பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 19, 2011

மயிலாடுதுறை தீவிபத்து!!!

இன்று மாலை ஒரு 6.30 இருக்கும். மயிலாடுதுறை கொத்ததெரு தம்பிக்குநல்லான் பட்டிணம் வாக்குசாவடியில் வாக்குப்பதிவு எல்லாம் முடிந்து வாக்கு இயந்திரம் சீல் எல்லாம் வைத்து விட்டு அதை சேகரித்து போகும் லாரி வருகைக்காக எல்லா கட்சியினரும் காத்து கொண்டு இருந்தோம். எப்போது வண்டி வரும் என யாருக்கும் தெரியாது. ஒரு முறை இரவு 3 மணிக்கு கூட வந்து சேகரித்து சென்றது. அது வரை எல்லா கட்சியினரும் கட்சி பேதம் இன்றி ஒன்றாக டீ சாப்பிடுவதும், எத்தனை சதவீதம் பதிவு ஆனது என்கிற இன்ன பிற விஷயங்கள் பேசிக்கொள்வதுமாக இருப்பர். அதுவும் அந்த எங்கள் வார்டு கொஞ்சம் பதட்டம் வாய்ந்த வார்டு. . திமுக நகரசெயலர் குண்டாமணி என்கிற செல்வராஜும் அதே வார்டு வேட்பாளர். அதே போல அதிமுக நகர செயலர் செந்தமிழனும் அதே வார்டு . செந்தமிழனின் சகோதரி தான் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் அதிமுகவுக்கு. அதனால் எல்லோருமே அங்கே நின்று கொண்டு இருந்தனர். அப்போது தான் என் தம்பி செல்லிடபேசியில் ஒரு அழைப்பு வந்தது. கம்பனி ஆள் தான் பேசினான். "சார், நான் பெரியகடை தெருவில் தான் இருக்கேன். இங்கே ஜனதா ஃபுட்வேர் கடையில் தீ பிடித்து விட்டது, இப்ப தான் அதில் உள்ளே இருப்பவர்கள் வெளியே ஓடி வந்து கொண்டு இருக்கிறார்கள்" என சொன்ன போது அங்கிருந்த எல்லோருக்கும் கிட்ட தட்ட அதே நேரத்தில் அதே போல அழைப்பு.

மற்ற ஊர்களை போல அல்ல மயிலாடுதுறை. மிகப்பெரிய ஊர் எல்லாம் இல்லை. ஆனால் சுற்று வட்டார டெல்டா விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே டவுன் இது தான். கடைதெரு என பார்த்தால் இரண்டே தெரு தான். ஒட்டு மொத்த நெரிசலும் அங்கே தான் இருக்கும். அதே தெருவில் தான் மாயவரத்து மகா பெரிய ஜவுளி கடைகளும், உலகப்புகழ் பெற்ற ஏ.ஆர். சி நிறுவன நகைக்கடைகளும், பெரிய மளிகை கடைகளும் , ஹோட்டல்களும், இரும்பு கடைகளும், வெடிக்கடைகளும் என கலந்து கட்டி இருக்கும். சுற்று வட்டார எல்லா மக்களும் அங்கே தான் தீபாவளி வியாபாரம் செய்ய வந்திருப்பர். அதும் இன்று நகரத்தில் தேர்தல் நாளாகியதால் காலையில் ஓட்டு போட்டு விட்டு அரசாங்க விடுமுறையை குடும்பத்துடன் உல்லாசமாக கழித்து தீபாவளி "பர்சேஸ்" முடித்து கொண்டு போகலாம் என கடைத்தெருவே ஒரே கூட்ட நெரிசல்.

எள் போட்டால் எள் எடுக்க முடியாது என்பார்களே அப்படி ஒரு கூட்டம். நான் மதியம் அந்த பக்கம் போன போதே அப்படி ஒரு கூட்டம். அதும் தீப்பிடித்ததாக சொல்லப்படும் இந்த கட்டிடம் ஜனதா செருப்புகடை ஒரு மூன்று மாடி கட்டிடம். கேரளாவில் இருந்து பிழைப்புக்காக மாயவரம் வந்த இஸ்லாமிய சமூகத்து மக்கள். ஒரு சின்ன டீக்கடை ஆரம்பித்து இன்று இந்த அளவு முன்னேறி வருபவர்கள். நல்ல உழைப்பாளிகள். அதிலே தீப்பிடித்தால் என்ன ஆகும்? வரிசையாக கடைகள். அதும் பக்கத்து பக்கத்து கடைகள் எல்லாம்... நாகோடா ஜூவல்லரி, கல்யாணி கவரிங் என கடைகள், தவிர பெரியநாயகி மளிகை என்னும் பெரிய கடை, வாசன் காபி தூள் போன்ற கடைகள். அதன் இடது பக்கமோ மிகப்பெரிய "கறார் ஜவுளி கடை" . எதிர் வரிசையில் ஏ ஆர் சி கடைகள் என வரிசையாக கடைகள்.

கடைகள் போகட்டும், அதில் உள்ளே இருக்கும் மக்கள் கதி என்ன என்ற பதட்டம் இங்கே பூத்தில் இருக்கும் ஒட்டு மொத்த அரசியவாதிகளையும் ஆட்டிவிட, ஓட்டு பெட்டியாவது ஒன்றாவது என போட்டு விட்டு எல்லோரும் அங்கே ஓடினர். நான் வீட்டுக்கு வந்து பின்னே அங்கே போகலாம் என நினைக்கும் போதே அமரிக்காவில் இருந்து மயிலாடுதுறை சிவாவின் தொலைபேசி. அடுத்து சீமாச்சு அண்ணன், அண்ணி என வரிசையாக தொலைபேசிகள். இவர்களுக்கு எப்படி அதற்குள் தெரியும் என நான் நினைத்து கொண்டிருக்கும் போதே பதிவர் மயில்ராவணனிடம் இருந்து தொலைபேசி. சரியென நினைத்து கலைஞர் செய்திகள் வைத்தால் அதில் பிளாஷ் நியூஸ் என ஓடுகின்றது. அதற்குள் குடந்தையில் இருந்து என் அக்கா விடம் இருந்து தொலைபேசி. கலைஞர் செய்திகளில் "மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் மூன்றடுக்கு வணிக வளாகத்தில் தீ... உள்ளிருக்கும் மக்களின் ஓலம். ஒரு தீயணைப்பு வண்டி மட்டுமே இருப்பதால் தீயை அணைக்க சிரமம்...." இப்படியாக செய்தி ஓடுகின்றது. ஆன்லைனில் முகநூலில் இருந்த தோழர் அன்சாரி "அண்ணே எத்தனை சதம் ஓட்டு பதிவு ஆகியது, என கேட்க நான் இந்த விஷயத்தை சொன்னேன், அதற்கு அவர் "அப்படியா முதலில் அங்கே போங்க. உங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்யுங்க" என சொன்னார்.

நான் உடனே அங்கே போன போது பெரியகடை தெரு குஜ்னி பேப்பர் மார்ட் முன்பாகவே வண்டிகள் செல்ல முடியாத அளவு கூட்டம். கடைத்தெருவில் முழுக்க முழுக்க இருட்டு. கிட்ட தட்ட ஒரு பத்தாயிரம் மக்கள் கூட்டம். தீயணைப்பு வண்டிகள் ஒரு பத்து இருக்கும். இத்தனைக்கும் காவிரி ஒரு 200 மீட்டர் தூரம் தான். காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதனால் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. வந்த எல்லா தீயணைப்பு வாகனத்திலும் போதுமான அளவு தண்ணீர் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் எந்த வண்டியும் உள்ளே செல்ல முடியா வண்ணம் பாழாய்ப்போன பார்வையாளர்கள். க்யூரியாசிட்டியின் உச்சம். எப்படி எரிகின்றது என பார்க்கும் ஆர்வமும், அதை தன் செல்போனில் படம் பிடித்து அதை நண்பர்களிடம் காட்டி மகிழ அல்லது ஏதோ ஒன்று.. பகிர்ந்துக்கனும் என்கிற ஆர்வம் தான் அதிகமாக தெரிந்தது. அந்த ஜனதா செருப்பு கடை முழுக்க எரிந்து போயிருந்தது. அதன் மேல் மாடி தகதகவென எரிந்து கொண்டிருக்க அதன் மேல்மாடியில் பற்றிய தீ வடக்கே (காவிரி இருக்கும் திசையில்) பரவி அதே தெருவின் முனையில் பெரியகடைதெரு அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி வரை வந்து விட்டது. அந்த அர்சனா வில் இருந்து நான்காவது கடையில் இருந்து வரிசையாக வெடிக்கடைகள்.

மக்கள் கூட்டம் அதிகம். தீபாவளி பர்சேஸ்க்காக வந்த மக்கள் அலறி ஓடிவிட, வேடிக்கை பார்க்க வந்த மக்கள் தான் மிக அதிக தொல்லை கொடுத்து கொண்டு இருந்தனர். "மேன் லிஃப்டர்" வாகனம் எதும் உள்ளே நுழைய முடியவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி தெருவிளக்கு போட பயன்படுத்தும் "மேன்லிஃப்டர்" வாகனம் அந்த எரியும் கடை முன்னே முதலிலேயே வந்தது கூட்டத்தின் உள்ளே மாட்டிக்கொண்டு நிற்க வந்த தீயணைப்பு வீரர்கள் அதிலே ஏறி அந்த கட்டிடத்தினை நெருங்கும் போது கூட்டம் விசில் அடித்தும் ஆரவாரித்தும் செய்த கூத்துகள் மகா அசிங்கம்.

ஒரு கட்டத்தில் திமுகவின் நகரசெயலர் குண்டாமணி, அதிமுக செந்தமிழன் ஆகியோர் கூட்டத்தினரை வேட்டியை மடித்து கட்டி கொண்டு ஒரு பெரிய கம்பை எடுத்து கொண்டு தள்ளி வழி ஏற்படுத்தி கொடுக்க ஒரு நான்கு தீயணைப்பு வாகனம் உள்ளே வந்தது. இத்தனைக்கும் எரியும் கடையின் லெதர் பொருட்கள் ஒருவித துர்நாற்ற புகையை கக்க சிலருக்கு மூச்சு முட்டி மயக்கம் வந்தது. பீய்ச்சி அடித்த தண்ணீரால் சாலைகள் ஒரு சாண் அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனாலும் அதை எல்லாம் யாரும் பொருட்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதில் மட்டுமெ குறியாக இருந்து தொலைத்தனர்.

அப்போது ஓ.எஸ் மணியன் அதிமுக எம் பி வர அவர் பின்னால் ஒரு ஐம்பது பேர் வர ஒரு பாழாய் போனவன் வாழ்க கோஷம் போட அவர் அவனை "புட்ரா அவனை புட்ரா" என திட்ட அவன் ஓடிப்போக அவர் தன் கூட வந்தவர்களை வர வேண்டாம் என சொல்லிவிட்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு செந்தமிழன், குண்டாமணி ஆகியோர் இருந்த இடத்துக்கு போய்கொண்டே தன் செல்லிட பேசியால் யாருக்கோ பேசிக்கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் அங்கே ஒரு சுழல் விளக்கு காரில் டவாலி வர கூடவே நாகை ஆட்சியரும் வந்தார். அதற்குள் தேமுதிக எம் எல் ஏ பால அருள்செல்வன், பாஜகவின் நாஞ்சில்பாலு, திமுகவின் எஸ்கொயர் சாதிக், வர்தகர் சங்க பாண்டு, சீமாட்டி பாய் எல்லோரும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக கூட்டத்தை ஒழுங்கு செய்ய அதற்குள் அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி பெரும் சத்தத்துடன் கொழுத்து விட்டு எரிய தொடங்கியது. அதற்குள் ஒரு நான்கு தீ வண்டிகள், எரிந்து கொண்டிருக்கும் கடைகளை விடுத்து எரியாத கடைகள் மேல் சுத்தமாக தண்ணீர் ஊற்றி நனைத்து விட்டது. அதனால் தீ பரவுவது முதலில் தடுக்கப்பட்டது.

பின்னர் தன் உயிரை பணயம் வைத்து இரு வீரர்கள் ஒரு வழியாக அந்த ஜனதா செருப்புகடை மாடிக்கு தாவி ஏறி (அதற்கு முன்னதாக தன்னை தானே தண்ணீரால் நனைத்து கொண்டனர்) நெருப்பை அணைக்க, அது வரை தீயின் வெளிச்சத்தில் எரியும் இடமாவது தெரிந்து கொண்டிருந்தது போய் கும்மிருட்டில் ஒரே புகை மண்டலம் ஆகியது.

