பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 18, 2011

சுழல்நிதி (வருங்கால முதல்வர்) S/o கருணாநிதி (முன்னாள் முதல்வர்) - ரங்கன் மாமா அதிரடி பேட்டி!!!

தேர்தல் ரிசல்ட் வந்த பின்னே ரங்கன் மாமாவை பார்த்தது. நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே என நினைத்து கொண்டிருந்த போதே "என்ன மாப்ள? புது ஆட்சி எப்படி இருக்கு?" என கேட்டபடி வந்தாரு. "அடடே என்ன மாமா நானே உன் கிட்டே கேட்க இருந்தேன். அதை நீ என்கிட்டே கேக்குறியே. சரி திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கு? திமுகவின் தலைமைக்கு அடுத்தது யாரு? திமுக மேலே கேஸ் எல்லாம் எப்படி போகுது? சமச்சீர் கல்வி பத்தி உன் கருத்து என்ன மாமா? என கேட்டதும், "என்ன மாப்ள, என்னை கைரேகை பார்ப்பவன் ரேஞ்சுக்கு ஆக்கிட்ட. சரி உனக்கு என்ன என்ன கேட்கனுமே வரிசையா கேளு. தெரிஞ்சா சொல்றேன்" என சொல்ல வரிசையா கேட்க ஆரம்பிச்சேன்.

அபிஅப்பா: போன ஆட்சில கலைஞர் ஆட்சியிலே சிறந்த திட்டம் எது மாமா?

ரங்கன்: ஒரு ரூபாய் அரிசி திட்டம் தான் மாப்ள! இனி உலகில் யாராலும் ஒரு ரூபாய்க்கு அரிசி போட முடியாது. உலகிலேயே கலைஞர் மட்டுமே திரும்பவும் சொல்றேன் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் அரிசி இனி எவனாலும் வியாபாரம் செய்ய முடியாது.

அபிஅப்பா: ஹி ஹி மாமா முதல் கேள்வியிலேயே நீங்க அவுட் மாமா. அதான் இந்தம்மா அதை சும்மாவே போடுதே. பின்னே என்ன ரொம்ப பெருசா அலட்டிகிறீங்க?

ரங்கன்: மாப்ள! நான் சொல்றதை நல்லா கவனி. அந்தம்மா போடுவது இலவச அரிசி. அது ஏற்கனவே இருந்த ஒரு திட்டம். அனாதை அரிசி திட்டம். அனாதைகளுக்கு ஓ ஏ பி திட்ட அரிசி என மாதம் பத்து கிலோ இலவசம் உண்டு. இந்தம்மா செஞ்சது அந்த திட்டத்தின் விரிவாக்கம் மட்டுமே. இப்ப மதிய உணவு கொண்டு வந்தது யாரு? காமராசர். அதை இன்னும் விரிவா செயல்படுத்தியது பாரு? எம் ஜி ஆர். அதை முட்டை, வாழைப்பழம் என சத்துணவா ஆக்கினது கலைஞர். அதாவது காமராசர் கொண்டு வந்த ஒரு திட்டத்தின் விரிவாக்கம் தான் அது. அதே போல ஓ ஏ பி அனாதை அரிசி திட்டத்தின் விரிவாக்கம் தான் இது.ஆகவே அதன் கிரடிட் முன்னாள் முதல்வருக்கு மட்டுமே போகும். மத்தபடி நான் மேலே சொல்லியிருப்பதை கவனி. குறைந்த விலையில் ஒரு ரூபாய்க்கு அரிசி 'விற்பனை" செய்தது கலைஞர் மட்டுமே. இனி அந்தம்மா வந்து நான் 50 பைசாவுக்கு போடுகிறேன் என சொன்னாலும் செல்லாது. ஏன்னா 50 பைசாவே இனி செல்லாது என்கிற போது அந்த 50 பைசாவுக்கு ஒரு கிலோ என்று சட்டப்படி கொண்டு வர முடியாது:-))

ஒரு ரூபாய்க்கு அரிசி என்ற போது புழுத்து போன அரிசியை ஒரு ரூபாய்க்கு விற்று அதையும்வாங்கி தின்னும் அளவு மக்களை ஏழைகளாக வைத்திருப்பவர் கருணாநிதி என மேடையில் முழங்கிய சீமான்கள் இப்போது "அனாதைகளை அதிகமாக்கிய அம்மா வாழ்க" என முழங்கினாலும் ஆச்சர்யம் இல்லை.

அபிஅப்பா: இப்படில்லாமா எடக்கு மடக்கா சிந்திப்பீங்க? சரி விடுங்க. மாமா, திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? திமுகவின் அடுத்த தலைமை எப்படி அல்லது யார்? எதிர் வரும் பொதுக்குழுவிலே எதுனா காரசாரமா இருக்குமா?

ரங்கன்: திமுகவின் எதிர் காலம் எப்படி இருக்கும் என இப்ப நேத்து இல்ல. 1957 முதலே கேட்டுகிட்டு தான் இருக்காங்க. 1957 முதன் முதலாக திமுக தேர்தலை சந்தித்தது. அப்போ திமுக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை தெரியுமா? சொன்னா நம்ப மாட்ட. இதோ இப்ப போட்டியிட்டோமே 124 தொகுதிகள்... அதே நம்பர் தான். திமுக முதன் முதலாக போட்டியிட்ட தொகுதி 124. அதிலே ஜெயிச்சது 15, அப்போ பார்லிமெண்ட்க்கு 11 தொகுதில நின்னு 2 தொகுதில ஜெயிச்சோம். அப்போ காங்கிரஸ்காரன் எல்லாம் திமுகவின் எதிர்காலம் என்ன? என கேட்ட தொணிக்கும் இப்போ அதே போல 124 தொகுதில நின்னு 24 ஜெயிச்ச போது நீ திமுகவின் எதிர்காலம் என்ன என்று கேட்கும் தொணிக்கும் வித்யாசம் இருக்கு. அப்போ திமுகவின் அசுர வளர்ச்சியால் கேட்டாங்க மத்தவங்க. இப்ப திமுகவின் மீதான ஒரு சலிப்பினால் நீ கேட்கிறாய் திமுகவின் எதிர்காலம் என்ன என்று. நான் உறுதியா சொல்றேன் கேளு. திமுக தன் அடுத்த தலைவனை தானே தேர்ந்தெடுத்து கொண்டு விட்டது. அவன் தலைமையிலே பீடு நடை போடத்தொடங்கியாச்சு. திமுகவுக்கு அழிவு என்பதே இல்லை.

தேர்தல் போரில் "தளபதி"யாக இருந்த நம் ஸ்டாலின் இன்று படைக்கு தலைமை ஏற்கும் நிலைக்கு தானாகவே வந்தாகிவிட்டது. மலை குலைந்தாலும் நிலை குலையாத என் தலைவன் எந்த தேர்தல் தோல்வியிலேயும் அடுத்த நாள் புள்ளி விபரம் கொடுத்து தொண்டனை துவளச்செய்யாத தலைவன் அமைதி காக்கும் நேரம்... என்ன செய்வது என தொண்டன் குழம்பிய நேரம் தளபதி ஸ்டாலின் தன் தொகுதி மக்களை காண நன்றி சொல்ல எப்போ துண்டை முறுக்கி தோளிள் போட்டு கொண்டு கிளம்பினானோ அந்த நேரம் மிகச்சரியாக குறிப்பிட்டால் அந்த நேரம் அவன் எம் தலைவனாகிவிட்டான். "ராஜா வீட்டு கன்னுக்குட்டி எஜமான் ராஜாவாக இருக்கும் போது மட்டும் துள்ளும், ஆனால் நான் காயம் பட்ட தலைவனின் தளபதி.. இப்போது அதிகமாக என் கடமையை செய்வேன் என சீறிக்கிளம்பினானோ.. எம் கட்சிக்கு அடுத்த தலைவன் உண்டாகிவிட்டான்.

தனக்கு கட்சிப்பொறுப்பு கொடுக்கப்பட்ட போதும் சரி, ஆட்சிப்பொறுப்பு கொடுக்கப்பட்ட போதும் சரி தனக்கான பதவியை அலங்கார நாற்காலியாக பயன் படுத்தாமல் முள்கிரீடமாக அணிந்து சுற்றி சுழண்டு வந்தானே இதோ என் அடுத்த தலைவன் தயாராகிவிட்டான்.

மாப்ள! உனக்கு ஒரு சேதி தெரியுமா? தெஷ்ணாமூர்த்தி கருணாநிதி ஆனார். ஆனால் அவரை தவிர அவர் பெற்ற பிள்ளைகளுக்கு நிதி விகுதி இல்லை. முத்து,அழகிரி, ஸ்டாலின், தமிழரசு... இவைகள் தான் பெயர். ஆனால் தன் பேரப்பசங்க எல்லாருக்கும் நிதி விகுதி உண்டு. கலைஞரே தன் மகன்களுக்கு நிதி விகுதி கொடுக்காவிட்டால் என்ன, நாங்கள் தருகிறோம் நிதி விகுதி என நினைச்சாங்க .. யார் திமுக தொண்டர்களா? இல்லை... தமிழக பெண்கள். ஆமாம் எப்போ அவர் 385 மணி நேரம் நின்று கொண்டே தமிழக தாய்குலங்களுக்கு "சுழல் நிதி" கொடுத்தாரோ அன்றே அவர் நிதி விகுதிக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். ஆமாம் இனியும் அவர் நமக்கு தளபதி இல்லை. "தலைவன் சுழல்நிதி(எதிர்கால முதல்வர் ) S/o கருணாநிதி( முன்னாள் முதல்வர்)"

அபிஅப்பா: என்ன மாமா திடீர்ன்னு பட்டம் எல்லாம் குடுத்துட்டீங்க? சுழல்நிதி கொடுத்தாரு. அது ஒரு அரசு திட்டத்தின் ஒரு செயல்பாடு அத்தனையே. அதுக்கு ஏன் அத்தனை ஒரு முக்கியத்துவம்?

ரங்கன்: மாப்ள! பட்டம் என்பது ஒரு பேப்பரில் அச்சடித்து கண்ணாடி சட்டம் போட்டு சால்வை போர்த்தி கையிலே கொடுப்பது மட்டும் இல்லை. ஒரு ஸ்பார்க். ஒரு பொறி தான். அதுவே பட்டமாக ஆகும் வரலாறு திமுகவில் நிறையவே உண்டு. "நடமாடும் பல்கலைகழகம்" என அண்ணா ஒரு மேடையில் சொன்னார் எங்கள் நெஞ்செழியனை பார்த்து. அது பட்டமாகிப்போனது. அது போலவே "நாவலர்". அதே போல ஒரு முறை மனோகரனை " வாய்யா நாஞ்சிலாரே" என அழைத்த போது அன்று முதல் அவர் நாஞ்சிலார் ஆனார். இது போல இப்போது கூட கலைஞர் ஒரு மேடையில் பெரியசாமியை "இவர் என் முரட்டு பக்தர்" என சொன்னது பட்டமாகி போனது. இதே தளபதி ஒரு பொதுக்கூட்டத்தில் அய்யா பெரியார், அண்ணாதுரை ஆகிய பெயர்களை கலந்து எனக்கு அய்யாதுரை என முதலில் பெயர் சூட்டினார் தலைவர் என பேசப்போக அது கூட இப்போது தளபதிக்கு பட்டமாகிப்போனது. நான் இப்போது சொல்கிறேன். தலைவர் சுழல்நிதி, தலைவர் சுழல்நிதி, தலைவர் சுழல்நிதி வாழ்க வாழ்க வாழ்க!
மாப்ள! நீ சொல்வது போல சுழல்நிதி என்பது மகளிர் சுய உதவிக்குழுவின் ஒரு சாதாரண செயல்பாடு தான். ஆனால் அதையே அசாதாரணம் ஆக்கியது தலைவர் சுழல்நிதி அவர்கள்!நல்லா நினைச்சுப்பாரு. என் தலைவன் சுழல்நிதி 385 மணி நேரம் நின்று கொண்டே அந்த நிதி ஒரு ஒரு பெண்ணுக்கும் சுய உதவி குழு பெண்ணுக்கும் வழங்குகிறார். அப்படின்னா எத்தனை தொகை வழங்கி இருப்பாரு சொல்லு பார்ப்போம்.

அபிஅப்பா: தெரியலையே மாமா. எத்தனை கோடி இருக்கும்? அப்படி எத்தனை பெண்களுக்கு குடுத்து இருப்பாரு. ம்ம் டேட்டா கலக்ட் பண்ணிட்டு சொல்றேன்.

ரங்கன்: மாப்ள! நாம என்ன இந்தியாவோட பட்ஜெட்டா போடப்போறோம் நம்ம அப்பச்சி மாதிரி. பக்கத்துல இருக்கும் பி ஏவை கேட்கனுமா இதுக்கு? இப்படித்தான் பாரதியாரு ஒரு தெருக்கூத்து பார்த்துகிட்டு இருந்தாரு. அப்போ மகாராஜா மந்திரியை பார்த்து " மந்திரி மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என கேட்க கூட்டத்தில் இருந்த பாரதி " அந்த எழவு கூட தெரியாம நீ என்னத்துக்கு நாட்டை ஆண்டுகிட்டு இருக்கே"ன்னு சத்தம் போட்டு கத்திகிட்டே எந்திரிச்சு போயிட்டாரு. அது போல நாம திமுககாரன்! தானே கணக்கு போட்டுக்கனும். அப்பச்சி வாயால கணக்கு போடுறாருன்னா நாம கண்ணால கணக்கு போடனும் மாப்ள.

இப்ப தலைவர் சுழல்நிதி 385 மணி நேரம் நின்னுகிட்டே சுழல்நிதி தலா பத்தாயிரம் கொடுத்தாரு. இது மேட்டரு. 385 மணி நேரம்ன்னா 23000 நிமிஷம் ஆச்சு. அதாவது கிட்ட தட்ட 14 லட்சம் வினாடி ஆகுது. ஒரு துணை முதல்வர் ஒரு பெண்மணிக்கு நேரிடையா நிதி கொடுக்க 3 வினாடிக்கு மேல அதிகாரிங்க விட மாட்டாங்க தானே. அப்படின்னா நாலே முக்கால் லட்சம் பெண்களுக்கு கொடுத்திருக்காரு. அதாவது அதையும் தாண்டி பயனாளிகள் இருக்கலாம். ஆனா அவரு நேரிடையா கொடுத்த பெண்கள் 5 லட்சம் ஆகுது. ஒருத்தருக்கு பத்தாயிரம்னா 500 கோடி ரூபாய் வருது மாப்ள! அதாவது 5 லட்சம் குடும்ப பெண்கள் இது வரை 2 ரவுண்டு வாங்கி திருப்பி குடுத்தாச்சு. அப்படின்னா 1500 கோடி ரூபாய் சுத்தி வந்துடுச்சு. 1500 கோடி ரூபாய் பணப்புழக்கம் தமிழகத்துல இருந்துச்சுன்னா.. அதும் குடிக்காத அதாவது மதுஅருந்தாத பெண் இனத்து வசம் 1500 கோடி சுத்துச்சுன்னா..... இப்ப சொல்லு மாப்ள... நம்ம தலைவர் சுழல்நிதி தானே? மாசத்துக்கு 30 நாள். அவர் பொண்டாட்டி புள்ளய்ங்க கூட இருப்பது 4 நாள். மீதி நாள் எல்லாம் தமிழகத்தில் மூலை முடுக்கு எல்லாம் சுற்றி சுழண்ட சுழல்நிதி தானே அவரு? இப்ப சொல்லு.. தவிர எனக்கு தெரிஞ்சு எத்தனை பெண்கள் ஒயர் கூடை பின்றாங்க, முறுக்கு சுட்டு விக்கிறாங்க, கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் இடத்துக்கு போய் புளிசாதம் பொட்டலம் 10 ரூபாய்க்கு விற்கும் பெண்கள் எனக்கு தெரியும். அத்தனை ஏன்? யாரோ சொன்ன மாதிரி "வெறும் கை என்பது கோழைத்தனம்.. விரல்களே மூலதனம்"ன்னு சொன்ன மாதிரி ஒரு மாற்றுத்திறனாளி பொண்ணு இந்த போன் கார்டு எல்லாம் 5 மொபைல் போன் வாங்கி வச்சுகிட்டு அதுக்கு போன் செஞ்சா போதும் ராத்திரி ஆனாலும் சரி "ஈசி" பண்ணிட்டு (அடுத்த நாள் அதுவே வந்து காசு வாங்கிக்கும்) தினத்துக்கு 250 ரூவா சம்பாதிக்குது. அதுக்கு போன், விரல்... சுழல்நிதி இதான் மூலதனம்.. தான் வாழ எவனையும் நம்பலை அது!

அபிஅப்பா: வாவ்... மாமா ஒரு திட்டத்தின் மதிப்பீட்டு தொகையை இப்படிக்கூட மதிப்பீடு செய்யலாமா? அதல்லாம் சரி மாமா. சுழல்நிதி என்பது எல்லாம் சரி தான். இந்தம்மா நாளைக்கே சும்மா இருக்காது. எதுனா கேஸ் போடும் .உள்ள வைக்கும். அப்ப வலையுலகம் வலையுலகம்னு ஒன்னு இருக்கு. அதுல மணீஜி மணீஜின்னு ஒருத்தர் இருக்காரு. மாயவரத்தான்னு நம்ம ஊர்காரரு இருக்காரு. உடனே சுழல்நிதி இப்போ புழல்நிதி ன்னு ட்விட்டுவாங்க. உடனே அதை ஆனந்தவிகடன்ல போட்டு ஆனந்தப்படுவாங்களே மாமா!

ரங்கன்: படிச்சவன் பாட்டை கெடுத்தான். எழுதினவன் ஏட்டை கெடுத்தான். எனக்கு உங்க உலகம் எல்லாம் தெரியாது. ஆனா ஒன்னு! தப்பு செஞ்சா தண்ணி குடிக்கனும். வைக்கோவை சைக்கோன்னு சொன்னீங்கதானே! அப்ப சிரிச்சோம் தானே ரைமிங்கா இருக்கேன்னு. அப்படின்னா இதையும் எதிர்கொள்ளனும் தான். அதை விட நாங்க பாளையங்கோட்டை இருக்கும் திசை நாங்கள் வணங்கும் இடம் என பாசிட்டிவா ஆக்கினோம்ல. அது போல எதுனா போராட்டத்துலே தலைவன் புழலுக்கு போனா நீ முதல்ல போஸ்டர் அடிச்சு ஒட்டு "தாய்குலத்தின் சுழல்நிதியே, கருணாநிதி பெற்றெடுத்த புழல்நிதியே"ன்னு அடிச்சு ஒட்டு. அதை பாசிட்டிவா ஆக்கு! தேர்தலில் தோற்றோம் என என்றைக்காவது நாம சொல்லியிருக்கோமா? வெற்றி வாய்ப்பை இழந்தோம்னு தானே சொல்ல நமக்கு அண்ணா கத்து கொடுத்திருக்காரு!

