பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 19, 2011

மயிலாடுதுறை தீவிபத்து!!!

இன்று மாலை ஒரு 6.30 இருக்கும். மயிலாடுதுறை கொத்ததெரு தம்பிக்குநல்லான் பட்டிணம் வாக்குசாவடியில் வாக்குப்பதிவு எல்லாம் முடிந்து வாக்கு இயந்திரம் சீல் எல்லாம் வைத்து விட்டு அதை சேகரித்து போகும் லாரி வருகைக்காக எல்லா கட்சியினரும் காத்து கொண்டு இருந்தோம். எப்போது வண்டி வரும் என யாருக்கும் தெரியாது. ஒரு முறை இரவு 3 மணிக்கு கூட வந்து சேகரித்து சென்றது. அது வரை எல்லா கட்சியினரும் கட்சி பேதம் இன்றி ஒன்றாக டீ சாப்பிடுவதும், எத்தனை சதவீதம் பதிவு ஆனது என்கிற இன்ன பிற விஷயங்கள் பேசிக்கொள்வதுமாக இருப்பர். அதுவும் அந்த எங்கள் வார்டு கொஞ்சம் பதட்டம் வாய்ந்த வார்டு. . திமுக நகரசெயலர் குண்டாமணி என்கிற செல்வராஜும் அதே வார்டு வேட்பாளர். அதே போல அதிமுக நகர செயலர் செந்தமிழனும் அதே வார்டு . செந்தமிழனின் சகோதரி தான் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் அதிமுகவுக்கு. அதனால் எல்லோருமே அங்கே நின்று கொண்டு இருந்தனர். அப்போது தான் என் தம்பி செல்லிடபேசியில் ஒரு அழைப்பு வந்தது. கம்பனி ஆள் தான் பேசினான். "சார், நான் பெரியகடை தெருவில் தான் இருக்கேன். இங்கே ஜனதா ஃபுட்வேர் கடையில் தீ பிடித்து விட்டது, இப்ப தான் அதில் உள்ளே இருப்பவர்கள் வெளியே ஓடி வந்து கொண்டு இருக்கிறார்கள்" என சொன்ன போது அங்கிருந்த எல்லோருக்கும் கிட்ட தட்ட அதே நேரத்தில் அதே போல அழைப்பு.

மற்ற ஊர்களை போல அல்ல மயிலாடுதுறை. மிகப்பெரிய ஊர் எல்லாம் இல்லை. ஆனால் சுற்று வட்டார டெல்டா விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே டவுன் இது தான். கடைதெரு என பார்த்தால் இரண்டே தெரு தான். ஒட்டு மொத்த நெரிசலும் அங்கே தான் இருக்கும். அதே தெருவில் தான் மாயவரத்து மகா பெரிய ஜவுளி கடைகளும், உலகப்புகழ் பெற்ற ஏ.ஆர். சி நிறுவன நகைக்கடைகளும், பெரிய மளிகை கடைகளும் , ஹோட்டல்களும், இரும்பு கடைகளும், வெடிக்கடைகளும் என கலந்து கட்டி இருக்கும். சுற்று வட்டார எல்லா மக்களும் அங்கே தான் தீபாவளி வியாபாரம் செய்ய வந்திருப்பர். அதும் இன்று நகரத்தில் தேர்தல் நாளாகியதால் காலையில் ஓட்டு போட்டு விட்டு அரசாங்க விடுமுறையை குடும்பத்துடன் உல்லாசமாக கழித்து தீபாவளி "பர்சேஸ்" முடித்து கொண்டு போகலாம் என கடைத்தெருவே ஒரே கூட்ட நெரிசல்.