அதற்குள், ஓ எஸ் மணியன் போனில் பக்கத்து பக்கத்து ஊர்களில் இருந்து தீ வண்டி வரவழைத்து விட , ஆட்சியர் வந்தவுடன் முதல் வேலையாக அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை எல்லாம் மூட சொன்னார். (நான்கு நாட்கள் பின்னர் மாலை 5 மணிக்கு தான் டாஸ்மாக் திறக்கப்பட்டது) பின்னர் காவிரியில் இருந்து எரியும் இடம் வரை அந்த தீ வண்டிகள் சகஜமாக போய் வரும் அளவு வசதியாக "பார்வையாளர்கள்" எவனும் இருக்காதபடி வழி ஏற்படுத்தி கொடுக்க திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, காங்கிரஸ் எல்லாம் கை கோர்த்து யாரையும் விடாமல் நிற்க, பின்னர் தான் தீயணைப்பு வீரர்கள் அங்கே பம்பரமாக சுழண்டு சுழண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நான் மெல்ல வெளியேறி வீட்டுக்கு வந்தேன். மணி இப்போது பத்து. ஆனால் இன்னனும் தீ நின்ற பாடில்லை. ஆனால் உயிரிழப்பு இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நிம்மதி. (திமுக குண்டாமணிக்கு சட்டையே காணும், அது போல எப்போதும் ஜவுளிக்கடை பொம்மை போல அசங்காமல் மொட மொட வெள்ளையில் உலாவரும் செந்தமிழன் மடித்து கட்டிய வேட்டியும் கசங்கிய கரிபிடித்த சட்டையுமாகவும், தேமுதிக அருள்செல்வம் எம் எல் ஏ அலங்கோலமாகவும், நாஞ்சில் பாலு கரிபடிந்த முகத்தோடும், கைகோர்த்து நிற்க....ஒரு இயற்கை பேரிடர் வந்தால் தான் நாங்கள் ஒற்றுமையாக இருந்து தொலைவோம் என நீங்கள் சொன்னால் எத்தனை பேரிடர்களையும் நாங்கள் தாங்குவோம் என நினைத்து கொண்டே வந்து சேர்ந்தேன். என்னைப்போலவே எல்லா மயிலாடுதுறையானும் நினைத்திருப்பான் அதை காணும் போது என்றே நினைக்கிறேன்!


October 9, 2011

பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும் !!!


இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் திமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளரும் , தளபதி அவர்களின் உற்ற தோழருமான தோழர் திரு ஹசன் முகமது ஜின்னா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் கூறிய அந்த வார்தைகளை நான் கேட்க கேட்க மகிழ்வின் உச்சத்துகே சென்றேன். அவர் சொன்னது இது தான். "நேற்று தலைவர் கலைஞர் அவர்களை அறிவலயத்தில் சந்தித்த போது முகநூலில் நீங்கள் எல்லோரும் எழுதியதை நகல் எடுத்து கொடுத்தேன். உங்கள் பதிவுகளை எல்லாம் தலைவர் படித்தார்.... என மேலும் மேலும் சொல்ல எனக்கு அதற்கு மேல் காதில் எதும் விழவில்லை. உடனே என் அம்மாவிடம் போனை கொடுத்தேன். அம்மாவிடமும் திரு.ஜின்னா அவர்கள் விஷயத்தை சொன்ன போது 'அந்த மவராசன் என் பையன் எழுதியதை படிச்சாராப்பா" என நா தழுதழுக்க நான் உணர்சிக்குவியலாய் இருந்தேன்.

பின்னர் ஒரு அரைமணி நேரம் கழித்து அவரே எனக்கு தொலைபேசி "நான் நடந்ததை அப்படியே என் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கேன். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அங்கே இட்டுள்ளேன்" என கூறினார். அவரது முகநுலில் எழுதியதை இங்கே தருகின்றேன்.

=================================================

நேற்று இரவு தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்தேன், தினத்தோறும் தலைவர் கலைஞர் அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தாலும் அவரை புதிதாக பார்க்கின்ற அனுபவத்தையே தலைவர் கலைஞர் ஒவ்வொருமுறையும் ஏற்படுத்துவார். என்னை குழந்தையாய் கையில் எடுத்து கொஞ்சியிருக்கிறார். சிறு வயது முதல் அவரை நான் பார்த்துவந்தாலும் என்றும் எனக்கு அவர் பிரமிப்புதான்.
தலைவர் கலைஞர் அவர்கள் அறைக்கு உள்ளெ சென்றவுடன் “என்ன? என்று பாசத்துடன் ஒரு வார்த்தை கேட்டார். ஃபேஸ்புக்கில் தலைவர் அவர்களை பற்றி இணையத்தினர் எழுதியுள்ள கருத்துகளை கொண்டுவந்திருக்கிறேன் எனச் சொல்லி கையிலிருந்த ப்ரிண்ட் அவுட்களை தலைவர் கையில் கொடுத்தேன்.
அறிவாலயத்திலிருந்து கிளம்புகின்ற அலர்ட் பி,எஸ்.ஓ கொடுத்துவிட்டதால் தலைவர் கையில் வாங்கி வீட்டில் போய் படிப்பார் என்று நினைத்தேன். கார் தயாராக நிற்கிறது. எல்லோரும் தயார் நிலையில் இருக்கிறார்கள். தலைவர் கையில் வாங்கியதை அப்படியே வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்றில்லாமல் அங்கேயே பிரித்து படிக்கத்தொடங்கினார். அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும் அருகிலிருந்து விளக்கினார். டி.கே.எஸ் அவர்களிடம் தலைவர் படிப்பதை அப்படியே வீடியோ எடுங்கள் ஃபேஸ்புக்கில் போடுவோம் , நண்பர்கள் மகிழ்வார்கள் என்று சொன்னவுடன் அவருடன் அதனை உடனே படம்பிடித்தார்.
இரண்டுபக்கம் தாண்டியவுடன் தலைவர் நிமிர்ந்து இனாமுல் யார் என்று கேட்டார். கழகத் தோழர் , தொடர்ந்து கழகத்திற்காக எழுதிக்கொண்டிருப்பவர் என்று சொன்னேன். தொல்காப்பியன் பக்கம் வந்தவுடன் மீண்டும் இன்னொரு முறை படிக்கத் தொடங்கினார். நான் உடனே சொன்னேன் மயிலாடுதுறையை சேர்ந்தவர், இணையத்தில் எங்கெல்லாம் கழகத்தை விமர்சிக்கிறார்களோ அங்கு இவர் , அப்துல்லா, யுவகிருஷ்ணா உள்ளிட்ட பல நண்பர்கள் பலர் பதிலடி கொடுக்கக்கூடியவர்கள் என்றேன். காதில் கேட்டுக்கொண்டே படிப்பதை தொடர்ந்தார். திடீரென்று வைரமுத்து தி.மு.க என்று ஒருவர் எழுதியிருக்கிறாரே என்றார், ஆம், இவரும் மதுரைக்கரார்தான் என்றேன். எல்லோருடைய பதிவுகளையும் நிதானமாக படித்தார். பலரும் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி கலைஞ்சரிடம் கர்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று புத்தகம் எழுதிய கோவி.லெனின் கூட தன்னுடை பார்வையை பதிந்திருக்கிறார் என்றேன், ம்! பார்த்தேன் என்றார் தலைவர். அத்தனை குறுகிய நேரத்தில் எல்லாவற்றையும் படித்துமுடித்துவிட்டு எழுதிய பெயர்களை நினைவும் வைத்துக்கொண்டு பார்த்தேன் என்று சொல்கிறாரே என்பதை வழக்கம்போல் வியந்தேன்.
படித்துமுடித்துவிட்டு பேப்பரை நீட்டினார் நான் அதை வாங்க, என்னிடம் கொடுக்க மறுத்து தலைவருடய உதவியாளர் நண்பர் நித்யாவிடம் கொடுத்தார். காரனம் ஒருவேளை வீட்டிலும் போய் இன்னும் நிதானமாக படிக்கலாம் என்று நினைத்திருப்பார்.
நான் என் கையில் இருந்த என் ஐபோனை தலைவரிடம் நீட்டி ஃபேஸ்புக் பக்கத்தை காட்டி இதில் வந்திருப்பதைத்தான் தலைவர் படித்தீர்கள் என்றேன், ஐபோனையும் கையில் வாங்கி அதிலும் படித்தபோது என்ஃபீல்டர் பதிவு இருந்தது, நான் என்ஃபீல்டர் யார் என்பதை சொன்னவுடன் அப்படியா என்று வியந்து கேட்டார்.
ஃபேஸ்புக்கில் இணையதள தி.மு.க, இனமான இணைய தி.மு.க இப்படி பல க்ரூப்களை இளைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னேன். மேலும் இணைய நண்பர்களை ஒருங்கினைத்து சமீபத்தில் பெரியார் திடலில் மெல்வின் என்கிற நண்பர் கூட்டம் நடத்தினார், தலைமை கழக பேச்சாளர்கள் ஒப்பிலாமணி, இளம்பரிதி போன்றவர்கள் கலந்து கொண்டு அவர்கள் பேச்சுக்கு இந்த பக்கங்களிலிருந்து பலவற்றை பயன்படுத்திகொள்கிறோம் என்று சொன்னார்கள் என்பதை சொல்லி 2011 தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு நண்பர் ”விக்கல் நிற்க விஷம் குடித்த தமிழக மக்கள்” என்று பதிவு செய்திருந்தார் என்பதை கேட்டவுடன் என்னது? என்று மீண்டும் கேட்டு நன் சொன்னதற்கு வாய் விட்டு சிரித்தார். கலைஞர் ஆட்சியில் நடந்த திருமணங்கள் ரத்து கணவன்கள் கொண்டாட்டம், மனைவிகள் திண்டாட்டம் என்ற பதிவையும் சொன்னவுடன் மிகவும் ரசித்தார் தலைவர் கலைஞர். நம் நண்பர்களின் அனைத்து பதிவுகளையும் தலைவர் படித்தார் என்ற திருப்தியுடன் தலைவரிடம் சொல்லிவிட்டு வெளிவந்தேன். அதன்பிறகு தலைவர் அந்த அறையைவிட்டு காருக்கு செல்ல நண்பர் வினோத் அழைத்துக்கொண்டு வந்தார். தலைவர் காரில் ஏறுகிற நேரத்தில் என்னை பார்த்து வருகிறேன் என்று சொல்லி மெதுவாய் சிரித்தார். அந்த சிரிப்பில் என் உழைப்பை இன்றைய இளையதலைமுறையும் அறிந்திருக்கிறார்கள், என் உழைப்பு வீன்போகவில்லை என்கிற பெருமிதம் தெரிந்தது
===================================================

மேலே இருக்கும் வரிகள் தான் அவரது முகநூலில் எழுதிய வாசங்கள். அவரது முகநூல் ஐடி http://www.facebook.com/profile.php?id=100000241241891 அதிலே வீடியோவும் காணக்கிடைக்கும்.

இந்த ஒரு சின்ன அங்கீகாரம் போதும். நாங்கள் திராவிடமுன்னேற்ற கழகம் என்பது ஒரு பேரியக்கம். ஒன்னரை கோடி உறுப்பினர்கள். நான் கடைசி தொண்டன். என் எழுத்தை படிக்கும் என் தலைவன். இதை உலகில் எந்த ஜனநாயக கட்சியில் காணமுடியும்? சொல்லுங்கள் தோழர்களே!

ஒரு தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள நெருக்கம் , பாசம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் திமுகவை விட்டால் வேறு ஏது கட்சி இருக்கின்றது இந்த உலகில்?

