பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 31, 2009

ஷானாவின் டெலிவரியும் 2010 க்கு வரவேற்பும்!!!

வர வர நான் இந்தியன் பேக்கு கோபாலகிருஷ்ணன் மாதிரி ஆகிட்டேன்.எந்த பங்ஷனும் ஐயா இல்லாமல் இல்லைன்னு ஆகி போச்சு. கடந்த பதினெட்டு வருஷமா நான் மறந்து போன எல்லா விழாவுக்கும் போய் வந்தாகிவிட்டது.குழந்தைக்கு பெயர் வைக்கும் பதினாறு, வளைகாப்பு, சடங்கு, பரிசம்,நிச்சயம்,ஆரம்பிச்சு கல்யாணம்,காதுகுத்தல் வரை இந்த பதினெட்டு வருஷமா எனக்காகவே காத்திருந்தது மாதிரி இப்போ நாளொரு மேனியும் பொழுதொரு பாயசமுமாக போகுது. கடந்த வாரம் கூட திண்டுக்கல் வரை கூட குடும்ப சகிதமாக போனேன். மாயவரத்தில் இருந்து நேரடி ரயில்.சுகமான பயணம்.

வாசலில் என் உயரத்துக்கு ஒரு கன்னுகுட்டி ரெண்டு காலையும் தூக்கி கேட் மேல் வைத்து கொண்டு வாங்க வாங்கன்னு சொல்வது போல நாக்கை கேட் வெளிப்பக்கமாக தரை வரை தொங்க போட்டுகிட்டு இருந்ததை பார்த்ததுமே எனக்கு உதரல் ஆரம்பமாகிடுச்சு. அதன் ஓனர் "வாங்க வாங்க"ன்னு சொல்லிட்டு "அது கிரெடேன்ங்க. நாய் தான்.ஆனா பார்க்க பசுக்குட்டி மாதிரி இருக்கும். குணம் கூட பசு தான்.பயமில்லாமவாங்க அது எதும் செய்யாது"ன்னு வழக்கமான நாய் ஓனர் டயலாக்கை சொல்ல நான் அதுக்கு "அட போங்க சார்,நான் இது போல பல நாய் மற்றும் நாய் ஓனரை எல்லாம் பார்த்திருக்கேன். அது பேர் என்ன கிரேடேனா அதை முதல்ல கட்டி போடுங்க, அப்ப தான் வருவேன்"ன்னு அடம் பிடிக்க அவரோ "அய்யோ அது பேர் ஷானு அது ஜாதி தான் கிரேடேன். யூ நோ அவ அம்மா டெலிவரியப்போ நான் ஊட்டிக்கு போயிட்டேன். இல்லாட்டி இவளை வேற யாரோ தட்டிகிட்டு போயிருப்பான். என் பிரண்ட் கிட்ட சண்டை போட்டு தூக்கி வந்தேன். அஃப்கோர்ஸ் இவளுக்காகவே தான் அந்த ஏ.சி காரை வாங்கினேன். தூக்கிட்டு வர்ரத்துக்காக"ன்னு நாய் புராணம் படிக்க எனக்கு எரிச்சல் அதிகமாகி கொண்டே போனது.அவரோ "சார் அவ உங்களை எதுனா டிஸ்டர்ப் செஞ்சா நான் மொட்டை போட்டுக்கறேன்"ன்னு சொல்லிட்டு "ஷானா ஹீ ஈஸ் ஆல்சோ யுவர் அங்கிள்"ன்னு சொன்னார்.

