பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

September 7, 2012

அய்யா ஒரு பீஃப் பிரியாணி ப்ளீஸ்....

"அய்யா ஒரு முரசொலி கொடுங்க" என ஆரம்பித்தது என் இன்றைய பொழுது!
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் வரை வாக்கிங் போய் திரும்பி
வந்தால் அந்த கடை திறந்து இருக்கும். ஒரு கிழவன் , கிழவி... கடையின் மீது
"எம் ஜி ஆர் அவர்கள் கொடுத்த நன்கொடை இந்த கடை" என போட்டிருக்கும்.
முரசொலியை வாங்கி முதுகில் பனியனுக்குள் வைத்து கொண்டேன். (கிட்ட தட்ட
எங்க ஊர்ல அரிவாள் ஸ்டாண்ட் போல)

என்னவோ நியாபகம் வர "அய்யா ஒரு 'அவள் விகடன்' கொடுங்க என கேட்க அதே
நேரத்தில் ஒருவர் அதே போல கேட்க ... கடைக்கார அய்யா குழம்பி விட்டார்.
"இங்க ஒரு அவள் விகடன் ஒன்னு தான் சார் இருக்கு" என சொல்ல நான் "அவர்
கிட்டயே கொடுங்க" என விலகினேன்.

"மருந்தீஸ்வரர் கோவில் கிட்டே கூப்பிடு தூரம் சார், அருமையான பிளாட்
சார்.. பக்கத்தில் டி பி ஆஸ்பத்திரி இருக்கு சார் ( அட பாவமே என்னய
பார்த்து ஏண்டா இது போல சொல்ற) வெயில்னா அங்க இருப்பவங்க "இன்னா"ன்னு
கேட்பாங்க சார், சும்மா பதினேழு லட்சம் தான்  சார்) . அந்த மருந்தீஸ்வரரை
பார்த்திடலாம் இன்னிக்கு என நினைத்துக்கொண்டேன்.

எல்லா நியாபகங்களும் வர நடந்தேன். சரி இரண்டு நாளா இருமல் அதிகமா இருக்கே
என கோவில் பக்கம் போக நினைத்த போது அந்த "அவள் விகடன்" தோளை தொட்டார்.

"சார் ரொம்ப தேங்ஸ். என் ஆத்துக்காரி அவள் விகடன் இல்லைன்னா செத்துடுவா.
காப்பாத்திட்டிங்க"

"எங்க சார், கோவிலுக்கா? நானும் அங்க தான் இருங்க செருப்பு போட்டுட்டு வர்ரேன்"

"சார் இதான் வன்னி மரம். என் பொண்ணுக்கு கடி ஜோக் போட்டி வச்சா சங்கரா
ஸ்கூல்ல . அவ தான் பஷ்ட். என்னா கடின்னா "ராமதாஸ்க்கு பிடிச்ச மரம் எது?
ஹி ஹி ஹி அதான் வன்னி மரம்"ன்னு சொன்னேன். அவ தான் சார் பஷ்ட் வந்தா கடி
ஜோக்ல. அப்படின்னா இந்த கோவில் என்ன ஒரு கிரியேட்டிவிட்டி கொடுக்கும்
கோவில்னு பார்த்துகுங்க"

"சார் , இங்க கோவில்ல ரொம்ப அநியாயம் சார். தக்கினூண்டு புளியோதரை 5
ரூவா. கொஞ்சம் வெயிட் பண்ணினா அவாளே கோவில்ல கொடுப்பா. ரொம்ப பிராமாதமா
இருக்கும்"

"சார், முதல்ல கணபதி கிட்டே வேண்டிகுங்க. இந்த கணபதி கடன் தீர்க்கும்
கணபதி. நான் பிளாட் வாங்கின போது லோன் கிடைக்கனும்னு இந்த கணபதிட்ட
வேண்டிகிட்டே இருந்தப்ப எல் ஐ சில இருந்து போன். லோன் சாங்கஷன்"

"சார் இந்த திரிபுரசுந்தரி இருக்காளே, பவர் புல்... இவ கிட்ட
வேண்டிகிட்டா நடக்காததும் நடக்கும்" அப்போது ஒரு மாற்று திறனாளி தவழ்ந்து
வந்து வேண்டிகிட்டாரு. அவருக்கு வழி விட்டோம்.