அபிஅப்பா: சரி மாமா! இந்த சமச்சீர் கல்வி பத்தி...

ரங்கன்: மாப்ள! இந்த சமச்சீர் கல்வி இருக்கே. அது பத்தி நிறைய பேசலாம். யார் வேணா பேசலாம். ஏன்னா இப்போ கேஸ் கோர்ட்டிலே இருக்கு. கேஸ் கோர்டிலே இருக்கும் போது அதுசம்மந்தமா பேசக்கூடாது என சொல்ல நான் என்ன அப்பச்சியா?இல்லாட்டி அர்ஜூன் சம்பத்தா? இல்லை அப்படி பேசினா கண்டம்டு ஆஃப் கோர்டுன்னு ஜெயலலிதாவை பிடிச்சு உள்ள போட்டுச்சா கோர்ட்டு. இல்லாட்டி நித்யானந்தாவை பிடிச்சு உள்ள போட்டுச்சா கோர்ட்டு. அதானால பேசுவோம்.

முதல்ல சமச்சீர் கல்வின்னா என்னான்னு பார்க்கனும். ஒரு நாலு வருஷம் கல்வியாளர்கள் வச்சுகிட்டு இப்ப நம்ம ஸ்டேட் போர்டு பசங்க படிக்கும் படிப்பும், மெட்ரிக் பசங்க படிக்கும் படிப்பும் ஒன்னா இருக்குதா? அது போல சி பி எஸ் சி படிப்பு எப்படி இருக்கு? சரி சி பி எஸ் சி படிப்பு நமக்கு இப்போ கணக்கிலே எடுத்துக்க வேண்டாம். ஏன்னா ஏற்கனவே நாம நவோதயா பள்ளி எல்லாம் உள்ளே விடலை . அதை இப்போ விட்டுடுவோம்.அந்த கச்சேரி தனியா வச்சுப்போம். தனியார் மெட்ரிக் பள்ளியிலே படிக்கும் மாணவனும் நம்ம ஸ்டேட் போர்டு மாணவனும் ஒரே படிப்பை படிச்சுட்டு பொது தேர்வு +2 எழுதுறாங்களா? இதிலே கிராமத்தில் இருந்து படிச்சுட்டு வரும் நம்ம மாணவன் பின் தங்கி போறானா? என்பதை எல்லாம் விடு மாப்ள! ஆனா படிப்பின் தரம் என்ன என்பது தான் இந்த சமச்சீர் கல்வியிலே முதல் ஆய்வா எடுத்துகிட்டாங்கன்னு சொல்றாங்க. எல் கே ஜியிலேயே பத்து புத்தகம் 6 வது படிக்கும் மெட்ரிக் மாணவனுக்கு ஸ்டேட் போர்டிலே படிக்கும் 11 வது படிக்கும் மாணவனுக்கு இருக்கும் பாடம் எல்லாம் வருது என்பது முதல்ல பசங்களுக்கு படிப்பின் மீது ஒரு வித அயற்சியை தான் கொடுக்குதுன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க. அதனால அவனுக்கு குறைச்சிடு. இவனுக்கு கொஞ்சம் தூக்கிடு. எல்லாம் ஒரே பாடம் படிக்கட்டும். அப்போ நீ படிக்கும் போது 3வது படிக்கும் போது தான் ஏ, பி, சி, டி படிச்சே. இப்போ எல் கே ஜி யிலே படிக்க சொல்றாங்க. ஏன் அப்போ படிச்சவனுக்கு அறிவில்லாம போச்சா? இல்லை. நாங்க தமிழின் 247 எழுத்தும் எழுதுவோம். படிப்போம். ற, ர உச்சரிப்பு பயிற்சி பெற்றோம். முதல்ல நம்ம மொழி படிச்சோம். ஒரு குழந்தை தன் தாய்மொழியிலே 247 எழுத்தும் படிச்சு முடிக்கும் போது அதன் மூளை மடிப்பு ஆழம் அதிகமாச்சு. பின்னே நாங்க ஆங்கில எழுத்து 26 படிக்கும் போது அது சுலபமா இருந்துச்சு.

பாடத்திட்டம் அதிகப்படுத்துவதால மட்டும் மூளையின் மடிப்பு ஆழத்தை அதிகப்படுத்தி விட முடியாது. முடியவே முடியாது. மூளையின் மடிப்பின் ஆழம் அதிகமாக்க அதிக சுமை கொடுத்து அவனை அயற்சியாக்குவதை விட அவன் அந்த குழந்தையின் மூளை எத்தனை சக்தி தாங்கும் என அறிந்து அதை "விளையாட்டாக" சொல்லி கொடுக்கனும். தனியார் பள்ளியும் அரசாங்க பள்ளியும் ஒரே பாடமா படிக்கனும். அதே நேரம் கல்வியின் தரம் முன்பை விட அதிகமா இருக்கனும். இதல்லாம் கணக்கில் வச்சு தான் அந்த பாடத்திட்டம் தயாராச்சு. அதுக்கு மசோதா,சட்டம் போன்ற சடங்கு சம்பிரதாயம் எல்லாம் செஞ்சு பின்னே உயர்நீதி மன்றம் போய் பின்னே அது சரி என அவங்களும் சொல்லி எல்லாம் முடிஞ்சு 200 கோடிக்கு புத்தகமும் அடிச்சாச்சு.

இப்போ இந்த அரசாங்கம் வந்து எல்லாம் சரியில்லைன்னு ஒரு 24 மணி நேரத்தில் முடிவெடுத்து இப்போ உச்சநீதிமன்றம் போய் அவங்க தமிழக அரசை "ஒரு குழு அமைச்சு அந்த பாடதிட்டம் எல்லாம் சரியான்னு ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுக்க சொல்லுங்க.அதும் ரெண்டு வாரத்திலே. அதாவது நாலு வருஷம் செஞ்ச ஆராய்சியை 2 வாரத்தில்... பின்னே ஒரு வாரம் தினமும் இதை விசாரிச்சு 22 வது நாள் தீர்ப்பு சொல்லனும். அதும் இங்க வரக்கூடாது. எங்க இதன் ஆரம்ப சடங்கு சம்பிரதாயம் எல்லாம் நடந்துச்சோ அங்க தான் வச்சுக்கனும் கச்சேரியைன்னு சொல்லியிருக்கு. சரி ஒத்துக்கறோம்.

உடனே என்ன செஞ்சு இருக்கனும் தமிழக அரசு. கல்வியாளர் குழு அமைச்சுது. யாரை? திருமதி ஒய்.ஜி பி அம்மையாரையும் இன்னும் ஒரு தனியார் பள்ளி ஓனரையும். இவங்க கல்வியாளர் குழுவா? அவங்க பள்ளியில் படிச்சவங்க வேண்டுமானா கல்வியாளராக இருக்கலாம். அவங்க கல்வியாளரா? வாதி, பிரதிவாதி என இருவர் இருக்கும் போது பஞ்சாயத்துக்கு வாதி தரப்பை நியமிச்சது எப்படி ஒத்துப்பது? சரிய்யா... பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகி அவங்க. அவங்க பள்ளியிலே இத்தனை வருஷம் தனியாக ஒரு பாடத்திட்டம் வச்சு அதன் படி பசங்க படிச்சு பெரிய படிப்பு எல்லாம் படிச்சாங்களா? இல்லியே... அவங்களும் மத்த மெட்ரிக் ஸ்கூல் படிக்கும் புத்தகம் தானே அவங்க பள்ளியிலே வச்சிருந்தாங்க. சரி மீதி நான்குபேரும் ஐ ஏ எஸ் அதிகாரிங்க. அவங்க கள்வியாளர்களா என்று நான் கேட்க முடியாது. அது கூடவும் கூடாது. ஏன்னா இங்க கல்வியாளர் என்றால் அளவு கோலே அவங்க பல பட்டம் வாங்கினவங்களா என்பதில் தான் இருக்கு. இது தப்பு என்பது தான் என் கருத்து. இன்னும் சொல்ல போனா ஆரம்ப பள்ளி பாடங்களுக்கு குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா வே என்னை பொருத்தவரை கல்வியாளர். ஏன்னா அவருக்கு குழந்தை மொழி தெரியுது. நல்லா புரியுது. அவரை கூப்பிட்டு அந்த வயசு குழந்தைகளுக்கு எப்படி பாடம் அமைக்கலாம் என கூட கேட்டிருக்கலாம். இல்லாட்டி இது போன்ற குழுவில் இடம் கொடுத்து இருக்கலாம். அது போல சில ஐ ஏ எஸ் ஆபீசர்ஸ் இருக்காங்க. நம்ம தாய்மொழியிலே ஆர்வமும் அக்கரையும் கொண்டவங்க. உதாரணத்துக்கு இறையன்பு இருக்காரு. ஏன்? உமாசங்கர் காத்திருப்புல இருக்காரு. அவங்களை கூட நியமிச்சு இருக்கலாம். மாட்டாங்க, ஏன்னா அரசாங்கம் முன்முடிவோட இருக்கு. இந்த திட்டம் செயல்படுத்த கூடாதுன்னு. உமாசங்கர் ஏற்கனவே ஒரு ஜூவி பேட்டியிலே "திமுக அரசின் சாதனை சமச்சீர் கல்வி தான் என பேட்டி குடுத்துட்டாருல்ல.

அந்தம்மா அறிக்கையிலே பாடத்திட்டம் சிலபஸ் ரொம்ப கம்மியா இருக்கு. இது உலக அளவில் நம்ம கல்வித்தரத்தை கம்பேர் செய்யும் போது ரொம்ப கம்மின்னு சொல்லுது. சரி இதே இஞ்சினியரிங் படிக்கும் ஒரு பையனின் முதல் வருடம் பாடத்தை எடுத்து ஆறாம் வகுப்பு பையன் கிட்டே இன்னிக்கு முதல் இதாண்டா உன் பாடம்னு சொல்லிட்டு உலக லெவல்ல கொண்டு போய் காமிச்சா "ஆகா இந்தியாவிலே ஆறாம்பு படிக்கும் பையன் பாடம் இஞினியரிங் சிலபஸ்ப்பா. சூப்பர்"ன்னு சொல்லிட்டு போவான். ஆனா பையன் இங்க படிக்க முடியாம செத்துடுவான். இல்லாட்டி கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போவான். அவன் மூளை அளவு என்னவோ அதான் தரனும். சும்மா ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு சித்திரை வெய்யில்ல வெஸ்டர்ன் கல்ச்சர்ன்னு சொல்லிகிட்டு கேட்டு சூட்டு போட்டுப்பதுக்கும், பெண்கள் ஒரு முழ வெள்ளி ஜரிகை வச்ச பட்டுப்புடவை கட்டிக்கிட்டு போவதுக்கும் இதுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.

சரி பள்ளிக்கூடம் வச்சு நடத்தும் ஆட்கள் தான் கல்வியாளர் என நீங்க அளவுகோல் வச்சா சொன்னா சிரிக்க கூடாது... ஜேப்பியாரும் உங்க அளவுகோலின் படி கல்வியாளர் தானே. அவரை நியமிச்சா எப்படியோ அதே போலத்தான் திருமதி ஒய் ஜி பி அம்மையாரும். இதான் என் கருத்து...

அபிஅப்பா: அய்யோ மாமா.. அதை எல்லாம் விடுங்க.. கேஸ் என்ன ஆகும்? சமச்சீர் கல்வி புத்தகத்தில் திமுக பத்தி அதிகம் இருக்குதாம். கலைஞர் எழுதிய கவிதை இருக்குதாமே?

ரங்கன்: அதாவது மாப்ள! ஒரு கரும்பலகை இருக்கு. அதிலே ஒரு ஆப்பிள் படம் இருக்கு. அதுக்கு ஒரு பையனை கூப்பிட்டு கலர் அடிக்க சொல்றே. அவன் சிவப்பு கலர் அடிக்கிறான். பார்க்க அது திக கொடி மாதிரி இருக்குதாம். அதான் ஒரு புத்தகத்தில் ஒரு கருப்பு போர்டு அதிலே ஆப்பில் படம் அவுட்லைன் இருக்கு. அதிலே கலர் அடிக்க சொல்லி இருக்கு. அந்த பக்கம் இப்போ கிழிச்சு கிட்டு இருக்காங்க. தாடி வச்சவன் எல்லாம் பெரியார்ன்னு பயந்த காலம் ரிப்பீட்டு ஆகுது மாப்ளே ரிப்பீட்டு ஆகுது வேற ஒன்னும் இல்ல.

அபிஅப்பா: சரி மாமா! கலைஞர் கவிதை இருக்காமே? கனிமொழியின் சங்கமம் பத்தி இருக்காமே?

ரங்கன்: கலைஞர் கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைகழகம், தமிழ் பல்கலைகழகம் போன்ற தமிழ் பிரிவுகளிலேயே எம் ஜி ஆர் காலத்தில் இருந்தே பாடத்திட்டமாக இருக்குதே. அவர் கவிதை இப்போ சமச்சீர் கல்வி பாடட்ட்இல்லை. செம்மொழி மாநாட்டு பாடல் கலைஞரின் கவிதைன்னு கூட சொல்ல முடியாது. அது பழந் தமிழின் உயரிய வரிகளின் தொகுப்பு என்றே கொள்ள வேண்டும். அதில் செம்மொழி மாநாட்டு இலட்சினை வருது. அதிலே கலைஞரின் எழுத்தினால் ஆன பழந்தமிழ் வரி இரண்டு வார்த்தை இருக்கு. அது தவறு என்றால்... எடுக்கட்டும் என கலைஞரே சொல்லியாகிவிட்டது. அது போல கனிமொழி முன்னின்று நடத்திய சங்கமம் பற்றி வருவதை எடுக்கட்டும்.

அபிஅப்பா: கனிமொழி இப்போ திகார்ல இருக்காங்க. ஒரு ஊழல் குற்றச்சாட்டிலே.. அப்படி இருக்க எப்படி மாமா இதை ஏத்துக்க முடியும்?

ரங்கன்: மாப்ள! அப்படிப்பார்த்தா காந்தி மேலயே குற்றம் இருப்பதாக ஆர் எஸ் எஸ் காரங்க சொன்னாங்க. சொல்றாங்க. அவர் படம் ரூபாய் நோட்டில் இருக்கு. பாடத்திட்டத்தில் இருக்கு. ஏன் இந்திரா, ராஜீவ் இவங்க மேலயும் தான் ஊழல் குற்றச்சாட்டு இருக்கு. அத்தனை ஏன்? இதோ நம்மை ஆளும் ஜெயலலிதா ஒரு அக்யூஸ்ட் என கன்விக்ட் ஆகி இருக்கு. நல்லா புரிஞ்சுக்கனும். கன்விக்ட் ஆகியது டான்சி வழக்கில். தண்டனை மட்டுமே இல்லை. நல்லா புரிஞ்சுக்கனும். நீதிபதி "அரசாங்க சொத்து வாங்கியது தவறு" என சொன்னார். 'அப்படின்னா திருப்பி தர்ரோம்"ன்னு கொடுத்தாங்க. அதான் நடந்துச்சு. தவிர அப்போ நீதிபதி "தான் போட்ட கையெழுத்து தன்னுடையது அல்ல என சொன்னது தவறு"ன்னும் சுட்டி காட்டினாங்க. ஆனால் தண்டனை இல்லை. மன்னிப்பு கொடுக்கப்பட்டதே தவிர கன்விக்ட் தான் ஜெயலலிதா அம்மையார். அவங்க இதோ 27ம் தேதி ஆயிரம் கோடி அளவு சொத்து சேர்த்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும். அவங்க நம்மை ஆள நம்ம சட்டமும், மக்களின் பெருந்தன்மையும் அனுமதி அளிக்கும் போது கனிமொழி இன்னும் முழுமையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத வழக்கின் காரணமாக சிறையில் இருப்பது ஒன்றும் பஞ்சமா பாதகம் இல்லை.

அபிஅப்பா: மாமா! என்ன அளந்துகிட்டே போறீங்க? அது 66 கோடி ரூபாய் வழக்கு. போபார்சை விட ஜஸ்ட் ஆறு கோடி மட்டுமே அதிகம்.

ரங்கன்: மாப்ள! அது 15 வருஷம் முன்னே 66 கோடி ரூபாய். வச்ச இடத்திலே அப்படியே இருக்க அது என்ன பத்மனாபன் கோவில் பாதாள அறையா?அதன் பின்னே சம்பள கமிஷனே ரெண்டு தபா சம்பளம் ஏத்தியாச்சு. ரியல் எஸ்டேட் பலமடங்கு கூடிப்போச்சு. தங்கம் அப்போ பவுன் 2000 ரூபா. இப்போ 17000 ரூபாய். கூட்டி கழிச்சு பாரு மாப்ள எல்லாம் சரியா வரும்!

அபிஅப்பா: மாமா சமச்சீர் கல்வி பத்தி ஆரம்பிச்சி எங்கயோ போகுது பேச்சு. சரி திமுக பொதுக்குழு கூடுது கோவையிலே... அது பத்தி அதுல மாவட்ட செயலர்க்கு பவர் பிடுங்கும் பேச்சு பத்தி என்ன நினைக்குறீங்க?

ரங்கன்: மாப்ள என்னால இன்னிக்கு இவ்ளோவ் தான் முடியும். நான் துக்ளக் படிக்கனும் ஆளை விடு!


July 15, 2011

லேவாதேவியும் ரமாதேவியும்!!!

அப்பா அந்த முன்னூத்தி சொச்சம் பணம் தீபவளி போனசாக வாங்கி கொண்டு வீட்டில் நுழைந்ததும் எங்களுக்கு உற்சாகம் தாங்கலை. ஏன்னா அதன் பின்னே தான் ட்ரஸ் எல்லாம் வாங்கனும். பலகாரம், வெடி எல்லாமே அதன் பின்னர் தான். அப்போது நாங்கள் அதாவது அக்கா ரெண்டு பேர் நான் என் தம்பி எல்லாருமே குழந்தைகள். அப்போ முன்னூறு ரூபாய் எதேஷ்டம் ஒரு தீபாவளியை நல்ல படியா அனுப்பி வைக்க. அதை கொண்டு வந்து சாமி படம் முன்னே வைத்து விட்டு அப்பா கொஞ்சம் ஆசுவாசமாய் உட்காந்து இருக்கும் போது தான் அந்த எலிக்குட்டி மாமா வந்தார். அப்பாவோடு ஆபீசில் வேலை பார்ப்பவர். ஜெகஜ்ஜால கில்லாடி. தான் எதும் செய்யாமல் தன் வியாபார அபிலாஷை எல்லாம் மத்தவங்களை தூண்டி விட்டு அது சரியானால் தான் அவர் இறங்குவார் அதிலே.

