பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 13, 2012

ஸ்டீவ்ஜாப்ஸ்ம் தட்டி மெஸ் மீனும் மற்றும் டைட்டானிக் படமும்!!!


ஒர் நாள் நான் வசிக்கும்  நகர் பையன் ஒருத்தன் ஓடி வந்து "அண்ணே அவரு செத்து போய்ட்டாரு" தெரியுமா? என கேட்க எனக்கு தூக்கி வாரிப்போட்டது. யாராய் இருக்கும் என நான் என் குருவி மூளையை கசக்கும் முன்னமே அவனே "ஸ்டீவ்ஜாப்ஸ்"  என சொல்ல எனக்கு அப்பவும் அது யாருன்னு தெரியலை.


இந்த இருபது வருஷத்தில் நான் வேலை பார்த்த இத்தாலிய, ஆங்கிலேய மற்றும் அரேபிய கம்பனிகளில் அது போன்ற பெயரில் யாரும் இருந்ததாக எனக்கு ஞாபகம் வரவில்லை. இன்னும் சொல்ல போனா எனக்கு "அ வாந்தி" "கார்லோ வெளிக்கி" என  அசிங்கமான பெயர் கொண்ட இத்தாலிய சக ஒர்க்கர் பெயர்கள் மட்டுமே ஞாபகத்தில் இருந்து தொலைத்தன. கிரீஸ் நாட்டுல இருந்து வேலைக்கு வந்த எவன்ம் கூட  ஸ்டீவ் ஜாப்ஸ்ன்னு பெயர் வச்சுக்கலை. ஒரு "பெரு" நாட்டு காரன் மட்டும் ஸ்டீவன்சன்னு இருந்தான். ஆனா எங்க நகர் பையன் சொல்வது அதுக்கு கிட்டதட்ட பொருந்தி வரும் பெயர் தான் எனினும் பத்து பொருத்தமும் இல்லையே என மீண்டும் குழம்பி அவனிடமே "அது யாரு ஸ்டீவ் ஜாப்ஸ்" என கேட்க அவன் "ஆப்பிள் தெரியுமா? அவரு தான்ணே" என சொல்ல எனக்கு தெரிஞ்சு  ஆப்பிள் விற்கும் 'காமாட்சி பழக்கடை' காரருக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் என்றெல்லாம் பெயர் வைத்திருக்க வாய்ப்பில்லை. ஏன்னா அவர் பெயர் அவருக்கே தெரியாது. அவர் கடையில் இருக்கும் போது போன் வந்து அவர் எடுத்தா கூட அந்த "கருப்பு மண்டை" போனில் "அல்லோஓஓஓஓஒ நான் புள்ள பேசுறேன்" என்று ஜாதி பெயரை சொன்னாலும் சொல்லுவாரே தவிர அவர் பெயரை சொல்ல மாட்டார். ஆக அவருக்கு ஸ்டீவ்ஜாப்ஸ் பெயரெல்லாம் ரொம்ப அதிகம் என நினைத்துக்கொண்டேன்.


ஒரு வழியாக அவனிடம் வெட்கம் விட்டு "நான் பார்க்கத்தான் லூயிபிலிப் எல்லாம் போட்டு இருப்பேன். எல்லாம் பில்டப்பு. மொத்தத்தில் நான் ஒரு காமடி பீசு. தயவு செஞ்சு யாருன்னு சொல்லு" என கேட்டேன். ஒரு வேளை அந்த ஸ்டீவ்ஜாப்ஸ் எனக்கு வேண்டப்பட்டவரா இருந்தா எப்படி பேஸ்புக்ல பதிவு போடுவது என்பது பற்றியே தான் என் சிந்தனை இருந்தது. "இந்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கானே ஸ்டீவ் ஜாப்ஸ்... நானும் அவனும் முள்ளும் மலரும் படம் பார்க்க போனப்ப கியூவிலே நிக்கும் போது போலீஸ்காரர் புட்டத்தில் போட்ட போடுல என் புட்டத்துக்கு பதிலே என்னை தள்ளி விட்டு அவன் வாங்கினான். இப்பவும் அவனை பின்பக்கம் தடவிப் பார்த்தா ராமர் அணிலுக்கு கோடு போட்ட மாதிரி அந்த தழும்பு இருக்கும். அப்படிப்பட்ட அவன் இன்னிக்கு போய் சேர்ந்துட்டான்" என பதிவு போட்டா சும்மா  லைக்கு அள்ளிகிட்டு போவும் என அல்ப்பமாக நினைத்துக்கொண்டேன்.


பின்ன அவன் சொன்ன பின்னர் தான் ஆப்பிள் என்பது போன், கம்பியூட்டர் பெயர் என்று. என்ன மாதிரி உலகமடா சாமி இது? இஞினியரிங் காலேஜ்க்கு முப்பாத்தம்மன் இஞினியரிங் காலேஜ் என வைக்கிறாய்ங்க. "கேரிஃபோர் புண்ணாக்கு மொத்த வியாபாரம்"ன்னும் வைக்கிறாங்க. "புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்"ன்னும் வைக்கிறாங்க. அது போல "ஆப்பிள்", "பேரிக்காய்", "நேந்திரம் பழம்"ன்னு எல்லாம்  கம்பியூட்டர் கம்பனிக்கு பெயர் எல்லாம் வைச்சு தொலைஞ்சா நான் எப்படி கண்டு பிடிக்க முடியும்.


அந்த பையன் கேட்டான். "அண்ணே எப்போதும் லேப்டாப் எல்லாம் வச்சிகிட்டு என்னவோ அடிச்சு கிட்டு இருக்கீங்கலே. அதான் ஆப்பிள் ஓனரை எல்லாம் தெரியுமோன்னு நினைச்சேன்" என சொன்னான். என்ன எழவுடா இது. லேப்டாப் எல்லாம் வச்சிருந்தா பெரிய மனுசனா? நான் ஒரு லோக்கலுடா லோக்கலு. எனக்கு அதிகபட்சமா தொழிலதிபர்னா மீனாட்சி சுந்தரம் மளிகை கடை தான், பெரிய எஜுகேஷன் இண்ஸ்டிட்யூட்னா ஔவையார் ஆரம்ப பள்ளி தான், பெரிய கம்பியூட்டர் நிறுவனம்னா பிரியா கம்பியூட்டர் ஜெராக்ஸ் கடை தான், அதிகபட்சமாக என் சுற்றுலா தளம் மாயவரம் பஸ்டாண்டு தான் என மனதில் நினைத்துக்கொண்டேன்.


அவன் போனதும் வந்து மெதுவாக டைப் அடிக்க தொடங்கினேன். "இந்த ஸ்டீவ்ஜாப்ஸ் இருக்காரே ஸ்டீவ்ஜாப்ஸ் ஒரு முறை தட்டி மெஸ் பத்தி நான் எழுதின பதிவை படிச்சுட்டு மாயவரம் வந்து அங்க மீன் குழம்பை பெனஞ்சு அடிச்சுட்டு " என  ஆரம்பித்தேன். அவரு ரேஞ்சுக்கு முள்ளும் மலரும் சரிபட்டு வராது என்பதால் "ஸ்டீவ்ஜாப்ஸ்ம்  தட்டி மெஸ் மீனும் மற்றும் டைட்டானிக்  படமும் " என தலைப்பிட்டு விறு விறுவென டைப்ப ஆரம்பித்தேன்....

                                                                   ==============

குறிப்பு: "வர வர உங்க பதிவு எல்லாம் பெருசா இருக்கு. படிக்க அலுப்பா இருக்கு. முன்ன மாதிரி சின்னதா எழுதுங்களேன். அரசியல் வேண்டாமே ப்ளீஸ்" என கேட்ட கோடானு கோடி(?) வாசக பெருமக்களுக்காக பழைய அபிஅப்பாவை தூசி தட்டி எழுப்பும் சின்ன முயற்சி மட்டுமே இந்த பதிவு:-))

July 8, 2012

2G வழக்கும், திரு.ஆ.ராசா அவர்கள் நேர்காணலும் பின்னே ஒரு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆன மாய பலூனும்!

2 G வழக்கு! இந்த வழக்கை நான் ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருபவன் என்பதாலும் இது ஒரு சித்தரிக்கப்பட்ட வழக்கு என நான் பல ஆதாரங்களை கொண்டு நம்பியதாலும் நான் இன்றைக்கு இதிலே இந்த வழக்கிலே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திரு ஆ.ராசா அவர்களின் நேர்காணல் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய போது கூர்ந்து கவனித்தேன். ஏனனில் இந்த வழக்கில் அக்டோபர் மாதம் 2010ல் தன் அமைச்சர் பதவியை திரு.ராசா அவர்கள் ராஜினாமா செய்து விட்டு வந்த பின்னர் "தி ஹிண்டு" பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த போது அவரது வாயால் சொன்னதை எழுத்தாய் பார்த்த பின்னர் இன்று தான் அவரது வாயால் "வாக்குமூலமாக" சொல்வது போல சொல்கிறார். அதனால்  அவர் என்ன சொல்கிறார் என்று கவனித்தேன்.

