ஜூலை நான்காம் நாள், 2012. இந்த நாளை "இன எழுச்சி நாள்" என்ற பெயரில் இனி கொண்டாடலாம். இதுவரை திராவிட முன்னேற்ற கழகம் நடத்திய போராட்டங்களில் மிக மிக அதிக அளவில் திமுகவினர் கலந்து கொண்டு ஒரு மாபெரும் எழுச்சியை காட்டினர் என்றால் அது இந்த போராட்டம் மட்டுமே என கர்வமுடன் நாம் சொல்லிக்கொள்ளலாம்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் மற்றும் ஒன்றிய திமுக ஆகிய இரண்டும் சேர்ந்து மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் - ஆர்பாட்டம் என கட்சி தலைமை அறிவித்து இருந்தது. போராட்டத்துக்கு நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் அவர்களும் ஒன்றிய செயலர் மூவலூர் மூர்த்தி ஆகியோர் தலைமை ஏற்பதாக அறிவிக்கப்பட்டது. 3. 07.2012 மதியமே திமுகவின் முக்கிய புள்ளிகள் தங்கள் கைபேசியை எல்லாம் வீட்டில் விட்டு விட்டு தலைமறைவாகினர். நான்காம் தேதி காலை 9 மணிக்கு திமுக அலுவலகமான "அண்ணா பகுத்தறிவு மன்றத்தில்" கூடுவது என ஏற்கனவே பல்வேறு தெருமுனைக்கூட்டங்கள் வாயிலாக தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை இல்லை என நான்காம் தேதி காலை 4 மணிக்கு தெரிந்த பின்னர் அவரவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து குளித்து முடித்து சிறைக்கு தேவையான மாற்று உடைகளை எடுத்து தயாராக வைத்து விட்டு ஒரு திமுக கொடியை மட்டும் கையில் எடுத்து கொண்டு "அண்ணா பகுத்தறிவு மன்றம்" நோக்கி நாலா பக்கம் இருந்தும் சாரை சாரையாய் பயணிப்பதை பார்ப்பதே அழகாய் இருந்தது.
நான் இரண்டு நாட்கள் முன்பாகவே என் மாற்று உடைகள் எல்லாம் தயார் நிலையில் வைத்து விட்டு காலை என் குழந்தைகள் பள்ளி சென்ற பின்னர் மெதுவாய் என் மனைவியிடம் அனுமதி வாங்குவது போல கேட்டேன். "சரி போய் வாங்க, மாமா, மாமியிடம் சொல்லிட்டு போய்வாங்க" என சொல்ல சின்ன ஆச்சரியத்துடன் அங்கிருந்து விடைபெற்று தம்பி வீட்டுக்கு வந்தேன். அம்மா மட்டும் இருக்க அப்பா எங்கே என கேட்டேன். "காலைல இருந்து அப்பாவை காணும். வண்டியையும் எடுத்து போகலை. ஒரு மார்கமாவே இருந்தாங்க" என அம்மா சொல்ல நான் அம்மாவிடம் "எதுனா சண்டை போட்டீங்களா அப்பா கிட்டே?" என் கேட்டேன். அம்மா "அதல்லாம் இல்லியே, ஒரு சண்டையும் இல்லையே" என சொல்ல சரி வந்துடுவாங்க, நான் போராட்டத்துக்கு போய் வருகிறேன் என சொல்ல அதற்கு அம்மா "ஜாக்கிரதையா போய்ட்டு வா" என சொல்ல அங்கிருந்து நடந்தே மயிலாடுதுறை நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பயணப்பட்டேன்.இடையில் ஹாங்காங்கில் இருந்து ஒரு சகோதரி போனில் வாழ்த்து சொன்னாங்க. நன்றி சொலிவிட்டு நடந்தேன். வழி நெடுகிலும் போலீசாரே முழுக்க முழுக்க தென்பட்டனர். "ஸ்ட்ரைகிங் ஃபோர்ஸ்" எங்கும் நிரம்பி வழிந்தது. அதை எல்லாம் பார்த்து கொண்டே "அண்ணா பகுத்தறிவு மன்றம் நோக்கி வந்தேன்"
அங்கே வாசலில் நகரச்செயலர் அண்ணன் குண்டாமணி முன்னாள் ச.ம.உ ஜெகவீரபாண்டியன், முன்னாள் ச.ம.உ சத்தியசீலன், ஒன்றிய செயலர் அண்ணன் மூவலூர் மூர்த்தி ஆகியோர் இருந்தனர். உள்ளே போங்க என அவர்கள் சொல்ல, உள்ளே வந்து பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. என் அப்பா முன்வரிசையில் அமர்ந்து "உறுதி மொழி" பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்து கொண்டு இருக்க அவர்கள் கையில் மாற்று உடைகள் மற்றும் மாத்திரைக்கான பை இருந்தது. நான் மெதுவாக வாசலுக்கு வந்து நகரச்செயலர் குண்டாமணி அண்ணனிடம் வந்தேன். என் பார்வையை புரிந்து கொண்ட அவர் " கவலைப்படாதே, ஆர்வமா வந்துட்டாங்க. ஊர்வலம் வரட்டும். பின்ன வீட்டுக்கு ஒருவர் போதும் என சொல்லி புரிய வச்சு அனுப்பிடுவோம்" என சொன்னார்.