பின்ன மருந்தீஸ்வரர் சன்னதிக்கு வந்த போது அவர் 'சார் இவர் சுயம்பு. இவர்
கிட்டே வேண்டிகிட்டவன் எவனும் கெட்டு போனதா சரித்திரம் இல்லை.." என
சொல்லி கிட்டே அய்யருக்கு ஒரு இருபது ரூபாய் போட்டார். அவரும் இவருக்கு
சின்ன பூ மாலை போட்டு பதில் மரியாதை செய்தார். என் கிட்டே சில்லரை இல்லை
இரு 100 ரூபாய் நோட்டும் இரண்டு ரூபாய் காசும், ஒரு ரூபாய் காசும்
இருந்துச்சு. அனேகமாக செருப்பு கடைக்கு சில்லரை காசு தேவைப்படும். பாவம்
அவங்க கிட்டே 100 ரூபாய் நோட்டுக்கு மீதி இருக்காது என நினைத்தேன்.
ஆனாலும் சில்லரை காசு எடுத்து போடும் போது அவர் தடுத்தார். "சார் மானம்
போகுது. நோட்டா இருந்தா  தட்சனை கொடுக்கலாம். சில்லரை எல்லாம் தப்பு
சார். அவர் என்னமா மந்தரம் சொல்றார். அவருக்கு தட்சனை கொடுக்காட்டி கூட
பரவாயில்லை. ஆனா அவமானப்படுத்தக்கூடாது சார்.இவருக்கு கொடுத்தா டைரக்டா
ஈஸ்வரனுக்கு கொடுத்தது போல. ஈஸ்வரனுக்கு கொடுத்தா அவர் மக்களுக்கு
திருப்பி கொடுப்பார்" என்றார். எனக்கு மனதில் வேற கணக்கு ஓடியது. அவர்
சொல்வது சரிதான். இருக்கும் 100 ரூபாயை டாஸ்மாக் என்னும் குருக்கள்
கிட்டே கொடுத்தா அது அரசாங்கம் என்னும் ஈஸ்வரன் கிட்டே போகும். அதை வச்சு
அரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்யும். அடடே... ஆரம்ப காலம் முதலே
இருக்கும் கணக்கு தானா இது நினைத்து டாஸ்மாக் குருக்கள் கிட்டே சாயரட்சை
பூசைல கொடுக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

பின்னர் அப்படியே வெளியே வரும் போது பசு மாட்டு தொழுவம் இருந்தது. இவர்
போய் கும்பிட்டார். கும்பிட்டார். கும்பிட்டு கிட்டே இருந்தார். ஓடி
என்னிடம் வந்து "சார் பசுவுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுத்தா நாம இது வரை
செஞ்ச பாவம் எல்லாம் போய்டும் சார். கொஞ்சம் இருங்க, நான் போய்  வெளியே
புல் விற்கும், வாங்கிட்டு வர்ரேன், உங்களுக்காகவும் ஒரு கட்டு வாங்கி
வர்றேன். காசெல்லாம் கொடுக்க வேண்டாம்" என சொன்ன போது நான் "இல்லீங்க..
எனக்கு வேண்டாம். நான் இதுவரை பாவம் எதும் செய்யலிங்க" என சொன்ன போது...
"சார் செம காமடியா பேசுறீங்க கொஞ்சம் இருங்க" என சொல்லி விட்டு வெளியே
போய் பின்னர் வந்தார்.

ஜெயிலில் இருந்த பசுக்களுக்கு புல் கொடுத்தார். வெளியே வந்தோம். நான்
போய் செருப்பு கடை காண்டிராக்ட் எடுத்த கடையில் மூச்சு வாங்கி
கொண்டிருந்த ஒரு பெண் கிட்டே மூன்று ரூபாய் கொடுத்தேன். "அண்ணே, ரெண்டு
ரூவா தான் அண்ணே" என சொன்னது. அது கர்பஸ்த்ரீ. "என்னிக்கும்மா டெலிவரி
டேட் சொல்லியிருக்காங்க"ன்னு கேட்டேன். "இன்னும் ரெண்டு நாள்
இருக்குண்ணே" என சொன்னது.

அதற்குள் என் நண்பர் கோபுரத்தின் இரண்டு பக்கமும் ஓடி ஓடி ரன் எடுப்பது
போல தன் செருப்புகளை "கலெக்ட்" செஞ்சுட்டு வந்தார். என்னிடம் சொன்னார் "
சார்... ஊதாரித்தனமா செலவு செஞ்சா எனக்கு பிடிக்காது சார். ஜோடியா போட்டா
தான செருப்பை திருடுவானுங்க. ஜோடிய பிரிச்சு போட்டு ஏமாத்தனும் சார்.
இந்த செருப்பு திருட்டு எப்ப தான் ஒழியுமோ இந்த நாட்டுல அப்ப தான் சார்
நம்ம நாட்டிலே ஒரிஜினலா சுதந்திரம் கிடைச்ச மாதிரி. சரி சார் அப்ப நான்
விடை பெறுகிறேன் நமஸ்காரம்"

எனக்கு பசி வயிற்றை கிள்ளியது. பக்கத்தில் தான் வீடு. ஆனாலும் ஹோட்டல்
பிரியாணி மீது ஒரு ஆவல் வந்தது. ஒரு 15 நாட்கள் முன்னதாக சென்னை சி ஐ டி
நகரில் ஒரு ஹோட்டலில் என் நண்பர்களுடன் சாப்பிட போன போது "தோழர் பீஃப்
சாப்பிடுங்க, என சொன்னார் ஒரு தோழர். எனக்கு  பீஃப் சாப்பிட்டு பழக்கம்
இல்லை. இருந்தாலும் அவர் மனம் கோணக்கூடாதே என சகித்து கொண்டு
சாப்பிட்டேன்.அதை நோக்கி என் மனம் சென்றது. ஹோட்டலில் அமர்ந்த பின்
சர்வரிடம் "ஒரு பிரியாணி கொடுப்பா. பீஃப் பிரியானியா இருந்தா உத்தமம்" என
சொன்னேன்!