இந்த நேர்காணல் என்பது கிட்டத்தட்ட தமிழகத்தில் பல ஆயிரம் "உண்மையான" நடுநிலைவாதிகளை சிந்திக்க வைத்திருக்கும் என்றே நம்புகிறேன். நான் சிறிது நேரம் முன்னர் என் முகநூலில் ஒரு நிலைத்தகவல் வெளியிட்டேன். "புதிய தலைமுறை" தொலைக்காட்சி ஏன் இதை ஒளிபரப்ப வேண்டும்?" என கேட்டவர்களிடம் நான் "உப்பு தின்றவன் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். பொய்பரப்புரை செய்தவர்கள் தான் இதை ஒளிபரப்பி பாவம் கழுவிக்கொள்ள வேண்டும்" என பதில் சொன்னேன். அதையே திரு ராசா அவர்கள் தன் நேர்காணலில் "அங்கே சிறையில் தமிழில் பொதிகை தொலைக்காட்சி வரும். நான் வேறு சேனல்கள் கேட்ட போது அரசியல் கட்சி சாராத நடுநிலை தொலைக்காட்சி தான் தர இயலும் என சொல்லி 'புதிய தலைமுறை" தொலைக்காட்சி கொடுத்தார்கள். அதிலே கூட இது பற்றிய விவாதங்களில் எல்லாம் மெத்த படித்தவர்கள், பொருளாதார நிபுனர்கள், நான் மிகப்பெரிய அறிவாளி என நினைத்தவர்கள் கூட தவறாய் புரிந்து கொண்டு பேசினர். கட் ஆஃப் தேதியை முன்கூட்டியே முடித்து விட்டனர் என விஷயமே புரிந்து கொள்ளாமல் பேசினர்" என சொன்னார். பின்னர் அது பற்றி விளக்கினார். ஆக நான் சற்று முன்னர் வெளியிட்ட நிலைத்தகவல் போல இந்த நேர்காணலை வெளியிட்டதன் மூலமாக  உப்பு தின்ற புதியதலைமுறை தண்ணீர் குடித்தது. வழக்கு நடந்து கொண்டு இருக்கின்றது. அப்படி இருக்கும் போது அது பற்றி  பொதுவெளியில் பேசக்கூடாது என அழகாய் எல்லோரும் விலகி விடுவர். ஆனால் திரு.ராசா அவர்கள் அடிபடையில் ஒரு வழக்கறிஞராகவும் இருக்கும் காரணத்தால் 'விசாரனை முடிந்த' விஷயங்களை அழகாய் நேர்காணலில் விளக்கியும் சொல்லக்கூடாததை தவிர்த்தும் பேசினார்.ஒரு அழகான பேட்டியின் முத்தாய்ப்பாக கடைசி கேள்விக்கு ஒரு பதில்.... "நரகத்திலும் நரகம்"யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி சொன்ன போது சிரிப்பும் சிலிர்ப்பும் ஒருசேர வந்தது எனக்கு!

இப்போது நேர்காணல் பற்றி பார்ப்போம்......


முதல் கேள்வியே "நீங்கள் 13 ஆண்டுகாலம் மிக உயர்ந்த மத்திய அமைச்சர் பதவியில் எல்லாம் இருந்து விட்டு இப்போது 15 மாத காலம் சிறைவாசம் அனுபவித்தது சிரமமாக இல்லையா" என்கிற தொணியிலான கேள்வி. அதற்கு திரு.ராசா சொல்கிறார் "இல்லை. நான் சார்ந்த இயக்கம் திராவிடர்கழக - திராவிட முன்னேற்ற கழகத்தில் எனக்கான பயிற்சியிலேயே இதை எல்லாம் பயின்றவன் நான்". இதை எங்கே திமுக அவருக்கு பயிற்றுவித்தது? எந்த சிலபஸ்ல பயிற்சி கொடுக்கப்பட்டது என எடக்கு மடக்காக கேட்கும் ஆசாமிகளுக்கு அவருடைய பதில் "நான் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி படித்து படித்து பக்குவப்பட்டுவிட்டேன் என்கிறார். ஆமாம் அதிலே வரும் வாசகங்கள் ... அண்ணா சொல்கிறார் கலைஞரைப்பார்த்து "தண்டவாளத்தில் தலைவைத்துப்படு என்றாலும் அமைச்சர் பதவி ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாகவே பார்ப்பவர் தான் என் தம்பி கருணாநிதி".... பதில் வந்துவிட்டதா? திமுக என்னும் பல்கலைகழகத்தில் நெஞ்சுக்கு நீதி என்னும் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர் ஆ.ராசா அவர்கள் அந்த 15 மாதகாலம் ... எந்த டெல்லி வீதிகளில் சிவப்பு விளக்கு சுழல காவலர் காவலில் சென்று வந்தாரோ அதே டெல்லி மாநகரில் அதே போல சிவப்பு விளக்கு சுழல சுழல காவலர் காவலில் ... ஆனால் இது வேறு விதம்... கிட்ட தட்ட தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் நிலை போன்றதொரு நிலை. ஆனால் கலைஞரின் நெஞ்சுரம் திரு ராசாவுக்கும் நெஞ்சுக்கு நீதியால் பாய்ச்சப்பட்டதை சொல்கிறார். பெரியார் அவர்கள் சொன்ன வார்த்தையை கோடிட்டு காட்டுகின்றார் திரு.ராசா அவர்கள். "பொதுவாழ்க்கை என்று வந்த பின்னர் மான அவமானங்களை பற்றி கவலைப்பட்டால் பொதுவாழ்க்கையிலே செய்ய வேண்டிய தொண்டினை செய்ய முடியாமலே போகும்" என்ற பெரியாரியல் தத்துவத்தை நினைவு கூறுகின்றார்.

இதல்லாம் கேள்வி அல்ல. அடுத்தடுத்து வந்தது அணுகுண்டு கேள்விகள். அத்தனைக்கும் புரியும்படியும் தெளிவாகவும் பதில் சொல்கிறார் பாருங்கள்.

1.75 லட்சம் கோடி அரசுக்கு உங்களால் இழப்பாமே என்ற கேள்விக்கு ராசா அவர்கள் தெள்ளத்தெளிவாக ஒரு பதில் சொல்கிறார். \\ 1.75 லட்சம் கோடி இழப்பு என சி ஏ ஜி அதாவது மத்திய தணிக்கை குழு சொன்னது. நியாயமாக பார்த்தால் அந்த சி ஏ ஜி என்பது ஒரு தன்னதிகாரம் கொண்ட அதாவது தேர்தல் கமிஷன் போல இதுவும் ஒரு குழு. மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட குழு. அது அரசுக்கு தன் அறிக்கையை சமர்பிக்கலாம். அத்தனையே. ஆனால் அந்த குழுவால் அரசில் பாலிசி மேட்டர் அதாவது கொள்கை சார்ந்த முடிவுகளில் தலையிட முடியாது. கூடவும் கூடாது. சாதாரண மக்கள் கூட சென்போனை பயன்படுத்த வேண்டும் என்கிற ட்ராய் என்னும் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் எடுத்த முடிவின் மீது தனது ஆதிக்கத்தை சி ஏ ஜி செலுத்த முடியாது. மத்திய தணிக்கை குழு தனது அறிக்கையை பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவுக்கு அளிக்கலாம். அதை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் அந்த பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு மட்டுமே. ஆனால் அதை  சி ஏ ஜி அறிக்கையை அந்த குழு நிராகரித்து விட்டது.

 அதாவது "அரசன் தவறு செய்ய மாட்டான்" என்னும் நம்பிக்கை மாதிரி அந்த குழு தப்பு செய்யாது என்ற நம்பிக்கையில் ஏற்படுத்தப்பட்ட அந்த குழுவின் அறிக்கை எப்போது பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவால் நிராகரிக்கப்பட்டதோ அப்போதே அரசன் தவறு செய்து விட்டான் என்னும் நிலைக்கு வந்தாகிவிட்டது. பின்னரும் சி ஏ ஜி குழு அறிக்கையை அடிப்படை ஆதாரமாக கொண்டு பத்திரிக்கைகள் மற்றும் மற்றைய ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கிய போது அதையே ஆதாரமாக கொண்டு சி பி ஐ வழக்கு தொடுத்தது.