கொஞ்சம் கொஞ்சமாக கூடிய கூட்டம் பத்து மணிக்கு மன்றம் நிரம்பி சாலையை தாண்டி ஐயப்பன் ஹோட்டல் வரை நின்றது. மிகச்சரியாக பத்து மணிக்கு போராட்ட ஊர்வலம் தொடங்கியது. கொக்கரக்கோ சௌமியன், சரபோஜிராஜன் ஆகியோர் இணையத்தில் உடனடி செய்திகளை அப்டேட் செய்ய வசதியாக ஊர்வலத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டும், வீடியோவாக எடுத்துக்கொண்டும் வந்தனர்.
வர வர வர வர வரட்சியாம்!
தஞ்சை தரணி மிரட்சியாம்!
குளுகுளு குளுகுளு குளிர்சியாம்!
கொடநாடு குளிர்சியாம்!
இங்கே கும்பி காயும் வேளையிலே!
அங்கே கும்மாளமாம் மலையிலே!
பாலின் விலை ஏறியதே!
பச்சை குழந்தை கதறியதே!
மாற்றம் வேண்டும் என்றோரே!
இந்த மாற்றம் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
பஸ் கட்டணம் பறக்குதே!
மின் கட்டணம் சுடுகிறதே!
மாற்றம் வேண்டும் என்றோரே!
இந்த மாற்றம் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
இப்படியாக போராட்ட வாசகங்கள் முழங்க முழங்க போராட்டத்தின் முதல் வரிசை பியர்லெஸ் தியேட்டர் வாசலை அடைந்த போது போராட்டத்தின் கடைசி வரிசை கச்சேரி சாலையில் இருந்தது. நகர் மன்ற தலைவர் பவானி சீனிவாசன் அவர்களோடு 25 மகளிர் முன்வரிசையில் பீடுநடை போட அரசினர் மேல்நிலைப்பள்ளி வாசலை கடந்து கூட்டம் பட்டமங்கலத்தெருவில் நுழைந்தது. அதே தெருவின் கடைசியில் தான் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது.
மெதுவாய் இருவண்ண கொடிக்கூட்டம் அசைந்து அசைந்து வட்டாச்சியர் அலுவலகம் அடைந்த போது நான் வந்த இடம் "வாழ்க்கை திருமண மண்டபம்". பின்னர் போலீசாருடன் குண்டாமணி, மூவலூர் மூர்த்தி, சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், வக்கீல் சீனுவாசன், பவானி சீனிவசன் ஆகியோர் ஏதோ பேச நடுவரிசையில் இருந்த எனக்கு அதல்லாம் என்ன வென்று தெரியவில்லை. பின்னர் கொஞ்சம் கூச்சலும் குழப்பமுமாக இருக்க அந்த வாழ்க்கை திருமண மண்டபம் திறக்கப்பட்டு அதை சுற்றிலும் போலீஸ் அரண் அமைக்கப்பட்டது. பின்னர் போலீசார் ஒரு ஒரு தொண்டர்களையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டே "உள்ளே" அனுப்பினர். திமுக கொடிகள் வாசலிலேயே வைக்கப்பட சொல்லப்பட்டது. ஒன்றியத்தில் இருந்து வந்தவர்கள் எல்லோர் கையிலும் மாற்று உடை பைகள் இருந்தன. ஆனால் நகரத்தில் இருந்து வந்தவர்கள் ரிமாண்ட் செய்யும் போது உடைகள் இருக்கும் பையை நீதிமன்றத்துக்கு எடுத்து வர சொல்லலாம் என நினைத்து எடுத்து வரவில்லை.
