட்ட நேரம் அது.

அதே போல ராஜீவ் மரணத்தின் பின்னர் ஜெயா தமிழகத்தில் வெற்றி பெற்றதும் அதே அனுதாப அலை தான். நரசிம்மராவ் பிரதமர் ஆனதும் அதே ராஜீவ் மரணத்தால் ஏற்ப்பட்ட அனுதாப அலை தான்! ஆக இந்த அனுதாப அலை தான் கொஞ்சம் ஆபத்தான விஷயம். நல்ல கட்சியைகூட ஆட்சியில் அமரவிடாமல் செய்து விடும். கேடுகெட்ட ஆட்சியாளர்களைக்கூட மீண்டும் ஆட்சியில் அமர்த்தி விடும். எனவே இது தான் ஆபத்தான அலை.

அடுத்து ஒரு அலை இருக்கின்றது. “பண அலை” அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அந்த  “பண அலை” எனும் அலையை பெத்த அம்மாவே புரட்சித்தலைவி அம்மா தான்! 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுமைக்கும் வீசிய மோடி அலை என்பது தமிழகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டமைக்கு பாஜக தமிழகத்தில் இல்லை என்பது ஒரு காரணம். அடுத்து மிக அழகாக ஜெயா அரசு சரியான திட்டமிடலுடன் 39 தொகுதிகளுக்கும் தேர்தலுக்கு முதல் நாள் அரசு இயந்திரத்தை கையில் வைத்துக் கொண்டு ஓட்டுக்கு 200 ரூபாய் என கொடுத்தது. 37 இடத்தில் வெற்றது. இது ஜெயாவுக்கு சரியான யுக்தியாகப்பட்டதால் 2016 சட்டமன்ற தேர்தலில் கூட அதே “பண அலையை”கொண்டு வென்றார். இந்த அலையை வெல்வது சுலபம். ஆனால் ஆட்சி கிடைக்கும். தேர்தல் ஜனநாயகம் என்பது செத்துப்போய்விடும். ஜெயா 200 ரூபாய் கொடுக்கின்றாரா? அதை விட நான் அதிகமாக கொடுக்கின்றேன் என ஜெயாவுக்கு சமமான பலமுடைய கட்சி கொடுத்தால் அது அவர்களுக்கு சாதகமாக முடியும். ஆனால் அதற்காக பாஜக அந்த பணத்தை தருகின்றேன் என வந்தால் அது நடக்காது. அதிமுகவுக்கு சமபலமான ஒரு கட்சி அந்த ஆயுதத்தை எடுத்தால் தான் சாத்தியம் ஆகும். ஆனால் இந்த பண அலை என்பது நாட்டை அழிவுப்பாதைக்கு வெகுசீக்கிரம் அழைத்து சென்றுவிடும். சென்ற தேர்தலில் பணம் கொடுத்து பல்லாயிரம் கோடிகள் செலவழித்த ஜெயா அம்மையார் ஆட்சி நடத்துவரை விட போட்ட முதலீட்டை அறுவடை செய்வதில் தான் முனைப்பாக இருந்தார். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என நாடு நாசமாகப்போனது தான் மிச்சம்.


இப்போது ஆதரவு அலை, எதிர்ப்பு அலை, அனுதாப அலை, பண அலை என நான்கையும் பார்த்து விட்டோமா? இப்போது இந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன அலை வீசப்போகின்றது அல்லது வீச ஆரம்பித்துள்ளது?