ஆனால் 1.75 லட்சம் கோடி என்னால் அரசுக்கு இழப்பு என சி பி ஐ வழக்கு பதிவு செய்ய முடிந்ததா என காட்டுங்கள். சரி போகட்டும், சி பி ஐ 30,000 கோடி இழப்பு என்றது. அதாவது நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதா என காட்டுங்கள். இப்படி எந்த சி ஏ ஜி குழு 1.75 லட்சம் கோடி என்றதோ அந்த தொகைக்கான நீதிமன்ற குற்றச்சாட்டு எங்கே உள்ளது என காட்டுங்கள். \\ இப்படி திரு ராசா அவர்கள் சொன்ன போது நடுநிலையாளர்கள் சிலர் "ஆமாவா?" என பெங்களூர் தமிழர்கள் மாதிரி மனசுக்குள் கேட்டுக்கொண்டு கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

1.75 லட்சம் கோடி என்பதை பற்றி அந்த நேர்காணலாளர் அதன் பின்னர் கேட்கவே இல்லை. அடுத்து "முதலில் வந்தவருக்கு முன்னுரிமை, ஏலம் கூடாது என நீங்க சொன்னதால இழப்பு ஏற்பட்டுச்சு. இல்லாவிடில் 3ஜி யை ஏலம் விட்டால் வரும் வருமானம் போல 2 ஜியையும் ஏலம் விட்டிருந்தால் வருமானம் வந்திருக்கும் என சொல்றாங்களே?" என கேட்ட போது....

"ஏலமுறை வேண்டாம், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை" என்னும் அரசு கொள்கையை வகுத்தவன் ராசா இல்லை, டாக்டர் மன்மோகன் இல்லை, டாக்டர் கலைஞர் இல்லை. 1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசில் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (ட்ராய்) வகுத்த அரசு கொள்கை இது. இதை அதன் பின்னர் அருண்ஷோரி, தயாநிதிமாறன் பின்னர் நான் என வரிசையாக அதையே பின்பற்றினோம். நான் பதவி ஏற்கும் 29 நாட்களுக்கு முன்னர் எனக்கு முன்பாக அந்த துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் அவர்கள் கூட அதே முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை நிலைப்பாட்டையே எடுத்தார். எடுத்து தான் ஆக வேண்டும். அது தான் அரசின் கொள்கை முடிவு என்னும் போது மாற்றி செய்ய இயலாது. அதில் என்னை குற்றம் சொல்வது ஏற்க இயலாதது" என்கிரார்.

இப்போது நேர்காணலை விடுங்கள். நான் பல இடங்களில் விவாதம் செய்யும் போது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு அதாவது உதாரணம் காட்டி எல்லாம் குற்றம் சுமத்துவர். அதாவது "சரிய்யா 1999ல் ஒரு வீடு பத்து லட்சம் ரூபாய்க்கு ஒருத்தன் விற்றான். அதையே பத்து வருஷம் கழிச்சு அதே வீட்டை பத்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வாயா? இப்போது அதன் மதிப்பு கோடி ரூபாய் ஆயிற்றே. எனக்கு முன்னால் இருந்தவன் விற்றான்  நானும் அதே விலைக்கு விற்றேன் என சொல்ல அந்த பதவிக்கு ஒரு எஸ் எஸ் எல் சி படிச்ச குமாஸ்தா போதுமே? எதற்காக ஒரு ராசா என்னும் அமைச்சர்" என கேட்பாங்க. அதீத புத்திசாலித்தனமான கேள்வியாக நினைத்துக்கொண்டு மற்றவர்களும் கைதட்டுவர்.

உதாரணம் எல்லாம் சரி தான். ஆனா அதன் உள்ளே போய் பார்க்கும் போது தான் விஷயம் தெரியும். ராசா அவர்கள் பதவிக்கு வந்த போது மொத்த கையிருப்பு ஸ்பெக்ட்ரம் என்பது 100 மெஹா ஹெர்ட்ஸ். அதிலே 35 சதம் ஏர்செல், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட ஐந்து கம்பனிகள் மட்டுமே பயன் படுத்தியும் , 30 சதம் இராணுவமும், மீதி 35 சதம் சும்மாவும் கிடந்தன. அப்போது அந்த 35 சதத்தை அந்த ஐந்து கம்பனிகளும் தான் விலை நிர்ணயம் செய்து விற்று வந்தன. ஆக நம் வீட்டு பொருளுக்கு யாரோ விலை நிர்ணயம் செய்து நம் வீட்டு மக்களுக்கே விற்கும் நிலை. இதை அவர்கள் ஒரு சிண்டிகேட் ஆக கூடிக்கொண்டு செய்து வரும் நிலையில் தான் ராசா அவர்கள் இராணுவம் பயன்படுத்தும் 30 சதத்தை தவிர மீதி இருக்கும் 65 சதத்தையுமே விற்க முன்வந்தார். அப்படி வரும் போது சந்தையில் போட்டி வரும். இந்த ஐந்து கம்பனிகளை தவிர மற்ற கம்பனிகளும் இதில் ஈடுபடும் போது போட்டியால் மக்களுக்கு சொற்ப பணத்தில் செல்போன் வசதி கிடைக்கும். அப்படி கிடைக்கும் பட்சத்தில் ஏழை மக்களும் இதனால் பயன் அடைவர். பயனாளிகள் எண்ணிக்கையும் கூடும் என்றெல்லாம் நினைத்தார். ஆனால் பத்து லட்சம் வீடு கதை எல்லாம் சும்மா டுபாக்கூர் வாதங்கள். ஏனனில் ராசா அவர்கள் தெளிவாக சொல்கிறார் தன் பேட்டியில்.... அவர்கள் அந்த ஐந்து கம்பனிகளும் சிண்டிகேட் அமைத்து கொண்டு செயல்படும் போது அவர்களுக்கு போட்டியாக மற்ற கம்பனிகளை  உள்ளே கொண்டு வந்து விட்டு மீதம் சும்மா கிடக்கும் அந்த 30 சதம் ஸ்பெக்ட்ரமையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் போது இந்த சிண்டிகேட் ஆசாமிகளுக்கு வயிற்றில் புளி கரைக்குது.

ராசா சொல்கிறார்.இந்த உதாரணம் பாருங்கள். ஒருத்தன் ஒரு காரை பத்து லட்சம் கொடுத்தும் வாங்கலாம், ஒரு கோடி ரூபாய்க்கு பென்ஸ் காரும் வாங்கலாம். ஆனால் லைசன்ஸ் என்பது சொற்ப விலைக்கு மட்டுமே தானே வாங்குவான். ஆக ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ்க்கான தொகை சிறியது. ஆனால் அதை வைத்து அவர்கள் வியாபாரம் எத்தனை விரிவா செய்கின்றரோ அந்த வரும் வருமானத்தில் அரசாங்கத்துக்கு பங்கு (ஷேர் ) உண்டு என்கிற உண்மையை அந்த வீடு - பத்துலட்சம் - இப்ப ஒரு கோடி என உதாரணம் காட்டுவோர் புரிந்து கொள்வது இல்லை என்கிறார். ஆக எத்தனை கம்பனிகள் அந்த ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தினாலும் அவர்களின் மறைவான பார்ட்னராக பங்குதாரராக அரசாங்கம் உண்டு. ஆக அந்த விற்பனை விரிவாக்கத்தினால் அரசுக்கு அதற்கான பங்கு வந்துவிடுகின்றது. இதிலே என்ன குறை? அதுவும் கூட 1999 தொலை தொடர்பு கொள்கையால் தான். இதிலே மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சரி ஊடக மகாராஜாக்கள் சொல்வது போல ஏலத்துக்கு விடுவதாக வைத்துக்கொண்டால் அதிக விலைக்கு ஏலம் கேட்பவர்கள் அதை எங்கே போய் சம்பாதிக்க வேண்டும்? மக்களிடம் தானே? அப்போது எப்படி பத்து பைசாவுக்கு போன் செய்ய இயலும்? இதை கொஞ்சமாவது சிந்திச்சு பாருங்களேன்.

சரி, இதை படிக்கும் மக்களே, நான் ஒன்று கேட்கிறேன். 2ஜியில் ஏலம் விடாதது தான் பிரச்சனை என்று சொல்லி 3ஜி ஏலத்தில் விட்டதால் அது அடித்தட்டு மக்களை சென்று சேர்ந்ததா? இல்லையே? ஏன்? மெட்ரோ சிட்டிகளில் இருப்பவர்கள் மட்டுமே மனிதர்களா? இதோ இன்னும் மயிலாடுதுறை என்னும் மிகச்சிறப்பான பாராளுமன்ற தொகுதியில் கூட வரவில்லை 3ஜி. ஏன்? அதையே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் பழைய 1999 கொள்கை நிலைப்பாட்டில் இருந்து செய்திருந்தால் இந்நேரம் 3ஜி எங்கள் ஊர் குப்பனும் சுப்பனும் கூட வைத்திருப்பான். ஏனனில் 1999 தொலை தொடர்பு கொள்கையில் "மக்கள் நலம்" என்னும் கந்தாயம் கலந்து இருந்தது. ஆனால் இந்த பிரச்சனையை சி ஏ ஜி ஏற்படுத்திய பின்னர் அரசாங்கம் பயந்து விட்டது. அதனால் "மக்கள் நலம்" புறக்கணிக்கப்பட்டு அரசும் ஒரு கார்பரேட் நிறுவனமாக ஆகிப்போய் பணம் பண்ணும் வஸ்துவாகிப்போய் இன்று எங்கள் ஊர் குப்பனும் சுப்பனும் பழையபடி பின் தங்கிவிட்டனர்  மெட்ரோ நகர மக்களை ஒப்பிடும் போது:-( இது சி ஏ ஜிக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கான அரசாங்கம் என்னும் அரசாங்கத்துக்கு உண்டான தோல்வியே!