எள் போட்டால் எள் எடுக்க முடியாது என்பார்களே அப்படி ஒரு கூட்டம். நான் மதியம் அந்த பக்கம் போன போதே அப்படி ஒரு கூட்டம். அதும் தீப்பிடித்ததாக சொல்லப்படும் இந்த கட்டிடம் ஜனதா செருப்புகடை ஒரு மூன்று மாடி கட்டிடம். கேரளாவில் இருந்து பிழைப்புக்காக மாயவரம் வந்த இஸ்லாமிய சமூகத்து மக்கள். ஒரு சின்ன டீக்கடை ஆரம்பித்து இன்று இந்த அளவு முன்னேறி வருபவர்கள். நல்ல உழைப்பாளிகள். அதிலே தீப்பிடித்தால் என்ன ஆகும்? வரிசையாக கடைகள். அதும் பக்கத்து பக்கத்து கடைகள் எல்லாம்... நாகோடா ஜூவல்லரி, கல்யாணி கவரிங் என கடைகள், தவிர பெரியநாயகி மளிகை என்னும் பெரிய கடை, வாசன் காபி தூள் போன்ற கடைகள். அதன் இடது பக்கமோ மிகப்பெரிய "கறார் ஜவுளி கடை" . எதிர் வரிசையில் ஏ ஆர் சி கடைகள் என வரிசையாக கடைகள்.

கடைகள் போகட்டும், அதில் உள்ளே இருக்கும் மக்கள் கதி என்ன என்ற பதட்டம் இங்கே பூத்தில் இருக்கும் ஒட்டு மொத்த அரசியவாதிகளையும் ஆட்டிவிட, ஓட்டு பெட்டியாவது ஒன்றாவது என போட்டு விட்டு எல்லோரும் அங்கே ஓடினர். நான் வீட்டுக்கு வந்து பின்னே அங்கே போகலாம் என நினைக்கும் போதே அமரிக்காவில் இருந்து மயிலாடுதுறை சிவாவின் தொலைபேசி. அடுத்து சீமாச்சு அண்ணன், அண்ணி என வரிசையாக தொலைபேசிகள். இவர்களுக்கு எப்படி அதற்குள் தெரியும் என நான் நினைத்து கொண்டிருக்கும் போதே பதிவர் மயில்ராவணனிடம் இருந்து தொலைபேசி. சரியென நினைத்து கலைஞர் செய்திகள் வைத்தால் அதில் பிளாஷ் நியூஸ் என ஓடுகின்றது. அதற்குள் குடந்தையில் இருந்து என் அக்கா விடம் இருந்து தொலைபேசி. கலைஞர் செய்திகளில் "மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் மூன்றடுக்கு வணிக வளாகத்தில் தீ... உள்ளிருக்கும் மக்களின் ஓலம். ஒரு தீயணைப்பு வண்டி மட்டுமே இருப்பதால் தீயை அணைக்க சிரமம்...." இப்படியாக செய்தி ஓடுகின்றது. ஆன்லைனில் முகநூலில் இருந்த தோழர் அன்சாரி "அண்ணே எத்தனை சதம் ஓட்டு பதிவு ஆகியது, என கேட்க நான் இந்த விஷயத்தை சொன்னேன், அதற்கு அவர் "அப்படியா முதலில் அங்கே போங்க. உங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்யுங்க" என சொன்னார்.

நான் உடனே அங்கே போன போது பெரியகடை தெரு குஜ்னி பேப்பர் மார்ட் முன்பாகவே வண்டிகள் செல்ல முடியாத அளவு கூட்டம். கடைத்தெருவில் முழுக்க முழுக்க இருட்டு. கிட்ட தட்ட ஒரு பத்தாயிரம் மக்கள் கூட்டம். தீயணைப்பு வண்டிகள் ஒரு பத்து இருக்கும். இத்தனைக்கும் காவிரி ஒரு 200 மீட்டர் தூரம் தான். காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதனால் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. வந்த எல்லா தீயணைப்பு வாகனத்திலும் போதுமான அளவு தண்ணீர் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் எந்த வண்டியும் உள்ளே செல்ல முடியா வண்ணம் பாழாய்ப்போன பார்வையாளர்கள். க்யூரியாசிட்டியின் உச்சம். எப்படி எரிகின்றது என பார்க்கும் ஆர்வமும், அதை தன் செல்போனில் படம் பிடித்து அதை நண்பர்களிடம் காட்டி மகிழ அல்லது ஏதோ ஒன்று.. பகிர்ந்துக்கனும் என்கிற ஆர்வம் தான் அதிகமாக தெரிந்தது. அந்த ஜனதா செருப்பு கடை முழுக்க எரிந்து போயிருந்தது. அதன் மேல் மாடி தகதகவென எரிந்து கொண்டிருக்க அதன் மேல்மாடியில் பற்றிய தீ வடக்கே (காவிரி இருக்கும் திசையில்) பரவி அதே தெருவின் முனையில் பெரியகடைதெரு அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி வரை வந்து விட்டது. அந்த அர்சனா வில் இருந்து நான்காவது கடையில் இருந்து வரிசையாக வெடிக்கடைகள்.

