பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 25, 2018

“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு!


  “மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு!

துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நேர்காணல் என்னும் விதமாக  தமிழகத்தின் நம் முன்னாள் பள்ளிக்கல்வி, நூலக மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த திரு. தங்கம் தென்னரசு அவர்களிடம் துக்ளர் வாசகர்கள் 5 பேரைக்கொண்டு ஒரு நேர்காணல் நடத்தி கடந்த இரண்டு இதழ்களாக வெளியிட்டது. அந்த இரண்டு இதழ்களின் ஒட்டு மொத்த தொகுப்பே இந்த பதிவு! கேட்கப்பட்ட அருமையான, சிக்கலான(துக்ளக் வாசகர்கள் அல்லவா... அதனால் சிக்கல்) கேள்விகளுக்கு கூட நம் முன்னாள் அமைச்சரும் இப்போதைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மற்றும்  விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான திரு தங்கம் தென்னரசு B.E., M.L.A அவர்கள் அனாயசமாக கேள்விகளை எதிர்கொண்ட விதமும், பதில் சொன்ன விதமும் எக்ஸலண்ட்!  இதோ அதை படியுங்கள்! - இப்படிக்கு அபிஅப்பா என்கிற தொல்காப்பியன். 



******************** இனி துக்ளக் இதழை படிப்போம்! (நன்றி: துக்ளக்)


வி.வி.ஐ.பி மீட் 14: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர், தற்போது திருச்சுழி தொகுதியின் எம்.எல்.ஏ ஆகவும் கட்சியில் மாவட்ட கழக செயலாளர் ஆகவும் இருந்து வருகின்றார். அவரை துக்ளக் வாசகர்கள் 5 பேர் சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் முக்கிய பகுதிகள் இங்கே! (இந்த வார வாசகர்கள் : டி. கீதா கிருஷ்ணன், தனியார் துறை, சென்னை, பத்மாரவி, இல்லத்தரசி, சென்னை, ரமேஷ் சீனிவாசன், மனித வள ஆலோசகர், சென்னை, பா.சுதா, பேராசிரியை, சேலம், பி. சுவாமிநாதன், தனியார் துறை, சென்னை)



சுவாமிநாதன் அரசியலுக்கு நீங்கள் வந்தது எப்படி? 

தங்கம் தென்னரசு: நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. நான் எந்த அரசியல் ஆர்வமும் இல்லாமல் மெக்கானிக்கல் இஞினியரிங் படித்து விட்டு ஸ்பிக் உர நிறுவனத்தில் ஏறத்தாழ பத்து வருடங்கள் பொறியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் 1996ல் தலைவர் கலைஞர் அவர்கள் அமைச்சரவையில் என்னுடைய தந்தை தங்கபாண்டியன் அமைச்சராக இருந்தார். தென் மாவட்டங்களில் ஏற்ப்பட்ட ஜாதிக்கலவரத்தை தீர்க்க என் தந்தை சென்றார். அந்த கலவரத்தின் போது ஏற்ப்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்ப்பட்டு ராஜபாளையத்தில் இறந்து விட்டார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தலைவர் கலைஞர் என்னை வேட்பாளராக அறிவித்தார். 1998ம் ஆண்டு அருப்புக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதன் முதலாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். 1977ல் இந்த தொகுதியில் தான் எம்.ஜி ஆர் போட்டியிட்டு வெற்றி பெற்று  முதல்வர் ஆனார்.  அருப்புக்கோட்டைக்கு அருகில் இருக்கும் ஊர் திருச்சுழி. ரமண மகரிஷி பிறந்த ஊர் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அருப்புக்கோட்டை தொகுதியை பிரித்து திருச்சுழி என்னும் தொகுதி உருவாக்கப்பட்டது. 2001 தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். 2006ல் மீண்டும் வெற்றி பெற்றேன். அப்போது கலைஞரின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்பொருள் துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றேன். 

பத்மாரவி: தற்போதைய ஆட்சி முறையில் நீட் தேர்வு கொண்டு வந்ததை  பற்றி உங்கள் கருத்து என்ன? 

தங்கம் தென்னரசு: நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. மேலெழுந்த வாரியாக எல்லோருக்கும் ஒரே தேர்வு, இதில் என்ன தவறு என்று கேட்கின்றார்கள். ஆனால் நம்முடைய அரசு பள்ளியில் படித்து விட்டு வரும் மாணவர்களின் கல்வி முறையும், ஐ பி எஸ் ஈ கல்வி முறையும் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். இப்படி இரு வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்க்கும் மாணவர்களை திடீரென்று ஒரே தேர்வின் கீழ் கொண்டு வருவது முறையாகவும் சரியாகவும் இருக்காது.

பத்மாரவி: மற்ற துறைகளுக்கும் இப்படிப்பட்ட நுழைவு தேர்வு முறை இருக்கின்றதே. மருத்துவம் என்பது மக்களின் உடல் மற்றும் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தேர்வு முறை கடினமாக இருப்பது சரிதானே? 