இதே ராசா அவர்கள் கூட மே மாதம் 20ம் தேதி 2010ல் 3 ஜி ஏலம் விட்ட பின்னர் மகிழ்வுடன் தெரிவிக்கிறார். அதாவது அப்போதே இந்த 2ஜி ஏலம் விடாமல் போனதால் தான் அரசுக்கு இழப்பு என்று ஊடகங்கள் ஊதிக்கொண்டு இருந்த உச்ச நேரம். அதன் காரணமாக 3ஜி ஏலத்தில் விடப்பட்டது. அப்போது ராசா அவர்கள் அலைக்கற்றை ஏலம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 67,719 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது அரசு எதிர்பார்த்ததை விட அதிக தொகையாகும். இந்த பெரும் வருமானம் அரசுக்கு கிடைத்துள்ளதால், அத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் நன்கு கவனிக்கவும் 3ஜி யில் அரசுக்கு வருவாய் எத்தனை? ஆனால் 2ஜியால் வந்த வருமானம் எத்தனை? அதிலே மக்கள் நலம் எப்படி இருந்தது? 3 ஜி ஏலம் முறையால் எங்கள் பகுதிகள் பின் தங்கிவிட்டது. ஏனனில் இங்கே வரவில்லை 3ஜி தொழில்நுட்பம். ஏன்? ஏன்?  ( 3ஜி ஏலம் எடுத்தவர்கள் விபரம் : ஐடியா நிறுவனம் ரூ. 5,765 கோடிக்கு 11 பகுதிகளையும், ஏர் டெல் நிறுவனம் 12,290 கோடி ரூபாய்க்கு 13 பகுதிகளையும், ஓடாபோன் 11,617 கோடி ரூபாய்க்கு 9 பகுதிகளையும், ரிலையன்ஸ் 8,583 கோடி ரூபாய்க்கு 13 பகுதிகளையும், டாடா 5,864 கோடி ரூபாய்க்கு 8 பகுதிகளையும், எஸ் டெல் 337 கோடி ரூபாய்க்கு 3 பகுதிகளையும் ஏலத்தில் பெற்றுள்ளன.ஏலம் விடப்பட்ட பகுதிகளில் அதிகத் தொகையாக 3,317 கோடி ரூபாய்க்கு தில்லி பகுதியும், அடுத்தப்படியாக 3,247 கோடிக்கு மும்பை பகுதியும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன)
ஆனால் ஏல முறை இல்லாமல் போட்டி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என இருப்பின் அப்படி உரிமை அளிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஒரு மறைமுக பங்குதாரர் என சொல்லி இருப்பின் அதாவது 2ஜி யைப்போல.... இந்நேரம் இந்தியா முழுமைக்கும் அந்த திட்டம் குக்கிராமம் வரை சென்று சேர்ந்திருக்கும்.
ஒரு சி ஏ ஜி அறிக்கையை கொண்டு ஒரு குற்ற வழக்கு போடலாம் என்னும் முன்னுதாரணத்தை இந்த 2 ஜி வழக்கு ஏற்படுத்தி கொடுத்த பின்னர் நாளை என்ன நடக்கும்? கேஸ் சிலிண்டர்காக, பெட்ரோலுக்காக, விவசாயத்துக்காக, மின்சாரத்துக்காக, அரிசிக்காக கொடுக்கும் எல்லா சப்சிடியிலும் அரசுக்கு இழப்பு உண்டு தான். அதை எல்லாம் சி ஏ ஜி குற்றம் சொல்லும் தான். நாளை ஒரு பொதுநல வழக்காக இந்த 2ஜி வழக்கு சி ஏ ஜி அறிக்கையின் படி ஏற்படுத்தப்பட்டதோ அதை முன்னுதாரனமாக காட்டி தொடரப்பட்டால் மக்கள் நிலை என்ன ஆகும்? அல்லது எந்த அரசாங்கமாவது மானியம் கொடுக்கவோ அல்லது மக்கள் நலனை சிந்திக்கவோ செய்யுமா? இது ஏழைகளின் சார்பாக வைக்கப்படும் கேள்வி!

எப்படி ஒரு சி ஏ ஜி அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு சித்தரிக்கப்பட்டதோ அப்போதே ராசா அவர்கள் வழக்கில் அவர்களை இழுத்து கொண்டு வந்து மேற்படி கேள்விகளை அவர்களை நோக்கி கேட்டால் என்ன ஆகும்? அதை தான் ராசா நேர்காணலில் சொன்னார். இழுப்பேன்... நீதிமன்றத்திடம் அதற்கான அனுமதி கேட்பேன் என்றார். கேளுங்கள் ராசா அவர்களே, கேளுங்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. அய்யா சி ஏ ஜி பெருமகன்களே, அரசாங்கம் என்பது வேறு. மக்கள் நலம் சார்ந்தது என்பதை புரிய வையுங்கள் ராசாவே! சரி மீண்டும் நேர்காணலுக்கு வருவோம்!

அடுத்து ஒரு கேள்வி! "நிங்கள் ஸ்வான், யூனிடெக் போன்ற கம்பனிகளுக்கு  சாதகமாக செயல்பட்டதாகவும் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்பதில் கட் ஆஃப் தேதியை முன்கூட்டி முடித்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றதே" என்னும் ஒரு அணுகுண்டு கேள்வி!

அதற்கு அழகாக பதில் சொல்கிறார். "முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் நிலைப்பாடு என்னுடையது அல்ல என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். அது போல உங்கள் (புதியதலைமுறை) தொலைக்காட்சியில் கூட ஒரு மெத்தப்படித்த பொருளாதார நிபுனர் கூட ராசாவீட்டுக்கு முதலில் போனவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்பது போல பேசினார். நான் சிறையில் இருந்த போது அதைப்பார்த்தேன். இது என்ன திருவிழாவில் மிட்டாய் வாங்கும் விஷயமா? இல்லை. அது போல அல்ல. ஸ்பெக்ட்ரம் விற்பனைக்காக மனு செய்ய சொல்லப்பட்ட கடைசி தேதி என்பது மாற்றப்படவில்லை. அதை மாற்றினால் மட்டுமே தவறு. ஆனால் ஐநூத்தி சொச்சம் மனு வந்தது. ஆனால் இருக்கும் ஸ்பெக்ட்ரம் அளவு 65 மெகாஹெட்ஸ் மட்டுமே. அதனால் அந்த ஐநூத்தி சொச்சம் பேரில் தகுதியான அதாவது ட்ராய் வகுத்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மனு செய்த  கம்பனிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனாலும் வந்த மனுவில் ஏ, பி, சி, டி என சீனியாரிட்டி போடப்பட்டது. அதிலே கூட ஏ இருக்கும் இடத்தில் டி யையும் டி இருந்த இடத்தில் சி யையும் மாற்றினோம் தவிர ஒட்டு மொத்தமாக இசட்டை கொண்டு வந்து எல்லாம் முதலில் உட்காரவைக்கவில்லை. ஆனால் அப்படி மாற்றியமைக்கான சரியான காரணங்கள் கூட எங்களிடம் உண்டு. அது சம்மந்தமான விஷயம் இப்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நான் அங்கே ஏன் மாற்றினோம் என்பதற்கான காரணம் சொல்வேன். இதற்கு மேல் இங்கே இப்போது சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்ற விவகாரம். அதை மீறி இங்கே சொல்லக்கூடாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் முதலில் விண்ணப்பித்த வர் முதலில் பரிசீலிக்கப் படுவதால், முதலில் வந்த வருக்கு முதலில் சேவை என்ற கொள்கை கடை பிடிக்கப்படும் வரை, கடைசி தேதி என்பது அர்த்தமற்றது. அலைக் கற்றை இருப்பின் தோராய மதிப்பீடு மற்றும் 2009 செப்டம்பர் 25 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட வரை யில் பெறப்பட்ட விண் ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்தத் தேதி வரையில் பெறப் பட்ட விண்ணப்பங்களின் முதல் தொகுதி பரிசீலிக் கப்பட்டது. ஏதாவது விண்ணப்பம் புறக்கணிக் கப்பட்டதா அல்லது பின் னுக்குத் தள்ளப்பட்டதா என்பதுதான் கேள்வி.மீதமுள்ள விண்ணப் பங்கள் அலைக்கற்றை இருப்பைப் பொறுத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீத முள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்பது ஊட கத்துறையில் உள்ள சில தவறான கருத் தாகும் என்கிறார் ஆ.ராசா. அவர் சொன்னதை எனக்கு சரியாக இங்கே சொல்ல தெரியவில்லை எனினும் அந்த நேர்காணலை பார்த்தவர்கள் அதிலிருக்கும் நியாயத்தை உணர்வார்கள் என்றே நம்புகிறேன்.