இரண்டு வருடம் முன்னே ஒரு ஜூன் மாதம் இரண்டாம் தேதி, மயிலாடுதுறையின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் மிசா. அ. செங்குட்டுவன் மரணப்படுக்கையில் இருக்கின்றார். வாழ் நாள்வரை பெரியார் வழியில், அண்ணா வழியில், கலைஞர் வழியில் வாழ்ந்த அக்மார்க் நாத்திகன். எல்லா கட்சி உறுப்பினர்களும் போய் பார்கின்றனர். அவர் கண்களில் இருந்து கண்ணீர். "அண்ணே ரொம்ப வலிக்குதா" எனக்கேட்ட ஒருவரிடம் "இல்லை நான் மிசாவை பார்த்தவன். எனக்கு உடல் உபாதை வலிக்கும் போதெல்லாம் என் தம்பி ஸ்டாலின் மிசாவில் பூட்ஸ்காலால் மிதிபட்ட போது இது போல வலித்து இருக்குமா, அல்லது இதை விட அதிகமாக வலித்து இருக்குமா என எனக்கு நானே பட்டிமன்றம் நடத்திப்பேன்" என சொல்கிறார். கேட்டவர்கள் கலங்கி போனார்கள். ஒரு கட்டத்தில் அவர் கண்களில் கண்ணீர். "அண்ணே, ஏன் அழுற?" என கேட்டோம். "இல்லடா தம்பிங்களா, நான் கடவுள் இல்லைன்னு கடைசி வரை இருந்துட்டேன். இப்ப இருந்தா நல்ல இருக்கும்னு தோணுது" ( மக்களே தசாவதாரத்தில் மட்டும் கமல் குழப்பியது போல) . அதுக்கு ஒரு உடன்பிறப்பு " அண்ணே, சரி சரி வா வா எதுனா கோவிலுக்கு" என கூப்பிட்ட போது " போடா போட பொறம் போக்கு, நான் உசிரோட இன்னும் ஒரு நாள் இருக்கனும்னு நினைச்சது வேற காரணம். நான் இன்னிக்கு செத்தா திமுக கொடி எல்லாம் மாயவரத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும், அது கூடாது. ஏன்னா விடிஞ்சா என் தலைவன் பிறந்த நாள். ஜூன் 3. அன்னிக்கு நான் பார்த்து பார்த்து ஏத்துன கொடி எல்லாம் அரைக்கம்பத்தில் இருக்க எனக்கு மனசு வரலை. அதனால தான் சொன்னேன். கடவுள்ன்னு எவனாவது இருந்த சொல்லி அனுப்பு. நான் ஜூன் 3 அன்னிக்கு வர்ரேன்ன்னு" என சொன்னார்.

ஆனால் அவர் உயிர் பிரிந்தது. மயிலாடுதுறை நகரகழகம் தலைவர் பிறந்த நாள் காரணமாக சென்னை செல்வதா அல்லது என்ன செய்வது என தெரியவில்லை. தளபதியிடம் இருந்து செய்தி வருகின்றது. "அண்ணன் மிசா. அ. செங்குட்டுவன் உடல் அடக்கம் நடக்கும் வரை அங்கிருந்து யாரும் இங்கே வரக்கூடாது. நான் என்னால் இயன்ற வரை வருகிறேன்" என. பின்னர் பேராசிரியர் அன்பழகனார் முரசொலியில் கட்டம் போட்டுட்டார். அதாவது மயிலாடுதுறையில் திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என!

இது தான் திமுக! ஒரு தலைவனுக்கும் ஒரு தொண்டனுக்கும் இடையேயான ஒரு பாசப்பிணைப்பு!

வாழ்க திமுக! வாழ்க கலைஞர்! வாழ்க தளபதி!




September 22, 2011

அய்யோ பேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!

இந்த பதிவு அடிக்க என்னவோ பத்து நிமிஷம் தான் ஆச்சு. ஆனால் தலைப்பு வைக்க தான் நீண்ட நேரம் ஆனது. "நானும் பேயும்" என முதலில் தலைப்பு வைத்தேன். அப்படி வைத்தால் "இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்" என பின்னூட்டம் போடுவாங்க. சரின்னு "நான் பேயை பார்த்தேன்" என தலைப்பு வைக்கலாம் என நினைத்தேன். "பெல்ஜியம் மிரர் வாங்கினதுக்கு எல்லாம் பதிவா?" என பின்னூட்டம் வரும். எது வந்தாலும் சரின்னு தான் என் அமானுஷ்ய அனுபவத்தை பதிவிட்டு உங்களை பயம் காட்டலாம் என முடிவுக்கே வந்துவிட்டேன்.

மாயவரத்தில் இருந்து கிழக்கே பூம்புகார் போவதற்கு இரு வழிகள் உண்டு, பூம்புகார் சாலை, அடுத்து செம்பனார்கோவில் சாலை. இரண்டுமே ஒரே முக்கூட்டில் சந்தித்து பின்னர் திருவெண்காடு அருகே சந்தித்து ஒரே சாலையாக ஆகும் பூம்புகார் செல்ல.அந்த இரு சாலைகளுக்கும் நடுவே தான் காவிரி ஓடும். அதன் இரு கரைகளும் பச்சை பசேல் என இருக்கும். கரையோர கிராமங்களின் எல்லையில் காவிரிகரையில் இடுகாடுகள் இருக்கும். இரு பக்க கிராமங்களை இணைக்கும் வகையில் சின்ன சின்ன ஒரு மீட்டர் அகலத்தில் மூங்கில் பாலங்களோ கான்கிரீட் பாலங்களோ இருக்கும்.

நான் அப்போது படித்து முடித்து விட்டு தற்காலிகமாக வி கே ஆர் பப்ளிகேஷன் என்னும் கம்பனியில் விற்பனை வேலை. உயிரியல் பாடத்துக்கு செய்முறை புத்தகங்களை இரு கட்டை பையில் எடுத்து கொண்டு திருவெண்காடு சீனிவாசா பள்ளிக்கு சென்றிருந்தேன். மதியம் 12 மணிக்கு எல்லாம் வேலை முடிந்தது. திரும்ப மாயவரம் வரும் போது கொஞ்ச தூரத்திலேயே பஸ் டயர் வெடித்து நின்று விட்டது. பேருந்தில் வந்தவர்கள் வேறு வேறு பேருந்தில் ஏறிவிட நான் மட்டும் கொஞ்சம் நடந்து காவிரிக்கரையை அடைந்து அக்கரையில் இருக்கும் திருச்சம்பள்ளி என்னும் கிராமம் வழியே செம்பனார்கோவில் போகலாம் என நினைத்து புத்தக பைகளை (இரு கையிலும் இரு பைகள், ஒவ்வொன்றும் இருபது கிலோ எடை இருக்கும்) எடுத்து கொண்டு நடக்க தொடங்கினேன். காரணம் என் நண்பன் அப்சராகார்த்தி அப்போது திருச்சம்பள்ளியில் இருக்கும் இந்திய உணவு கழகத்தின் (FCI) நெல் அரைவை நிலையமும் அதன் இணைப்பாக தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலையும் இருந்தது ..அதிலே தற்காலிகமாக "கெமிஸ்ட்" வேலை செய்து கொண்டிருந்தான். அவனையும் பார்த்து விட்டு செம்பனார்கோவில் "சம்மந்தம் மேல் நிலைபள்ளி"க்கு போகலாம் என நினைத்து நடக்க தொடங்கினேன்.

கிட்ட தட்ட காவிரி கரையை அடையும் போதே அந்த கிராமத்தின் இடுகாட்டில் இரு பிணங்கள் எரிந்து கொண்டு இருந்தது. அதே போல பாலத்துக்கு அந்த பக்கம் ஒரு பிணம் எரிந்து கொண்டு இருந்தது. அப்போது மதியம் ஒரு மணி ஆகியது. பொதுவாக சின்ன வயதில் விடுமுறை நாட்களில் அது போல மதியம் விளையாட கிளம்பினால் பாட்டி "டேய் இது உருமநேரம் பேய் நடமாடும் நேரம். போகாதீங்க" என மிரட்டுவது ஏனோ ஞாபகம் வந்து தொலைந்தது. ஆனாலும் தைரியம் வரவழைத்து கொண்டு நடக்க தொடங்கினேன். வெள்ளை உடையில் யாராவது கண்ணில் தென்படுகின்றனரா என பார்த்தால் அங்கே பிணங்களை தவிர யாரும் இல்லை. அது கொஞ்சம் பயமாக இருந்தாலும், யாருமே இல்லை என்கிற போது பேயும் இல்லைதானே என ஆசுவாசப்படுத்தி கொண்டு நடந்தேன்.

கொஞ்ச தூரம் நடந்ததும் ஒரு வயதான ஒருவர் , காஸ்ட்யூம்னு பார்த்தா ஒரு கோவணம். கோவணம் மட்டுமே தான். ஆனால் அந்த கோவணத்தை விட பெரியதாக ஒரு வேட்டியை தலையில் முண்டாசாக கட்டியிருந்தார். காதில் ஒரு பீடி. பற்கள் வெற்றிலை காவி. "எழவு அந்த தலையில் கட்டியிருப்பதை எடுத்து இடுப்பில் கட்டிகிட்டா என்ன?" என கேட்க நினைத்து கேட்கவில்லை. ஏனனில் கிராமத்து குசும்பு எதுனா எடக்கு மடக்கா பதில் வரும். அவர் நேரே என்னை நோக்கி தான் வந்தார். கொஞ்சம் பயம் அதிகமாகியது. மிக அருகே வந்து "தம்பி பீடிக்கு நெருப்பு இருக்குமா?" என கேட்டார்.

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏனனில் இதே போல சமிஞ்கைகள் தான் எல்லா சினிமாவிலும் அமானுஷ்ய சீன்களில் வரும். "அது என்ன, யாராவாது செத்துட்டா டாக்டர் கண்ணாடி கழட்டிட்டு 'சாரி'ன்னு சுரத்தே இல்லாமல் சொல்லுவாரு, போலீஸ் அசூசையாக தொப்பியை கழட்டுவார், அதே போல சுடுகாடு காமிச்சா பீடிக்கு நெருப்பு கேட்டு ஒருவர் வருவாரு. பின்னே பார்த்தா அவருக்கு வேட்டிக்கு கீழே காலே இருக்காது. "நான் செத்து ரெண்டு வருஷம் ஆச்சேன்னு கத்திகிட்டே மறைந்து விடுவார். ச்சே இந்த தமிழ்படங்களே இப்படித்தான். இனி நான் ஈரான் படம் மட்டுமே பார்க்க போறேன்" என நெஞ்சு நிமிர்த்தி வசனம் பேசிக்கொண்டு திரிந்த காலம் அது. என்கிட்டயே சுடுகாட்டில் இப்படி ஒரு பேய் நெருப்பு கேட்கும் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை.

மெதுவா வேட்டிக்கு கீழே கால் இருக்கான்னு பார்த்தேன். அவரு மூஞ்சி தான் இருந்தது. ஏன்னா அவரு தான் வேட்டிய தலையிலே கட்டியிருந்தாரே! கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை இறக்கி கீழே பார்த்தேன். கால் இருந்தது. கொஞ்சம் நிம்மதி ஆகியது. கோவமும் வந்தது. என்னை பார்த்து பீடிக்கு நெருப்பு கேட்டாரேன்னு. நானே அப்போது பீடி மாதிரி தான் இருப்பேன். தவிர அப்போதெல்லாம் எனக்கு லாகிரிவஸ்துக்கள் அத்தனை ஒரு பரிட்சயம் ஆகாத நேரம். அதிகபட்சமாக புளிப்பு மிட்டாய் வாங்கி வாயில் போட்டுப்பேன். (ஆமாம் புளிப்பு மிட்டாயே லாகிரிவஸ்துவாக நான் நினைத்து கொண்டிருந்த காலம். எத்தனை ஒரு நல்ல பையன் நான் என்பதை வாசகர்களின் யூகத்துகே விடுகின்றேன்)

அவரிடம் "இல்லை" என சொன்னபோது அவரும் "சரி தம்பி பார்த்து போங்க" என சொல்லிவிட்டு கடந்து போனார். அவர் சும்மா போயிருக்கலாம். பார்த்து போங்க என சொன்னது தான் பயமாக இருந்தது. "அப்படின்னா இங்க பேய்கள் நடமாட்டம் கொஞ்சம் அதிகம் தான் போலிருக்கு" என நினைத்து கொண்டேன். எரியும் சிதையை பார்த்தேன். பிணம் எரியும் போது எழுந்து டான்ஸ் ஆடும் என சின்ன வயசில் பெருஞ்சேரி நடராசன் கதை விடுவான். அப்போது வெட்டியான் அதை அடிப்பான் எனவும் சொல்லியிருக்கான். ஆமாவா என நினைத்து சிதையை பார்த்தேன். மூன்று பிணங்களும் சமர்தாக எரிந்து கொண்டிருந்தது. 'அடக்கமான' பெண்கள் போலிருக்கு என நினைத்து கொண்டேன். எங்கேயோ ஒரு பறவை கத்தி பீதியை கிளப்பியது. ஆந்தை போலிருக்கு. ஆந்தை இரவில் தானே வரும். ஓவர்டைம் பார்க்குது போலிருக்கு. பொன்னியின் செல்வன் கோடியக்கரை காடு, கொள்ளிவாய் பிசாசு எல்லாம் ஞாபகம் வந்தது. பூங்குழலி ரொம்ப அழகு தான் என மனசில் ஓடியது. ச்சே அவளுக்கு இருக்கும் வீரம் எனக்கு இல்லையே. மெதுவாக பாலத்தின் அருகே வந்தேன். இந்த பயத்தின் காரணமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றியது. முட்டிக்கொண்டு வந்தது. சரி பாலத்தை கடந்து அந்த பக்கம் போய் அங்கே எரியும் அந்த பிணத்தையும் தாண்டி விட்டு திருச்சம்பள்ளி ஒத்தை அடி பாதையில் சுத்தமான இடம் பார்த்து அசுத்தம் செய்யலாம் என நடக்க தொடங்கினேன்.