தங்கம்தென்னரசு : நீங்களே உடல்நிலை சார்ந்த விஷயம் என்று கூறுகின்றீர்கள். இந்த நீட் தேர்வு முறையால் ஆரம்பத்தில் இருந்தே சி பி எஸ் ஈ கல்வி முறையில் படித்த 15 சதவிகித வெளி மாநில மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறுகின்றார்கள். வரும் காலங்களில் இந்த மாநிலத்திலேயே அரசு மருத்துவ மணையிலேயே வேலையும் செய்வார்கள். எதிர்காலத்தில் இவர்களிடம் மருத்துவம் பார்க்கும் கிராமப்புற நோயாளிகள் மொழி தெரியாமல் எப்படி அவதிப்படுவார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மருத்துவராலும் நோயாளியின் உடல்நிலை பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ள முடியாது. இப்படி அடிப்படையில் மொழிப்பிரச்சனை என்பதே பெரிதாக இருக்கும். மீதி 85 சதவிகித தமிழக மாணவர்களில் எவ்வளவு கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

நீட் தேர்வில் வெற்றி பெற தனியார் கோச்சிங் வகுப்புகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் 2 முதல் 3 லட்சம் வரை கேட்கின்றார்கள்.  இதில் பணம் செலுத்தி படிக்கக்கூடிய பொருளாதார நிலையில் இருப்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.  நம்முடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசே நீட் பயிற்சி கொடுக்கும் என சொல்லி வருகின்றார். ஆனால் இன்று வரையிலும் எதுவுமே சரியாக இயங்கவில்லை. இப்போது +2 பொதுத்தேர்வும் நடந்து வருகின்றது. இதற்கு பிறகு பயிற்சி வகுப்புகள் தொடங்கினாலும் ஏப்ரல் மாதம் மட்டுமே அந்த மாணவர்கள் வகுப்புகளுக்கு வர முடியும். ஒரே மாத பயிற்சி எப்படி நீட் தேர்வை எதிர்கொள்ள போதுமானதாக இருக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பயிற்சி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் உரிய வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றார்களா? இந்த கேள்விகள் எதற்குமே இன்று வரை பதில் இல்லை. வெறும் அறிவிப்புகள் மட்டுமே போதுமா? பொதுவாக சம அளவு பலம் உள்ளவர்களை போட்டியில் மோதவிடுவது தானே நியாயம்? + 2 கேள்விகளை ஆறாம் வகுப்பு மாணவனிடம கேட்டு அவனை முன்னேற்றுகிறேன் என சொன்னால் அது எப்படி சரியாக இருக்கும்?

ரமேஷ்: சமச்சீர் கல்வி முறை வந்த பிறகு நிறைய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுகின்றார்கள். ஆனால் நீட் தேர்வு எழுதும் போது கடினமாக இருக்கின்றது என்று சொல்லும் போது நமது கல்வித்திட்டத்தின் தரம் குறைந்து இருப்பதை காட்டுகின்றதா? 

தங்கம் தென்னரசு: உச்சநீதிமன்றமே சமச்சீர் கல்வித்திட்டத்தில் எந்த இடத்திலும் தரம் குறையவில்லை என்று என்.சி.ஆர்.டி குழுவினால் ஆய்வு செய்து தீர்ப்பளித்துள்ளது. முன்பு பாடத்திட்டத்தில் இருக்கும் பதிலை மனப்பாடம் செய்து ஒப்பித்தால் மதிப்பெண் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் சமச்சீர் கல்வி முறையில் கேட்கப்படும் கேள்விகள் இருக்கும் பாடத்திட்டத்தில் அந்த மாணவன் என்ன புரிந்து கொண்டான் என்பதை மதிப்பீடு செய்வதாய் இருக்கின்றது. பாடங்களை முழுவ்துமாக சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே மாணவனால் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். இது தான் சமச்சீர் கல்வி முறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய மாற்றம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் தவறானது என்று கருத்து பரப்பப்பட்டதோடு அதன் உண்மையான நோக்கம் நிறைவேற விடாமல் தடுக்கப்பட்டது என்பதே உண்மை.

சுதா: கிராமப்புரங்களில் பெரும்பாலும் அரசு பள்ளிகள் மட்டுமே இருக்கும். அந்த பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை அணைவரும் தேர்ச்சி அடைகின்றார்கள். இப்படி 8ம் வகுப்பு வரை அந்த மாணவனின் உண்மையான தகுதியை மதிப்பீடு செய்யாமல் இருந்தால் அந்த மாணவனால் +2 முடிந்தவுடன் எப்படி மற்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்? 

தங்கம் தென்னரசு: இந்த பிரச்சனையை தீர்க்கத்தான், தொடக்கக்கல்வியில் செயல்வழி கல்வி முறை (Activity based learning) என்ர ஒன்றை கொண்டு வந்தோம். இந்த செயல்வழி கல்வி முறையில் அந்தந்த வயதிற்கான திறனை மாணவன் பெற்றிருந்தால் மட்டுமே மாணவன் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும். மேலும் குறைந்த மாணவர்களை அந்த வகுப்பு ஆசிரியர்கள் கண்டுபிடித்து அவர்களுடைய திறனை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்காக பிரதமர் விருதே நம் மாநிலத்துக்கு கிடைத்தது. இதனுடையை தொடர்ச்சியாக 6லிருந்து 8ம் வகுப்பு வரை (Active learning methodology) என்ற அந்த மாணவனின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் அவனை தயார் படுத்த வேண்டும் என்று கொண்டு வந்தோம். இந்த கல்வி முறையில் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. வெறும் தேர்வுகள் வைத்து மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதை விட இது போன்ற நடைமுறை செயல் தேர்வுகள் மூலம் அவர்களின் திறனை எடைபோட வேண்டும். 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் மட்டுமே ஒரு மாணவன் திறமையானவன் என்றும் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தால் அந்த மாணவனுக்கு திறன் இல்லை என்று சொல்ல வேண்டுமா? மூன்றில் ஒரு பங்காவது மதிப்பெண் பெற்றால் சிறிதளவுக்கு புரிதல் இருக்கின்றது என்ற எண்ணத்தில் தான் 35 மதிப்பெண் பெற்றால் வெற்றி என்று வைத்துள்ளோம். இந்த புதிய கல்வித்திட்டத்தில் ஆசிரியர்கள், கொஞ்சம் சிரமப்படுவதாக இருந்தால் கூட மக்களின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அமல் படுத்தினோம். நிறைய அரசுப்பள்ளிகள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வத்தினால் நல்ல முறையில் சாதனை புரிந்து வருகின்றனர்.