எலிக்குட்டிமாமா அப்பாவிடம் "என்ன வைத்தா முள்ளங்கி பத்தை மாதிரி பணத்தை யாரோ நரகாசுரன் செத்ததுக்கா வேஸ்ட் பண்ணனும். இதை 3 வட்டிக்கு விட்டா மாசம் 9 ரூவா வட்டி வரும். மாசத்துக்கு விறகு கடை அக்கவுண்ட் சரிபண்ணிடலாமே. இல்லாட்டி அதை சேர்த்து வச்சா அதையும் கொஞ்சம் கொஞ்சமா வட்டிக்கு விட்டு ஒரு பெரிய பைனான்ஸ் ஆரம்பிக்கலாமே" என ஆசை காட்ட ஆரம்பத்தில் ஒத்துக்காத அப்பா "பைனான்ஸ் தொழிலதிபர்" ஆகும் ஆசையில் எங்களை கூப்பிட்டு 'நீங்க எல்லாம் ஒத்துழைச்சா அதாவது தீபாவளிக்கு ட்ரஸ் எதும் எடுத்துக்காம இருந்தா ஒரு ரெண்டரை வருஷத்துல இந்த பணம் அப்படியே இருக்கும். போட்ட காசு வட்டியாவே வந்துடும். பின்னே அதையும் விட்டா நாம ஓகோன்னு எங்கயோ போய்டலாம்" என சொல்ல எங்கம்மாவும் எழுத்தாளர் பைரவன் தங்கவேலு பொண்டாட்டி மாதிரி "ஆமாங்க எனக்கும் தொழிலதிபர் பொண்டாட்டின்னு சொல்லிக்க ஆசை தானே" என தாளம் போட சரின்னு நாங்களும் தொழிலதிபர் வாரிசாக ஆக ஆசைப்பட்டு ஒத்து கொண்டோம்.

அதல்லாம் சரி தான். தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்கூல் போகும் போது புது ட்ரஸ் எங்கேன்னு கேட்பாங்களே என்கிற மாபெரும் கவலை மட்டுமே எனக்கு இருந்தது. அதற்கு என் சின்ன அக்கா "டேய் கவலையை விடுடா. சின்ன தாத்தா செத்துட்டாங்க. அதனால தீவாளி இல்லைன்னு சொல்லிடலாம்" என சொல்ல எனக்கு தாத்தாவை தனியே சாகடிக்க மனம் இல்லாததால் பாட்டியும் உடன்கட்டை ஏறிட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம் என நினைத்து அப்பா தொழிலதிபர் ஆக ஓட்டு போட்டுவிட்டோம்.

வாய்வழி செய்தியாக அப்பா வட்டிக்கு பணம் கொடுக்க இருக்கும் செய்தி எலிக்குட்டி மாமாவால் பரப்பப்பட்டது. ஆனாலும் ஒருத்தன் கூட பணம் கேட்டு வரலை. அதுக்குள்ள வீட்டில் பைனான்ஸ்க்கு என்ன பெயர் வைப்பது என்கிற சர்ச்சை ஆரம்பம் ஆகிடுச்சு. அதுக்குள்ள என் பாட்டி "குடுத்து வாங்குற தொழில் தானே. அதுக்கு எதுக்கு பேர் எல்லாம் வைக்கனும்" என எக்குதப்பாய் கேட்க ஒட்டு மொத்த குடும்பமும் பாட்டியிடம் சண்டை. பைனான்ஸ்ன்னு அழகா டீசண்டா இங்கிலிசுல சொல்றத விட்டுட்டு குடுத்து வாங்குறதாம்ல குடுத்து வாங்குறது. ஒரு வழியா நம்ம மாயூரநாதர் பெயரிலே வச்சுடுவோம். வட்டி வாங்கின பாவம் எதுனா வந்துச்சுன்னா அந்த பாவம் அவருக்கே போகட்டும் என நினைத்து மாயூரம் பைனான்ஸ் என வைத்த போது தான் எலிக்குட்டி மாமா ஏற்கனவே ஒரு மாயூரம் பைனான்ஸ் பிரபல்யமாக இருக்குதுன்னும் சட்ட சிக்கல் வரும் என சொல்ல உடனே அவயாம்பாள் பைனான்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு கஸ்டமருக்காக காத்திருக்க தொடங்கினோம்.

வீட்டுக்கு எவன் வந்தாலும் அவன் வட்டிக்கு பணம் வாங்க தான் வந்திருக்கான் என காபி உபச்சாரம் எல்லாம் முடிந்து அவன் கிளம்பும் போது அப்பா "வேற எதுனா கேட்கனும்னு வந்தீங்க போல" என ஞாபகப்படுத்தியும் எவனும் பணம் கேட்பதாக இல்லை. ஒரு வழியாக எலிக்குட்டி மாமாவே ஒரு கஷ்டமரோடு வந்தாரு. அவரு கஷ்ட்டமர் இல்லை கஷ்டம் மட்டுமே என எங்களுக்கு அப்போ புரியவே இல்லை. வந்தவரு பக்தி பழமா இருந்தாரு. எலிக்குட்டி மாமா " வைத்தா இவரு பேரு முருகேசன். நம்ம தெற்கு வீதி தான். இவரு வீட்டு பத்திரம் எடுத்து வந்திருக்காரு அடமானமா" என சொல்லிய போது அப்பாவுக்கு படபடன்னு ஆகிடுச்சு. "என்னது வீட்டு பத்திரமெல்லாம் வேண்டாம்" என படபடக்க எலிக்குட்டி மாமா விட்டாலும் முருகேசன் விடுவதாக இல்லை. "இல்லீங்க நீங்க இதை கண்டிப்பா வச்சுகிட்டு தான் பணம் தரனும். ஆனா எனக்கு அவசர மொடை. ஒரு 500 ரூபா குடுத்தா வாங்கிப்பேன். இல்லாட்டி நான் நவநீதம் நாயுடு கிட்டே போய் பத்திரம் குடுத்துட்டு வாங்கிக்கறேன்" என சொல்ல அப்பா "அட அப்படில்லாம் சொல்ல கூடாது கொஞ்சம் இருங்க" என சொல்லி அம்மா வளையலை கழட்டி வாங்கிகிட்டு சைக்கிள் எடுத்துகிட்டு அதே நவநீத நாயுடு கிட்டே போய் இருநூறு வாங்கி வந்து முருகேசனிடம் ஐநூறு கொடுத்து விட்டு " மாசா மாசம் நான் பசங்க கிட்டே நோட்டு குடுத்து விடுறேன். நீங்க 15 ரூவா குடுத்துட்டு அதுல வரவு வச்சி குடுங்க" என கம்பேனி ரூல்ஸ் எல்லாம் சொல்லி அனுப்பி வச்சோம்.

ஆச்சு. முருகேசன் பணம் வாங்கிகிட்டு போயாச்சு. நாங்களும் தீபாவளியை தாத்தாவும் பாட்டியும் செத்ததா கணக்கு காட்டி சமாளிச்சாச்சு. அப்பா அந்த முருகேசனை எந்த கல்யாண வீட்டில் பார்த்தாலும் திரும்பிப்பதும், கூடுமான வரையில் அவர் இருக்கும் தெரு பக்கம் போகாமலும் இருந்தாங்க. பின்னே அவர் எதுனா கல்யாண வீட்டில் கல்ந்துகிட்டா அவரு சைக்கிளை எடுத்துட்டு போன பின்னே தான் அப்பா போவாங்க. அதாவது கலைஞரும்,எம் ஜி ஆரும் பொதுவான மபொசி வீட்டு கல்யாணத்துக்கு போவது போல. ஏன் இப்படின்னு அப்பா கிட்டே கேட்டப்ப அவங்க சொன்ன வியாக்யானம் அவங்க லேவாதேவிக்கு லாயக்கு இல்லை என்பதற்கான அறிகுறிகள் என்பது எங்க யாருக்கும் அப்ப புரியவில்லை. அதாவது இவங்களை பார்த்துட்டா "அய்யோ கடன் காரன் வந்துட்டானே" என அந்த முருகேசன் மனசு படாத பாடு படுமாம். பாவம் அதை தவிர்க்க தான் அப்பா முருகேசனை கண்டு ஒழிவதன் அர்த்தம். வெளங்கிடும்:-)

முதல் மாசம் பெரியக்காவும் சின்னக்காவும் ஒரு சின்ன நோட்டு எடுத்துகிட்டு வட்டி வசூலுக்கு போய் நோட்டை மாத்திரம் ஜாக்கிரதையா எடுத்து வந்தாங்க. இப்படியாக மாசா மாசம் போய் வெறும் கையோட வந்தாங்க. பின்னே பெரிய அக்கா ஸ்கர்ட்ல இருந்து பாவாடைக்கு மாறினதும் சின்ன அக்காவுக்கு என்னை ஜோடி சேர்த்து அனுப்பினாங்க. பின்னே சின்ன அக்கா ஸ்கர்டில் இருந்து பாவாடைக்கு மாறினதும் அது வரை தவழ்து கிட்டு இருந்த என் தம்பியை எனக்கு ஜோடியாக ஆக்கி நோட்டை குடுத்து அனுப்பினாங்க. இப்படியாக சுட்டி குழந்தையாக இருந்த நாங்க வளர்ந்து கிட்டே இருந்தோமே தவிர வட்டி குழந்தை எட்டி கூட பார்கலை. அந்த நோட்டு மாத்திரம் வாசனை மாறாம புதுசாவே இருந்துச்சு. ஒரு மாசம் கூட எண்ட்ரி போடலை அந்த முருகேசன்.

நானும் என் தம்பியும் நோட்டு எடுத்துகிட்டு போனா அந்த முருகேசனுக்கு பத்திகிட்டு வரும். அப்ப தான் அவரு பொண்ணு ரமாதேவிக்கு கணக்கு பாடம் சொல்லி குடுப்பாரு எங்களை நிக்க வச்சுகிட்டே. " ஒருத்தன் 500 ரூவா மூணு வட்டிக்கு வாங்கினா மாசம் எவ்வளவு வட்டி"ன்னு கேட்பாரு. அது திரு திருன்னு முழிக்கும். நான் மட்டும் மனசிலே "எண்ட்ரி போடாத வெறும் நோட்டு தான்" என நினைச்சுப்பேன். பின்னே எங்களை பார்த்து "போ போ " என அதட்டுவாரு. நான் அவரிடம் "அப்பா நோட்டிலே எண்ட்ரி போட்டு வாங்கியார சொன்னாங்க" என்பேன். அதை வாங்கி கிறுக்கி குடுப்பாரு. ஆசையாய் பிரித்து பார்ப்பேன். பாமாவிஜயம் நாகேஷ் மாதிரி "இல்லை மன்னிக்கவும்"ன்னு எழுதுவாரு. பின்னர் அந்த மன்னிக்கவும் எல்லாம் போய் "இல்லை" என எழுத ஆரம்பிச்சாரு.

பின்னே நான் ரமாதேவி மேல இருந்த கரிசனத்தால் அவங்க வீட்டுக்கு நோட்டு எடுத்து கிட்டு போகாமலே அவர் சொல்லும் அதே பதிலை அப்பா கிட்டே சொல்ல ஆரம்பிச்சேன். நாட்கள் ஓடிடுச்சுன்னு சொல்வதை விட வருஷங்கள் ஓடிடுச்சு. ஒரு நாள் எலிக்குட்டி மாமா வந்து " வைத்தா வட்டி எல்லாம் ஒழுங்கா வருதா?" என கேட்க வரலைன்னு சொன்னா அசிங்கமா போயிடுமேன்னு அப்பா "பின்னே பிரமாதமா வருது. முருகேசன் ஒன்னாம் நம்பர் யோக்கியன்" என "அ"வை ம்யூட் செஞ்சு குடுக்காத காசுக்கும் மேலே கூவ எலிக்குட்டி மாமா தலையை ஆட்டிகிட்டே போனாரு. ஒரு கட்டத்துக்கு மேலே அப்பாவுக்கு பயம் வந்துடுச்சு. ஊரான் வீட்டு பத்திரத்தை நாம வச்சுகிட்டு இருக்கோமேன்னு. பத்திரத்தை ஒரு மஞ்ச பையிலே போட்டு கிட்டு முருகேசனை தேடி போனாங்க. எப்படி சுத்தியும் முருகேசன் அப்பா கண்ணுல மாட்டலை. கிட்ட தட்ட ஆறுமாசம் அப்பா மஞ்சள் பை சகிதமா அலைய ஆரம்பிச்சாங்க. எல்லா நேரமும் கையில மஞ்ச பையோடவே இருந்தாங்க. எப்படி காந்தி சிலை அடையாளம் தெரிய கையிலே ஒரு கம்பு இருக்குமோ அப்படி அப்பாவுக்கு சிலை செஞ்சா ஒரு மஞ்சள் பை வச்சு செஞ்சா தான் அடையாளம் தெரியும் என்கிற அளவுக்கு அப்பா மஞ்சபை மைனராகிவிட்டாங்க:-)

ஒரு நாள் விடாம துரத்தி முருகேசனை ஒரு முட்டு சந்திலே மடக்கி "அய்யா ராசா இந்தா உன் வீட்டு பத்திரம். எனக்கு வட்டியும் வேணாம். அசலும் வேண்டாம்" என சொல்ல முருகேசன் "அட இதுக்கு தானே என்னை துரத்தி கிட்டு இருந்தீங்க. சரியான வீணா போன ஆளுங்க நீங்க. நான் கூட நீங்க காசு கேட்டு தான் துரத்துறீங்களோன்னு நினைச்சுட்டேன் என சொல்ல அப்பாவுக்கு என்ன சொல்வதுன்னே தெரியலை. "ஏன் உன் வீட்டு பத்திரம் உனக்கு முக்கியம் இல்லியா?" என கேட்க அதுக்கு முருகேசன் "அடடா நான் இந்த பத்திரம் காணாம போய்டுச்சுன்னு சொல்லி தாய் பத்திரம் காமிச்சு டூப்ளிகேட் வாங்கிட்டனே" என சொன்னாரு. அப்பா அப்பாவியாக "அது எப்போ?" என கேட்க "உங்க கிட்டே இதை வச்சு பணம் வாங்கினதுக்கும் அடுத்த நாளே" என சொல்ல அப்பா அமைதியாக "சரி போனது போவட்டும். நான் ஏமாந்தது ஏமாந்ததா இருக்கட்டும் இந்த டீலிங் நமக்குள்ள தான். நீ மாசா மாசம் வட்டி எல்லாம் தந்துகிட்டு இருக்கேன்னு எலிக்குட்டி கிட்டே எல்லாம் சொல்லிட்டேன். அதனால நீ அவன் கிட்டே இதை சொல்லிடாதே" என சொல்லிட்டு வந்துட்டாங்க.

வந்து வீட்டிலே உட்காந்து இருக்கும் போது எலிக்குட்டி மாமா சிரிச்சுகிட்டே வந்தாரு. "வைத்தா! ஒரு குட் நியூஸ். குருவி மாதிரி ஒரு 2000 ரூபா சேர்த்து வச்சிருந்தேன். இப்ப தான் முருகேசன் வந்தான். உன் கிட்டே இருந்து பத்திரம் மீட்டிட்டானாம். மாசா மாசம் வட்டி எல்லாம் ஒழுங்கா தந்தானாம். அது போலவே அசலையும் ஒழுங்கா தந்தாதானாம்.நீ கூட ஏற்கனவே அவன் மாசா மாசம் வட்டி எல்லாம் குடுத்தான்னு சொன்னேல்ல. என் கிட்டே அதே பத்திரம் எடுத்து வந்து அவசரமா 2000 கேட்டான். பத்திரம் வாங்கிட்டு என் பொண்டாட்டிக்கு தெரியாம குடுத்திட்டேன். நீ என்ன பன்ற இந்த பத்திரத்தை எடுத்து உன் வீட்டு பீரோவிலே வச்சுக்கோ. மாசா மாசம் உன் பையனை அனுப்பி நோட்டுல எண்ட்ரி போட்டு வட்டிய கலக்ட் பண்ணிடு. நான் வந்து வாங்கிக்கறேன்" என சொல்லி பத்திரத்தை கொடுக்க என் அப்பாவுக்கு மட்டும் அல்ல எனக்கும் மயக்கம் வந்துடுச்சு.


July 5, 2011

ஆயில்யன் கல்யாண வைபோகமே - பாகம் # 1


ஆயில்யன் கல்யாணம் எழுத போகிறேன் என கூகிள் பஸ்ல டீசர் எல்லாம் விட்டாச்சு. இனியும் எழுதாட்டி மாயவரத்தான் என் மானத்தை வாங்கும் அபாயம் அதிகம் இருப்பதால் எழுத ஆரம்பித்து விட்டேன்.

என்ன எழுதலாம் என்பதை விட எதிலிருந்து எழுதலாம் என்பது மிகப்பெரிய குழப்பமாக இருந்தது. இதோ கல்யாணம் முடிந்து இரண்டு நாள் ஆகிவிட்டது. இன்னும் அந்த பிரம்மிப்பில் அப்படி கூட சொல்லக்கூடாது பெரும்மப்பில் இருந்து விடுபட்டாகிவிடவில்லை. அத்தனை ஒரு அழகிய திருமணம்.

ஆயில்யன் தன் வலைப்பூவின் காப்ஷனில் போட்டது போல 'ஆயில்யன், கடகம் எல்லா இடத்திலும் நட்பாக". மகா பெரிய உண்மை. ஆமாம். இங்கே நாங்கள் பார்த்தது ஆரியம் - திராவிடம், திமுக - அதிமுக, ரஜினி - கமல், சிவாஜி- எம் ஜி ஆர், விஜய்- அஜீத், கிழக்கு - மேற்கு என எல்லாத்தரப்பும் ஒரு வித சந்தோஷமுடன் தனது வீட்டு திருமணத்துக்கு வந்தமை போன்ற ஒரு உணர்வு.