கை இரண்டும் குடைந்தது. பாலத்தின் மீது அதை வைத்து விட்டு சிம்ரன் போல சோம்பல் முறித்தேன். பின்னர் திரும்பி பார்த்தேன். என்னை கடந்து போன தாத்தா தூரத்தில் போவது தெரிந்தது. கால் இருந்தது. நிச்சயமாய் அவர் பேய் இல்லை என நிம்மதியாக இருந்தது. பின்னர் பையை தூக்கிக்கொண்டு பாலத்தில் ஒரு பாதி தூரம் வந்து விட்டேன். இன்னும் பாதி பாலம் தான் பாக்கி இருக்கு. ஒரு வழியாக இரு பிணங்களின் கிட்டே இருந்தும் தப்பித்து விட்டேன். மீதி பாதி பாலம் கடந்தால் அந்த மீதி ஒரு பிணத்தையும் தாண்டி விடலாம். பின்னர் ஒத்தையடி பாதையில் ஒரே ஓட்டம் ஓடிடலாம். எங்கே இருந்து ஓடுவது.நானே நாற்பது கிலோ இருப்பேன். தனியா ஓடினா ஓடிடலாம். கையில் வேறு 40 கிலோ இருக்கு. ஓடல்லாம் முடியாது. காக்க காக்க கனகவேல் காக்கன்னு ஷஷ்டி கவசம் சொல்லிகிட்டே நடக்க வேண்டியது தான்.

அப்போது தான் நான் பேயை பார்த்தேன். இந்த பதிவின் கதாநாயகியாகிய பேயை பார்த்தேன். (மனம் இளகியவர்களும், கர்ப்பினி பெண்களும், என் பழைய பதிவுகளை எல்லாம் ஏற்கனவே படித்து தைரியமானவர்களும் மேலே தைரியமா படிங்க.. ஒன்னும் ஆகாது. ஏதாவது ஆனா எனக்கு மெயில் செய்யவும். நானும் தெரிஞ்சுக்கறேன்).

பேய்னா அப்படி ஒரு பேய். அது ஒரு பெண் பேய். (பெண்ணை பேய் என சொல்கிறேன் என சமூகநீதிகாத்த சங்கிலிக்கருப்பன்கள் கோவப்படவேண்டாம்) நெசமாகவே அது ஒரு பெண். வெறும் எலும்பு மட்டுமே. எலும்புக்கூடு மட்டுமே. தலை முடி எல்லாம் எரிந்து போய் அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. உடலில் ஒட்டு துணி இல்லை. தொடைப்பகுதிகளில் கொஞ்சம் சதைகள் கூழாக இருந்தது. பற்கள் இருந்தது. எனக்கு உதறல் அதிகம் ஆகிவிட்டது. திரும்பவும் ஓடிவிடலாமா என நினைத்த போது வந்த பக்கம் இரண்டு பிணங்களும் ஆக்ரோஷமாக எரிந்து கொண்டு இருக்கின்றது. தவிர நான் முக்கால்வாசி இந்த பாலத்தில் வந்துவிட்டேன். திரும்பவும் தைரியம் கூட்டிக்கொண்டு அதை பார்த்தேன். சிரித்தது. இரு கையையும் நீட்டி என்னை அழைத்தது. எனக்கு முதுகுதண்டு ஜில்லிட்டது.

வாய்விட்டு கத்தி யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம் என நினைத்த போது யாருமே இல்லை அந்த பகுதிகளில். என்னை கடந்து போன அந்த தாத்தாவும் மறைந்து விட்டார். அனிச்சையாக நான் ரம் குடித்த குதிரை போல முன்னால் போகின்றேன். கிட்ட தட்ட அதன் அருகே வந்து விட்டேன். அந்த ஒரு மீட்டர் அகல பாலத்தின் ஒரு முனையில் அந்த கைப்பிடியில் உட்காந்து இருந்த அது கீழே குதித்தது. நான் இரு கையிலும் பை வைத்து கொண்டு அதை கடந்து அந்த பக்கம் போவது என்பது அதை உரசாமல் இயலாது. கந்தசஷ்டியும் ஞாபகம் வரலை எந்த ஷஷ்டியும் உதவவில்லை. சரி என் வாழ்க்கை அவ்வளவு தான். அது என்னை அடித்து விடும். நானும் மரித்துப்போய் பேயாக ஆகிவிடுவேன். அப்படியே ஆனாலும் நம்ம ஏரியா சுடுகாட்டுக்கு போய்டனும். இங்க எல்லா பேயும் புதுசு. பழக நாளெடுக்கும். அங்கன்னா நமக்கு தெரிந்த பேயா இருக்கும். பின்னே வரக்கூடிய பேய்களும் நமக்கு தெரிஞ்ச பேயாகத்தான் இருக்கும். மியூச்சுவல் ட்ரான்ஸ்பர் எதுனா நம்ம ஏரியா சுடுகாட்டுக்கு கிடைச்சா நல்லா இருக்கும். இந்த சுடுகாட்டிலே நமக்கு தெரிஞ்ச பேய் யாராவது இருக்காங்களா என நினைத்த போது தான் திமுக எக்ஸ் எம் எல் ஏ விளநகர் கனேசன் அந்த ஏரியா என்பது நியாபகம் வந்தது.ஒரு வருஷம் முன்ன தான் அவர் இறந்து போயிருந்தார். நம்ம கட்சிகாரர், எப்படியும் ட்ரான்ஸ்பர் வாங்கி அனுப்பிடுவார். அய்யோ உறுப்பினர் கார்டு நம்பர் கூட மறந்து போச்சே.. எனக்கு தலையே சுற்றியது.

எப்படி அதை கடந்து இந்த பக்கம் வந்தேன் என எனக்கு இப்போதும் ஞாபகம் வரவில்லை. ஆனால் அந்த ஒத்தையடி பாதைக்கு வந்துவிட்டேன். அது என்னை நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்தது. நான் சுத்தமான இடம் பார்த்து உச்சா போகவேண்டும் என எண்ணிக்கொண்டு இருந்ததெல்லாம் வேஸ்ட். என் பேண்ட் தான் அதை விட சுத்தமான இடம் என அதுவே தீர்மானித்து விட்டது. எல்லாம் தானாக நடந்து விட்டது. என் இஷ்டத்துக்கா எல்லாம் நடக்குது. அந்த ஒத்தையடி பாதையை தாண்டி அந்த இந்திய உணவு கழகம் வந்து சேர்ந்து கார்தியிடம் விஷயம் எதும் சொல்லும் முன்னே "என்னடா பேயடிச்ச மாதிரி இருக்கே" என கேட்டான். அவன் சுத்த நாத்திகம். (இப்பவும் தான்) விஷயம் சொன்னேன். சிரித்தான். அப்பவும் அவன் நம்பவில்லை. என் பைகளை அவன் லேப்ல வச்சுட்டு என்னை ஒரு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பாலம் நோக்கி மிதித்தான்.

அவன் இருக்கும் தைரியம் எனக்கு. இருந்தாலும் பயம் இன்னும் போகலை. அங்கே போனால் அந்து பாலத்தின் மீது உட்காந்து இருந்தது. "ஒ இதுவா, நமக்கு தெரிஞ்சது தான். இரு நான் போய் பேசிட்டு வர்ரேன்" என சொன்ன போது எனக்கு அழுகையும் பெருமையும் ஒரு சேர வந்தது. ஒரு சாதாரன மாயவரம் டவுன்ல நம்ம கூட ஒன்னடி மன்னடியா பழகிய கார்த்தி இன்னிக்கு ஒரு பெரிய குக்கிராமத்துல ஒரு மாபெரும் சுடுகாட்டிலே பேய்கிட்டே எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தும் அளவு பெரியாளா ஆகிட்டானே என்கிற பெருமையும் கூடவே அதுகிட்டே இவனுக்கு என்ன பேச்சு வேண்டிகிடக்கு என்று அழுகையும் வந்தது.

அது கிட்டே பேசினான். திரும்ப வந்தான். "டேய் பாவம்டா அது பேர் சுந்தரி. இந்த கிராமத்து பொண்ணு தான். கட்டி கொடுத்து புருசன் சரியில்லைன்னு முதல் நாளே மண்ணெண்ணய் ஊத்தி கொளுத்திகிச்சு. அத்தோட மனநிலையும் சரியில்லாம போச்சு. ஆஸ்பத்திரிலயும் வச்சுக்கலை. ஓடி வந்துடுச்து. அத்தோட இங்க சுடுகாட்டுக்கு பக்கத்திலே வந்து உட்காந்துக்குது.பாவம் டா.. " என சொன்ன போது எனக்கு அதன் மீது பயம் போய் இரக்கம் வந்தது. அத்தோடு கூடவே ஜுரமும் வந்தது. பின்னர் ஒருவாரம் எனக்கு செம ஜுரம்.

இதாங்க என் பேய்கதை. அதன் பிறகும் கொஞ்ச காலம் எனக்கு பேய் பற்றிய பயம் இருந்துச்சு. பின்னே கடந்த பதினாறு வருஷமா பயம் விட்டுப்போச்சு:-)) இப்பல்லாம் நான் பயப்படுவது இல்லை:-))

September 17, 2011

Ms./ M.S.ராமூர்த்தி அய்யர் இரும்பு கடை!!!


மன்னிக்கவும்! திரு. நேசமித்ரன் ஒரு எழுத்துப்பிழை சுட்டிகாட்டி இருந்தார். அதை சரி செய்யும் போது தவறுதலாக இந்த பதிவை அழித்து விட்டேன். அதிலே 22 பின்னூட்டங்களும் சேர்ந்து போய்விட்டது. அதனால் மீண்டும் பதிகின்றேன். மன்னிகவும்!

***********************************




என் நான்கு வயதில் என் குறும்புக்கார மாமா ஒருவர் "உனக்கு பனந்தோப்பில் ஒரு அடக்கமான பெண் பார்திருக்கேன். அவங்க உனக்கு ராமூர்த்தி அய்யர் ஜூவல்லரியிலே மொத்தமான சங்கிலி போடுவதா சொல்லியிருக்காங்க. வரும் அமாவாசையிலே திம்மநாயக்கன் படித்துறை மண்டபத்திலே கல்யாணம்" என சொல்லுவது வழக்கம். நானும் ஏதோ எனக்கு பெரிய அளவில் கல்யாணம் நடக்க போவதாக நினைத்து சந்தோஷப்படுவேன்.

பின்னர் காலம் போகப்போகத்தான் தெரிந்தது. பனந்தோப்பு பகுதி என்பது சுடுகாடு என்பதும் அவர் சொன்னது "அடக்கமான" பெண் என்பதும், திம்மநாயகன் படித்துறை மண்டபம் என்பது இறந்தபின்னர் காரியம் செய்யும் இடம் என்றும். ராமூர்த்தி அய்யர் ஜுவல்லரி என்பது ராமூர்த்தி அய்யர் இரும்புகடை என்றும் அங்கே இரும்பு சங்கிலி தான் கிடைக்கும் என்பதும் தெரிந்து சிரித்து கொண்டேன். அப்படித்தான் ராமூர்த்தி அய்யர் இரும்புகடை எனக்கு அறிமுகம் ஆனது. ஆமாம் இந்த பதிவின் கதாநாயன் அந்த "M.S.ராமூர்த்தி அய்யர் ஹார்டுவேர்ஸ்" தான். மயிலாடுதுறையின் மைந்தர்கள் என்றால் அந்த கடைக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்க முடியவே முடியாது. கடை என்று சொன்னா ஏதோ அப்படி இப்படி கடை இல்லை. அது ஆச்சு அதை தொடங்கி ஒரு எண்பது வருடங்கள். அந்த ராமூர்த்தி அய்யர், அதன் பின்னே அவரது மகன் M.R. கண்ணப்பன், பின்னர் அவரது இரு மகன்கள் அதிலே தற்போது உரிமையாளராக இருக்கும் அவரது இளைய மகன் M.R.K.கீர்த்திவாசன் அண்ணன். எனக்கு நினைவு தெரிந்து நான் ராமூர்த்தி அய்யரை பார்த்தது இல்லை. ஆனால் M.R. கண்ணப்பன் அவர்கள் தான் அதன் முதலாளி நான் சிறு வயதாக இருக்கும் முதலே. தவிர அவர் எங்கள் பள்ளி தி.ப.தி.அர.தேசிய மேல்நிலைப்பள்ளியின் ஆட்சிமன்ற குழுவின் முக்கிய உறுப்பினரும் கூட.

