பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 20, 2013

மிஸ்டர் காக்கையார்!!!


வரும் புதன் அன்று கடைகளில் கிடைக்கும் 'பாவியர் வடகன்' இதழில் வரும் "மிஸ்டர் காக்கையார் " பகுதியில் சில வரிகள்:

வியர்வையில் குளித்து வந்த காக்கையார் " முதல்ல ஏ சி யை போடுங்கப்பா" என சொல்லி டேபிளில் வந்து அமர்ந்ததும் சோற்றுக்கற்றாழை ஜூசை கொடுத்தோம். அலகால் உறிஞ்சியவறே "யப்பா கடலூரில் வெயில் ரொம்ப அதிகம்" என சொன்னதும் காதை தீட்டிக்கொண்டு கேட்டோம். "என்ன காக்கையாரே, சீமானின் மாநாடு  கடலூரில் வெப்பம் தகிக்க செய்து விட்டதா?" என கொக்கியை போட்டோம். "ஆமாம், அது சீமானால் என்று சொல்வதை விட முதல்வர் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதால் வந்த வெப்பம் என்றும் சொல்லலாம். பேரணிக்கு தடை, மாநாட்டுக்கு தடை இதையெல்லாம் மீறி சீமான் ஒரு பூட்டிய வீட்டுக்குள் மாநாட்டை(?) நடத்தியது பின்னர் போலீஸ் கைது செய்ய போனதும் சீமான் பாபாராம்தேவ் போல  ஓடியது எல்லாம் தமாஷ் காட்சிகள். முதலில் சீமான் சுடிதார் போட்டு கொண்டு தான் தப்பிப்பதாக இருந்ததாம். பின்னர் அந்த 'கோலத்தை' பார்த்து யாராவது "மண்டையை" போட்டுட்டா கொலை கேசாக மாறிவிடும் அபாயம் இருப்பதை அவரது தம்பிமார்கள் அறிவுறுத்தியதால் அந்த திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாம்"

"ஒ... அந்த அளவு ஆகிவிட்டாதா? சரி காஷ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாசின்மாலிக் வருகை பற்றி சொல்லுங்கள் காக்கையாரே" என நாம் கேட்டதும் "ஏன் அவசரக்குடுக்கையாய் இருக்கிறீர்கள்" என சலித்துக்கொண்டே சொல்ல ஆராம்பித்தார்.

"யாசின்மாலிக் வருகை பற்றி ஒரு வாரம் முன்பாகவே சீமான் 'ஒரு முக்கிய தலைவர் வருகிறார். ஆனால் இப்போது அது யார் என சொல்ல மட்டேன்.கூட்டம் முடிந்ததும் கூட சொல்ல மட்டேன். வேண்டுமானா நீங்களே கண்டுபிடித்து கொள்ளுங்கள்' என சவால் விட்டதுமே  முதல்வர் தன் அந்தரங்க உளவுப்பிரிவை வைத்து அது யாசின்மாலிக் என மோப்பம் பிடித்து விட்டாராம். சென்னைக்குள் யாசின் காலடி வைத்ததுமே திருப்பி அனுப்ப முதல்வரிடம் அனுமதி கேட்டது உளவுப்பிரிவு . ஆனால் முதல்வர் "அப்படி வேண்டாம். வரட்டும் வந்து பேசட்டும். பேசிவிட்டு காஷ்மீருக்கும் திரும்பட்டும். பின்னர் வழக்கு பதிவு செய்து காஷ்மீருக்கு தமிழக போலீசை அனுப்பி கைது செய்து அழைத்து வந்து திருச்சி சிறையில் அடைக்கலாம் என சொல்லிவிட்டாராம்"