மக்கள் கூட்டம் அதிகம். தீபாவளி பர்சேஸ்க்காக வந்த மக்கள் அலறி ஓடிவிட, வேடிக்கை பார்க்க வந்த மக்கள் தான் மிக அதிக தொல்லை கொடுத்து கொண்டு இருந்தனர். "மேன் லிஃப்டர்" வாகனம் எதும் உள்ளே நுழைய முடியவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி தெருவிளக்கு போட பயன்படுத்தும் "மேன்லிஃப்டர்" வாகனம் அந்த எரியும் கடை முன்னே முதலிலேயே வந்தது கூட்டத்தின் உள்ளே மாட்டிக்கொண்டு நிற்க வந்த தீயணைப்பு வீரர்கள் அதிலே ஏறி அந்த கட்டிடத்தினை நெருங்கும் போது கூட்டம் விசில் அடித்தும் ஆரவாரித்தும் செய்த கூத்துகள் மகா அசிங்கம்.

ஒரு கட்டத்தில் திமுகவின் நகரசெயலர் குண்டாமணி, அதிமுக செந்தமிழன் ஆகியோர் கூட்டத்தினரை வேட்டியை மடித்து கட்டி கொண்டு ஒரு பெரிய கம்பை எடுத்து கொண்டு தள்ளி வழி ஏற்படுத்தி கொடுக்க ஒரு நான்கு தீயணைப்பு வாகனம் உள்ளே வந்தது. இத்தனைக்கும் எரியும் கடையின் லெதர் பொருட்கள் ஒருவித துர்நாற்ற புகையை கக்க சிலருக்கு மூச்சு முட்டி மயக்கம் வந்தது. பீய்ச்சி அடித்த தண்ணீரால் சாலைகள் ஒரு சாண் அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனாலும் அதை எல்லாம் யாரும் பொருட்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதில் மட்டுமெ குறியாக இருந்து தொலைத்தனர்.

அப்போது ஓ.எஸ் மணியன் அதிமுக எம் பி வர அவர் பின்னால் ஒரு ஐம்பது பேர் வர ஒரு பாழாய் போனவன் வாழ்க கோஷம் போட அவர் அவனை "புட்ரா அவனை புட்ரா" என திட்ட அவன் ஓடிப்போக அவர் தன் கூட வந்தவர்களை வர வேண்டாம் என சொல்லிவிட்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு செந்தமிழன், குண்டாமணி ஆகியோர் இருந்த இடத்துக்கு போய்கொண்டே தன் செல்லிட பேசியால் யாருக்கோ பேசிக்கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் அங்கே ஒரு சுழல் விளக்கு காரில் டவாலி வர கூடவே நாகை ஆட்சியரும் வந்தார். அதற்குள் தேமுதிக எம் எல் ஏ பால அருள்செல்வன், பாஜகவின் நாஞ்சில்பாலு, திமுகவின் எஸ்கொயர் சாதிக், வர்தகர் சங்க பாண்டு, சீமாட்டி பாய் எல்லோரும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக கூட்டத்தை ஒழுங்கு செய்ய அதற்குள் அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி பெரும் சத்தத்துடன் கொழுத்து விட்டு எரிய தொடங்கியது. அதற்குள் ஒரு நான்கு தீ வண்டிகள், எரிந்து கொண்டிருக்கும் கடைகளை விடுத்து எரியாத கடைகள் மேல் சுத்தமாக தண்ணீர் ஊற்றி நனைத்து விட்டது. அதனால் தீ பரவுவது முதலில் தடுக்கப்பட்டது.

