பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 20, 2008

விடுடா, வேற ஒரு சூப்பர் பிஸினஸ் இருக்கு!!!”

ஏழாவது படிக்கும் போதே “தொழிலதிபர்” ஆசை வந்ததுக்கு காரணம் நம்ம ஐடியா சுரங்கம் குரங்கு ராதா தாங்க. படிக்கும் போதே சம்பாதிக்கனும்டா அப்படின்னு ராதாகிட்ட யோசனை கேட்டப்ப தான் அவன் சொன்னான் “பேசாம தினத்தந்தியில சிரிப்பு எழுதி சம்பாதிக்கலாம்டா”.

எனக்கும் அது நல்ல யோசனையாத்தான் பட்டுச்சு. ரொம்ப பெரிய முதலீடு எல்லாம் இல்லை. அப்ப தினத்தந்தியிலே இரண்டு சிரிப்பு இருக்கும் கவர்ச்சி படத்துக்கு கீழே. 5 ரூபாய் பரிசு பெரும் வாசகர்ன்னு குனியமுத்தூர் குப்புசாமின்னு ஏதோ பேர் போட்டிருக்கும். அந்த இரண்டு சிரிப்பிலே ஒரு சிரிப்புக்கு சிரிப்பை அனுப்பும் நபர் தான் படம் வரையனும். அதுவும் போஸ்ட் கார்டிலே இண்டியன் இங்க்காலே வரைந்து அனுப்பனும். இங்க் ஓக்கே, 15 பைசா கார்டு ஓக்கே. சிரிப்புக்கு எங்கே போறது. சிரிப்பை நான் சொல்லனும் படத்தை ராதா வரையனும். கார்டு வாங்கும் காசிலே ஆளுக்கு பாதி போடனும், 5 ரூவாய் வந்துச்சுன்னா ஆளுக்கு 2.50 எடுத்துக்கனும் என பிஸினஸ் அக்ரிமெண்ட் எல்லாம் பக்காவா ரெடியாகிடுச்சு.

எல்லாம் ரெடியான பின்ன இங்க். கார்டு வச்சிகிட்டு ராதா என் மொகரகட்டையை பார்த்துகிட்டே இருக்க எனக்கு வேர்த்து வேர்த்து கொட்டுதே தவிர சிரிப்பு கொட்ட மாட்டங்குது. இந்த லெட்சணத்துல என் தம்பி வேற தானும் பார்ட்னர் ஆகனும்ன்னு அடம். போடா போடா போய் புட்டி பால் குடிடான்னா அழுதுகிட்டே அம்மா கிட்ட போய் “அம்மா என்னய சேர்த்துக்க மாட்டன்றாங்க”ன்னு அழுது அம்மாவை அடியாள் கணக்கா கூட்டிகிட்டு வந்துட்டான். அம்மா வந்து “டேய் ஒழுங்கு மரியாதையா இவனையும் விளையாட்டுக்கு சேர்த்துக்கல தொடப்ப கட்ட பிஞ்சு போகும்”ன்னு செல்லமா கெஞ்சினாங்க. எனக்கு செம கடுப்பு. முதல் முதல்ல ஒரு பிஸினஸ் பண்ண ஆரம்பிக்கும் போது அதை “விளையாட்டு”ன்னு கூலா சொல்றாங்களேன்னு. வேற வழியில்லாம அவனையும் சேர்த்துகிட்டாச்சு. ராதா மெதுவா என் காதிலே “டேய் பணம் மணியார்டர் வரும் போது இவன்கிட்ட சொல்லாம நாம ஸ்கூல் கிட்டயே போஸ்ட் மேனை அமுக்கிடுவோம்டா, அதனால இப்ப சேர்த்துப்பதா சொல்லி வைடா”ன்னு சொன்னது எனக்கும் ஓக்கேவா இருந்துச்சு.