அடுத்ததாக ஒரு கேள்வியில் 1650 கோடி ரூபாய்க்கு உங்களிடம் அதாவது அரசாங்கத்திடம் வாங்கி விட்டு அதை பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு விற்ற கம்பனிகள் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்னும் கேள்வி. இது பரவலாக எல்லோருமே ஜூவி போன்ற காழ்ப்புணர்வு பத்திரிக்கை படிக்கும் மேதாவிகள் கேட்கும் கேள்வி. அதற்கு ராசா அவர்கள் " ஆமாம் உண்மை தான். எங்களிடம் 1650 கோடி கொடுத்து ஸ்பெக்ட்ரம் வாங்கியவர் அதை வைத்து மணியாட்டி கொண்டா இருக்க முடியும்? ஒரு டவர் போட 60 லட்சம் செலவாகும். சென்னையை மட்டுமே எடுத்துக்கொண்டால் குறைந்த பட்சம் 200 டவர் போட வேண்டும். தமிழ்நாடு முழுமைக்கும் எத்தனை ஆகும்? இந்தியா முழுமைக்கும் எத்தனை ஆகும்? 1650 கோடி கொடுத்து எங்களிடம் வாங்கியவன் இன்னும் சில பங்குதாரர்களை சேர்த்து கொள்வதையோ, பங்கு வணிகம் மூலமாக பணம் திரட்டுவதையோ ட்ராய் அல்லது நாங்கள் செய்யவில்லை. அது நிதித்துறை அவர்களுக்கு கொடுத்த அனுமதி. இதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அது ஒரு லைசன்ஸ்தாரரின் உரிமை என நிதித்துறை நினைக்கும் போது நாங்கள் எதும் செய்ய இயலாது" என்கிறார்.

மேலும் அந்த நிருபர் " தொலைத்தொடர்பு துறையில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு கொடுத்தது ஏன்?" என்ற கேள்வி கேட்க அதற்கு ராசா அவர்கள் "இதற்கு தர்க்க ரீதியாக கேட்டால் தர்க்க ரீதியாக பதில் சொல்லலாம். சட்ட ரீதியாக கேட்டால் சட்ட ரீதியாகவும் சொல்லலாம்" என சொல்லிவிட்டு "ட்ராய் அமைப்பின் சட்ட விதிகளிலோ அல்லது எந்த அரசாங்க சட்ட விதிகளிலோ முன் அனுபவம் உள்ள ஒருவர் தான் அந்த தொழில் செய்ய வேண்டும் என இருக்கும் ஒரு வரியை காண்பியுங்கள்" என சட்டரீதி பதிலை சொல்லிவிட்டு "அப்படி பார்த்தால் ஸ்பெக்ட்ரம் என்னும் விஷயமே இந்தியாவுக்கு புதியது என்னும் போது பி பி எல், டாட்டா, அம்பானி, பிர்லா என  யாருமே  கூட அந்த துறையில் முன் அனுபவம் இல்லாதவர்கள் தான் " என தர்க்க ரீதியாக பதில் சொல்கிறார். இதிலே நான் சொல்வது என்னவெனில் நடுநிலைவாதிகளே, மெத்த படித்த மேதாவிலாசம் கொண்டோரே, முன் அனுபவம் இல்லாமல் முதலிரவு நடத்தி அஸ்வினி முதல் ரேவதி முதல் 27 குழந்தை பெற்றுக்கொள்ளும் கிருஷ்ண பரமாத்மாவின் தோழர் குசேலரை ஒத்துக்கொள்லும் நீங்கள் தொலைதொடர்பு வேலைக்கு மாத்திரம் ஏன் முன் அனுபவம் பின் அனுபவம் என கேட்கின்றீர்கள்?

இப்படியாக எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சரவெடியாக வெடிக்கும் போது நேர்காணளாலர் கேட்கிறார்... "சரி நீங்கள் ஜாமீன் வாங்க ஏன் இத்தனை காலம் எடுத்து கொண்டீர்கள்?" அதற்கு ராசா அவர்கள் " ஸ்பெக்ட்ரம் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் என்னும் மாயவலை மாய பலூன் பார்த்து உச்சநீதிமன்றமே அதிர்வாகி விட்டது. அதனால் தான் திருமதி. கனிமொழி உட்பட பலரும் ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், பின்னர் உச்சநீதிமன்றம் எல்லாம் சென்ற போது அவர்கள் "தொகை பெரியது" என காரணம் காட்டினர். நான் இதற்கிடையில் வழக்கை சந்தித்து அந்த மாயபலூன் காற்றினை பிடுங்கி விடும் வேலையை சாட்சிகள் விசாரணை போன்று வழக்கில் ஈடுபட ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக காற்றை இறக்கிவிட்டு பின்னர் அதை சாதாரண வழக்காக நீதிமன்றம் நினைக்க ஆரம்பித்த பின்னர் ஜாமீன் கேட்டேன். கிடைத்தது" என சொன்னார். ஆக ஸ்பெக்ட்ரம் காற்று இறங்கி விட்டது.

பின்னர் கட்சி தலைமை மற்றும் தலைவர் மேல் அவர் வைத்திருக்கும் பக்தி, கலைஞர் இவர் மேல் கொண்ட நம்பிக்கை எல்லாம் பேசினார். கடைசியாக ஒரு கேள்வி... "நீங்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஆகா இவர் நமக்கு உதவவில்லையே, பழிவாங்கி விட்டாரே என்றெல்லாம் யாரையாவது குறிப்பிட இயலுமா?" என்னும் கேள்விக்கு ராசா அவர்கள் " இல்லை.. யாரும் எனக்கு வந்து உதவி செய்யனும் என நான் நினைக்க இயலாது. இது சிவில் வழக்கு இல்லை. ஒரு பிரம்மாண்டமான குற்றவியல் வழக்கு என்மீது. நான் மட்டுமே இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும். என்னை நான் தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்" என சொல்லிவிட்டு ஒரு அறிஞர் எழுதிய தத்துவத்தை சொல்கிறார் ஆங்கிலத்தில். "அதாவது  ஒருவருக்கு ஒரு பிரச்சனை பற்றிய நியாயங்கள் உண்மைகள் தெரிய வந்தும் அவர் நான் நடுநிலையாக இருக்கிறேன் என நினைத்து வாய்மூடி மௌனியாக உண்மையை மறைத்தார் எனில் அவருக்கு நரகத்திலும் கூட மோசமான ஒரு நரக பகுதி தான் கிட்டும். அஃப்கோர்ஸ் எனக்கு சொர்கம் நரகம் மீது எல்லாம் நம்பிக்கை இல்லாவிடினும் அந்த அறிஞர் சொன்னதை சொல்கிறேன்" என சொல்லிவிட்டு சிரிக்கின்றார். திரு.ராசா அவர்களின் இந்த பதில் எத்தனை பேருக்கு வயிற்றில் பயப்பந்தை உருள செய்திருக்குமோ என தெரியவில்லை. 

07.07.2012 இரவு 9 மணி முதல் பத்து மணி வரை இந்த நேர்காணல் புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகியது. நான் இரவு 11 மணி முதல் இந்த பதிவை டைப் செய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனால் எனக்கு மின்சாரம் நேற்று இரவு 11.30 முதல் 12.30 வரை நிறுத்தம் ஆகியது. பின்னர் மீண்டும் அடிக்க ஆரம்பித்தேன். பின்னர் 1.15க்கு நின்றுவிட்டது. சரி காலையில் எழுந்து அடிக்கலாம் என இருந்த போது 7 மணி முதல் 9 வரை மின்சாரம் இல்லை. இப்போது கூட எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் போய்விடும் நிலை தான். ஆனால் எனக்கு செல்போன் தடை இல்லாமல் கிடைக்கின்றது. இதே கட்டுரையை ஒரு அரை மணி நேரம் நான் என் செல்போன் வழியாக ஒரு சிலருக்கு படித்து காட்டலாம். ஆனால் ஆயிரம் பேர் படிக்க என்ன செய்யலாம்?

வேறு வழி இல்லை. கனம் நீதிமான்களே! மாண்புக்குரிய மத்திய அரசே, இந்த வழக்கு முடிந்த பின்னர் திரு.ஆ.ராசா அவர்களை மத்திய மின் துறை அமைச்சர் ஆக்குங்கள். தடையில்லா மின்சாரமும், அதுவும் குறைந்த விலை மின்சாரமும் கிடைக்க செய்வார் என்னும் நம்பிக்கை இருக்கின்றது. இன்று மதியம் மீண்டும் 1 மணிக்கு ( 08.07.2012) அதே புதியதலைமுறை தொலைக்காட்சியில் மீள் ஒளிபரப்பாகின்றது அந்த நேர்காணல். பாருங்கள். நான் சொல்வது உண்மை என புரியும்!