ரமேஷ்: சென்னையை பொறுத்தவரை அண்ணா நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய அடையாளமாக மாறிவிட்டது. இந்த நூலகம்  அமைந்ததில் உங்கள் பங்கு மிகப்பெரியது. இந்த நூலகம் அமைந்தது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் ஏதாவது இருக்கின்றதா?

தங்கம் தென்னரசு:  மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த நூலகத்தை கழக ஆட்சிக்காலத்தில் அமைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். இன்றும் 1000 நபர்களுக்கு குறையாமல் அங்கு வருகின்றார்கள். பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் இடமாக இந்த நூலகம் அமைந்தது எனக்கும் மகிழ்ச்சி தான். நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ராஜேந்திர சோழன் குறித்து ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்றேன். அந்த விழா சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்ததால் அந்த நூலகத்தை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதைப்பார்த்து அசந்து போனேன். அது போல உலகத்தரத்தில் ஒரு நூலகம் சென்னையில் அமைந்திட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் கலைஞரிடத்தில் தெரிவித்து இருந்தார். இதனை கருத்தில் கொண்ட தலைவர் கலைஞரின் எண்ணத்தில் உருப்பெற்றதே அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். பொதுவாகவே நம்முடைய நூலகத்தில் நம் நாட்டை பற்றிய நூல்களும் பெரும்பாலும் தமிழ் நூல்கள் மட்டும் இருக்கும் என்ற கருத்து பரவலாக எல்லோரிடத்திலும் இருந்தது. இதை மாற்றி உலகத்தில் இருக்கும் அனைத்து நூல்களையும் புத்தகமாகவோ, இனையத்தில் மூலமோ  பெற முடியும் என்ற நிலையை இந்த நூலகத்தில் உருவாக்க விரும்பினோம். சிறு குழந்தைகள், ஆராய்ச்சி மாணவர்கள், ஐ.ஏ.எஸ், எம்.பி.ஏ, சட்டப்படிப்பு என எல்லா வகையான மாணவர்களும் இதைப்பயன் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பலதரப்பட்ட புத்தகங்கள் வாங்கினோம். கிட்டத்தட்ட 5 லட்சம் புத்தகங்கள் வரை இந்த நூலகத்துக்காக வாங்கினோம். எல்லா மாநில மக்களுக்கான புத்தகங்களும் இங்கு இருக்கும். இணையத்தின் மூலமாக உலகத்தில் உள்ள அனைத்து நூலகத்தின் நூல்களையும் இங்கிருந்தே படிக்க முடியும். கால மாற்றத்திற்கு ஏற்ப அச்சு புத்தகங்களும்  இருக்கும். கணினியில் படிக்கக்கூடிய புத்தகங்களும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளுக்கு நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தினையும், புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தையும் கொண்டு வர வேண்டும் என்று குழந்தைகளுக்கென்றே தனியான பகுதியும் உருவாக்கினோம். குழந்தைகளை ஈர்த்து விட்டால் அவர்களது பெற்றோரும் இந்த நூலகத்தை பயன் படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பது எதார்த்தமான உண்மை. பொதுவாக நம்முடைய வீடுகளில் படிப்பதற்கென்று தனியான இடம் இருக்காது. தனிமையில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அவர்களுடைய புத்தகத்தை இங்கு கொண்டு வந்தும் படிக்க முடியும். பார்வையற்றோர் படிப்பதற்கு தகுந்த ப்ரெய்லி புத்தகங்களும் இங்கு இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் புத்தகங்களை படித்துக்கொள்ளலாம் என்ற நவீன தொழில்நுட்பம் இங்கு இருந்தாலும் நம்முடைய பழமையை போற்றும் விதத்தில் பழங்கால சுவடிகள்,  அரிய தமிழ் நூல்கள், பாரம்பரிய மூலிகை குறித்த நூல்களும் இங்கு கிடைக்கின்றன. இப்படி பழமையும், புதுமையும் கலந்த நூலகமாக இதை உருவாக்கினோம். நூலகம் என்பது தினமும் மக்கள் பயன்படுத்தும் இடமாகவும் இருக்க வேண்டும். எனவே நூல் வெளியீட்டு விழா போன்றவற்றை நடத்திக் கொள்ள  பெரிய அரங்கம் ஒன்றையும் உருவாக்கினோம். இதனால் நூலகத்துக்கு வரும் வழக்கம் இல்லாதவர்கள்கூட, இந்த விழாக்களுக்கு வரும் சமயங்களில் நூலகத்தை பார்க்கும் வாய்ப்பை பெறுவார்கள். புத்தகங்கள், மற்றும் அறிவார்ந்த விழாக்கள் நடப்பதற்காக மட்டுமே இந்த அரங்கங்கள் உருவாக்கப்பட்டன.