ஏகப்பட்ட தடங்கலுக்கு பின்ன நாங்க மூணு பேரும் ரவுண்ட் கட்டி உக்காந்து யோசிக்க யோசிக்க எனக்கு ஒன்னுமே தோண மாட்டங்குது. ராதாவாவது பரவாயில்ல பாதி பைனான்ஸ் பண்ணின பார்ட்னர். அவனுக்கு கோவம் வருவது நியாயம். என் தம்பிக்கு வந்துச்சு பாருங்க கோவம் அது அநியாயம். “டேய் சீக்கிரமா ஜோக்கு சொல்லுடா இல்லாட்டி அம்மாகிட்ட போயி நீ என்னை அடிச்சேன்னு சொல்லி கூட்டிகிட்டு வந்துடுவேன்”ன்னு மிரட்டுறான். “போடா இவனே, நீயும் தானே பார்ட்னர் நீ சொல்ல வேண்டியது தானே”ன்னு நானும் பதிலுக்கு கத்த ராதா தான் சமாதானம் செஞ்சான். பின்ன என் தம்பியும் மோட்டுவளையை பார்த்துகிட்டு ஜோக்குக்கு தயார் பண்ண ஆரம்பிச்சான். எனக்கு சிரிப்பு தோணுவதுக்கு பதிலா தாத்தா செத்தது, மாடு முட்டுவது போன்ற சோக நிகழ்ச்சிகளாவே ஞாபகம் வருது. ஒரு கட்டத்துல ஜோக்கு தோண மாட்டங்குதேன்னு ஆத்திரமும் அழுகையும் வர இருந்துச்சு. இத்தனைக்கும் ராதா கொஞ்சம் கூட யோசனை பண்ணாம ஜாலியா படம் வரைய ரெடியா இருந்தான். அவனுக்கு என்ன அக்ரிமெண்ட் படி படம் வரைவது தானே அவன் வேலை அப்படீன்னு நினைப்பு.

அப்ப திடீர்ன்னு என் தம்பி “டேய் வந்துடுச்சுடா சிரிப்பு”ன்னு கத்த ரொம்ப ஆர்வமா “சொல்லுடா சொல்லுடா”ன்னு நாங்க கத்த மெதுவா தொண்டையை கணைச்சுகிட்டு “ராதா அண்ணே, அன்னிக்கு என்னா நடந்துச்சுன்னா என்னைய காவலுக்கு வச்சுட்டு அம்மா அரிசி பீப்பாயிலே மறைச்சு வச்சிருந்த ஹார்லிக்சை எங்க அண்ணன் திருடி திங்கும் போது நான் அவனை அம்மா கிட்ட மாட்டி வச்சு அம்மா இவனை வெளுத்தாங்க.”ன்னு சொன்னான். அதுக்கு ராதா “இதுல என்னாடா சிரிப்பு இருக்கு”ன்னு கேக்க என் தம்பி “இல்லண்ணே இதுக்கு பின்ன தான் சிரிப்பே, அப்புடி அடி வாங்கி கிட்டு இருக்கும் போது அவன் டவுசர் கழண்டு வுழுந்துடுச்சு”ன்னு சொல்லிட்டு அவன் சிரிக்க அதை கேட்டு ராதா சிரிக்க எனக்கு பத்திகிட்டு வந்துச்சு. உடனே ராதா கிடு கிடுன்னு படம் வரைய ஆரம்பிச்சான்.

“டேய் டேய் நிறுத்துங்கடா என் மானத்தை வித்து இந்த 5 ரூவா சம்பாதிக்கனுமா, போங்கடா இவனுங்களா, அதிலயும் அதை இவர் படமா வரைஞ்சு தமிழ்நாடே பார்க்கனுமா, வேற யோசிங்கடா”ன்னு கத்திட்டு ஒரு வழியா ஏதோ சிரிப்பு எழுதினோம். அந்த கார்டை சியாமளாதேவி கோவில்ல வச்சு கும்பிட்டு போஸ்ட் பண்ணியாச்சு.

