பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 11, 2007

பொங்கல் சாப்பிடுவது எப்படி???

காலை நான்கு மணிக்கே பிரம்ம நேரத்தில் பொங்கல் சாப்பிட ஆயத்தமாகிவிட வேண்டும். ஐந்தேகால் வரை புரண்டு புரண்டு படுத்துகொண்டே சாப்பிட போகும் பொங்கலை பற்றிய நினைவில் சின்னதாய் கனவு காண வேண்டும். ஐந்தேகால் மணிக்கு எழுந்து முகம் மாத்திரம் கழுவி கொண்டு ..கவனிக்கவும் பல் விளக்க கூடாது, வாசலுக்கு வந்து கையை ரெண்டையும் மேலே தூக்கி சிம்ரன் மாதிரி நெட்டி முறித்து விட்டு நடையை கட்ட வேண்டியதுதான் காளியாகுடி ஹோட்டலை நோக்கி. நம்மோடு ரோட்டிலே வரும் நமக்கு தெரிந்த ஆசாமிகளிடம் "என்ன பொங்கலா?"ன்னு கேக்க கூடாது. விவகாரமா பதில் சொல்லுவானுங்க. எதுக்கு காலையிலேயே வாங்கி கட்டிக்கனும். விடிந்தும் விடியாத அந்த காலை நேரத்தில் சின்ன கடைத்தெரு வாழைப்பழ கடையில் ஒரு தினமணி வாங்கி, கும்பகோணம் வெத்தலை சுண்ணாம்பு வச்சி, பன்னீர் புகையிலை, நெய் சீவல் கொண்ட நேர்த்தியாக மடிக்கப்பட்ட பொட்டலத்தை தினமணியின் உள்ளே வைத்து மடக்கி கக்கத்தில் வைத்துக் கொண்டு "இன்னிக்கு என்ன புக் வந்திருக்கு?"ன்னு கேட்டு கடைக்காரன் "குங்குமம்"ன்னு சொன்னா "ஆனந்த விகடனை" வாங்கி சர்ன்னு மூக்கால ஒரு உருஞ்சு அந்த புது வாசனையை(நடுப்பக்கம் தவிர எந்த பக்கத்தை வேண்டுமானாலும் முகர்ந்து பார்க்கவும், இல்லாவிடில் பொங்கல் சாப்பிட போகும் மூட் போய் விட வாய்ப்பு இருக்கிறது) திரும்பவும் இப்போ காளியாகுடி நோக்கி பயணம்.

ரோட்டில் நடக்கும் நேரத்தைகூட வீணடிக்க கூடாது ஆமா அப்படியே ஆ.வியை பிரித்து சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போமை" மெதுவா படிச்சு கிட்டே நடக்கும் போது கால் எதேற்ச்சையா செருப்பை கழட்டும், விரல் தாவங்கட்டையில் டான்ஸ் ஆடும். அப்படின்னா நேஷனல் ஸ்கூல் சரஸ்வதி சிலை வந்தாச்சுன்னு அர்த்தம். அப்படியே கதை சுவாரஸ்யமா படிச்சு கிட்டு வரும் போது நாம் நம்மை அறியாமலே ரோட்டின் நடுவே வந்து கொண்டிருப்போம். அப்போது எவனாவது "வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா"ன்னு கேப்பான். அப்பதான் வாசல் கதவை திறந்து போட்டது ஞாபகம் வரும். அப்படியே நடந்தா இதோ வந்துடுச்சே காளியாகுடி!