பின்னர் ஒட்டு மொத்த போலீசாரும் மண்டபத்தில் குவிக்கப்பட்டு பின்னர் மண்டபம் பூட்டப்பட்டது. கிட்ட தட்ட எல்லோர் கையிலும் செல்போன் இருந்தமையால் எல்லோரும் வெளியே இருந்த தனக்கு தெரிந்தவர்களிடம் "தளபதி கைதாகிவிட்டாரா? கனிமொழி கைதாகிவிட்டாரா? இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் கைது? என்ற விபரம் கேட்டுக்கொண்டு இருக்க இங்கே போலீசார் மைக், ஸ்பீக்கர், வரிசையாக அவர்களுக்கு டேபிள், சேர் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொண்டிருக்க நகர செயலர் அனைவருக்கும் வெளியே இருந்து தேனீர் மற்றும் பிஸ்கட் ஆகியவை ஏற்பாடு செய்தார்.
ஒரு ஒரு உடன்பிறப்புகளும் தங்களுக்கு ரிமாண்ட் செய்தால் எத்தனை நாள் சிறை என்பது பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தங்களுக்கு ஒத்த அலைவரிசை கொண்ட நண்பர்களுடன் சிறு சிறு குழு அமைத்துக்கொண்டனர். நான் என் பால்ய சினேகிதனும் கவுன்சிலருமான அசோக்குமார் மற்றும் என் வீடு எதிரே இருக்கும் சந்திரன் என்னும் நண்பர்களுடன் மூவரும் தனி குழுவாகினோம்.
இதிலே ஒன்றியத்தில் இருந்து வந்த ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் அவரவர்கள் அவரவர் கிராம குழுக்களுடன் சேர்ந்து தனி குழுவாக ஆனதுடன் மிக ஒற்றுமையாக ஒதுங்கி தனித்தனியாக அமர்ந்தனர். தரங்கம்பாடி அருகே "ஒழுகை மங்கலம்" என்னும் ஊரில் மாரியம்மன் கோவில் உள்ளது. அதிலே வருடா வருடம் விழா நடக்கும். அந்த கோவிலை சுற்றிலும் முந்திரி மரங்கள் இருக்கும். ஒரு ஒரு குழுவாக ஒரு ஒரு மரத்தடியில், எடுத்து வந்த தார்ப்பாயை போட்டு ஆண்கள் வட்டமாகவும் நடுவே பெண்களும் அமர்ந்து கொண்டு அந்த மரத்தடி அந்த இரண்டு நாட்கள் அவர்களுக்கு பட்டா போட்டு கொடுத்த மாதிரி இருப்பர். அது போல நான் பலமுறை அந்த திருமண மண்டபத்துக்கு போய் இருக்கிறேன். அந்த மண்டபத்தில் எந்த இடங்கள் எல்லாம் பயன்பாட்டில் இருக்காதோ அந்த இடங்கள் எல்லாம் கூட அந்த சிறு சிறு குழுக்களால் சுத்தம் செய்து கொள்ளப்பட்டு "இது எங்க ஏரியா" என்பது போல வட்டமடித்து அமர்ந்து கொண்டனர். ஒரு வேட்டி முனையை கிழித்து கொடி போல கட்டி அவர்கள் போட்டு வந்த "சலவை" சட்டையை அதில் போட்டுவிட்டு பனியன் வேஷ்டியோடு பையை தலைக்கு வைத்து கொண்டு படுத்தனர். (சட்டை கசங்கி விடக்கூடாதாமாம்) "திமுக தொண்டர்கள் அதிர்ப்தி, சிறைக்கு செல்ல மாட்டோம் என அடம்" என பொய்செய்தி போட்ட கோயபல்ஸ்கள் இதை எல்லாம் பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
இந்த இடத்தில் இணையம் வழி பிரச்சாரம் செய்யும் நம் மக்கள் பற்றி சொல்ல வேண்டும். ஒரு அபாரமான உழைப்பு அவர்களிடம். திருவாரூரில் இருந்து அஜ்மல், கன்யாகுமரியிலிருந்து பிரின்ஸ்சாமுவேல் என்கிற இளவரசன், கொக்கரக்கோ சௌம்யன், சரபோஜிராஜன், வைரமுத்து, சூர்யா பார்ன் டு விண், டான் அசோக், சபேசன், அருள்பிரகாசம் அய்யா, தோழர் திராவிடப்புரட்சி, அண்ணன் சினம்கொண்டான், ஹாங்காங் அன்சாரி அண்ணன், கத்தார் சுல்தான் இப்ராகிம், முகமது மொய்தீன், புரூனை அபுல்பசர்,அபுரய்யான்,அல்காதிர் என எல்லோரும் சிறையில் இருக்கும் எல்லோரையும் போனில் தொடர்பு கொண்டு "கள நிலவரம்" உடனே உடனே இணையத்தில் பரப்பி "நட்ட நடு செண்டர்கள்" என அன்பாக நம்மாள் நக்கல் செய்யப்படும் கூட்டத்தை கிலி பிடிக்க செய்து கொண்டு இருந்தனர்.