"ஏன் இப்படி முதல்வர் காதை சுத்தி மூக்கை தொட வேண்டும்?" என கேட்டோம். அதற்கு காக்கையார் "சரியான மங்குனி அமைச்சராக இருக்கின்றீரே" என நம்மை கலாய்த்து விட்டு " யாசின் மாலிக்கை உடனே திருப்பி அனுப்பி விடுவதை விட வந்து பேசி விட்டு காஷ்மீர் சென்ற பின்னர் வழக்கு பதிவு செய்து தமிழக போலீசாரை அனுப்பி கைது செய்து அழைத்து வந்தால் இந்தியாவே திரும்பி பார்க்குமே தமிழகத்தை. மேலும் ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி என்னும் இமேஜும் இந்தியா முழுக்க பேச்சாகுமே. இந்த பேச்சுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அம்மையார் நினைக்கிறார். பிரதமர் வேட்பாளர் மோடிக்கு இவரது இந்த மூவ் கிலி கொடுக்கபோவது என்னவோ உண்மை. ஜெயலலிதா பிரதமர் ஆனல் பாகிஸ்தான் மேல் எச்சில் துப்பி வம்புக்கு இழுத்து போரிட்டு ஜெயித்து வல்லரசாக மாற்றுவார் என மக்கள் நினைக்க செய்யும் அளவுக்கான மாஸ்டர் பிளான் இது என அரசியல் நோக்கர்களே வியந்து போவார்கள் பாருங்கள்.

"ஒ... கதை இப்படி போகின்றதா?"

"ஆமாம்... பரவலாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அங்கு இருக்கும் பிராந்திய கட்சிகளுடன் அல்லது சில தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஒவ்வொறு வேட்பாளரை நிறுத்தும் பலே ஐடியாவும் அம்மாவிடம் இருக்கிறதாம். அனேகமாக டெல்லியில் ராமராஜன் நிறுத்தப்படலாம். அது போல காஷ்மீரில் நடிகர் தியாகு நிறுத்தப்படலாம், ஜார்கண்டில் நடிகர் செந்தில் நிற்பது உறுதியாகிவிட்டதாம். எம் ஜி ஆர் கூட பெயரில் மட்டும் தான் அனைத்திந்திய என்ற வார்த்தை சேர்த்தார். ஆனால் அம்மா நிஜமாகவே அதிமுகவை  அனைத்திந்திய அதிமுக வாக மாற்ற போட்ட மாஸ்டர் பிளானாம் இது.

"அடடே, எம் ஜி ஆரை விட அம்மாதான் கட்சி நடத்துவதிலும் ஆட்சி நடத்துவதிலும் டாப் என நிரூபித்து வருகின்றார். ஆமாம்... கேட்க மறந்து விட்டோம்... சீமான் கைது செய்யப்படுவாரா?"

"சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்படுமாம். ஆனால் கைது இருக்காதாம். விஜயலெஷ்மி வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருக்கின்றது. அதன் கூடவே இந்த வழக்கும் ஜோடி போட்டு உட்காந்து கொள்ளும். தேர்தல் நேரத்தில் கருணநிதியை வசை பாட இந்த வழக்குகள் பயன்படுமாம்.

"அம்மாவின் ஈராண்டு சாதனை மற்றும் அம்மா மெஸ் பற்றி மக்கள் வரவேற்பு எப்படியாம்" என அடுத்த கேள்வியை வீசினோம்.

"ஒ அதுவா, மிகப்பிரமாதமான வரவேற்பு. இந்தியா முழுக்க மூன்று முழுப்பக்கத்தில் அம்மாவின் சாதனை மின்சாரத்தில் இயங்கும் ஆயிரம் வாட்ஸ் பல்பாக பளிச்சிட்டது. அம்மா மெஸ் ஏழை எளிய மக்கள் வயிறார உண்டு வருகின்றனர். முகேஷ் அம்பானி கூட சென்ற வாரம் மும்பையில் இருந்து பறந்து வந்து தாலையில் துண்டு போட்டுக்கொண்டு ''அம்மா மெஸ்"ல் இட்லி வாங்கி சாப்பிட்டு தன் மனைவி நீதா அம்பானிக்கு ஒரு பார்சல் வேண்டும் என கேட்டாதாகவும் அதனால் மாநகராட்சியினருக்கும்  இவருக்கும் வாங்குவதம் வந்து பின்னர் மேயர் தலையிட்டு சமாதானம் செய்து தன் சொந்த அதிகாரத்தில் ஒரு பார்சல் கொடுத்ததாகவும் ஒரு செய்தியும் காக்கையார் காதுக்கு எட்டியது. அனேகமாக அம்மா  ஒரு அவசரக்கூட்டம் கூட்டி 110 விதி  அறிக்கை வாசித்து இனி நீதா அம்பானி போன்ற மகா ஏழைகளுக்கு பார்சல் கொடுக்கவும் ஏற்பாடுகள் ஆகிவருகின்றது.

