பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 18, 2013

ஆசீப்மீரான் அண்ணாச்சியும் அமர்களமான பிரியாணி விருந்தும்!

கீழை ராசா, ஆசீப்மீரான், தங்கமச்சான் ரியாஸ் மற்றும் பிளக்ஸ்போர்டு


விடிகாலை கனவு பலிக்கும் என்பார்கள். அத்தனை ஒரு ருசியான பிரியாணியை விடிகாலை 5 மணிக்கே கனவில் சாப்பிட்டேன். அண்ணாச்சி என  துபாய்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்டு பின்னர் அது ஷார்ஜா, அபிதாபி, பக்ரின் என பரவலாக்கப்பட்டு இன்று இண்டர்நேஷனல் அண்ணாச்சியாகி இருக்கும் என் அன்பு தோழர் ஆசீப்மீரான் ஒரு வாரம் முன்பே தன் குத்தாலம் (மயிலாடுதுறையில் இருந்து எட்டு கிமீ) விஜயத்தை பற்றி என்னிடம் ரகசிய அறிக்கை அளித்திருந்தாலும் நேற்று காலை முதல் லைட்டா பரபரப்பு தொத்திகிச்சு.

நேற்று காலை ஒரு கடமையுள்ள கணவனாக கக்கூஸ் எல்லாம் கழுவ ஆரம்பித்தேன். "அபீ அபீ... ஏன் சேர்ல எல்லாம் புக்ஸ் போட்டு வச்சிருக்கே" என கத்த அவள் சர்வசாதாரணமாக "கிட்ட தட்ட எட்டு பரம்பரையா நாம அப்படித்தானேப்பா.. தவிர அதிலே கிடக்கும் புத்தகம் எல்லாம் உங்களோடது" என சொல்ல அமைதியாக எல்லாம் சுத்தம் செய்தேன்.

நெட் பக்கம் போய் பார்த்தா அண்ணாச்சி மதுரையில் இருந்து பஸ்ல் கிளம்பி சட்டை பட்டன் தெரிக்க தெரிக்க பிதுங்கி போய் பதிவா போட்டு கிட்டு இருக்காரு. அந்த பதிவை படிச்சதும் "ஆகா அவரு மாயவரம் வரதுக்கு எப்படியும் ரெட்டாம் ஆட்டம் சினிமா வுட்டுடுவான் போலிருக்கே" என நினைத்து கொண்டேன். நடுநடுவே என் மனைவி "என்ன மெனு செய்யட்டும்" என கேட்டு கேட்டு அலுத்துப்போய் தூங்கிப்போன பின்னே அண்ணாச்சியிடம் இருந்து போன். "நான் கும்பகோணம் வரை மெதுவா வந்துட்டேன். கைதாங்கலா என்னை காப்பாத்தி இறக்கிவிட குத்தாலத்தில் 11 பேர் கொண்ட குழு நிக்குது. அதனால நான் அங்கயே சிரமபரிகாரம் செஞ்சுகிட்டு காலை கல்யாணத்திலே கலந்துக்குறேன்" என அரசு பஸ் கொடுத்த அசதியில் பேச "அடடா அவசரப்பட்டுடியடா அபிஅப்பா, வீட்டை சுத்தம் செஞ்சிருக்க வேண்டாமோன்னு மனசில் நினைச்சுகிட்டு அதுக்கு மேல அவரை கஷ்டப்படுத்த மனமில்லாமல் "அப்ப சரி, நான் ஒரு பத்து மணிக்கு குத்தாலத்தில் பிரியாணியை சந்திக்க வரும் போது உங்களை பார்த்துக்குறேன்" என சொல்லி விட்டு அதே நியாபகமாய் தூங்கியதால் இன்று விடிகாலை அந்த பிரியாணி கனவு.

"என்னங்க, சீக்கிரம் எந்திரிங்க. இன்னிக்கு பிரதோஷம், ஞாயித்து கெழமையானாலும் கவுச்சி கெடயாது. சீக்கிரம் எந்திரிச்சு வீட்டை சுத்தம் செய்யுங்க" என சொன்னபோது... நான் "அந்த ரூல்ஸ் எல்லாம் என்னை கட்டுப்படுத்தாது. குத்தாலத்திலே பிரியாணி என்னை வா வான்னு கூப்பிடுது" என சொல்லிவிட்டு ஒருவழியாக நட்ராஜையும் கூட்டிகிட்டு குத்தாலம் சென்றேன்.