அப்போ மணி ஐந்தரை ஆகியிருக்கும், அங்க பார்த்தா காளியாகுடி வாசலில் சென்னையில் இருந்து நாலரை மணிக்கு பஸ்டாண்டு வந்து சேர்ந்த திருவள்ளுவரில் வந்த ஏழரை ராமமூர்த்தியும், கோவை திருவள்ளுவர் கொண்டு வந்து விட்ட கமலா மாமியும் இன்ன பலரும், கொழுப்பு குறைய வாக்கிங் துரத்தி விடப்பட்ட ரிட்டையர்டு தாசில்தார் சுப்புரமணியன் சாரும் நெய் பொங்கலுக்காக விளக்காத பல்லோடு காத்து கிட்டு இருப்பாங்க. இந்த கும்பல் இருப்பதை எதிர்பார்த்தே முனுசிபல் ஸ்கூல் வாசல்லயே தினமணியை கொத்த தெரு அருவாளை பின் இடுப்பில் சொருகி இருப்பது போல சொருகி டி ஷர்ட்டால் மூடிவிடனும். ஆ.வியில் தலையை விட்டு கொண்டு எடுக்க கூடாது.

காளியாகுடியின் கொலாப்ஸ் கேட்டின் உள்ளே பூட்டிகிட்டு ச்சீனா பண்ணும் அலப்பறை தாங்கமுடியாது. மாஞ்சு மாஞ்சு சாம்பிராணி போடுவான். ஒரு வழியா கதவு திறக்கப்பட்ட உடனே "எங்கே நமக்கு பொங்கல் கிடைக்காதோ"ன்னு பாய்ந்து உள்ளே போகும் நபர்கள் கண்டிப்பாக பொண்டாட்டியை சரோஜினி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு விட்டு விட்டு ராத்திரி தூக்கம் போன பசியில் இருப்பவர்கள் என சுலபமாக புரிஞ்சுக்கனும்.

உள்ளே போன பின் நேரா வாஷ் பேசின்(செராமிக் அல்ல சிமெண்ட்டால் கட்டப்பட்டது) பித்தளை பம்ப்பை திருகிகிட்டே முன்னே போய் ரசம் போன கண்ணாடியில் கீழே ARC விஸ்வநாதன் & கோ ன்னு கோணலா எழுதியிருப்பதை படித்து கொண்டே "ச்சீனா பல்பொடி எங்கே"ன்னு கேட்டு கொண்டே "ஞாயிறு ஷோ ரூம் உண்டு"ன்னு படிச்சு முடிக்கும் போது "காலிகட்" பல் பொடியை கையிலே திணிப்பான் ச்சீனா. வெத்தலை போட்டு வெந்த வாயிலே காலிகட் பல்பொடி பட்டவுடன் எரியுமே அதை ஆராய கூடாது அனுபவிக்கனும்.’’ஏண்டா ஆண்டவா என்னை இத்தன அழகா படச்சே”ன்னு  பின்ன வேஷ்டியால முகத்தை துடைத்து கொண்டே வந்து "இந்த தபாவும் பொம்பள புள்ளயா போச்சு, காப்பி சுமாராவே இருக்கட்டும்"ன்னு சொல்லிகிட்டு பிளாஸ்க்கை நீட்டும் கோயிஞ்சாமியை "கொஞ்சம் தள்ளுப்பா"ன்னு சொல்லிகிட்டே நாம அடுக்களை உள்ளே போயிடனும்.

கரி படிந்த சுவத்துல மஞ்சள் கலந்த சுண்ணாம்பு காளியாகுடியின் ஸ்தாபித வருஷம் 1938 அப்போ அடிச்சது. "தடுக்கு எங்கடா ச்சீனா"ன்னு கேட்டா "நீ நிக்கிறதே தடுக்கு மேல தான்னு எரிஞ்சு விழுவான். அத எல்லாம் கண்டுக்க பிடாது. நம்ம லட்சியம் பொங்கல் மட்டுமே. சம்மணம் போட்டு உக்காருவதை விட "ஃப்ரீயா விடு மாமே"ன்ற ஸ்டைலில் "தைலா"விலே பட்டு புடவை எடுக்க உக்காந்திருக்கும் பெண்களை போல ரிலாக்ஸ்டா உக்காந்து "ச்சீனா, நுனி இலை வேணாம், ஏடு எடுத்து போடுடா"ன்னு குரல் விட்டுகிட்டே "தினமணியை பிரிச்சு நம்ம வீட்டுல சோபாவுக்கு கீழே உக்காந்து கிட்டு படிப்பதை போல படிக்க தொடங்கும் போது " பத்தாள் இடம் உன் ஒருத்தனுக்கேவா"ன்னு ச்சீனா சொறிஞ்சுகிட்டே கொழுந்து வாழை இலை ஏடு போடுவான்.(மீல்ஸ் சாப்பிடதான் நுனி இலை வசதி. பொங்கலுக்கு ஏடு இலை தான் பெஸ்ட். நடுவே எந்த தடங்களும் இல்லாமல் பொங்கல் ஸ்கேட்டிங் விடும் நெய்யில்). ஈயம் பூசின பித்தளை டம்ளரில் தண்ணியோடு அதன் தலையில் நக்குன்னு வைப்பான். இலை ஏற்கனவே கழுவி இருக்கும் அதனால நாம கழுவ வேண்டாம்.