வரும் தேர்தலில் பள்ளிகளில் வாக்குசாவடி வைப்பதற்கு பதிலாக அம்மா மெஸ்க்கு பக்கத்தில் ஒரு பந்தல் போட்டு அதிலே வைத்து விடலாம் என தேர்தலுக்கு பொறுப்பான சம்பத்தானவர் ஒரு ஆலோசனை சொல்லி இருக்கிறாராம் அம்மாவிடம். அம்மாவும் "ஏதோ பார்த்து செய்யுங்க" என சிரித்து கொண்டே பச்சை கொடி காட்டிவிட்டாராம்."

"பிரமாதம். பாவம் சகோதரர்கள் பத்திரிக்கைகளுக்கு மூன்று பக்க விளம்பரம் கொடுக்கவில்லையே. அது ஏனாம்? என்றோம்.

"இல்லை, சகோதரர்கள் அம்மாவிடம் ஒரு தூதுவரை அனுப்பி 'எங்களுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டாம், மற்ற பத்திரிக்கைகள் விளம்பரம் கொடுத்தால் தான் புகழ்ந்து எழுதுவார்கள். நாங்கள் என்ன அப்படியா? விளம்பரம் கொடுக்காவிட்டாலும் புகழ்வோம்" என செல்லமாக கோபித்துக்கொண்டனராம். அதனால் தான் அம்மா விளம்பரம் கொடுக்கவில்லை. மேலும் சகோதர்கள் அம்மாவிடம் அனுப்பிய தூதரிடம் "அம்மா மெஸ் பற்றி ஒரு தொலைக்காட்சி விளம்பரம் எடுத்து இப்போதிருந்தே ஒளிபரப்பினால் இன்னும் ரீச் அதிகமாக இருக்கும். அந்த விளம்பரம் கூட தாங்கள் நடத்தும் தொலைக்காட்சிக்கு கொடுக்க வேண்டாம்' என ஆலோசனையும் சொல்லி அனுப்பினார்களாம். அம்மாவும் தீவிரமாக "அம்மா இட்லி" விளம்பரம் எடுத்து வருகிறராம்.

"சரி, திமுக செய்திகள் எதும் இல்லியா?" என்றதற்கு காக்கையார் "ஒ உண்டே, பருப்பு இல்லாத சாம்பாரா? திமுக பேச்சாளர்கள் கூட்டம் நடந்தது. மேடையில் கருணாநிதி, ஆற்காடு, சற்குணபாண்டியன்  போன்றவர்கள் இருந்தனர். ஆனால் பேச்சாளர்கள் என்பவர்கள்  "கொள்கை பரப்பு செயலர்" பதவி வகிக்கும் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் கீழ் தான் வருகின்றனர். ஆனால் அவர்கள் மேடையில் இல்லை. குஷ்பூ தலையை விரித்து போட்டு வந்திருந்தார் போன்ற அதி முக்கிய இன்னும் பல செய்திகள் உள்ளன. பின்னர் விரிவாக மெயில் அனுப்புகிறேன். இப்போது ஒரு முக்கிய வேலை இருக்கு" என சொல்லியவாரே கத்தாழை ஜூசுக்கு நன்றி சொல்லி விர்ர்ர்ர்ரினார்.

2 comments:

  1. கைப்புள்ளMay 21, 2013 at 11:37 AM

    தம்பி பொய் பொழப்ப பாருங்க

    ReplyDelete
  2. கா..கா..கா.. காக்கை செய்திகள் அருமை. ஹா...ஹா....

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))