பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label மயிலாடுதுறை. Show all posts
Showing posts with label மயிலாடுதுறை. Show all posts

May 27, 2013

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய கலக்டர் சொக்கலிங்கம்!


இடமிருந்து வலமாக வெள்ளை உடையில் திரு. சொக்கலிங்கம்


இவருடைய பெயர் சொக்கலிங்கம். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வழுவூர் மெயின் ரோட்டை அடுத்து சுந்தரப்பன்சாவடி என்னும் கிராமம்(அதே மெயின் ரோட்டிலேயே) இவருடையது. உடையார் சமூகத்தை சேர்ந்தவர். பக்கத்து கிராமங்கள் எல்லாம் அதாவது பண்டரவாடை, மங்கைநல்லூர், நெய்க்குப்பை, வழுவூர் இங்கெல்லாம் இவருடை சமூகத்தினர் அதிகம். அவர்கள் பெரிய நிலக்கிழார்களாக இருப்பினும் இவர் ஏழை. தன் தாய் தந்தையர்களுக்கு ஒரே மகன்.இவரது தந்தையார் இவருடைய சிறு வயதிலேயே காலமாகிவிட்டார். அம்மாவும் மகனும் மட்டும் தான் வீட்டில். இவரோ வயல் வேலைக்கு சென்று தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையெனினும் இவர் அங்கிருந்து தினமும் எட்டு கிலோ மீட்டர் நடந்தே வந்து மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.


தன் குடும்ப ஏழ்மை நிலையிலும் அண்ணாமலை பல்கலைகழகத்துக்கு சென்று பட்டப் படிப்பும் படித்தார். பின்னர் I.A.S தேர்வு எழுதி தேர்வாகி (தமிழ்நாடு கேடர்) தமிழக அரசின்  முதலமைச்சராக 1967ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை அவர்களுக்கு நேர்முக உதவியாளர் ஆக பணியமர்த்தப்பட்டார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தின் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியராக இருந்து பணியாற்றினார். தன் வருமானத்தில் தன் தந்தையாருக்கு (அதே சுந்தரப்பன் சாவடி மெயின் ரோட்டில்) தன் வீட்டுக்குள் (மெயில் ரோட்டை பார்த்து இருக்கும் கொல்லையில்) சிலை வைத்து கோவில் கட்டினார். அவர் எங்கு பணியாற்றினாலும் இங்கே தன் சொந்த கிராமத்துக்கு வந்து தான் விடுமுறையை கழிப்பார்.


அண்ணாவின் மீது அதீத  பற்று கொண்டவர். ஒரு முறை அண்ணா முதல்வராக இருக்கும் போது மயிலாடுதுறை வழியாக திருவாரூர் செல்லும் வழியில் தன் வீட்டில் மதிய உணவு உண்ண வேண்டும் என அண்ணாவை இவர் கேட்டுக்கொள்ள அண்ணாவும் சம்மதித்தார். ஆனால் இவரது தாயார் சிறிது மனநலம் குன்றி விட்ட நிலை அது. அண்ணாவுக்காக வித விதமாக சமைத்து வைக்க சொல்லி இவர் தன் தாயாருக்கு கடிதம் எழுதியும் அவர் அதை செய்யவில்லை. புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் மட்டுமே வைத்து இருந்ததைக்கண்டு சொக்கலிங்கம் அதிர்ந்தார். ஆனால் அண்ணாவோ (முதல்வர்) இனிய முகத்தோடு "நான் நீண்ட நாளாக புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் சாப்பிட வேண்டும் என நினைத்து இருந்தேன். என் தொத்தா( அண்ணாவின் வளர்ப்பு தாய்) அவர்களுக்கு மட்டுமே எனக்கு இது பிடிக்கும் என தெரியும். மிஸ்டர் சொக்கலிங்கம் உங்கள் அம்மாவின் உருவில் என் தொத்தாவை காண்கிறேன்" என அண்ணா இவரை தேற்றினார். ஆனாலும் அன்று தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் அன்று முதல் திரு. சொக்கலிங்கம் மதிய உணவை சாப்பிடும் பழக்கத்தையே விட்டு விட்டார். அத்தனை பக்தி அண்ணா மீது இவருக்கு.



தன் பணிக்காலத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்னும் பெயரைப்பெற்றார். எம் ஜி ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழக அரசின் தலைமை செயலர் என்னும் உயரிய அந்தஸ்து பெற்றார். எம் ஜி ஆர் அவர்களின் கடைசி காலத்தில் உடல் நலம் குன்றிய போது  அமரிக்க புரூக்ளின்  மருத்துவமனை சென்ற போது அவருடன் சென்ற சிலரில் தலைமைச்செயலர் திரு. சொக்கலிங்கம் அவர்களும் உண்டு. அப்போதைய முதல்வர் எம் ஜி ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் திரு.சொக்கலிங்கம் அவர்கள்.


பின்னர் பணி ஓய்வு பெற்ற பின்னர் தன் சொந்த கிராமத்துக்கு வந்து தன் வீட்டு கொல்லைப்பக்கம்  இன்றைய நாகரீகத்துக்கு ஏற்றது போல கான்கிரீட் வீடு ஒன்றை சிறியதாக கட்டிக்கொண்டு தன் வீட்டை சுற்றிலும் தோட்டங்கள், தென்னை மரங்கள் சூழ அமைதியான வாழ்க்கை நடத்தினார் தன் தாயாருடன். (அது வரை அவரது தாயாரும் இருந்தார்) அனால் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உயர் கல்வி கற்று அமரிக்க நாட்டிற்கு சென்று விட்டனர். இவரும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அமேரிக்கா சென்று சில நாட்கள் தன் குடும்பத்துடன் வசித்து விட்டு மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து விடுவார். பின்னர் தன் தாயார் இறந்த பின்னர் தன் தந்தையாருக்கு கட்டிய கோவிலுக்கு பக்கத்தில் தாயாருக்கும் சிலை வைத்து தனிக்கோவில் கட்டினார்.


தான் சுந்தரப்பன் சாவடியில் வாழ்ந்த கடைசி காலத்தில் தனக்கு வரும் ஓய்வூதியப்பணம் மற்றும் தன் கொல்லையில் காய்க்கும் தேங்காய்களை விற்று வரும் வருமானம் இவைகளை கொண்டு நிம்மதியான வாழ்வு வாழ்ந்தார். ஒரு ரூபாய் கூட விரய செலவு செய்ய மாட்டார். அவரால் மயிலாடுதுறைக்கு பெருமை. அவரால் அவர் படித்த நகராட்சி மேல் நிலைப்பள்ளிக்கு பெருமை. அவரால் அவர் கிராமத்துக்கு பெருமை. சுற்றி இருந்த கிராமங்களுக்கு பெருமை.

இரு தினங்கள் முன்பாக அமரிக்கா சென்றிருந்த போது உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது ஆசைப்படி அவரது உடல் சொந்த ஊருக்கு வருகின்றதாம். அமேரிக்கா சென்று இறந்தாலும் தான் நேசித்த மண்ணில் வந்து அமைதியாக உறங்கட்டும் திரு. சொக்கலிங்கம் அய்யா அவர்கள்!