அந்த கடையில் கட்டுமான பொருட்கள் சிமெண்ட், கம்பிகள்,பெயிண்ட் வகையறாக்கள் உட்பட எல்லாமே கிடைக்கும். இப்போதும் அந்த நிறுவனத்தை நான் கடை கடை என்று சொல்வதால் அதன் விஸ்தீரனம் என்ன என்பது உங்களுக்கு புரியவில்லை தானே? இருங்கள். அந்த கடையில் ஒரு நாளைக்கு விற்பனை ஆகும் சிமெண்ட் மூட்டை மட்டும் சுமார் 5000 முதல் 8000 வரை. கம்பிகள் நூற்றுக்கணக்கான டன்கள். இருக்கும் இடமோ மயிலாடுதுறையின் மைய பகுதியான மணிக்கூண்டு க்கு பக்கத்தில். அகலம் ஒரு என்பது அடியும் நீளம் ஒரு 250 அடியும் இருக்கும் சுமாராக. குடோன் என்பது காவிரி கரையில் இருக்கின்றது. அந்த கடையின் உள்ளே ஒரு லாரி போய் வருவது பெரியகோவில் உள்ளே ஒருவன் சைக்கிளில் போய் வரும் போது எப்படி இருக்கும், அது போல லாரி அந்த கடையின் உள்ளெ போய் ஒரு ரவுண்டு அடித்து திரும்பும் என்றால் மயிலாடுதுறையின் இதய பகுதி கடைத்தெருவில் அந்த இடம் எவ்வளவு பெரியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இத்தனைக்கும் குடோன் தனி இடம்.

சரி அப்படி என்ன அந்த கடையின் விஷேஷம்? ஏன் அப்படி அங்கே மட்டும் அத்தனை பரந்துபட்ட வியாபாரம்? விலை அங்கே குறைவா? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டால் அதல்லாம் எதும் இல்லை. ஒன்றே ஒன்று தான். நேர்மை. அவர்களின் நேர்மை. பில் இல்லாத வியாபாரம் கிடையாது. நிங்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக அரசு விதிக்கும் வரிகள் கண்டிப்பாக நம்மிடம் வசூல் செய்யப்படும். அது மிகச்சரியாக அரசுக்கு செலுத்தப்படும். தரமான பொருட்கள் மட்டுமே வியாபாரம் செய்யப்படும். எடை சரியாக இருக்கும். அங்கு இருக்கும் விற்பனையாளர்களுக்கு நான் டிப்ஸ் எதும் கொடுக்க தேவையும் இல்லை கொடுத்தாலும் அதை மறுதளிக்கும் அளவுக்கான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதே போல நாம் சிமெண்ட் வாங்கினாலும் சரி கம்பிகள் வாங்கினாலும் சரி கொத்தனார், இஞினியர் ஆகியோருக்கு எந்த கமிஷனும் அவர்களுக்கு அந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கவும் மாட்டார்கள். அது போல கடன் கிடையாது. கையிலே காசு வாயிலே சிமெண்ட் பாலிசி தான்.

ஒரு வீடு கட்ட ஆரம்பித்ததும் மேஸ்திரியோ இஞினியரோ "ராமூர்த்தி அய்யர் கடை வேண்டாம். அதை விட சூப்பரா ஒரு மூட்டைக்கு 20 ரூபா கம்மியா நான் வேற கடையிலே வாங்கி தருகின்றேன் என்பது தான் முதல் டீலிங் ஆக இருக்கும். அதை எல்லாம் மீறி மக்கள் ராமூர்த்தி அய்யர் கடைக்கு தான் படையெடுப்பார்கள். அந்த கண்ணப்பன் அய்யரோ, கீர்த்திவாசன் அண்ணனோ மிகப்பெரிய ஆன்மீக பற்றாளர்கள் என்றேல்லாம் சொல்ல இயலாது. கடையில் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாமி படங்களுக்கு பைனான்ஸ் கம்பனியில் போடுவது போல சரம் சரமாக மல்லிகைப்பூவும், வாசனை பத்திகளும் படைக்கப்பெறாது. அவர்களுக்கு செய்யும் தொழிலே முதல் தெய்வம்.

எனக்கு தெரிந்து அந்த கடை ஒரு மிகப்பெரிய ஓட்டு வீடு போன்ற கட்டிடம் தான். அந்த கடைத்தெருவின் அனைத்து கடைகளும் (எதிரே இருக்கும் ஏ ஆர் சி ஜுவல்லரிகள்) கண்ணாடி மாளிகையாக ஆன பின்னரும் இது ஒரு ஓடு வேய்ந்த கடை தான். முதலாளிக்கும், அவரது மகன்கள் இருவர், பின்னே ஒரு கணக்கர் ஆகியோருக்கு வரிசையாக நான்கு குழி அதாவது பள்ளம் இருக்கும் அதன் முன்பக்கம் ஒரு பெரிய மர டெஸ்க், இவர்கள் சென்று அந்த குழியில் காலை தொங்கவிட்டு அமர்ந்து டெஸ்கில் பெரிய பெரிய தோல் பைண்டிங் செய்த லெட்ஜர் பிரித்து வைத்து கொண்டு தலைக்கு மேலே ஒரு அந்த கால ஜி ஈ சி மண்டை சீலிங் ஃபேன் போட்டுக்கொண்டு உட்காந்து கொண்டு முதலாளிக்கு மாத்திரம் எக்ஸ்ட்ரா காற்றுக்காக ஒரு இங்கிலாந்து ராலி பேன் சத்தமில்லாமல் ஓடும் அதை வைத்து கொண்டு கருமமே கண்ணாய்இருப்பர். கண்ணப்பன் அய்யர் கடைக்கு வந்ததும் சட்டையை கழட்டி பின்னால் இருக்கும் ஆணியில் மாட்டிவிட்டு மல் துணியில் தைக்கப்பட்ட ஒரு கை வைத்த பனியனோடு பில் போடுவார். ஒரு கருப்பு கலர் அந்த கால கிரகாம்பெல் காலத்து விரல் வைத்து நம்பர் சுற்றும் போன் ஒரு கொலாப்ஸ் ஸ்டாண்ட் ல் இருக்கும். முதலாளி, அவரது மகன்கள், கணக்கர் இதிலே யார் பேச வேண்டுமோ அவர்களுக்கு அந்த போன் நகர்த்தி வைக்கப்படும்.

இப்படியாக பழமை மாறாமல் இருந்த அந்த வணிக வளாகம் இன்னும் சொல்ல போனால் இந்த ஊரில் இருந்த மாட மாளிகை எல்லாம் அவர்கள் விற்ற சிமெண்ட், கம்பிகளால் உயர்ந்து நிற்க அந்த கடை மட்டும் அப்படியே இருந்தது. அவர்களின் சிமெண்ட் குடோனில் ஒரு நாளைக்கு கீழே சிந்தி கிடக்கும் சிமெண்டை ஒரு வாரத்துக்கு திரட்டினால் கூட இவர்கள் மாயவரத்தில் மணிக்கூண்டுக்கு நிகரான உயரத்தில் ஒரு கட்டிடம் எழுப்ப முடியும் என கேலி பேசியவர்கள் உண்டு. அதே போல கண்ணப்பன் அய்யர் சைக்கிளில் தன் வீடு முதல் கடைக்கு வந்து போவதை கூட கேலியும் கிண்டலும் செய்தவர்களை நான் பார்த்தது உண்டு. ஆனால் அதல்லாம் அவர்கள் கவனத்துக்கே போகாது. ஏனனில் அவர்களது கவனம் வியாபாரம். அது நல்ல விதமா நடந்தா சரி என்கிற போக்கில் தான் இருந்தார்கள்.

ஒருமுறை திரு. கண்ணப்பன் அவர்கள் எங்கள் பள்ளி விழாவில் பேசிய போது " பெருசா நான் எதும் செஞ்சுடலை. நான் ஒரு போஸ்ட்மேன். போஸ்ட்மேன் வியாபாரி. நான் ஒரு பொருளை வாங்கி அவா "நீ இத்தன தான் லாபம் வச்சு விக்கலாம்"ன்னு சொல்லும் அதே லாபத்தை தான் வச்சி விக்கிறேன். அதுல கவர்மெண்ட் "நீ இத்தன சம்பாரிச்ச, அதுக்கு நேக்கு இத்தன பர்சண்டேஜ் டேக்ஸ் பே பண்ணிடு"ன்னு சொல்றா, அதை டான்னு கொடுத்துடுறேன். அதே போல அந்த கமாடிட்டீஸ்க்கு இத்தன டேக்ஸ் உன்னாண்ட அதாவது வாங்குறவா கிட்டேர்ந்து வசூலிச்சு கட்டிடு"ன்னும் சொல்றா. அதையும் உங்களான்ட இருந்து வாங்கி டான்னு கட்டிடுறேன். தான் சூட்சுமம். நாம வரி கொடுக்கலைன்னா அரசாங்கம் எப்படி நடத்துவா? என் தோப்பனார் இங்லீஷ் காரன் காலத்திலே இருந்து அவா சொன்ன வரியை கட்டிண்டு வந்தா. நேக்கு அந்த மன உறுத்தல் இல்லை. நம்ம நாட்டுக்கு கட்டிண்டு வர்ரேன். அவா ரோடு போடுறா, பெரிய ஆஸ்பத்திரிலே ஏழகளுக்கு ஃப்ரீயா மருந்து கொடுக்கறா, குடிதண்ணீர் தர்ரா,எல்லாமே எல்லாமே செய்யறா, நான் போய் இதல்லாம் செஞ்சுண்டு இருக்க முடியுமா? நீங்க போய் தனித்தனியா இதல்லாம் செஞ்சுண்டு இருக்க முடியுமா? முடியாதோன்னோ, நாம வரி கொடுக்கலைன்னா அவ பணத்துக்கு எங்க போவா? அவா கிட்டே தான் நாசிக்ல பிரஸ் இருக்குன்னு பிரிண்ட் பண்ணிக்க முடியுமா? டபார்ன்னு அதல்லாம் செஞ்சுட முடியாது. நாம கொடுக்கும் வரியை வச்சுண்டு தான் செய்ய முடியும். நாம ஒழுங்கா கொடுத்தா அவா செய்வா. "நேக்கு பத்தலை. நீ இன்னும் கொஞ்சம் வசதி செஞ்சு கொடு"ன்னு கேளுங்கோ அதுக்கு எல்லா உரிமையும் உங்களுக்கு எந்தளவுக்கு இருக்கோ அந்த அளவு அவாளுக்கு நாம செலுத்த வேண்டிய வரியையும் செலுத்திடனும் கேட்டேளா" என கலோக்கியலா பேசியது அன்றைக்கு எல்லார் மனதிலும் பட்டது.

இரவு கடையில் கணக்கு எல்லாம் முடிந்து கண்ணப்பன் சார் ஒரு தோல் பையில் தான் எல்லா பணத்தையும் எடுத்து கொண்டு தன் வீட்டுக்கு சைக்கிளில் போவார். பட்டமங்கல தெருவில் இருந்து அரசாங்க மகளிர் பள்ளிகூடம் தாண்டி இருக்கும் சந்து வழியே நூர்காலனி வழியே (கோ ஆபரேடிவ் பேங் வழியே) எங்கள் பள்ளிக்கூடம் பக்கத்தில் இருக்கும் அவர் வீட்டுக்கு போவார். இதை கவனித்து கொண்டு இருந்த ஒரு திருடன் ஒரு நாள் அந்த பேங் சந்தில் வைத்து இவரை கத்தியால் குத்தி பணத்தை பிடுங்கிட்டான். அடுத்த நாள் காலை செய்தி தெரிந்ததும் நான் வழக்கம் போல என் நண்பன் ராதாவிடம் விஷயத்தை சொல்ல "அய்யோ என்ன ஆச்சு .... அந்த திருடனுக்கு?" என கேட்டான். அவன் அப்படி கேட்டதற்கு காரணம் உண்டு. ஏனனில் திரு.கண்ணப்பன் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். கெட்ட பழக்கம் எதும் கிடையாது. உடல் திடகாத்திரமானது. பாவம் திருடன். இவரை கத்தியால் குத்தினாலும் இவர் விடாப்பிடியாக அவனை பிடித்து அவன் யாரிடமோ திருடி வச்சிருந்த ஆயிரம் ரூபாய் சொச்சத்தையும் சேர்த்து பிடுங்கி விட்டார். அவனை போலீசிலும் பிடித்து கொடுத்துவிட்டார். பாவம் திருடனுக்கு ஆயிரத்து சொச்சம் நஷ்டம்:-)) அப்படி எதற்கும் அசையாத திட மனது கண்ணப்பன் சாரைக்கூட விதி விட்டு வைக்கவில்லை. அவரது பெரிய மகன் ஆன்மீக சுற்றுப்பயணம் வடநாட்டுக்கு போன போது ஹரித்வாரில் மரணம் அடைந்து விட அந் நிகழ்சி இவரை ரொம்ப ஆட்டிவிட்டது.