பிற்காலத்தில் அரசியல் காரணங்களால், இங்கு திருமண வரவேற்பு போன்றவையும் நடந்தது வேதனையானது. இப்படி உயர்ந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலகம், அர்சியல் காரணங்களால் மேம்படுத்தப்படாமல் இருந்தது. நீதிமன்றத்தின் தலையீட்டால் மட்டுமே இந்த நூலகம் மருத்துவமனையாக மாறாமல் இருக்கின்றது. அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் (Oriental Manuscripts Library) என்ற சுவடிகளுக்கான தனி நூலகம், சென்னை பல்கலை கழக வளாகத்தில் இருந்தது. இந்த நூலகத்தில் திருக்குறள், புறநாநூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றின் பழங்கால ஓலைச்சுவடிகள் இருக்கும். நான் அங்கு சென்று பார்த்த போது மோசமான நிலையில் இந்த அரியவகைச் சுவடிகளைப் பராமரித்து வைக்க சரியான இட வசதியில்லை. இவற்றையெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்கான அரசாணையும் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பிறப்பித்தோம். ஆனால் நான் ஏற்கனவே கூறியது போல அரசியல் காரணங்களால் அந்த சுவடிகள் பல ஆண்டுகள் அங்கேயே இருந்து விட்டு இப்போது தான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு இடம் பெயர்ந்துள்ளன.

கீதாகிருஷ்ணன்: 1998ல் முதன் முதலில் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். உங்களுடைய முதல் சட்டமன்ற பேச்சு எதைப்பற்றி இருந்தது?

தங்கம் தென்னரசு: முதன் முதலில் சட்டமன்றத்தில் பேசும் எல்லோருக்கும் இருக்கும் பயமும், தயக்கமும் எனக்கும் இருந்தது. எனினும் தலைவர் கலைஞர் அவர்களும், செயல்தலைவர் தளபதி அவர்களும் அழைத்து பாராட்டும் வகையில் என்னுடைய கன்னிப்பேச்சு இயற்கையாக அமைந்தது. அன்றைய பேச்சில் முக்கியமாக நான் வைத்த கோரிக்கை, என்னுடைய தொகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட காரியாபட்டி பகுதிக்கு தனி தாலுக்கா வேண்டும் என்பது தான். அது நிறைவேற்றப்பட்டது. அந்த மூன்றாண்டு காலத்தில் பள்ளிகள், சாலைகள், குடிநீர் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளைச் சட்டமன்ர உறுப்பினராக நிறைவேற்றினேன்.

சுவாமிநாதன்: கடந்த தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்தே நின்று ஜெயலலிதா வெற்றி பெற்றார்.  இன்றைய நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவை தவிர வேறெந்த கட்சியும் பலத்துடன் இல்லை. எனவே யாருடைய கூட்டணியும் இல்லாமல் திமுக தனித்தே  வெற்றி பெரும் என்பது என் கணிப்பு. நிலைமை இவ்வாறு இருக்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, போன்ற உதிரிக்கட்சிகளுடன் திமுகவுக்கு கூட்டணி தேவையா? கடந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தமைக்கு கூட கூட்டணிக்கட்சிகளே காரணம் என்பதை திமுக இன்னும் உணரவில்லையா?

தங்கம் தென்னரசு:  தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சி என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து 89 இடங்களில் வெற்றி பெற்றோம். 2000 ஓட்டிற்கும் குறைவான வித்யாசத்தில் தோற்ற தொகுதிகள் 30க்கும் மேலாக இருக்கும். எனவே திமுகவின் வலிமை என்பது குறையவில்லை. ஆனால் ஒரு போர்க்களத்துக்கு போகும் அரசன் தன் வழி, தன் எதிரி வழி, தன் துணை வழி, என்று எல்லாவற்றையும் பார்த்து தான் போர் வியூகம் வகுக்க வேண்டும். இதையேதான் அரசியலிலும் செய்ய வேண்டும். 1967ல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருந்தது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டன. தமிழ்நாடு மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டது. தமிழ் மொழிக்கான அங்கீகாரம் இல்லாமல் பிற மொழி ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது. இந்த காரணங்களினால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.

1967ல் தனித்து நின்று தேர்தலை சந்தித்தாலே வெற்றி பெறும் நிலையில் திமுக இருந்தது. ஆனாலும் அண்ணா தனக்கு நேரெதிரான ராஜாஜியை கூட்டணியில் வைத்துக் கொண்டார். பல்வேறு கட்சிகளை ஓரணியில் திரட்டி , ஒரு வலுவான கூட்டணி அமைத்து வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொண்டார். எனவே கூட்டணி என்பது தேர்தல் களத்தில் அவசியமான ஒன்று. ஜெயலலிதா கூட்டணி இல்லாமல் கடந்த தேர்தலை சந்தித்தார் என்று கூறுகின்றீர்கள். அவரும் கூட முதலில் கூட்டணிக்கு முயற்சி செய்தார். மக்கள் நலக்கூட்டணி  என்ற பெயரில் சில கட்சிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்க முடிவெடுத்த நிலையில் தான், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறும் என்பதை கணித்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தார். மக்கள் நலக்கூட்டணியால் திமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகள் அந்த கூட்டணிக்கு சென்று, கடந்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது. எனவே கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவதும், கூட்டணி அமைத்தும் வெற்றி பெறாமல் போவதும் அன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்த விஷயம். அத்தகைய ராஜதந்திரமான நடவடிக்கைகளை மிகச்சரியான வகையில் எங்கள் செயல் தலைவர் தளபதி அவர்கள் முன்னெடுப்பார்.