எந்த எந்த ஊரில் எத்தனை எத்தனை பேர் கைது என்னும் விபரத்தை எங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க தெரிவிக்க அந்த செய்தி வெளியே தொலைக்காட்சி வழியே செய்தி வரும் முன்னமே எங்களுக்கு வந்து சேர நாங்க அதை அங்கே பகிர... வாவ்... வாட் எ நெட் ஒர்க்... நம்மவர்கள் .... இதே நம்மவர்கள் 2011 மே 13க்கு பின்னர் ஏற்பட்ட இணைய எழுச்சிக்கு பின்னர் இந்த இடைப்பட்ட ஒரு வருட காலத்தில் திமுகவின் இணைய வளர்ச்சி என்பது எப்படி பிரம்மாண்டமாக அதி பிரம்மாண்டமாக இன்று வளர்ந்து நிற்கின்றது என்பதை நினைக்கும் போது நெஞ்சம் நிறைந்து இருக்கின்றது.
இதே இணையத்தின் வழி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நம் மக்களில் பலர் "களப்போராட்டத்திலும்" கலந்து கொண்டு அங்கே கம்பிகளுக்கு பின்னால் நடக்க இருக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் நம் இணைய மற்ற உடன்பிறப்புகளுக்கு சொல்ல வேண்டும் அதை அவர்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் யாரும் யாரிடமும் திட்டம் எல்லாம் போட்டுக்கொள்ளவில்லை. எல்லாம் தானாக நடந்தது.
இங்கே போலீசார் தனி லெட்ஜர் போட்டு எங்கள் எல்லோர் கைரேகை (வலது, இடது கை) உருட்டியும், அப்பா பெயர், மனைவி, குழந்தைகள் பெயர், வயது, வீட்டு முகவரி எல்லாம் லெட்ஜரில் எடுதிக்கொண்டும், அதே நேரம் இணைய இணைப்பு வழியாக இதே விபரங்களை ஒரு கஸ்டமைஸ்டு ப்ரொக்ராம் வழியாக பதிவு செய்து அனுப்பிக்கொண்டும் இருந்தனர். ஒரு பெரிய அழகான மீசை, ஒட்ட வெட்டப்பட்ட கிராப் தலை, விரைப்பான தேகம் கொண்ட ஒரு அதிகாரி எங்களை ஒரு சின்ன வீடியோ கேமிராவால் தனித்தனியாக படம் பிடித்து கொண்டு இருந்தார். அவர் சீருடை அணியாமல் சாதாரண பேண்ட், சட்டை போட்டுக்கொண்டதால் அவர் உளவுத்துறை அதிகாரி என அங்கிருக்கும் யாருக்கும் தெரியாமலே போனது:-) கிட்ட தட்ட மதியம் 1 மணி ஆன போது போலீஸ் தரப்பு உணவு வர கொஞ்சம் தாமதம் ஆகுமே என்று நகர திமுக சார்பாக சாம்பார் சாத பொட்டலங்கள் வரவழைக்கப்பட்டது. பின்னர் போலீசார் உணவும் வந்தது. பின்னர் மதியம் இரண்டு மணிக்கு எல்லாம் போலீசார் உள்ளே இருக்கும் அனைவரின் விபரங்கள் எல்லாம் சேகரித்த பின்னர் கிட்ட தட்ட மண்டபத்தில் ஒரு வித அமைதி நிலவியது. பின்னர் போலீஸ் தரப்பில் இருந்து "ரிமாண்ட் செய்ய போகிறோம். பேருந்துக்காக காத்திருக்கிறோம்" என சொல்லப்பட அப்போது போனில் கூப்பிட்ட யுவகிருஷ்ணாவுக்கு விபரம் சொன்னேன். அதற்குள் "மயிலாடுதுறையில் ரிமாண்ட்" செய்கிறார்கள் என செய்தி பரவியது. நான் என் தம்பி கொக்கரக்கோ சௌம்யனுக்கு போன் செய்து விபரம் சொன்னேன். தோழர் தமிழ்குரல் அவர்கள் கன்யாகுமரியில் இருந்து