நான் "சார் '24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போகுது"ன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில பாருங்க"ன்னு தொடர என் தங்கமணி முறைக்க அப்போ தான் அந்த பந்தயம் நியாபகம் வந்தது.நான் ஒரு மண்டலம் தமிழ்மணம், பதிவு, பிளாக், மெயில் ஆரியம், திராவிடம்,இஸ்லாம், பெண்ணீயம் புடலங்காய் எல்லாம் விட்டு விட்டால் நான் ஜெயிச்சேன். அப்படி நான் ஜெயிச்சா ஒரு சாமுத்திரிகா, ஒரு வேளை நான் தோத்து போயிட்டா ரெண்டு பரம்பரா வாங்கிதரனும். அப்படி ஒரு இக்கட்டான பந்தயத்தில் மாட்டிகிட்டேன். என் பரம்பரை சொத்து வித்து ரெண்டு பரம்பரா வாங்குவதை விட இந்த சானா வாயால் கடிபட்டு சாகலாம் என நட்டுவை திரிசூலம் ஜிவாஜி மாதிரி ஒரு லுக் விட்டுட்டு கேட்டை திறந்தேன்.அடுத்த ஐந்து நிமிடம் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. நானும் ஷானாவும் கட்டி புரண்டு அந்த காட்சியை கார்த்திக் ராஜா பார்த்திருந்தால் செமத்தியா BGM கிடைச்சிருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு. ஆனா பாருங்க நான் தான் ஜெயிச்சேன். என் கிட்ட இருந்து சதை என்னும் கந்தாயத்தை அந்த நாயால் தேடி கண்டுபிடிக்கவே முடியலை. சீ தூ ன்னு விட்டுட்டு கோவிச்சுகிட்டு போய் கோவமா படுத்து கிட்டது.

நடந்த களேபரத்தை ரொம்ப ரசிச்ச நட்டு அது ஏதோ அவனை குஷி படுத்த நான் செய்த விளையாட்டுன்னு நெனச்சு "அப்பா அப்பா இன்னூர்வாட்டி இன்னூர்வாட்டி"ன்னு அழ ஆரம்பிச்சான். "போடா இன்னும் ஆறு மாசம் கழிச்சு தான் எதுனாவது ஒரு நாய் வந்து அப்பாவை கடிக்கும். அப்ப பார்த்துக்கலாம்"ன்னு என் தங்கமணி சந்தோஷமாக சொன்னாங்க. நான் இருந்த படபடப்பிலும் பந்தயத்தை மறக்காமல் "மொட்டை எப்போ போட்டுப்பதா உத்தேசம்"ன்னு கேட்க அவர் "சார் இது வரை இப்படி செஞ்சதில்லை. இது தான் முதல் தடவை. பயப்படாதீங்க ஷானுக்கு ஊசி எல்லாம் ரெகுலரா போட்டாச்சு"ன்னு கூலா சொல்லிட்டு போனார்.

வீட்டுக்குள்ளே போன பின்னே சன் டிவி பார்த்துகிட்டு ஒரு பாட்டி. தொன்னூறு வயசு இருக்கும். காலை ஆறு மணிக்கு வணக்கம் தமிழகம் ஆரம்பிச்சு இரவு பதினோறு மணி வரை சன் டிவி தான். நடுவே டி வி சூடாக கூடாதுன்னு மூணு வேளை சாப்பாடு நேரத்திலே ஆஃப் செய்யுது. சன் டிவி தவிர ஏதும் பார்க்க விடாதாம். நான் அது தெரியாம பங்கு வர்த்தகம் போட்டுட்டேன். அந்த பாட்டி கதறிடுச்சு. நம்ம ஷானு ஒனர் ஓடி வந்து பங்கு வர்த்தகம் எல்லாம் அவங்க பார்க்க மாட்டாங்க. கலாநிதி மாறன் தன் வர்த்தகத்தில் பங்கு தரேன்ன்னு சொன்னா கூட சன் டி வி தவிர ஏதும் பார்க்க மாட்டாங்க. இத்தனைக்கும் நாம பேசினா காது சரியா கேட்காது.ஆனா சன் டிவி மாத்திரம் மெதுவா வச்சா கூட கேட்கும்"ன்னு சொன்னார். நான் பாட்டி கிட்ட போய் "பாட்டி 2012 டிசம்பர் 21ம் தேதி உலகம் அழிய போகுதாம்ன்னு ஒரு குண்டு போட்டேன். அதுக்கு அந்த பாட்டி "நீங்க வேணா பாருங்க தம்பி அப்ப கூட கலெக்டருக்கும் ரம்யாகிருஷ்ணனுக்கும் கல்யாணம் ஆகாது"ன்னு சொன்னாங்க. நான் சரியா தானே பேசினேன்.பாட்டி ஏன் எடக்கு முடக்கா பேசுதுன்னு நெனச்சுகிட்டேன்.பின்னே தான் தெரியுது "தங்கம்"ன்னு ஒரு சீரியல்.12 வருஷ பிராஜக்ட்டாம்.அதிலே ரம்யாகிருஷ்ணனுக்கு சீரியல் முடியும் வரை ஒரு கலக்டரோட கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு அது தினமும் எப்படி எதிராளியின் சதியால்நின்னு போகுதுன்னு கதையாம். ஒரு எபிசோட்ல ஒரு அணில்குட்டி(கவிதாவின் அணில் குட்டி அல்ல.அது சமத்து)வந்து "நிறுத்துங்க கல்யாணத்தை"ன்னு சொல்லி அசத்துதாம்.அதை ஜேம்ஸ்காமரோன் கிட்ட ஒர்க் பண்ணும் கிராபிக்ஸ் ஆளை கூட்டி வந்து களேபரம் நடத்த போறாராம் டைரக்டர். அட ராமா! ராமர்பாலம் எல்லாம் கட்டின அணிலை எதுக்கு எல்லாம் யூஸ் பண்றாங்கப்பா.இராம கோபாலன் கவனிக்க. இப்பவே ரம்யாகிருஷ்ணனுக்கு 48 வயசு.இன்னும் 12 வருஷம் கழிச்சு கல்யாணமா? ஒரு வேளை நேரிடையா ஷஷ்டியப்த பூர்த்தி தான் போல. இப்படி எல்லாம் சீரியல் எடுத்தா உலகம் ஏன் அழியாது?

