பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 17, 2013

பார்திபனை பழிவாங்கனும்... ஹெல்ப் மீ ப்ளீஸ்...!!!



எனக்கு எப்போதுமே ஒரு கெட்ட பழக்கம். "அந்த குளம் எத்தனை ஆழம் இருக்கும்?"னு கேட்டா ஒரு தென்ன மர ஆழம் இருக்கும் என்பேன். அந்த பூதம் ரொம்ப பெரிசு என சொல்லனும்னா அது ரெண்டு தென்ன மர உசரத்துக்கு இருக்கும் என்பேன். அது போல "இது எந்த வருஷத்து சம்பவம்?" என எதையாவது கேட்டா ரஜினியின் "ஆறு புஷ்பங்கள்" படத்துக்கும் சிவாஜியின் 200 வது படம் "திரிசூல"த்துக்கும் நடுப்புற நடந்துச்சு என்பேன்.


அது போல இந்த பதிவில் வரும் சம்பவம் எம் ஜி ஆரின் "நீதிக்கு தலைவணங்கு"படம் வந்ததுக்கும் காமராஜர் இறந்த போது பக்கத்து வீட்டு தந்தி ஆபீசர் அழுதாரே அதுக்கும் இடையே நடந்த சம்பவம். அப்போ நான் அஞ்சாப்பு படிச்சேன். மகாலெஷ்மி டீச்சர். அப்போது ரெட்டை கிளி தீப்பெட்டி காலி பெட்டி இருபது பெட்டி கொண்டு போய் கொடுத்தா சலாமத் பாய் கடையில் ஐந்து பால்குச்சி - சிலேட்டு குச்சி  ஃப்ரீ ன்னு ஒரு ப்ரமோ போட்டிருந்தாங்க.


நான் படிப்பில் ஜெயிப்பதை விட பால்குச்சியில் ஜெயிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டினேன். ரோட்டில் நடந்து போகும் போது சமைஞ்ச பொண்ணு மாதிரி தரையை பார்த்து கிட்டே நடப்பேன். எதுனா ரெட்டை கிளி டப்பா கிடைக்குமான்னு மண்ணை செருப்பு போடாத காலால் நோண்டிகிட்டே நடப்பேன். பீடி குடிக்கும் பொர்கீஸ் கிட்டே எல்லாம் "அண்ணே  தீப்பெட்டி இருக்கா?"ன்னு கேட்டு முறைப்பு வாங்கினேன். குச்சி இல்லாட்டி தோஷமில்லைண்ணே, பொட்டியாவது குடுங்கன்னு அவன் குருதி அழுத்தத்தை எகிற வைத்தேன். அப்படி பரிதாபப்பட்டவன் கொடுத்த காலி பொட்டி 'சீட்டா ஃபைட் 'பொட்டியா இருந்து தொலைச்சது. "எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது ஆண்டவா" என கச்சேரிகொடி பிள்ளையாரிடம் கேட்டு இருக்கேன். அந்த பிள்ளையாரை பழிவாங்குவதாக நினைத்து ஐந்து பைசா சவ்வு மிட்டாயை அவர் எதிரில் நக்கினேன். எனக்கு காலி தீப்பெட்டி கூட கிடைக்க செய்யாத உன்னை பார்க்க வச்சுகிட்டே இந்த சவ்வு மிட்டாயை திங்கிறேன் பார் என நக்கி நக்கி அவரை பழி தீர்த்தேன்.


வீட்டில் அம்மா விறகு அடுப்பு கொண்டையின் பக்கத்தில் நமத்து போகாமல் இருக்க வேண்டி வைத்த தீப்பெட்டியில் குச்சியை எடுத்து போட்டு விட்டு பொட்டியை சேர்த்தேன். அம்மா வந்து "இது என்ன கூத்து ... பொட்டிய காணும், குச்சில்லாம் கெடக்கு" என புலம்பிய போது "பூனை எடுத்திருக்கும்மா" என வலிய வந்து சம்மன் இல்லாம ஆஜராகினேன். அடுத்த முறை, பூனை  குச்சியை எடுத்து கீழே போட்டு விட்டு பொட்டியை மட்டும் கவ்விகிட்டு போனது போல திரைக்கதை அமைத்து, டைரக்டர் ஆக ஆசைப்படுபவர் தயாரிப்பாளரிடம் சொல்வது போல பூனை போல நடித்தும் காட்டி அடிவங்கினேன்.