பின்ன 1 வாரம் தான் டயம் கொடுத்தோம் தினதந்திக்கு. அதன் பின்னே என் தம்பிக்கு பொறுமை இல்லை. என் கிட்ட “டேய் 1 வாரம் ஆச்சு, பணம் வரும் போது நீயே எடுத்துக்க ஆனா என் பார்ட்னர்ஷிப்பை பிரிச்சு குடு இல்லாட்டி அம்மா கிட்ட போக வேண்டி வரும்” ன்னு மிரட்ட ஆரம்பிக்க எப்படியாவது அவனை கழட்டி விட்டுடலாம்ன்னு ஒண்ணேகால் ரூபாயை கொடுத்து கழட்டி விட்டேன்.

பின்ன நானும் ராதாவும் சேர்ந்து தினத்தந்திக்கு கார்டில் கடிதம் எழுதினோம். “அய்யா 1 வாரம் முன்பு நாங்க “சிரிப்பு” எழுதி அனுப்பினோம். அதற்க்கான பணம் 5 ரூபாய் இன்னும் வரவில்லை. கடிதம் கண்டவுடன் தாமதிக்காமல் அனுப்பி வைக்கவும்” என எழுதினோம். அதன் பின்பும் 1 வாரம் ஒரு சேதியும் தெரியாமல் கிணத்தில் போட்ட கல் மாதிரி இருந்ததால் நான் ராதாவிடம் “டேய் தினத்தந்தி எத்தனை பெருசு. நாம அப்படி எழுதியிருக்க க்கூடாது. இப்படி எழுதனும்டா”ன்னு சொல்லி இப்படி எழுதினோம். “அய்யா, தாங்கள் கண்டிப்பாக 5 ரூபாய் அனுப்பி இருப்பீர்கள். ஆனால் போஸ்ட்மேன் தரவில்லை. அதனால் மீண்டும் ஒரு முறை அனுப்பவும். அடுத்த அடுத்த சிரிப்புகளில் கழித்து கொள்ளலாம்” என எழுதி போட்டோம்.

ஒரு முன்னேற்றமும் இல்லை. அப்பப்ப என் தம்பி வேற “என்னடா பிஸினஸ் ஊத்திகிச்சா, எனக்கு தெரியும்டா அதை படிச்சுட்டு நானே கக்கூஸ்ல போய் அழுதேண்டா ,அதனாலத்தான் என் பார்ட்னர்ஷிப்பை பிரிச்சு வாங்கினேன்”ன்னு சொல்ல எனக்கு சரியான ஆத்திரம்.

இதற்கிடையில் நாங்க அந்த போஸ்ட்மேனை ஒரு நாளும் விடவில்லை. ஸ்கூல் கிட்டயே அமுக்கி “சார் எங்களுக்கு மணியார்டர் வந்துச்சா”ன்னு அரிச்சு எடுத்தோம். எங்க தொல்லை தாங்காம அவர் எங்களை பார்த்தா ஈட்டிகாரனை பார்ப்பது போல தலை மறைவாக ஆரம்பிச்சார். சரி அவர் சரியா வர மாட்டார்ன்னு அவர் வீட்டுக்கே போக ஆரம்பிச்சோம். கடைசியா அவர் “டேய் இன்னும் ஒரு தடவ என் கிட்ட கேட்டீங்கன்னா நேரா உங்க அப்பா கிட்ட வந்துடுவேன்”ன்னு மிரட்ட ஓடி வந்துட்டோம். வந்தும் பேசாம இருக்காம போஸ்ட் மாஸ்டருக்கு ஒரு கார்டு போட்டோம். “அய்யா எங்க தெரு காமராஜ் அப்பா என்கிற போஸ்ட்மேன் எங்களுக்கு வந்த 5 ரூபாயை தரவில்லை, வாங்கி கொடுக்கவும்” . பின்ன என்ன விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சு. ராதா அப்பாவுக்கு தெரிஞ்சு……….. கொஞ்ச நாள் எங்க தொழிலதிபர் ஆகும் ஆசையை ஒத்தி வைக்க வேண்டியதா போச்சு.

கொஞ்ச நாள் கழிச்சு ராதா சொன்னான் “விடுடா, வேற ஒரு சூப்பர் பிஸினஸ் இருக்கு!!!”.

29 comments:

  1. :) பிஸினஸ் ஐடியா சூப்பர்!