பின்னர் தன் உயிரை பணயம் வைத்து இரு வீரர்கள் ஒரு வழியாக அந்த ஜனதா செருப்புகடை மாடிக்கு தாவி ஏறி (அதற்கு முன்னதாக தன்னை தானே தண்ணீரால் நனைத்து கொண்டனர்) நெருப்பை அணைக்க, அது வரை தீயின் வெளிச்சத்தில் எரியும் இடமாவது தெரிந்து கொண்டிருந்தது போய் கும்மிருட்டில் ஒரே புகை மண்டலம் ஆகியது.

அதற்குள், ஓ எஸ் மணியன் போனில் பக்கத்து பக்கத்து ஊர்களில் இருந்து தீ வண்டி வரவழைத்து விட , ஆட்சியர் வந்தவுடன் முதல் வேலையாக அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை எல்லாம் மூட சொன்னார். (நான்கு நாட்கள் பின்னர் மாலை 5 மணிக்கு தான் டாஸ்மாக் திறக்கப்பட்டது) பின்னர் காவிரியில் இருந்து எரியும் இடம் வரை அந்த தீ வண்டிகள் சகஜமாக போய் வரும் அளவு வசதியாக "பார்வையாளர்கள்" எவனும் இருக்காதபடி வழி ஏற்படுத்தி கொடுக்க திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, காங்கிரஸ் எல்லாம் கை கோர்த்து யாரையும் விடாமல் நிற்க, பின்னர் தான் தீயணைப்பு வீரர்கள் அங்கே பம்பரமாக சுழண்டு சுழண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நான் மெல்ல வெளியேறி வீட்டுக்கு வந்தேன். மணி இப்போது பத்து. ஆனால் இன்னனும் தீ நின்ற பாடில்லை. ஆனால் உயிரிழப்பு இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நிம்மதி. (திமுக குண்டாமணிக்கு சட்டையே காணும், அது போல எப்போதும் ஜவுளிக்கடை பொம்மை போல அசங்காமல் மொட மொட வெள்ளையில் உலாவரும் செந்தமிழன் மடித்து கட்டிய வேட்டியும் கசங்கிய கரிபிடித்த சட்டையுமாகவும், தேமுதிக அருள்செல்வம் எம் எல் ஏ அலங்கோலமாகவும், நாஞ்சில் பாலு கரிபடிந்த முகத்தோடும், கைகோர்த்து நிற்க....ஒரு இயற்கை பேரிடர் வந்தால் தான் நாங்கள் ஒற்றுமையாக இருந்து தொலைவோம் என நீங்கள் சொன்னால் எத்தனை பேரிடர்களையும் நாங்கள் தாங்குவோம் என நினைத்து கொண்டே வந்து சேர்ந்தேன். என்னைப்போலவே எல்லா மயிலாடுதுறையானும் நினைத்திருப்பான் அதை காணும் போது என்றே நினைக்கிறேன்!


18 comments:

  1. அபி அண்ணா, நடந்ததை அற்புதமாக தொகுத்து எழுதி படிப்பவர்கள் அங்கே நேரில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். அருமை. ஆம், உயிர்ச்சேதம் இல்லையென்று அறிந்த பின்தான் என் மனம் அமைதியானது.

    ReplyDelete
  2. வேண்டாம்.. இந்த மாதிரி பேரிடர்களில் மட்டும் தான் ஒன்றாக சேர்வோம் என்றால்.. இவர்கள் சேராமலேயே இருந்து விட்டுப் போகட்டும்!

    ReplyDelete
  3. நல்ல வேலை. உயிர்ச்சேதம் இல்லை.