சேர்ந்த பெட்டிகளை தினமும் எண்ணி எண்ணி பார்த்து அதை மாட்டு கொட்டகையில் எரவானத்தில் ஒழித்து வைத்தேன். தூங்கும் போதும், விழிக்கும் போதும் அந்த ரெட்டைகிளி டப்பியே என் கனவில் வந்து தொலைத்தது. பால்குச்சி வாங்கி பதவிசா குச்சி டப்பாவில் போட்டுகிட்டு ஸ்ரீதர் கிட்டே காட்டனும் என்கிற ஆவல் தான் இருந்ததே தவிர அந்த குச்சியால் சிலேட்டில் கணக்கு போட்டு ஸ்ரீதரை விடா அதிகமாக மார்க்கு வாங்க வேண்டும் என்கிற பேராசை எல்லாம் இல்லை எனக்கு.


ஒரு நாள் கௌபாய் வேஷத்தில் குதிரையில், வேட்டைநாய்கள் பின் தொடர  வந்த கொள்ளையர்கள் டக்குடி டக்குடி டக்குடின்னு என் வீட்டு மாட்டு கொட்டகையை முற்றுகையிட்டு நான் சேர்த்து வைத்த அத்தனை காலி டப்பாவையும் கொள்ளை அடித்து சென்று விட்டதாக கனவு கண்டு மிரண்டு போனேன். காலை எழுந்ததும் போய் பார்த்து அவைகள் இருப்பதை கண்டு துள்ளு பாச்சை போல துள்ளினேன்.


ஆக அந்த நாளும் வந்தது. ஆமாம் இருபது பெட்டிகள் சேர்ந்தாகிவிட்டது. காலை குளித்து முடித்து சாமி எல்லாம் கும்பிட்டு அந்த இருபது பொக்கிஷங்களையும் எடுத்து கொண்டு புத்தக மூட்டையில் அழகாய் அடுக்கி வைத்து கொண்டு நேரே கச்சேரிகொடி பிள்ளையாரிடம் போய் இனி உன்னை பார்க்க வைத்துகொண்டு சவ்வு மிட்டாய் நக்க மாட்டேன் என மன்னிப்பு எல்லாம் கேட்டுவிட்டு சலாமத் பாய் கடைக்கு போனால் ....பாய் அன்னிக்குன்னு பார்த்து கடை திறக்கலை. சரி பள்ளி விட்டு வரும் போது பால்குச்சி வாங்கிடலாம் என்ற நினைப்போடு பள்ளி வந்தாச்சு.


வந்து வாயையும் அதையும் மூடிகிட்டு பேசாம இருந்திருக்கலாம். சனி என் நாக்கிலே டிரான்சிட் பேசஞ்சர் ஆக அன்று வந்து அமர்ந்தமையால் பக்கத்தில் இருந்த பார்திபன் கிட்டே நைசாக என் புத்தக மூட்டையை திறந்து தீப்பெட்டியை காமிக்க அவன் "டீச்சர்... இவன் நெறேய நெருப்புட்டி வச்சிருக்கான்" என அலற டீச்சர் வந்து ... பின்ன என்ன மண்டகப்படி தான். டீச்சர் கையில் என் காது. என் கையில் என் பையின் காது. அழைத்து செல்லப்பட்டேன். மன்னிக்கவும் இழுத்து செல்லப்பட்டேன் டீச்சர் டேபிள் அருகே. டீச்சர் பையை திறந்து கொட்ட என் ரெட்டைகிளி எல்லாம் பொலபொலவென கொட்டியது. அதை எல்லாம் எடுத்து டீச்சரின் மேசை ட்ராயரில் வைத்து விட்டு எனக்கு அடி போட்டு விட்டு என் இடத்துக்கு அனுப்பிட்டாங்க.


சரி... அடி எல்லாம் போகட்டும். என் சொத்து எனக்கு மீண்டும் கிடைக்குமா கிடைக்காதா, அல்லது சைக்கிள் கடை காசிநாதன் கிட்டே சொல்லி டீச்சரை போட்டு தள்ளிட்டு அந்த பொட்டியை எடுத்துடலாமான்னு எனக்கோ ஏகப்பட்ட குழப்பங்கள். என்னை மாட்டி விட்ட பார்த்திபனுக்கோ வாயெல்லாம் பல். எத்தனை சிரமம் அந்த இருபது பெட்டிகளை சேர்க்க.... எல்லாம் பாழாக்கிட்டானே இவன் என அவன் மீது கோவம்.