    ReplyDelete
  2. அடப் பாவிங்களா! நீங்கதான் என் மேல 5 ரூவா ஊழல் பிராது கொடுத்து என் வேலை போக காரணமா இருந்தவனுங்களா?

    ReplyDelete
  3. அட இதுவும் கடந்து போகும் மாதிரி .. நீங்களும் அந்த வயசில் இருந்து .. விடு வேற ஒரு சூப்பர் பிஸினஸ் இருக்குன்னு மாறிட்டே இருக்கீங்க போலயே..

    ஆனா ஒவ்வொரு தடவையும் அப்பாகிட்ட மாட்டிக்கிறது மட்டும் சரியா சினிமாப்போலிஸ் வர மாதிரி எண்டிங் ல வந்துடுது.. :))

    ReplyDelete
  4. மறுபடி ஒரு பிஸினஸா?...

    ReplyDelete
  5. //பரிசு பெரும் வாசகர்ன்னு //

    இந்த வாசகர் கடிதம் மேட்டர்லாம் அப்போ உங்களுக்கு தெரியல போல...

    ReplyDelete
  6. //பிஸினஸ் பண்ண ஆரம்பிக்கும் போது அதை “விளையாட்டு”ன்னு கூலா சொல்றாங்களேன்னு//

    இருக்காதா பின்ன.

    எம்மாம்பெரிய பிஸினஸ். எவ்ளோ முதலீடு...

    ReplyDelete
  7. உமது நகைச்சுவை நடை மிகவும் அருமை

    ReplyDelete
  8. அய்யோ பாவம் அபி அப்பா இந்நேரம் அந்த 2.50 ரூபாய் கிடைத்திருந்தால் பெரிய தொழிலதிபராகியிருந்திருப்பீங்க;(
    பேசாம ராணி வார இதழுக்கு குரங்கு குசலா ஜோக்கு எழுதி 'குரங்கு ராதா'படத்தையே போட்டிருக்கலாம்.பிசினஸ் பிச்சிக்கிட்டிருக்கும்.

    ReplyDelete
  9. சரி கடைசி வரை என்ன ஜோக்கு எழுதி அனுப்பினிங்கன்னு சொல்லவே இல்ல???

    ReplyDelete
  10. நல்லா இருந்து என் ப்ளாக்ல போட்டு உங்க ரெண்டு பேருக்கும் 5 ரூபா தரேன் ;)))

    ReplyDelete
  11. என் மீதி கமெண்ட்லாம் எங்க???

    ReplyDelete
  12. அபிஅப்பா நானும் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். ஆளுக்கு பிப்டி பிப்டி பார்ட்னர்ஷிப். டீல் ஓகேயா?

    ReplyDelete
  13. எப்ப தான் வியாபாரக் காந்தமானீங்கனு சொல்லுங்களேன்... :)

    //நிலா said...
    அபிஅப்பா நானும் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். ஆளுக்கு பிப்டி பிப்டி பார்ட்னர்ஷிப். டீல் ஓகேயா? //
    ஓ....... நல்ல வியாபாரம் தான். ஆரம்பிங்க.

    ReplyDelete
  14. Super post.I laughed so hard.

    Ramya

    ReplyDelete
  15. //“அய்யா எங்க தெரு காமராஜ் அப்பா என்கிற போஸ்ட்மேன் எங்களுக்கு வந்த 5 ரூபாயை தரவில்லை, வாங்கி கொடுக்கவும்” //
    அபி அப்பா.. அற்புதம்..

    நல்லா எழுதியிருக்கீங்க..
    பாராட்டுக்கள்..

    அன்புடன்,
    சீமாச்சு..

    ReplyDelete
  16. தொடர்கதையா பிசினஸ் செஞ்சிருக்கீங்க. எங்கே அந்த சிரிப்பு ?