சர்வ நிச்சயமாக “மோடி மீதான எதிர்ப்பு அலை” மட்டுமே வீசத்தொடங்கி விட்டது. அதை எப்படி கண்டு பிடிப்பது? மிகவும் சுலபம்! கடந்த நான்கரை ஆண்டுகளாக மோடி அவர்கள் உடுத்திய கோமாளி உடைகள், பத்து லட்சம் கோட்டுகள், தாய்லாந்து காலான்கள் உணவு , உலகம் முழுவதும் சுற்றி சுற்றி சில ஆயிரம் கோடிகள் ஊதாரித்தனமாக செலவழித்தமைகள், மோடி ஒரு பொய்யர் ஆக இருத்தல், இவைகள் மக்களை கடுமையாக எரிச்சல் அடைய வைத்துள்ளன. நீட் தேர்வு, பணமதிப்பிழப்பு, உதய் மின் திட்டம், மீத்தேன் போன்ற விஷயங்கள் சரியாக தங்கள் வாக்கை செலுத்தும் மிக அடித்தட்டு மக்களை சென்றடைந்ததை விட “நாம் ஏழ்மையில் இருக்கும் போது பகட்டான உடை, உணவு, சிகை அலங்காரம், கோமாளி தொப்பிகள், உலகம் முழுமையும் சுற்றியவை ஆகியவைகள் ஏழைகளை பொறாமைப்பட வைக்கும் என்பது தான் உண்மை! இது அதீத “மோடி எதிர்ப்பு அலை”க்கான முதல் காரணமாக இருக்கும். அடுத்து தான் ஆட்சி நிர்வாகமின்மை, நீட், மீத்தேன், பணமதிப்பிழப்பு, வெற்று அறிவிப்புகள் ஆகியவை தாக்கும். அதற்கடுத்ததாக ரஃபேல் ஊழல் போன்ற ஊழல்கள் அடுத்த இடத்தை பிடிக்கும். ஆனால் காங்கிரஸ், திமுக, மம்தா, நாயுடு, லாலூ, மாயாவதி, அகிலேஷ் எல்லோரும் செய்ய வேண்டிய முக்கிய பிரச்சாரங்கள் பணமதிப்பிழப்பு, ரஃபேல் ஊழல், ஆட்சி செய்யத்தெரியாதமை, மதக்கலவரங்கள் எல்லாவற்றையும் மிகக்கடுமையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இப்போது மோடி எதிர்ப்பு அலை வீசத்தொடங்கியதை இவர்கள் ஊதிப்பெரிதாக்க வேண்டிய முக்கிய பணி இப்போது எதிர்கட்சிகள் முன்பாக நிற்கின்றது.  சரி, மோடி எதிர்ப்பு அலை வீசத்தொடங்கி விட்டதா என நீங்கள் கேட்கலாம்... ஆம் என்றே சொல்வேன்.

GoBackModi, GoBackSadistModi போன்ற சமூக ஊடக எதிர்ப்புகள் முதலில் தமிழகத்தில் ஆரம்பித்து இப்போது இன்று இந்த மூன்றாம் முறை மோடியின் தமிழக விஜயத்தின் போது உலகலாவிய அளவில் தெரிந்து விட்டது. தமிழகத்தில் பற்ற வைக்கப்பட்ட அந்த மோடி எதிர்ப்பு என்னும் தீ ... இங்கிருந்து கொல்கத்தா சென்றது. அங்கே பற்றி பின்னர் அஸ்ஸாமில் தொடர்ந்து, கேரளாவில் அதிர்ந்து, ஆந்திரா குண்டூரில் நாறி விட்டது. இனி இது தொடரும் என்றே நினைக்கின்றேன். உ.பிக்கும், பீகாருக்கும் போகும் போதும் இதே நிலை வரும் போது அது அகில இந்திய அளவில் மோடிக்கு பெரிய பின்னடைவை ஏற்ப்படுத்தும்.

அதே போல தமிழகத்தின் புகழ்வாய்ந்த தலைவராக விளங்கும் ஸ்டாலின் போன்றவ்ர்கள் “மோடி ஒரு பொய்யர், மோடி ஒரு சேடிஸ்ட்” என மிகக்கடுமையாக தாக்கி பேசுவது அடிமட்ட வாக்காளனை அழகாக சென்று அடைந்து விட்டன. அதே போல ராகுல் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சுகள், மோடி ஒரு ரஃபேல் திருடன் என விமர்சித்தது என்பது 2014 ஆரம்பத்தில் வைத்திருந்த மோடி ஒரு தேவதூதன் என்னும் பிம்பத்தை அடித்து நொறுக்கி விட்டன.

சென்ற 2014 தேர்தலில் மோடி தான் பிரதமர் என பாஜக பேசும் போது எதிர்கட்சிகள் “இல்லை அவர் கிடையாது” என அழுத்தமாக முழங்கவில்லை. தவிர எதிர்கட்சிகளிடம் இப்போது இருக்கும் ஒற்றுமை அப்போது கண்டிப்பாக இல்லை. காங்கிரசும், திமுகவும் கூட இணைந்து தேர்தலை சந்திக்கவில்லை. காரணம் அப்போது பாஜக முன்வைத்த ஸ்பெக்ட்ரம் விஷயம் பற்றி காங்கிரஸ், திமுக ஆகியவை கடுமையாக எதிர்த்து வாதாடவும் இல்லை. ஏனனில் யாருக்கும் அந்த விஷயத்தில் என்ன நடக்கின்றது என்பதே புரியவில்லை. ஆனால் இப்போது கதையே மாறிவிட்டது. ஓ.பி ஷைனியின் அருமையான தீர்ப்பும், அதன் பின்னர் ஆ.ராசா அவர்கள் எழுதிய புத்தகமும் (அதற்கு யாரும் இன்னும் எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை) நிலைமையை அடியோடு மாற்றிவிட்டது.