"பத்திரிக்கா உலக" நியதிப்படி செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் சூதாட்டம் மற்றும்  கூட்டிக்கொடுக்கும் தொழிலதிபர்  குருநாத் மெய்யப்பன் இடம் பெற,திரு.சொக்கலிங்கம் அவர்கள் எட்டாம் பக்கத்தில் இரண்டு இன்ச் ஆக சுருங்கி போயிருந்தார்.



திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு மயிலாடுதுறை மக்கள் சார்பாக அஞ்சலிகள் :-(

July 6, 2012

04.07.2012 - இன எழுச்சி நாள் - திமுக சிறை நிரப்பும் போராட்டம் - மயிலாடுதுறையில் இருந்து ஒரு பார்வை!



ஜூலை நான்காம் நாள், 2012. இந்த நாளை "இன எழுச்சி நாள்" என்ற பெயரில் இனி கொண்டாடலாம். இதுவரை திராவிட முன்னேற்ற கழகம் நடத்திய போராட்டங்களில் மிக மிக அதிக அளவில் திமுகவினர் கலந்து கொண்டு ஒரு மாபெரும் எழுச்சியை காட்டினர் என்றால் அது இந்த போராட்டம் மட்டுமே என கர்வமுடன் நாம் சொல்லிக்கொள்ளலாம்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் மற்றும் ஒன்றிய திமுக ஆகிய இரண்டும் சேர்ந்து மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் - ஆர்பாட்டம் என கட்சி தலைமை அறிவித்து இருந்தது. போராட்டத்துக்கு நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் அவர்களும் ஒன்றிய செயலர் மூவலூர் மூர்த்தி ஆகியோர் தலைமை ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.  3. 07.2012 மதியமே திமுகவின்  முக்கிய புள்ளிகள் தங்கள் கைபேசியை எல்லாம் வீட்டில் விட்டு விட்டு தலைமறைவாகினர். நான்காம் தேதி காலை 9 மணிக்கு திமுக அலுவலகமான "அண்ணா பகுத்தறிவு மன்றத்தில்" கூடுவது என ஏற்கனவே பல்வேறு தெருமுனைக்கூட்டங்கள் வாயிலாக தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை இல்லை என நான்காம் தேதி காலை 4 மணிக்கு தெரிந்த பின்னர் அவரவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து குளித்து முடித்து சிறைக்கு தேவையான மாற்று உடைகளை எடுத்து தயாராக வைத்து விட்டு ஒரு திமுக கொடியை மட்டும் கையில் எடுத்து கொண்டு "அண்ணா பகுத்தறிவு மன்றம்" நோக்கி நாலா பக்கம் இருந்தும் சாரை சாரையாய் பயணிப்பதை பார்ப்பதே அழகாய் இருந்தது.

நான் இரண்டு நாட்கள் முன்பாகவே என் மாற்று உடைகள் எல்லாம் தயார் நிலையில் வைத்து விட்டு காலை என் குழந்தைகள் பள்ளி சென்ற பின்னர் மெதுவாய் என் மனைவியிடம் அனுமதி வாங்குவது போல கேட்டேன். "சரி போய் வாங்க, மாமா, மாமியிடம் சொல்லிட்டு போய்வாங்க" என சொல்ல சின்ன ஆச்சரியத்துடன் அங்கிருந்து விடைபெற்று தம்பி வீட்டுக்கு வந்தேன். அம்மா மட்டும் இருக்க அப்பா எங்கே என கேட்டேன். "காலைல இருந்து அப்பாவை காணும். வண்டியையும் எடுத்து போகலை. ஒரு மார்கமாவே இருந்தாங்க" என அம்மா சொல்ல நான் அம்மாவிடம் "எதுனா சண்டை போட்டீங்களா அப்பா கிட்டே?" என் கேட்டேன். அம்மா "அதல்லாம் இல்லியே, ஒரு சண்டையும் இல்லையே" என சொல்ல சரி வந்துடுவாங்க, நான் போராட்டத்துக்கு போய் வருகிறேன் என சொல்ல அதற்கு அம்மா "ஜாக்கிரதையா போய்ட்டு வா" என சொல்ல அங்கிருந்து நடந்தே மயிலாடுதுறை நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பயணப்பட்டேன்.இடையில் ஹாங்காங்கில் இருந்து ஒரு சகோதரி போனில் வாழ்த்து சொன்னாங்க. நன்றி சொலிவிட்டு நடந்தேன். வழி நெடுகிலும் போலீசாரே முழுக்க முழுக்க தென்பட்டனர். "ஸ்ட்ரைகிங் ஃபோர்ஸ்" எங்கும் நிரம்பி வழிந்தது. அதை எல்லாம் பார்த்து கொண்டே "அண்ணா பகுத்தறிவு மன்றம் நோக்கி வந்தேன்"

அங்கே வாசலில் நகரச்செயலர் அண்ணன் குண்டாமணி முன்னாள் ச.ம.உ ஜெகவீரபாண்டியன், முன்னாள் ச.ம.உ சத்தியசீலன், ஒன்றிய செயலர் அண்ணன் மூவலூர் மூர்த்தி ஆகியோர் இருந்தனர். உள்ளே போங்க என அவர்கள் சொல்ல, உள்ளே வந்து பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. என் அப்பா முன்வரிசையில் அமர்ந்து "உறுதி மொழி" பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்து கொண்டு இருக்க அவர்கள் கையில் மாற்று உடைகள் மற்றும் மாத்திரைக்கான பை இருந்தது. நான் மெதுவாக வாசலுக்கு வந்து நகரச்செயலர் குண்டாமணி அண்ணனிடம் வந்தேன். என் பார்வையை புரிந்து கொண்ட அவர் " கவலைப்படாதே, ஆர்வமா வந்துட்டாங்க. ஊர்வலம் வரட்டும். பின்ன வீட்டுக்கு ஒருவர் போதும் என சொல்லி புரிய வச்சு அனுப்பிடுவோம்" என சொன்னார்.

கொஞ்சம் கொஞ்சமாக கூடிய கூட்டம் பத்து மணிக்கு மன்றம் நிரம்பி சாலையை தாண்டி ஐயப்பன் ஹோட்டல் வரை நின்றது. மிகச்சரியாக பத்து மணிக்கு போராட்ட ஊர்வலம் தொடங்கியது. கொக்கரக்கோ சௌமியன், சரபோஜிராஜன் ஆகியோர் இணையத்தில் உடனடி செய்திகளை அப்டேட் செய்ய வசதியாக ஊர்வலத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டும், வீடியோவாக எடுத்துக்கொண்டும் வந்தனர்.

வர வர வர வர வரட்சியாம்!
தஞ்சை தரணி மிரட்சியாம்!
குளுகுளு குளுகுளு குளிர்சியாம்!
கொடநாடு குளிர்சியாம்!
இங்கே கும்பி காயும் வேளையிலே!
அங்கே கும்மாளமாம் மலையிலே!