நான் இது வரை ஒரு 350 பதிவுகள் எழுதியாகி விட்டது. ஒரு திருமணத்தை அழகாக எழுத வேண்டும் என ஆசை இருந்தும் எழுத இயலாமைக்கு காரணம் எனக்கு அத்தனை ஒரு கோர்வையாக வரவில்லை. ஆன்லைனில் இருந்த துளசி டீச்சரிடம் கேட்டேன். எப்படி டீச்சர் எழுதுவது என்று. "நத்திங். பார்த்தது எல்லாம் விரலில் கொண்டு வா உண்மை தமிழன் போல... பக்கம் அதிகமானால் கவலையே இல்லை. எழுதி முடித்ததும் பாகம் 1, 2 என போடு.. எழுதிய திருப்தி தான் முக்கியம். (ஆமா படிப்பவன் பத்தி நாம ஏன் கவலைப்பட வேண்டும்:-)) என சொன்னாங்க. "அப்படி எழுதினா என்ன கிடைக்கும் டீச்சர் என கேட்டதுக்கு " நீ நல்லா எழுதினா உனக்கு பத்துமனாபபுரம் கோவிலை எழுதி தருவேன். என்ன !உனக்கு அதல்லாம் பத்துமா? இன்னும் முக்கால் லெட்சம் கோடி கேட்பாய்" என சொன்னாங்க. ஒ .. ஆக இந்த பதிவை ஒரு நக்கல் பதிவாக எழுத சொல்றாங்க டீச்சர் என நினைத்துக்கொண்டேன்.

பொதுவா ஒரு நல்ல கச்சேரிகாரங்க கச்சேரிக்கு போகும் முன்னே எனக்கு தெரிஞ்சு எதும் கச்சேரி சம்மந்தமா பேசிப்பது இல்லை. ஆனா "சபை" நல்ல சபைன்னு தெரிஞ்சா மனசுக்குள்ளே "சபையை அசத்த வேண்டும்" என்கிற டெலிபதி மாத்திரம் ஒருவருக்கு ஒருவர் ஓடிக்கொண்டு இருக்கும். உதாரணத்துக்கு கத்ரி கோபால்நாத் எங்கயாவது கர்நாடகா கத்ரில இருந்து பிளைட் பிடிச்சு வருவாரு. வயலின் கன்யாகுமரியம்மாள் நாகர்கோவில்ல இருந்து காரை பிடிச்சு வருவாங்க. விக்கு வினாயக்ராம் ஜெர்மன் கச்சேரி முடிச்சுட்டு வருவாரு. ஹரித்வாரமங்கலம் திருவையாறு போயிட்டு அவசரமா வருவாரு. மோர்சிங் ராஜசேகர் பெங்களுருவில் இருந்து வருவாரு. எல்லாரும் தங்கும் ஜாகையும் வேறு வேறு. ஆனா மேடையில் வந்து உட்காந்ததும் சபையை பார்த்ததும் ஒரு புது ரத்தம் நாடி நரம்பில் ஓடி அடிச்சு தூள் கிளப்பிடுவாங்க.

கிட்ட தட்ட ஆயில்யன் கல்யாணம் கூட அப்படித்தான். எனக்கு, மாயவரத்தானுக்கு, கொக்கரக்கோ சௌமிக்கு, ராம்கிக்கு தவிர அமரிக்காவிலே இருந்து சீமாச்சு அண்ணன், மயிலாடுதுறை சிவா , எல்லே ராம் எல்லோருக்குமே அப்படித்தான். கோவை பதிவர் சந்திப்பு, சென்னை வலைப்பதிவர் பட்டரை, ஈரோடு சங்கமம் எல்லாம் போல நம்ம மாயவரம் சந்திப்பு ஆயில்யன் திருமணம்... வரும் விருந்தினரை நல்லா கவனிச்சு நம்ம ஊர் பெயரை தக்க வச்சுக்கனும் என்கிற அதீத ஆர்வம் எங்க மனசுக்குள்ளே ஓடிகிட்டே இருந்துச்சு. அதை திறம்பட செய்யனும். மிக அழகாக செஞ்சாங்க நம்ம மாயவரம் பதிவர்கள் கொக்கரக்கோ சௌமியனும், மாயவரத்தானும்.

ஜூலை 3ம் தேதி 2011ல் திருவாரூரில் கல்யாணம், அதே நாள் மாயவரத்தில் ரிசப்ஷன். வரும் விருந்தினர்களை மாயவரத்தில் தங்க வைத்து உபசரித்து திருவாரூர் அழைத்து போய் திரும்பவும் மாயவரம் வந்து ரிசப்ஷனில் கலந்து கொண்டு ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். கான்செப்ட் இதான்.

ஜூலை 2ம் தேதி காலை முதலே பதிவர்கள் மாயவரம் வந்துடுவாங்க என தெரியும். சென்னையில் இருந்து அப்துல்லா, மருத்துவர் புரூனோ ஆகியோர் ஒரு காரிலும், மணீஜி, அகநாழிகை பொன் வாசுதேவன், உண்மை தமிழன் சரவணன், விந்தை மனிதன் ராஜாராம், கே ஆர் பி செந்தில் ஆகியோர் ஒரு காரிலும் வருவாங்க, பின்னே மாயவரத்தான் உட்பட சிலர் ஒரு காரிலும், சென்ஷி, கோபி ஆகியோர் தனியாகவும், சந்தன முல்லை, ஜி 3 ஆகியோர் தனியாகவும் வருவாங்க என நினைத்தோம். பின்னர் மாயவரத்தான் "எல்லா காரும் பல்லாவரத்தில் இருந்து வரிசையாக கிளம்பலாமே" என சொல்ல பின்னர் சஞ்சய், வேலன் அண்ணாச்சி ஆகியோர் கோவையில் இருந்தும், வெயிலான் ரமேஷ், முரளிகுமார் பத்மநாபன் ஆகியோர் திருப்பூரில் இருந்தும் அது போல பெங்களூரில் இருந்து சொக்கன், ஜீவ்ஸ் உட்பட பலரும் பின்னே மங்களூர் சிவாவும் வருவாங்க என கிட்ட தட்ட முடிவாகியது. கிழக்கில் இருந்து பா.ரா, பத்ரி, முத்துகுமார் ஆகியோர் வருவாங்க, மதுரையில் இருந்து சீனா சார் திருமதி சீனா கூட வருவாங்க எனவும் நினைத்தோம்.

நான் மேலே சொன்னதில் சிலர் மட்டும் சில அவசர வேலை காரணமாக வர முடியவில்லை.ஆனால் ஐகாரஷ் பிரகாஷ் உட்பட நாங்கள் எதிர்பாராத பலர் வந்து அசத்தி விட்டனர். 2ம் தேதி காலை வேலன் அண்ணாச்சி வந்ததும் நான் பேருந்து நிலையம் போய் அழைத்து வந்தேன். பின்னர் ஆயில்யன் வீட்டுக்கு போனோம். ஆயில்யன் பேசியல் செஞ்சுக்க போயிருந்ததால் ஆயில்யன் விட்டில் ஒரு காபி குடித்து விட்டு வந்தோம். ஆயில்யன் பேசியல் செஞ்சுக்க போனதை தனியாக பஸ் விட்டோ பதிவு போட்டோ கும்ம வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்து அடுத்த பாகத்துக்கு பயனிக்கிறேன்.

June 16, 2011

கெனால் பேங் ரோடு - சென்னை -28

ஒரு வழியாக கோடை விடுமுறை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து "பள்ளி உண்டு பாடம் இல்லை" என்னும் கோஷத்துடன் நேற்று ஆரம்பம் ஆகிவிட்டது. நட்ராஜ் தான் ரகளை செய்வானோ என்கிற மாதிரியாக பயம் இருந் தாலும் அவன் முதள் நாளே ஸ்கூல் போகும் பேக் எல்லாம் முதுகிலே மாட்டிக்கொண்டு படுத்து தூங்கும் அளவு தயார் நிலையில் தான் இருந்தான். எனக்கு தான் அழுகை அழுகையாக வந்தது. பின்னே என்ன நான் காலேஜ் போன காலத்திலேயே அம்மா காலை கட்டிக்கொண்டு தாரை தாரையாக கண்ணீர் விட்டவனாச்சே. அத்தனை ஏன்? ஞாயிறு லீவ் விட்டு திங்கள் அன்று போகும் போது கூட ஒரு டோஸ் அழுதுவிட்டு தான் போவேனாக்கும். அத்தனை ஒரு ஈடுபாடு படிப்பு மீது :-)

காலை எழுந்ததும் எனக்கு முன்னரே அவன் குளித்து முடித்து தயாராகி பைக் எல்லாம் துடைத்து உம்மாச்சி எல்லாம் கும்பிட்டு சந்தன கோபி எல்லாம் நெற்றியில் பிரமாதமாக வைத்து கொண்டு பள்ளிக்கு போன உடனே அவன் நண்பர்கள் சூர்யா, ஷிபாயா, கல்யாணி என எல்லோரிடமும் குசலம் விசாரித்து கொண்டிருந்தான்.
"நீ லீவுக்கு எங்க போனே? என்ன சினிமா பார்த்தே? என்ன ஸ்வீட் சாப்பிட்ட என்பன போன்ற அதிமுக்கிய விசாரணைகள் நடந்தன. நீ லீவுக்கு எங்க போனே என்ற கேள்விக்கு மாத்திரம் அவன் வாய் கும்பகோணம் என சொல்ல வந்தும் அவன் ஜீன் சும்மா விடுமா? படார்ன்னு கைனடிக்டெக்ட்ன்னு சொன்னான். நானே இது வரை கேள்விப்பட்டது இல்லை அந்த பெயரை. எப்போதோ யோகேஸ்வரன் ஃபெட்னா நடந்த இடம் அது, அது வட அமரிக்காவிலே இருக்குன்னு சொன்னது மாத்திரம் லைட்டா ஞாபகம் வந்தது. அவன் இந்த பெயரை அப்போது மனதில் வைத்துக்கொண்டு இப்போது அவிழ்த்து விட்டுவிட்டான். யாரோ ஒரு வாண்டு 'அது எங்க இருக்கு?" என கேட்க இவன் கொஞ்சமும் சளைக்காமல் "அமேரிகாவிலே இருக்கு. அமேரிக்கா ரொம்ப பெரிசா இருக்கும்" என அமேரிக்கா புராணம் அவிழ்த்து விட ஆரம்பிக்க நான் என் பள்ளிக்கூட நாட்களுக்கு மனது போக ஆரம்பித்துவிட்டது.

எனக்கு என்னவோ உலகில் அப்போதைக்கு பெரிய இடமே "மெட்ராஸ்" தான். என் ஒரு அத்தை மெட்ராஸ்ல இருப்பது மட்டும் தான் தெரியும். அங்கே போனது எல்லாம் கிடையாது. தீபாவளி, பொங்கல் வரிசைப்பணம் அப்பா மணியார்டர் அனுப்பும் போது 35, கெனால் பேங் ரோடு என அட்ரஸ் எழுதும் போதே ஒரு வித சிலிர்ப்பு வரும். அப்படித்தான் ஒரு முறை பஞ்சாபி என்கிற பஞ்சாபகேசன் என்னிடம் " மெட்ராஸ்ல எங்க போனே?" என கிராஸ் கொஸ்டின் கேட்க லைட்டாக அதிர்ந்தாலும் 35, கெனால் பேங் ரோடு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28 என மனப்பாடமாக சொன்னேன். போதா குறைக்கு இன்னும் டீப்பாக " அந்த பிள்ளையார் கோவில் பக்கத்துல" என பிள்ளையாரின் மேல் இருந்த அதீத நம்பிக்கையால் அளந்துவிட்டேன். கண்டிப்பாக பிள்ளையார் கோவில் இல்லாமலா போகும்.

ஒரு பொருளை வியாபாரம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதை விட ஆஃப்டர் சர்வீஸ் என்பது ரொம்ப முக்கியம் என்கிற வியாபார தந்திரம் எனக்கு அப்பவே நல்லா தெரியும். பொய் சொல்வது என்னவோ ஒரு செகண்ட் வேலை தான். அதை மெயிண்டய்ன் பண்ணுவது என்பது ஆஃப்டர் சர்வீஸ் மாதிரி. ரொம்ப கஷ்டம். அவன் ஒரு படி மேலே போய்" அப்படியா உங்க மாமா என்ன வேலை பண்றார்?"ன்னு அடுத்த கேள்வி கேட்க நான் கொஞ்சமும் தயங்காமல் "அதே பேங்ல தான்" என சொல்ல அவன் என்னிடம் "அதாவது கெனால் பேங்ல தானே" ன்னு கேட்டான். அகராதி புடிச்சவன். நான் ஆமாம் என சொன்னதும் ஒரு வித நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு போய்விட்டான்.

ஆக கெனால் பேங் சாலையில் அத்தை வீடு இருக்கு, கெனால் பேங்ல மாமா வேலை செய்கிறார் என்னும் அழகிய பொய்யை அடுத்த அடுத்த வருட லீவ் முடிந்ததும் அதே பஞ்சாபியை கூப்பிட்டு உரம் போட்டு வளர்த்தேன். மாமா அந்த பேங்ல பீல்டு ஆப்பீசராக, மேனேஜராக இப்படி வருடா வருடம் பிரமோஷனும் கொடுத்து வந்தேன். பின்ன என்ன? இல்லாத வேலையில் சேர்த்தாச்சு கற்பனையில். அதுக்காக சும்மா விட்டுட முடியுமா என்ன? பிரமோஷன் யாரு கொடுப்பா? வேலை வாங்கி கொடுத்த நான் தானே எல்லாம் செய்யனும். என் கடமை இல்லியா அதல்லாம்? அத்தனை ஏன்? ஒரு லீவ் முடிந்து போன போது அந்த மாமா அந்த கெனால் பேங்ல ஒரு பிரச்சினையில் சஸ்பென்ஷன்ல இருக்காருன்னு கூட சொன்னேன். அத்தனை ஒரு தொழில் சுத்தம் நம்ம கிட்ட:-)

ஒரு வருஷ ரெண்டு வருஷமாவா நான் பெத்த அந்த பொய்யை காப்பாத்தினேன். ரொம்ப வருஷம் கழிச்சு அதே பஞ்சாபி ஏதோ நொய்டாவோ என்னவோ ஒரு பிராஞ்ச்ல பஞ்சாப் நேஷனல் பேங்குல ஆப்பீசராம். மாயவரம் பக்கம் பொண்டாட்டி பிள்ளையோட கடைத்தெருவில் போனான். என்னை பார்த்ததும் கூப்பிட்டு "இப்ப கெனால் பேங் மாமா என்ன பண்றார்?" என கேட்க அவரு ரிட்டையர்டு ஆகிட்டாருன்னு சொல்லிட்டு வந்தேன். அப்போதும் அதே நமட்டு சிரிப்பு தான் அவன் கிட்டே. அதன் பின்னே ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்தது. கெனால் பேங் என்றால் கூவம். கெனால்ன்னு சொன்னா சாக்கடைன்னு. கெனால்க்கு அர்த்தம் தெரிஞ்சதும் நான் பணால் ஆகிப்போனேன். எனக்கு அதல்லாம் கூட கவலையாக தெரியவில்லை. ஆனா அந்த பஞ்சாபி நான் 3வது படிக்கும் போதே ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தானே. அப்படின்னா அப்பவே அவனுக்கு தெரிஞ்சிருக்கும் தனே. அப்போதே தனியா கூப்பிட்டு என்கிட்ட சொன்னால் என்ன என்கிட்ட?. இப்போது நான் போன பின்னே பொண்டாட்டி கிட்டே சொல்லி சிரிச்சு என் மானத்தை வாங்கியிருப்பான். கிராதகன்.

நான் சகஜ நிலைக்கு வந்தேன். நட்ராஜிடம் கூப்பிட்டு சொன்னேன். "தம்பி நிஜமாகவே கைனடிக்டெக்ட்ன்னு ஒரு ஊர் இருக்குதான்னு ஒரு கூகிள் பஸ் விட்டு விசாரிச்சுப்போம்டா. நாளை மருநாள் அவன் பொண்டாட்டி பிள்ளை கிட்டே உன் மானம் போய்ட கூடாதுல்ல. அது எதுனா பெரிய சாக்கடைன்னு அர்த்தம் எதுனா வந்துட போகுது" என சொன்னேன். ஏங்க வட அமரிக்கா வலைப்பதிவர்களே! அப்படி ஒரு ஊர் இருக்குதா?

June 6, 2011

சப் காண்டிராக்டர் சல்மான்கான்!!!

ஒரு எட்டு வருஷம் அபுதாபி - ஷார்ஜா என ஆட்சி செய்து விட்டு துபாய் நகரை கைப்பற்றும் நோக்கோடு துபாய் வந்த புதிது. என் நண்பன் அதிரை தாஜுதீனின் தம்பி ஜமீல், எனக்கும் தம்பி தான். துபாய் வரணும் சொல்லி போன் செய்தால்" ய்" சொல்லி முடிக்கும் போதே விசிட் விசாவை வீட்டு கதவை தட்ட வைக்கும் வித்தகன். ஒரு மஞ்ச பையிலே மாத்து துணியும் அடுத்த வேளை பல் விளக்க கொஞ்சம் பயோரியா 1431 ஒரு தரத்துக்கு தேவையானது ஒரு தின காலண்டர்ல கிழிச்ச பேப்பரில் மடித்து கொண்டும் துபாய் போய் இறங்கி விட்டால் ஜமீல் பிளாட் ரெண்டு கையையும் அகலமா நீட்டிகிட்டு வா வான்னு கூப்பிட்டுக்கும். ஜமீல் பிளாட் இருந்த இடம் இருக்கே அது துபாய்ல ஒரு முக்கியமான இடம். அந்த இடத்தை பத்தி அழகா தெரிஞ்சுக்கனும்னா என்னோட இந்த பதிவிலே போய் பாருங்க.