அங்கே அனேகமாக ரிமாண்ட் இல்லை என சொன்னார். என் அக்கா பையனுக்கு போன் செய்டு என் மாற்று உடைகள் எடுத்து வர சொன்னேன். அது போலவே மாலை நான்கு மணிக்கு மாற்று உடைகள் வந்து விட்டன எல்லோருக்கும். பேருந்துகளும் மண்டப வாசலுக்கு வந்து விட்டன. கிட்ட தட்ட எல்லோரிடமும் "திருச்சி சிறையில் அவைலபிலிட்டி இருப்பதாக செய்தி வந்துள்ளது. அனேகமாக திருச்சியாக இருக்கலாம்" என போலீசார் சொல்ல நாங்களும் எங்கள் மாற்று உடைகளை வாங்கி கொண்டு , கொண்டு வந்தவர்களிடம் "நீதிமன்றத்துக்கு வந்து செல்போனை வாங்கி செல்லவும்" என சொல்லி விட்டோம். அதே நேரம் தஞ்சையில் இருந்து வி எஸ் கே என்னும் செந்தில்குமார் என்னை தொடர்புகொண்டு அவர்களுக்கும் ரிமாண்ட் தான் என சொன்னார்.
புதுகையில் இருந்து நம் தம்பியண்ணன் அப்துல்லாவும், புதுகை மாவட்டம் பெரியண்ணன் அரசு அவர்களும் போனில் தொடர்பு கொண்டு மயிலாடுதுறை விபரம் கேட்டனர். அதே போல அங்கிருக்கும் விபரம் சொன்னார்கள்.அவர்கள் அப்போது கைது செய்யப்பட்டு புதுகையில் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். தோழர் சிவானந்தம் அரசன் அவர்கள் சென்னை நிலவரம் பற்றி போனில் சொன்னார்கள், அது போல அரை மணிக்கு ஒரு முறை இளவரசன் விபரம் கேட்டு இணையத்தில் அப்டேட் செய்து கொண்டு இருந்தார். சீதாராமன் போன்றவர்கள் தங்கள் தாயார் எல்லாம் "உள்ளே" இருப்பதை சொன்னார். கொக்கரக்கோ சௌம்யனும், தோழர் ஜே.பி பிரகாஷ் மற்றும் யுவகிருஷ்ணா ஆகியோர் கூகிள் பிளஸ்ல் உண்மைகளை பரப்புரை செய்து கொண்டு இருப்பதாக செய்திகள் வந்தன.
சார்லெஸ், நரேஷ், சபேசன், அன்சாரி போன்ற எல்லோரும் மற்றும் சிங்கப்பூர் திமுகவினர் இணையம் வழியே மிக அழகாக பரப்புதல் செய்து கொண்டு இருக்க மாலை ஆறு மணிக்கு நீதிமன்றம் செல்ல இருக்கிறோம் என்றே சொல்லி வந்த போலீசார் திடீரென மண்டபம் வாசலை திறந்து விட்டு "விடுதலை" என சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் நகர மறுத்தது. நகர, ஒன்றிய செயலர்கள் தலைமையை தொடர்பு கொண்டு "அடுத்து என்ன செய்வது?" என கேட்க "ஆமாம் விடுதலை தான். ஒட்டு மொத்த தமிழகத்தில் இருந்தும் ஒரே நேரத்தில் விடுதலை உத்தரவு வந்து விட்டது. அதனால் கலைந்து செல்லலாம்" என கூற ஒட்டு மொத்த கூட்டமும் ஊர்வலமாக அண்ணாசிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு வெடிகள் வெடிக்க ஊர்வலமாக வந்து வெற்றி முழக்கமிட்டோம். பின்னர் அரியலூர் மாவட்ட செயலர் தோழர் சிவசங்கர் அவர்களோடு போனில் பேசிய போது இங்கே வெடித்த வெடி சத்தம் அவர் காதுக்கும் எட்டியது. பின்னர் ஹாங்காங் அன்சாரி அவர்கள் காதுக்கும் எங்கள் சந்தோஷம் எட்டியது.