February 4, 2010

ஒரு பக்கா கதை!!!

எங்க நகரிலே இருக்கும் அந்த பெண் தான் இப்ப டாக் ஆஃப் தி நகர். பெரிசா ஒரு தப்பும் செய்திடலை. படித்து முடித்து விட்டு ஏதோ ஒரு கடையில் வேலை செய்யுது. காலை ஒன்பது மணிக்கு போய் மாலை ஆறு மணிக்கு வந்துடும். அதல்லாம் விஷயமில்லை. காலை ஆறு மணிக்கு குளித்து முடித்து தலையில் ஒரு துண்டு, நைட்டி சகிதமாக என் வீட்டு எதிரே இருக்கும் கிரவுண்டில் ஆஜராகிவிடும். ஆறு மணின்னா ஷார்ப்பா ஆறு மணி. மிக சரியாக 8.30 மணி வரை இடைவிடாம பேசும். பின்னே ஓடி போய் கிளம்பி வேலைக்கு போயிடும். மாலை ஆறு மணிக்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட். பின்னே ஏழு மணிக்கு நைட்டி, தோளில் துண்டு போட்டு கிட்டு செல் போன் சகிதம் வந்துடும். நகரில் யாரும் சமீபமாக விவித பாரதியை நாடுவதில்லை கடிகாரம் திருப்பி வைக்க. எல்லாம் அந்த பெண் உபயம்.

நகரின் அத்தனை குடும்பஇஸ்திரிகள் காதிலும் புகை. "இந்த அக்கிரமம் நடக்குமா?" "இது ஆண்டவனுக்கே அடுக்குமா?" "கலி முத்தி போச்சு" இப்படியாக அரத பழசான தமிழ் பட 'கும்பல்' வசனத்தையும் பேசி விட்டார்கள். அந்த பெண் 3 மணி நேரம் தான் பேசுது. ஆனா குடும்ப தலைவிகளும் இது பத்தி இருபத்தி நாளு மணி பத்தாம பேஜார் ஆகியிருக்காங்க. "என்னங்க இன்னிக்கு செகண்ட் ஷிப்ட்ல அது மூணு தடவை கண்ணை கசக்குச்சே...எதுனா பெரிய சண்டையா இருக்குமோ" என அசந்து படுத்திருக்கும் புருஷனை இரவு 3 மணிக்கு புரட்டி கேட்டார்கள்.

"நீங்க வேணா பாருங்க, இன்னிக்கு அந்த சிறுக்கி மஞ்சள் கலர் சுடிதார் தான் போட்டுட்டு போவா. பந்தயம் வச்சிப்போமா நீங்க தோத்துட்டா ஆயிரத்தில் ஒருவன் அழைச்சிட்டு போகனும் சரியா?" என ஆம்படயான்களுக்கு ஆப்பு வைத்தார்கள்.

கீரைக்காரம்மா வந்தா அதை நடுவே உட்காரவச்சு எல்லா வீட்டு அம்மனிகளும் "யக்கா அப்படி என்னதான் பேசிப்பாங்க இத்தனை நேரம். எனக்கும் தான் கல்யாணம் ஆச்சு. இந்த அநியாயம் நான் எங்கயும் பார்க்கலை. என் வலைகாப்பு அன்னிக்கு தான் என் மூஞ்சியையே அவரு முழுசா பார்த்தாரு" என சொல்ல அதுக்கு ரெண்டு கல்யாணம் செஞ்சு நாலு பிள்ளை பெத்த கண்ணாம்பாக்கா டைப்ப முடியாத அடல்ஸ் ஒன்லி பேச்சு பேச எதேர்ச்சையா அங்க வந்த என்னை பார்த்து எல்லாரும் வாரி சுருட்டி எழுந்திருக்க அதிலே ஒரு வாயாடி அக்கா என்னை பார்த்து "தம்பி, இந்த அநியாயத்தை தெரு ஆம்பளை யாரும் என்னன்னு கேட்க கூடாதா, நீங்களும் துபாய் கிபாய்ன்னு போயிட்டு போயிட்டு தான் வரீங்க" என்று உசுப்பேத்திவிட " அக்கா சத்தமா பேசினா நான் மட்டுமில்ல தெருவே கேட்கலாம். அது குசுகுசுன்னு தானே பேசுது"ன்னு சொன்னேன்.

தெருவிலே வீரனா இருந்தாலே இப்படிப்பட்ட கஷ்டம் வரத்தான் செய்யும் போலிருக்கு. "சரி சரி எல்லாரும் போயிட்டு வாங்க. ரேஷன்ல ஃப்ரீயா வாஷிங் மெஷின் கொடுக்குறாங்க. அதை போய் என்னான்னு பாருங்க"ன்னு சொல்லிட்டு அந்த பெண்ணை கேட்டுடலாம்ன்னு முடிவுக்கு வந்தேன்.