அங்கே போய் இறங்கிய பின்னே தான் ரெஸ்யூம் எல்லாம் அப்டேட் செய்தேன். பின்னே அதை வசதியாக ஜமீல் கிட்டே கொடுத்து விட்டால் போதும். நான் சொல்லும் நம்பருக்கு பேக்ஸ், மெயில்ன்னு மீதி எல்லாம் ஜமீல் பொறுப்பு தான். காலை 5.30க்கு எழுந்து குளித்து விட்டு பொடி நடையாக பின்னால் இருக்கும் சப்கா ரோட்டில் நடந்தால் முடிவினில் அப்ரா (படகு துறை ) வரும். ஒரு 50 பைசா கொடுத்து படகில் டேராதுபாயில் இருந்து பர்துபாய் கரையில் இறங்கினால் உடனே சிவன்கோவில் வந்துவிடும். காலை ஆறு மணிக்கு ஆராதனை. எவனோ வாங்கி அண்டாவில் ஊத்தி வச்ச பாலை எடுத்து "இதை நான் வாங்கினதா நினைச்சுக்கோ" என சொல்லி சிவனுக்கு அபிஷேகம் செஞ்சுட்டு வந்தால் கைமேல் பலன் சுட சுட இருக்கும். ஆமாம் 4 பிரட் ஸ்லைஸ்ம் போதுமான அளவுக்கு சென்னாவும் ஒரு துப்பட்டா போடாத சுடிதார் அணிந்த பஞ்சாப் பாட்டி கையிலே வைக்கும். பின்னே குருத்வாராவுக்கும் நாலு படி ஏறி அங்க கொடுக்கும் திருவாதிரை களி பின்னே சூடான டீ, அதன் மேலேயே எவனோ கொடுக்கும் கொஞ்சம் பெப்சி பிரசாதம், எல்லாம் கலந்து கட்டி அடிச்சுட்டு கிருஷ்ணன் கோவில் வந்தா லஜ்ஜையே இல்லாம அந்த காலை நேரத்திலும் சேட்டு மாமிகள் ஸ்வீட் கொடுப்பாங்க. அதையும் வாங்கி தின்னுட்டு எவனோ அங்கே வாங்கி போட்ட கல்ஃப் நியூஸ், கலீஸ் டைம்ஸ் எல்லாம் பார்த்து ஜமீலுக்கு இந்த இந்த நம்பருக்கு பேக்ஸ் அனுப்புன்னு போன்ல சொல்லிட்டு அதே பேப்பரை விரித்து கிருஷ்ணன் சன்னதியிலேயே தியானம்னு பேர்ல ஒரு தூக்கம் போட்டா வரிசையா பேக்ஸ் பார்த்துட்டு போன் பண்ணுவனுங்க கம்பனிகாரனுங்க

பின்னே அந்த கம்பனியின் சொத்து மதிப்பு இன்ன பிற ஜாதகம் எல்லாம் பார்த்து கேட்டு தெரிஞ்சுகிட்டு இஷ்டம் இருந்தா அங்க இருந்து கோல்டு சூக் பஸ்டாண்டு போய் 3 திர்காம் கொடுத்து அல்கூஸ் ஏரியா பக்கம் இண்டர்வியூ போவேன். நான் கேட்கும் சம்பளம் கொடுத்தா ஓக்கே. இல்லாட்டி உன் சகவாசம் வேண்டாம் போ என திரும்பவும் பிளாட் பக்கம் வந்து விடுவேன். ஒரு கோடி சம்பளம் கொடுக்குறேன்னு சொன்னாலும் அதன் பின்னே பிளாட் விட்டு நகர மாட்டேன்.

அந்த பிளாட் என்னவோ சிங்கிள் பெட் ரூம் பிளாட் தான். எட்டு பேர் அதிலே நிரந்தர மெம்பர்ஸ். ஆனா புளோட்டிங் பாப்புலேஷன் அதிகம். கிச்சன்ல எப்போதும் எதுவாவது தயாராகும். யாராவது ஹால்ல உட்காந்து சாப்பிடுவாங்க, புத்தம் புதிய படம் எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும். இப்போ நீங்க அங்க போனா கூட "ராணா"படம் எடுத்த வரை பார்ப்போம் என யாராவது பார்த்து கொண்டிருப்பாங்க. அங்கே இருக்கும் கம்பியூட்டர் உபரி பாகங்கள் ஹாலில் இருக்குமே அதை தோண்டி தூர் வாறி போட்டால் அதன் உள்ளே ஜமீலை பார்க்கலாம். ஜமீலுக்கு ஒரு நல்ல பழக்கம். 24 மணி நேரமும் போன் ஆஃப் பண்ணாத பழக்கம். காலை 7 மணிக்கு ஆபீஸ். மேனேஜர் (கம்) ஓனர் ஒரு பத்து மணிக்கு போன் செய்யும் போது அந்த கம்பியூட்டர் குவியலில் இருந்து போன், கை, வாய் மட்டும் வெளியே வரும். "எஸ் சார் எஸ் சார் நியூட்ரலைசேஷன் ஆபீல்ல இருக்கேன். செம கூட்டம். எஸ் எஸ் வர்ரதுக்கு ஒரு மணியாகிடும்" என சொல்லிவிட்டு தலை, கை, போன் மீண்டும் உள்ளே கம்பியூட்டர் குவியல் உள்ளே போய்விடும்.

அது ஜமீல் பிளாட் என்பதால் நான் அதிலே ஒரு நிரந்தர மெம்பர். ஜமீல் மூலமாக விசிட்ல வந்து வேலை தேடும் அதிரை மக்கள் எல்லாம் பகல் நேரத்தில் அங்கே தான் கூடும். சில நாள் வேலை தேட அலுப்பாக இருந்தால் காலை நிரந்தர மெம்பர்ஸ் எல்லாம் காலை 7 மணிக்கு வேலைக்கு போன பின்னே அரட்டை கச்சேரி ஆரம்பம் ஆகிவிடும். அருமையான சமையல் எல்லாம் செஞ்சு அசத்துவோம்.

அப்படித்தான் ஒரு நாள் காலையில் வேலைக்கு போன மஜீது திரும்பி ஓடி வந்தான். மஜீது வேலை பார்ப்பது பக்கத்து சப்கா ரோட்டில் தான். சப்கா ரோடு என்பது நம்ம சென்னை ரங்கநாதன் தெரு மாதிரி. அத்தனை ஒரு ஜன நெரிசல். எங்க திரும்பினாலும் "என்ன காகா எப்ப வந்தீய"ன்னு அதிரை, முத்துப்பேட்டை குரல் மட்டுமே கேட்கும். அதிலே ஒரு சைனா காரியின் கடையிலே தான் மஜீது தற்காலிக வேலை பார்த்து கொண்டிருந்தான். வேலை பிரமாதம் இல்லை. அந்த சைனாக்காரி சைனாவிலிருந்து லேடீஸ் ஹேண்ட் பேக், கூலிங் கண்ணாடிகள் போன்ற பொருட்களை மலிவு விலைக்கு வரவழைத்து மொத்த வியாபாரம் செய்து வந்தாள். கடை பத்துக்கு பத்து அளவு தான். அதன் உள்ளேயே ஒரு சுழல் மாடிப்படி சின்னதாக மிக சின்னதாக இருக்கும். அதன் வழியே போனால் மாடியில் ஒரு 30க்கு பத்து சைஸ்ல குடோன்.

மஜீது வந்ததும் "சைனாகாரிக்கு கொஞ்சம் ஹேண்ட் பேக் லோடு வருது. அதை மாடில குடோன்ல ஏத்தனும். 100 திர்காம் தருவா. என்னை தனியா அண்லோட் பண்ண சொன்னா. நான் தான் நீங்க சும்மா தானே இருக்கீங்க. வந்து லைட்டா ஹெல்ப் பண்ணினா ஒரு பத்து நிமிஷம் 100 திர்காம்.. எனக்கு கூட எதும் வேண்டாம், நீங்களே பிரிச்சு எடுத்துகுங்க" என சொன்னான். அட பத்து நிமிஷத்துல 100 திர்காம். அப்படின்னா ஒரு மணி நேரத்துல 600 திர்காம். அப்படின்னா ஒரு நாளைக்கு 4800. அதை 13 ஆல பெறுக்கினா? அய்யோ சொக்கா ..ஷேக் முகமதுக்கு கூட இத்தன சம்பளம் வராதே.. எவன் மூட்டை தூக்குவதை பார்த்துட போறான். சரி போய் அதை எடுத்து வச்சுட்டு வந்துடுவோம் என கேணத்தனமா நான் தான் முதலில் நினைத்தேன்.

முனாஃப் காகா தலைமையில் நாங்க ஒரு 3 பேர் போனோம். முதலில் நான் போனதும் ஒரு ஹேண்ட் பேக்கை தூக்கி பார்த்தேன். "முனாஃப் காகா, இது சப்ப மேட்டரு. சட்டுபுட்டுன்னு தூக்கி கெடாசிட்டு "அப்பா கடை"யிலே லெக் பீஸ் வச்சு ஒரு பிரியானி அடிச்சுட்டு போவும்" என சொன்ன போது அவரும் சரின்னு சொன்னார். பின்னர் தான் தெரிந்தது. அந்த கடைக்கு பக்கத்தில் ஒரு பூட்டிய கடையின் வாசலில் ஒரு 20 ஃபீட் கண்டய்னர் நின்னுச்சு. அதிலே இருக்கும் சரக்கு எல்லாம் தான் மேலே அந்த சுழல் படி வழியா நாங்க தூக்கிட்டு போகனும்னு.

அந்த சைனாகாரி கிட்டே முனாஃப் காகா தான் பேரம் பேசினார். பேரம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சு 100 திர்காம்க்கு காண்டிராக்ட் ஓக்கே ஆச்சு. "அப்பா கடை"யிலே போய் ஒரு டீ குடித்து விட்டு வந்து கண்டெய்னர் ஒப்பன் செய்யும் போது அந்த சைனாகாரி கிட்டே ஒரு 3 பட்டான் வந்து நின்னான். அது வரை அந்த கண்டெய்னர் யாருதுன்னு தெரியாம அதன் எதிர்பக்க சாலையில் குரங்காட்டி மாதிரி குத்துகாலிட்டு உட்காந்து இருந்த அந்த 3 பேரும் அங்க வந்தானுங்க. பட்டான்னா எப்படிப்பட்ட பட்டான். நம்ம ஊர்ல தெருவிலே ஒரு கோவிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு போச்சுன்னா வருமே ஒரு மொச்சை வாடை அது போல வாடையுடன் அழுக்கு பட்டானின் அக்மார்க் (உள்ளாடை போடாத) குர்த்தா ஜிப்பாவிலே, பல் விளக்காத வாயிலே பச்சையான ஹெர்பல் உருண்டை நஸ்வாக் போட்டு அடக்கிகிட்டு சுத்தமான தார் ரோட்டிலே "புளிச்"ன்னு துப்பிகிட்டு இருக்கும் அக் மார்க் பட்டான். பாகிஸ்தான்லயே இவனுங்க கராச்சி, இஸ்லாமாபாத், பஞ்சாப், ஹைதராபாத் எல்லாம் இல்லை. சுத்தமான பெஷாவர். நஸ்வாக் போட்ட எச்சிலை இவன் வீட்டில் இருந்து டைட்டானிக் கேம் ஆடினா ஆப்கானிஸ்தான்ல இருக்கும் ஹமீத்கர்சாய் வீட்டு கக்கூஸ்ல விழும் அளவுக்கு பார்டர் பட்டான். உருது கூட ரொம்ப பேச தெரியாத புஷ்டாக் மட்டுமே பேசும் பட்டான். ஆறு அடிக்கு மேலே உயரம். முகத்திலே சுருள் சுருளான தாடிக்கு நடுவே தெரியும் ரோஸ்கலர் கன்ன மேடு, புறங்கையிலே கூட புசு புசுன்னு முடின்னு அந்த காலத்திலே இந்தியா மேல படை எடுத்த ஷெர்ஷாவுக்கு பேரன் மாதிரியான ஒரு தோற்றமுள்ள பட்டான்.

நம்ம ஆளுங்க அவன் ஆகிருதியை பார்த்து மனசுக்குள்ள பயந்தாலும் பயப்படாத மாதிரியே திட்டுவாங்க. யானைக்கு அதன் பலம் எப்படி தெரியாதோ அது போல அவனுங்களும் பயப்படுவானுங்க. அவனுங்க வந்ததும் "நாங்க இறக்கி தர்ரேம் 500 திர்காம் போதும். எங்களுக்கு இதை விட்டா பிழைப்பு எதும் இல்லை" என எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அந்த சைனாக்காரி 100 திர்காமுக்கு நாங்க ஒத்துகிட்ட காரணத்தால் அவனுங்களை உதாசீனப்படுத்தி அனுப்பி விட்டாள். அவனுங்க எங்களை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்து விட்டு திரும்பவும் பழைய படி எதிரே போய் குத்துகாலிட்டு பாம்பாட்டி மாதிரி உட்காந்து உருட்டிகிட்டு இருந்தானுங்க.
சரின்னு வேலையை ஆரம்பிக்கவேண்டி கண்டெய்னரை திறந்தா எல்லாம் கார்ட்டூன்ல இருந்துச்சு. முதல் காட்டூன் எடுக்கும் போதே நகர்த்த முடியலை. அத்தனை ஒரு கனம். நான் பொதுவாக செல் போனை கூட வெயிட் அதிகம்னு நினைப்பவன். மெதுவா இழுத்து தலையிலே வச்சா எங்க ஊர்ப்பக்கம் கரகம் (ஆடும் கரகம் இல்லை, அம்பாள் கரகம் செம வெயிட்டா இருக்கும்) தூக்கி தலையிலே வச்ச மாதிரி கழுத் து நரம்பு எல்லாம் புடைச்சுகிட்டு கண்ணு சிவந்து போயிடுச்சு. அந்த நேரம் பார்த்து எவனோ தெரிந்தவன் வந்ததால் மானமே போச்சேன்னு நினைச்சுகிட்டு அதை கடை வாசலில் தொப்புன்னு கீழே போட்டேன். அவன் கிட்டக்க வந்து "என்ன அண்ணே இதல்லாம்"ன்னு கேட்க "இந்த ஹோல்சேல் பிசினஸ்" ஆரம்பிச்சு இருக்கேன்"னு சொல்லவும் நான் கைகாட்டின இடத்திலே சீனாக்காரி வந்து நிற்கவும் சரியாக இருந்து தொலைத்தது. அவன் ஒரு மாதிரி பார்த்து கிட்டே போனான். என்ன என்ன புரளி கிளப்பி விடப்போறானோ என நினைத்து கொண்டே நிற்கையில் அடுத்த தெரிஞ்சவன் வந்தான்.

அடப்பாவிகளா எல்லா தெரிஞ்சவனும் இன்னிக்குன்னு பார்த்து இந்த பக்கம் தானா வரனும்? அவன் கிட்டே வந்ததும் நான் ரொம்ப ஜாக்கிரதையாக என் கையை காட்டும் திசையில் அந்த சீனாக்காரி இல்லாம பார்த்து " ஹோல் சேல் கடை ஆரம்பிச்சு இருக்கேன்" என சொல்ல அவன் "அப்படின்னா இந்த சீனாக்காரி யாரு?"ன்னு ரொம்ப ஆர்வமா கேட்க " சீனாக்காரியை வேலைக்கு வச்சிருக்கேன்" என சொன்னேன். சப்கா ரோட்டின் இந்த முனையில் " சீனாக்காரியை வேலைக்கு வச்சிருக்கீங்களா?" என சரியாக கேட்டவன் ரோட்டின் அந்த முனைக்கு போகும் போது கொஞ்சம் வார்த்தைகளை சிக்கனமாக்கி "அபிஅப்பா ஒரு சீனாக்கரிய வச்சிருக்காராம்"ன்னு சொல்லிகிட்டு போனான். அட தேவுடா! எல்லாம் என் நேரம்!

ஆச்சு ஒரு மணி நேரம். நாங்க 3 பேர் மற்றும் கடையிலே வேலை செய்யும் மஜீத் எல்லாம் சேர்த்து முக்கி முக்கி ஒரு 5 சதம் கூட அந்த கண்டய்னரில் காலி பண்ணவில்லை. அதுக்குள்ள எங்களுக்கு மயக்கம் கண்ணை இருட்டிகிட்டு வந்துச்சு. அப்பவும் எதிரே அந்த பட்டான்கள் குத்துகாலிட்டு எங்களையே பார்த்து கொண்டே இருக்க கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. நடு நடுவே டீ வேறு குடித்து பார்த்தோம். நான் மெதுவாக முனாஃப் காகாவிடம் போய் " காண்டிராக்ட் கட்டுபடி ஆகாது போலிருக்கு காகா, கொஞ்சம் ரைஸ் பண்ணுங்க" என சொன்னதும் சீனாக்காரியிடம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடந்துச்சு. அவ கன்னா பின்னான்னு சீன மொழியிலே திட்ட ஆரம்பிச்சா. அனேகமா எங்க அப்பத்தாவிலே ஆரம்பிச்சி எங்க வருங்கால பேத்தி பேரன் வரை திட்டியிருப்பா போலிருக்கு. ஒரு கட்டத்திலே அவ பேச்சின் அசிங்கம் அவ காதுக்கே பொறுக்காம தன் காதையே பொத்திகிட்டு திட்ட ஆரம்பிச்சான்னா பார்த்துகுங்க. ஆனா அவ குரல் வளம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அவ மட்டும் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாட்டை பாடினா வாணி ஜெயராம் தோத்தாங்க போங்க.

திரும்பவும் தூக்க ஆரம்பிச்சோம். முடியலை. சரி இனி கார்டூன் சரியா வராது. அதை ரோட்டிலேயே பிரிச்சு ஒரு பத்து பத்து பீஸாக கையிலே எடுத்து போவும்னு முடிவு பண்ணி அப்படி செஞ்சா அந்த சின்ன சுழல் மாடிப்படியிலே ஒரு 100 தடவை ஏறி இறங்கியதும் குருதி அழுத்தம் சும்மா கிர்ர்ர்ர்ன்னு ஏறுது. முனாஃப் காகா என்னிடம் கவலைப்படாதே. ஹேப்பி அவர்ஸ்ல ஆளுக்கு ரெண்டு பீர் வுட்டுகிட்டு போனா உடம்பு வலிக்காது என சொன்னார். அதாவது அங்க சுத்தி சுத்தி பார்கள் தான். பார் அழகிகள் இரவு 8 மணிக்கு வந்து ஆடும் முன்னதாக இருக்கும் நேரம் தான் ஹேப்பி அவர்ஸ். அப்ப போனா ஒரு பீர் அப்போ 8 திர்காம் தான். ஒரு கட்டத்தில் அந்த சுழல் மாடிப்படியில் வரிசையாக நாங்க நால்வரும் எஸ் வடிவில் மயங்கி விழ அந்த சீனாக்காரி வண்டி மாட்டுக்கு பின்னால நெருப்பு வைக்காத குறை தான். ஒரு வழியா மயக்கம் தீர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம். "சப் காண்டிராக்ட்" அதான் ஒரே வழி. எதிரே உட்காந்து இருக்கும் பட்டானிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அது வரை ஒரு கால்வாசிகூட காலியாகவில்லை. பட்டான்கள் வந்து ஒரு முறை பார்த்து விட்டு "ஓக்கே ஒரு 475 திர்காம் கொடுங்க" என கேட்ட போது அடப்பாவிங்களா 100 திர்காமுக்கு காண்டிராக்ட் எடுத்து 3 மணி நேரம் உழைத்து முடித்து 475க்கு சப்காண்டிராக்ட் தேவையா என நினைத்து மீண்டும் மயக்கம் ஆனோம்.