அடுத்து ச்சீனா கொண்டு வருவது கெட்டி சட்னி, கரண்டில அதை அவன் எடுக்கும் அழகே தனி, எடுத்து இலையில் ஓரத்தில் நச்சுன்னு ஒரு தட்டு. அரை உருண்டையா வந்து விழும். பின்ன போயிடுவான். நைசா அந்த சட்னியை எடுத்து நாக்கில் வைக்கும் போதே "காலிகட் பல்பொடியின் எரிச்சலுக்கு தேவாமிர்தமா இருக்கும். அப்போ நம்ம ஹீரோ "பொங்கல்" பற்றிய ஆவல் நம் வேஷ்டியில் ஜொல்லா வழியும். இதோ வந்தாச்சு பொங்கல். வெங்கல குண்டானில் கொட்டாங்குச்சி அகப்பை அது கைப்பிடி மூங்கி சிம்பு. பல வருஷமா அதே அகப்பை போல இருக்கு மோர்காரி அகப்பை மாதிரி அந்த கொட்டாங்குச்சி அப்படி ஒரு வழவழப்பாக இருக்கும். நெய்யோடு பொங்கலை அதில் அள்ளுவதும் தெரியாது அது இலையில் வந்து விழுவதும் தெரியாது. அப்படி ஒரு வாசம் நம்மை சுத்தியும் பரவும்.

பட்டிகாட்டான் முட்டாய் கடை பார்த்த மாதிரி இல்லாம புது பொண்டாட்டிய தொடுவது போல "ஐ லவ் யூ டா செல்லம்"ன்னு மெதுவா பொங்கல் குவியலின் பக்க வாட்டில் விரல் வைத்து கொஞ்சூண்டு இழுத்து, நெய்யிலே அது வழுக்கி கிட்டே வரும் அதை விரலால் எடுக்காமல் கெட்டி சட்னி பக்கமா "தள்ளி"கிட்டு போய் நடு விரலால கொஞ்சம் சட்னியை அதுக்கு ஜோடி சேர்த்து இப்போ மூணே விரல்களை பயன் படுத்தி நாக்கின் மேல் வைத்து ஆஹா ஆஹா ...எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ன்னு பாடிகிட்டே "ச்சீனா வர வர காளியாகுடி பொங்கல் முன்ன மாதிரி இல்லைடா"ன்னு சொல்லனும். அதுக்கு அவன் ஆமா 50 வருஷம் முன்னகூட உங்க தாத்தா இதே இடத்துல உக்காந்து கிட்டு எங்க தாத்தாகிட்ட இதையே தான் சொல்லியிருப்பார்ன்னு சொல்லுவான்.

பின்ன தங்கமணியை வசியம் செய்ய நினைப்பவர்கள் "ச்சீனா ஒரு பார்சேல்ல்ல்ல்"ன்னு குரல் விடலாம்.

குறிப்பு: சென்னையில் உள்ளவர்கள் இந்த பொங்கல் ருசி பார்க்க ஒரு நபருக்கு ஆகும் செலவு ரூபாய் 300!!