பெண்ணை பார்த்தா பீட்டர்ஹெயினுக்கு ஒன்னு விட்ட தங்கச்சி மாதிரி இருக்குது. எக்கு தப்பா எதும் கேட்டா நைட்டிய மடிச்சி கட்டி விசயகாந்து மாதிரி ரைட்டு காலை காத்திலே உந்திகிட்டு லெஃப்ட் காலால் என்... வேண்டாம். பயத்தை முகத்தில் காட்டிகிட்டா வீரனுக்கு அழகில்லை. ஒரு மூணு நாள் அந்த பொண்ணை வாட்ச் பண்ணிட்டு பின்ன கேட்போம்ன்னு வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன்.

பாவம் அந்த புள்ள சண்டேன்னா மூணு ஷிப்ட்ன்னு ரொம்ப பிஸியா இருக்குது. ஆமாம் சண்டேயிலே மதியம் 2-3.30 எக்ஸ்ட்ரா.சர்வதேச விதி போலிருக்கு. எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியலை. மனசிலே தைரியத்தை வரவழைச்சுகிட்டு நறுக்குன்னு மூணு கேள்வி கேட்க முடிவெடுத்து திங்கள் காலை அது பேசி முடிச்ச பின்னே "இந்தாம்மா இங்க வா"ன்னு கூப்பிட்டேன். கிட்ட தட்ட எல்லார் வீட்டு ஜன்னலும் எங்களையே பார்த்தது. கேட்க முயன்றது.

1. உன் சிம்கார்டு எந்த கம்பனி கார்டு?

2.எந்த 'பிளான்'ல வாங்கியிருக்க?

3. செல் பேட்டரி ஒரிஜினல் ஃபின்லேண்டா?


நீதி: அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு.

அநீதி: 14 வருஷம் முன்ன செல் போனெல்லாம் இல்லாம போயிடுச்சே!

May 29, 2009

பச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும்! (உரையாடல் சிறுகதை போட்டிக்கு)


நான் எப்போதுமே விடுமுறைக்கு இந்தியா போனா ஒரு சுற்று சொந்தபந்தங்களை பார்க்க அடுத்த நாளே கிளம்பி விடுவேன். அன்றைக்கும் அந்த முறையும் அப்படித்தான் எங்க ஊரில் இருந்து அருகாமை கிராமம் என் மாமா வீட்டுக்கு போய் கிட்டு இருக்கேன். அந்த ஊருக்கு எப்பவாவது ஒரு தடவை போகும் எட்டாம் நம்பரை நம்பாமல் சுந்தரபஞ்சாவடியிலே இறங்கி ஒரு கி.மீ நடந்துடலாம் என நினைத்து பஸ் ஏறிவிட்டேன். கொஞ்சம் அயற்சியாகவும் இருந்தது நடக்க வேண்டுமே என்று. எதாவது பேச்சு துணை கிடத்தால் நல்லா இருக்கும் என நினைத்து கொண்டேன்.


பஸ்ஸில் இருந்து இறங்கியதுமே குள்ள(ம்) மாமா கண்ணில் பட்டார். ஒரு துரு பிடித்த சைக்கிளை வாய்க்கால் பாலத்தில் சாத்திவிட்டு உட்காந்து சுருட்டு பிடிச்சு கிட்டு இருந்தார். மாமாவா அது, சின்ன வயசு மாமா அப்பவே சிக்ஸ் பேக் அதிபதி. அவர் சட்டை போட்டு நான் பார்த்தது கிடையாது. அது போல வேஷ்டியோ, இந்தோனேஷியா கைலியோ கட்டியிருந்தா கூட அதை மடித்து தான் கட்டியிருப்பார். இடுப்பில் பச்சை கலர் பாம்பே டையிங் மொத்த துணியால் மாரிமுத்து கிட்டே கொடுத்து பை எல்லாம் வைத்து ஜிப் எல்லாம் வைத்து ஒரு பெல்ட் கட்டியிருப்பார். எப்பவாவது டயர் செருப்பு போடுவார். தலையில் காசிதுண்டால் ஒரு முண்டாசு கண்டிப்பா இருக்கும். மபொசி மீசை தான் அவருக்கு தனி அழகு. முரட்டு தனமான குரல்.


ஆனால் இதோ நான் பார்க்கும் மாமா சிக்ஸ் பேக் எல்லாம் தொங்கி சுருங்கி போய், தலை வழுக்கை எல்லாம் விழுந்து பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு. அது கட்டை வண்டி ஓட்டும் அழகும், கோவணம், முண்டாசு என டூபீஸில் ஏர் பிடித்து உழுவதும், "எலேய் தட்டுவாணி மொவனே ஆட்டை அந்தண்ட ஓட்டிகிட்டு போடா" என்று தன் மகனையே திட்டுவதும் எனக்கு நியாபகம் வந்தது.


கிட்ட போய் "மாமா என்னை தெரியலையா"ன்னு கேட்டேன்.
கையை கண்ணுக்கு மேல வைத்து உற்று பார்த்து "அடடே மாப்ள எப்படா வந்த"ன்னு கேட்டு என்னை கட்டி பிடிச்சுகிட்டது. பைய கொண்டா சைக்கிள்ல மாட்டுவோம். ஜம்முன்னு பின்னால குந்து வூட்டுக்கு போவும்" என்றது.