பாலின் விலை ஏறியதே!
பச்சை குழந்தை கதறியதே!
மாற்றம் வேண்டும் என்றோரே!
இந்த மாற்றம் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

பஸ் கட்டணம் பறக்குதே!
மின் கட்டணம் சுடுகிறதே!
மாற்றம் வேண்டும் என்றோரே!
இந்த மாற்றம் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இப்படியாக போராட்ட வாசகங்கள் முழங்க முழங்க போராட்டத்தின் முதல் வரிசை  பியர்லெஸ் தியேட்டர் வாசலை அடைந்த போது போராட்டத்தின் கடைசி வரிசை கச்சேரி சாலையில் இருந்தது. நகர் மன்ற தலைவர் பவானி சீனிவாசன் அவர்களோடு 25 மகளிர் முன்வரிசையில் பீடுநடை போட அரசினர் மேல்நிலைப்பள்ளி வாசலை கடந்து கூட்டம் பட்டமங்கலத்தெருவில் நுழைந்தது. அதே தெருவின் கடைசியில் தான் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது.

மெதுவாய் இருவண்ண கொடிக்கூட்டம் அசைந்து அசைந்து வட்டாச்சியர் அலுவலகம் அடைந்த போது நான் வந்த இடம் "வாழ்க்கை திருமண மண்டபம்". பின்னர் போலீசாருடன் குண்டாமணி, மூவலூர் மூர்த்தி, சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், வக்கீல் சீனுவாசன், பவானி சீனிவசன் ஆகியோர் ஏதோ பேச நடுவரிசையில் இருந்த எனக்கு அதல்லாம் என்ன வென்று தெரியவில்லை. பின்னர் கொஞ்சம் கூச்சலும் குழப்பமுமாக இருக்க அந்த வாழ்க்கை திருமண மண்டபம் திறக்கப்பட்டு அதை சுற்றிலும் போலீஸ் அரண் அமைக்கப்பட்டது. பின்னர் போலீசார் ஒரு ஒரு தொண்டர்களையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டே "உள்ளே" அனுப்பினர். திமுக கொடிகள் வாசலிலேயே வைக்கப்பட சொல்லப்பட்டது. ஒன்றியத்தில் இருந்து வந்தவர்கள் எல்லோர் கையிலும் மாற்று உடை பைகள் இருந்தன. ஆனால் நகரத்தில் இருந்து வந்தவர்கள் ரிமாண்ட் செய்யும் போது உடைகள் இருக்கும் பையை நீதிமன்றத்துக்கு எடுத்து வர சொல்லலாம் என நினைத்து எடுத்து வரவில்லை.

பின்னர் ஒட்டு மொத்த போலீசாரும் மண்டபத்தில் குவிக்கப்பட்டு பின்னர் மண்டபம் பூட்டப்பட்டது. கிட்ட தட்ட எல்லோர் கையிலும் செல்போன் இருந்தமையால் எல்லோரும் வெளியே இருந்த தனக்கு தெரிந்தவர்களிடம் "தளபதி கைதாகிவிட்டாரா? கனிமொழி கைதாகிவிட்டாரா? இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் கைது? என்ற விபரம் கேட்டுக்கொண்டு இருக்க இங்கே போலீசார் மைக், ஸ்பீக்கர், வரிசையாக அவர்களுக்கு டேபிள், சேர் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொண்டிருக்க நகர செயலர் அனைவருக்கும் வெளியே இருந்து தேனீர் மற்றும் பிஸ்கட் ஆகியவை ஏற்பாடு செய்தார்.

ஒரு ஒரு உடன்பிறப்புகளும் தங்களுக்கு ரிமாண்ட் செய்தால் எத்தனை நாள் சிறை என்பது பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தங்களுக்கு ஒத்த அலைவரிசை கொண்ட நண்பர்களுடன் சிறு சிறு குழு அமைத்துக்கொண்டனர். நான் என் பால்ய சினேகிதனும் கவுன்சிலருமான அசோக்குமார் மற்றும் என் வீடு எதிரே இருக்கும் சந்திரன் என்னும் நண்பர்களுடன் மூவரும் தனி குழுவாகினோம்.

இதிலே ஒன்றியத்தில் இருந்து வந்த ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் அவரவர்கள் அவரவர் கிராம குழுக்களுடன் சேர்ந்து தனி குழுவாக ஆனதுடன் மிக ஒற்றுமையாக ஒதுங்கி தனித்தனியாக அமர்ந்தனர். தரங்கம்பாடி அருகே "ஒழுகை மங்கலம்" என்னும் ஊரில் மாரியம்மன் கோவில் உள்ளது. அதிலே வருடா வருடம் விழா நடக்கும். அந்த கோவிலை சுற்றிலும் முந்திரி மரங்கள் இருக்கும். ஒரு ஒரு குழுவாக ஒரு ஒரு மரத்தடியில், எடுத்து வந்த தார்ப்பாயை போட்டு ஆண்கள் வட்டமாகவும் நடுவே பெண்களும் அமர்ந்து கொண்டு அந்த மரத்தடி அந்த இரண்டு நாட்கள் அவர்களுக்கு பட்டா போட்டு கொடுத்த மாதிரி இருப்பர். அது போல நான் பலமுறை அந்த திருமண  மண்டபத்துக்கு போய் இருக்கிறேன். அந்த மண்டபத்தில் எந்த இடங்கள் எல்லாம் பயன்பாட்டில் இருக்காதோ அந்த இடங்கள் எல்லாம் கூட அந்த சிறு சிறு குழுக்களால் சுத்தம் செய்து கொள்ளப்பட்டு "இது எங்க ஏரியா" என்பது போல வட்டமடித்து அமர்ந்து கொண்டனர். ஒரு வேட்டி முனையை கிழித்து கொடி போல கட்டி அவர்கள் போட்டு வந்த "சலவை" சட்டையை அதில் போட்டுவிட்டு பனியன் வேஷ்டியோடு பையை தலைக்கு வைத்து கொண்டு படுத்தனர். (சட்டை கசங்கி விடக்கூடாதாமாம்) "திமுக தொண்டர்கள் அதிர்ப்தி, சிறைக்கு செல்ல மாட்டோம் என அடம்" என பொய்செய்தி போட்ட கோயபல்ஸ்கள் இதை எல்லாம் பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

இந்த இடத்தில் இணையம் வழி பிரச்சாரம் செய்யும் நம் மக்கள் பற்றி சொல்ல வேண்டும். ஒரு அபாரமான உழைப்பு அவர்களிடம். திருவாரூரில் இருந்து அஜ்மல், கன்யாகுமரியிலிருந்து பிரின்ஸ்சாமுவேல் என்கிற இளவரசன், கொக்கரக்கோ சௌம்யன், சரபோஜிராஜன், வைரமுத்து, சூர்யா பார்ன் டு விண், டான் அசோக், சபேசன், அருள்பிரகாசம் அய்யா, தோழர் திராவிடப்புரட்சி, அண்ணன் சினம்கொண்டான், ஹாங்காங் அன்சாரி அண்ணன், கத்தார் சுல்தான் இப்ராகிம், முகமது மொய்தீன், புரூனை அபுல்பசர்,அபுரய்யான்,அல்காதிர் என எல்லோரும் சிறையில் இருக்கும் எல்லோரையும் போனில் தொடர்பு கொண்டு "கள நிலவரம்" உடனே உடனே இணையத்தில் பரப்பி "நட்ட நடு செண்டர்கள்" என அன்பாக நம்மாள் நக்கல் செய்யப்படும் கூட்டத்தை கிலி பிடிக்க செய்து கொண்டு இருந்தனர்.