திஸ்கி: பதிவின் சைஸ் அதிகமா போனதால் அடுத்து குடிக்க இருக்கும் காபி நேயர்களின் விருப்பத்தை பொருத்து அடுத்த பதிவாக போடப்படும்.

33 comments:

  1. பொங்கல் தெரியும்,அதென்னய்யா பொங்க'ள்'???????

    ReplyDelete
  2. சூப்பர் அண்ணாத்தே...!!!

    அந்த காலத்து அனுபவங்கள் :))))))))))))))))

    ReplyDelete
  3. அண்ணா!

    கரெக்ட்டாத்தான் சொல்லியிருக்கீங்க!

    "பொங்கள்" ன்னு

    உண்மைதான் அந்த நெய் வடியும் கள் :-)

    ReplyDelete
  4. அய்யா அய்யோ அபி அப்பா திருந்தவே மாட்டீங்களா?
    அது பொங்கள் இல்லை பொங்கல்...பொங்கல்...
    பொங்கல்...பொங்கல்...

    ReplyDelete
  5. ஆஹா நிசம்மாவே இது நீங்க சாப்பிட்ட பொங்கல் தானா???
    சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போமெல்லாம் சொல்றீங்களே…ரொம்ப அருமை.. காப்பிக்காக காத்திருக்கிறோம்

    ReplyDelete
  6. என்னது பொங்களா... இல்ல பொங்கலா தலைப்பைப்பார்த்து அதிர்ந்து போயிருக்கேன்.. இனி தான் படிக்கனும் பதிவு...

    ReplyDelete
  7. பொங்க'ளோ' ? பொங்கல் !
    :)

    ReplyDelete
  8. ஹிஹி! நல்லா இருந்தது....

    அது என்னாங்க பொங்கள்? ஏதோ விவகாரமான விஷயம்னு தெரியுது... நெய் விட்ட கள் போலத் தெரியுது - உருகி எழுதியிருக்கீங்க!தடங்கள்னெல்லாம் எழுதியிருக்கீங்க யாரு என்னிய மாதிரி தடம் (tracks) விட்டுட்டு போறவங்கன்னு மாத்திச் சொல்லிட மாட்டீங்க தானே?

    அபி அப்பா முத்திரையோட (தினமணிய அருவா மாதுரி வைச்சுகிட்டு...! "தம்பி, தினமணிக்கு எத்தனை பயன் உண்டு என்று கட்டுரை எழுதுக") நிஜமாவே நல்லா இருந்தது!

    ReplyDelete
  9. முதலில் பொங்கலை சரியா எழுதுங்க. அப்புறம் சாப்பிடலாம்.

    ReplyDelete
  10. பொங்கல் தெரியும்,அதென்னய்யா பொங்கள்? ஒரு வேளை பொங்கி வரும் கள்ளோ?

    ReplyDelete
  11. //கண்மணி said...
    அய்யா அய்யோ அபி அப்பா திருந்தவே மாட்டீங்களா?
    //

    டீச்சர் அண்ணே சொல்றது நிசம்தான் அது பொங்"கள்" தான்

    அத்தனை மணிக்கு சாப்பிட்டு வந்து படுத்தா அப்படியே சொக்கிபோயிடுவோம் :))

    ReplyDelete
  12. //முத்துலெட்சுமி said...
    என்னது பொங்களா... இல்ல பொங்கலா தலைப்பைப்பார்த்து அதிர்ந்து போயிருக்கேன்.. இனி தான் படிக்கனும் பதிவு...
    //

    யக்கோவ் உங்க கூட டூஊஊ :(

    நீங்க தானே முன்னாடி சொன்னீங்க பதிவு படிச்சுட்டுத்தான் அப்புறமே கமெண்டனுமுனு...!!!