மேலும், இப்போது பாஜகவில் கூட மோடி தான் பிரதமர் என சொல்வதை விட அமீத்ஷா போன்றவர்களே கூட கொல்கத்தாவில் பேசும் போது “அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ராகுல் திங்கள் பிரதமர், நாயுடு செவ்வாய் பிரதமர், மம்தா புதன் பிரதமர், மாயாவதி வியாழன், அகிலேஷ் வெள்ளி, ஸ்டாலின் சனிக்கிழமை பிரதமராக இருப்பார்கள்” என சொன்னதை நன்கு கவனிக்க வேண்டும். ஆக அமீத்ஷாவே எதிர்கட்சிகள் வெற்றி பெற்றால்.....  என்ற நிலைக்கு வந்து விட்டார் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாஜகவில் அத்வானி மோடிக்கு முதல் எதிரியாக இருந்து வரும் நிலை என்பது நன்கு வளர்ந்து நிதின்கட்கரி, அருண்ஜேட்லி, யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா என அபாரமாக எதிரிகள் எண்ணிக்கை கூடி வருகின்றது மோடிக்கு என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

அதே போல அமீத்ஷா பேசுவது போலவே தமிழக பாஜக தலைவர்களும் ராகுலுக்கு ஆளத்தெரியாது என்று தான் பேசி வருகின்றனர். மோடி பிரதமர் என்னும் பேச்சு அவர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இப்போது ராகுல் ஆளத்தெரியாது, ஸ்டாலின் பிரதமர் ஆவாரா? அகிலேஷ் ஆவாரா, நாயுடு ஆவாரா என்னும் நிலைக்கு அவர்கள் மனோநிலை வந்து விட்டது. இதல்லாம் ஏன்? மோடி எதிர்ப்பு அலை வீச ஆரம்பித்த அறிகுறிகள் தான் இவைகள்!

இனி எதிர்கட்சிகள் செய்ய வேண்டியவைகள், அந்த அலையை கடுமையாக்க வேண்டும். ஊடகங்களை மோடியின் பிடியில் இருந்து விடுவித்து வெளியே கொண்டு வர வேண்டும். கூட்டணி பங்கீடுகளை உரசல் இல்லாமல் முடிக்க வேண்டும். மிக முக்கியமாக வேட்பாளர் தேர்வுகள் அருமையாக செய்ய வேண்டும். அதிகாரிகளிடம் லாபி செய்ய வேண்டும். முதலில் அரசு அதிகாரிகளிடம் “நாங்கள் தான் ஆட்சிக்கு வரப்போகின்றோம். பாஜக ஆட்சிக்கு வ்ர இயலாது” என்பதை லாபி செய்து அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டும். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் மோடி எதிர்ப்பு அலை இன்னும் வேகமாக வீச ஆரம்பித்ததும் அதை விசிறி விட வேண்டும்.

இதல்லாம் நடந்தால் நிச்சயம் மோடி வீட்டுக்கு போவார். பாஜக ஆட்சி இழக்கும்!

ஆக நான் சொன்ன நான்கு அலைகளில் இப்போதைக்கு இருக்கும் ஒரு அலை “மோடி எதிர்ப்பு அலை” தான். பண அலை வீசுமா வீசாதா என்பதை இப்போதைக்கு சொல்ல இயலாது. அதை தேர்தல் முதல் நாள் தான் சொல்ல முடியும். அடுத்த அலையான அனுதாப அலை இப்போதைக்கு யாருக்கும் இல்லை. ஆனால் மோடி அதிகமாக பிரச்சாரம் செய்யாமல் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இதே போல வித வித குல்லாய்கள் அணிந்து கொண்டு முன்னாள் பிரதமர் டெல்லி வீதிகளில் சுதந்திர தின விழா, குடியரசு விழா என்றும் வெளிநாட்டு தலைவர்கள் டெல்லி வரும் போது முன்னாள் பிரதமர் என்னும் நிலையில் இவரையும் வந்து பார்ப்பார்கள் என்னும் அந்தஸ்துடன்  நீண்ட ஆரோக்கியத்துடன் வாழலாம். காந்தியை கொன்ற நாடு இது! ஜாக்கிரதை! இது ஒரு எச்சரிக்கை மணி மட்டுமே!

தேர்தல் ஜுரம் ஆரம்பித்து விட்டது. அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கின்றது என்பதை அந்தந்த சூழலை கவனித்து பகிர்ந்து கொள்வோம்! ஆனால் இப்போதைக்கு இது தான் நிலைமை! அருமையான ஆட்சி அமையட்டும் இந்தியாவுக்கு! இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

- நன்றி! வணக்கம்!
அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்