அடுத்த நாள் காலை தான் பங்ஷன். இரவு எல்லாருக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியானி வந்தது. நாய் கடிச்சா ஆறு மாதம் சிக்கன் சாப்பிட கூடாதுன்னு எவன் கண்டு பிடிச்சானோ அட ஆண்டவா! எல்லாரும் இலையில் பிரியானி மேய்ந்து கொண்டிருக்க நான் மட்டும் ஷானு நல்லா இருக்கான்னு போய் பார்த்து வந்தேன். அதுக்கு தலப்பாகட்டி பிடிக்காதாம்.திண்டுக்கல் வேணு கடை பிரியானி தான் பிடிக்குமாம். அது தான் ஆயில் கம்மியா இருக்குமாம்.என்ன கொடுமைடா சாமீ. தயிர் சாதமும் சுட்ட அப்பளமும் அழுது கொண்டே சாப்பிட்டு படுக்க போனோம். வந்த விருந்தாளிக்கு எல்லாம் புது பெட் எல்லாம் கொடுத்தாங்க. அவர் என் கிட்ட வந்து "நட்டு பெட்ல உச்சா போவானா?"ன்னு கேட்டார். நான் சொன்னேன்"ச்சே ச்சே அவன் அதல்லாம் செய்ய மாட்டான்.அப்படியே ராத்திரிலவந்தா கூட நம்மை எழுப்பி டாய்லெட் அரை கிலோமீட்டர்க்கு பின்னாலைருந்தாலும் அங்க தான் போவான்.அப்படி போனா நான் நட்டுக்கு மொட்டை போடுறேன்"ன்னு சொல்லிட்டு படுத்தாச்சு.

விடிகாலை நல்ல குளிர்.நட்டு என்னிக்கும் இல்லாத திருநாளா பெட்,போர்வை,தலயனை எல்லாத்தையும் நல்லா குளிப்பாட்டி இருந்தான். எல்லாத்தையும் செஞ்சுட்டு Airtel விளம்பர பையன்
மாதிரி ரூம்லஒரு மூலையிலே போய் உட்காந்து இருந்தான். அவர் வந்து "என்னங்க பையன் போக மாட்டான்னு சொன்னீங்க. இப்ப போயிட்டானே?"ன்னு கேட்க "எப்பவும் இப்படி இல்லை. இதான் முதல் தடவை"ன்னு அவர் எனக்கு சொன்ன அதே டயலாக் சொன்னேன். நான் பெத்த மொவனே எஸ்கியூஸ்மீ வெரிகுட்டுடான்னு நினைச்சுகிட்டேன். "மொட்டைக்கும் மொட்டைக்கும் சரியா போச்சு"ன்னு அவர் சொல்லிட்டு போனார்.