எந்த எந்த ஊரில் எத்தனை எத்தனை பேர் கைது என்னும் விபரத்தை எங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க தெரிவிக்க அந்த செய்தி வெளியே தொலைக்காட்சி வழியே செய்தி வரும் முன்னமே எங்களுக்கு வந்து சேர நாங்க அதை அங்கே பகிர... வாவ்... வாட் எ நெட் ஒர்க்... நம்மவர்கள் .... இதே நம்மவர்கள் 2011 மே 13க்கு பின்னர் ஏற்பட்ட இணைய எழுச்சிக்கு பின்னர் இந்த இடைப்பட்ட ஒரு வருட காலத்தில் திமுகவின் இணைய வளர்ச்சி என்பது எப்படி பிரம்மாண்டமாக அதி பிரம்மாண்டமாக இன்று வளர்ந்து நிற்கின்றது என்பதை நினைக்கும் போது நெஞ்சம் நிறைந்து இருக்கின்றது.

இதே இணையத்தின் வழி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நம் மக்களில் பலர் "களப்போராட்டத்திலும்" கலந்து கொண்டு அங்கே கம்பிகளுக்கு பின்னால் நடக்க இருக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் நம் இணைய மற்ற உடன்பிறப்புகளுக்கு சொல்ல வேண்டும் அதை அவர்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் யாரும் யாரிடமும் திட்டம் எல்லாம் போட்டுக்கொள்ளவில்லை. எல்லாம் தானாக நடந்தது.

இங்கே போலீசார் தனி லெட்ஜர் போட்டு எங்கள் எல்லோர் கைரேகை (வலது, இடது கை) உருட்டியும், அப்பா பெயர், மனைவி, குழந்தைகள் பெயர், வயது, வீட்டு முகவரி எல்லாம் லெட்ஜரில் எடுதிக்கொண்டும், அதே நேரம் இணைய இணைப்பு வழியாக இதே விபரங்களை ஒரு கஸ்டமைஸ்டு ப்ரொக்ராம் வழியாக பதிவு செய்து அனுப்பிக்கொண்டும் இருந்தனர். ஒரு பெரிய அழகான மீசை, ஒட்ட வெட்டப்பட்ட கிராப் தலை, விரைப்பான தேகம் கொண்ட ஒரு அதிகாரி எங்களை ஒரு சின்ன வீடியோ கேமிராவால் தனித்தனியாக படம் பிடித்து கொண்டு இருந்தார். அவர் சீருடை அணியாமல் சாதாரண பேண்ட், சட்டை போட்டுக்கொண்டதால் அவர் உளவுத்துறை அதிகாரி என அங்கிருக்கும் யாருக்கும் தெரியாமலே போனது:-)  கிட்ட தட்ட மதியம் 1 மணி ஆன போது போலீஸ் தரப்பு உணவு வர கொஞ்சம் தாமதம் ஆகுமே என்று நகர திமுக சார்பாக சாம்பார் சாத பொட்டலங்கள் வரவழைக்கப்பட்டது. பின்னர் போலீசார் உணவும் வந்தது. பின்னர் மதியம் இரண்டு மணிக்கு எல்லாம்  போலீசார் உள்ளே இருக்கும் அனைவரின் விபரங்கள் எல்லாம் சேகரித்த பின்னர் கிட்ட தட்ட மண்டபத்தில் ஒரு வித அமைதி நிலவியது. பின்னர் போலீஸ் தரப்பில் இருந்து "ரிமாண்ட் செய்ய போகிறோம். பேருந்துக்காக காத்திருக்கிறோம்" என சொல்லப்பட அப்போது போனில் கூப்பிட்ட யுவகிருஷ்ணாவுக்கு  விபரம் சொன்னேன். அதற்குள் "மயிலாடுதுறையில் ரிமாண்ட்" செய்கிறார்கள் என செய்தி பரவியது. நான் என் தம்பி கொக்கரக்கோ சௌம்யனுக்கு போன் செய்து விபரம் சொன்னேன். தோழர் தமிழ்குரல் அவர்கள் கன்யாகுமரியில் இருந்து அங்கே அனேகமாக ரிமாண்ட் இல்லை என சொன்னார். என் அக்கா பையனுக்கு போன் செய்டு என் மாற்று உடைகள் எடுத்து வர சொன்னேன். அது போலவே மாலை நான்கு மணிக்கு மாற்று உடைகள் வந்து விட்டன எல்லோருக்கும். பேருந்துகளும் மண்டப வாசலுக்கு வந்து விட்டன. கிட்ட தட்ட எல்லோரிடமும் "திருச்சி சிறையில் அவைலபிலிட்டி இருப்பதாக செய்தி வந்துள்ளது. அனேகமாக திருச்சியாக இருக்கலாம்" என போலீசார் சொல்ல நாங்களும் எங்கள் மாற்று உடைகளை வாங்கி கொண்டு , கொண்டு வந்தவர்களிடம் "நீதிமன்றத்துக்கு வந்து செல்போனை வாங்கி செல்லவும்" என சொல்லி விட்டோம். அதே நேரம் தஞ்சையில் இருந்து வி எஸ் கே என்னும் செந்தில்குமார் என்னை தொடர்புகொண்டு அவர்களுக்கும் ரிமாண்ட் தான் என சொன்னார்.

புதுகையில் இருந்து நம் தம்பியண்ணன் அப்துல்லாவும், புதுகை மாவட்டம் பெரியண்ணன் அரசு அவர்களும் போனில் தொடர்பு கொண்டு மயிலாடுதுறை விபரம் கேட்டனர். அதே போல அங்கிருக்கும் விபரம் சொன்னார்கள்.அவர்கள் அப்போது கைது செய்யப்பட்டு புதுகையில் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். தோழர் சிவானந்தம் அரசன் அவர்கள் சென்னை நிலவரம் பற்றி போனில் சொன்னார்கள், அது போல அரை மணிக்கு ஒரு முறை இளவரசன் விபரம் கேட்டு இணையத்தில் அப்டேட் செய்து கொண்டு இருந்தார். சீதாராமன் போன்றவர்கள் தங்கள் தாயார் எல்லாம் "உள்ளே" இருப்பதை சொன்னார். கொக்கரக்கோ சௌம்யனும், தோழர் ஜே.பி பிரகாஷ் மற்றும் யுவகிருஷ்ணா ஆகியோர் கூகிள் பிளஸ்ல்  உண்மைகளை பரப்புரை செய்து கொண்டு இருப்பதாக செய்திகள் வந்தன.