"மாமா இது என்ன சைக்கிளா ரெண்டு பேரையும் தாங்குமா? ஏதோ மீன்காரன் சைக்கிள மாதிரி துருபுடிச்சு கிடக்கே"


"ஆமாடா மாப்ள, சின்னங்குடி பட்டணத்துகாரன் சம்முகம் பழரச கடேல அடவு வச்சிட்டு மூக்கு முட்ட குடிச்சிட்டு போனான். திரும்பி வரவேல்ல. நான் தான் எடுத்துகிட்டு சுத்துறண்டா சரி வா தள்ளி கிட்டே போவும், ஆமா பையிலே என்ன எனக்கு பாரின் சரக்கு கொண்டாந்தியா, எங்க நான் ஆசை ஆசையா கேட்டதே நீ இதுவர வாங்கியார்ல,சரக்கா கொண்டார போற, உன் மாமா மாமிக்கு எதுனா வாங்கியாந்திருப்ப, நான் பண்ண காரன் தான"


"நீ என்ன கேட்ட மாமா மறந்து போச்சுது"


" நீயும் சின்னசாமி அண்ணன் வூட்டு ஆடு புழுக்க போடுறது மாதிரி போயிட்டு போயிட்டு வர! நானும் சாவரத்துக்குள்ள சிங்கபூரு மொதல மார்க்கு பச்சை பெல்டு தானே கேக்குறேன் ஒவ்வோறு தாட்டியும், ஆமா நீ சிங்கபூர்ல தான இருக்க"


"இல்ல மாமா துபாய்"


"எல்லாம் பக்கம் பக்கமா"


சிரித்து கொண்டேன். "அடுத்தவாட்டி வாங்கியாறேன் மாமா ஆமா என்னாது மஞ்சு கொட்டா மூடியாச்சா"


"ஆமா செட்டிக்கு நஷ்டமா போச்சு, வூட்டா வூடுக்கு டிவி வந்துடுச்சு. எவன் வருவான், அதுக்குள்ள தான் சம்முகம் பழரசம் ஓட்டுறான். ஒரையும் கெடக்கும். ஒரைக்கி எல்லாம் எனக்கு ஏது காசு, ரசம் தான் நாலு ரூவாய்க்கு தருவான், ஒரு நாலு ரூவா தாயேன்"


"குடிக்க போறியா மாமா இந்த காலைலயே, இந்தா பத்து ரூவா"


"சரி சைக்கிள புடிச்சுக்க பத்து எண்ணங்காட்டிலும் வரேன்"


மாமா சந்தோஷமா ஓடிச்சு மஞ்சு கொட்டாய்க்குள். சொன்ன மாதிரியே சுருக்கா வந்துடுச்சு.


"எலே மாப்ளா இன்னும் ஒரு பத்து ரூவா தாயேன்"


"ஏன் மாமா இன்னும் குடிக்க போறியா வேண்டாம் விடு"


"இப்படா தோ பட்டணத்தி வந்துட்டா ஒனக்கு தான் மீனு கொழம்பு புடிக்குமே அவ கிட்ட ஒரு பத்து ரூவாய்க்கு பொருவா பொடி வாங்கிட்டு வாரேன். போம்போதே வாங்கிட்டு போயிட்டா உன் மாமி சீக்கிரமா சமச்சுடும்"
சரி என்று கொடுத்தேன்.


"எலே முண்டச்சி ஒரு பத்து ரூவாய்க்கு பொருவா போடு"


"ந்தா முண்டச்சின்னா மூஞ்சில குத்துவேன். இந்தா இந்த பேப்பரை புடி"
மாமா தினந்தந்தியின் கிழிந்த பேப்பர் துண்டை பிரிச்சு புடிச்சு அவ கிட்ட மீனை வாங்கி பிசிறு எல்லாம் வாங்கி சண்டை போட்டு அவ கிட்ட திட்டு வாங்கிகிட்டே வந்தது.


கர்ணம் பிள்ளை வீடு தாண்டும் போது "மாப்ள புள்ள போய் சேந்தாச்சு தெரியுமா" என சொல்லிவிட்டு ஊர்ல யார் யார் பாலிடாயர் காதிலே ஊத்திகிட்டு செத்தாங்க, தூக்கு லிஸ்ட் ஆளுங்க எல்லாம் யார், ஊரை விட்டு ஓடி போன பொண்ணுங்க எல்லாம் சொல்லிகிட்டே வந்துச்சு. கடைசியா "மாப்ள என் மொவ கூட ஓடிட்டா. ராமூர்த்தி மொவனை இழுத்துகிட்டு. இப்ப கோமல்ல குடியிருக்கா"


"என்ன மாமா இப்படி சொல்ற" கொஞ்சம் அதிர்ச்சியா கேட்டேன்.
"ஆமா என்னாத்த செய்ய, அதுக்காக நான் நாண்டுகிட்டா சாவ முடியும், விடு மாப்ள, தோ வூடு வந்துடுச்சு, போனா பண்ணிட்டு வந்த உன் மாமி வாசல்லயே நிக்குது பாரு"