வீட்டுக்கு வந்து பார்த்து குழந்தைகளை கட்டிக்கொண்டு "கலைஞர் செய்திகள்" பார்த்தேன். அடடா அடடா... நான் பல வருஷம் முன்னர் பார்த்த கலைஞர் ஒர் வித மந்தகாச புன்னகையில் ஒரு வித கர்வத்தில், முகம் நிறைய மலர்சியுடன், சிறை சென்று வந்த மகன் "தளபதி" பக்கத்தில் இருக்க, பின் பக்கம் "மகள்" கனிமொழி நிற்க.... நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் கலைஞரை பல நேரங்களில் கவனித்து இருக்கிறேன். ஆனால் நான்காம் தேதி மாலை அந்த நேரம் அவர் முகத்தில் இருந்த ஒரு கர்வம் ஒரு பெருமை திமுக முதன் முறை 1967ல் ஆட்சியை பிடித்த போது கூட இருந்திருக்காது. அது போல அவர் ஐந்தாம் முறை ஆட்சி பிடித்த போது கூட இருந்தது இல்லை, 40/40 பெற்ற போது கூட இருந்தது இல்லை. ஆனால் அன்று பார்த்தேன். கலைஞரை அன்று அப்படி பார்த்த எம் திமுக தொண்டர்கள்
"கலைஞரே உங்கள் இதே முகம் காண எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறை செல்ல தயார்" என கூறுவது போல ஒட்டு மொத்த திமுக தொண்டர்கள் சார்பாக நான் நினைத்துக்கொண்டேன்.
திமுக அழிந்து விட்டது, திராவிடம் ஒழிந்து விட்டது, போராட்டம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ், தொண்டர்கள் அதிர்ப்தி, தொண்டர்கள் ஓட்டம், அதிகமாக பத்தாயிரம் பேர் தான் வருவர்... நாளுக்கு ஒரு பொய், நிமிடத்துக்கு ஒரு கிண்டல் என பொய்ப்பரப்புரை செய்த தினமலம் எங்கே கொண்டு போய் முகம் வைத்துக்கொள்ள போகின்றது?
எங்கள் பலம் கண்டீர்களா எதிர்கட்சியினரே? திமுக காரன் என்ன சிறைக்கு போக அஞ்சுப்வனா? மேலே இருக்கும் புகைப்படம் தோழர் சரபோஜி எடுத்த புகைப்படம். அதை எடுத்த போது எனக்கு தெரியாது. எனக்கு முன்னால் வருபவர் தான் நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் அவர்கள். ஆனால் நாங்கள் யாரும் ஹீரோ அல்ல. அல்லவே அல்ல.
எங்கள் பக்கத்தில் வருகின்றாரே ஒரு 92 வயது கிழவர் அவர் தான் ஹீரோ இந்த போராட்டத்திலே. கையில் கைத்தடி வைத்த பெரியவரிடம் போலீசார் மண்பத்துக்குள் "கைத்தடி"கள் அனுமதி இல்லை என சொன்ன போது அதை வாசலில் வீசி எரிந்து விட்டு உள்ளே ராஜ நடை போட்டாரே அவர் தான் ஹீரோ. அதே போல சென்னையில் தென்சென்னை மாவட்ட செயலர் அண்ணன் ஜெ.அன்பழகன் தலைமையில் ஒரு வயது பாலகன் தனது தாயாரின் இடுப்பில் அமர்ந்து கொண்டு "கலைஞர் வாழ்க, தளபதி வழி நடப்போம்" எனகோஷமிட்டானே அவன் தான் ஹீரோ. ஒரு வயது குழந்தை முதல் 92 வயது முதியவர் வரை ஒரு இயக்கத்தில் சிறை செல்ல தயாராக இருக்கும் இந்த திராவிட முன்னேற்ற கழகம்...... உலக சரித்திரத்தில் இது போன்ற ஒரு இயக்கத்தை கண்டது உண்டா ஜெயா அம்மையாரே? தினமலரே? தினமணியே, துக்ளக்கே? இனி எத்தனை கோயபல்ஸ் பிரச்சாரம் செய்தாலும் எங்களை அழிக்கவோ முடக்கவோ முடியும் என்றா நினைக்கின்றீர்கள்? போய் அடுத்த பொய்ப்புரட்டு வேலையை பாருங்கள். கேட்பதற்கு கேனையர்கள் அல்ல தமிழக மக்கள். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. எரிமலை மீது டிஷ்யூ பேப்பர் வைத்து மூடும் வேலை தான் உங்கள் பொய் பரப்புரைகள்!