சார்லெஸ், நரேஷ், சபேசன், அன்சாரி போன்ற எல்லோரும் மற்றும் சிங்கப்பூர் திமுகவினர் இணையம் வழியே மிக அழகாக பரப்புதல் செய்து கொண்டு இருக்க மாலை ஆறு மணிக்கு நீதிமன்றம் செல்ல இருக்கிறோம் என்றே சொல்லி வந்த போலீசார் திடீரென மண்டபம் வாசலை திறந்து விட்டு "விடுதலை" என சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் நகர மறுத்தது. நகர, ஒன்றிய செயலர்கள் தலைமையை தொடர்பு கொண்டு "அடுத்து என்ன செய்வது?" என கேட்க "ஆமாம் விடுதலை தான். ஒட்டு மொத்த தமிழகத்தில் இருந்தும் ஒரே நேரத்தில் விடுதலை உத்தரவு வந்து விட்டது. அதனால் கலைந்து செல்லலாம்" என கூற ஒட்டு மொத்த கூட்டமும் ஊர்வலமாக அண்ணாசிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு வெடிகள் வெடிக்க ஊர்வலமாக வந்து வெற்றி முழக்கமிட்டோம். பின்னர் அரியலூர் மாவட்ட செயலர் தோழர் சிவசங்கர் அவர்களோடு போனில் பேசிய போது இங்கே வெடித்த வெடி சத்தம் அவர் காதுக்கும் எட்டியது. பின்னர் ஹாங்காங் அன்சாரி அவர்கள் காதுக்கும் எங்கள் சந்தோஷம் எட்டியது.

வீட்டுக்கு வந்து பார்த்து குழந்தைகளை கட்டிக்கொண்டு "கலைஞர் செய்திகள்" பார்த்தேன். அடடா அடடா... நான் பல வருஷம் முன்னர் பார்த்த கலைஞர் ஒர் வித மந்தகாச புன்னகையில் ஒரு வித கர்வத்தில், முகம் நிறைய மலர்சியுடன், சிறை சென்று வந்த மகன் "தளபதி" பக்கத்தில் இருக்க, பின் பக்கம் "மகள்" கனிமொழி நிற்க.... நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் கலைஞரை பல நேரங்களில் கவனித்து இருக்கிறேன். ஆனால் நான்காம் தேதி மாலை அந்த நேரம் அவர் முகத்தில் இருந்த ஒரு கர்வம் ஒரு பெருமை திமுக முதன் முறை 1967ல் ஆட்சியை பிடித்த போது கூட இருந்திருக்காது. அது போல அவர் ஐந்தாம் முறை ஆட்சி பிடித்த போது கூட இருந்தது இல்லை, 40/40 பெற்ற போது கூட இருந்தது இல்லை. ஆனால் அன்று பார்த்தேன். கலைஞரை அன்று அப்படி பார்த்த எம் திமுக தொண்டர்கள் "கலைஞரே உங்கள் இதே முகம் காண எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறை செல்ல தயார்" என கூறுவது போல ஒட்டு மொத்த திமுக தொண்டர்கள் சார்பாக நான் நினைத்துக்கொண்டேன்.

திமுக அழிந்து விட்டது, திராவிடம் ஒழிந்து விட்டது, போராட்டம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ், தொண்டர்கள் அதிர்ப்தி, தொண்டர்கள் ஓட்டம், அதிகமாக பத்தாயிரம் பேர் தான் வருவர்... நாளுக்கு ஒரு பொய், நிமிடத்துக்கு ஒரு கிண்டல் என பொய்ப்பரப்புரை செய்த தினமலம் எங்கே கொண்டு போய் முகம் வைத்துக்கொள்ள போகின்றது?

எங்கள் பலம் கண்டீர்களா எதிர்கட்சியினரே? திமுக காரன் என்ன சிறைக்கு போக அஞ்சுப்வனா? மேலே இருக்கும் புகைப்படம் தோழர் சரபோஜி எடுத்த புகைப்படம். அதை எடுத்த போது எனக்கு தெரியாது. எனக்கு முன்னால் வருபவர் தான் நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் அவர்கள். ஆனால் நாங்கள் யாரும் ஹீரோ அல்ல. அல்லவே அல்ல. எங்கள் பக்கத்தில் வருகின்றாரே ஒரு 92 வயது கிழவர் அவர் தான் ஹீரோ இந்த போராட்டத்திலே. கையில் கைத்தடி வைத்த பெரியவரிடம் போலீசார் மண்பத்துக்குள் "கைத்தடி"கள் அனுமதி இல்லை என சொன்ன போது அதை வாசலில் வீசி எரிந்து விட்டு உள்ளே ராஜ நடை போட்டாரே அவர்  தான் ஹீரோ. அதே போல சென்னையில் தென்சென்னை மாவட்ட செயலர் அண்ணன் ஜெ.அன்பழகன் தலைமையில் ஒரு வயது பாலகன் தனது தாயாரின் இடுப்பில் அமர்ந்து கொண்டு "கலைஞர் வாழ்க, தளபதி வழி நடப்போம்" எனகோஷமிட்டானே அவன் தான் ஹீரோ. ஒரு வயது குழந்தை முதல் 92 வயது முதியவர் வரை ஒரு இயக்கத்தில் சிறை செல்ல தயாராக இருக்கும் இந்த திராவிட முன்னேற்ற கழகம்...... உலக சரித்திரத்தில் இது போன்ற ஒரு இயக்கத்தை கண்டது உண்டா ஜெயா அம்மையாரே? தினமலரே? தினமணியே, துக்ளக்கே? இனி எத்தனை கோயபல்ஸ் பிரச்சாரம் செய்தாலும் எங்களை அழிக்கவோ முடக்கவோ முடியும் என்றா நினைக்கின்றீர்கள்? போய் அடுத்த பொய்ப்புரட்டு  வேலையை பாருங்கள். கேட்பதற்கு கேனையர்கள் அல்ல தமிழக மக்கள். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. எரிமலை மீது டிஷ்யூ பேப்பர் வைத்து மூடும் வேலை தான் உங்கள் பொய் பரப்புரைகள்!


March 24, 2011

மயிலாடுதுறைக்கு தலைவர் கலைஞர் வந்தார்!!!