    ReplyDelete
  17. \\கண்மணி said...
    அய்யோ பாவம் அபி அப்பா இந்நேரம் அந்த 2.50 ரூபாய் கிடைத்திருந்தால் பெரிய தொழிலதிபராகியிருந்திருப்பீங்க;(
    பேசாம ராணி வார இதழுக்கு குரங்கு குசலா ஜோக்கு எழுதி 'குரங்கு ராதா'படத்தையே போட்டிருக்கலாம்.பிசினஸ் பிச்சிக்கிட்டிருக்கும்.
    \\

    அய்யயோ...டீச்சர் உங்க கணக்கு தப்பு...;))

    ReplyDelete
  18. //போஸ்ட் மேன் பொன்னுசாமி said...

    அடப் பாவிங்களா! நீங்கதான் என் மேல 5 ரூவா ஊழல் பிராது கொடுத்து என் வேலை போக காரணமா இருந்தவனுங்களா?//

    ஹா..ஹா... :)))))

    ReplyDelete
  19. //\\கண்மணி said...
    அய்யோ பாவம் அபி அப்பா இந்நேரம் அந்த 2.50 ரூபாய் கிடைத்திருந்தால் பெரிய தொழிலதிபராகியிருந்திருப்பீங்க;(
    பேசாம ராணி வார இதழுக்கு குரங்கு குசலா ஜோக்கு எழுதி 'குரங்கு ராதா'படத்தையே போட்டிருக்கலாம்.பிசினஸ் பிச்சிக்கிட்டிருக்கும்.
    \\
    :)))))))

    ReplyDelete
  20. அபி அப்பா, இப்படியெல்லாம் பிஸினஸ் செய்தீங்களா.

    அதில்லாம இப்ப அதையே பதிவாப் போட்டு இன்னோரு பிஸினஸா.:))

    அபூர்வப் பிறவி இந்த நகைச்சுவை மன்னர்.!!!

    ReplyDelete
  21. //கொஞ்ச நாள் கழிச்சு ராதா சொன்னான் “விடுடா, வேற ஒரு சூப்பர் பிஸினஸ் இருக்கு!!!//

    இன்னொன்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :((((((((

    ....அடங்க மாட்டேன்றாருபா இவரு....

    ReplyDelete
  22. அண்ணே..உங்க தம்பி செம வெவரம்...
    ஊர்ல அவரு புதுசா ஒரு வூடு வாங்கி போட்டிருக்காராம். அதுக்கு பணம் எப்படி வந்தது தெரியுமா?
    அந்த ஒண்ணே கால் ரூவாய அப்போவே எதோ மியூட்ச்சுவல் ஃபண்ட்ல இன்வெஸ்ட் பண்ணி வச்சிருந்தாராம். அது தான் இந்த ஊடு வாங்கற அளவுக்கு வளந்துச்சாம். :P
    ...மங்களூர் சிவா மாம்ஸ் உங்க பக்கத்து வீட்டுக்காரரா இருந்தாரோ? அவர் தான் உங்க தம்பிக்கு ஃபினான்சியல் அட்வைசராம்:P..

    ReplyDelete
  23. //
    இம்சை அரசி said...

    சரி கடைசி வரை என்ன ஜோக்கு எழுதி அனுப்பினிங்கன்னு சொல்லவே இல்ல???
    //
    'அபி ஆப்பு' டவுசர் கழண்ட கழண்ட அடி வாங்கினதுதானுங்க 'ஜோக்கு'

    ஓ நீங்க பதிவ படிக்கலியா !?
    அப்ப சரி.

    ReplyDelete
  24. //
    நிலா said...

    அபிஅப்பா நானும் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். ஆளுக்கு பிப்டி பிப்டி பார்ட்னர்ஷிப். டீல் ஓகேயா?
    //
    செல்லம் நானு!?!?

    ReplyDelete
  25. சூப்பர் பிஸினெஸ் - ஆனா இழுத்து மூடியாச்சு மொத பிசினஸேயே - ம்ம்ம் - அதனாலே தான் ஆணி புடுங்கற வேலையா இப்ப ....

    ReplyDelete
  26. ஐயா சென்னை சந்திப்புல நம்ம கதாநாயகன் ராதா உண்டா?

    ReplyDelete
  27. Visited your blog.all the posts are very interesting

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))