காலை 10 மணிக்கு பங்ஷன் ஆரம்பிக்கும் முன்னே மருந்து பிழிவது எந்த மாதம், வளைகாப்பு 7ம் மாதம்வச்சிகலாமா,9ம் மாதம் வச்சிக்கலாமா என பெரியங்க பேசி கொண்டிருக்கும் போது நான் இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலைன்னு வாசலில் பம்பரம் விட போயிட்டேன். என் தங்கமணி வந்து "என்னங்க நீங்க வந்து உங்க கருத்தை பெரிய மனுஷனா வந்து சபையிலே சொல்லுங்கன்னு எனக்கு ஜிப்பா எல்லாம் போட்டு பெரிய மனுஷன் வேஷம் கட்டி சபையிலே உட்கார வைக்க நானும் ஜீப்பில் ஏறிக்க ஆசைப்பட்டு அவங்க பேச்சை கவனிக்க ஆரம்பித்தேன். எது யார் சொன்னாலும் எதாவது ஒருவர் அதை ஒத்துக்காமல் அடம். ஒரு பெருசு "தம்பி உங்க கருத்து என்ன?"ன்னு கேட்க எனக்கு சந்தோஷம் தாங்கலை. என்னையும்மதிச்சு கேட்குறாங்களேன்னு. "இல்லீங்க நான் எதுனா மாதம் சொல்ல யாராவது அதை ஒத்துக்கலைன்னா நல்லா இருக்காது" அப்படின்னு சொல்ல அதுக்கு அவர் "ஒத்துக்கும் மாதிரி சொல்லுங்க"ன்னு சொல்ல நான் "அப்படின்னா டெலிவரிய பத்தாவது மாசம் வச்சிக்கலாம்"ன்னு சொல்ல கூட்டம் கப்சிப். மெதுவா என் காதருகே என் தங்கமணி "நீங்க பம்பரமே விட்டுகிட்டு இருந்திருக்கலாம்"ன்னு சொன்னாங்க. இப்படித்தான் நான் எது பேசினாலும் எதுனா வில்லங்கம் வருது. இந்த 2009 எனக்கு சரியே இல்லை. வருது பாருங்க 2010. அதிலே வச்சிக்கறேன் என் கச்சேரியை திரும்பவும் செமத்தியா.

ஒரு வழியா ஊர் வந்து சேர்ந்து 20 நாள் ஆச்சு. காலை திண்டுக்கல் போன். தங்கமணி தான் எடுத்தாங்க. வாசலில் பக்கத்து வீட்டு ராமநாதனிடம் பேசிகிட்டு இருந்தேன். "என்னங்க போன்.ஷானுக்கு டெலிவரியாகிடுச்சாம். ட்வின்ஸாம்"ன்னு சொல்ல,நான் "எந்த ஷானு?"ன்னு கேட்க "நீங்க கட்டி புடிச்சு புரண்டீங்களே அந்த ஷானு"ன்னு எதார்த்தமாக சொல்ல ராமனாதன் "உம் உம் நடத்துமய்யா.கங்கிராட்ஸ்"ன்னு சொல்லிட்டு போனார்.

இந்த மாயவரம் சிட்டிசன்ஸ் கிட்ட பேசும் போது கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பேசனும். "சாப்பிட்டு வரேன்"ன்னு சொன்னா கூட 108 அர்த்தம் கண்டுபிடிப்பானுங்க. "யோவ் யோவ் அது நாய்"ன்னு நான் கத்த கத்த அதை காதில் போட்டுக்காம ராமநாதன் இந்த சரித்திர முக்கிய விஷயத்தை அவர் மனைவி கிட்ட சொல்ல ஓடிகிட்டு இருந்தார். என்ன என்ன ஆகப்போகுதோ?

அதல்லாம் கிடக்கட்டும்.டபில்யூ டபில்யூ டபில்யூ டாட் அபிஅப்பா டாட் பிளாக் ஸ்பாட் டாட் காம் நாலாவது வருஷத்துக்கு வந்து நான்கு நாட்கள் ஆச்சு.அப்போ ஒரு மண்டல பந்தய விரதம் நடைமுறையில் இருந்ததால் சொல்ல முடியலை. இப்போ சொல்லியாச்சு.வந்து திட்டுபவர்கள் வரிசையில் வரவும்.நான் முந்தி நீ முந்தி என ரேஷன் கடை மாதிரி அடிச்சுக்காம வந்து திட்டவும்.

ஏவிஎம்மின் மங்கையர் உலகம் ரேவதி சங்கரன் மாதிரி எனக்கு வாழ்த்த தெரியாட்டியும் ஏதோ என்னால் ஆன வாழ்த்து. வரும் 2010 நம்ம எல்லாருக்கும் எல்லா வளமும், செல்வமும் கொடுக்கட்டும் !!!