"காலை 11 மணிக்கு கலைஞர் மயிலாடுதுறை வழியாக திருவாரூர்க்கு 2011 சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சாரத்துக்காகவும் வேட்புமனு தாக்கல் செய்யவும் செல்கின்றார் ஆகவே அணி திரண்டு வாரீர். மயிலாடுதுறை எல்லையான கால்டேக்ஸ் பெட்ரோல் பங் எதிரில் நகர திமுக சார்பில் வரவேற்பு கொடுக்கப்படும்" என ஆட்டோ அலறிக்கொண்டு போன போதே உடம்பில் ஒரு வித முறுக்கேறியது திமுக தொண்டர்களுக்கு. ரங்கன், ஜெய்லாபாய், சைக்கிள்கடை காசிநாதன் போன்ற கலைஞர் காலத்து திமுக தொண்டர்கள் முதல் ஜனதாபாலு, அலக்சாண்டர் போன்ற நடுத்தர காலத்து தொண்டர்கள் முதல் இப்போதையை ஆர்.கே,சங்கர், முருகதாஸ் போன்ற இளைஞர்கள் வரை மகளிர் அணியினர், முன்னாள், இன்னாள் நகராட்சி பதவியில் இருப்போர், இல்லாதோர், எதிர்பார்ப்போர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர் அணியினர், கான்வாய் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என கால்டேக்ஸ் இடமே காலை 11 மணி முதல் பரபரப்பாகியது.

"இப்ப தான் கலைஞர்டிவில பார்த்தேன். ஒரு டெம்போ டிராவலர் மாதிரி வேன், அதிலே கலைஞர் முன் பக்க சீட்டுல உட்காந்து இருக்காரு. தயாநிதி மாறன் கடேசில உட்காந்து இருக்காரு. கனிமொழி வேன்ல ஏறிகிட்டு இருக்கு, கார்த்தால 7 மணிக்கு கெளம்பிட்டாரு. வரும் போது பாண்டிச்சேரில பலாரம் சாப்டு பின்ன அங்க இருந்து கிளம்பி வைத்தீஸ்வரன்கோவில்ல வந்து ஒன்னுக்கு கின்னுக்கு போயிட்டு திரும்பவும் எதுனா சாப்புட்டு ஒரு மணி நேரம் காங்கிரஸ் லிஸ்டு எதுனா ரிலீஸ் ஆகிடுச்சான்னு பார்த்துட்டு அப்புடி வந்திருந்தா எதுனா கொடும்பாவி எரிப்பு சண்டை எல்லாம் பார்த்துட்டு இங்க வர்ரத்துக்கு மணி 12 ஆயிடும். அப்படியே திருவாரூர்ல போய் சட்ட வேட்டி மாத்திகிட்டு கூட்டத்துக்கு வந்தா சரியா இருக்கும். பத்து மணிக்கு டான்னு முடிக்கினும்ல"

இப்படியாக தலைவரின் மொத்த புரொக்ராமும் மனப்பாடமாக சொல்லப்பட்டு கொண்டு இருந்தது. அதற்காக அவரு ஒன்னுக்கு போவது பத்தி எல்லாம் கூடவா யோசிப்பாங்க? அங்கே நான் பார்த்தது கேட்டது எல்லாம் சொல்ல ஆசையாகத்தான் இருக்கின்றது.

"அந்த காலத்துல நடிப்பிசைபுலவர் கே ஆர் ராமசாமிகிட்டே கேட்டு காரை வாங்கிகிட்டு வருவாரு அண்ணாதுரை. ஆனா அப்பவே கலைஞர் ஒரு பியூக் வச்சிருந்தாரு. அந்த கார் கொள்ளிடத்தை தொட்டுடுச்சுன்னா மன்னை தான் கூட ஏறிப்பாரு. அப்படியே காத்தாட கொள்ளிட மணல்ல உட்காந்து பேசிகிட்டு இருந்துட்டு வருவாரு கூட்டத்துக்கு. மேடைக்கு எடது பக்கமா நின்னு மைக்க புடிச்சாருன்னா அவரு போட்டிருக்கும் அந்த கதர் துண்டு தான் பாவம். அத்தோட ஒரு முனையை ஒரு கையிலயும் இன்னுமொறு முனையை முதுகு பக்கமா கொண்டு வந்து பூணூல் கணக்கா சருக்கு புருக்குன்னு இழுத்து கிட்டே பேச ஆரம்பிச்சா அணலு தான். ஒரு ரெண்டு மணி நேரம் பஞ்சா பறக்கும்" இது ஒரு பெருசு.

"பெருசு, நீ ஆரம்பிச்சுடாத, தோ அந்த பாரு, தெஷ்ணாமூர்த்தி கோவிலோட தேர் நிக்குது பாரு. அது அடில கொஞ்சம் நெழலு இருக்கு அங்க போய் உட்காந்துக்கயேன்" ஒரு நடுத்தரம் அந்த பெருசை பார்த்து சொல்ல

"அய்யய்யோ அண்ணே, அதுகிட்ட தெஷ்ணாமூர்த்தி, தேருன்னு எல்லாம் சொல்லாத அண்ணே, உடனே அது தலைவரோட பூர்வாசிரம், புண்ணாக்கு ஆஸ்ரமம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சு அவரு திருவாரூரு தேரை ஓட்டுனது வரைக்கும் சொல்லி முடிப்பாரு" .. உடனே அத்தனை சிறுசுகளும் கொல்லென சிரிக்க அந்த நடுத்தரம் " விடுங்கடா, பெருசு ஆசைப்பட்டு வந்திருக்கு. இங்க பாரு தீவாளி நல்ல நாளு பெருநாளுக்கு கூட புதுசு கட்டாது. தலைவரு வந்தா மாத்திரம் பளிச்சுன்னு கரை வேட்டிகட்டிகிட்டு வந்திரும்" என சிலாகிக்க யாரோ ஒரு சிறுசு கையிலே ஒரு கொடியை வைத்து கொண்டு ஒரு அரை சுருதியோடு தொண்டை கிழிய "டாக்க்க்க்க்க்க்டர்ர்ர்ர்ர்ர் கலைஞர் வாழ்க.." என கத்திக்கொண்டே இருந்தது.

நேரம் ஆக ஆக அந்த பக்கம் போகும் வரும் போலீஸ் வண்டிகளில் தலைவர் எங்கே வந்து கொண்டிருக்கின்றார் என கேட்டுக்கொண்டு இருக்க அதிலே ஒரு நடுத்தரம் "அட சும்மா இருங்கப்பா என் பிரண்டு சிதம்பரம் தெக்கு வீதில சருபத்து கடை போட்டிருக்கான். அவன் கிட்டே கேட்குறேன்" என சொன்னதும் ஒரு பத்து ஜோடி காதுகள் அந்த நடுத்தரம் நோக்கி திரும்ப "ஆங் ஆங் இன்னும் வரலையா, நீ ஒன்னு பண்ணு. அவரு கிராஸ் பண்ணி இங்க வந்ததுக்கு பின்னே ஒரு எஸ்செம்மெஸு வுடு" என சொல்லிவிட்டு "இன்னும் வரலையாம்ப்பா கடலூர் கிட்ட ஏதோ கண்ணியாம்கோயிலாம் அதை தாண்டிபுட்டாராம். வழிமுச்சூடும் ஜனங்க தாங்கலையாம். வண்டி மாப்ள ஊர்வோலம் மாரி நவுருதாம். போங்கப்பா போங்க அங்க நகரம் குந்தி இருக்கு பாருங்க அந்த டிரான்ஸ்பார்மரு கிட்டே ஒரு கட மாடிப்படில. அது கிட்டே நம்ம ஏரியா பசங்க பசிக்குதுன்னு சொல்றாங்கன்னு நான் சொன்னேனு சொல்லி காசு வாங்கியாங்க" என சொல்ல ஒரு நாலு விடலைங்க அந்த பக்கம் நகரசெயலர் குண்டாமணி கிட்டே போய் விட்டு திரும்பவும் வந்து "அண்ணே நகரம் வையுதுண்ணே, தேவூரான், நாவுரான்னு பழமொழில்லாம் சொல்லி திட்டுதுண்ணே" என திரும்ப அந்த நடுத்தரம் நகரத்தை நோக்கி போனது.