"கல்யாணம் செஞ்சுக்க போகும் மணமக்களேஏஏஏஏ"ன்னு உச்சஸ்தாயில் பாடியவரின் எதிரே ஒரு ப்ளக்ஸ் போர்டுக்கு கீழே அண்ணாச்சி, கீழை ராசா அவர்கள் மற்றும் பதிவர் குசும்பன் அவர்களின் தந்தையார்,  ரியாஸ்பாய் என்னும் தங்கமச்சான் (பதிவர் ஜஸீலாவின் தங்கமச்சான்) , ஜஸீலாவின் குட்டி பையன் எல்லோரும் இருக்க, குத்தாலம் அன்பு, குத்தாலம் கல்யாணம் அண்ணன் ஆகியோர் "இதோ மினிஸ்டர் கிளம்பியாச்சு வீட்டில் இருந்து...." என வரவேற்கும் முஸ்தீபுகளில் இருக்க நாங்கள் ஒரு நான்கு நாற்காலி போட்டு ரவுண்டு கட்டினோம். ரம்மி சீட்டு கட்டு இல்லாமை மட்டுமே ஒரு குறை. நடு நடுவே எனக்குள் தூங்கிகொண்டு இருந்த கவுண்டமணி "அண்ணே கடா எப்ப வெட்டுவாங்க" என கேட்டுக்கொண்டே இருந்தார். அடக்கினேன்.

எங்க மினிஸ்டரும் எம் எல் சியுமான கோசிமணி அண்ணன் கும்பகோணம் அன்பு அண்ணன் கூட வர குத்தாலம் அன்பு எங்களுக்கு முன்பாக நாற்காலி எடுத்து போட்டு அவரை அமர வைத்து பவ்யம் காட்டி பின்னால் நின்று கொண்டார். ஆசீப் அவரிடம் "உட்காருங்க நீங்களும்" என சொன்னதுக்கும் "அய்யய்யோ எங்க எம் எல் சி க்கு முன்னால உட்காரமாட்டேன்" என்பது போல தலையாட்டினார்.

பின்னர் ... வேற என்ன பிரியாணி தான். இது போன்ற விருந்துக்கு நட்ராஜை அழைத்து போவதில் ஒரு சௌகர்யம் என்னான்னா அவனுக்கு கிடைக்கும் பீஸ் எல்லாம் நமக்கு தான்:-) அருமையான மட்டன் பிரியாணி, கோழி வறுவல், தக்காளி இனிப்பு, பாயசம், வெங்காயம் தயிர் என அப்பட்டமான எங்கள் மாவட்ட பாய்மார் வீட்டு கல்யாண பிரியாணி. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை 1000 ரூபாய்க்கு பிரியாணி வாங்கி துன்னாலும் அந்த பாய்மார் வீட்டு கல்யாணத்திலே சாப்பிடும் அந்த டேஸ்ட் ஏன் மத்ததுக்கு எல்லாம் வரமேட்டேன்குதுனு தெரியலை.

வழக்கம் போல நட்ராஜ் பீஸ்ம் நானே போட்டு மொக்கினேன். குசும்பன் அப்பா "இன்னும் ஒரு பிஸ் வச்சுகுங்க தம்பி" என சொன்ன போது வயிற்றில் இடம் இல்லாமையால் "அய்யோ முடியலை"என கையெடுத்து கும்பிட்டேன். ஊஃப்ப்ப்ப்ப்... செம செம....

பின்னர் வெளியே வந்ததும் "சரி ஆசீப் கிளம்புங்க நம்ம வீட்டுக்கு" என சொன்னபோது "இல்லை... ஜஸீலா பேமிலி சென்னைக்கு கார்ல போறாங்க. நான் அவங்க கூட போனா ஈசியா இருக்கும். பஸ்ல போறது மாதிரி கஷ்டம் வேற எதும் இல்லை. அடுத்த தடவை ஒரு பெரிய டூரா போட்டு கிட்டு எல்லோரும் வருகிறோம்" என சொன்னார்.