July 6, 2012

04.07.2012 - இன எழுச்சி நாள் - திமுக சிறை நிரப்பும் போராட்டம் - மயிலாடுதுறையில் இருந்து ஒரு பார்வை!



ஜூலை நான்காம் நாள், 2012. இந்த நாளை "இன எழுச்சி நாள்" என்ற பெயரில் இனி கொண்டாடலாம். இதுவரை திராவிட முன்னேற்ற கழகம் நடத்திய போராட்டங்களில் மிக மிக அதிக அளவில் திமுகவினர் கலந்து கொண்டு ஒரு மாபெரும் எழுச்சியை காட்டினர் என்றால் அது இந்த போராட்டம் மட்டுமே என கர்வமுடன் நாம் சொல்லிக்கொள்ளலாம்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் மற்றும் ஒன்றிய திமுக ஆகிய இரண்டும் சேர்ந்து மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் - ஆர்பாட்டம் என கட்சி தலைமை அறிவித்து இருந்தது. போராட்டத்துக்கு நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் அவர்களும் ஒன்றிய செயலர் மூவலூர் மூர்த்தி ஆகியோர் தலைமை ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.  3. 07.2012 மதியமே திமுகவின்  முக்கிய புள்ளிகள் தங்கள் கைபேசியை எல்லாம் வீட்டில் விட்டு விட்டு தலைமறைவாகினர். நான்காம் தேதி காலை 9 மணிக்கு திமுக அலுவலகமான "அண்ணா பகுத்தறிவு மன்றத்தில்" கூடுவது என ஏற்கனவே பல்வேறு தெருமுனைக்கூட்டங்கள் வாயிலாக தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை இல்லை என நான்காம் தேதி காலை 4 மணிக்கு தெரிந்த பின்னர் அவரவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து குளித்து முடித்து சிறைக்கு தேவையான மாற்று உடைகளை எடுத்து தயாராக வைத்து விட்டு ஒரு திமுக கொடியை மட்டும் கையில் எடுத்து கொண்டு "அண்ணா பகுத்தறிவு மன்றம்" நோக்கி நாலா பக்கம் இருந்தும் சாரை சாரையாய் பயணிப்பதை பார்ப்பதே அழகாய் இருந்தது.

நான் இரண்டு நாட்கள் முன்பாகவே என் மாற்று உடைகள் எல்லாம் தயார் நிலையில் வைத்து விட்டு காலை என் குழந்தைகள் பள்ளி சென்ற பின்னர் மெதுவாய் என் மனைவியிடம் அனுமதி வாங்குவது போல கேட்டேன். "சரி போய் வாங்க, மாமா, மாமியிடம் சொல்லிட்டு போய்வாங்க" என சொல்ல சின்ன ஆச்சரியத்துடன் அங்கிருந்து விடைபெற்று தம்பி வீட்டுக்கு வந்தேன். அம்மா மட்டும் இருக்க அப்பா எங்கே என கேட்டேன். "காலைல இருந்து அப்பாவை காணும். வண்டியையும் எடுத்து போகலை. ஒரு மார்கமாவே இருந்தாங்க" என அம்மா சொல்ல நான் அம்மாவிடம் "எதுனா சண்டை போட்டீங்களா அப்பா கிட்டே?" என் கேட்டேன். அம்மா "அதல்லாம் இல்லியே, ஒரு சண்டையும் இல்லையே" என சொல்ல சரி வந்துடுவாங்க, நான் போராட்டத்துக்கு போய் வருகிறேன் என சொல்ல அதற்கு அம்மா "ஜாக்கிரதையா போய்ட்டு வா" என சொல்ல அங்கிருந்து நடந்தே மயிலாடுதுறை நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பயணப்பட்டேன்.இடையில் ஹாங்காங்கில் இருந்து ஒரு சகோதரி போனில் வாழ்த்து சொன்னாங்க. நன்றி சொலிவிட்டு நடந்தேன். வழி நெடுகிலும் போலீசாரே முழுக்க முழுக்க தென்பட்டனர். "ஸ்ட்ரைகிங் ஃபோர்ஸ்" எங்கும் நிரம்பி வழிந்தது. அதை எல்லாம் பார்த்து கொண்டே "அண்ணா பகுத்தறிவு மன்றம் நோக்கி வந்தேன்"

அங்கே வாசலில் நகரச்செயலர் அண்ணன் குண்டாமணி முன்னாள் ச.ம.உ ஜெகவீரபாண்டியன், முன்னாள் ச.ம.உ சத்தியசீலன், ஒன்றிய செயலர் அண்ணன் மூவலூர் மூர்த்தி ஆகியோர் இருந்தனர். உள்ளே போங்க என அவர்கள் சொல்ல, உள்ளே வந்து பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. என் அப்பா முன்வரிசையில் அமர்ந்து "உறுதி மொழி" பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்து கொண்டு இருக்க அவர்கள் கையில் மாற்று உடைகள் மற்றும் மாத்திரைக்கான பை இருந்தது. நான் மெதுவாக வாசலுக்கு வந்து நகரச்செயலர் குண்டாமணி அண்ணனிடம் வந்தேன். என் பார்வையை புரிந்து கொண்ட அவர் " கவலைப்படாதே, ஆர்வமா வந்துட்டாங்க. ஊர்வலம் வரட்டும். பின்ன வீட்டுக்கு ஒருவர் போதும் என சொல்லி புரிய வச்சு அனுப்பிடுவோம்" என சொன்னார்.

கொஞ்சம் கொஞ்சமாக கூடிய கூட்டம் பத்து மணிக்கு மன்றம் நிரம்பி சாலையை தாண்டி ஐயப்பன் ஹோட்டல் வரை நின்றது. மிகச்சரியாக பத்து மணிக்கு போராட்ட ஊர்வலம் தொடங்கியது. கொக்கரக்கோ சௌமியன், சரபோஜிராஜன் ஆகியோர் இணையத்தில் உடனடி செய்திகளை அப்டேட் செய்ய வசதியாக ஊர்வலத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டும், வீடியோவாக எடுத்துக்கொண்டும் வந்தனர்.

வர வர வர வர வரட்சியாம்!
தஞ்சை தரணி மிரட்சியாம்!
குளுகுளு குளுகுளு குளிர்சியாம்!
கொடநாடு குளிர்சியாம்!
இங்கே கும்பி காயும் வேளையிலே!
அங்கே கும்மாளமாம் மலையிலே!

பாலின் விலை ஏறியதே!
பச்சை குழந்தை கதறியதே!
மாற்றம் வேண்டும் என்றோரே!
இந்த மாற்றம் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

பஸ் கட்டணம் பறக்குதே!
மின் கட்டணம் சுடுகிறதே!
மாற்றம் வேண்டும் என்றோரே!
இந்த மாற்றம் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இப்படியாக போராட்ட வாசகங்கள் முழங்க முழங்க போராட்டத்தின் முதல் வரிசை  பியர்லெஸ் தியேட்டர் வாசலை அடைந்த போது போராட்டத்தின் கடைசி வரிசை கச்சேரி சாலையில் இருந்தது. நகர் மன்ற தலைவர் பவானி சீனிவாசன் அவர்களோடு 25 மகளிர் முன்வரிசையில் பீடுநடை போட அரசினர் மேல்நிலைப்பள்ளி வாசலை கடந்து கூட்டம் பட்டமங்கலத்தெருவில் நுழைந்தது. அதே தெருவின் கடைசியில் தான் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது.

மெதுவாய் இருவண்ண கொடிக்கூட்டம் அசைந்து அசைந்து வட்டாச்சியர் அலுவலகம் அடைந்த போது நான் வந்த இடம் "வாழ்க்கை திருமண மண்டபம்". பின்னர் போலீசாருடன் குண்டாமணி, மூவலூர் மூர்த்தி, சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், வக்கீல் சீனுவாசன், பவானி சீனிவசன் ஆகியோர் ஏதோ பேச நடுவரிசையில் இருந்த எனக்கு அதல்லாம் என்ன வென்று தெரியவில்லை. பின்னர் கொஞ்சம் கூச்சலும் குழப்பமுமாக இருக்க அந்த வாழ்க்கை திருமண மண்டபம் திறக்கப்பட்டு அதை சுற்றிலும் போலீஸ் அரண் அமைக்கப்பட்டது. பின்னர் போலீசார் ஒரு ஒரு தொண்டர்களையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டே "உள்ளே" அனுப்பினர். திமுக கொடிகள் வாசலிலேயே வைக்கப்பட சொல்லப்பட்டது. ஒன்றியத்தில் இருந்து வந்தவர்கள் எல்லோர் கையிலும் மாற்று உடை பைகள் இருந்தன. ஆனால் நகரத்தில் இருந்து வந்தவர்கள் ரிமாண்ட் செய்யும் போது உடைகள் இருக்கும் பையை நீதிமன்றத்துக்கு எடுத்து வர சொல்லலாம் என நினைத்து எடுத்து வரவில்லை.