மாமியை பார்த்து குசலம் எல்லாம் விசாரிச்சு முடிச்சு உள்ளே போனோம்.
மாமாவும் உள்ளே வர "ந்தா பாரு உள்ள வந்தா காலை வெட்டிபுடுவேன். குடிச்சா இந்த பக்கம் வர கூடாதுன்னு உன் தம்பி (என் தாய்மாமா) கராரா சொல்லிபுட்டாங்க ஓடிடு"


"இரு தங்கச்சி மாப்ள பேக்குல என்னவாது வச்சிருப்பான் திங்க வாங்கி தின்னுட்டு ஓடுறேன்"


நான் மாமிகிட்ட "இருங்க மாமி ஒரு விஷயம் இருக்கு மாமா நீ உள்ள வா"
மாமா முற்றத்து கட்டையிலே உட்காந்துகிச்சு. பேக்கை மெதுவா திறந்து மாமா, மாமி, பசங்க எல்லோருக்கும் அவங்க அவங்களுக்கு வாங்கி வந்ததை கொடுத்துட்டு இருக்கும் போதே மாமா " மாப்ள அடுத்த வாட்டி கண்டிப்பா பச்ச பெல்ட்டு வாங்கி வாடா" என சொன்னது.


உடனே என் மாமி கையிலே ஒரு பொட்டலத்தை கொடுத்து "மாமி இதை சாமி வீட்டுல வச்சி எடுத்து வாங்க" என்றேன். மாமிக்கு அது என்னான்னு புரிஞ்சுடுச்சு.


மாமி சாமிரூம் பிள்ளையார் கிட்ட வத்து அதிலே ஒரு ரூபாய் காசு வைத்து எடுத்து கொண்டு வந்து கொடுத்தாங்க குள்ள(ம்)மாமா கையிலே.
அப்போது அவர் முகம் பார்க்கனுமே. இப்பவும் என் மனசிலே இருக்கு. வாங்கி கிட்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டார்.


"இதை கட்டாமலே செத்துடுவனோன்னு நெனைச்சேன் மாப்ள" அப்ப்டீன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார்.
"தங்கச்சி தம்பியோட வேஷ்டி எதுனா இருந்தா குடு. புது பெல்டுக்கு கொஞ்சம் தொவச்ச வேட்டியா கட்டிகிட்டா நல்லா இருக்கும் தங்கச்சி"
மாமி உள்ளே போய் மாமாவின் சலவை வேஷ்டி ஒன்றை எடுத்து வந்து கொடுத்தாங்க.


"வேஷ்டியயும், பெல்ட்டையும் எடுத்து கிட்டு கொல்லை புறம் போய் தட தடன்னு கிணற்றில் இருந்து தண்ணிய எடுத்து தலையிலே ஊத்தி கிட்டு தன் பழைய வேஷ்டியால் துடைத்து கொண்டு அதே ஈர கோவணத்தோட அதன் மேலேயே இந்த புது பெல்ட்டை கட்டிகிட்டு வேஷ்டிய மடிச்சு கட்டிகிட்டு பசுமாட்டு நெற்றியிலே இருந்த குங்குமத்தை எடுத்து வச்சிகிட்டு தன் தலை முண்டாசு கட்டிகிட்டு உள்ளே வந்து "தங்கச்சி கொஞ்சம் துண்ணூறு குடு"ன்னு கேட்டு வாங்கிகிட்டு பக்தி பழமா ஆகிட்டாரு.


அதுக்குள்ள மாமி மீன் குழம்பு வைத்து சூடா சாதம் எடுத்து வந்துட்டாங்க. "அண்ணே போய் உனக்கு மாத்திரம் ஒரு இலை அறுத்துகிட்டு வா, தம்பி என் கூட சாப்பிடும்" அப்படின்னு சொல்ல ஓடி போய் அறுத்து வந்தார். அழகா சாப்பிட்டார்.


"மாப்ள உன் கிட்ட தனியா ஒரு சேதி பேசனும்டா"ன்னு சொல்ல நானும் அவர் கூட கொல்லைக்கு போனேன்.
"ஒரு அம்பது ரூவா கொடேன்"
சிரித்து கொண்டே கொடுத்தேன். "தங்கச்சிகிட்ட இதை சொல்லாதடா" என்றது.
தெருவின் உள்ளே சவுண்டு விட்டுகிட்டே போச்சு.


பின்ன மாமா ஆபீஸ்ல இருந்து வரும் வரை இருந்து பேசிகிட்டே இருந்த போது கடைசி பஸ் போயிடுச்சு. சரி காலை போகலாம் என படுத்து விட்டேன்.


மாமி காலை என்னை அவசர அவசரமா எழுப்பினாங்க. "தம்பி இங்க வந்து இந்த கூத்தை பாரு"


"என்ன மாமி?"