பின்னர் அவரது இளைய மகன் கீர்த்திவாசன் அண்ணன் அவர்கள் கடையின் எல்லா பொறுப்புகளையும் பார்த்து கொண்டார். கடை ஓட்டு கட்டடத்தில் இருந்து மிகப்பெரிய கட்டிடமாக மாறியது. குழியில் டெஸ்க் போட்டு உட்காந்த நிலை மாற்றப்பட்டு அதிநவீன பர்னிச்சர்கள், கம்பியூட்டர் என சமகாலத்துக்கு மாறிவிட்டது. பெரிய மகனின் மனைவி, குழந்தைகள் எல்லாரும் சென்னையில் செட்டில் ஆகிவிட சின்னவர் கீர்த்திவாசன் அண்ணனின் குழந்தைகளுக்கு மாயவாம் புழுதிகளும், வெய்யிலும், அழுக்கான காவிரியும் ஏனோ ஒரு ஒட்டுதல் இல்லாமல் சென்னை வாழ்க்கை பிடித்து போக பெரிய பையன் மரணத்தில் இருந்து மனது வெளியே வராமல் கண்ணப்பன் சாரும் போய் சேர்ந்துவிட்டார். ஆனாலும் சின்னவர் கீர்த்தி அண்ணன் அதே தாத்தா, தந்தையார், அண்ணன் காட்டிய அதே வழியில் கடையை திறம்பட நடத்தி வந்தார்.

நான் ஒரு பத்து நாட்கள் முன்னதாக அவர் கடைக்கு போன போது ஒருவர் சிமெண்ட் வாங்க வந்தார்.

கஸ்டமர்: சார் நான் பெரிய அளவிலே ஒரு கட்டிடம் கட்டனும்.கவலையே படாதீங்க. உங்க கடையிலே தான் எல்லாம் எடுக்க போகிறேன்.

கீர்த்தி அண்ணன்: சரி கவலைப்படலை. சொல்லுங்க.

கஸ்டமர்: அல்ட்ராடெக் ஒரு மூட்டை என்ன விலை?

கீர்த்தி அண்ணன்: 315

கஸ்டமர்: சரி, எனக்கு ஒரு ஆயிரம் மூட்டை வேண்டும். அடுத்து அடுத்து வரிசையா கட்ட போறேன். இன்னும் அதிக லெவல்ல தேவைப்படும். எனக்கு பில்லு கில்லு எல்லாம் வேண்டாம். உடனே கை மேலே கேஷ் சுடச்சுட தருவேன். என்கிட்டே லாரி இருக்கு. டோர் டெலிவரில்லாம் வேண்டாம். திரும்பவும் சொல்றேன். பில்லு கில்லு எல்லாம் வேண்டாம். இப்ப சொல்லுங்க என்ன விலை ஒரு மூட்டை?

கீர்த்தி அண்ணன்: 315
வந்தவர் பேயறைந்து போன மாதிரி ஆனார். எனக்கு விவேக் மற்றும் டாக்டர் மாத்ருபூதம் காமடி தான் ஞாபகம் வந்தது. "சார் ஊசி போட போறீங்களா? நான் வேண்டுமானா பேண்டை கழட்டிடட்டுமா? என விவேக் கேட்க அதற்கு டாக்டர் "அது உன் இஷ்டம், ஆனா நான் கையிலே தான் போடப்போறேன்" என்பார். நீ பில்லை வாங்கு வாங்காம போ, அல்லது வாங்கி கிழிச்சு போடு. அது பத்தி எனக்கென்ன கவலை என்கிற அதே கண்ணப்பன் சாரின் குணம். மயிலாடுதுறையில் அதிகபட்சம் விற்பனை வரி கட்டும் நிறுவனம் அது. இப்பவும் தான்.

சரி நான் ஏன் இத்தனை நீட்டி முழங்குகிறேன் அந்த ராமூர்த்தி அய்யர் இரும்புகடை பற்றி.

அந்த கடை விற்பனை ஆகிவிட்டது. ஆமாம், கீர்த்தி அண்ணனால் கவனிக்க முடியவில்லை. பசங்க சென்னையிலே செட்டில் ஆக விருப்பம். இவருக்கு வாரம் ஒரு முறை சென்னை சென்று வர முடியவில்லை. வீடும் மிகப்பெரிய பங்களா. தனி ஆளாக இவர் மாத்திரம் இருக்க வேண்டும். சொத்துபத்துக்கு எதும் குறைவில்லை. சென்னையில் அண்ணாசாலையில் கால்வாசி கிடக்கு, ஊட்டி கொடைக்கானலில் இருக்கு. இன்னும் சிமெண்ட் கம்பனிகளில் அதிக விற்பனைக்காக கொடுக்கப்படும் ஊக்கத்தொகை கூட இவங்க நிறுவனம் பல ஆண்டுகளாக வாங்காமல் இருப்பதே பல கோடிகள் தாண்டும். ஆனால் இவரால் கடையை சரியாக கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி திடீரென விற்றுவிட்டார். கடையில் இருந்த இடம் முதல் உள்ளே இருந்த சரக்குகள், லாரிகள், வேலையாட்கள் உட்பட. ஒரு ஆணி கூட தன் கூட எடுத்துக்கொள்ளவில்லை. விரைவில நூற்றாண்டு காணப்போகும் ஒரு நிறுவனம். விற்பப்பட்டுவிட்டது. இன்னும் மயிலாடுதுறையில் பலருக்கு இவ்விஷயம் சென்றடையவில்லை.

வாங்கியவர் திரு. ஏ.டி. தமிழ்செல்வன். அவரும் ஒரு சிறந்த தொழிலதிபர். உழைப்பால் முன்னுக்கு வந்தவர். அவரைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் உடனே "எனக்கு தெரிஞ்சு அவரு தாஜ்மகால் பீடியை கடைக்கு கடை கொண்டு சைக்கிளில் போட்டு வியாபாரம் செஞ்சவர் தானே" என வயிறு எரியும் வியாபாரிகள் பேசுவர். கருனாநிதி மஞ்சள் பையுடன் திருவாரூரில் இருந்து சென்னைக்கு வந்தார் என கண்ணதாசன் வனவாசம் புத்தகத்தில் சொன்ன மாதிரியான வயிறு புகைச்சல் தான். ஆனால் ஏ.டி எஸ் ஒரு சிறந்த உழைப்பாளி என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். அவர் இந்த நிறுவனத்துக்க்கு இத்தனை கோடி கொடுத்தார் என யூகங்களாக அடுத்த அடுத்த நாட்களில் பேசும் யாருமே 'அவரு ஒயிட்ல இத்தனை கோடி கொடுத்தார், பிளாக்ல இத்தனை கோடி கொடுத்தார்" என பல்லுமேல நாக்கு போட்டு பேச மாட்டார்கள். ஏனனில் எம். எஸ் ராமூர்த்தி அய்யர் நிறுவனம் என்பது கருப்பு பணத்துக்கு அப்பாற்பட்டது என்பது ஊருக்கே தெரியும். நேர்மைன்னா இப்படி தான் இருக்கனும்.

ஏ.டி. எஸ் கூட கடையின் பெயரை மாற்ற போவது இல்லியாம். ஆனாம் அந்த சிமெண்ட்ம், கம்பியும் அல்ல அதன் மதிப்பு. அவர் கொடுக்கும் பணம் எல்லாமே 'ராமூர்த்தி அய்யர் இரும்புகடை" என்னும் பிராண்ட்க்கு கொடுக்கும் பணம் தான் என்பதை ஒரு நல்ல வியாபாரியான திரு. ஏ டி எஸ். தமிழ்செல்வனும் நன்கு உணர்ந்தவர் தான்.

வாழ்க ராமூர்த்தி அய்யர் நிறுவனம், வாழ்க கீர்த்திவாசன் அண்ணன், வாழ்த்துக்கள் ஏ.டி.எஸ். தமிழ்செல்வன் சார்! கீர்த்தி அண்ணன், உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் நம் பள்ளியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர். நம் பள்ளி உங்கள் பள்ளி. எப்போதும் நீங்களும் உங்க பரம்பரையும் அதே பழைய நினைப்புடன் அதே பதவிகளை பள்ளியில் தொடர்ந்து இருந்து பள்ளியை மென் மேலும் வளரவைக்க வேண்டும்.

September 16, 2011

மயிலாடுதுறையில் சிறை சென்ற சிங்கங்கள்!!!

போராட்ட வீரர் திரு . வெற்றிச்செழியன் அவர்கள் "சமச்சீர்" வெற்றிச்செழியன் ஆகின்றார்
நகர்மன்ற தலைவர் லிங்கராஜனுக்கு சமச்சீர் விருது வழங்குபவர் மாவட்ட செயலர் ஏ கே எஸ் விஜயன்
நடுவே கைதட்டி கொண்டு இருப்பது தான் ரங்கன்மாமா

நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் சமச்சீர் விருது வாங்குகின்றார். அருகில் சீர்காழி மு.ச.ம.உ வக்கீல் பன்னீர்செல்வம்
வக்கீல் சேயோன் அவர்களுக்கு சமச்சீர் விருது
முன்னாள் ச.ம.உ ஜெகவீரபாண்டியனுக்கு சமச்சீர் விருது
தம்பி சத்யாவுக்கு (நகர் மன்ற து. தலைவர்) சமச்சீர் விருது
நா.முருகதாஸ் அவர்களுக்கு சமச்சீர் விருது
செந்தில் என்கிற சண்முகம் (33வது வார்டு பிரதிநிதி) சமச்சீர் விருது வாங்கிகுகின்றார்
நகர்மன்ற உறுப்பினர் ஆர். கே. சங்கர் அவர்கள் விருது வாங்கும் போது
சமீபத்தில் நடந்த சமச்சீர் கல்வி போராட்டத்தின் போது கிட்ட தட்ட எல்லா ஊர்களிலும் கைது செய்து ஒரு கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்து விட்டுட்டாங்க. ஆனால் எங்க மயிலாடுதுறையில் மாத்திரம் அங்கு போராடிய அத்தனை பேரையும் கைது செய்து அட்மாஸ் திருமண மண்டபத்தில் அடைத்த போது எண்ணிக்கை கிட்ட தட்ட ஆயிரத்தை தாண்டிவிட்டது. கிட்டதட்ட எல்லோருமே ஒரு மஞ்சள் பையில் மூன்று செட் வேட்டி சட்டை துண்டு, உள்ளாடைகள், ஒரு ரப்பர் ஸ்லிப்பர் (சிறையில் தண்ணீர் தொட்டிகள் புழங்க வேண்டுமே அதற்காக) ஒரு சைபால் டப்பா (இதும் முன்னெச்சரிக்கை தான். அங்கே கூட்டம் அதிகம் இருக்கும். இரவில் ஒரே செல்லில் நாற்பது பேர் வரை படுக்க வேண்டி இருக்கும், அங்கே ஒரு டாய்லெட் இருக்கும், அதை ஒரு மண் சட்டி கொண்டு மூடி இருப்பாங்க. இரவு இந்த நாற்பது பேரில் யாருக்காவது "அவசரம்" எனில் ஒரு அதிலே தான் போக வேண்டும். அதை மீதி 39 பேரும் வேடிக்கை பார்ப்பாங்க என்னும் நினைப்பிலேயே வெட்கத்திலேயே வந்ததும் உள்ளே போயிடும். அந்த தொல்லைக்காகவே ஒரு துண்டு எடுத்து தன் இரு கைகளாலும் மறைப்பு (விதை மறை காய் மறைவாங்க:-)) கட்டிக்கொண்டு போக வேண்டும். அந்த துர்நாற்றம் மீதி இருக்கும் 39 பேரின் தூக்கத்தையும் கெடுத்து விடும். அதனால் மாலை 5 மணிக்கு கொடுக்கப்படும் அச்சடித்த சோறு பட்டையையும் முள்ளங்கி சாம்பாரில் முள்ளங்கியை தூக்கி எறிந்துவிட்டும் சாப்பிட்டு தட்டை கழுவி நம் செலில் வைத்துவிட்டு உடனே பொதுக்கழிப்பிடம் போய் முக்கி முக்கி வந்தவரை ஏதோலாபம் என போய்விட்டு தான் "ரோல்கால்" பக்கம் ஓட வேண்டும். முள்ளங்கி சாப்பிட்டாம் இரவு ஒன்னுக்கு வந்து தொலையும். அதே போல மாலை 4 மணிக்கு கொடுக்கும் கடலை உருண்டை அல்லது வ்ந்த கடலை ஆகியவற்றை மடித்த்து வைத்து கொண்டால் இரவு பசிக்கும் போது சாப்பிடலாம், அல்லது அங்கே மிசா கதைகள் பேசுக்கொண்டே சாப்பிடலாம். ரோல்கால் முடிந்து மாலை ஆறு மணிக்கு செல்லின் உள்ளே போனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தான் அந்த கதவு திறக்கப்படும். இப்படியாக ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் அடக்கி வச்சு அடக்கி வச்சு கான்ஸ்டிபேஷன் வந்து அது எல்லாம் முற்றி மூலவியாதி வருபவர்களும் உண்டு. அதே போல கழிப்பிடம் சுத்தமின்மையால் படை சொறி போன்றவைகளும் நூறு சத உத்தரவாதம். அதனால் தான் சைபால் டப்பா.