பின்னர் வெளியே வந்ததும் ஜஸீலாவை சந்தித்தேன். ஜஸீலாவின் குட்டி பெண் இப்போது சுட்டி பெண்ணாக "அங்கிள் உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு, ஆனா ஞாபகம் தான் சரியா வரலை" என சொன்னாள். எப்போது அந்த குட்டி பாப்பாவை கடைசியாக பார்த்தேன் என நியாபகப்படுத்தி பார்த்தேன். எஸ்... பண்புடன் குழுமம் ஆரம்பிக்கும் அன்று துபாய் கராமா சிவ்ஸ்டார் பவனில் பார்த்தது. ஆச்சு பல வருஷம். அதன் பின் இப்போது தான் பார்க்கிறேன். பாப்பா நட்ராஜுடன் நன்றான ஒட்டிக்கொண்டாள்.ஜஸீலா நட்ராஜிடம் "தம்பி உன் அப்பாவை எல்லாரும் அபிஅப்பான்னு சொல்றாங்க. இனிமே நட்ராஜ் அப்பான்னு சொல்லனும் சரியான்னு போட்டு கொடுக்க ஏற்கனவே அந்த விஷயத்தில் என் மேல ரொம்ப காண்டா இருந்த நட்ராஜ் இன்னும் சூடாகினான்.:-) பின்னர் சென்னை செல்ல பைபாஸ் சாலைகள் வழி எல்லாம் சொல்லிவிட்டு மாயவரம் வரும் வரை நான் என் வண்டியில் முன்னே செல்ல அவர்கள் கார் பின் தொடர்ந்தது.

இந்த பதிவு அடித்து முடிக்கும் போது அவர்கள் சிதம்பரம் தாண்டி விட்டதாக ஆசீப் கிட்டே இருந்து போன் வந்தது. அடடே என்ன ஒரு அழகான நட்புகள். எத்தனை மலரும் நினைவுகள். காலம் தான் எத்தனை வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. நண்பர்களுடன் இதை இந்த பதிவின் மூலமாக பகிர்ந்து கொள்வதில் தான் எத்தனை ஒரு சந்தோஷம்!

கடைசி வரை ஆசீப் கிட்டே யாருக்கு கல்யாணம், மணமகன் பெயர் என்ன, மணமகள் பெயர் என்ன என்ற கேள்விகளை கேட்க மறந்தே போனேன். நான் நன்றி சொல்லாவிடினும் சாப்பிட்ட வயிறு அந்த மணமக்களுக்கு நன்றி சொல்ல ஆசைப்படுது. வாழ்க மணமக்கள்!

August 17, 2013

பார்திபனை பழிவாங்கனும்... ஹெல்ப் மீ ப்ளீஸ்...!!!



எனக்கு எப்போதுமே ஒரு கெட்ட பழக்கம். "அந்த குளம் எத்தனை ஆழம் இருக்கும்?"னு கேட்டா ஒரு தென்ன மர ஆழம் இருக்கும் என்பேன். அந்த பூதம் ரொம்ப பெரிசு என சொல்லனும்னா அது ரெண்டு தென்ன மர உசரத்துக்கு இருக்கும் என்பேன். அது போல "இது எந்த வருஷத்து சம்பவம்?" என எதையாவது கேட்டா ரஜினியின் "ஆறு புஷ்பங்கள்" படத்துக்கும் சிவாஜியின் 200 வது படம் "திரிசூல"த்துக்கும் நடுப்புற நடந்துச்சு என்பேன்.


அது போல இந்த பதிவில் வரும் சம்பவம் எம் ஜி ஆரின் "நீதிக்கு தலைவணங்கு"படம் வந்ததுக்கும் காமராஜர் இறந்த போது பக்கத்து வீட்டு தந்தி ஆபீசர் அழுதாரே அதுக்கும் இடையே நடந்த சம்பவம். அப்போ நான் அஞ்சாப்பு படிச்சேன். மகாலெஷ்மி டீச்சர். அப்போது ரெட்டை கிளி தீப்பெட்டி காலி பெட்டி இருபது பெட்டி கொண்டு போய் கொடுத்தா சலாமத் பாய் கடையில் ஐந்து பால்குச்சி - சிலேட்டு குச்சி  ஃப்ரீ ன்னு ஒரு ப்ரமோ போட்டிருந்தாங்க.