அங்கே நகரம் " வாண்ணே, வா, உன் வண்டி நம்பர் என்னாது?" என சொல்லிகிட்டே "ஒ ஈரோ கோண்டா வாங்கிட்டியா, இந்தா இந்த நோட்டுல பேரையும் வண்டி நம்பரையும் எழுது. இத்த புடி 100 ரூவா. சுடும் பாரு. நாசிக்குல இருந்து நேரா பிளைட்ட புடிச்சு வருது. ஆமா உந்தெரு பசங்க டீ குடிக்க காசு வேணும்னு வந்தானுங்க. இருங்கடா தலைவரு வந்துட்டு போவுட்டும்னு சொல்லிட்டு திரும்பி பாக்குறேன், ஒரு பயலையும் காணும். அது கெடக்கட்டும் இது வரக்கிம் 23 வண்டிக்கு கைக்காசு ரெண்டாயிரத்து முன்னூறு குடுத்து இருக்கேன். கேண்டிடேட்டு யாருன்னே தெரியல. காலைல இருந்து நம்ம பயலுவோலுக்கு செலவு பண்ணி கொடிய மன்றத்துல இருந்து கொண்டாந்து நட்டு வச்சிருக்கேன். என்னவோ போ. இதல்லாம் திரும்பி வருமா வராதான்னே தெரியல. சரி உன் பசங்களை கூப்டு அண்ணே, லைட்டா மருந்து வச்சுக்க சொல்லு. இந்தா அதுக்கு இந்த நோட்டுல ஒரு கையெழுத்து போடு. புடி பெரியகாந்திய" என சொல்ல "அட நகரம் என்னாது இதல்லாம் சின்னத்தனமா. தலைவ்ரு எதுகிட்ட வந்துகிட்டு இருக்காருன்னு தெரிஞ்சுகிட்டு போலாம்னு இங்க வந்தா இதல்லாம் ஓடிகிட்டு இருக்குதா. சரி சரி நாம நின்னுருந்தா நம்ம கைக்காசை போட்டு நீயா நானான்னு பார்த்துபுடலாம். ஆனா ஒன்னு எல்லாத்தையும் குறிச்சு வச்சுக்க. ஐசா பைசா இல்லாம கணக்கை தீர்த்துக்க அந்த ஆளுகிட்ட. நான் சொல்றத சொல்லிட்டேன். மீதி ஏமாந்து போறதும் போவாததும் உஞ் சாமர்த்தியம் நகரம்" என சொல்லிக்கொண்டே ஒரு சிறுசை கூப்பிட்டு "எலேய் என் பைக்குல ஒரு நூறு ரூவாய்க்கு எதுத்தாப்புல பெட்ரோலு ஊத்திட்டு வா. ஒரு சேதி இருக்கு சொல்றேன்" என சொல்லிக்கொண்டே பக்கத்து கடைக்கு போய் "தம்பி ரெண்டு 500 தாளு குடு" என சொல்லி பெரிய காந்தியை நீட்ட, அவரு " அண்ணே ஒரு 500 இப்ப வாங்கிக்க அண்ணே, மீதிய சாயந்திரம் வாங்கிக்க" என சொல்லி கொடுக்க பெட்ரோல் ஊத்தி வந்தவன் கிட்டே இந்த நடுத்தரம் " எலேய் நக்ரத்துகிட்டே ஏடாகூடமா வஞ்சிபுட்டேன். சரி அதை வுடு. நம்ம பசங்க எத்தினி பேரு இருக்கீங்க. சரி கணக்கு எல்லாம் எதுக்கு, சின்ன சப்ப மருந்து 5 வாங்கிக்க, 10 கப்பும், 7 பாக்கெட்டு தண்ணியும் வாங்கிக்க, அத்தோ அந்த தேர் அடில இருக்கு பாரு பெருசு, அதுக்கும் ஒரு கட்டிங் மருந்து வையுங்கடா, இந்தா 500, அதுல 330 போவ மீதிக்கு நீங்க எதுனா சாப்புட்டுட்டு எல்லேய் அப்புடியே சாய்ந்திரம் வூட்டு பக்கம் வழியா போம்போது நெய்காராபூந்தி ஒரு இருவத்தி மூணு ரூவாய்க்கு வாங்கிட்டு வந்து என் சின்ன மொவன் வெள்ளாடிகிட்டு இருப்பான் அவன் கிட்ட குடுத்துடு. சாங்காலம் எப்புடியும் காங்கிரஸ்காரன் லிஸ்டு வந்துடும். நா காமராசரு மாளிகைக்கு ஒரு எட்டு பார்த்துட்டு லேட்டா தான் வருவேன் வூட்டு பக்கம். அண்ணி கிட்ட வெவரத்தை சொல்லிடு. கலைஞர் வாழ்கன்னு சத்தம் சரியே இல்லியேடா உங்க கிட்டே. நாங்கல்லாம் அந்த காலத்துல... அட இங்க பார்ரா கார்ல பாஜிரோல போறது யாருன்னு தெரியுதா? பழனிமாணிக்கம். அப்படின்னா இன்னும் பத்து நிமிஷத்துல தலைவர் வந்துடுவாரு. நீங்க அந்த டிரான்ஸ்பார்மர் அடில போய் மருந்து வச்சிட்டு சுருக்கா வந்துடுங்கடா" என சொல்லிக்கொண்டே போனது அந்த நடுத்தரம்.


அந்த நேரம் பார்த்து அந்த நடுத்தரத்துக்கு ஒரு எஸ் எம் எஸ் வர "அட கண்ணாடி எடுத்துட்டு வரலையேப்பா. எலேய் தம்பி இங்க வா. இது என்னான்னு படி" என சொல்லி கொடுக்க "kalaingnar passed away in chidambaram"ன்னு போட்டதை படிச்சுட்டு அதை அந்த கூட்டத்துல வெளியே சொன்னா அடிவிழும் என்ற காரணத்தால் "அண்ணே சிதம்பரம் தாண்டிட்டாராம். அனேகமா இந்நேரம் வல்லம்படுகைக்கு வந்திருப்பாரு"ன்னு சொல்ல அந்த நடுத்தரம் முகத்தில் பெருமையோ பெருமை. பக்கத்தில் இருந்த ஒரு போலீஸ் ஜீப் டிரைவரிடம் " எங்களுக்கு கன் மாதிரி நீஸ் வந்துடும்ல. தலைவரு கொள்டத்துல வரவேற்புல செம கூட்டத்துல மாட்டிகிட்டு இருக்குறாமாம். வண்டி அங்க இருந்தும் நவுந்துடுச்சாம். அடுத்து சீயாழி தான்" என சொல்லிக்கொண்டே "எலேய் மணி என்ன இப்ப 12 ஆச்சா? அடடா ஒரு போனை போட்டு சோழன் சரியான டைமான்னு பாரு. ஏன்னா தலைவரு அரசூரு கேட்டுல மாட்டிக்க கூடாது பாரு" என டிபிக்கல் அரசியல்வாதியாக சொல்ல அந்த மெசேஜ் படிச்ச பையன் " உன் இங்கிலீசுல தீயை வைச்சு கொளுத்த" என டைப் செய்து "அண்ணே அவருக்கு நன்றி சொல்லி ஒரு மெசேஜ் வுட்டுட்டேன் அண்ணே" என சொல்லிக்கொண்டே அதை அனுப்பினான்.