மேற்படி விஷயம் எல்லாம் ரங்கன் மாமா போன்ற போராட்ட பழங்கள் எல்லாம் சொல்ல சொல்ல சின்ன வயது போராளிகள் குறித்து கொண்டனர். ஆனால் மதியம் இரண்டு மணி வாக்கில் "எல்லா ஊர்களிலும் வெளியே விட்டுகிட்டு இருக்காங்கப்பா" என தகவல் வர சிலர் அட்மாஸ் திருமண மண்டபத்தை விட்டு வெளியே வந்துவிட, மற்றவர்கள் " ஏய் மாப்ள கொஞ்சம் நில்லு. என் பையை வீட்டிலே கொடுத்துடு. அதான் நாங்க சாயந்திரம் வந்திடுவோம்ல" என சொல்லி பையை கொடுத்தனுப்பிவிட்டனர்.

ஆனால் மால ஆறு மணி ஏழு மணி எட்டு மணி ஆனதும் ஒரு சப் இண்பெக்டர் வந்து ஒரு 45 பெயர்களை படிச்சு, "நான் படிச்ச லிஸ்டுல இருக்குறவங்க மாத்திரம் இங்க இருங்க, மீதி எல்லாரும் ஓடுங்க" என சொல்ல ஒரே குழப்பம் அங்கே. இந்த 45 பேருக்கும் ஓரளவு புரிந்து போனது. "இங்க பாருங்கப்பா, இந்த 45 பேரும் உங்க செல் போனை எல்லாம் கொண்டு வந்து மேசை மேல வையுங்கப்பா என சொல்ல உடனே வக்கீல் சேயோன் அவரை நோக்கி " என்ன சார் விஷயம் என்னான்னு சொல்லுங்க" என கேட்க அவர் அதற்கு "உங்க 45 பேர் மேல வழக்கு போட்டிருக்கோம், அடிதடி, கொலைமுயற்சி, அரசாங்க ஊழியரை வேலை செய்யவிடாமல் தடுத்தல், அத்து மீறி கல்விக்கூடங்கள் மேல் நுழைந்ததும் இல்லாமல் மாணவர்களை தாக்கியும் பள்ளி சொத்தை சேதப்படுத்தியும்..." என அவர் அடுக்கி கொண்டே போக வக்கீல் சேயோன்... "சரி மொத்தம் எத்தனை செக்ஷன்? அதை சட்டுபுட்டுன்னு சொல்லுங்க. மாஜிஸ்ட்ரேட் கிட்டே எப்போ கொண்டு போகப்போறீங்க? அதுக்கு முன்ன நாங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு போன் செய்யனும்" என சொல்ல அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

எல்லார் வீட்டிலிருந்தும் அதே மஞ்சள் பை வந்தது. அதற்குள் திமுக சீனியர் வக்கீல் முருகு. மாணிக்கம் அண்ணனுக்கு தகவல் போய் அவரும் வந்தார். "யார் உங்களுக்கு புகார் கொடுத்தது? யாரை கொலை செய்ய இவங்க முயற்சி செஞ்சாங்க? என வரிசையாக கேட்க "அதிமுக நகர செயலர் செந்தமிழன் கொடுத்த புகார்" என சொல்லப்பட்டது. இரவு உணவு போலீஸ் கொடுக்க தயாராக இருந்ததா இல்லையா என தெரியாது, ஆனால் நகர திமுக சார்பாக 5 இட்லி கொண்ட பொட்டலம் கொடுக்கப்பட்டது. இரவு இரண்டு மணி வரை பேச்சும், குழப்பமுமாக இருக்க ஒரு பஸ் கொண்டு வந்து எல்லோரும் ஏற்றப்பட்டனர். எங்கே போகிறோம் எதற்காக போகிறோம் என யாருக்கும் எதும் புரியவில்லை. இரவு இரண்டு மணிக்கு அந்த வாகனம் புழுதி கிளப்பி போகும் போது அந்த 45 பேரில் பலர் 24 மணி நேரம் முன்பாக அதே சாலையில் திமுக கொடிகள் கட்டிக்கொண்டும் , சுவர் விளம்பரம் செய்து கொண்டும் அடுத்த நாள் நடக்க இருக்கும் போராட்டம் பற்றி அதை வென்றெடுக்க வேண்டும் என்கிற வெறியுடன் வேலை செய்து விட்டு "உன்னிடம் காசு இருக்கா? என் கிட்டே 20 ரூபா இருக்கு, பத்து டீ வாங்கியாயேன்" என பகிர்ந்து குடித்த டீ ஞாபகம் வர வைத்தா டீக்கடை கடந்து போனது இவர்கள் பேருந்து. இரவு முழுக்க அப்படி கண் விழித்து விட்டு காலை 5 மணிக்கு போய் படுத்து 8 மணிக்கு போராட்டத்துக்கு வந்து இதோ இந்த இரவு 2 மணிக்கு எங்கே போகிறோம், எத்தனை நாள் சிறைவாசம் என தெரியாமல் போய் கொண்டு இருந்த அந்த திமுக தொண்டனுக்கு முகம் தான் சோர்வாக இருந்ததே தவிர இதயம் சிரித்து கொண்டு இருந்தது. தலைவனின் கட்டளையை போராட்டத்தை வெற்றியாக்கிய மமதை மனதில் எக்காளமிட்டு கொண்டிருந்தது.

பேருந்து போய் நின்ற இடம் ஒரு பெண் நீதிபதி வீடு. அவங்க வரிசையாக பெயரை படித்து விட்டு நீங்க இன்னன்ன குற்றம் செஞ்சு இருக்கீங்கன்னு புகார். இது சம்மந்தமா எதும் சொல்றீங்களா? என கேட்க வக்கீல் சேயோன் "கேஸ் ஆடுறோம்மா. ஏன்னா நாங்க எந்த குத்தமும் செய்யலை" என சொல்ல அதற்கு நீதிபதி அம்மையார் "அப்படின்னா உங்க எல்லாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கிறேன்" என சொல்ல டப்பு டுப்புன்னு எழுதிய பழுப்பு அரசாங்க காகிதம் மதிப்பிற்குரிய காகிதமாக ஆகி, அரசாங்க முத்திரை, பச்சை கையெழுத்து என அரசாங்க ஆவணம் ஆகியது. அதற்கு ஐந்து நிமிடம் வரை சாதாரண காகிதம் இப்போது ஒரு 45 பேரை சிறையில் அடைக்கும் கொடிய வஸ்துவானது.

பேருந்து திருச்சி மத்திய சிறை நோக்கி போனது. காலை 6 மணிக்கு திருச்சி மத்திய சிறை. வரிசையாக பெயர்கள், அப்பா பெயர், அம்மா பெயர், சாதி, வீட்டு விலாசம், உட்பட சகல குறிப்பும் எடுக்கப்பட்டு கைரேகை உருட்டப்பட்டு, அரைஞான் கயிறு அறுக்கபட்டு, கையிலே போட்டிருந்த மோதிரம், கடிகாரம் கழட்டப்பட்டு, மூக்கு கண்ணாடி மட்டும் அணிந்த, வேட்டி சட்டை கட்டிய அம்மண மனிதனாக உள்ளே போயினர் அந்த 45 உடன்பிறப்புகளும்.

ஒரு வாரம் பின்னர் ஜாமீனில் வெளியே வந்து இப்போது வழக்கு நடக்கின்றது. கடந்த 07/09/2011 அன்று அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் மாவட்ட செயலர் ஏ கே எஸ் விஜயன் தலைமையில் சிறை சென்ற சமச்சீர் தொண்டர்களுக்கு பாராட்டு விழாவும் கேடயமும் வழங்கப்பட்டது.

நகரச்செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ், நகர்மன்ற தலைவர் லிங்கராஜன், துணைத்தலைவர் தம்பி சத்யா, முன்னாள் ச.ம.உ ஜெகவீரபாண்டியன், நா. முருகதாஸ். ஆர்.கே.சங்கர், செந்தில் என்கிற ப. சண்முகம், நகர அவைத்தலைவர் டி எஸ் கே , வக்கீல் சேயோன், செட்டியார் சீனுவாசன், தங்கபாண்டியன், செந்தில் என எல்லோர் முகத்திலும் சிறைக்கு சென்று வந்த கவலை எதும் இல்லை. இனி அவர்களின் பெயர் முன்னே "சமச்சீர்" என்னும் பட்டம் தானாக ஒட்டிக்கொண்டது. யாரும் கொடுக்கவில்லை. தானாக வந்து ஒட்டிக்கொண்டது அந்த "சமச்சீர்" பட்டம்! வாழ்க அந்த உடன்பிறப்புகள்!


September 13, 2011

திரும்பிப்பார்!!!




குடியரசுதலைவர் - ஜனாதிபதி தேர்தலுக்கு அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் கூட ஓட்டு போட வேண்டும் என்பது குப்பனுக்கும் சுப்பனுக்கும் தெரிந்திருக்கும் அளவுக்கு சில அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அப்பாடக்கர்களுக்கு ஏனோ தெரிவதில்லை, அல்லது தெரியாதது போல இருக்கின்றனர். ஏனனில் கலைஞரின் ஆதிக்கம் என்பது தமிழக மற்றும் இந்திய அரசியலில் தன் கணக்கை துவங்கிய வருடம் 1957. ஆம் 1957 முதலே சட்டமன்ற உறுப்பினர் இந்தியாவின் இந்த மூத்த பழுத்த அரசியல்வாதி. அதை சொன்னால் ஏனோ எட்டிக்காயாய் இருக்கின்றது சிலருக்கு. சமீப காலமாக கலைஞரை பற்றிய வசவுகள் இணைய ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் போது இப்போது கலைஞரின் பெருமைகள் அடங்கிய ஒரு எஸ் எம் எஸ் சுற்றி வருவது கலைஞர் எதிர்ப்பாளர்களுக்கு எரிச்சலை உண்டு செய்துள்ளது. சமகால அரசியல் நிகழ்வுகளையே அரைத்து கொண்டிருப்பவர்களிடம் நான் சொல்கிறேன், அதே கலைஞரின் வார்த்தைகளில் .... திரும்பிப்பார்...

1957ல் கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. குடியரசு தலைவர் தேர்தல் வருகின்றது. எப்போதும் போல வடநாட்டவர் போட்டி. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தெய்கின்றது என்கிற மனக்கிலேசம் தென்னகத்தில் பரவலாக இருந்த நேரம் அது. அண்ணாவின் தலைமையில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என முடிவெடுக்கின்றது. ஆனால் அப்போதைய மத்திய அரசுக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஒரு பொருட்டல்ல. அவர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் பிற்காலம் எப்படி ஆகும் என்று அவர்களுக்கு அப்போது கணிக்க தெரியவில்லை, கணிக்க வேண்டிய அவசியமும் நேருவுக்கு நேரவில்லை அப்போது.

ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீருசேன் மறைவையொட்டி நடக்க இருந்த குடியரசு தேர்தலில் திமுகவும் , கலைஞரும் அந்த தேர்தலில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முக்கிய ஆளுமையாக இருந்தனர் என்பதை தான் சொல்ல வருகின்றேன்.

மத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை. பாபுஜெகஜீவன்ராம் அதாவது இப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தந்தையார் தலித் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பது இந்திராகாந்தியின் சாய்ஸ். ஆனால் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தன் தென்னிந்தியாவை சேர்ந்த நீலம் சஞ்சீவரெட்டியை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என பிடிவாதம்.

பிரச்சனை என்று வந்தாகிவிட்டது. கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி யார் வேட்பாளர் என முடிவு செய்யலாம் என காங்கிரசின் ஆட்சிமன்ற கூட்டம் நடந்து ஓட்டெடுப்பும் நடந்து நிஜலிங்கப்பாவின் ஆதரவு பெற்ற நீலம்சஞ்சீவரெட்டி தேர்வானார். அது வரை எல்லாம் நல்லா தான் போய்கொண்டு இருந்தது. கலைஞர் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த ஆளுமை தெரியாதவர்களே! நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் ? கலைஞர்!

அப்போது துணை ஜனாதிபதி மற்றும் ஆக்டிங் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி தான் போட்டியிட போவதாக அறிவிக்கிறார். ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டிய பதவி இப்போது தேர்தல் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சிகள் ஒன்று கூடின. பலரும் பல கருத்துகளை சொல்ல கலைஞர் ஜெயப்ரகாஷ்நாராயணன் நிற்கட்டும் என்கிறார். இப்படியாக எல்லோரும் கூடிக்கூடி பேசுவது காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டிக்கு சாதகமாக அமையகூடிய சூழல். காலம் கடந்து போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலைஞர் ஒரு அறிவிப்பு செய்கின்றார். திராவிட முன்னேற்ற கழகம் ஜனாதிபதி தேர்தலில் வி. வி. கிரி அவர்களை ஆதரிக்கும் என்று.

ஆக தேர்தலில் மந்திய ஆளும் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவரெட்டியும் எதிர்கட்சிகள் சார்பாக வி.வி. கிரியும் வேட்பாளர்கள். அப்போதைய பாஷையில் சொல்லப்போனா அபேட்ஷகர்கள். இந்திரா ஒரு அறிவிப்பு செய்தார் புத்திசாலித்தனமாக. கொறடா உத்தரவு போட மாட்டார். தங்களுக்கு இஷ்டமானவர்களுக்கு ஓட்டு போடலாம் என தன் கட்சிகாரர்களுக்கு உத்தரவு போடப்படுகின்றது. தேர்தல் முடிந்தது. வி.வி.கிரி வெற்றி பெற்று குடியரசுதலைவர் ஆகின்றார். தமிழ் தெரிந்த ஒருவர் ஆகின்றார். முதல் நன்றியே கலைஞருக்கு தான் சொல்கின்றார்.

ஆக அந்த குடியரசு தலைவர் தேர்தலில் கலைஞரின் ஆளுமை இருந்ததா இல்லியா? முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா? ஆளும் மத்திய அரசின் வேட்பாளரை தோற்கடித்து எதிர்கட்சி வேட்பாளர் வி வி கிரி அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைத்தவர் கலைஞரா இல்லியா?

அதன் பின்னர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதியாக ஆனார். அதற்கு அவருக்கு கலைஞரின் உதவி தேவைப்பட்டது. கலைஞருக்கு கடிதம் எழுதினார். ஆதரவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதவி காலம் முடிவடையும் போது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது இந்திராவின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார் கலைஞர். அப்போது இந்திராவின் மனதில் இருந்த இருவர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் நரசிம்மராவ். நரசிம்மராவ் வேண்டாம் என கலைஞர் மறுத்த காரணம், ஏற்கனவே பதவில் இருந்து வருபவர் ஆந்திராவை சேர்ந்தவர், மீண்டும் ஆந்திராவை சேர்ந்தவர் வந்தால் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்பும் தேவையில்லாமல் தாங்க வேண்டும், அதே போல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கலைஞருக்கு ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இருக்காது. அதற்கான காரணம் 1980 சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமைன் பொறுப்பற்ற பேச்சுகள் என்று மனதில் நினைப்பு. ஆனால் அதை காரணமாக இந்திராவிடம் சொல்லாமல் பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர்சாதியாக இருப்பதால் மக்களிடம் ஒரு வித இறுக்கம் தென்படும் , எனவே பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்த கியானிஜெயில்சிங் ஒரு சிறுபான்மை மதத்தையும் சேர்ந்திருப்பதால் அவரையே குடியரசு தலைவர் ஆக்கலாம் என சொல்லி அதற்கு திமுக, அதிமுக என ஆதரவும் கொடுத்து ஜனாதிபதியாக்கினார். பின்னர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி ஆன பின்னே இந்தியாவுக்கு பிடித்த பீடையாக பல கெட்டகாரியங்கள் நடந்தன என்பதும் வரலாறு. கலைஞர் முன்பு ஆர்.வெங்கட்ராமனை ஜனாதிபதியாக ஆக்காமைக்காக தன் நன்றிக்கடனை கூட ஒரு ஹிண்டுவில் வந்த வாசகர் கடிதத்தை வைத்தே திமுக ஆட்சியை கலைத்து தன் மனக்காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் என்பதும் வரலாறு.

ஆக கலைஞரின் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்ததா இல்லையா என்பதை சும்மா சிரித்து வைப்போமே என சிரித்து வைப்பவர்களை விட சரித்திரம் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுக்காக எழுதி வைத்தோம் என்னும் மனதிருப்தியுடன் எழுதுகிறேன்.

இதோ இந்த பதிவிற்கு காரணமாக இருந்த எஸ் எம் எஸ் செய்தி!

\\கோடிக்கணக்கான ரசிகர்கள்
70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்
80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75 திரைப்படங்கள்
72 ஆண்டுகால பொது வாழ்க்கை
70 ஆண்டுகாலமாக பத்திரிகையாளர்
65 ஆண்டுகால கலைத்துறை பங்களிப்பு
60 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றி
50 ஆண்டுகாலமாக சட்டசபை பணிகள்
18 ஆண்டுகாலம் தமிழக முதல்வர்
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை
3 தமிழின் நாயகன்
என்றும் தமிழினத்தின் தலைவர்
ஒரே கலைஞர்

அப்போது ஆரம்பித்த கலைஞரின் ஆளுமை, குடியரசு தலைவர் தேர்தலில் இன்று வரை தொடர்கின்றதே, அது பற்றியும் இந்த பதிவிலே சொல்ல ஆசை தான். பதிவின் நீளம் கருதி அதை எல்லாம் தனிப்பதிவாக இட இருக்கின்றேன்!


நன்றி: திராவிட இயக்க வரலாறு - பாகம் 2 ஆசிரியர் ஆர். முத்துக்குமார் மற்றும் பழகிய பழைய திமுக பெரியவர்கள்

August 7, 2011

புதிய தலைமை செயலகத்தின் இருட்டு ஜெயாவின் அகங்காரத்துக்கு போடப்பட்டுக் கொள்ளப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்பு!!!

(நன்றி: தி ஹிண்டு, எஸ். ஆர். ரகுநந்தன், தி ஹிண்டு 7.8.2011)



இன்றைய "தி ஹிண்டு" நாளிதழில் ஒரு அருமையான போட்டோ இட்டு ஒரு கட்டுரை வந்துள்ளது. அதன் லிங் போக இங்கே அமுக்கவும். அதாவது திமுக அரசால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், சென்னை மத்தியில் ஒரு முக்கியமான இடத்தில் எபடி இப்போது சீரழிந்து வருகின்றது என்பதற்கு சாட்சியாக அந்த கட்டுரை.

நேற்று நம் சக பதிவரான சக்தி செல்வி அவர்கள் கூட இது சம்மந்தமான ஒரு விஷயம் கூகிள் பஸ்ல் பகிர்ந்து கொண்டார்கள். அதன் சுட்டிக்கு செல்ல இங்கே அழுத்தவும். அந்த புதிய தலைமை செயலகத்தின் சிறப்புகள் பற்றி முன்பே ஒரு சக பதிவர் திரு. கீதப்பிரியன் எழுதிய ஒரு லிங் போக இங்கே அழுத்தவும்.

புதிதாக அமைந்த அதிமுக அரசு மாணவர்கள் மீது அதன் பெற்றோர்கள் மீது தன் ஈகோவை செலுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும்.பரவலாக எல்லா நடுநிலைவாதிகளாலும் இது இப்போது இந்த சமச்சீர் கல்வி விஷயத்தில் தெரிந்து விட்டது. ஆனால் அதே போலவே தான் மற்ற எல்லா விஷயங்களிலும் நடந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

ஒரு சாதாரண வீடு கூட ஒரு வாரம் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்களேயானால் அங்கே வெளிச்சமோ, ஆள் நடமாட்டமோ இல்லையெனில் பெருச்சாளி புகுந்து நாசம் செய்யும். அதுவும் அந்த கட்டிடத்தின் உள்ளே இருக்கும் மீன் தொட்டி மீன்கள் எல்லாம் இன்னேரம் பூனை சாப்பிட்டிருக்கும். ரொம்ப மனசுக்கு கஷ்டமான ஒரு விஷயம். எது எதுக்கோ போராட்டம் நடத்தும் திமுக இதற்காக நடத்தாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அந்த கட்டிடம் இருட்டாக இருட்டாக அந்தம்மாவின் அகங்காரம் வெளிச்சம் போடப்படுது மக்கள் மனதிலே, அதனால அப்படியே போகட்டும்னு விட்டுட்டாங்க போலிருக்கு:-( ஒரு பொதுவான நடுநிலைவாதிகளும், அதிமுக ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும் கூட இந்த விஷயத்தில் இப்படி வேதனைப்படுவது என்றால் அந்த கட்டிடத்தின் நிலை என்ன இப்போது என நன்றாக உணர முடிகின்றது:-(

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஒரு தலைமைச்செயலக கட்டிடத்தை தன் சொந்த ஈகோவால் இப்படி பாழ் செய்யும் அந்த கட்டிடத்தை "வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் " என ஆலோசனை கேட்டு "தி ஹிண்டு" அறிவிக்கும் அளவு நம் வரிப்பணம் என்பது நாதியற்றுப்போனதை நினைத்து வேறு வழியில்லை... அமைதியாக அழத்தான் முடியும்.... தலைமைச்செயலக மீன் தொட்டியில் இருக்கும் மீன்களைப்போல. தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்??

நேற்று திருவாரூர் பொதுகூட்டத்திலே துரைமுருகன் பேசிய பேச்சு:

\\ அந்த புதிய தலைமை செயலகம் கட்டும் போது ஒரு நாள் கலைஞர் எங்களிடம் "தினம் தினம் என் ரூமையே கொண்டு வந்து காட்டுகின்றீர்களே, அந்தம்மா ஜெயலலிதா - எதிர்கட்சி தலைவர் ரூமை கொண்டு போய் காட்டுங்கய்யான்னு சொல்ல அந்த சர்க்கர நாற்காலி அங்கே திருப்பப்பட்டது. அந்த ரூமுக்கு வெளியே "கோ க மணி அறைக்கு போகும் வழி" என ஒரு அம்புக்குறி போடப்பட்டு அந்த அம்பு இந்த அம்மையார் ரூமை சுட்டிகாட்டுவது போல அம்புபாய்வது போல இருந்தது, உடனே இவர் "முதலில் அந்த அம்புக்குறியை அகற்றிவிட்டு ஜெ.ஜெயலலிதா என்ற போர்டை மாட்டுங்கப்பா என உத்தரவிட்டுவிட்டு உள்ளே போய் பார்த்து விட்டு "இது போதாது, இன்ன்னும் ரெண்டு ரூம் போடுங்க, என் அறை முதல்வர் அறை எப்படி இருக்கோ அதே போலத்தான் அந்தம்மா அறையும் இருக்க வேண்டும்" என உத்தரவிட்டார்...\\ ஊடகங்கள் நேற்று திருவாரூரில் அதே கூட்டத்தில் கலைஞர் சொன்னது போல "கோந்து" போட்டு வாயை மூடிக்கொண்டு இருக்கின்றன. ஹூம்... வாழ்க ஜனநாயகம்!


புதிய தலைமை செயலகத்தின் இருட்டு ஜெயாவின் அகங்காரத்துக்கு போடப்பட்டுக் கொள்ளப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்பு!!!