சுவாமிநாதன் :  திமுக என்பது எம்.ஜி.ஆர் போன்ற பெரிய தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த கட்சி. ரஜினி, கமல் போன்றவர்கள் வருகையால் உங்களுக்கு பாதிப்பு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? 

தங்கம் தென்னரசு:  நீங்களே சொன்னது போல் திமுக 1949ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கம். இந்த எழுபது வருட காலத்தில் திமுக சந்தித்த வெற்றிகள், தோல்விகள், சோதனைகள் ஏராளம். எமர்ஜென்சி போன்ற அடக்குமுறைகளையும் பார்த்த கட்சி. எம்.ஜி.ஆரை எதிர்த்து 13 வருடங்கள் ஆட்சி பொறுப்பில் இல்லாமல் இருந்து,  மீண்டும் ஆட்சியை பிடித்த கட்சி. கலைஞருடைய அரசியல் நேரு காலத்தில் தொடங்கியது. இன்றைய தலைவர்களும் அவரை சந்திக்கும் அளவில் செல்வாக்கான தலைவராக இன்றும் கலைஞர் இருக்கின்றார். பாஜக, காங்கிரஸ், என்று இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான கட்சிகள் ஒரு காலத்தில் திமுகவை எதிர்த்தும், ஆதரித்தும் அரசியல் செய்தவை தான். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து விடலாம். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் எல்லோருடைய இலக்கும் திமுகவாகக்கூட இருக்கலாம். “மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம்” என்பது போல மிகப்பெரிய கட்சியான திமுகவை எதிர்ப்பது புதிய கட்சிகளுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். இதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

பத்மாரவி: தமிழகத்தில் இருப்பதிலேயே பலமான கட்சியாக திமுக இருக்கின்றது. ஆனாலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் இடைத்தேர்தலில் உங்களை எதிர்த்து வெற்றிபெற முடிகின்றது. கமல் கட்சி,  ரஜினி கட்சி என்று புதுப்புது கட்சிகள் வருகின்றன. அதிமுக பிளவு பட்டுள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலில் உங்கள் பிரதான எதிரி யார்?  

தங்கம் தென்னரசு: கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதாவே சவால் விட்டல்  நிலையில் தான் இதுவ்ரை இல்லாத வகையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களாக 89 பேர் அவருக்கு எதிரில் வந்து அமர்ந்தோம். அது தளபதியாரின் சாதனை. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையில் எதிர்க்கட்சி அமைந்த வரலாறு இல்லை. எங்களைப் பொறுத்த வரை ஆளும் கட்சி தான் எங்களுடைய அரசியல் எதிரி. எதிர்கட்சியாக இருந்து, ஆளும் கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்வோம். ஆளும் கட்சி தான் தமிழகத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பானவர்கள். அவர்களின் நிர்வாகத்தில் தவறு இருந்தால் அதை  சுட்டிக்காட்டி அதை கண்டிக்கும் இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். சட்டமன்றத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து மட்டுமே பேசமுடியும்.அங்கு சென்று கமல், ரஜினி குறித்து பேசுவது சரியாக இருக்காது. அரசியலுக்கு பலர் வரலாம். தேர்தல் காலத்தில் யாருடைய கூட்டணியில்  யார் இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து, எங்களுடைய எதிர்ப்பு நிலை இருக்கும். எனவே இன்றைய நிலையில் எங்களுடைய எதிர்ப்பு என்பது சட்டமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் ஆளும் கட்சியை எதிர்ப்பது மட்டுமே பிரதானமாக இருக்கும்.

சுதா:  புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் உங்கள் தலைவர் கலைஞரை வந்து பார்த்து ஆசி பெற்று செல்வது,  உங்களுக்கு பெருமையாக இருக்கின்றதா? எரிச்சலாக இருக்கின்றதா?  

தங்கம் தென்னரசு:  புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் என்று மட்டும் இல்லை. கடந்த காலங்களில் சித்தாந்த ரீதியாக நேரெதிரான கருத்து கொண்ட ராமகோபாலன் கூட, கலைஞரை சந்தித்து விட்டுச் சென்றிருக்கின்றார். சமீபத்தில் பிரதமர் மோடி கலைஞரை சந்தித்ததும், அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதை காரணமாகத்தான். இன்றைக்கும் பாஜகவின் கொள்கைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனாலும் தலைவர் கலைஞர் அவர்களை தன்னுடன் வந்து பிரதமர் இல்லத்தில் தங்குமாறு ஒரு பிரதமர் அழைக்கின்றார் என்றால், இது அரசியலை தாண்டிய மரியாதை, பாசம் அல்லவா? இது போன்ற மரியாதை மற்றும் நட்புணர்வு, புதிதாக கட்சி ஆரம்பித்த நண்பர்களுக்கும் கலைஞருடன் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. எனவே மரியாதை நிமித்தமான இந்த சந்திப்புகளினால் நாங்கள் பெருமைதான் அடைவோமே தவிர, இதில் எரிச்சல் அடைய எதுவுமே இல்லை. அரசியல் களத்தில் யாரையும் சந்திக்கும் திறன் திமுகவுக்கு உண்டு.