பின்னர் ஒட்டு மொத்த போலீசாரும் மண்டபத்தில் குவிக்கப்பட்டு பின்னர் மண்டபம் பூட்டப்பட்டது. கிட்ட தட்ட எல்லோர் கையிலும் செல்போன் இருந்தமையால் எல்லோரும் வெளியே இருந்த தனக்கு தெரிந்தவர்களிடம் "தளபதி கைதாகிவிட்டாரா? கனிமொழி கைதாகிவிட்டாரா? இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் கைது? என்ற விபரம் கேட்டுக்கொண்டு இருக்க இங்கே போலீசார் மைக், ஸ்பீக்கர், வரிசையாக அவர்களுக்கு டேபிள், சேர் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொண்டிருக்க நகர செயலர் அனைவருக்கும் வெளியே இருந்து தேனீர் மற்றும் பிஸ்கட் ஆகியவை ஏற்பாடு செய்தார்.

ஒரு ஒரு உடன்பிறப்புகளும் தங்களுக்கு ரிமாண்ட் செய்தால் எத்தனை நாள் சிறை என்பது பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தங்களுக்கு ஒத்த அலைவரிசை கொண்ட நண்பர்களுடன் சிறு சிறு குழு அமைத்துக்கொண்டனர். நான் என் பால்ய சினேகிதனும் கவுன்சிலருமான அசோக்குமார் மற்றும் என் வீடு எதிரே இருக்கும் சந்திரன் என்னும் நண்பர்களுடன் மூவரும் தனி குழுவாகினோம்.

இதிலே ஒன்றியத்தில் இருந்து வந்த ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் அவரவர்கள் அவரவர் கிராம குழுக்களுடன் சேர்ந்து தனி குழுவாக ஆனதுடன் மிக ஒற்றுமையாக ஒதுங்கி தனித்தனியாக அமர்ந்தனர். தரங்கம்பாடி அருகே "ஒழுகை மங்கலம்" என்னும் ஊரில் மாரியம்மன் கோவில் உள்ளது. அதிலே வருடா வருடம் விழா நடக்கும். அந்த கோவிலை சுற்றிலும் முந்திரி மரங்கள் இருக்கும். ஒரு ஒரு குழுவாக ஒரு ஒரு மரத்தடியில், எடுத்து வந்த தார்ப்பாயை போட்டு ஆண்கள் வட்டமாகவும் நடுவே பெண்களும் அமர்ந்து கொண்டு அந்த மரத்தடி அந்த இரண்டு நாட்கள் அவர்களுக்கு பட்டா போட்டு கொடுத்த மாதிரி இருப்பர். அது போல நான் பலமுறை அந்த திருமண  மண்டபத்துக்கு போய் இருக்கிறேன். அந்த மண்டபத்தில் எந்த இடங்கள் எல்லாம் பயன்பாட்டில் இருக்காதோ அந்த இடங்கள் எல்லாம் கூட அந்த சிறு சிறு குழுக்களால் சுத்தம் செய்து கொள்ளப்பட்டு "இது எங்க ஏரியா" என்பது போல வட்டமடித்து அமர்ந்து கொண்டனர். ஒரு வேட்டி முனையை கிழித்து கொடி போல கட்டி அவர்கள் போட்டு வந்த "சலவை" சட்டையை அதில் போட்டுவிட்டு பனியன் வேஷ்டியோடு பையை தலைக்கு வைத்து கொண்டு படுத்தனர். (சட்டை கசங்கி விடக்கூடாதாமாம்) "திமுக தொண்டர்கள் அதிர்ப்தி, சிறைக்கு செல்ல மாட்டோம் என அடம்" என பொய்செய்தி போட்ட கோயபல்ஸ்கள் இதை எல்லாம் பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

இந்த இடத்தில் இணையம் வழி பிரச்சாரம் செய்யும் நம் மக்கள் பற்றி சொல்ல வேண்டும். ஒரு அபாரமான உழைப்பு அவர்களிடம். திருவாரூரில் இருந்து அஜ்மல், கன்யாகுமரியிலிருந்து பிரின்ஸ்சாமுவேல் என்கிற இளவரசன், கொக்கரக்கோ சௌம்யன், சரபோஜிராஜன், வைரமுத்து, சூர்யா பார்ன் டு விண், டான் அசோக், சபேசன், அருள்பிரகாசம் அய்யா, தோழர் திராவிடப்புரட்சி, அண்ணன் சினம்கொண்டான், ஹாங்காங் அன்சாரி அண்ணன், கத்தார் சுல்தான் இப்ராகிம், முகமது மொய்தீன், புரூனை அபுல்பசர்,அபுரய்யான்,அல்காதிர் என எல்லோரும் சிறையில் இருக்கும் எல்லோரையும் போனில் தொடர்பு கொண்டு "கள நிலவரம்" உடனே உடனே இணையத்தில் பரப்பி "நட்ட நடு செண்டர்கள்" என அன்பாக நம்மாள் நக்கல் செய்யப்படும் கூட்டத்தை கிலி பிடிக்க செய்து கொண்டு இருந்தனர்.

எந்த எந்த ஊரில் எத்தனை எத்தனை பேர் கைது என்னும் விபரத்தை எங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க தெரிவிக்க அந்த செய்தி வெளியே தொலைக்காட்சி வழியே செய்தி வரும் முன்னமே எங்களுக்கு வந்து சேர நாங்க அதை அங்கே பகிர... வாவ்... வாட் எ நெட் ஒர்க்... நம்மவர்கள் .... இதே நம்மவர்கள் 2011 மே 13க்கு பின்னர் ஏற்பட்ட இணைய எழுச்சிக்கு பின்னர் இந்த இடைப்பட்ட ஒரு வருட காலத்தில் திமுகவின் இணைய வளர்ச்சி என்பது எப்படி பிரம்மாண்டமாக அதி பிரம்மாண்டமாக இன்று வளர்ந்து நிற்கின்றது என்பதை நினைக்கும் போது நெஞ்சம் நிறைந்து இருக்கின்றது.

இதே இணையத்தின் வழி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நம் மக்களில் பலர் "களப்போராட்டத்திலும்" கலந்து கொண்டு அங்கே கம்பிகளுக்கு பின்னால் நடக்க இருக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் நம் இணைய மற்ற உடன்பிறப்புகளுக்கு சொல்ல வேண்டும் அதை அவர்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் யாரும் யாரிடமும் திட்டம் எல்லாம் போட்டுக்கொள்ளவில்லை. எல்லாம் தானாக நடந்தது.

இங்கே போலீசார் தனி லெட்ஜர் போட்டு எங்கள் எல்லோர் கைரேகை (வலது, இடது கை) உருட்டியும், அப்பா பெயர், மனைவி, குழந்தைகள் பெயர், வயது, வீட்டு முகவரி எல்லாம் லெட்ஜரில் எடுதிக்கொண்டும், அதே நேரம் இணைய இணைப்பு வழியாக இதே விபரங்களை ஒரு கஸ்டமைஸ்டு ப்ரொக்ராம் வழியாக பதிவு செய்து அனுப்பிக்கொண்டும் இருந்தனர். ஒரு பெரிய அழகான மீசை, ஒட்ட வெட்டப்பட்ட கிராப் தலை, விரைப்பான தேகம் கொண்ட ஒரு அதிகாரி எங்களை ஒரு சின்ன வீடியோ கேமிராவால் தனித்தனியாக படம் பிடித்து கொண்டு இருந்தார். அவர் சீருடை அணியாமல் சாதாரண பேண்ட், சட்டை போட்டுக்கொண்டதால் அவர் உளவுத்துறை அதிகாரி என அங்கிருக்கும் யாருக்கும் தெரியாமலே போனது:-)  கிட்ட தட்ட மதியம் 1 மணி ஆன போது போலீஸ் தரப்பு உணவு வர கொஞ்சம் தாமதம் ஆகுமே என்று நகர திமுக சார்பாக சாம்பார் சாத பொட்டலங்கள் வரவழைக்கப்பட்டது. பின்னர் போலீசார் உணவும் வந்தது. பின்னர் மதியம் இரண்டு மணிக்கு எல்லாம்  போலீசார் உள்ளே இருக்கும் அனைவரின் விபரங்கள் எல்லாம் சேகரித்த பின்னர் கிட்ட தட்ட மண்டபத்தில் ஒரு வித அமைதி நிலவியது. பின்னர் போலீஸ் தரப்பில் இருந்து "ரிமாண்ட் செய்ய போகிறோம். பேருந்துக்காக காத்திருக்கிறோம்" என சொல்லப்பட அப்போது போனில் கூப்பிட்ட யுவகிருஷ்ணாவுக்கு  விபரம் சொன்னேன். அதற்குள் "மயிலாடுதுறையில் ரிமாண்ட்" செய்கிறார்கள் என செய்தி பரவியது. நான் என் தம்பி கொக்கரக்கோ சௌம்யனுக்கு போன் செய்து விபரம் சொன்னேன். தோழர் தமிழ்குரல் அவர்கள் கன்யாகுமரியில் இருந்து அங்கே அனேகமாக ரிமாண்ட் இல்லை என சொன்னார். என் அக்கா பையனுக்கு போன் செய்டு என் மாற்று உடைகள் எடுத்து வர சொன்னேன். அது போலவே மாலை நான்கு மணிக்கு மாற்று உடைகள் வந்து விட்டன எல்லோருக்கும். பேருந்துகளும் மண்டப வாசலுக்கு வந்து விட்டன. கிட்ட தட்ட எல்லோரிடமும் "திருச்சி சிறையில் அவைலபிலிட்டி இருப்பதாக செய்தி வந்துள்ளது. அனேகமாக திருச்சியாக இருக்கலாம்" என போலீசார் சொல்ல நாங்களும் எங்கள் மாற்று உடைகளை வாங்கி கொண்டு , கொண்டு வந்தவர்களிடம் "நீதிமன்றத்துக்கு வந்து செல்போனை வாங்கி செல்லவும்" என சொல்லி விட்டோம். அதே நேரம் தஞ்சையில் இருந்து வி எஸ் கே என்னும் செந்தில்குமார் என்னை தொடர்புகொண்டு அவர்களுக்கும் ரிமாண்ட் தான் என சொன்னார்.