    //(திமுக குண்டாமணிக்கு சட்டையே காணும், அது போல எப்போதும் ஜவுளிக்கடை பொம்மை போல அசங்காமல் மொட மொட வெள்ளையில் உலாவரும் செந்தமிழன் மடித்து கட்டிய வேட்டியும் கசங்கிய கரிபிடித்த சட்டையுமாகவும், தேமுதிக அருள்செல்வம் எம் எல் ஏ அலங்கோலமாகவும், நாஞ்சில் பாலு கரிபடிந்த முகத்தோடும், கைகோர்த்து நிற்க..//
    இதையெல்லாம் பார்த்தா நம்ம அரசியல் வாதிகள் மேல் கொஞ்சம் நம்பிக்கை வருகிறது!

    ReplyDelete
  4. அபி அப்பா கட்டுரையை படிக்கும் போது பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டு இருப்பதை போல இருக்கு. உயிர் பலி எதுவும் இல்லாதது ஆறுதலான விஷயம்

    ReplyDelete
  5. எல்லாரும் அதே ஊரு, இல்ல, பக்கத்து ஊர்க்கரனாத்தான இருப்பிங்க. அப்புறம் என்ன வேடிக்க வேண்டிக் கெடக்குது? தனக்குனு வராத வரைக்கும் ஒன்னுமில்லன்ற அளவுக்கு சென்னை மாதிரி பெரிய சிட்டில தான் இருப்பாங்கன்னு நெனச்சுட்டு இருந்தேன். :-(

    ReplyDelete
  6. ஒரு எமர்ஜென்சி நேரத்தில் நடந்துகொள்ளவேண்டிய குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் வேடிக்கை பார்க்கும் பிரகஸ்பதிகளை என்ன சொல்ல ;-(

    இனிமேலாவது அவர்கள் இப்படிச்செய்து ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகளுக்கு இடைஞ்சல் செய்யாமல் இருக்கும்படி பயிற்சி கொடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனே முன்வரவேண்டும்.

    நல்ல. தொகுப்பு. நேரே இருந்து பார்த்ததுபோல் திகிலாகவும் கலவரமாகவும் இருந்தது.

    நல்லவேளை. உயிர்ச்சேதம் இல்லை. கும்பகோணமே இன்னும் மறந்தபாடில்லை ;-(

    ReplyDelete
  7. உயிரிழப்பில்லையென்பது ஆறுதலான செய்தி.

    ReplyDelete
  8. தீ விபத்து கொடுமைதான்! ஆனா, அரசியல்வாதிங்க எல்லாம் ஒண்ணா வேலை பாத்ததுதான் அருமை!

    ReplyDelete
  9. சுட சுட பதிவு இட்டு இருக்கிறீர்கள்
    வெளி நாட்டில் இருக்கும் எங்களுக்கு இது தான் முதல் இது சம்பந்தமாக முதல் செய்தி.

    என் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவை தான் செய்தியாக அனுப்பினேன்

    ReplyDelete
  10. ஸலாம் சகோ.அபி அப்பா,

    நான் நன்கு அறிந்த இடங்கள் என்பதாலும் நீங்கள் விவரித்த பாங்கிலும் நானும் அங்கேயே இருந்தது போன்று உணர்ந்தேன். ஒரு பேரிடர் வந்தால் மக்கள் அனைவரும் விருப்பு வெறுப்பு இன்றி ஒன்றிணைவது நல்ல விஷயம் என்றால்,

    இந்த "பார்வையாளர்கள்" தொல்லை...
    அவர்களால் தீயணைப்பில் ஏற்பட்ட சுணக்கம் போன்றன மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    இனி, தீயணைப்புத்துறைப்படையுடன் காவல்த்துறைப்படையும் 'அவசரகால ஒழுங்கு நடவடிக்கை'க்காக தீப்பிடித்த இடத்தில் குழுமியாக வேண்டும் என்று புரிகிறது. இதுபோல் இடையூறாய் இருப்போரிடம் வழக்கு தொடர்ந்து தக்க தண்டத்தொகை அரசால் வசூலிக்கப்படும் என்று சட்டம் அறிவிக்கப்பட வேண்டும்.