நான் படிப்பில் ஜெயிப்பதை விட பால்குச்சியில் ஜெயிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டினேன். ரோட்டில் நடந்து போகும் போது சமைஞ்ச பொண்ணு மாதிரி தரையை பார்த்து கிட்டே நடப்பேன். எதுனா ரெட்டை கிளி டப்பா கிடைக்குமான்னு மண்ணை செருப்பு போடாத காலால் நோண்டிகிட்டே நடப்பேன். பீடி குடிக்கும் பொர்கீஸ் கிட்டே எல்லாம் "அண்ணே  தீப்பெட்டி இருக்கா?"ன்னு கேட்டு முறைப்பு வாங்கினேன். குச்சி இல்லாட்டி தோஷமில்லைண்ணே, பொட்டியாவது குடுங்கன்னு அவன் குருதி அழுத்தத்தை எகிற வைத்தேன். அப்படி பரிதாபப்பட்டவன் கொடுத்த காலி பொட்டி 'சீட்டா ஃபைட் 'பொட்டியா இருந்து தொலைச்சது. "எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது ஆண்டவா" என கச்சேரிகொடி பிள்ளையாரிடம் கேட்டு இருக்கேன். அந்த பிள்ளையாரை பழிவாங்குவதாக நினைத்து ஐந்து பைசா சவ்வு மிட்டாயை அவர் எதிரில் நக்கினேன். எனக்கு காலி தீப்பெட்டி கூட கிடைக்க செய்யாத உன்னை பார்க்க வச்சுகிட்டே இந்த சவ்வு மிட்டாயை திங்கிறேன் பார் என நக்கி நக்கி அவரை பழி தீர்த்தேன்.


வீட்டில் அம்மா விறகு அடுப்பு கொண்டையின் பக்கத்தில் நமத்து போகாமல் இருக்க வேண்டி வைத்த தீப்பெட்டியில் குச்சியை எடுத்து போட்டு விட்டு பொட்டியை சேர்த்தேன். அம்மா வந்து "இது என்ன கூத்து ... பொட்டிய காணும், குச்சில்லாம் கெடக்கு" என புலம்பிய போது "பூனை எடுத்திருக்கும்மா" என வலிய வந்து சம்மன் இல்லாம ஆஜராகினேன். அடுத்த முறை, பூனை  குச்சியை எடுத்து கீழே போட்டு விட்டு பொட்டியை மட்டும் கவ்விகிட்டு போனது போல திரைக்கதை அமைத்து, டைரக்டர் ஆக ஆசைப்படுபவர் தயாரிப்பாளரிடம் சொல்வது போல பூனை போல நடித்தும் காட்டி அடிவங்கினேன்.


சேர்ந்த பெட்டிகளை தினமும் எண்ணி எண்ணி பார்த்து அதை மாட்டு கொட்டகையில் எரவானத்தில் ஒழித்து வைத்தேன். தூங்கும் போதும், விழிக்கும் போதும் அந்த ரெட்டைகிளி டப்பியே என் கனவில் வந்து தொலைத்தது. பால்குச்சி வாங்கி பதவிசா குச்சி டப்பாவில் போட்டுகிட்டு ஸ்ரீதர் கிட்டே காட்டனும் என்கிற ஆவல் தான் இருந்ததே தவிர அந்த குச்சியால் சிலேட்டில் கணக்கு போட்டு ஸ்ரீதரை விடா அதிகமாக மார்க்கு வாங்க வேண்டும் என்கிற பேராசை எல்லாம் இல்லை எனக்கு.


ஒரு நாள் கௌபாய் வேஷத்தில் குதிரையில், வேட்டைநாய்கள் பின் தொடர  வந்த கொள்ளையர்கள் டக்குடி டக்குடி டக்குடின்னு என் வீட்டு மாட்டு கொட்டகையை முற்றுகையிட்டு நான் சேர்த்து வைத்த அத்தனை காலி டப்பாவையும் கொள்ளை அடித்து சென்று விட்டதாக கனவு கண்டு மிரண்டு போனேன். காலை எழுந்ததும் போய் பார்த்து அவைகள் இருப்பதை கண்டு துள்ளு பாச்சை போல துள்ளினேன்.


ஆக அந்த நாளும் வந்தது. ஆமாம் இருபது பெட்டிகள் சேர்ந்தாகிவிட்டது. காலை குளித்து முடித்து சாமி எல்லாம் கும்பிட்டு அந்த இருபது பொக்கிஷங்களையும் எடுத்து கொண்டு புத்தக மூட்டையில் அழகாய் அடுக்கி வைத்து கொண்டு நேரே கச்சேரிகொடி பிள்ளையாரிடம் போய் இனி உன்னை பார்க்க வைத்துகொண்டு சவ்வு மிட்டாய் நக்க மாட்டேன் என மன்னிப்பு எல்லாம் கேட்டுவிட்டு சலாமத் பாய் கடைக்கு போனால் ....பாய் அன்னிக்குன்னு பார்த்து கடை திறக்கலை. சரி பள்ளி விட்டு வரும் போது பால்குச்சி வாங்கிடலாம் என்ற நினைப்போடு பள்ளி வந்தாச்சு.