பின்னர் தலைவர் வைத்தீஸ்வரன் கோவில் ஹோட்டல் சதாபிஷேகத்தில் மதிய உணவு மற்றும் ஒய்வு எல்லாம் எடுத்து முடித்து வரும் வரை மருந்து வைக்கப்பட்ட இளசுகள் தலைவர் வாழ்க என கோஷம் போட்டு அந்த இடத்தையே சூடாக்கினர்.அதற்குள் ஒரு ஸ்பீக்கர் கட்டிய ஆட்டோ ஹனீபா பாட்டை போட்டு கொண்டு அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது."இதே நம்ம அச்சுதன் மாத்திரம் சாவாம இருந்திருந்தா இந்நேரம் ஆட்டோவிலே சும்மா ரகளை கட்டி அடிச்சிருப்பாண்டா" என ஒரு பெருசு ஒரு மாதத்துக்கு முன்னர் இறந்து போன திமுக பிரச்சார பீரங்கி அச்சுதனை நினைவு கூர்ந்தது.

இப்படியாக நடந்து கொண்டு இருக்கும் போதே வெய்யில் மண்டையை காய்ச்சி எடுக்க மதியம் 3 மணிக்கு ஒரு போலீஸ் ஜீப் சகிதம் ஒரு பாஜிரோவில் அமைச்சர் எ.வ. வேலு போக நம்ம நடுத்தரம் " வேலு அண்ணன் அவரு சம்மந்தி ஆர். எஸ். கிருஷ்ணா வூட்டுக்கு சாப்புட போராரு" என சொல்லிக்கொண்டே இருக்க அடுத்து எம் எல் சி என திமுகவினரால் அன்போடு அழைக்கப்படும் அமைச்சர் கோ. சி. மணி அடுத்தது ஒரு ஸ்கார்பியோவில் போக ஒரு வித பரபரப்பு. அடுத்து ஒரு அம்பாசிட்டரில் மாவட்ட எஸ்பி வர உடனே பேண்டு வாத்தியம் எல்லாம் கச்சேரியை ஆரம்பிக்க இரு பக்கமும் ஒரே கூட்டம் சேர்ந்துவிட அந்த பக்கம் பள்ளிகள் விட்டு ராஜ் மெட்ரிக், சங்கராவில் இருந்தும் மாணவர்கள் வர சங்கரா பள்ளி மாணவர்கள் ஒதுங்கி போக அந்த இடமே கலைஞர் வாழ்க கோஷத்துடன் அல்லோகலப்பட்டது.
(இந்த காரின் உள்ளே கலைஞர் இருப்பதை கண்டு பிடித்து கொள்ளவும்)
அதற்குள்ளாக அமைச்சர் மதிவாணன் ஒரு காரில் போக சிறிது நேரத்தில் ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ் என எழுதிய போலீஸ் வேனில் இருந்து சோம்பலாக சில போலீசார் இறங்கி வந்து ஒரு கயிறு எடுத்து நீட்டி பிடித்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய லிங்கராஜன், குண்டாமணி ஆகியோர் முன்பக்கமாக வந்து நிற்க நடுவே பாமக, விசிக கூட்டத்தினருடன் மூமுக தொண்டர்களும் வந்து நிற்க மதியம் 3.30க்கு 2728 என்கிற எண்ணுடைய ஒரு காரில் தலைவர் வந்தார். முன்பக்க சீட்டில் அமைச்சர் பொன்முடி இருக்க பின்பக்க சீட்டில் தலைவரும், கனிமொழியும் இருக்க கூட்டத்தை பார்த்து நிற்க குண்டாமணியும், லிங்கராஜனும் வந்து பொன்னாடை கொடுக்க அதை கனிமொழி வாங்கி பாதுகாப்பு போலீசாரிடம் கொடுக்க, அந்த இடமே கஜாமுஜான்னு ஆக தலைவர் வாழ்க என குரல் கொடுக்க தலைவர் கலைஞர் அதி அற்புதமான சிரித்த முகத்துடன் கையை காட்ட ஒட்டுமொத்த கூட்டமும் மெய்சிலிர்த்தது. சிலர் வாய்விட்டு அழுதனர் உண்ர்சி மேலீட்டால். சிலர் தான் எப்படி வாழ்த்து சொல்கின்றோம் என்று தனக்கே தெரியாத அளவு இஷ்ட்டத்துக்கு வாழ்க வாழ்க என உண்ர்சி குவியலாய் கத்த தொடங்க தலைவரின் கான்வாய் மயிலாடுதுறையை கடந்து சென்றது.

"அப்பாடா சாவதுக்குள்ள தலைவரை கிட்டத்துல பார்க்கனும்னு இருந்தேன். பார்த்துட்டேன்" என சொன்ன ஒருவருக்கு வயது 50 இருக்கும். அவரை பக்கத்தில் இருந்தவர் முறைக்க "நான் என்னை சொன்னேன். நான் சாவறத்துக்குள்ள " என அவர் திருத்தி சொன்னார். ஒட்டு மொத்த கூட்டமும் கலைந்து சென்றது. ஒருவன் சத்தமாக பேசிக்கொண்டே போனான். தலைவரு இந்த பீரியட் முதல்வரா முடிக்கும் போது 92 வயசு ஆகியிருக்கும். 7 வது முறை முதல்வரா இருந்து முடிக்கும் போது 97 ஆகியிருக்கும். அப்படின்னா அவரது நூற்றாண்டு விழாவுல அவரு எட்டாவது முறையா முதல்வராக இருப்பாரு. சூப்பர்டா.." என சொல்லிக்கொண்டே போனான். இதான் திமுக தொண்டன். தலைவர் சாவிற்க்கு அப்பாற்பட்டவர் என்ற எண்ணம் வலுவாக இருக்கின்றது. ஆச்சர்யப்பட எதும் இல்லை. இருப்பார். அவரது நூற்றாண்டை முதல்வராக தானே இருந்து நடத்துவார். வாழ்க கலைஞர்.வாழ்க கலைஞர். வாழ்க வாழ்கவே!!!