இனி சீனாக்காரி கால்ல விழ வேண்டியது தான் பாக்கி. விழுந்தோம். எங்களால முடியலை என கதறாத குறை தான். "வேலை செஞ்ச வரை காசு கொடு" என கேட்க அவ கொடுத்த அமவுண்ட் என்ன என்பதை இங்கே சொன்னா என்னை அடிங்க வருவீங்க. அதை வேண்டாம் என சொல்லிவிட்டு அங்கயே நின்னோம். அப்போது அந்த பட்டான்கள் மீண்டும் வந்தாங்க. சீனாக்காரி பேரம் பேசினா அவங்க கிட்டே. அவங்க இந்த தடவை 600 திர்காம் கேட்டாங்க. அவளுக்கு அவங்க மேல ஒரே கோவம். காச்சு மூச்சுன்னு கத்தினா. பின்னே ஒத்துகிட்டா. அவங்க முதல்ல கையிலே காசு குடுத்தா தான் ஏத்துவோம்ன்னு சொல்ல அதையும் குடுத்தா. நாங்க இப்ப ரோட்டுக்கு அந்த பக்கம் போய் பட்டான்கள் உட்காந்து வேடிக்கை பார்த்த இடத்தில் குத்துகாலிட்டு உட்காந்தோம். உலகம் உருண்டைன்னு அப்ப தான் புரிஞ்சுது.

ஒரு அரை மணி நேரம் தான். அந்த 3 பேரும் சும்மா பம்பரமா தலையிலே ஒரு கார்டூன், கையிலே ஒரு கார்டூன்னு குழந்தைகள் பொம்மையை தூக்கிகிட்டு போவது போல போய் எடுத்து வச்சாங்க. வேலை முடிஞ்சுது. எங்க கிட்டே வந்தாங்க. முனாஃப் காகா கையிலே 100 திர்காம் திணிச்சானுங்க. என்னவோ புஷ்டோ பாஷையிலே சொன்னாங்க. சிரிச்சுகிட்டே போயிட்டாங்க. அவங்க பேர் என்னன்னு கூட கேட்க தோன்றவில்லை. அனேகமா எதுனா பேருக்கு பின்னால கான் என்று முடியலாம். வாழ்க கான்! நாங்க ரொம்ப நேரம் அந்த பணத்தை பார்த்துகிட்டே நின்னோம். பக்கத்திலே ஒரு கடைக்கு அழைச்சுட்டு போனாரு முனாஃப் காகா. "சார் ஒரு அட்டை புரூபின் 400 பவர் குடுங்க" என கேட்டாரு!


May 25, 2011

பீஸ் சால் க்கே பைலே!!!


இந்த முதல் காதல் முதல் முத்தம் எல்லாம் கவிதை எழுதுபவர்களுக்கு எப்படி ஒரு கருப்பொருளோ அதே போல எனக்கு அந்த முதல் விமானப்பயணமும் அப்படியே. அது ஆச்சு இருபது வருஷம். மும்பை - செம்பூர் கமலா லாட்ஜில் கூட்டத்தோடு கூட்டமாக படுத்திருந்த என்னை உசுப்பி விட்டு "அனேகமா காலை 4 மணிக்கு ஏர்போர்ட் போகனும். ரெடியா இருங்க" என சொன்னபோது இரவு 11 இருக்கும். நான் அது முதலே தூங்கவில்லை. ஏரோப்பிளேன் கனவு என்ன ஒரு வருஷ இரு வருஷ கனவா . எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலான கனவு. அதில் பறக்க வேண்டும் என்று பேராசை எல்லாம் கூட இல்லை. அதை கிட்டத்தில் பார்க்க வேண்டும். இன்னும் கொஞ்சம் அதிஷ்டம் இருந்தால் அந்த படிகளில் ஏறி மேலே இருந்து அன்பேவா எம் ஜி ஆர் போல ஒரு கூலிங் கண்ணாடி போட்டுகிட்டு மத்தவங்களுக்கு டாடா காட்டிவிட்டு இறங்கி விட்டால் கூட போதுமான அளவிலேயே இருந்தன என் கனவுகள்.

இதோ காலை 4 மணிக்கு ஏஜண்ட் வந்து விடுவார். விமானத்தை அருகே பார்ப்பது என்ன, அதன் படியில் ஏறி கூட்டத்தினரை பார்த்து டாடா காட்டுவது என்ன, பறக்கவே செய்ய போகிறேன் என்ற அந்த நினைப்பே தூக்கத்தை விரட்டி விட்டது. இதோ என் கூட வரும் முபாரக், இன்னும் ஒரு பையன் இப்ராகிம் அவனை வழியனுப்ப வந்த அவனது அண்ணன் இப்படியாக நாங்கள் எல்லோருமே விடியல் காலை ஒரு 3 மணிக்கு எல்லாம் மும்பை சாந்தாகுரூஸ் விமானநிலையம் போயாகிவிட்டது. அந்த இப்ராகிமின் அண்ணன் "பசங்கலா அரபில 'தாள்'ன்னு சொன்னா உடனே ஒரு பேப்பரை எடுக்க கூடாது. 'தாள்'ன்னா இங்க வான்னு அர்த்தம் என சொல்லிக்கொடுக்க நான் கர்மசிரத்தையாக அதை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டேன். அரபியில் என் முதல் வார்த்தை பரிட்சியம் அப்போது தான். வாழ்க அந்த வாத்தியார். கடைசி வரை தாள் என்றால் இங்க வா என்பதை தவிர என் அரபிக் புலமை எகிறவே இல்லை. அந்த முதல் வார்தையே எனக்கு அரபிக்ல தெரிஞ்ச கடைசி வார்தையாகவும் ஆகிப்போனது.

ஏஜண்ட் வருவார் வருவார் என நினைத்து மணி நான்கு, ஐந்து என ஓடிக்கொண்டு இருந்ததே தவிர ஆளைக்காணவில்லை. ஒரு வழியாக என் விமான கனவு தகர்ந்து போன நேரத்தில் சாவகாசமாக ஒரு ஆறு மணிக்கு வந்தார். வந்ததுமே "என்னப்பா உங்க பிளைட் 9 மணிக்கு தான். ஆறு மணிக்கு உள்ளே போனா போதும். சிரியன் ஏர்வேஸ், காலை 9 மணிக்கு இங்க எடுத்தா நேரா அபுதாபி தான். நடுப்புற நிக்காது எங்கியும். இங்க பாருப்பா உனக்கு இமிக்ரேஷன் கிளியரன்ஸ் நாட் ரெக்கொயர்டு. ஆனா முபாரக்கும், இப்புராகிமுக்கும் அங்க ஆள் சொல்லிட்டேன். புஷ்ஷிங்ல உள்ள போகனும். சூதனமா நடந்துகுங்க. சரி சரி உள்ள போங்க" என சொல்லி விட்டு டிக்கெட் எங்க பாஸ்போட், விசா காப்பி எல்லாம் கையிலே கொடுத்து விட்டு போயே போயிட்டாரு.

என் கவலை எல்லாம், அடடே ஏர்போர்ட் கிட்டக்க வந்தும் ஒரு ஏரோப்ளேன் கூட கண்ணுல படலையே என்பதிலேயே இருந்தது. இமிக்ரேஷன் எல்லாம் முடிந்தது. பின்னே கஸ்டம்ஸ் செக்கிங். எல்லாம் முடிந்து ஒரு இடத்தில் உட்கார வச்சு பூட்டியவுடன் தான் கண்ணாடிக்கு அந்த பக்கமா ஏரோப்பிளேன் கிட்டக்க பார்த்தேன். பார்த்தேன் என்றால் அப்படி ஒரு பரவசமாக பார்த்தேன். பக்கத்திலே இருந்த ஒருவரிடம் "சிரியன் ஏர்வேஸ்" என்ன கலர்ன்னு கேட்டேன். அவர் தமிழ் தான் என எழுதி ஓட்டியிருந்ததுமுகத்திலேயே. "ஏன் வாங்க போறியா அதை?" என பதில் வந்த போது தமிழன் தான் என கன்பர்ம் ஆனது. இனி அவனிடம் பேசுவதாக உத்தேசம் இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து வேறு இடத்தில் போய் உட்காந்து கண்டிப்பாக அவன் தமிழனாக இருக்க கூடாது என நினைத்து கொண்டே " சார் திஸ் சிரியன் ஏர்வேஸ் இன்ஜின் குட் கண்டிசன், குட் ரன்னிங்" என "தேர்ந்தெடுத்த நேர்தியான" ஆங்கில வார்த்தைகள் போட்டு பேச்சு கொடுத்தேன். இந்த முறை "இனி இவனிடம் பேசுவதாக உத்தேசம் இல்லை" என இந்தியில் மனதில் நினைத்து கொண்டு அவன் வேறு இடம் பார்த்து போய்விட்டான்.

முபாரக், இப்ராகிம் ஆகியோர் என் சந்தேகம் தெளிவிக்க போதும் என நினைத்து அவர்களிடம் திரும்ப வந்து "சிரியன் பிளைட் இன்ஜின் எல்லாம் நல்லா தானே இருக்கும்? என கேட்டேன். அதற்கு இப்ராகிம் "ஆமாண்ணே கண்டிப்பா நல்லா இருக்கும். ஏன்னா அதான் பாரின் பிளைட் ஆச்சே". எனக்கும் அந்த பதில் திருப்தியாக இருந்து தொலைத்தது. பாரின் மோகம்!

8.30க்கு எல்லாம் அந்த அடைக்கப்பட்ட கதவை திறந்த போது "ஒய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்க்க்க்க்க்க்"ன்னு ஏதோ ஒரு விமானம் மூச்சு வாங்கி கொண்டு நின்றது. சுத்தமாக சத்தமே இல்லாத இடத்தில் கண்ணாடி சிறையில் இருந்து வெளி வந்ததும் அந்த வெட்ட வெளியில் அத்தனை ஒரு சத்தம். ஆனால் காதில் ஹார்லிக்ஸ் ஊற்றியது போல இருந்தது.(எனக்கு தேன் பிடிக்காது) ஏனனில் நான் இத்தனை நள் கண்ட கனவு தேவதைகள் அங்கே ரீங்காரமிட்டு கொண்டு ஒன்று வாலை காட்டியும், ஒன்று வயிற்றை காட்டியும், சிலது வயிற்றின் வழியே மனிதர்களை பிரசவித்து கொண்டும், சில விமான பறவைகள் தன் அடி வயிறு வழியே மூட்டை மூட்டையாக எதையோ ஏற்றிக்கொண்டு வயிற்றை நிரப்பிக்கொண்டும் இருந்தன. அழகாய் சத்தமே இல்லாமல் ஒரு நீண்ண்ண்ட பஸ் வந்து நிற்க நான், முபாரக், இப்ராகிம் ஆகியோர் ஓடி ஏறிக்கொண்டோம். உட்கார சீட் எல்லாம் இல்லை. எல்லாமே ஸ்டாண்டிங் தான். அது என் கனவு தேவதை அருகே கொண்டு செல்லும் வாகனம். மெதுவாக ஊர்ந்து போய் அந்த சிரியன் ஏர்வேஸ் வயிற்று பகுதியின் அருகே நிற்க நான் இறங்கி கூட்டத்தோடு கூட்டமாக பிரம்மித்து போய் அருகே பார்த்தேன். அப்ப்ப்ப்ப்பாடாஆஆ எம்மாம் பெருசு. அதன் இறக்கை அடியில் ஒரு ராட்சத இன் ஜினின் ஃபேன் சுற்றி கொண்டு சத்தம் போட்டுக்கொண்டு இருக்க எல்லோரும் அந்த படி வழியே ஏற நான் மட்டும் அதன் அருகே நின்று கொண்டு பார்த்து கொண்டே அசையாமல் நின்றேன். விமானம் அருகே கீழே தொப்பி போட்ட பைலட்டுகள், விமான பணிப்பெண்கள் சிலர் ஒரு தள்ளு வண்டி போல தன் லக்கேஜ் வைத்து கொண்டு ஏதோ பேசிக்கொண்டு நிற்க ஒரு ஏ கே 47 வைத்திருந்த ஒரு பாதுகாப்பு போலீசின் அந்த துப்பாக்கியை கூட ஆர்வமாக விழுங்குவது போல பார்த்து கொண்டு நின்றேன். அய்யோ இங்கயே ஒரு கூட்டுற வேலை கிடைச்சா கூட போதும். வாழ்நாள் முழுக்க விமானம் பார்த்து கொண்டே இருந்து விடலாம் என நினைத்து கொண்டேன்.

ஏரோப்பிளேன் ஏற படி ஏறும் போது துபாய் பார்ல பெண்கள் ஆட வரும் முன்னே மேடையை தொட்டு கும்பிடுவது போல தொட்டு கும்பிட்டேன் . மேலே உள்ளே நுழையும் முன்னர் திரும்பி அன்பே வா எம் ஜி ஆரை போல கைகாட்ட வேண்டும் பின்னர் பிள்ளையார் மந்திரம் சொல்லனும் என நினைத்து கொண்டேன். அந்த தகர படிகள் என் கால் பதிய பதிய எங்கள் வீட்டு தகர மாட்டு கொட்டகையின் மேலே நின்று ஆணி அடிக்கும் போது சத்தம் வருமே அப்படி வந்தது. மேல் படி வந்ததும் ஒரு அழகான பெண் அத்தனை ஒரு அழகில்லை என்றாலும் விமானப்பணிப்பெண் என்றாலே உலக அழகியாக நான் கற்பனை செய்து கொண்டிருந்த படியால் அந்த பெண் மிகவும் அழகாய் தெரிந்தாள். இருகரம் கூப்பி செயற்கையாக வணக்கம் சொன்ன போது அவள் எனக்கே எனக்காக பிரத்யோகமாக சொல்வதாய் நினைத்து கொண்டு அன்பேவா எம் ஜி ஆர், பிள்ளையார் மந்திரம் போன்றவைகளை மறந்து போனேன். பதிலுக்கு நானும் என் பெட்டியை கீழே வைத்து விட்டு இருகரம் கூப்பி வணக்கம் சொன்ன போது அசூசையாக அவள் பார்த்த பார்வை கூட அப்போது எனக்கு புரியவில்லை. ஒரு வித மோன நிலையில் இருந்தேன். பின்னர் அவள் என்னை தவிர்த்து என் பின்னே வந்த ஒரு அழகில்லா கிழவனுக்கு அதே போல வணக்கம் வந்த போது அந்த கிழவன் மேல் ஆத்திரம் வந்தது.இவனெல்லாம் எதுக்கு பிளைட்ல வர்ரானுங்க என மனதின் உள்ளே மிகவும் கடிந்து கொண்டேன்.

உள்ளே போனதும் அடுத்த அப்சரஸ் என்னை நோக்கி "போர்டிங் கார்ட் ப்ளீஸ்" என கேட்ட போது "அய்யோ இப்பவே சாப்பாடு கொடுத்துடுவாங்க போலிருக்கே" என நினைத்து நீட்டினேன். அவள் " 45 ஏ... கோ டு தட் சீட்" என சொல்லி விமானத்தின் நடுப்பாகம் கிட்ட தட்ட இறக்கைக்கு மேலே நான் உட்காந்து இருப்பது போல ஜன்னல் ஓர சீட் காண்பித்தாள். பின்னர் ஒரு தலைப்பா கட்டின பஞ்சாபி தாத்தா, அடுத்து முபாரக், அடுத்து இப்ராகிம் என நால்வரும் அமர எனக்கு ஏக சந்தோஷம். ஜன்னல் ஓட சீட். எல்லாவற்றையும் கவனிக்கலாம். அப்போது மணி கிட்ட தட்ட 9 நெருங்கியது. சீட் எல்லாம் தடவி பார்த்தேன். ஏதோ என் சொந்த விமானம் போல ஜன்னல் எல்லாம் ஆசையாக தடவிக்கொடுத்தேன். தேவையே இல்லாமல் எங்க வீட்டில் பாத்திரம் தேய்க்கும் இருளாயி கிழவி ஞாபகம் வந்தது. இருளாயி எல்லாம் பிளைட்டில் போகவே முடியாது. நான் தானே பிளைட்டிலே எல்லாம் போனேன் என அதுகிட்டே போய் சொல்லனும் என நினைத்து கொண்டேன். (கருமம்) அப்போது தான் ஞாபகம் வந்தது. ஆகா பிள்ளையார் மந்திரம் சொல்லவே இல்லியே என.

கஷ்ட்கர்த்தே திவ்தேஹாய பக்தேஷ்ட ஜெயதர்மனே .... அட அந்த பொண்ணு ஏன் இத்தனை குட்டை பாவாடை போட்டிருக்கு... ஹய்யோ அந்த சமஸ்க்ரதம் இப்படித்தான் ஸ்டார்டிங் ட்ரபிள் இருககாது, ஆனா பாதில வண்டி நின்னுடும்... அய்யய்யோ இந்த் பிளைட்டுக்கு பெட்ரோல் எல்லாம் போட்டுருப்பாங்க தானே... சமஸ்க்ரதம் வேண்டாம்.. தமிழ்ல முருகன் ஸ்லோகம் இருக்கே... அப்பாடா என்னா ஒரு வாசனை இந்த ஏர்ஹோஸ்டஸ் கிட்டே.. சிலோன் லக்ஸ் போட்டு குளிப்பாளோ?... வால வேல விகாரவா.. என்னது தட்டிலே என்னவோ எடுத்து கிட்டு வர்ரா.. ஒ சாக்லெட்... (பிரித்து வாயில் போட்டேன்) அட புளிப்பு மிட்டாய்.. ஒரு காட்பரீஸ் தரக்கூடாதா... வாரகாமனை நாடிவா... ஹய்யோ ஏன் என் இடுப்புகிட்டே கையை கொண்டு வர்ரா ஆண்டாவா ஆண்டவா... வாடி நாடிடுமோ சிவா... ஓ பெல்ட் போட சொல்றா, ஓக்கே ஓக்கே... எங்கவுட்டேன்...ம் வாடிநாடிடுமோ சிவா... என்னவோ சொல்றாங்க. ம் வாடிநாடிடுமோ சிவா.. வாசிமோகன வேலவா...