வந்து வாயையும் அதையும் மூடிகிட்டு பேசாம இருந்திருக்கலாம். சனி என் நாக்கிலே டிரான்சிட் பேசஞ்சர் ஆக அன்று வந்து அமர்ந்தமையால் பக்கத்தில் இருந்த பார்திபன் கிட்டே நைசாக என் புத்தக மூட்டையை திறந்து தீப்பெட்டியை காமிக்க அவன் "டீச்சர்... இவன் நெறேய நெருப்புட்டி வச்சிருக்கான்" என அலற டீச்சர் வந்து ... பின்ன என்ன மண்டகப்படி தான். டீச்சர் கையில் என் காது. என் கையில் என் பையின் காது. அழைத்து செல்லப்பட்டேன். மன்னிக்கவும் இழுத்து செல்லப்பட்டேன் டீச்சர் டேபிள் அருகே. டீச்சர் பையை திறந்து கொட்ட என் ரெட்டைகிளி எல்லாம் பொலபொலவென கொட்டியது. அதை எல்லாம் எடுத்து டீச்சரின் மேசை ட்ராயரில் வைத்து விட்டு எனக்கு அடி போட்டு விட்டு என் இடத்துக்கு அனுப்பிட்டாங்க.


சரி... அடி எல்லாம் போகட்டும். என் சொத்து எனக்கு மீண்டும் கிடைக்குமா கிடைக்காதா, அல்லது சைக்கிள் கடை காசிநாதன் கிட்டே சொல்லி டீச்சரை போட்டு தள்ளிட்டு அந்த பொட்டியை எடுத்துடலாமான்னு எனக்கோ ஏகப்பட்ட குழப்பங்கள். என்னை மாட்டி விட்ட பார்த்திபனுக்கோ வாயெல்லாம் பல். எத்தனை சிரமம் அந்த இருபது பெட்டிகளை சேர்க்க.... எல்லாம் பாழாக்கிட்டானே இவன் என அவன் மீது கோவம்.


மாலை பள்ளி விட்டதும் கூட டீச்சர் அதை கொடுக்கவில்லை. எனக்கு வாழ்க்கையே பிடிக்கவில்லை. மீண்டும் "எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது" என நொந்து கொண்டே தளர்ந்த நடையுடன் பிள்ளையாரை முறைத்து விட்டு வீட்டுக்கு வந்தேன். ஆச்சு... ரெண்டு நாள்... எனக்கு வாழவே பிடிக்கவில்லை. சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் ஏதேதோ மனதில் வந்து போனது. "நீதிக்கு தலைவணங்கு படத்தில் எம் ஜி ஆர் பைக் ரேஸ் ஓட்டுவார். அவர் நம்பர் "5". இந்த பெட்டி எல்லாம் நான் சலாமத் பாய் கிட்டே கொண்டு கொடுத்தா எனக்கு கிடைக்க போகும் பால் குச்சியோ "5". ஆகா என்ன ஒற்றுமை. நிச்சயம் எனக்கு அந்த பொட்டிகள் திரும்ப கிடைக்கும்" என்றெல்லாம் லூசுத்தனமாக மனதில் நினைத்து கொண்டேன். மாலை பள்ளி முடிந்ததும் டீச்சர் என்னை கூப்பிட்டு "இனிமேல் இது போல எல்லாம் செய்யக்கூடாது" என சொல்லி என் ரெட்டைகிளிகளை தூக்கி வெளியே போட நான் ஆனந்த கண்ணீருடன் அதை பொறுக்கி எடுத்து என் பையில் திணித்து கொண்டு ஓட்டமும் நடையுமாக சலாமத் பாய் கடைக்கு வந்தேன்.