மாலை பள்ளி விட்டதும் கூட டீச்சர் அதை கொடுக்கவில்லை. எனக்கு வாழ்க்கையே பிடிக்கவில்லை. மீண்டும் "எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது" என நொந்து கொண்டே தளர்ந்த நடையுடன் பிள்ளையாரை முறைத்து விட்டு வீட்டுக்கு வந்தேன். ஆச்சு... ரெண்டு நாள்... எனக்கு வாழவே பிடிக்கவில்லை. சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் ஏதேதோ மனதில் வந்து போனது. "நீதிக்கு தலைவணங்கு படத்தில் எம் ஜி ஆர் பைக் ரேஸ் ஓட்டுவார். அவர் நம்பர் "5". இந்த பெட்டி எல்லாம் நான் சலாமத் பாய் கிட்டே கொண்டு கொடுத்தா எனக்கு கிடைக்க போகும் பால் குச்சியோ "5". ஆகா என்ன ஒற்றுமை. நிச்சயம் எனக்கு அந்த பொட்டிகள் திரும்ப கிடைக்கும்" என்றெல்லாம் லூசுத்தனமாக மனதில் நினைத்து கொண்டேன். மாலை பள்ளி முடிந்ததும் டீச்சர் என்னை கூப்பிட்டு "இனிமேல் இது போல எல்லாம் செய்யக்கூடாது" என சொல்லி என் ரெட்டைகிளிகளை தூக்கி வெளியே போட நான் ஆனந்த கண்ணீருடன் அதை பொறுக்கி எடுத்து என் பையில் திணித்து கொண்டு ஓட்டமும் நடையுமாக சலாமத் பாய் கடைக்கு வந்தேன்.


உஷ்... அப்பாடா... நாம் உழைச்ச உழைப்பு வீண் போகலை என மனதில் நினைத்து கொண்டு சலாமத் பாய் கடையில் இருந்த கூட்டம் போகட்டும் என நினைத்து கொண்டு அமைதியாய் நின்றேன். எல்லோரும் போனதும்....என் ரெட்டைகிளிகளை எடுத்து மேலே வைத்தேன். அதற்கு பாய்...."எலே பயலே... அந்த ஸ்கீம் நேத்தியோட முடிஞ்சு போச்சுடா, அடுத்த தபா அது போல போட்டாங்கன்னா இதல்லாம் எடுத்து வா"ன்னு சொல்லி கன்னத்தை லேசாக கிள்ளி விட்டு ஒத்தை பைசா ஆரஞ்ச் மிட்டாய் ஒன்னு என் உழைப்பிற்காக கொடுத்தார். வாங்கி நக்கிகிட்டே சோகமாக வீடு வந்தேன். எனக்கு அந்த பார்த்திபன் மேலே மட்டும் கோவம் போகவே இல்லை. தேவையில்லாமல் ரெண்டு நாள் டீச்சர் என் கிளிகளை சிறை வைக்காவிட்டால் இன்னேரம் நான் அஞ்சு பால் குச்சிக்கு ஓனராகியிருப்பேன். அவனை என் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் பழிவாங்கியே தீரவேண்டும் என நினைத்து கொண்டேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அந்த பார்த்திபன் என் கண்ணில் பட்டு கொண்டுதான் இருந்தேன். ஆனால் பழிவாங்க சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. அதன் பின்னர் நான் இன்று வரை அவனை பார்க்கவில்லை.




இதல்லாம் ஏன் இப்போ சொல்கிறாய்... என நீங்கள் கேட்பது புரியுது. சொல்கிறேன். கடந்த ஒருவாரமாகவே நான் குளித்து முடித்து ட்ரஸ் எல்லாம் செய்து விட்டு வெளியே வந்து யாரிடமாவது முக்கியமாக பேசும் போது நறுக்னு ஒரு எறும்பு கடிக்கும் ஜட்டிக்குள், பனியன்க்குள் இருந்து. ரொம்ப தர்மசங்கடமாக ஆகும் எனக்கு. என்ன காரணம் என தெரியவில்லை. இன்று விடாப்பிடியாக என் ட்ரஸ் வைக்கும் அலமாரியை சுத்தம் செய்தேன். அட... இதான் காரணமா? ஒரு ஆறு பிங்கோ காலி பாக்கெட் அடுக்கி வைக்கப்பட்டு அதன் மேல் எறும்புகள்.