பக்கத்தில் பார்த்தேன். இப்ராகிம் என்னவோ முணு முணுத்து கொண்டு இருந்தான். என்னன்னு கேட்டேன். யாசின் ஓதுவதா சொன்னான். அவனும் குட்டை பாவாடை பார்த்திருப்பான் என நினைத்து கொண்டேன். மெல்ல விமானம் ஓடத்துவங்கியது. மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் வேகம் எடுத்து அது அதிகமான போது விமானமே குலுங்கியது மெல்ல பயம் வந்தது எனக்கு. ஷஷ்டி கவசம் சொல்லலாமா என நினைத்த போது குபீரென மேலே எழும்பியது. பக்கத்தில் இருந்த பாஜி வலது உள்ளங்கையை நெஞ்சில் வைத்து கொண்டார். ஏற்கனவே அவர் காது டர்பனால் மூடி இருந்தது. மும்பையின் கட்டிடங்கள் எல்லாம் கோணலாக தெரிந்தது எனக்கு. கொஞ்சம் கொஞ்சமாக சின்னதாகி எறும்பாக ஆனது. பின்னர் பச்சையாக கடல் தெரிந்தது. விமானம் இப்போது சமநிலைக்கு வந்து விட்டது. இதற்காகவே காத்திருந்தது போல சீட் பெல்ட் கழட்டும் சத்தம் சிலம்பொலி போல கேட்டது. நான் முடிச்சு போட்டிருந்த படியால அழகாக சத்தமில்லாமல் அவிழ்து வைத்தேன். அந்த விமான பணிப்பெண் தேவதைஸ் எல்லாரும் குறுக்கும் நெடுக்குமாக எதற்கோ அலைந்தனர்.

எனக்கு மேலே இருந்த பட்டனை தொட்டு பார்க்க ஆசையாக இருந்தமையால் தொட்டேன். ஒரு பெண் வந்தது." ஆர் யூ கால் மீ" என கேட்க நான் "இல்லியே" என தமிழில் செப்பினேன். அவசரத்துக்கு ஆங்கிலம் அடம் பிடிக்கும் எனக்கு. உடனே மேலே இருந்த பட்டனை ஒரு முறை அந்த பெண் அமுக்கி விட்டு என்னவோ சொல்லி விட்டு போனது. நான் பாஜியிடம் " மீ டென் டைம்ஸ் பிளைட். யூ? " என கேட்க அவரு "க்யா"ன்னு கத்த நான் சர்வமும் அடங்கி போனேன். சத்தியமா அவனுக்கு பஞ்சாபி மொழியில் கூட நான் பத்து முறை விமானத்திலே பறந்தேன் என சொன்னால் நம்பவே போவதில்லை. நான் சீட் பெல்ட் முடிச்சி போட்ட அழகை தான் பார்த்து தொலைந்துவிட்டானே!

இப்ராகிம் என்னிடம் "தண்ணி எப்போ தருவாங்க?" என கேட்க மேலே இருக்கும் பட்டனை அமுக்கு. வருவாங்க. அப்ப கேளு அப்படியே பக்கத்து இலைக்கும் பாயாசம் கேளு" என சொன்னேன். ஒருவழியா வந்தது. டின் பீர் ஒன்னே ஒன்னு தான் குடுப்பாங்களாம். பின்னே சாப்பாடுன்னு ஒன்னு கொடுத்தாங்க. எனக்கு பிடிக்காத வஸ்துகளாக இருந்தும் என் கனவு விமானமாச்சே. தேவாமிர்தமா இருந்தது. ஜன்னல் பக்கம் பார்த்தேன். இறக்கையில் சில பிளேட்டுகள் விமானம் திரும்பும் போதெல்லாம் வாய் பிளந்தது. அய்யய்யோ நான் மட்டுமே தான் அதை கவனிக்கிறேன். போய் பைலட் கிட்டே சொல்லலாமா என நினைத்து சொல்லாமல் விட்டுட்டேன்.

சில சமயம் "டும் டும் டுட் டுர்ர்ர்ர்ர்" என காற்று வெற்றிடத்தில் போகும் போது பயங்கர சப்தம் கேட்ட போதெல்லாம் கடலில் குதிக்க தயார் நிலையில் இருக்க வேண்டி காலுக்கடியில் இருந்த உபகரணங்கள் சரியாக உள்ளதா என தொட்டு பார்த்துக்கொண்டேன். ஏனோ தெரியவில்லை. நான் வாடகை சைக்கிள் எடுத்தால் கூட கொஞ்ச நேரத்தில் காற்று இறங்கி விடும் வீக்கான ராசி என் ராசி. என் சீட் முன்பாக இருந்த "வாந்தி எடுக்கும்" பையை கையிலே எடுத்து வாந்திக்கு முயன்றேன். பயத்தில் எச்சில் கூட வரவில்லை. ஒயின் ஷாப்பில் பீரை கொடுக்கும் காதித பை மாதிரியே இருக்குதே என நினைத்து கொண்டேன். கக்கூஸ் எங்கே இருக்கின்றது என தேடிப்பிடித்து போனேன். உபயோகப்படுத்த இல்லை. அதன் "உள்கட்டமைப்பு"கள் எப்படி என பார்க்கவே. கெமிக்கல் டாய்லட் அனியாயத்துக்கு சத்தம் போட்டு உள்ளிழுத்தது. மூல வியாதிக்காரர்கள் ஜாக்கிரதை என போர்டு வைக்க வேண்டும். அந்த நேரத்தில் விமானம் வெடிக்க கூடாது என சாமியை வேண்டிக்கொண்டேன். அப்படி நேரிடின் நான் ஆபாசமாக போட்டோப்படுத்தப்பட்டு எதாவது அரபிக் பேப்பரில் வந்து விடுவேனோ என்கிற அச்சம். உள்ளே இருந்த ஏதேதோ வாசனை ஆஃப்டர் ஷேவிங் திரவியத்தை எல்லாம் கையில் காலில் பூசிக்கொண்டு நாறிப்போய் வெளியே வந்தேன்.

என் பக்கத்து சீட் பாஜி போல கண்ணுக்கு கருப்பு துணி கேட்க வேண்டி மேலே பொத்தானை அமுக்கினேன். வந்த பணிப்பெண்ணிடம் "இங்கிலீஸ் மேகசீன் பிளீஸ். அப்படியே வரும் போது ஒரு பிளாக் துணியும் ப்ளீஸ் ப்ளீஸ்" என சொன்னேன். அந்தம்மாவுக்கு என் ஆங்கிலம் சென்றடைய வில்லை போலிருக்கிறது. ஒரு படமே இல்லாத அரபிக் புத்தகம் கொடுத்த போது அதிலிருந்ததை இடமிருந்து வலமாக முழுவதும் படித்து முடித்தேன்:-) எனக்கு கொடுக்கப்பட்ட புத்தகம் அரபிக் மொழி என புரிய சிலகாலம் ஆனாது என்பது தனி விஷயம்.

விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என தனி மதம் தனி ஜாதி உண்டாக்க வேண்டிடும் என நினைத்து கொண்டேன். இனி நானும் அந்த உயர்சாதியில் ஒருவனாக ஆனதால் பக்கிங்காம் அரண்மனையில் அம்மாவை விட்டு பெண் பார்க்க சொல்லலாம், ஆனால் அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அலகாபாத் ஆனந்தபவன்ல பொண்ணு எடுக்கலாம் என்றால் அம்மாவுக்கு அந்த குடும்பமே பிடிக்காது. தினமும் சம்மந்தி சண்டை வரும். அதையும் நிராகரித்தேன். சரி ஒரு செட்டிநாட்டு அரச குடும்பமோ, ஒரு ஊத்துக்குளி ஜமீனோ பார்த்துக்க வேண்டியது தான். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை.

கீழே சின்னதாக கப்பல் எல்லாம் போனது. உவ்வே.. போயும் போயும் கப்பலில் போகிறானே.. பரம ஏழை போலிருக்கு என முகத்தை திருப்பிக்கொண்டேன். எம்பர்கேஷன் கார்டு கொடுத்து நிரப்ப சொன்ன போது பக்கத்தில் எட்டிப்பார்தேன். முபாரக் ஆக்குபேஷன் இடத்தில் டாக்டர் என எழுதினான். திட்டினேன். ஏன் அப்படி எழுதினாய் என கேட்டேன். இதை பார்த்து விட்டு இன்னும் ஒரு பீர் கொடுத்தாலும் கொடுக்கும் என சொன்னான். அதிர்ந்து விட்டேன். "சரி யாருக்காவது உடம்பு சரியில்லைன்னு சொல்லி உன்னை கூப்பிட்டு வைத்தியம் பார்க்க சொன்னா என்ன செய்வாய்? அந்த ஒரு உயிரே போய்விடுமே" என கேட்ட போது அவன் " அது பரவாயில்லை. ஆனா நீ பைலட்ன்னு எழுதினியே. ஒருவேளை இந்த பைலட்டுக்கு நெஞ்சுவலி வந்து உன்னை கூப்பிட்டி ஓட்ட சொன்னா என்ன ஆகும்.ஒட்டுமொத்தமா எல்லா உயிரும் போய்விடுமே" என சொன்னான். அகராதி பிடித்த தமிழன். அடுத்தவன் வீட்டை எட்டிப்பார்பதை எப்போது விட்டொழிக்க போறார்களோ?

ஒரு வழியாக கீழே இறங்கும் நேரம் வந்தது. சீட் பெல்ட் முடிச்சு போட்டுக்கொண்டேன். "மீண்டும் வருகிறேன் என் காதலியே. இனி அடிக்கடி வருகிறேன்" என மனதில் நினைத்து கொண்டே என் இருக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டேன். நின்றதும் கீழே இறங்கி ஒரு வாஞ்சையுடன் அதை பார்த்து கொண்டே ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தேன். அபுதாபி என்னை அன்புடன் அரபி மொழியில் வரவேற்றது. ஆச்சு அதல்லாம் இருபது வருஷம். இன்றைக்கு நடந்தது போல இருக்கின்றது!


May 15, 2011

பழம் பெரும் திமுக தொண்டரிடம் ஒரு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!!!

திமுக வெற்றி வாய்பை இழந்து விட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தாகிவிட்டது. இனி அதிமுக விமர்சன வலையத்துக்குள். கட்சியினர் போட்ட கணக்குகள் தவிடு பொடி ஆகிவிட்டன. பத்திரிக்கையாளர்கள் தாங்கள் போட்ட கணக்குகளை தூசி தட்டி ஆராய்சி செய்து கொண்டிருக்கின்றனர். எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம் இருந்தது என்பது உண்மை தான் எனினும் கொஞ்சமும் தளர்ந்தோ ஒடிந்தோ விடவில்லை. நேற்றே எங்கள் ஊர் மயிலாடுதுறையில் உள்ள அண்ணா பகுத்தறிவு மன்றம் சென்று பார்த்த போது கட்சி பெரிசுகள் எதுவுமே நடக்காதது போல பேப்பர் படித்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பழுத்த 78 வயது பெருசு கிட்டே ஒரு பேசிப்பார்ப்போமே என பேசினேன். அவர் பெயர் ரங்கன்.


அபிஅப்பா: என்ன மாமா கட்சி தோத்துடுச்சு. எப்படி இருக்கு உங்க மனசு?


ரங்கன்: ரொம்ப திருப்தியா இருக்கு மாப்ள. இன்னும் சொல்ல போனா தமிழக வாக்காளர்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கு திமுகன்னு தான் சொல்லனும்.


அபிஅப்பா: என்ன மாமா புது சிந்தனையா இருக்குதே நீங்க பேசுறது?


ரங்கன்: இல்ல மாப்ள! சிந்தனை என்னவோ ஒன்னு தான். ஆனா இதை புது கோணம்ன்னு வேணா சொல்லு. விஜய்காந்து ஒரு பிரச்சாரத்திலே சொன்னாரு. அண்ணா ஆவி அவர் கனவிலே வந்து அதிமுகவுடன் கூட்டு சேர்ன்னு சொன்னதா. எனக்கு ஆவி, சாமில எல்லாம் நம்பிக்கை இல்லாட்டியும் ஒருவேளை அதல்லாம் உண்மையா இருக்கும் பட்சத்தில் அண்ணாவின் ஆவி அப்படி சொன்னாலும் சொல்லியிருக்கும். ஏன்னா விஜய்காந்து தனிச்சி நின்னு இருந்தா இன்றைக்கு கதையே மாறிப்போயிருக்கும். திமுக சென்ற முறை போல 80- 90 சீட் வாங்கியிருக்கும். காங்கிரஸ் தயவிலே ஆட்சி அமைந்திருக்கும். ஆக காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் வாங்கி இருக்கும். தமிழக இலட்சினை முத்திரை காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்தும் நிலை வந்திருக்கும். பின்னர் முக்கிய இலாக்கா கேட்டு அங்கே இருந்து மிரட்டல் அதிகரித்து இருக்கும். இவரும் பணிவார். பின்னர் அடுத்த அடுத்த தேர்தலில் 110 -110 என பங்கீடு கேட்பர். பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பின்னர் நீ 80 நான் 140 என்பர். இப்படியாக போனால் அண்ணா அமைத்து தந்த அந்த பேஸ்மெண்ட் போயே போயிருக்கும். ஆனால் இப்போது அண்ணா திமுக தான் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்து இருக்கு. இந்த ஆட்சியை அகற்றுவது திமுகவுக்கு மிகவும் எளிது. அடுத்த முறை திமுக வரும். ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது தடுக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே அண்ணாவின் ஆவி விஜய்காந்தின் கனவில் வந்து சொல்லியிருக்குமோ என நினைக்கவும் தோன்றுகிறது.

அபிஅப்பா: என்ன மாமா அண்ணாவின் மன்றத்தில் உட்காந்துகிட்டு மூடநம்பிக்கை கருத்து பேசுறீங்களே?

ரங்கன்: இல்ல மாப்ள, நான் மூடநம்பிக்கை பேசவில்லை. அந்த விஜய்காந்து பேச்சில் இருந்த எனக்கு சாதகமான ஒரு விஷயத்தை எடுத்து கொண்டு பேசினேன். அத்தனையே!

அபிஅப்பா: அப்படின்னா காங்கிரஸ்க்கு ஆட்சியில் பங்கு கூடாதுன்னு சொல்லும் நாம எதுக்கு காங்கிரஸ் கூட கூட்டணி வச்சுக்கனும்?

ரங்கன்: காங்கிரஸ் கூட நாம கூட்டணி வச்சுப்பது நமக்கு சாதகமாக அதிக இடங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்று தான் இருக்க வேண்டும். தவிர ஆட்சியில் பங்கு என்பதை தமிழக மக்கள் ஒத்துக்கவில்லை என்பதை எண்பதுகளில் கலைஞரும் நாமும் புரிந்து கொண்ட பின்னரும் அதே தவறை 31 ஆண்டுகள் கழித்தும் கலைஞர் செய்வார் என நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. வெறும் 119 சீட் தான் நிற்கிறோம் என்ற போதே கண்டிப்பாக இந்த கட்சி ஜெயிச்சா கூட்டணி ஆட்சி வரும் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது. அதற்கு மக்கள் ஒத்துக்கவில்லை. அதனால் தான் மிக முக்கியமாக திமுக தோற்றது.

அபிஅப்பா: திமுக தோல்விக்கு அது மட்டும் தான் காரணம் என உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க?

ரங்கன்: இல்லை அதுவும் ஒரு காரணம்னு தான் சொல்ல வந்தேன். முக்கியமாக இந்த ஒரு காரணத்தை சரி செஞ்சு இருந்தாலே மத்த காரணங்கள் அடிபட்டு கூட போயிருக்கலாம்.

அபிஅப்பா: அப்படின்னா?

ரங்கன்: அப்படின்னா அப்படித்தான்.அதாவது கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே 35 சீட்டுகள் மட்டுமே. அதுவும் நாங்கள் ஒதுக்கும் சீட்டுகள் மட்டுமே என சொல்லியிருக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் பாமகவுக்கு 18 இடமும், விசிக்கு 4 இடமும், காங்கிரசுக்கு 31 இடமும் மட்டும் கொடுத்து மீதி இடங்கள் திமுக நின்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அட்லீஸ்ட் காங்கிரசுக்கு 35 க்கு மேல் தந்திருக்க கூடாது. குறைந்தது திமுக 150 சீட்ல நின்னு இருக்கனும்.

அபிஅப்பா: காங்கிரஸ் தான் ஒரு 90 தொகுதிகள் இனம் கண்டு வைத்திருப்பதாகவும் அதில் 30 இடங்கள் காங்கிரஸ் தனித்து நின்றால் கூட வெற்றி என்றும் அடுத்த 30 தொகுதிகள் கூட்டணி அமைத்தால் வெற்றி எனவும் மீதி 30 தொகுதிகள் ஒரு 1000 முதல் 2000 ஓட்டு வித்யாசத்திலாவது ஜெயித்து விடும் என கையிலே லிஸ்ட் வச்சுகிட்டு நின்னாங்களே மாமா?

ரங்கன்: ஆமாம். அதிலே வரும் முதல் 30 தொகுதியில் தான் மாயவரமும் வைத்து இருந்தனர். அதாவது தனித்து நின்றால் கூட வெற்றி என்று.ஆனால் எதை வைத்து அந்த லிஸ்ட் எடுக்கப்பட்டது என புரியவில்லை. ஏனனில் இரண்டு வருடம் முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கூடமயிலாடுதுறை தொகுதியில் குறிப்பாக மயிலாடுதுறை சட்டமன்ற பகுதியில் மணிசங்கர் 4000 வாக்குகள் குறைவாகத்தானே பெற்றார்? பின்னர் எப்படி யாரால் எப்படி அந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டு ராகுல்காந்திக்கு தரப்பட்டது என திமுக தலைமை கேட்டிருக்க வேண்டும்.

அபிஅப்பா: காங்கிரசார் தான் எதற்கும் ஒத்து வரவில்லையே. 63 சீட் வேண்டும் அதும் தான் நினைத்த தொகுதி வேண்டும் என கேட்டு வாங்கினார்களே? பின்பு என்ன செய்வது?