    ReplyDelete
  13. பதிவை படிச்சுமுடிச்ச பின்னாடி கையில பொங்கல் வாசம் அடிக்கிற மாதிரி இருக்குது

    ReplyDelete
  14. ம்ஹூம் மாயவரத்துல நாங்கள்ளாம் கொரநாடு தட்டி மெஸ்ஸுக்குத்தான் இப்படி அடிச்சு பிடிச்சு போவோம்

    ReplyDelete
  15. //நந்து f/o நிலா said...
    ம்ஹூம் மாயவரத்துல நாங்கள்ளாம் கொரநாடு தட்டி மெஸ்ஸுக்குத்தான் இப்படி அடிச்சு பிடிச்சு போவோம்
    //

    அடப்பாவி மக்கா!

    நீங்கள்லாம் எங்க ஊருலதான் கும்மி அடிச்சவய்ங்களாஆஆஆஆஆ :))

    ReplyDelete
  16. சூப்பர்... நீங்க சொல்லும் போதே சாப்பிடனும் போல இருக்கு :)

    அதிலும் புது பொண்டாட்டி உவமை டாப் :)

    ReplyDelete
  17. இன்னிக்கு அபி அப்பாவுக்கு பொங்கல்(ள்) வைத்துவிடலாம்னு தலைப்பை பார்த்தவுடன் வந்தேன் , ஆனால் மக்கள் எனக்கு முன்ன அவருக்கு பொங்கல்(ள்) வைத்துட்டாங்க. நல்லவேலை தப்பித்தார் அவர் :-))(ஏம்பா இந்த கும்மி அடிக்கிறவங்க எல்லாமே இப்படித்தானா)

    //பொங்கல் தெரியும்,அதென்னய்யா பொங்கள்? ஒரு வேளை பொங்கி வரும் கள்ளோ?//

    இளா ,
    அது என்ன என்னைப்போலவே உங்களுக்கும் தோன்றி இருக்கு, நான் தலைப்பை பார்த்ததும் இதையே தான் நினைத்தேன்(பாம்பின் கால் பாம்பறியுமோ) :-))

    ReplyDelete
  18. நான் கேட்க மறந்தது,

    //காலை நான்கு மணிக்கே பிரம்ம நேரத்தில் பொங்கல் சாப்பிட ஆயத்தமாகிவிட வேண்டும். ஐந்தேகால் வரை புரண்டு புரண்டு படுத்துகொண்டே சாப்பிட போகும் பொங்கலை பற்றிய நினைவில் சின்னதாய் கனவு காண வேண்டும்.//

    காலை நான்கு மணிக்கு சாப்பிடும் மன நிலை எப்படி வரும்,சரி 5.15 மணிக்கே என்றாலும் இராப்பட்டினி கிடந்தால் மட்டுமே சாத்தியம். எனக்குலாம் அந்த நேரத்துக்கு தேவாமிர்தம் கொடுத்தா கூட உள்ளே போகாது, காபி நீங்கலாக! அதுவும் தூங்கி எழுந்து பொங்கல் சாப்பிட மனசு வருமா, இல்லை பசி தான் அந்த டைம்க்கு இருக்குமா?

    ReplyDelete
  19. //வவ்வால் said...
    இன்னிக்கு அபி அப்பாவுக்கு பொங்கல்(ள்) வைத்துவிடலாம்னு தலைப்பை பார்த்தவுடன் வந்தேன்
    //

    ஒஹோ! தலைப்பை பார்த்தாலே நீங்க ரெடியாயிடுவீங்களா வவ்வால் :)))))

    ReplyDelete
  20. //delphine said...
    :)
    thols, REALLY ENJOYED THE COMMENTS!!
    hIGH TIME YOU GO FOR A tAMIL tUTION CLASS!
    //

    கரெக்ட்தான் டாக்டர்!

    படிக்கவேண்டிய வயசுல படிக்கலை :))))

    ReplyDelete
  21. ரீஜண்டா மாயவரம் போசொல்லோக்கூடோ அந்த காரியாகுடி ஓட்டல்லதான் நாஷ்டா துன்னோம்பா..பஸ்ஸ்டாண்டு அன்னாண்ட அந்த டவுரு கிட்ட கீதே அதான...