உஷ்... அப்பாடா... நாம் உழைச்ச உழைப்பு வீண் போகலை என மனதில் நினைத்து கொண்டு சலாமத் பாய் கடையில் இருந்த கூட்டம் போகட்டும் என நினைத்து கொண்டு அமைதியாய் நின்றேன். எல்லோரும் போனதும்....என் ரெட்டைகிளிகளை எடுத்து மேலே வைத்தேன். அதற்கு பாய்...."எலே பயலே... அந்த ஸ்கீம் நேத்தியோட முடிஞ்சு போச்சுடா, அடுத்த தபா அது போல போட்டாங்கன்னா இதல்லாம் எடுத்து வா"ன்னு சொல்லி கன்னத்தை லேசாக கிள்ளி விட்டு ஒத்தை பைசா ஆரஞ்ச் மிட்டாய் ஒன்னு என் உழைப்பிற்காக கொடுத்தார். வாங்கி நக்கிகிட்டே சோகமாக வீடு வந்தேன். எனக்கு அந்த பார்த்திபன் மேலே மட்டும் கோவம் போகவே இல்லை. தேவையில்லாமல் ரெண்டு நாள் டீச்சர் என் கிளிகளை சிறை வைக்காவிட்டால் இன்னேரம் நான் அஞ்சு பால் குச்சிக்கு ஓனராகியிருப்பேன். அவனை என் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் பழிவாங்கியே தீரவேண்டும் என நினைத்து கொண்டேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அந்த பார்த்திபன் என் கண்ணில் பட்டு கொண்டுதான் இருந்தேன். ஆனால் பழிவாங்க சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. அதன் பின்னர் நான் இன்று வரை அவனை பார்க்கவில்லை.




இதல்லாம் ஏன் இப்போ சொல்கிறாய்... என நீங்கள் கேட்பது புரியுது. சொல்கிறேன். கடந்த ஒருவாரமாகவே நான் குளித்து முடித்து ட்ரஸ் எல்லாம் செய்து விட்டு வெளியே வந்து யாரிடமாவது முக்கியமாக பேசும் போது நறுக்னு ஒரு எறும்பு கடிக்கும் ஜட்டிக்குள், பனியன்க்குள் இருந்து. ரொம்ப தர்மசங்கடமாக ஆகும் எனக்கு. என்ன காரணம் என தெரியவில்லை. இன்று விடாப்பிடியாக என் ட்ரஸ் வைக்கும் அலமாரியை சுத்தம் செய்தேன். அட... இதான் காரணமா? ஒரு ஆறு பிங்கோ காலி பாக்கெட் அடுக்கி வைக்கப்பட்டு அதன் மேல் எறும்புகள்.


"இதை யார் இங்க வச்சது? அதும் காலி பாக்கெட்டை" என நான் கத்திய போது என் மகன் ஓடிவந்து "அப்பா, உன்னை யார் அதை எடுக்க சொன்னாங்க. நான் தான் ஜாக்கிரதையா ஒழிச்சு வச்சேன். பத்து பாக்கெட் குடுத்தா தாத்தா கடைல ஒரு மிஸ்டர் பீம் ஸ்டிக்கர் தருவாரு. இன்னும் நாலு வேணும். அப்பா ஒரு ட்வண்டி ரூபீஸ் குடேன். தின்னுட்டு அந்த காலி பாக்கெட்டையும் கொடுத்துட்டு ஸ்டிக்கர் வாங்கிக்கறேன்" என்றான்.


எனக்கு சிரிப்பு வந்தது. அதை விடுங்கள்.... அந்த பார்த்திபனை பழிவாங்க வேண்டும் என சொன்னேன்ல.... ஹூம்... அவனை நான் பத்தாம் வகுப்புக்கு பின்னர் பார்க்கவேயில்லை. அவன் மாநிறம். தொள தொள சட்டை போட்டிருப்பான்.  பி ஜே பி இல. கணேசன் மாதிரி பட்டையா ஒரு நாள் விபூதி பூசுவான். அடுத்த நாள்..... விக்ரம் லூசா நடிச்சு இருப்பாரே என்ன படம்... தெய்ய திருமகள்... ம்... அதிலே அனுஷ்கா கூட வக்கீலா நடிச்சிருப்பாங்க. அந்த அனுஷ்கா மாதிரி சின்னதா விபூதி வச்சிருப்பான், சட்டையின் காலரில் பின் பக்கம் "ஸ்டைலோ டைலர்ஸ்"ன்னு ஸ்டிக்கர் இருக்கும். விரலில் நகம் வெட்டி இருக்காம நீட்டு நீட்டு நகமா இருக்கும். ரெமி பவுடர் வாசம் வரும் அவன் மேல். இதான் அவன் அடையாளம். எங்கயாவது பார்த்தா ஒடனே டபில்யூ டபில்யூ டபில்யூ அபிஅப்பா டாம் கொம் க்கு தகவல் கொடுங்க. அந்த பால்குச்சிக்காக பழி வாங்கனும். கொஞ்சம் அர்ஜண்ட் ப்ளீஸ்...