"இதை யார் இங்க வச்சது? அதும் காலி பாக்கெட்டை" என நான் கத்திய போது என் மகன் ஓடிவந்து "அப்பா, உன்னை யார் அதை எடுக்க சொன்னாங்க. நான் தான் ஜாக்கிரதையா ஒழிச்சு வச்சேன். பத்து பாக்கெட் குடுத்தா தாத்தா கடைல ஒரு மிஸ்டர் பீம் ஸ்டிக்கர் தருவாரு. இன்னும் நாலு வேணும். அப்பா ஒரு ட்வண்டி ரூபீஸ் குடேன். தின்னுட்டு அந்த காலி பாக்கெட்டையும் கொடுத்துட்டு ஸ்டிக்கர் வாங்கிக்கறேன்" என்றான்.


எனக்கு சிரிப்பு வந்தது. அதை விடுங்கள்.... அந்த பார்த்திபனை பழிவாங்க வேண்டும் என சொன்னேன்ல.... ஹூம்... அவனை நான் பத்தாம் வகுப்புக்கு பின்னர் பார்க்கவேயில்லை. அவன் மாநிறம். தொள தொள சட்டை போட்டிருப்பான்.  பி ஜே பி இல. கணேசன் மாதிரி பட்டையா ஒரு நாள் விபூதி பூசுவான். அடுத்த நாள்..... விக்ரம் லூசா நடிச்சு இருப்பாரே என்ன படம்... தெய்ய திருமகள்... ம்... அதிலே அனுஷ்கா கூட வக்கீலா நடிச்சிருப்பாங்க. அந்த அனுஷ்கா மாதிரி சின்னதா விபூதி வச்சிருப்பான், சட்டையின் காலரில் பின் பக்கம் "ஸ்டைலோ டைலர்ஸ்"ன்னு ஸ்டிக்கர் இருக்கும். விரலில் நகம் வெட்டி இருக்காம நீட்டு நீட்டு நகமா இருக்கும். ரெமி பவுடர் வாசம் வரும் அவன் மேல். இதான் அவன் அடையாளம். எங்கயாவது பார்த்தா ஒடனே டபில்யூ டபில்யூ டபில்யூ அபிஅப்பா டாம் கொம் க்கு தகவல் கொடுங்க. அந்த பால்குச்சிக்காக பழி வாங்கனும். கொஞ்சம் அர்ஜண்ட் ப்ளீஸ்...

14 comments:

  1. :)))

    படித்தேன். ரசித்தேன்!

    ReplyDelete
  2. நான் பார்த்தா கண்டிப்பா சொல்ரங்க... ஹாஹா...

    ReplyDelete
  3. அதான் அடையாளம் தெளிவா சொல்லிருக்கீங்கல்ல. புடிச்சுத்தரேன் :-))

    ReplyDelete
  4. அருமைண்ணா, பார்ம்முக்கு வந்துட்டீங்க போல.

    ReplyDelete
  5. பழி வாங்கும் படலம் ஆரம்பமா?
    //இருந்தேன். ஆனால் பழிவாங்க//
    'இருந்தான்'

    ReplyDelete
  6. thanks to your very intersting article ,please continue writings

    ReplyDelete
  7. மாம்ஸ்... செட்டியார் கடை தவிட்டு ரொட்டிக்காக தெரு தெருவா அலைஞ்சதெல்லாம் ஞாபகம் வருது....

    ReplyDelete
  8. சிறு வயது உணர்வுகளை சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. நிச்சயம் தகவல் தரேன் நீங்க சொன்ன நபரை பார்த்தா

    அமர்க்களம் கருத்துக்களம்

    www.amarkkalam.net

    ReplyDelete
  10. பால்குச்சி, ரெட்டை கிளி டப்பா இது இரண்டும் என்னவென்று புரியவில்லை. விளக்கம் தர முடியுமா ?
    (நான் சிங்கபூர் தமிழன் அதனால் தெரியவில்லை )

    ReplyDelete
  11. அண்ணா நீங்க அரசியல் பதிவு எழுதாம, இதே மாதிரி வெகு ஜன பதிவு மட்டும் எழுதுங்களேன்!

    மிகவும் அருமை!

    ReplyDelete
  12. Couldn't stop laughing! Brilliantly written!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))