    இன்னும் ஒரு விஷயம்:
    தாங்களும் பார்வையாளராக இருந்திருக்க முடியாது. நிருபர் மாதிரி என்று சொல்லலாம். ஆனால், குறிப்பிட்ட அளவு நிருபர்கள்-ஐடி கார்டுடன் போதும் என்றும் வரையறை செய்யப்படல் வேண்டும்.

    மிக முக்கியமான ஒரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.அபி அப்பா.

    ReplyDelete
  11. இன்று மாலைதான் என் அம்மா, 'நேத்து ஜனதால தீப்புடிச்சுருச்சு தம்பி' என்று அவர்களுக்கு தெரிந்தவற்றை சொன்னார்கள். இப்போது இந்த பதிவை படிக்கும்போது நானே அங்கு இருந்தது போல் உணர்கிறேன். தீ-செய்தி கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் அரசியல்வாதிகள் பொருபாக செயல்பட்டது கேட்டு கொஞ்சம் சந்தோஷம்தான்! பகிர்வுக்கு நன்றி அபி அப்பா!

    ReplyDelete
  12. அன்பின் தொல்ஸ் - நேர்முக ஒளிபரப்பு - அருமையாக எழுதப்பட்ட இடுகை - அத்த்னை களேபரத்திலும், என்ன நடக்கிறத் என்பதனைக் கண்டு உள்வாங்கி - நினைவில் நிறுத்தி - ஒரு சிறு செயல் கூட விட்டு விடாமல் எழுதியமை நன்று. ஒரு துயர நிகழ்வினையும் இவ்வளவு அழகாக ஆவணப்படுத்த இயலும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. ரோம் நகரம் பற்றி எரிய நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்.
    'வேடிக்கை பார்க்க வந்த மக்கள் தான் மிக அதிக தொல்லை கொடுத்து கொண்டு இருந்தனர்'
    'கூட்டம் விசில் அடித்தும் ஆரவாரித்தும் செய்த கூத்துகள் மகா அசிங்கம். '
    பக்கத்துக்கு வீட்டில் எறியும் தீ நம் வீட்டை பிடிக்க எவ்வளவு நேரம் ஆகும் ! சுயநல வாதிகள் சினிமா படம் பார்த்து கெட்டு அழியும் கூட்டங்கள் எப்பொழுது திருந்தும். அடுத்தவர் அவதி சிலருக்கு மகிழ்வு.

    மயிலாடுதுறையே இருள்மயமாக காட்சி, மனதை குலுங்க வைக்கும் நிகழ்வாக கட்டுரை இருந்து அத்துடன் மனிதர்களின் பல் வகை மனதினை படம் பிடித்து காட்டிய கட்டுரை. உங்கள் சேவை தொடரட்டும்.

    ReplyDelete
  14. ஒரு கல்யாணத்திற்காக வந்த போது இந்த நெருக்கடியான கடைவீதிகளை பார்த்து, ஒரு நெருக்கடி வந்தால் எப்படி சமாளிப்பார்கள் என யோசித்ததுண்டு. அது இந்த தீ விபத்தின் மூலம் நேரடியாகவே உணரப்பட்டுள்ளது.

    பொதுவாக தீவிபத்து ஏற்படுகையில் கவல்துறையினரும் உடன் செல்லவேண்டும்.சில இடங்களில் அப்படி செய்கின்றனர்.

    ReplyDelete
  15. ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா! இது ஒரு கேள்விக் குறியா?
    மயிலாடுதுறையில் தீ விபத்து
    இங்கு கிளிக் செய்து பாருங்கள்
    Please visit
    http://nidurseasons.blogspot.com/2011/10/blog-post_20.html

    ReplyDelete
  16. வணக்கம்! இன்றைய பத்திரிகைகள் இந்த செய்தியை ஏனோ முழுமையாக வெளியிடவில்லை.இதனை வலைப் பதிவில் தாங்கள் தெளிவாக ஒரு நீரோடையைப் போல் பதிவு செய்துள்ளது பாராட்டுக்குறியது.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))