பத்மாரவி: சமீபத்தில் போக்குவரத்து கழகங்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் திமுகவின் தூண்டுதல் இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? 

தங்கம் தென்னரசு: இதில் தூண்டுதல் எல்லாம் இல்லை. அவர்களுடைய உரிமையை அவர்கள் கேட்டார்கள். திமுகவின் தூண்டுதல் என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் போராட வேண்டும்? மக்கள் மத்தியில் தவறான கருத்தை உருவாக்கச் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் பணி ஓய்வுக்கு பின்னர் கொடுக்க வேண்டிய ஓய்வூதிய நிதியைப் பல ஆண்டுகளாக கொடுக்கவில்லை. இதனால் எத்தனை குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது? திருமணம், மேல்படிப்பு  போன்ற விஷயங்களை செய்ய முடியாமல் தவித்த குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை? இவற்றை எல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு ஒரு எதிர்கட்சிக்கு உள்ளது. இதற்காக ஜனநாயக முறைப்படி ஒரு போராட்டத்தை திமுக முன்னெடுத்தால் அரசுக்கு எதிராக தூண்டி விடுகின்றோம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் ஆளும் கட்சியைத்தவிர அனைத்து கட்சிகளுமே பங்கெடுத்தன. என்றுமே மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திமுக முன் நிற்கும்.

சுதா: குலத்தொழில் கல்வியை கொண்டு வந்தால் என்ன தவறு? இன்று விவசாயம் செய்வதற்கு ஆட்கள் இல்லை. நவீன தொழில்நுட்ப வழிகளைக் கொண்டு எல்லா குலத்தொழிலையும் முன்னேற்றி, குலத்தொழில் கல்வியின் மூலம் எல்லாத் தொழில்களையும் நலிவுறாமல் காப்பாற்ற முடியுமே? 

தங்கம் தென்னரசு: குலக்கல்வித்திட்டம் என்பது ஆபத்தானது. இந்தக் குலத்தொழில் வேறுபாட்டை களையவே பல தலைவர்கள், பலகாலம் போராடினார்கள். திரும்பவும் அது போன்ற நிலைக்குச்செல்ல வேண்டும் என்ற நினைப்பே தவறானது. முடி திருத்தும் குலத்தில் பிறந்த மாணவன் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வருவதை, இந்த குலக்கல்வித்திட்டம் தடுக்கும். பல்வேறு தொழில்கள் அழியாமல் பாது காப்பதற்காக என்று காரணம் சொன்னாலும் கூட, குலக்கல்வி திட்டம் என்பது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிட்டத்தட்ட இந்த கொள்கையின் வெளிப்பாடாகவே மத்திய அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கை இருக்கிறது. படிக்கும் மாணவர்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு தொழில் கல்வியைப் பயில வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இந்த ஆபத்து எங்கு வரும் என்றால், எட்டாவது வரை ஒன்றாக படித்த மாணவர்கள், அதற்கு பிறகு குலக்கல்வி  என்ற வகையில் பிரிக்கப்படுவார்கள். ஒரு மாணவனுக்கு தொழில் கல்வி தேவை என்பதில் எங்களுக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. அதை ஏன் எட்டாம் வகுப்பிலேயே கொண்டு வந்து, இந்த மாணவனுக்கு இது தான் வரும் என்று முத்திரை குத்துவது போல செய்ய வேண்டும்? எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு சென்று படிக்கட்டும். அதன் பின்னர் அவர்களுக்கு தொழிற்கல்வியை கொடுக்கலாமே? குலக்கல்வி திட்டத்தினால் மாணவனுடைய மேற்படிப்பு கனவு நிறைவேறாமல் போவதைத்தவிர, வேறு நன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த காரணத்தினால் தான் அன்றும், இன்றும், என்றும் நாங்கள் குலக்கல்வி என்ற முடிவை நாங்கள் எதிர்த்து வருகின்றோம்.

அந்த காலத்தில் மாணவர்களின் பாடப்புத்தகத்திலேயே “ன்” விகுதி போட்டுச் சில தொழில் செய்பவர்களை குறிப்பிட்டார்கள். அவர்கள் நிலை கீழானது என்ற எண்ணம் வரும் வகையில் பாடப்புத்தகங்கள் இருந்தன. காமராஜ் ஆட்சிக்காலத்தில் இதைச் சட்டமன்றத்திலேயே தலைவர் கலைஞர் சுட்டிக்காட்டி பாடப்புத்தகத்தில் இருந்தே அதை நீக்கும் படி செய்தார். நம்முடைய தலைவர்களுக்கு இது ஆபத்தானது என்பது தெரிந்ததால் தான் அதை நீக்கினார்கள். குலக்கல்விக்கு ஆதரவளிக்கும் கல்விக்கொள்கையை நான் சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். அந்த சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.

சுதா: சில மாணவர்களுக்கு எல்லா பாடங்களையும் படித்து வெற்றி பெறுவது கடினமாக இருக்கின்றது. அவர்களுக்கு எந்த துறையில் செல்ல ஆர்வம் இருக்கின்றதோ அதற்கான பாடத்தை மட்டும் படிப்பது சரியாகத்தானே இருக்கும்? 