"குள்ளண்ணன் பழரச கடையிலே நேத்து மதியம் வரை குடிச்சுட்டு ராத்திரி அங்கயே விழுந்து கிடந்திருக்கு. எவனோ புது வேட்டிய உருவிகிட்டு போயிட்டான். பெல்ட்டை மாத்திரம் கெட்டியா புடிச்சு கிட்டு தூங்கி இருக்கு. ராத்திரி வரலையேன்னு சாந்தி தேடிகிட்டு போயிருக்கா. இப்ப இழுத்து கிட்டு வரா வெளியே வந்து பாரேன்"


வெளியே வந்து பார்த்தேன். சிரிப்பும் வேதனையுமா போச்சு.


தலையில் முண்டாசு. கீழே கோவணம். ஆனா பெல்ட்டு.
"ஏன் சாந்திக்கா அது தான் குடிச்சு இருக்கு. ஒனக்கு அறிவு எங்க போச்சு புத்தி. அந்த துண்டை எடுத்து இடுப்பிலே கட்டி கூட்டி வந்திருக்க கூடாதா அதுக்கு தான் அறிவு இல்லை மானத்தை விட பெல்ட்டு முக்கியமா போச்சு, உனக்குமா?"ன்னு கேட்டுட்டு உள்ளே வந்துட்டேன்.
பின்னே ஊருக்கு வந்துட்டேன்.


ஒரு நாலு மாசம் கழிச்சு ஒரு தடவை என் மாமிக்கு போன் செஞ்சு சாதாரணமா பேசினாங்க மாமி!
எல்லா விஷயத்தையும் பேசிட்டு "குள்ள(ம்)மாமா எப்படி இருக்கார்?
"நீ வாங்கி கொடுத்த பெல்ட்டோட இருக்கார்"
அத்தோட அதை விட்டுட்டேன்.


அதன் பின்னே நாலு மாசம் கழிச்சு போனப்ப மாமிகிட்ட கேட்டேன்.


"மாமி எங்க குள்ள(ம்)மாமாவை காணுமே"


"அதுவா தம்பி" மாமி சொல்ல ஆரம்பிச்சாங்க!


நான் போன தடவை போன பின்ன கிரமத்திலே ஜாதி கலவரம் வந்துச்சாம்!
அய்யப்பன் தான் பேசினாராம்!
"இனி ஜாதி இந்துக்கள் பொணத்தை எங்க ஜாதி காரங்க எரிக்கவோ புதைக்கவோ மாட்டாங்க"


பஞ்சாயத்தே பயந்து போச்சாம்!


குள்ள(ம்) மாமா தான் "சரிடா நீங்க சொல்றதிலயும் நாயம் இருக்கு, நானும் உங்களோட ஒன்னடி மண்னடியா இருந்துட்டேன். அதுக்காக பொணத்தை அழுக விட முடியுமா? நானே வெட்டியான் வேலையும் பார்க்கிறேன். பின்ன சண்டை எல்லாம் முடிஞ்ச பின்ன பார்த்துக்கலாம்" அப்படின்னு திடீர் அறிவிப்பு கொடுத்துட்டார்.


அதிலிருந்து நாலு மாசமா அவருதான் பிணம் எரிப்பது புதைப்பதுன்னு பார்த்து கிட்டு இருந்திருக்கார்.


திடீர்ன்னு ஒரு மழை நாளில் பழனியப்பன் ஆத்தா கண்ணாம்பா அக்கா (அதுக்கு ஆச்சு 80) செத்து போச்சு. உடனே ஊரை கூட்டி குள்ள மாமாவை கூட்டியார மாமா தன் பொண்டாட்டி வச்சிருந்த காஞ்ச ராட்டி எல்லாம் எடுத்துகிட்டு வீர சோழன் ஆத்து கரைக்கு போயிடுச்சு!


இத்தனை மழையிலே பொணம் வேகுமோ வேகாம காக்காய் கழுகு கொத்தி திங்குமோன்னு கவலையிலே இருந்த பழனியப்பனுக்கு நிம்மதியா போச்சு. ஆத்தாவை கொண்டு வச்சுட்டு ரெண்டு கிலோ ஜீனியும் (பிணம் நல்லா வேகணும் என்பதால் செவ்வா புள்ளயாருக்கு வச்சிருந்த ரெண்டு ரெண்டு விறகையும் எல்லா தெரு பொம்பளையும் கொடுக்க குள்ள மாமா நல்ல பழரசம் குடிச்சிட்டு ஒரே அழுகை!


"டேய் பார்த்து குளிங்கடா வீரசோழன் ஆத்துல நான் காணாத வெள்ளம் இன்னிக்கு" இது மாமா!


"மாமா இது வெள்ளம் இல்ல கடக்கம் சட்ரஸ் போட்டிருக்காங்க, அதனால தேக்க தண்ணி" இது பழனியப்பன் மொவன்!


மாமா ஜீனியெல்லாம் போட்டு ஆத்தாவை நல்லா வேக வச்சுட்டு பழனியப்பன் கிட்ட காசும் வாங்கிட்டு அந்த ஆத்து ஓர 'ஒரை" சரக்குக்கு போயிட்ட பின்ன ஊர் பெரிய மனுசன் எல்லாம் "குள்ளம் பய நமக்கு ஒரு கையிதான்" அப்படீன்னு பீத்திகிட்டு போயிட்டாங்க.