    ஆனா பொங்கல மிஸ் பண்டோம் போலக்கீதே...மசால் தோச ஒன்னு சாப்டதே வயித்தை குப்புன்னு அடச்சுடுச்சு..அப்பாலிக்கா ரவா தோச வேற ஒன்னு உள்ள தள்ளிக்கினேன்..

    காபி டக்கரா இந்துச்சுபா...இதுக்காண்டியே ஈவுனிங்கு இன்னொருவாட்டி போயி காபி அடிச்சுட்டு வந்தோம்..

    தோஸ்துங்க 7-8 பேரு ரவுண்டு கட்டி துன்னதுக்கு டோட்டலா 130ஓ 140ஓ தான் பில்லு வந்துச்சி...மெட்ராஸ் ரேட்டையெலாம் நெனச்சு பாத்து கண்ணுல அழுவயே வந்துச்சி

    ReplyDelete
  22. //பின்ன தங்கமணியை வசியம் செய்ய நினைப்பவர்கள் "ச்சீனா ஒரு பார்சேல்ல்ல்ல்"ன்னு குரல் விடலாம்.//பரவாயில்லை. வெளிய சாப்பிடறவங்கள எல்லாம் தங்கமணிக்கும் வாங்கிட்டு போகணும் சொல்றீங்க!! நல்லாத்த அபி அம்மாவ வசியம் பண்ணிருக்கீங்க‌

    ReplyDelete
  23. தூக்கம்...தூக்கமாக வருது....

    ReplyDelete
  24. //
    பின்ன தங்கமணியை வசியம் செய்ய நினைப்பவர்கள் "ச்சீனா ஒரு பார்சேல்ல்ல்ல்"ன்னு குரல் விடலாம்.
    //
    Important point noted

    the way u explained is too nice.
    (Commenting from office so English)

    ReplyDelete
  25. "என்ன பொங்களா?"ன்னு
    தப்பு ஒண்ணு,

    ReplyDelete
  26. மூக்காலே "உறுஞ்சு"

    தப்பு இரண்டு

    ReplyDelete
  27. "கட்டிக்கனும். "

    தப்பு மூணு

    ReplyDelete
  28. "எதேர்ச்சையா"

    தப்பு நாலு

    ReplyDelete
  29. "வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா"ன்னு கேப்பான்."

    மாயவரத்திலுமா? சென்னையிலே மட்டும்னு நினைச்சேன். :P

    ReplyDelete
  30. "கொத்த தெரு"

    யாரு இது புதுசா?

    ReplyDelete
  31. "அனுபவிக்கனும்.’’ஏண்டா ஆண்டவா என்னை இத்தன அழகா படச்சே”ன்னு நெனச்சுகிட்டே பின்ன வேஷ்டியால முகத்தை துடைத்து கொண்டே வந்து "இந்த தபாவும் பொம்பள புள்ளயா போச்சு, காப்பி சுமாராவே இருக்கட்டும்"ன்னு சொல்லிகிட்டு பிளாஸ்க்கை நீட்டும் கோயிஞ்சாமியை "கொஞ்சம் தள்ளுப்பா"ன்னு சொல்லிகிட்டே நாம அடுக்களை உள்ளே போயிடனும்."

    இந்த "ண" "ன" வும் சரியா வரலையே, இதிலே அழகா இருக்கிறதா வேறே நினைப்பா? தாங்கலை, எண்ண முடியலை, என்னாலே, I give up!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  32. கண்மணி டீச்சருக்கு அனுப்பித் திருத்தியாவது போட்டிருக்கலாம், கஷ்டம், இப்போப் பாருங்க, பொங்கலுக்குப் பதிலாப் "பொங்"கள்" சாப்பிட வேண்டிப் போச்சு! :P

    ReplyDelete
  33. சூப்பர்!!!!! வீட்டில் இருந்து கிளம்பி நிஜமாகவே பொங்கல் சாப்பிட்ட மாதிரி இருந்தது.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))