தங்கம் தென்னரசு: இவர்களுக்கு 11ம் வகுப்பில் தேவையான படிப்பை தேர்வு செய்து  கொள்ளும் வசதி இருக்கிறதே? அடிப்படையான சில பாடங்களை, மாணவர்கள் படிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஒரு மாணவனுக்கு கணிதம் வரவில்லை என்று அந்த பாடத்தை படிக்காமல் இருந்தால் நடைமுறை வாழ்க்கையில் பண வரவு - செலவுகளை அவனால் எப்படி பார்க்க முடியும்?

சுதா: கிராமப்புரங்களில் இருந்து  படித்து வரும் மாணவர்களுக்குக் கல்லூரியில்  சேர்ந்த பிறகும் தங்களுடைய பெயர்ரைக்கூட ஆங்கிலத்தில் எழுதத்தெரியவில்லை. இது நம்முடைய கல்வி முறையின் தோல்வியா? அல்லது ஆசிரியர்களின் தோல்வியா? 

தங்கம் தென்னரசு:ஆங்கிலத்தில் மாணவனுக்கு பெயரைக்கூட எழுதத்தெரியவில்லை  என்பதற்கு கல்வி முறையை குறை சொல்லுவதை விட, சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கவ்னக்குறைவே காரணம் என்று சொல்ல வேண்டும். இதற்கு ஆசிரியர்களின் தரத்தை மட்டும் பார்க்காமல், அந்த மாணவனின் குடும்பம் மற்றும் சமுதாய சூழலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். படிக்காத பெற்றோர் என்றால் அந்த மாணவனின் நிலை கடினமாகத்தான் இருக்கும். நான் என்னுடைய அடிப்படை கல்வியை அரசு பள்ளிகளில் தான் படித்தேன். என்னுடைய இந்த நிலைக்கு என் ஆசிரியர்கள் தான் காரணம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எந்தத்திட்டம் கொண்டு வந்தாலும் கடைசியில் அந்த ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு எப்படி சொல்லித்தருகின்றார்  என்பதில் தான் அத்திட்டத்தின் வெற்றி - தோல்வி அமையும். சிறு வயதில் பெரும்பாலான நேரத்தை மாணவர்கள் ஆசிரியர்களுடன் தான் கழிக்கிறார்கள். எனவே அவர்களை சரியாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு தான் அதிகம்.

ரமேஷ்: திமுகவின் வளர்ச்சிக்கு அந்த காலத்தில் நாத்திகம், ஹிந்தி எதிர்ப்பு எல்லாம் உதவின. இன்றைக்கும் அவற்றை வைத்துக் கொண்டு கட்சியை வளர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா? 

தங்கம் தென்னரசு:  திமுகவின் கொள்கை “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது தான். தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி கொண்டு பிளப்பது எந்நாளோ என்று எங்களுடைய தலைவர்கள் சொன்னதாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். எந்த காலத்தில் எந்த இடத்தில் அண்ணா இப்படி சொன்னார்? எந்நாளும் ஒருவருடைய தனிப்பட்ட இறை நம்பிக்கையில் நாங்கள் தலையிட்டதில்லை.

ரமேஷ்: ராமர் எந்த கல்லூரியில் இஞ்ஜினியரிங் படித்தார் என்று கேட்டது, தனிப்பட்ட மத நம்பிக்கையில் தலையிட்டது போல் ஆகாதா?

தங்கம் தென்னரசு: இதை உங்களுடைய இறை நம்பிக்கையை இழிவு செய்வதற்காக கேட்கவில்லை. சேது சமுத்திர கால்வாய்த்திட்டப் பிரச்சனையின் போது, பிரச்சனையின் அடிப்படையில் கேட்கப்பட்டது. உண்மையில் திமுக ஆட்சியில் இருக்கும் போது தான் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்குகள் நடைபெற்றன. திருவாரூரில் ஓடாத கோவில் தேரைச்செப்பனிட்டு ஓட வைத்தது எங்கள் ஆட்சியில் தான். தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை அரசாங்க விழாவாக கொண்டாடியதும் நாங்கள் தான்.

ரமேஷ்: அரசியலில் நாத்திகம் பேசினாலும், திமுக தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோவிலுக்கு செல்வதைத் தடுக்க முடியவில்லையே? அது போல் ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டே குடும்ப உறுப்பினர்கள் ஹிந்தி படிப்பதைத் தடுக்க முடியவில்லையே?

தங்கம் தென்னரசு: மீண்டும் கூறுகின்றேன். யாருடைய இறை நம்பிக்கைகளிலும் நாங்கள் இதுவரை தலையிட்டதில்லை. அதுபோல் எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் தெய்வங்களை வழிபடும் விஷயத்திலும் நாங்கள் தலையிடுவதில்லை. என்றைக்கும் ஹிந்தி என்ற மொழிக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. கட்டாய ஹிந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்தோம். எதிர்க்கிறோம், எதிர்ப்போம்.

சுவாமிநாதன்: ஒரு காலத்தில் மாவட்டம் தோறும் கட்சிப் பொதுக்கூட்டங்களை நடத்தி, சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு மக்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்த கட்சி திமுக. இப்போதெல்லாம் தொலைக்காட்சி விவாத மேடைகளில் யார் யாரோ வந்து பேசுகிறார்கள். இது திமுகவுக்கு பின்னடைவு இல்லையா? 