ரங்கன்: அதான் சொன்னேன். அதற்கு இடம் கொடுக்காமல் உனக்கு 35 சீட் மட்டும் தான். ஒத்து கொண்டால் கையெழுத்து போடு. இல்லாட்டி என் குடும்பத்தை ஒட்டு மொத்தமாக தூக்கி முடிஞ்சா உள்ளே போடு என சொல்லியிருக்கனும். திமுக 185 இடங்கள் நின்றிருக்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு பின்னே தொகுதி பங்கீடு இழுபறியில் திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்ட முடிவில் அன்றைக்கு காங்கிரஸ் உறவு முறிவு என சொன்ன போது ஒட்டுமொத்த திமுக தொண்டர்களிடம் ஒரு எழுச்சி வந்ததே அதை பயன்படுத்தி கொண்டிருக்க வேண்டும்.

அபிஅப்பா: சரி மாமா அப்படி 185 இடம் நின்று திமுக தோற்றால்?

ரங்கன்: அப்படி 185 இடங்கள் திமுக நின்றால்.... மூன்று விஷயம் தானே நடக்கும். 1.திமுக வாஷவுட். 2. திமுக 50 இடம் பெற்று பிரதான எதிர்கட்சி அல்லது 3. திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இது மூன்று தானே நடந்து இருக்கும். திமுக வாஷ்அவுட் அல்லது 50 சீட் வெற்றி என்னும் நிலை வந்திருந்தால் " எங்களுக்கு மானம் பெரிது என நினைத்து காங்கிரசுடன் கூட்டு சேரவில்லை. அதனாலே தோற்றோம்" என சொல்லிக்கலாம். ஜெயித்தால் இன்னேரம் ரயில்வேயை எங்களுக்கு கொடு என டெல்லியை வற்புறுத்தி கேட்கலாம் (தமிழக நலன் கருதி). இப்போது எதற்குமே வழியில்லாமல் போனது.

அபிஅப்பா: ஆக திமுக தோல்விக்கு காங்கிரஸ் மட்டுமா காரணம்??

ரங்கன்: அப்படி இல்லை.மற்ற பல காரணங்களும் நாம் 185 சீட்டில் நின்றிருந்தால் அடிபட்டு போயிருக்கும் என்றே சொன்னேன்.

அபிஅப்பா: அப்படியென்றால் வேறு என்ன காரணங்கள் திமுகவின் தோல்விக்கு இருந்தன?

ரங்கன்: சினிமா. சினிமா. சினிமா.

அபிஅப்பா: புரியலை மாமா.

ரங்கன்: தமிழன் எப்பாதுமே கலாரசிகன். பொழுதுபோக்கில் ரசனையோடு ஈடுபடுபவன். அதனால் தான் தன்னை ஆள்பவனை கூட அந்த துறையில் இருந்து கூட தேர்ந்தெடுத்தான் எடுத்து கொண்டும் இருக்கின்றான். அந்த சினிமா தொழிலை திமுக தலைமை நசித்து விட்டதாக பரப்புரை செய்யப்பட்டது எதிர்கட்சியினரால். அதற்கு பத்திரிக்கையாளர் சோலை கூட எழுதியிருந்தார். எடுப்பது 3 படம். அதற்கு 300 விளம்பரம் அவர்கள் தொலைக்காட்சியில். அவர்களை தவிர வேறு யாரும் படம் எடுக்க முடியவில்லை என பரப்புரை செய்தது மக்களிடம் சென்று சேர்ந்தது. அப்போது எழுபதுகளில் ரிக்ஷாகாரன் சினிமாவை அலைக்கழித்தது போல இப்போது காவலன் படம் அலைக்கழிக்கப்பட்டதாக பரப்புரை செய்யப்பட்டது. அதை சீண்டாமல் இரூந்திருந்தால் தானாகவே மக்கள் விஜய் படங்களை அதற்கு முன்னர் 6 படங்களை தோற்கடித்தது போல தோற்கடித்து இருப்பர். தேவை இல்லாமல் அதை சீண்டியது தவறு.


இவர் வரிவிலக்கு போன்ற எத்தனையோ செய்திருக்கலாம் சிவிமாவுக்கு. அது பற்றி சந்தோஷம் அந்த படத்தயாரிப்பாளருக்கு மட்டுமே. அது சினிமா ரசிகனை சந்தோஷப்படுட்தவில்லை. இவர் சினிமாவுக்கு செய்த நன்மைகள் விழலுக்கு இறைத்த நீராகி போனது. கலைஞரின் பேரன்கள் உதயநிதியும், துரை தயாநிதியும் சினிமா தொழிலுக்கு வந்திருக்க கூடாது. வேறு எத்தனையோ தொழிகள் இருக்கும் போது அவர்கள் சினிமா தொழிலுக்கு வந்திருக்க கூடாது. ஒரு தொழிற்சாலை அமைத்து பத்தாயிரம் குடும்பத்துக்கு சோறு போட்டிருந்தால் கூட ஜெயித்து இருக்கலாம். எந்த சினிமா ரசிகனும் ஒரு பத்து வருஷம் கழிச்சு "ஆகா "கோ"ன்னு ஒரு படம் எடுத்தான்யா ஒரு தயாரிப்பாளர். அவன் நல்லா இருக்கனும்" என பாராட்ட மாட்டான். அவனுக்கு அன்று இரவோடு அந்த சந்தோஷம் முடிந்துவிடும். ஆனால் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து தன் மகனை மகளை படிக்க வைக்கும் ஒரு தொழிலாளி அந்த சாப்பாட்டை சாப்பிடும் நேரத்திலாவது தன் முதலாளியை நினைத்து பார்ப்பான். நன்றி சொல்லுவான் மனதின் உள்ளேயாவது. இனியாவது ரெட்ஜெயண்ட், க்ளவுட் நைன் எல்லாம் மூடுவிழா நடத்தினால் சந்தோஷம்.

அபிஅப்பா: ஆக சினிமா மட்டும் தான் காரணமா இன்னும் இருக்கின்றதா காரணங்கள் திமுக தோல்விக்கு?

ரங்கன்: அதே குடும்பம் தான். ஆனால் இது வேறு கோணம். கலைஞரும், ஸ்டாலினும், அழகிரியும் முதல்வர், அமைச்சர்கள். அதனால் கிடைக்கும் சம்பளம் இத்யாதி வசதிகள் அவர்களின் வாரிசுகளுக்கு போகும் போது எப்படி ஆசையாக அனுபவிக்கின்றனரோ அது போல இவர்கள் தேர்தலில் நிற்கும் அந்த ஒரு மாதகாலத்துக்கு கூட உதயநிதியோ, துரைதயாநிதியோ பிரச்சாரத்துக்கு வராமல் இருந்தது உழைக்கும் திமுக தொண்டனுக்கு ஒரு வித வருத்தட்தை கொடுத்தது. ஆனால் அதே நேரம் கலைஞரின் மகள் செல்வியும் ஸ்டாலினின் மனைவி துர்காவும், அழகிரியின் பெண்ணும் கூட களத்தில் நின்ற போது அவரது வீட்டு ஆண் வாரிசுகள் சினிமாவை கொண்டாடிக்கொண்டு இருந்தது வருத்தத்தின் உச்சகட்டம்.

அபிஅப்பா: கனிமொழி கூட எல்லா ஊர்களுக்கும் பிரச்சாரத்துக்கு வந்தாரே?

ரங்கன்: ஆனைக்கு அர்ரம் - குதிரைக்கு குர்ரம் ஹாஹ்ஹா! திமுகவின் பெரிய பின்னடைவு ஸ்பெக்ட்ரம் பிரச்சனை. இந்த நேரத்தில் கனிமொழியை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்திருக்கவே கூடாது. கனிமொழியை அறிவாலயத்தில் அமர்த்தி அங்கிருந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வேலையை கொடுத்து மட்டும் இருக்க வேண்டும். கனிமொழி வராமல் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் கனிமொழிக்கு ஆட்சிஅதிகாரத்தில் முக்கியத்துவம் இருக்காது என நினைத்த கலைஞர் கனிமொழியை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்தார். கனிமொழி பிரச்சாரத்துக்கு வரும் முன்னர் அந்த அந்த பகுதி எதிர்கட்சியினர் "இதோ பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் செய்த கனிமொழி உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றார். அவர்களுக்கா உங்கள் ஓட்டு என எதிர் பிரச்சாரம் செய்தனர். இது தேவை இல்லாத வேலை திமுகவுக்கு. கொளத்தூருக்கு பிரச்சாரத்துக்கு கனிமொழி வர வேண்டாம் என ஸ்டாலினே கூட கேட்டுக்கொண்டதாக பத்திரிக்கைகள் எழுதின. அப்படி எனில் அதன் தாக்கம் ஸ்டாலினுக்கு தெரிந்த அளவுக்கு கலைஞருக்கு தெரியாத அளவு ஆகிவிட்டது.

அபிஅப்பா: மின்சார தட்டுப்பாடு காரணம் இல்லையா தோல்விக்கு?

மின்சார தட்டுப்பாடு என்பதை விட மின்சார விரயம் அதிகம் ஆனது என்பதே உண்மை. விரயம் செய்தது மக்கள். ஆனால் எப்போதும் போல முள் குத்திவிட்டது என்று தானே சொல்கிறோம். நான் சென்று முள்ளை குத்தி கொண்டதை ஏற்றுக்கொள்வதே இல்லை நாம். ஒரு கோடி இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக எல்லோர் வீட்டிலும் இரண்டு டிவிக்கள். மாமியாருக்கு ஒரு டிவி, மருமகளுக்கு ஒரு டிவி. கிரிக்கெட் பார்க்க ஒரு டிவி, சீரியல் பார்க்க ஒரு டிவி என எப்போதுமே இரண்டு டிவியும் ஓடிக்கொண்டு இருக்கும். ஒரு டிவிக்கு ஒரு நாலைக்கு கால் யூனிட் என்றாலும் ஒரு நாளைக்கு 25 லட்சம் யூனிட். ஆக மின்சார பற்றாகுறைக்கு கலைஞர் வழங்கிய இலவச வண்ண தொலைக்காட்சியும் காரணமாக போய்விட்டது. ஆனாலும் சில மானியங்கள் நிப்பாட்டப்பட்டு ஒரு யூனிட் 13 ரூபாய்க்கு தனியாரிடம் இருந்து வாங்கி இங்கே வழங்கி நிலமையை சீர் செய்து இருகலாமோ என கூட நினைக்கிறேன். நான் நினைத்து என்ன ஆக போகின்றது?

அபிஅப்பா: காரணங்கள் அவ்வளவு தானா? இன்னும் இருக்கின்றதா?

ரங்கன்: இன்னும் இருக்கின்றது. நானும் நீயும் இதை எல்லாம் பேசி பயன் இல்லை. பொதுக்குழுவில் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. மிக முக்கியமான சிலவற்றில் கட்சியின் உள்ளடி வேலைகள் பற்றி ஆராய வேண்டும். தைரியமாக சில மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட வேண்டும். உதாரணமாக நாகை மாவட்டத்தில் மாவட்ட செயலாளரின் நிலைப்பாடு . இருப்பது மொத்தம் ஆறு தொகுதிகள். 1.நாகை 2. வேதாரண்யம் 3. கீழ்வேளூர் (தனி) 4. மாயவரம் 5. பூம்புகார் 6. சீர்காழி. இதில் கீழ்வேளூர் மட்டுமே திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதுவும் திருவாரூர் மாவட்டம் சேர்ந்த மதிவானனுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு வேளை மதிவாணன் வெற்றி பெற்று அமைச்சராக ஆகும் பட்சத்தில் நாகை மாவட்டத்தில் தனிப்பெரும் செல்வாக்கோடு மாவட்ட செயலராக இருக்கும் தனக்கு பாதிப்பு வருமோ என எண்ணி மதிவாணனுக்கு விஜயன் வேலை செய்ய வில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. 700 ஓட்டுகள் வித்யாசத்தில் அவர் தோல்வி. வேதாரண்யம் தொகுதியை பா.ம.க பெறுகின்றது. அங்கே சிட்டிங் எம் எல் ஏ வேதரத்தினம் எளிமையானவர். இன்று சுயேச்சையாக நின்று இரண்டாமிடம். பத்தாயிரம் ஓட்டு வித்யாசம். தோல்வி. மாயவரம் 3000 ஓட்டில் காங்கிரஸ் தோல்வி. சீர்காழி சிட்டிங் எம் எல் ஏ பன்னீர் செல்வம் சிறந்த வக்கீல். அவருக்கு சீட் இல்லை. வி சி அங்கே தோல்வி. இப்படியாக பல உள்ளடி வேலைகள் திமுகவில். பல மாவட்டங்களில் இப்படியாக. உடனடியாக கட்சி களை எடுப்பு நடக்க வேண்டும். இதை எல்லாம் முரசொலி மாறன் இருந்தால் பொதுக்குழுவில் தைரியமக பேசுவார். அவர் இல்லை. அது போல வீரபாண்டியார் பேசுவார். ஆனால் அவரும் இப்போது பேச இயலாது. என்ன நடக்கின்றது என பார்ப்போம்.

அபிஅப்பா: அப்படின்னா திமுக வின் எதிர்காலம்?

ரங்கன்: திமுக இதை விட பெரிய தோல்வி எல்லாம் பார்த்த கட்சி. இந்த தோல்வி தான் உங்களுக்கான பூஸ்ட். இனியாவது மமதை ஒழிந்து கட்சி வேலை பாருங்க. இந்த தோல்வி கலைஞர் உங்களுக்கு கட்சியை வளர்க்க கொடுத்த பரிசு என நினைத்து கொள்ளுங்கள்.

அபிஅப்பா: ஒ அப்படின்னா தெனாலி மாதிரி "இதுவும் ட்ரீட்மெண்ட்டோ தங்க மச்சான்":-)) சரி காங்கிரசின் நிலை என்ன மாமா?

ரங்கன்: காங்கிரஸ் தமிழக தலைவர் தங்கபாலு தோல்விக்கு பொறுப்பேற்று தன் ராஜினாமாவை சமர்பிப்பார்.

அபிஅப்பா: பின்னே என்ன நடக்கும்?

ரங்கன்: இடது கையால் ராஜினாமா கடிதம் கொடுப்பார். வலது கையால் "எதிர் வரும் தமிழக காங்கிரஸ் தலைவரின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. தலைமையை மாற்ற வேண்டும்" என புகார் கொடுப்பார்.

(நான் ரங்கன் மாமாவிடம் பேசியது 14.05.2011 காலை 7 மணிக்கு. அதன் பின்னர் தான் தங்கபாலு ராஜினாமா விஷயம் வெளியானது)

அபிஅப்பா: அதிமுக செயல்பாடுகள் தெரிய ஆறு மாதம் பிடிக்குமா?

ரங்கன்: தேவை இல்லை. ஆறுமணி நேரம் போதும். 500 கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டிடம் பழைய இடத்துக்கு போகும். அப்படி போனால்...

அபிஅப்பா: போனால்?

ரங்கன்: அடுத்து திமுக ஆட்சி தான் என்பது தெளிவாகும். ஏனனில் ஜெயலலிதா திருந்தவில்லை என பொருள் கொள்ளப்படும். அது தான் தொடரும். அப்படியெனில் திமுக அமைதியாக இருந்து கவனித்து வர வேண்டும். கட்சி பணிகள் மாத்திரம் செய்து வந்தால் போதுமாகும். திமுக வெற்றி தான் அடுத்தடுத்த தேர்தல்களில்.

அபிஅப்பா: அப்படியெனில் புதிய தலைமை செயலகம் என்ன ஆகும்?

ரங்கன்: பொதுக்கழிப்பிடமாக மாறும் (சிரிக்கிறார்) கலைஞர் காப்பீடு திட்டம் அழிக்கப்பட்டு அதற்கு பதிலாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆரம்பிக்கப்படும் என அறிவித்து அந்த இடம் மருத்துவமணை ஆகும். முதல்வர் அறை பிணவறையாக மாற்றம் பெரும்.

அபிஅப்பா: அதிமுக காங்கிரஸ் உறவு எப்படி இருக்கும்?

ரங்கன்: அமோகமாக இருக்கும். அனேகமாக அதிமுக காங்கிரஸ் கூட்டணி கூட உண்டாகலாம் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு! மாற்றம் ஒன்றே மாறாதது என்பது முதலில் ஆட்சி அரசியலுக்கு தான்.

அபிஅப்பா: பத்திரிக்கைகள் நிலை?

ரங்கன்: நக்கீரன் கூடிய சீக்கிரம் "சேலஞ்ச் " அடுத்த பாகம் எழுத ஒரு வாய்ப்பு. மற்ற பத்திரிக்கைகள் வழக்கம் போல இருக்கும்.வடிவேலு வீட்டில் கல் அடிப்பப்படும். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவ்து தான் முதல் வேலை என ஜெயலலிதாவின் பேட்டியை எல்லா பத்திரிக்கையும் ஆசையுடன் வெளியிடும்!


=========================================================



குறிப்பு: நான் பேசிக்கொண்டு இருந்த விஷயங்கள் அதிகம் எனினும் சிலவற்றை மட்டுமே இங்கே கொடுத்துள்ளேன். பதிவின் நீளம் காரணமாக மீதியை கொடுக்க முடியவில்லை. திமுக தோற்பதால் என்னவோ எனக்கு தனிப்பட்ட வகையில் எவ்வித முன்னேற்ற தடையும் இல்லை என்பதை பலரும் அறியாமல் அசிங்கமாக போடும் பின்னூட்டம் மனதுக்கு எரிச்சலையே தருகின்றது. எப்போதும் போல இந்த கட்டை சாகும் வரை திமுகதான் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன். நானோ என் குடும்பதின் எந்த ஒரு நபரோ அரசாங்க உத்யோகத்திலோ, அரசு சார்பு உத்யோகத்திலோ, திமுக சார்பு அல்லது திமுக நிறுவனங்களிலோ உத்யோகத்தில் இல்லை. அது போல அரசாங்க காண்டிராக்ட் போன்ற எதிலும் சம்மந்தப்படவில்லை. நான் 21 வருடங்கலாக அயல்நாட்டில் பணிபுரிந்தவன் என்பதும் பலருக்கும் தெரியும். இதை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகின்றேன்! திமுக தோற்றுவிட்டதே நீ ஏன் இன்னும் தூக்குபோட்டு சாகவில்லை என கேட்ட அனானிகளுக்கு: திமுகவுக்காக நான் உயிர் கொடுக்க தயார். ஆனால் உங்களைப்போல அனானிகள் சொன்னதுக்காக உயிர் கொடுப்பது என்பது முட்டாள் தனம் என்பதால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கபடுகின்றது.