புதுகையில் இருந்து நம் தம்பியண்ணன் அப்துல்லாவும், புதுகை மாவட்டம் பெரியண்ணன் அரசு அவர்களும் போனில் தொடர்பு கொண்டு மயிலாடுதுறை விபரம் கேட்டனர். அதே போல அங்கிருக்கும் விபரம் சொன்னார்கள்.அவர்கள் அப்போது கைது செய்யப்பட்டு புதுகையில் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். தோழர் சிவானந்தம் அரசன் அவர்கள் சென்னை நிலவரம் பற்றி போனில் சொன்னார்கள், அது போல அரை மணிக்கு ஒரு முறை இளவரசன் விபரம் கேட்டு இணையத்தில் அப்டேட் செய்து கொண்டு இருந்தார். சீதாராமன் போன்றவர்கள் தங்கள் தாயார் எல்லாம் "உள்ளே" இருப்பதை சொன்னார். கொக்கரக்கோ சௌம்யனும், தோழர் ஜே.பி பிரகாஷ் மற்றும் யுவகிருஷ்ணா ஆகியோர் கூகிள் பிளஸ்ல்  உண்மைகளை பரப்புரை செய்து கொண்டு இருப்பதாக செய்திகள் வந்தன.

சார்லெஸ், நரேஷ், சபேசன், அன்சாரி போன்ற எல்லோரும் மற்றும் சிங்கப்பூர் திமுகவினர் இணையம் வழியே மிக அழகாக பரப்புதல் செய்து கொண்டு இருக்க மாலை ஆறு மணிக்கு நீதிமன்றம் செல்ல இருக்கிறோம் என்றே சொல்லி வந்த போலீசார் திடீரென மண்டபம் வாசலை திறந்து விட்டு "விடுதலை" என சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் நகர மறுத்தது. நகர, ஒன்றிய செயலர்கள் தலைமையை தொடர்பு கொண்டு "அடுத்து என்ன செய்வது?" என கேட்க "ஆமாம் விடுதலை தான். ஒட்டு மொத்த தமிழகத்தில் இருந்தும் ஒரே நேரத்தில் விடுதலை உத்தரவு வந்து விட்டது. அதனால் கலைந்து செல்லலாம்" என கூற ஒட்டு மொத்த கூட்டமும் ஊர்வலமாக அண்ணாசிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு வெடிகள் வெடிக்க ஊர்வலமாக வந்து வெற்றி முழக்கமிட்டோம். பின்னர் அரியலூர் மாவட்ட செயலர் தோழர் சிவசங்கர் அவர்களோடு போனில் பேசிய போது இங்கே வெடித்த வெடி சத்தம் அவர் காதுக்கும் எட்டியது. பின்னர் ஹாங்காங் அன்சாரி அவர்கள் காதுக்கும் எங்கள் சந்தோஷம் எட்டியது.

வீட்டுக்கு வந்து பார்த்து குழந்தைகளை கட்டிக்கொண்டு "கலைஞர் செய்திகள்" பார்த்தேன். அடடா அடடா... நான் பல வருஷம் முன்னர் பார்த்த கலைஞர் ஒர் வித மந்தகாச புன்னகையில் ஒரு வித கர்வத்தில், முகம் நிறைய மலர்சியுடன், சிறை சென்று வந்த மகன் "தளபதி" பக்கத்தில் இருக்க, பின் பக்கம் "மகள்" கனிமொழி நிற்க.... நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் கலைஞரை பல நேரங்களில் கவனித்து இருக்கிறேன். ஆனால் நான்காம் தேதி மாலை அந்த நேரம் அவர் முகத்தில் இருந்த ஒரு கர்வம் ஒரு பெருமை திமுக முதன் முறை 1967ல் ஆட்சியை பிடித்த போது கூட இருந்திருக்காது. அது போல அவர் ஐந்தாம் முறை ஆட்சி பிடித்த போது கூட இருந்தது இல்லை, 40/40 பெற்ற போது கூட இருந்தது இல்லை. ஆனால் அன்று பார்த்தேன். கலைஞரை அன்று அப்படி பார்த்த எம் திமுக தொண்டர்கள் "கலைஞரே உங்கள் இதே முகம் காண எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறை செல்ல தயார்" என கூறுவது போல ஒட்டு மொத்த திமுக தொண்டர்கள் சார்பாக நான் நினைத்துக்கொண்டேன்.

திமுக அழிந்து விட்டது, திராவிடம் ஒழிந்து விட்டது, போராட்டம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ், தொண்டர்கள் அதிர்ப்தி, தொண்டர்கள் ஓட்டம், அதிகமாக பத்தாயிரம் பேர் தான் வருவர்... நாளுக்கு ஒரு பொய், நிமிடத்துக்கு ஒரு கிண்டல் என பொய்ப்பரப்புரை செய்த தினமலம் எங்கே கொண்டு போய் முகம் வைத்துக்கொள்ள போகின்றது?

எங்கள் பலம் கண்டீர்களா எதிர்கட்சியினரே? திமுக காரன் என்ன சிறைக்கு போக அஞ்சுப்வனா? மேலே இருக்கும் புகைப்படம் தோழர் சரபோஜி எடுத்த புகைப்படம். அதை எடுத்த போது எனக்கு தெரியாது. எனக்கு முன்னால் வருபவர் தான் நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் அவர்கள். ஆனால் நாங்கள் யாரும் ஹீரோ அல்ல. அல்லவே அல்ல. எங்கள் பக்கத்தில் வருகின்றாரே ஒரு 92 வயது கிழவர் அவர் தான் ஹீரோ இந்த போராட்டத்திலே. கையில் கைத்தடி வைத்த பெரியவரிடம் போலீசார் மண்பத்துக்குள் "கைத்தடி"கள் அனுமதி இல்லை என சொன்ன போது அதை வாசலில் வீசி எரிந்து விட்டு உள்ளே ராஜ நடை போட்டாரே அவர்  தான் ஹீரோ. அதே போல சென்னையில் தென்சென்னை மாவட்ட செயலர் அண்ணன் ஜெ.அன்பழகன் தலைமையில் ஒரு வயது பாலகன் தனது தாயாரின் இடுப்பில் அமர்ந்து கொண்டு "கலைஞர் வாழ்க, தளபதி வழி நடப்போம்" எனகோஷமிட்டானே அவன் தான் ஹீரோ. ஒரு வயது குழந்தை முதல் 92 வயது முதியவர் வரை ஒரு இயக்கத்தில் சிறை செல்ல தயாராக இருக்கும் இந்த திராவிட முன்னேற்ற கழகம்...... உலக சரித்திரத்தில் இது போன்ற ஒரு இயக்கத்தை கண்டது உண்டா ஜெயா அம்மையாரே? தினமலரே? தினமணியே, துக்ளக்கே? இனி எத்தனை கோயபல்ஸ் பிரச்சாரம் செய்தாலும் எங்களை அழிக்கவோ முடக்கவோ முடியும் என்றா நினைக்கின்றீர்கள்? போய் அடுத்த பொய்ப்புரட்டு  வேலையை பாருங்கள். கேட்பதற்கு கேனையர்கள் அல்ல தமிழக மக்கள். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. எரிமலை மீது டிஷ்யூ பேப்பர் வைத்து மூடும் வேலை தான் உங்கள் பொய் பரப்புரைகள்!