தங்கம் தென்னரசு: காலத்திற்கேற்ற மாற்றங்களை திமுக உள்வாங்கி வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் திமுகவின் மாலை நேரப் பொதுக்கூட்டங்கள் மாலை நேரப் பல்கலைகழகம்  என்று அழைக்கப்பட்டன. அன்றைக்கு பொதுக்கூட்டங்கள் மூலமாக மட்டுமே நம்முடைய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலை இருந்தது. இன்றைக்கு தகவல் தொடர்பு வளர்ந்து விட்ட காரணத்தால் பொதுக்கூட்டங்களின் தேவை குறைந்து விட்டது. பொதுக்கூட்டங்களில் பேசுவதைப்போல் சட்டமன்றத்திலோ, தொலைக்காட்சி விவாதங்களிலோ பேச முடியாது. எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து வைத்துத்தான் விவாதங்களில் பேசுகின்றார்கள்.

கீதாகிருஷ்ணன்: நீங்கள்  அமைச்சராக இருந்த காலத்தில் உலக செம்மொழி தமிழ் மாநாடு நடத்தினீர்கள். அதில் சமய இலக்கியங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. சீறாப்புராணம், இரட்சண்ய யாத்ரிகம், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் இல்லாத சங்கத்தமிழை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாத பின்னனி என்ன?

தங்கம் தென்னரசு: உலகத்தமிழ் மாநாடு நடத்தும் போதுசமய இலக்கியங்களை விட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவை தவிர்க்கப்படவில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களும், நாயன்மார்களின் தேவாரமும், தமிழுக்கு கிடைத்த அருட்கொடை என்பதில் சந்தேகம் இல்லை. அது போலவே சீறாப்புராணமும், இரட்சண்ய யாத்ரீகமும். தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினால் தமிழ் பக்தி இலக்கியத்தை விட்டு விட்டு யாராலும் எழுத முடியாது. நாலாயிர திவ்ய பிரபந்தம், திராவிட வேதம் என்று அழைக்கப்பட்ட ஒன்று. கம்பராமாயணம் முழுவதும் ராமாவதாரத்தைப் பற்றியது. ஆனால் அது மிகப்பெரிய தமிழ் இலக்கியம் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆய்வு மையங்களில் ஆய்வாளர்கள் எதைத்தேர்வு செய்கிறார்கள் என்பது அவர்களை பொறுத்த விஷயம். அதில் அரசின் தலையீடோ, அரசியலோ கிடையாது. மேலும் இந்த ஆய்வு, ஒட்டு மொத்தமாக தமிழ் மொழி அடைந்த வளர்ச்சியையும், கடந்து வந்த பாதையையும் பற்றியது. தமிழ் பிராமி எழுத்து முறையில் ஆரம்பித்து, இலக்கியம் சோழர்காலம் என்று இன்றைய பின்நவீனத்துவ இலக்கியங்கள் வரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. எனவே மற்ற இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதல்ல எங்கள் எண்ணம்.

கீதாகிருஷ்ணன்: ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன

தங்கம் தென்னரசு: ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார். ஜனநாயக நாட்டில் அவருக்கு அந்த உரிமை உள்ளது. அவர் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தால் , திமுகவும் அதை அரசியல் ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறது.

பத்மாரவி: கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒரே ஒரு சதவிகித வாக்கு வித்யாசத்தில் தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உங்கள் கட்சி இழந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு தோல்வியடைந்ததை எப்படிப் பார்க்கின்றீர்கள்? திமுகவின் தேய்மானமாக இதைப் பார்க்கலாமா? 

தங்கம்தென்னரசு: இடைத்தேர்தல் முடிவிலும், பொதுத்தேர்தல் முடிவிலும், வீக்கத்துக்கும், வளர்ச்சிக்குமான வித்யாசம் உள்ளது. அந்த இடைத்தேர்தல் முடிவு என்பது ஒரு வீக்கம். அதை வளர்ச்சியாக பார்க்க முடியாது. இடைத்தேர்தல் முடிவுகள் எந்த நாளும் பொதுத்தேர்தல் முடிவுகளை பாதிக்காது. இடைத்தேர்தலுக்கு என்றே சில கூறுகளும், பண்பாடுகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து 3 வது இடத்துக்கு போன அதிமுக அடுத்து வந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த எல்லா  இடைத் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தோம். குறிப்பாக சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தோம். ஆனால் கடந்த 2016 பொதுத்தேர்தலில் 89 இடங்களில் வெற்றி பெற்று வெறும் 1 சதவிகித வாக்கி வித்யாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தோம். இந்த 1 சதம் வாக்கு வித்யாசம் கூட ஆளும் கட்சிக்கு எதிராக உருவான மற்றொறு கூட்டணியால் ஏற்ப்பட்ட வாக்கு சிதறல்கள் காரணமாக அமைந்தது. எனவே இடைத்தேர்தல் தோல்வியை ஒரு அளவுகோலாக வைத்துப் பார்க்க முடியாது. அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்!

****************** நன்றி: துக்ளக்


1 comment:

  1. It may satisfy your significance of an traditional MMORPG but is really a visitor game
    rendering it an easy task to maintain hidden out of your own manager.
    The bonuses provided to you through the signup process offer optimum convenience
    to finding well oriented about every one of the games.

    You can also choose any wallpaper to suit your way of life and preference.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))