அடுத்த நாள் மாமி வீட்டுக்கு ராட்டி தட்ட வந்த சாந்தியக்கா" யக்கா மாமா நேத்து முதலே காணும்க்கா பசி தாங்காது, நீ எதுனா சோறு போட்டியா, வந்துச்சா என்ன இங்க?"


"இல்லடி சாந்தி நம்ம பனியடியிலே அண்டை வெட்டனும் குள்ளண்ண வந்தா மூணு மம்புட்டியும் அது கூட சுந்தரேசன்ன, கோவிந்து கூட்டி கிட்டு போவ சொன்னாங்க, கூடவே இது கையிலே காசு கொடுக்காத சாந்தி கையில டீக்கு இனிப்பு போண்டாக்கு குடுன்னு அத்தான் சொன்னங்க! குள்ளண்ணனை அன்னினிக்கே எல்லாரும் விட்டுட்டு வந்தாச்சு நல்ல மழை அப்படீன்னு"


"போக்கா பழனி அண்ணே நல்ல காசு கொடுத்து இருக்கும் போல இருக்கு அதான் பழரசம் குடிச்சுகிட்டே இருக்கோ என்னவோ"


"நீ போய் பார்த்து மொத்தி இழுத்துட்டுவா, நான் சமைச்சு வைக்கிறேன், அது சூடா இருந்தா பிரியமா கொட்டிக்கும்"


"சரிக்கா"


போச்சு சாந்தி வரவேயில்லை. ரெண்டு நாள் ஆச்சு!


"யக்கா யக்கா யக்கா ஊரெல்லாம் என்னவோ பேசிகிறாங்கக்கா"


"என்னடி சாந்தி என்ன சொல்றே"


"கடக்கம் சட்ரஸ்ல ஒரு பொணம் கெடக்காம் அது என் மாமாவாம்"


"இருடீ, ஒரு போன் பண்ணிக்குறேன்"


"என்னங்க ஒரு பொணம் கிடக்காம் கடக்கம் சட்ரஸ்ல! இன்னிக்கு சட்ரஸ் திறந்து விடும் நேரம் இது! நீங்க உடனே தாசில்தார் சம்முகசுந்தரம் கிட்ட சொல்லி அதை திறக்க வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு பெரம்பூர் போலீஸ் கிட்ட ஒரு வார்த்தையும் சொல்லிட்டு ஓடியாங்க அனேகமா குள்ளண்ணனா இருக்கும், நான் அங்க போறேன் நீங்க நம்ம ஊர் வர வேண்டாம் கடக்கத்துக்கு வந்துடுங்க"


எல்லாம் முடிஞ்சுது!


ஊரே திரண்டு அங்க போயாச்சு!
குள்ளம்மாமாவின் உடல் போல இல்லை அது! ரெண்டு நாள் உப்பின உருவம். கண் எல்லாம் மீன் தின்னுடுச்சு. ஒரு பச்சை பெல்டுக்கு அந்த புறமும் இந்த புறமும் வீங்கி போயிருக்க அந்த இறுக்கி கட்டிய பெல்ட் தான் எல்லாருக்கும் அடையாளமா போகிடுச்சு!


ஒரு அலக்கை கொண்டு வந்து பிணத்தை இழுக்க ஒரே நாத்தம். கரையிலேயே கிடக்கு பிணம். மாமாதான் அதுன்னு ஊர் மக்கள் சொல்லியாச்சு!கரையிலே கூட இல்லை கரை தண்ணியில் கிடக்கு.
ஊர் நாட்டாமை எல்லாம் பிணத்தின் நாத்தம் தாங்காம "சரி சரி தாசில்தார் வருவாரு சட்ரஸ் திறக்க போறாங்க, நம்ம கூட ஒன்னடி மண்ணடியா வாழ்ந்த குள்ளன் இப்ப கங்கையிலே போன மாதிரி புண்ணியமா போகட்டும்"
இதை கேட்டு கிட்டு இருந்த எல்லா தலித் மக்களும் ஓடிவந்து "போய்யா போய்யா நீயும் உன் சாதியும்! நாங்க அடக்கம் பண்றோம் குள்ளன் அண்ணனை! என் கூட உழவு செஞ்சான், என் கூட அறுப்பு அறுத்தான், என் கூட ரசம் சாப்பிட்டான். எங்க பிரச்சனைக்காக உங்க கூட சேர்ந்து வெட்டியான் வேலை பார்த்தான். நாங்க தூக்கி வந்து புதைச்சிகிறோம்" அப்படின்னு ஓடி வந்தாங்க!


தூக்கி வந்து குழி தோண்டி புதைக்கும் போது "எலேய் எது எது எப்படி எப்படி இருக்குதோ அப்படியே புதைங்க, முக்கியமா அந்த பச்சை பெல்ட்டு! இது ஏதோ ஒரு சாதீய பெருசு! காறி துப்பிட்டு அவங்க புதைசாங்க குள்ள(ம்)மாமாவை!


மாமி எல்லாம் சொல்லி முடித்த போது நான் அழுது முடித்திருந்தேன்!